Showing posts with label கிச்சன். Show all posts
Showing posts with label கிச்சன். Show all posts

Saturday, January 05, 2013

மண் மணம் கமழும் கிராமத்துச்சமையல் - 30 வகைகள் -- பத்மா

30 வகை நாட்டுப்புற சமையல்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்


நாட்டுப்புற கலைகளைப் போலவே, நாட்டுப்புற சமையலும் மக்களை மகிழ்விப்பதில் ஈடு இணையற்றது. நாக்கை சுண்டியிழுக்கும் சுவையுடன், உடல் நலம் காக்க தேவையான சத்துக்களை தன்னகத்தே அடக்கியிருக்கும் '30 வகை நாட்டுப்புற சமையல்’ குறிப்புகளைத் தேடித் தேடி தயார் செய்து உங்கள் முன் குவித்திருக்கிறார் சமையல் கலை நிபுணர

நங்கநல்லூர் பத்மா. ''கருப்பட்டி, வேப்பம்பூ, கேழ்வரகு, கொள்ளு, சோளம், முடக்கத்தான் கீரை போன்றவற்றை பயன்படுத்தி இதமான, பதமான கிராமிய உணவு வகைகளை கொடுத்துள்ளேன். இவற்றை அடிக்கடி செய்து பரிமாறி, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பராமரித்து, ஆயுளையும் அதிகரிக்கச் செய்யுங்கள்'' என்று  அழைப்புவிடுக்கும் பத்மாவின் ரெசிபிகளை, கலையுணர்வுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. 

கோதுமை ரவை உப்புமா
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், பெரிய வெங் காயம் - 2, வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை  சேர்த்து, வதக்கிக் கொள்ளவும். இதில், ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்கவிடவும். பிறகு, உப்பு சேர்த்து, ரவையை தூவிக் கிளறி வேகவிட்டு, வறுத்த வேர்க்கடலையை உடைத்துப் போட்டு, எல்லாம் நன்கு கலந்துவரும்படி கிளறவும். கடைசியாக, எலுமிச்சம்பழம் பிழிந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் சோள ரவையிலும் உப்புமா செய்யலாம்.

கத்திரிக்காய் ரசவாங்கி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், கத்திரிக்காய் - 200 கிராம், தனியா - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள்,   மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேக வைக்கவும். புளித் தண்ணீரில் கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிப்போட்டு... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை, வேக வைத்த கத்திரிக்காயுடன் சேர்த்து, கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, வெல்லம், வேக வைத்த துவரம்பருப்பு போட்டு கலந்து இறக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.
குறிப்பு: கத்தரிக்காய் ரசவாங்கி... இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்தது.

 சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
தேவையானவை: அதிகம் புளிப்பு இல்லாத மோர் - அரை லிட்டர், சேப்பங்கிழங்கு - 10 , தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, வெந்தயம், சீரகம், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை மோருடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும், சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பாதியாக நறுக்கவும். மோர் கலவையுடன் வேக வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து,  சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும்.
குறிப்பு: வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணி ஆகியவற்றிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்.

முப்பருப்பு உருண்டை
தேவையானவை: முளைவிட்ட கொள்ளு, முளைவிட்ட கொண்டைக்கடலை, முளைவிட்ட பச்சைப்பயறு - தலா 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டுப் பல் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை  - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கொள்ளு, கொண்டக்கடலை, பச்சைப்பயிறு ஆகியவற்றுடன்... தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும் (முளைவிட்டிருப்பதால் தண்ணீரில் ஊற வைக்கத் தேவையில்லை). இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்பு: இந்த உருண்டைகளை மோர்க்குழம்பு, கூட்டு முதலியவற்றில் போடலாம். மாவை, பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம்.

 கேழ்வரகு புட்டு
தேவையானவை: கேழ்வரகு - 200 கிராம், சிவப்பு அரிசி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் - சிறிதளவு, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரை லேசாக சூடாக்கி, மாவில் தெளித்து பிசிறிக் கொண்டு, இட்லித் தட்டின் மேல் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து போட்டு, மாவை போட்டு மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும், ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து நெய், தேங்காய் துருவல், நறுக்கிய பழத் துண்டுகள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: மாவை இட்லித் தட்டில் வைக்காமல், புட்டு குழலில் நிரப்பியும் வேகவிட்டு எடுக்கலாம்.

