Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, January 05, 2013

மண் மணம் கமழும் கிராமத்துச்சமையல் - 30 வகைகள் -- பத்மா

30 வகை நாட்டுப்புற சமையல்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்


நாட்டுப்புற கலைகளைப் போலவே, நாட்டுப்புற சமையலும் மக்களை மகிழ்விப்பதில் ஈடு இணையற்றது. நாக்கை சுண்டியிழுக்கும் சுவையுடன், உடல் நலம் காக்க தேவையான சத்துக்களை தன்னகத்தே அடக்கியிருக்கும் '30 வகை நாட்டுப்புற சமையல்’ குறிப்புகளைத் தேடித் தேடி தயார் செய்து உங்கள் முன் குவித்திருக்கிறார் சமையல் கலை நிபுணர

நங்கநல்லூர் பத்மா. ''கருப்பட்டி, வேப்பம்பூ, கேழ்வரகு, கொள்ளு, சோளம், முடக்கத்தான் கீரை போன்றவற்றை பயன்படுத்தி இதமான, பதமான கிராமிய உணவு வகைகளை கொடுத்துள்ளேன். இவற்றை அடிக்கடி செய்து பரிமாறி, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பராமரித்து, ஆயுளையும் அதிகரிக்கச் செய்யுங்கள்'' என்று  அழைப்புவிடுக்கும் பத்மாவின் ரெசிபிகளை, கலையுணர்வுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. 

கோதுமை ரவை உப்புமா
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், பெரிய வெங் காயம் - 2, வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை  சேர்த்து, வதக்கிக் கொள்ளவும். இதில், ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்கவிடவும். பிறகு, உப்பு சேர்த்து, ரவையை தூவிக் கிளறி வேகவிட்டு, வறுத்த வேர்க்கடலையை உடைத்துப் போட்டு, எல்லாம் நன்கு கலந்துவரும்படி கிளறவும். கடைசியாக, எலுமிச்சம்பழம் பிழிந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் சோள ரவையிலும் உப்புமா செய்யலாம்.

கத்திரிக்காய் ரசவாங்கி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், கத்திரிக்காய் - 200 கிராம், தனியா - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள்,   மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேக வைக்கவும். புளித் தண்ணீரில் கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிப்போட்டு... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை, வேக வைத்த கத்திரிக்காயுடன் சேர்த்து, கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, வெல்லம், வேக வைத்த துவரம்பருப்பு போட்டு கலந்து இறக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.
குறிப்பு: கத்தரிக்காய் ரசவாங்கி... இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்தது.

 சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
தேவையானவை: அதிகம் புளிப்பு இல்லாத மோர் - அரை லிட்டர், சேப்பங்கிழங்கு - 10 , தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, வெந்தயம், சீரகம், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை மோருடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும், சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பாதியாக நறுக்கவும். மோர் கலவையுடன் வேக வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து,  சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும்.
குறிப்பு: வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணி ஆகியவற்றிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்.

முப்பருப்பு உருண்டை
தேவையானவை: முளைவிட்ட கொள்ளு, முளைவிட்ட கொண்டைக்கடலை, முளைவிட்ட பச்சைப்பயறு - தலா 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டுப் பல் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை  - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கொள்ளு, கொண்டக்கடலை, பச்சைப்பயிறு ஆகியவற்றுடன்... தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும் (முளைவிட்டிருப்பதால் தண்ணீரில் ஊற வைக்கத் தேவையில்லை). இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்பு: இந்த உருண்டைகளை மோர்க்குழம்பு, கூட்டு முதலியவற்றில் போடலாம். மாவை, பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம்.

 கேழ்வரகு புட்டு
தேவையானவை: கேழ்வரகு - 200 கிராம், சிவப்பு அரிசி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் - சிறிதளவு, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரை லேசாக சூடாக்கி, மாவில் தெளித்து பிசிறிக் கொண்டு, இட்லித் தட்டின் மேல் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து போட்டு, மாவை போட்டு மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும், ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து நெய், தேங்காய் துருவல், நறுக்கிய பழத் துண்டுகள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: மாவை இட்லித் தட்டில் வைக்காமல், புட்டு குழலில் நிரப்பியும் வேகவிட்டு எடுக்கலாம்.

