Skip to content
Showing posts with label பதின் பருவம். Show all posts
Showing posts with label பதின் பருவம். Show all posts

Tuesday, November 24, 2015

தடம் மாறலாம்? தடம் புரளலாமா?

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து

‘என்னை அவன் அடிச்சிட்டான்மா...' என்று பெற்றோர்களிடம் புகார் பத்திரம் வாசித்த காலம் எல்லாம் மலையேறி, ‘மச்சி, அவன் என்னை அடிச்சிட்டான்டா. பதிலுக்கு நாம அவனுக்குச் செமத்தியா திருப்பிக் குடுக்கணும்டா' என்று நண்பர்களைப் பக்கபலமாகச் சேர்த்துக்கொண்டு அடிதடியில் இறங்கும் காலம் வளர்இளம் பருவம்.

சமீபகாலமாகப் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் பெருகிவருவது வளர்இளம் பருவத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்புகளில் தொடங்கிக் கொலைச் சம்பவங்கள்வரை அடிக்கடி வன்முறை அரங்கேறி வருகிறது. சில நேரம் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்குப் பிரச்சினை உருவாகிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும்போதும் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

குற்ற உணர்ச்சியற்ற நிலை

எல்லா வளர்இளம் பருவத்தினரும், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. அதேநேரம், இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்னெச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். இவர்களுடைய குடும்பச் சூழல் பெரும்பாலும் திருப்திகரமாக இருக்காது.

சிறிய பிரச்சினைகளுக்குக்கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையைக் கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற தன்மைகள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்.

சின்ன வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுதான், தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கியக் காரணம். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் தவறான செயல்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சி அற்ற மனநிலைதான். இது இளைஞர்களைக் கூலிப்படையினராக மாற்றும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது.

விதிமீறல்கள்

வளர்இளம் பருவத்தினர் அவ்வப்போது சில விதிமீறல்களில் ஈடுபடுவது சகஜம்தான். அது அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு பாகமாகவே காணப்படும். ‘இளம் கன்று பயம் அறியாது' என்று சொல்வது இதனால்தான்.

எதையும் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம், புதிய விஷயங்களில் நாட்டம், விபரீதங்கள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மை போன்றவை இவர்களைச் சில நேரம் சேட்டைகளில் ஈடுபடவைக்கிறது.

அதிலும் பலர் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தச் சேட்டைகள் அதிகரிக்கும். எதிர்பாலினத்தைக் கவர்வதற்கு இவர்கள் எடுக்கும் சில முயற்சிகள், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கலாம். அவர்களே சில வருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால், எத்தனை கோமாளித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று புரியும்.


சமூகவிரோதச் செயல்பாடு

அதேநேரம் சில வளர்இளம் பருவத்தினரிடம், இந்த விதிமீறல்கள் எல்லை மீறிச் செல்லும்போது, அவர்களுடைய குணாதிசய உருவாக்கத்திலும் மாற்றம் காணப்படும். சமூகவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எல்லோரும் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கான ஆரம்ப அறிகுறிகள், வளர்இளம் பருவத்திலேயே காணப்படும்.

பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இவர்கள் சிம்மசொப்பனமாகவே இருப்பார்கள். சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும், தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மாறாகப் பிரச்சினை தீவிரமடையும். இவர்கள் பின்னாட்களில் சமூகவிரோதிகளாக (Antisocial) உருவாக வாய்ப்பு இருக்கிறது.


ஓடிப்போவது

ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர்இளம் பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது ஓடிப்போவது நடக்கும். இது ‘குணரீதியாக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' எனப் பெற்றோருக்கு மறைமுகமாகச் சொல்லும் எச்சரிக்கை.

அதற்கு முன்னரே இரவில் அடிக்கடி வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லாமல் அடிக்கடி படத்துக்குச் செல்வதும் கவனிக்கத்தக்க மாற்றம்தான்.


கும்பல் சேருதல்

உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ இப்படிப்பட்டவர்கள் கூடுவார்கள். இதுதான் இளம் சமூகவிரோதிகள் உருவாகும் மையம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாகச் சேர்ந்து புகைப்பது முதல் கஞ்சா பயன்படுத்துவதுவரை கற்றுக்கொள்வார்கள். தன்பாலின உறவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சில நேரம் இளம்வயதிலேயே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, பிறரைக் காயப்படுத்திப் பார்ப்பதில் அலாதி இன்பம் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளும் காணப்படலாம். மனசாட்சி மரத்துப்போவது சில நேரம் குரூரச் செயல்களாக வெளிப்படும். அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் இல்லை.