 கேப்பைக்கூழ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், மோர் மிளகாய் - 3, மோர் (சிறிது புளிப்பாக) - 500 மில்லி, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மோருடன் உப்பு, கேழ்வரகு மாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கரைத்த மாவை இதில் ஊற்றி, கூழ் பதமாக கிளறி இறக்கவும்.
குறிப்பு: கேப்பைக்கூழுக்கு, நறுக்கிய பச்சை வெங்காயம் தொட்டுச் சாப்பிட... ருசியோ ருசி!

 இஞ்சி  பருப்பு துவையல்
தேவையானவை: இஞ்சி - 25 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை சேர்த்து வறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கி வதக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும் (பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்தது), இஞ்சி - பருப்பு துவையலும் சூப்பர் காம்பினேஷன்

 கலவை பருப்பு வாழைப்பூ உசிலி
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கொள்ளு - 4 டீஸ்பூன், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொள்ளு நான்கையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அதை களைந்து, வடிகட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறிய உடன் நன்கு பிழிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து உதிரியாக வரும்வரை மிதமான தீயில் கிளறவும். பருப்பு மொறுமொறுப்பாக ஆனவுடன் பிழிந்து வைத்து இருக்கும் வாழைப்பூவை போட்டுக் கிளறி. எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
குறிப்பு: இதை குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

 மொச்சைக் குழம்பு
தேவையானவை: பச்சை மொச்சை (உரித்தது) - 100 கிராம், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, உளுத் தம் பருப்பு, வெந்தயம் - தலா அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை 250 மில்லி தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை குழைவாக வேக   வைக்கவும். மொச்சையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய மொச்சை, சாம்பார் பொடி, உப்பு  ஆகிய வற்றை புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்கவும். கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப் பால் ருசியைக் கூட்டுவதோடு, வயிற்றில் புண் வராமலும் தடுக்கும்.

 அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வேக வைக்கவும். அவரைக்காயுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதைக் கலந்து, அவரைக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கீரைத்தண்டு, கொத்தவரங்காய், கத்திரிக்காய் ஆகியவற்றிலும் கூட்டு தயாரிக்கலாம்.

 தானிய வடை
தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய்  - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்க   வும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த தும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிற மாக வேகவிட்டு எடுக் கவும்.
குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

 பீர்க்கங்காய் அடை
தேவையானவை: சிறிய பீர்க்கங்காய் - ஒன்று, இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து - தலா 100 கிராம், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து தக்காளி, தோல் சீவிய இஞ்சி, உப்பு சேர்க்கவும். அரிசியை தனியாகவும், பருப்பை தனியாகவும் அரைத்து மாவுகளை ஒன்று சேர்த்துக் கலக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை அடையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கீரை, கோஸ் ஆகியவற்றிலும் அடை தயாரிக்கலாம்.

 கதம்ப சாம்பார்
தேவையானவை: குடமிளகாய் (சிறியது) ஒன்று, சிவப்பு பரங்கிக் கீற்று - ஒன்று, அவரைக்காய் - 4, கத்திரிக்காய் - 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், முருங்கைக்காய் - தலா ஒன்று, சாம்பார்  பொடி 4 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். துவரம் பருப்பை குழைவாக வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி, புளிக் கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்புடன், அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கலந்து, கொதிக்கும் குழம்புடன் சேர்க்கவும். இதில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இந்தக் குழம்பு சேர்த்து சாப்பிட... அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லா காய்களும் இருப்பதால், சைட் டிஷ் தேவை இல்லை.

 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளிப்பு இல்லாத தயிர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து உடனே இறக்கவும்.
குறிப்பு: பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க வாழைத்தண்டு உதவும். நமக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து வாழைத்தண்டில் இருப்பதால்,  வாரம் ஒரு முறை இதை உணவில் சேர்க்கலாம்.

 வெந்தயக்கீரை சாம்பார்
தேவையானவை: வெந்தயக்கீரை - மூன்று கட்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெந்தயக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து, உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு  சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

 இனிப்பு காராமணி சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி, வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி, அடுப்பில் வைத்து காய்ச்சவும். சிறிது கெட்டி யானதும் வேக வைத்த காரா மணி சேர்த்து, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: தானியங்களில் புரோட்டீன் சத்து அதிகம். உப்பு அல்லது இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட தானிய சுண்டலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 மிளகு அவல்
தேவையானவை: அவல் - 250 கிராம், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலில் தண்ணீர் விட்டு நன்கு களைந்து, தண்ணீரை வடித்து தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து, அவலையும் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: புளித் தண்ணீரில் அவலை சேர்த்துக் களைந்து, தண்ணீர் வடித்து எடுத்தும் இதை செய்யலாம்.