 கேப்பைக்கூழ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், மோர் மிளகாய் - 3, மோர் (சிறிது புளிப்பாக) - 500 மில்லி, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மோருடன் உப்பு, கேழ்வரகு மாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கரைத்த மாவை இதில் ஊற்றி, கூழ் பதமாக கிளறி இறக்கவும்.
குறிப்பு: கேப்பைக்கூழுக்கு, நறுக்கிய பச்சை வெங்காயம் தொட்டுச் சாப்பிட... ருசியோ ருசி!

 இஞ்சி  பருப்பு துவையல்
தேவையானவை: இஞ்சி - 25 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை சேர்த்து வறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கி வதக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும் (பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்தது), இஞ்சி - பருப்பு துவையலும் சூப்பர் காம்பினேஷன்

 கலவை பருப்பு வாழைப்பூ உசிலி
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கொள்ளு - 4 டீஸ்பூன், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொள்ளு நான்கையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அதை களைந்து, வடிகட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறிய உடன் நன்கு பிழிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து உதிரியாக வரும்வரை மிதமான தீயில் கிளறவும். பருப்பு மொறுமொறுப்பாக ஆனவுடன் பிழிந்து வைத்து இருக்கும் வாழைப்பூவை போட்டுக் கிளறி. எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
குறிப்பு: இதை குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

 மொச்சைக் குழம்பு
தேவையானவை: பச்சை மொச்சை (உரித்தது) - 100 கிராம், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, உளுத் தம் பருப்பு, வெந்தயம் - தலா அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை 250 மில்லி தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை குழைவாக வேக   வைக்கவும். மொச்சையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய மொச்சை, சாம்பார் பொடி, உப்பு  ஆகிய வற்றை புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்கவும். கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப் பால் ருசியைக் கூட்டுவதோடு, வயிற்றில் புண் வராமலும் தடுக்கும்.

 அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வேக வைக்கவும். அவரைக்காயுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதைக் கலந்து, அவரைக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கீரைத்தண்டு, கொத்தவரங்காய், கத்திரிக்காய் ஆகியவற்றிலும் கூட்டு தயாரிக்கலாம்.

 தானிய வடை
தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய்  - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்க   வும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த தும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிற மாக வேகவிட்டு எடுக் கவும்.
குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

 பீர்க்கங்காய் அடை
தேவையானவை: சிறிய பீர்க்கங்காய் - ஒன்று, இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து - தலா 100 கிராம், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து தக்காளி, தோல் சீவிய இஞ்சி, உப்பு சேர்க்கவும். அரிசியை தனியாகவும், பருப்பை தனியாகவும் அரைத்து மாவுகளை ஒன்று சேர்த்துக் கலக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை அடையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கீரை, கோஸ் ஆகியவற்றிலும் அடை தயாரிக்கலாம்.

 கதம்ப சாம்பார்
தேவையானவை: குடமிளகாய் (சிறியது) ஒன்று, சிவப்பு பரங்கிக் கீற்று - ஒன்று, அவரைக்காய் - 4, கத்திரிக்காய் - 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், முருங்கைக்காய் - தலா ஒன்று, சாம்பார்  பொடி 4 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். துவரம் பருப்பை குழைவாக வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி, புளிக் கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்புடன், அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கலந்து, கொதிக்கும் குழம்புடன் சேர்க்கவும். இதில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இந்தக் குழம்பு சேர்த்து சாப்பிட... அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லா காய்களும் இருப்பதால், சைட் டிஷ் தேவை இல்லை.

 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளிப்பு இல்லாத தயிர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து உடனே இறக்கவும்.
குறிப்பு: பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க வாழைத்தண்டு உதவும். நமக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து வாழைத்தண்டில் இருப்பதால்,  வாரம் ஒரு முறை இதை உணவில் சேர்க்கலாம்.