பொய் மூட்டை

அதேபோலச் சிலரிடம் அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் திருடுவதில் ஆரம்பிக்கும் பழக்கம், பூட்டை உடைத்துத் திருடுவதுவரை போகக்கூடும். அவர்களின் புத்தகங்களுக்குள் ரூபாய் நோட்டை வைத்தால் பத்திரமாக இருக்கும் அளவுக்கு, படிப்பில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. பொய் சொல்வதில் போட்டி வைத்தால், இவர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.

அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக எத்தனை பெரிய பொய்யையும் சாதாரணமாகச் சொல்லப் பழகிவிடுவார்கள். அதேநேரம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள, எந்த நிலைக்கும் இறங்கிவருவார்கள்.


காரணங்கள்

‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை' என்ற சொலவடையின்படி பெற்றோருடைய நன்னடத்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் போதைப்பழக்கம் (அது சார்ந்த மற்றப் பழக்கங்கள்) உள்ள பெற்றோருக்கும் வளர்இளம் பருவத்தினரின் சமூகவிரோதக் குணமாற்றங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் சில நேரம் ஈடுபடலாம். போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படும் மனநோய்களும்கூட இதுபோன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.


கூடுதல் காரணங்கள்

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கார்ட்டூன் படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் ஈடுபடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் வரும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அதிகத் துறுதுறுப்பை ஏற்படுத்துவதுடன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் பாதிக்கும். மனிதர்களை உயிராகப் பாவிக்காமல், பொருட்களாகப் பாவிக்கும் மனநிலை ஏற்படும்.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை இது பாதிக்கும். வளர்இளம் பருவத்தில் பல உறவுரீதியான சிக்கல்களையும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையும் இது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டவை எல்லாம், இந்தக் குணநல மாற்றம் கொண்டவர்களைக் கொடூரர்களாக சித்தரிப்பதற்கு அல்ல. வளர்இளம் பருவத்தில்தான் இந்த மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சாதகமற்ற குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் மற்றும் அவர்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


thanks the hindu

Monday, November 16, 2015

அவசியம் கற்க வேண்டிய பாடம்

ஓவியம்: முத்து

வயது ரீதியான சாதாரண உடல், மன மாற்றங்களைப் பற்றி அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் விடலைப் பருவத்தினர் தொடர்ந்து உழன்றுகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையும், வெளியில் சொல்ல வெட்கப்படுவதும்தான். சிறுநீரகத்தில் கல்லடைப்புக்கு எந்த மருத்துவரைப் பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று அது தொடர்பாகச் சிகிச்சை பெற்ற ஒருவரிடம் கேட்கலாம். ஆனால், பாலியல் சந்தேகங்களை யாரிடம் கேட்பது? பலருக்கும் இப்படிச் சந்தேகங்கள் நீண்டுகொண்டே போகும்.


கடைசியில் முறைசார்ந்த பயிற்சி பெற்ற மருத்துவருக்குப் பதிலாக, விளம்பரங்களால் கவரும் போலி மருத்துவர்களிடம் சரணடைந்து விடுவதுதான் பலரும் சென்றடையும் தவறான பாதையாக இருக்கிறது. வளர்இளம் பருவத்தினரிடம், பெற்றோர் நல்ல நண்பனைப்போல நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் வலைதளங்கள் பல நேரங்களில் அவர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்த அதிக வாய்ப்புண்டு.


பொது மருத்துவரிடம் வேறு ஏதாவது நோய்க்குச் சிகிச்சை பெறச் செல்லும்போது, சந்தேகம் நாக்கின் நுனிவரை வந்துவிடும். ஆனால், அவர் ஏதாவது தப்பாக நினைத்துவிடுவாரோ என்ற பயம். சில நேரம் நோய்க்கான காரணங்களை அறிய, இது குறித்துக் கேட்கத் தோன்றி, மருத்துவரும் கேட்காமல் விடலாம். இந்தத் தடைவேலி அறுக்கப்பட்டால்தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.


பாலுணர்வு வெட்கத்துக்குரியதா?

பத்தாம் வகுப்பில் உயிரியல் புத்தகத்தை வாங்கிய உடன், இனப்பெருக்க உறுப்புகளின் வரைபடங்களும் அது சம்பந்தப்பட்ட விளக்கங்களும் கடைசிப் பாடமாக இருந்தால்கூடப் பலரும் ஆர்வத்துடன் படித்து முடித்துவிடுவார்கள். வகுப்பில் காதல் சம்பந்தப்பட்ட இலக்கியம் பாடமாக நடத்தப்படும்போது மாணவர்களுக்குள்ளே நமுட்டுச் சிரிப்பும், குசுகுசு சத்தங்களும் கேட்கும்.