 முடக்கத்தான் கீரை பக்கோடா
தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு,  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை  மாவு, அரிசி மாவுடன்... வெங் காயம், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரையைப் போட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை பக்கோடாக்  களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முடக்கத்தான் கீரை கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்தக் கீரையை துவையல், சட்னி, தோசை, அடை ஆகியவற்றி லும் சேர்க்கலாம்.

 கலவை கீரை வடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை - தலா ஒரு கப், மிளகு - 10, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிக்கவும். இதனுடன் தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரைகளைக் கழுவி, வடிகட்டி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி இலை, நூல்கோல் இலை, கோஸ் துருவல் சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

சிறுகிழங்கு பொரியல்
தேவையானவை: சிறுகிழங்கு - 200 கிராம், இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: சிறுகிழங்கை நன்றாக கழுவி, குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கி, ஆறியதும் தோல் உரித்து, இரு பாதியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... இஞ்சிபேஸ்ட் சேர்த்து வதக்கி, பின்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய சிறுகிழங்கையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 எள்  கறிவேப்பிலைப்பொடி
தேவையானவை: எள் - 25 கிராம், கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய்,  உளுத்தம்பருப்பையும் வறுத்து, எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: எள், எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை தலை முடி வளர்ச்சிக்கு உதவும். சூடான சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து, நெய் விட்டு சாப்பிட்டால், ருசிக்கு ருசி... வலிமைக்கு வலிமை !

 வெண்டைப்பிஞ்சு வெந்தய தோசை
தேவையானவை: வெண்டை (சிறு பிஞ்சு) - 6, புழுங்கல் அரிசி - 250 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயம், உளுத்தம்பருப்பை தனியாக ஊற வைத்து, பிறகு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நைஸாக அரைத்து, சிறிது மசிந்ததும் வெண்டைப் பிஞ்சையும் காம்பு நீக்கிப் போட்டு அரைக்கவும். மாவில் உப்பு சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெண்டைப்பிஞ்சு தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு பூண்டு மிளகாய்ப்பொடி சூப்பர் காம்பினேஷன்!

 வேப்பம்பூ பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தை தணிக்கும். பித்தம் அதிகம் உள்ளவர்கள் வேப்பம்பூ பச்சடி, துவையல், பொடி செய்து சாப்பிடுவது நல்லது.

 சேனை பொரியல்
தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனையை தோல் சீவி, பொடியாக நறுக்கி, புளித் தண்ணீரில் சேர்த்து... உப்பு,     மஞ்சள்தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு, தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண் ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வடிகட்டி வைத்த சேனையைப் போட்டு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு: சேனை அதிகம் வேகக்கூடாது. சிறிது கொதித்த உடன் தண்ணீர் வடிக்கட்டி விட வேண்டும். நன்றாக வெந்துவிட்டால் மொறுமொறுப்பு வராது.

 கருப்பட்டி  கோதுமை தோசை
தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கோதுமை - 200 கிராம், அரிசி - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், நெய் - 100 மில்லி.
செய்முறை: கோதுமை, அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். கருப்பட்டியை பொடித்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அரைத்த மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு, வெண்ணெய் சிறந்த காம்பினேஷன் கோதுமைக்கு பதில் கம்பு, கேழ்வரகு மாவு பயன்படுத்தியும் இதே முறையில் தோசை தயாரிக்கலாம்.

 சோளம்  அரிசி  பருப்பு பொங்கல்
தேவையானவை: அரிசி - 200 கிராம், சோளம் (உரித்தது), பாசிப்பருப்பு (வறுத்தது) - தலா ஒரு கப், மிளகு - சீரகம் சேர்த்துப் பொடித்தது - 2 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு, சோளம் மூன்றையும் ஒன்று சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு, லேசாக சூடானதும்... மிளகு - சீரகப் பொடி போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். இதை, வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: அரிசிக்குப் பதில் கோதுமை பயன்படுத்தியும் இந்த பொங்கலை தயாரிக்கலாம். இதற்கு வடை - சட்னி, சிறந்த காம்பினேஷன்.