 வெந்தயக்கீரை சாம்பார்
தேவையானவை: வெந்தயக்கீரை - மூன்று கட்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெந்தயக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து, உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு  சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

 இனிப்பு காராமணி சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி, வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி, அடுப்பில் வைத்து காய்ச்சவும். சிறிது கெட்டி யானதும் வேக வைத்த காரா மணி சேர்த்து, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: தானியங்களில் புரோட்டீன் சத்து அதிகம். உப்பு அல்லது இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட தானிய சுண்டலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 மிளகு அவல்
தேவையானவை: அவல் - 250 கிராம், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலில் தண்ணீர் விட்டு நன்கு களைந்து, தண்ணீரை வடித்து தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து, அவலையும் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: புளித் தண்ணீரில் அவலை சேர்த்துக் களைந்து, தண்ணீர் வடித்து எடுத்தும் இதை செய்யலாம்.

 முடக்கத்தான் கீரை பக்கோடா
தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு,  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை  மாவு, அரிசி மாவுடன்... வெங் காயம், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரையைப் போட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை பக்கோடாக்  களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முடக்கத்தான் கீரை கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்தக் கீரையை துவையல், சட்னி, தோசை, அடை ஆகியவற்றி லும் சேர்க்கலாம்.

 கலவை கீரை வடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை - தலா ஒரு கப், மிளகு - 10, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிக்கவும். இதனுடன் தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரைகளைக் கழுவி, வடிகட்டி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி இலை, நூல்கோல் இலை, கோஸ் துருவல் சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

சிறுகிழங்கு பொரியல்
தேவையானவை: சிறுகிழங்கு - 200 கிராம், இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: சிறுகிழங்கை நன்றாக கழுவி, குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கி, ஆறியதும் தோல் உரித்து, இரு பாதியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... இஞ்சிபேஸ்ட் சேர்த்து வதக்கி, பின்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய சிறுகிழங்கையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 எள்  கறிவேப்பிலைப்பொடி
தேவையானவை: எள் - 25 கிராம், கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய்,  உளுத்தம்பருப்பையும் வறுத்து, எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: எள், எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை தலை முடி வளர்ச்சிக்கு உதவும். சூடான சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து, நெய் விட்டு சாப்பிட்டால், ருசிக்கு ருசி... வலிமைக்கு வலிமை !

 வெண்டைப்பிஞ்சு வெந்தய தோசை
தேவையானவை: வெண்டை (சிறு பிஞ்சு) - 6, புழுங்கல் அரிசி - 250 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயம், உளுத்தம்பருப்பை தனியாக ஊற வைத்து, பிறகு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நைஸாக அரைத்து, சிறிது மசிந்ததும் வெண்டைப் பிஞ்சையும் காம்பு நீக்கிப் போட்டு அரைக்கவும். மாவில் உப்பு சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெண்டைப்பிஞ்சு தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு பூண்டு மிளகாய்ப்பொடி சூப்பர் காம்பினேஷன்!

 வேப்பம்பூ பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தை தணிக்கும். பித்தம் அதிகம் உள்ளவர்கள் வேப்பம்பூ பச்சடி, துவையல், பொடி செய்து சாப்பிடுவது நல்லது.

 சேனை பொரியல்
தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனையை தோல் சீவி, பொடியாக நறுக்கி, புளித் தண்ணீரில் சேர்த்து... உப்பு,     மஞ்சள்தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு, தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண் ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வடிகட்டி வைத்த சேனையைப் போட்டு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு: சேனை அதிகம் வேகக்கூடாது. சிறிது கொதித்த உடன் தண்ணீர் வடிக்கட்டி விட வேண்டும். நன்றாக வெந்துவிட்டால் மொறுமொறுப்பு வராது.

 கருப்பட்டி  கோதுமை தோசை
தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கோதுமை - 200 கிராம், அரிசி - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், நெய் - 100 மில்லி.
செய்முறை: கோதுமை, அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். கருப்பட்டியை பொடித்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அரைத்த மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு, வெண்ணெய் சிறந்த காம்பினேஷன் கோதுமைக்கு பதில் கம்பு, கேழ்வரகு மாவு பயன்படுத்தியும் இதே முறையில் தோசை தயாரிக்கலாம்.