இத்தனை ஆர்வம் உள்ள விடலைப் பருவத்தினருக்கு, அதைப் பற்றித் தெளிவான கல்வி விளக்கங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இதைப் பற்றிய பேச்சு என்றாலே சிலர் கூச்சமாகவும் வெட்கமாகவும் நினைக்கிறார்கள். மற்றொரு சாரார் இதைப் பற்றி பேசுவதே பாவம், தவறு என்று நினைக்கிறார்கள். ஏன், நோயாளிகளிடம் நோய் வரலாறு கேட்டு எழுதும் படிவத்தில் ‘செக்ஸுவல் ஹிஸ்ட்ரி’ என்ற பகுதியை, மருத்துவ மாணவர்கள்கூட எழுதாமல் விட்டுவிடுகிறார்கள்.


கல்வியின் அவசியம்

பாலியல் குறித்த இத்தனை பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், பள்ளி சார்ந்த பாலியல் விழிப்புணர்வுக் கல்வி பாலியல் சார்ந்த புரிதலில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமூக ரீதியான குழுக்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளும் விடலைப் பருவத்தினர் மத்தியில், இளம்வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் கர்ப்பம் போன்றவை பெருமளவு குறைந்திருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அடுத்த ஐந்து வருடங்களில் உலக மக்களின் ஆரோக்கிய வாழ்வைத் தீர்மானிக்கும் பத்து முக்கியக் காரணிகளுள் ஒன்றாக, வளர்இளம் பருவத்தில் ‘நிதானமான மற்றும் ஆரோக்கியமான பாலியல் அணுகுமுறைகள்’ என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எனவே பெற்றோர், அரசு, கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் இதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு செயல் பட வேண்டிய அவசியம் உள்ளது.


பாலியல் சந்தேகங்கள்: பெற்றோர் கவனத்துக்கு

# "இந்த வயதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான், நாங்களும் அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம்" என்று கூறி ‘தாங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படுகிறோம்’ என்ற உணர்வை விடலைப் பருவத்தினரிடம் ஏற்படுத்துங்கள்.


# செக்ஸைப் பற்றி பேசித் தேவையில்லாமல் நாமாகவே அந்த எண்ணத்தை விதைத்துவிடுவோமோ என்ற பயம் வேண்டாம். அது இயல்பானது. அந்த வயதுக்குரியது.


# வாரிசுகளின் சங்கோஜமான அல்லது முரண்பாடான கேள்விகளாலோ கருத்துகளாலோ கோபமோ பதற்றமோ அடையாதீர்கள். மாறாக "நீ இப்படி வெளிப்படையாகக் கேட்பது எனக்குப் பிடித்திருக்கிறது. பிரச்சினையைத் தீர்க்க இதுதான் முதல் படி" எனப் பாராட்டுங்கள்.


# பாலியல் குழப்பங்கள், பாலியல் சார்ந்த வன்முறைகளால் ஏற்படும் மன உளைச்சல்கள், இளம் வயது கர்ப்பம், பால்வினை நோய்கள், சமூகரீதியான பாதிப்புகள் பற்றி உங்கள் வாரிசுகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். இது பிரச்சினைகளை மோசமடையாமல் தவிர்க்க உதவும்.


# பாலியல் சம்பந்தப்பட்ட விளக்கங்களைத் தனி வகுப்புபோல் நடத்த வேண்டாம். அவ்வப்போதுக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாகச் சினிமாவில் பாலியல் சம்பந்தப்பட்ட கவுரவமான காட்சிகள் வரும்போது ‘இந்தக் காட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று ஆரம்பிக்கலாம். அல்லது ‘இப்படித்தான், நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நண்பன் இதுபோன்ற பாலியல் குழப்பத்தில் மாட்டிக்கொண்டான்’ எனக் கற்பனையாகக்கூடச் சூழ்நிலையை உருவாக்கிப் பேச ஆரம்பிக்கலாம்.


# எதிர்பாலினரிடம் பழகும்போது நல்ல தொடுதல் எது, தவறான நோக்கத்துடன் கூடிய தொடுதல் எது என்பதைத் தெளிவுபடுத்துங்கள். தவறு என்று தோன்றும் செயல்களுக்குத் தைரியமாக ‘நோ’ சொல்லக் கற்றுக்கொடுங்கள்.


# சில நேரங்களில் தன்பாலின உறவு பற்றிய எண்ணங்களோ தொடுதல்களோ இந்த வயதில் வர வாய்ப்பு உண்டு என்பதையும், அது செக்ஸைத் தவிர்ப்பதற்கான மாற்றுவழி அல்ல என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.