 தேங்காய்  அரிசி பாயசம்
தேவையானவை: அரிசி - 200 கிராம், தேங்காய் - ஒரு மூடி, பொடித்த வெல்லம்  - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 200 மில்லி, வறுத்த முந்திரி - 10.
செய்முறை: அரிசி - தேங்காய் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து, சிறிது தண்ணீ ர் விட்டு கலக்கி கொதிக்கவிடவும். அரிசி நன்கு வேகும்வரை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெந்ததும் வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, பால் விட்டு, ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரியை உடைத்து இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: தேங்காயும் அரிசியும் எப்போதும் வீட்டில் இருக்கும் என்பதால்,  உடனே தயாரித்துவிடலாம். இதை செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!

தனியா  மிளகு  சீரகப்பொடி
தேவையானவை: தனியா - ஒரு கப், மிளகு - 10, சீரகம் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் தனியா, மிளகு, உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இந்த பொடியை சேர்த்து, சிறிது நெய் விட்டு சாப்பிட... 'விறுவிறு’ சுவை நாக்கை கட்டிப்போடும். காய் வாங்க முடியாத சமயத்தில் இந்தப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காய துவையல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.

 வெங்காய துவையல்
தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.

நன்றி - விகடன்

Saturday, August 06, 2011

என்னை விரட்டும் சங்கீதம் நீ, எண்ணெய் மிரட்டும் சங்கடம் நான் -30 வகை எண்ணெய் இல்லாத சமையல் டிப்ஸ்

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் !

'ஹெல்த் கான்ஷியஸ்னஸ்' அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது... எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். இதற்கு உங்களுக்கு கைகொடுக்க வருகிறார் 'சமையல்கலை நிபுணர்’ நங்கநல்லூர் பத்மா.


 புரோட்டீன் ரிச் உசிலி, வடிகஞ்சி சூப், குழல் புட்டு என்று சத்தும், சுவையும் மிக்க ரெசிபிகளை அள்ளித் தந்து அசத்தியிருக்கும் அவர், ''சிலவற்றைத் தாளிப்பதற்கு மட்டும் சில துளி எண்ணெயைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி எண்ணெய் பயன்பாடு ஜீரோதான்.

அதேசமயம், சுவையில் துளியும் குறை வைக்காமல் விதம்விதமான அயிட்டங்களை தந்திருக்கிறேன். குறிப்பாக, மல்டி கடலை உருண்டை, வெஜிடபிள் ஸ்பெகட்டி, மல்டி பழ டெஸட் போன்றவற்றைச் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், தட்டு காலியாகும் வேகத்தைக் கண்டு மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படுவீர்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார். அவருடைய ரெசிபிகள், செஃப் ரஜினியின் அலங்கரிப்போடு இங்கே இடம்பெறுகின்றன.

களத்தில் இறங்குங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!

1.  மல்டி கடலை உருண்டை 


தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, உருட்டும் பதம் வந்ததும் (தண்ணீரில் போட்டால் உருட்டும் பதம்) இறக்கவும். பாதாம், பிஸ்தாவை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து... உடைத்த பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து, பாகுடன் கலக்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.


2.  வெஜிடபிள் கலவைக் கூட்டு 


தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச்  சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.

3.  மேத்தி ரொட்டி 

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு,  பால் - 100 மில்லி, உப்பு -   தேவையான அளவு,

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.

4.  தேன் நெல்லிக்காய்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி, சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.

குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.

5.  நீர்க் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கும் நீரில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.

6.  வெஜிடபிள் குருமா

தேவையானவை: தக்காளி - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி  - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி.... பச்சைப் பட்டாணி,  நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும், தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலந்து, மிளகாய், தேங்காய் துருவலை அரைத்துச் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய்க்கு பதில்   தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.

7.  எள் உருண்டை

தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை   தனித்தனியாக பாகுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை  பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை  துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.

8.  வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப், கோஸ் (துருவியது) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும். நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே  சேவையின் மேல் தூவி சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்!  பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.

9.  வடிகஞ்சி சூப்

தேவையானவை: அரிசி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - அரை கப், துருவிய கேரட் - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு சிட்டிகை, பொடியாக துருவிய கோஸ் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,  ரஸ்க் - 4, உப்பு -    தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது கஞ்சி  வடிக்கவும். அதில் தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், உப்பு சேர்க்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, சிறிது சோள மாவை கரைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும். சாப்பிடும்போது ரஸ்க்கை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துச் சாப்பிடவும்.

குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

10.  மல்டி பழ டெஸட்

தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள் - 6, சப்போட்டா - இரண்டு, ஆரஞ்சு - ஒன்று, ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, தேன் - 4 டீஸ்பூன், பைனாப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எல்லா பழங்களையும் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பிளேட்டில் பரவலாக போட்டு, தேன் ஊற்றி அப்படியே சாப்பிடவும்.

குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!



11.  புரோட்டீன் ரிச் உசிலி

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து...  உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.

குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.

12.  ராகி இனிப்பு உருண்டை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.

13.  வெஜிடபிள் சொதி

தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு,  தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.


செய்முறை: கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி  வேக வைக்கவும். பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.

14.  குழல் புட்டு

தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நேந்திரம்பழம் - ஒன்று.

செய்முறை: புட்டு மாவில் இளம் சூடாக தண்ணீரைத் தெளித்து, நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது மாவை நிரப்பி. அதன் மேலே தேங்காய் துருவல், பிறகு மாவு, பிறகு நேந்திரம்பழத் துண்டுகள்... இப்படி மாற்றி மாற்றி அடைத்து, வேக வைத்து எடுக்கவும். குழல் வடிவத்தில் இருக்கும் இந்தப் புட்டை கைகளால் பிசைந்து சாப்பிடலாம்.

குறிப்பு:  மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.

15.  பயறு கறி

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து... குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, வேக வைத்த காராமணியில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

16.  வெஜிடபிள் இட்லி

தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.

செய்முறை: இட்லி மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.

17.  அகத்திக்கீரை பொரியல்

தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - முக்கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அகத்திக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து,  தேங்காய் துருவல், வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்.

குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும்.   கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.

 18. பைனாப்பிள் ரசம்

தேவையானவை: புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியைக் கரைத்து கடாயில் விட்டு, சாம்பார் பொடி உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை நறுக்கிப்    போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் பைனாப்பிள் துண்டுகள் போட்டு, வேக வைத்த பருப்பை கரைத்து விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.

19.  நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும்.  எண்ணெயில் கடுகு தாளித்து இதில் கொட்டவும்..

குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.

 20. முருங்கைக் கீரை கூட்டு

தேவையானவை: முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் கொட்டவும். நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.



 21. கத்திரிக்காய் கொத்ஸு

தேவையானவை: கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய்,  கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை சுட்டு, தோல் உரித்து, நன்கு பிசையவும். புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, பிசைந்த கத்திரிக்காய், உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, வெல்லத்தை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: அரிசி உப்புமாவுக்கும்,  பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.

22  காராமணி சுண்டல்

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.

செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேகவிடவும். வெல்லத்தை பாகுகாய்ச்சி, வடிகட்டி, உருட்டும் பதம் வந்ததும் வேக வைத்த காராமணி சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.

23. மல்டி பருப்பு பொடி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வெறும் காடயில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.

24. மல்டி மாவு கேக்

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.

குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.

 25. பாசிப்பயறு சுண்டல்

தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பயறு குழையாமல் வேக வேண்டும். காடயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, பயறு, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.

26.  மூலிகைப் பொடி

தேவையானவை: சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, வேப்பம்பூ - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 6, கடுகு - 4 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலை, வேப்பம்பூ, சீரகம், உளுத்தம்பருப்பு, சுண்டைக்காய் வற்றல், கடுகு, சுக்கு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை  சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

27.  பால் அவல்

தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.

செய்முறை: அவலை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வெல்லத்தை தூள் செய்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து, அவலுடன்   சேர்க்கவும்.
குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.

28.  புதினா - சீரக ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம்  - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்


செய்முறை: அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும்   இறக்கவும். புதினாவையும் வெங்காயத்தையும் வதக்கவும். வதக்கிய வெங்காயம், புதினா,பொட்டுக்கடலை, வேர்க்கடலை, நெய் ஆகியவற்றுடன் சாதத்தைச் சேர்க்கவும். கடுகு, சீரகத்தை எண் ணெயில் தாளித்து சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 29. காரப்பொரி

தேவையானவை: அரிசிப்பொரி -  மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: பூண்டை தோல் உரித்து, நசுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காய்த்துள் போட்டு... பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.

 30. வெஜிடபிள் ஸ்பெகட்டி

தேவையானவை: ஸ்பெகட்டி (சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பச்சைப்  பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஸ்பெகடியை உடைத்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். தக்காளி, குடமிளகாய், கேரட்,       வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு உப்பு போட்டு, வேக வைத்த ஸ்பெகட்டியுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!

 நன்றி - விகடன்