 சோளம்  அரிசி  பருப்பு பொங்கல்
தேவையானவை: அரிசி - 200 கிராம், சோளம் (உரித்தது), பாசிப்பருப்பு (வறுத்தது) - தலா ஒரு கப், மிளகு - சீரகம் சேர்த்துப் பொடித்தது - 2 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு, சோளம் மூன்றையும் ஒன்று சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு, லேசாக சூடானதும்... மிளகு - சீரகப் பொடி போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். இதை, வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: அரிசிக்குப் பதில் கோதுமை பயன்படுத்தியும் இந்த பொங்கலை தயாரிக்கலாம். இதற்கு வடை - சட்னி, சிறந்த காம்பினேஷன்.

 தேங்காய்  அரிசி பாயசம்
தேவையானவை: அரிசி - 200 கிராம், தேங்காய் - ஒரு மூடி, பொடித்த வெல்லம்  - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 200 மில்லி, வறுத்த முந்திரி - 10.
செய்முறை: அரிசி - தேங்காய் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து, சிறிது தண்ணீ ர் விட்டு கலக்கி கொதிக்கவிடவும். அரிசி நன்கு வேகும்வரை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெந்ததும் வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, பால் விட்டு, ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரியை உடைத்து இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: தேங்காயும் அரிசியும் எப்போதும் வீட்டில் இருக்கும் என்பதால்,  உடனே தயாரித்துவிடலாம். இதை செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!

தனியா  மிளகு  சீரகப்பொடி
தேவையானவை: தனியா - ஒரு கப், மிளகு - 10, சீரகம் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் தனியா, மிளகு, உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இந்த பொடியை சேர்த்து, சிறிது நெய் விட்டு சாப்பிட... 'விறுவிறு’ சுவை நாக்கை கட்டிப்போடும். காய் வாங்க முடியாத சமயத்தில் இந்தப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காய துவையல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.

 வெங்காய துவையல்
தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.

நன்றி - விகடன்

Tuesday, December 18, 2012

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.



 ''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.



மீல்மேக்கர் டிக்கிஸ்
தேவையானவை: மீல்மேக்கர் - 20, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

கீரை  தால் கிரிஸ்பி
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், முருங்கைக்கீரை - ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி... பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

மூங்தால்  பனீர் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - முக்கால் கப், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... பூண்டு - பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஓட்ஸ் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.

ஸ்வீட் சோயா
தேவையானவை: சோயா உருண்டைகள் - 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு - 100 கிராம், மைதா - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. 
செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி... ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா மசாலா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ  வெங்காய அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு - 4 பல்,  காய்ந்த மிளகாய் - 6, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ -  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி... இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, ஸ்வீட் கார்ன் - 2, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.

மேத்தி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.

காரசார வேர்க்கடலை பொடி
தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட... சுவை அள்ளும்!

ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

மசாலா இட்லி
தேவையானவை: இட்லி - 10, வெங்காயம், தக்காளி - தலா 2, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி... சுடச்சுட பரிமாறவும்.

மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி
தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ஹனி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், தேன் - ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

கிரீன்  ரெட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் - 10, புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

கேழ்வரகு  முருங்கைக்கீரை அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) - அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.

நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,
டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி... கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

முந்திரி பொடி
தேவையானவை: முந்திரி - 20, பாதாம் - 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.

பட்டாணி ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு - 4 கப், துருவிய கேரட், வேக வைத்த  பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து... மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.

மூங்தால் பெசரட்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி... பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஸ்பைஸி ரவா கிச்சடி
தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

ஆலு  பாலக் கட்லெட்
தேவையானவை: பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் - 4, பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா மாவு - அரை கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

சோயா  ஆனியன் பெசரெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் - 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு - ஒன்றரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும்  சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

பூண்டு துவையல்
தேவையானவை: உரித்த பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

பிரெட் வெஜ் புலாவ்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 6, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6,  பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் - ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக 'கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு 'கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.

 வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 10, புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா - கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

 பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் - 4, சீஸ் துருவல் - அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து... மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.


நன்றி - அவள் விகடன்