# மதரீதியான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் ‘செக்ஸ் என்பது ஒரு பாவச் செயல்’ என்று போதிப்பதைவிட, ‘செக்ஸ் என்பது கடவுள் தந்தவற்றுள் அற்புதமான, உன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று பேசுங்கள்.


# உங்கள் கருத்துகளைத் திணிக்கும் களமாகப் பாலியல் கல்வியைப் பயன்படுத்தக் கூடாது. தங்கள் பாலியல் உணர்வு பெற்றோரால் தீர்மானிக்கப்படுகிறது என மகனோ / மகளோ நினைத்துவிட்டால் சகஜமாகப் பேச மாட்டார்கள்.


# பாலியல் என்பது மறைமுகமாகவோ, குத்திக்காட்டியோ, மழுப்பலாகவோ பேச வேண்டிய விஷயம் அல்ல. தெளிவாக, வெளிப்படையாகப் பேசப்பட வேண்டியது. பெற்றோர் அதைப் பேசக் கூச்சப்பட்டால், வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.
# கடைசியாக, ஆனால் முக்கியமாகப் பாலியல் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

thanks the hindu

Monday, November 02, 2015

பதின் பருவமா, புதிர் பருவமா? 7 - கலக்கம் தரும் திடீர் கனவு-டாக்டர் ஆ. காட்சன்

வளர் இளம்பருவத்தில் நுழைந்த புதிதில், பலருக்குச் செக்ஸ் சார்ந்த கனவுகள் வருவது சகஜம்தான். சில நேரம் தெரிந்த நபர்கள்கூட அந்தக் கனவுக் காட்சிகளில் வரலாம்.
ஒருமுறை 15 வயது மாணவர் ஒருவர், தனக்குப் பாலியல் ரீதியான கனவுகள் அடிக்கடி வருவதாகவும், அது அவருடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் பாவம் என்று கருதுவதாகவும் கூறினார். 'தான் மோசமானவனாக மாறிவிட்டேன்' என்ற குற்றவுணர்ச்சியே இதுபோன்ற பதற்றங்களுக்குக் காரணம். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகள் பற்றிய ஆராய்ச்சியின்படி, அன்றாடம் நிகழும் பல சம்பவங்களால் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே கனவு. இது ஒரு பாதிப்பு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈர இரவுகள்
'சொப்பன ஸ்கலிதம்' இளம் பருவத்தினருக்குச் சிம்மசொப்பனம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியே தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் காசு பறித்து வருகின்றன பல கும்பல்கள்.
வளர் இளம்பருவத்தினர் எல்லோருக்கும் இந்த அனுபவம் சில முறையாவது நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அவ்வப்போது அதிகாலை நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் விந்து தானாகவே வெளிப்படும் அல்லது செக்ஸ் கனவுகளின் விளைவாக வெளிப்படும். சிலருக்கு அதனுடன் சேர்ந்து உச்சகட்டத்தை அடைந்த உணர்வும் ஏற்படலாம். சில வேளைகளில் உடை நனைந்த உணர்வால் விழிக்கலாம். இந்த அனுபவம் முற்றிலும் சாதாரணமான ஒன்று. இதைக் குறித்துப் பயப்படவோ, கலக்கமடையவோ தேவையில்லை.
கிட்டத்தட்ட 13 வயது ஆரம்பிக்கும்போது தேவைப்படவில்லை என்றாலும் ஆண் குழந்தைகளின் விதைப்பைகள் விந்து உற்பத்தியைச் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. உதாரணமாக ஒரு மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை எடுத்துக்கொள்வோம். கீழே குழாய் திறக்கப்படவே இல்லை. ஆனால், தொட்டியில் தண்ணீர் மட்டும் நிரம்பிக்கொண்டேயிருந்தால், அந்தத் தண்ணீர் வெளியே நிரம்பி வழிவதைத் தவிர வேறு வழியே இல்லை. அதுபோலத்தான் பதின் பருவத்தில் அதிகமாக உற்பத்தியாகும் விந்து வெளியேறுவதற்கு, கனவு ஒரு வடிகாலாகப் பயன்படுகிறது.
சிறுநீரில் விந்து
‘ஒரு சொட்டு விந்து, 52 சொட்டு ரத்தத்துக்குச் சமம்’ என்ற முறையில்கூட விளம்பரங்கள் வருகின்றன. சில விடலைப்பருவத்தினர் சிறுநீர் கழிக்கும்போது அதில் விந்து வெளியேறுவதாகவும், அதனால் தங்கள் ‘சக்தி’ முழுக்க வீணாகி உடல் சோர்வு, நடுக்கம், தேக மெலிவு ஏற்படுவதாகவும் நம்புவார்கள். முற்றிய நிலையில் தங்களுடைய ஆணுறுப்பு சுருங்கிக் கொண்டே போய், வயிற்றின் அடியில் சென்றுவிட்டதாகவும் பிரமையில் புலம்புவார்கள். சில வேளைகளில் மனநோய்க்கும் ஆளாவார்கள்.
சிறுநீர் என்பது உடலின் கழிவுநீர். அதில் பல செல்கள், திசுக்கள், சிலநேரம் கிருமிகள் கலந்து வரலாம். இதனால் அதன் நிறம் மாறி விந்து வெளியேறுவதுபோலத் தோற்றமளிக்கலாம். அப்படியே வெளியேறினாலும்கூட, அது ஒன்றும் ரத்தத்துக்குரிய மாற்று அல்ல.
சுயஇன்பம்
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது பற்றிய சந்தேகமும் பயமும் இளம்பருவத்தினரை எப்போதும் தொற்றிக்கொண்டே இருக்கும் வேதாளம் போன்றது. சுயஇன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்ட்ருபேஷன் (Masturbation) என்று பெயர்.
இந்தப் பழக்கம் மூன்று வயது சிறுவர்களிடம்கூட, வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் காணப்படும் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று வயதில்தான் ஒரு குழந்தைக்குத் தான் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு புரிய ஆரம்பிக்கும். இன்பம் பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பாலுறுப்பைத் தூண்டுவது இயற்கையான ஒன்று. இது காலப்போக்கில் மாறிவிடும்.
முதல் அறிமுகம்
இந்தப் பழக்கம் பெரும்பாலும் நண்பர்களின் மூலமாக அறிமுகமாகிறது. ஆய்வு முடிவுகளின்படி 13-14 வயதுக்குள் இரு பாலினத்தவருமே இதைப் பற்றிய தேடல் ஆரம்பித்து விடுவதுடன், முதல் அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்களும் சுயஇன்பம் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர், அதைத் தொடர்ச்சியாகவும் செய்கிறார்கள். விடலைப்பையன்கள் இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, பெண் குழந்தைகள் சொல்வதில்லை.
கொல்லும் குற்றஉணர்வு
சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் சுயஇன்பத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன. ஆனால் உடலியக்கவியல் ரீதியாகவும், மனநல ரீதியாகவும் இந்தப் பழக்கம் விடலைப்பருவத்தின் கடந்து செல்லும் நிலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பார்வைகளுக்கு நடுவே வளர் இளம்பருவத்தினர் சிக்கிக்கொள்வதால்தான், அவர்கள் எளிதில் குற்றஉணர்வுக்கு ஆளாகின்றனர். நண்பர்கள் வட்டத்திலேயே இதைப் பற்றிய மாறுபட்ட கருத்துகள் நிலவுவது, அவர்களுக்குப் பயத்தை உருவாக்குகிறது.
செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், செய்தால் அதைப் பற்றிய குற்றஉணர்வு என்ற இந்த இரண்டு மனநிலைகளுக்கு இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் வளர் இளம்பருவத்தினரை நேரம் பார்த்துத் தாக்க இன்னொரு கூட்டமும் காத்திருக்கிறது.
தவறான போதனைகள்
கொசு கடிப்பதால்தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் கூற்றை நம்பும் நம்மவர்கள், சுயஇன்பப் பழக்கத்தைப் பொறுத்து மட்டும் அறிவியலுக்குப் புறம்பான விளக்கங்களையும் வைத்தியங்களையும் நாடிச்செல்லும் நிலை உள்ளது.
தொலைக்காட்சி, வார இதழ்களில் வெளியாகும் விளம்பரங்களும் இவர்களை வேட்டையாடிவிடுகின்றன. சுயஇன்பத்தால் உறுப்பு சுருங்கிப்போவதாகவும், நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதாகவும், விந்து நீர்த்துப் பின்பு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் விளம்பரங்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளை நம்பிப் பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தொலைத்த இளம்பருவத்தினர் ஏராளம்.
குற்றஉணர்வுதான் எல்லா மனநலப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அறிவியல் உலகம் கூவிக்கொண்டிருக்கிறது. ஆனால், 'அப்படியாகும்', 'இப்படியாகும்' என்ற பயத்தையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்திப் பிரச்சினைகளைப் பெரிதாக்கும் ஆதாரமற்ற வைத்தியங்களைத் தவிர்ப்பதுதான் விடலைப்பருவத்தினருக்கு நல்லது.
எது பாதிப்பு?
‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி சுயஇன்பத்துக்கும் பொருந்தும். ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுயஇன்பத்துக்கு தீனிபோடும் பழக்கம். சுயஇன்பம் செய்வதற்காக முக்கிய வேலைகளைப் புறக்கணித்தல், மற்ற விஷயங்களில் கவனம் குவிக்க முடியாமை போன்றவை, இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக மாற்றும் அறிகுறிகள்.
சுயஇன்பம் நல்லதா, கெட்டதா என ஆராய்ச்சி செய்வதைவிட, அதைக் கைவிட்டு வெளியேற முயற்சிப்பதே நல்லது. அது அளவுக்கு மீறி செல்லும்போது சுயகட்டுப்பாட்டை பாதிப்பதுடன், சுயஇன்பத்துக்கு அடிமையானால் திருமணமான பின்பும்கூட வாழ்க்கைத்துணையுடனான பாலியல் உறவுகளைவிட சுய இன்பத்திலேயே அதிக நாட்டம் செல்லலாம். அப்போது குடும்ப உறவில் பல பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தனிமையைத் தவிர்ப்பது, சந்தோஷம் தரும் மாற்று வழிகளில் ஈடுபாட்டை அதிகரித்துக்கொள்வது, நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசையில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்வது, விளையாட நேரம் செலவழிப்பது, ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது போன்ற வழிமுறைகள் சுயஇன்பப் பழக்கத்திலிருந்து வெளிவர உதவும்.
(அடுத்த முறை: காதல் என்பது எதுவரை?)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்தொடர்புக்கு: [email protected]

தஹிந்து
சுய இன்பம் அனுபவிப்பது என்பது கட்டுபாடின்றி போகும்போது நிச்சயம் ஆக உடல் சக்தி குறையும், பாதிப்பு அடையும், 50 சொட்டு ரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது சித்தர்கள் கூறியது, இது பொய்யாகாது. மேலும் ஆண், பெண் இன உடல் உறவு முடிந்ததும் ஏன் அதிக இன்பத்திற்கு பதிலாக உடல் முழுவதும் வலி, களைப்பு ஏற்படுகிறது, அதிக உடல் உறவில் ஏன் மூட்டுகள் வலி ஏற்படுகிறது, இது உடல் சக்தி குறைவதால் தானே, எனவே எதுவும் அளவு முறை மீறும்போது விபரீத விளைவுகள் ஏற்படும்.

Monday, October 19, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 5 - கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சா?

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘அவன் கூட டூ! உன்கூட பழம் விட்டுக்கட்டுமா?' என்று கேட்பது குழந்தைப் பருவ நட்பு. ‘மச்சி இன்னிக்கு ஒரு நாளாவது ‘கிளாஸை கட்' அடிக்கிறியா... சும்மா அடிச்சுப் பாரு மச்சி!' என்பது விடலைப் பருவ நட்பு.
நடத்தையை வைத்தே, மேற்கண்ட இரண்டு நட்புக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நட்புகள் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அமைவது. ஆனால், வளர் இளம்பருவத்தில் அமையும் நட்பு, ஒருவர் தேடித் தேர்வு செய்து அமைத்துக் கொள்வது. இதை சான்ஸ் எதிர் சாய்ஸ் (chance vs choice) என்று கூறுவதுண்டு.
வளர் இளம்பருவத்தில் தங்களுக்கு ஒத்த வயதுடைய, கருத்துடைய, விருப்பங்களுடைய நபர்களையே தேர்வு செய்து குழுவாகச் சேர்ந்துகொள்வார்கள். அதிலும் ஒரு சிலரைத் தங்கள் நெருக்கமான நட்புக்கென்று தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மையான நட்பு உருவாவதும், இந்த வளர் இளம்பருவத்தில்தான்.
நல்ல மாற்றமா?
இந்த நேரத்தில்தான் பெற்றோருக்குப் பதற்றமும் பயமும் ஏற்படும். தங்களிடம் நெருக்கமாக இருந்த மகன் / மகள் விலகிச்செல்வது போலத் தெரிவதும், புதிய நட்புகளிடம் நெருக்கம் பாராட்டுவதும் பெற்றோருக்குப் புதிய அனுபவமாகத் தெரியும். அது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகள் வழிதவறிச் சென்றுவிடுவார்களோ என்ற கலக்கத்துக்கும் உள்ளாவது வாடிக்கைதான்.
ஒருவகையில் பெற்றோர் பயப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்தாலும், நட்பு வட்டம் பெரிதாவது என்பது, வளர் இளம்பருவத்தின் ஒரு படிநிலை என்பது மட்டுமல்லாமல், அது மிகவும் இன்றியமையாத ஒரு மாற்றமும்கூட.
ஏனென்றால், நட்பு வட்டத்தின் மூலம் அவர்கள் இந்த உலகத்தைப் புத்தாய்வு செய்வதுடன், சமூக உறவுகளை உருவாக்கவும், மேம்படுத்தவும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெற்றோர் அஞ்சுவதுபோல உண்மையில் அவர்கள் விலகிச் செல்வது இல்லை. இந்த உலகத்துக்குத் தங்கள் வரவை அறி விக்க முயற்சிக்கும், ஒரு தேடல்தான் இது.
குணநலன்களில் நட்பு
வளர் இளம்பருவத்தினரின் குணநலன்களை வடிவமைப்பதில் நட்பு வட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நபருக்கான நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் தான் ஒருவர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உணரும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுயகவுரவம் பெருகும், வெளியுலக ஈடுபாடு மற்றும் தனிமனித உறவுகள் கூடும்.
ஆனால், குறிப்பிட்ட ஒருவருடைய நட்பு வட்டத்தில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததாகவோ, புறக்கணிக்கப்பட்டதாகவோ வளர் இளம்பருவத்தினர் நினைக்கும் நிலை ஏற்பட்டால், பல எதிர்விளைவுகள் ஏற்படும். இதனால் அவர்களுடைய சுயமதிப்பீடு பாதிக்கப்படும். தாங்கள் சமூகத்துக்குத் தேவைப்படாதவர்கள், திறன் குறைந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்குவதால் மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும் (Introvert) மாறி உலகத்திலிருந்து தங்களை ஒதுக்கியும் கொள்வார்கள்.
எதிர்மறை பிரச்சினைகள்
நண்பர்கள் வட்டத்திலிருந்து வரும் ‘பீர் பிரஷர்' என்று சொல்லப்படும் நிர்பந்தங்களும் அழுத்தங்களும் சில முக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடும். பெரும்பாலும் முதன்முதலில் புகை, மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அறிமுகமாவது நண்பர்களின் கட்டாயத்தால்தான். ஆபாசப் படங்கள், சமூக விரோதச் செயல்கள், தன்பாலின உறவு போன்றவை நட்பு வட்டத்தின் மூலமாகவே அறிமுகமாகின்றன.
ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ஒரு விஷயத்தைப் புறக்கணித்தால் நட்பு வட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோமோ என்ற பயத்தாலும், கேலிக்குள்ளாகி விடுவோமோ என்ற எண்ணத்தாலும் சிலர் வேறு வழி தெரியாமல் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நண்பர்களின் உற்சாகத் தூண்டுதல் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்ட வைக்கலாம், தினமும் பின்தொடர்ந்து வரும் முன்பின் தெரியாத ஆணைக் காதலிக்கக்கூட வைக்கலாம்.
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில்தான் பெற்றோர்-பிள்ளைகள் உறவின் தரம் பரிசோதனைக்குள்ளாகிறது. நல்ல ஆரோக்கியமான அடித்தளம் உள்ள உறவின் பின்னணியிலிருந்து வரும் வளர் இளம்பருவத்தினர் நட்புகளால் ஏற்படும் இந்தச் சவால்களை, எளிதில் எதிர்கொண்டுவிடுவார்கள் அல்லது சிறிது குழப்பம் ஏற்பட்டாலும் பின்னர் சுதாரித்துக்கொள்வார்கள்.
நண்பர்கள் அப்போது முக்கியமாகத் தெரிந்தாலும் பெற்றோர் கற்றுக்கொடுத்த மதிப்பு, ஒழுக்கம், மரபார்ந்த நம்பிக்கைகள் ஆகியவற்றை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதேநேரம் சிறுவயதில் குடும்ப வன்முறையைத் தினமும் பார்த்து வளர்வது, சிறுவயதில் உடல் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள், பெற்றோர் இழப்பு மற்றும் பிரிவு போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர் இளம்பருவத்தின்போது நட்பு வட்டத்தின் சிக்கல்களில் எளிதில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
தவறு என்று தெரிந்த எந்த ஒரு விஷயத்துக்கும் சின்ன வயதில் இருந்தே தைரியமாக ‘நோ’ சொல்லக் குழந்தைகளைப் பழக்குவது, பல பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும்.
(அடுத்த வாரம்: அதைப் பற்றி பேசலாமா, கூடாதா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து

Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- 2: என் வழி தனி வழி-டாக்டர் ஆ.காட்சன்

‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.
ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்.. இவள் இப்படிப் போறா..’ என்று பெற்றோர்கள் புலம்புவதால், பயனில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மாற்றத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய உலகத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் அவசியத் தேவை.
உதாரணமாக, ‘அந்தப் பசங்களுடன் சேராதே' எனக் கட்டளையிடுவதைவிட, பிள்ளைகள் யார் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், அவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று சற்றே விலகி நின்று கண்காணிப்பது பலன் தரும். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவோ வளரிளம் பருவத்தினர் நினைத்துவிட்டால் கொஞ்சம் ஆபத்துதான்.
அப்படி நம்பிவிட்டால், பெற்றோரை எதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உறவு சிக்கலுக்கு உள்ளாகும். இந்தக் கட்டத்தில் அவர்களை அதிகம் சந்தேகப்படுவதோ அல்லது அதிகம் நம்புவதோ, இரண்டுமே அவர்களுடைய மனதைப் பாதிக்கும்.
புதிய பிரச்சினைகள்
‘கூகுள்’ யுகத்துக்கு முன்னால் விடலைப் பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தன. அதுவரை கசங்கிய சட்டை அணிந்தவன், திடீரென்று அயர்ன் செய்து நீட்டாக அணிய ஆரம்பிப்பது, எண்ணெய் வழியத் தலைசீவி சென்றவள் சிகை அலங்காரத்தை மாற்றச் சிரத்தையெடுப்பது போன்றவையெல்லாம் நடக்கும். அதையெல்லாம் தாண்டி அதிகபட்சமாக சைக்கிள் கேட்பார்கள். ஆனால், இப்போதோ ‘டாக்டர், என் பையன் மொபைல் போன் வாங்கிக்கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று அடம்பிடிக்கிறான்’ என்றோ, ‘ஒன்றரை லட்ச ரூபாய்க்குப் பைக் வாங்கித் தரவில்லையென்றால், வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவேன் என்று மிரட்டுகிறான்’ என்றோ மனநல மருத்துவரிடம் புகார் சொல்லும் அளவுக்குப் பிரச்சினைகள் சகஜமாகி வருகின்றன.
கஷ்டப்பட விடலாமா?
சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிலையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில் தவறே இல்லை. ‘நான் பட்ட கஷ்டத்தை, என் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது’ என்ற எண்ணம், பெற்றோரிடம் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வயதில் இது தேவையில்லை என்று பெற்றோர் நினைத்தால், அதைத் தைரியமாகப் பிள்ளைகளிடம் சொல்லப் பழக வேண்டும். மிக இன்றியமையாததாகவும், அதேநேரம் விலை உயர்ந்ததாகவும் இருந்தால், அதன் மதிப்பைச் சுட்டிக்காட்டிக் கையில் கொடுப்பதில் தவறில்லை.
நான் யார்?
‘பாட்ஷா' படத்தில் ரஜினி, ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ' என்று பாடியதைப் போல, நூறு வருடங்களுக்கு முன்னரே புகழ்பெற்ற ஜெர்மன் உளவியல் நிபுணர் எரி எரிக்சன் வாழ்க்கையை எட்டு நிலைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக் கூறியிருக்கிறார்.
அதில் ஐந்தாம் நிலையான பதிமூன்று வயதில் ஆரம்பித்து இருபத்தியொரு வயதில் முடியும் பருவத்தில் ஏற்படும் முக்கிய மாற்றமாக Self என்றழைக்கப்படும் தனித்துவமும் சுயமும் உருவாவதைக் குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ‘தான் யார், இந்தச் சமூகத்தில் தன் பங்கு என்ன?’ என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு Identity crisis (அடையாளச் சிக்கல்) என்று பெயர்.
அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக மனம் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான், தனக்குப் பிடித்த ஒருவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. விளைவாக ஒரு நடிகர், நடிகை அல்லது விளையாட்டு வீரரின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்வது, அரசியல் தலைவரின் மானசீகத் தொண்டனாக மாறுவது, மதரீதியான நம்பிக்கைகளில் ஐக்கியமாவது போன்ற மாற்றங்கள் நடக்கும். பச்சை குத்திக்கொள்வது முதல் பாலாபிஷேகம் செய்வதுவரை, எல்லாமே இதன் வெளிப்பாடுதான்.
தடம் மாறும் நிலை
இந்த மாற்றங்களில் பெரும்பாலா னவை போகப்போக ஆரோக்கியமான முதிர்ச்சியை அடைந்துவிடும். இந்த அடையாளப்படுத்திக்கொள்ளுதல் சில நேரங்களில் எதிர்பாலின ஈர்ப்பாக மாறி, காதல் வயப்படுவதிலும் முடியும்.
சில வேளைகளில் சமூகவிரோதக் கும்பலுடன் சேர்வது, ஜாதி அடிப்படையில் அடையாளம் காண்பது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளிலும் முடிவடையலாம். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல், சாதகமான குடும்பச் சூழ்நிலை, ஆரோக்கியமான கல்வி போன்றவை, இந்தக் காலகட்டத்தில் சரியான பாதையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து