Wednesday, May 22, 2013

கூடங்குளம் அணு உலை -இலங்கையுடன் கூட்டா? -சுப.உதயகுமாரன் பேட்டி

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
அணுசக்தியின் முக்கியத்துவம்பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழிகூட கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?'' 

 
'' 'இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் இந்தியாவின் மீட்சிக்கு ஒரே வழி’ என்று 2007-ம் ஆண்டு தனது நாடாளுமன்றக் கன்னிப்பேச்சில் காரசாரமாக ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார் திருமதி கனிமொழி. 'காலச்சுவடு’ மொழிபெயர்த்து வெளியிட்ட அந்தப் பேச்சுக்கு நான் எதிர்வினை எழுதினேன். அதன் காரணமாகவும் அந்த இதழின் நூலக சந்தா அப்போதைய கலைஞர் அரசால் உடனடியாக நிறுத்தப்பட்டது.


 இந்தியாவின் எரிசக்திக் கொள்கை, அணுசக்தித் திட்டம்பற்றி எல்லாம் ஆழமான புரிதலும், அரசியல் தெளிவும், கொள்கை நிலைப்பாடும் உள்ளவர்களுடன் அதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால், சுயநலவாதிகளான, பிழைப்புவாதிகளான, சந்தர்ப்பவாதிகளான நமது அரசியல்வாதிகள் பெரும்பாலானோருக்குப் பணம், பதவி, பட்டம் கிடைக்கும் என்றால் வாய் திறப்பார்கள். எதுவும் கிடைக்காது என்றால், வாய் திறக்க மறுப்பார்கள்!''


பிடல் சேகுவேரா, ராசிபுரம்.


''நடுநிசியில் வீதியில் நடந்து வந்ததற்காகவே ஓர் இளைஞனைக் கைதுசெய்யும் நம் தமிழகக் காவல் துறை. ஆனால், எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை மாதங்களாகச் சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பதன் மர்மம் என்ன?'' 


''எங்கே சுதந்திரமாக நடமாடவிட்டிருக்கிறார்கள்? நாங்கள் இடிந்தகரையில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். குடும்பக் காரணங்களால் இங்கிருந்து வெளியே சென்ற எங்கள் போராட்டக் குழு உறுப்பினர் திரு எம்.டி.கணேசன் மார்ச் 22, 2013 அன்று காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, பாளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கானோர் மருத்துவச் சிகிச்சைக்காகக்கூட ஊருக்கு வெளியே போக முடியாமல் இருக்கிறார்கள்.


மண்ணைக் காக்க, மக்களைக் காக்க... அறவழியில், வன்முறையின்றி, யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் போராடும் 2,27,000 பேர் மீது 350-க்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. முன்னணியினர் மீது தேசத் துரோக வழக்குகள் 20, தேசத்தின் மீது போர் தொடுத்த வழக்குகள் 20  என சுமத்தப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்டுகள் மீதுகூட இவ்வளவு வழக்குகள் கிடையாது. இத்தனை பெரிய, ஆபத்தான, பயங்கரமான குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல் துறை தயங்குவது நியாயம்தானே?



உண்மை என்ன தெரியுமா? ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரிகளைப் பகைத்துக்கொண்டு நீண்ட நாள் கதையை ஓட்ட முடியாது என்ற அச்சமே காரணம்!''


மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.


''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலை இல்லையா?'' 


''நிச்சயமாகக் கவலை இருக்கிறது. எனவேதான் தமிழக முதல்வரின் பல்வேறு மாற்று மின் திட்டங்களை, மத்திய அரசிடம் அவர் வைத்த கோரிக்கைகளை ஆதரித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். கூட்டப்புளி, பெருமணல், கூடங்குளம், வைராவிக்கிணறு, இடிந்தகரை, கூத்தங்குழி போன்ற எங்கள் கிராமங்களில் குமிழ் விளக்குகளை மாற்றிவிட்டு, மின்சாரம் சேமிக்கும் குச்சி விளக்குகளைப் பொருத்தினோம். சூரிய சக்தியை எங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கிறோம். கூடங்குளம் திட்டத்தைக் காற்றாலைகள், கடல் அலை ஆலைகள், சூரிய ஒளி ஆலைகள்கொண்ட மாதிரி எரிசக்திப் பூங்காவாக மாற்றக் கோருகிறோம்!''


த.சூரியதாஸ், சிலட்டூர்.


''கூடங்குளம் மக்களின் மனநிலையைத் தமிழகப் பொதுமக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா?'' 


''நிச்சயமாக! கூலிக்கு மாரடிக்கிற ஒரு சிறு கூட்டத்தைத் தவிர, எங்காவது தமிழ் மக்கள் 'கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திற’ என்று போராடுகிறார்களா? இல்லையே! கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் ஆரம்பக் கட்டத்தில் 'கூடங்குளம் மின்சாரம் வேண்டும்’ என்று குரல் கொடுத்தார்கள்.


 எங்கள் போராட்டப் பெண்கள் அவர்களை நேரில் சந்தித்து, 'உங்கள் வாழ்வாதாரத் துக்காகப் போராடும் நீங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுவது முறையாகுமா?’ என்று ஓர் அறவழிக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்கள். அந்த மனிதநேய மேஜிக் அற்புத மாக வேலை செய்தது. அன்றைய தினம் முதல் அந்தக் கொங்குநாட்டுப் பெருமக்கள் 'மின்சாரம் வேண்டும்’ என்றுதான் போராடினார்கள்.



தமிழகத்தின் மின் பற்றாக்குறை சுமார் 4,000 மெகாவாட். இறந்து பிறந்த குழந்தையான கூடங்குளம் அணுமின் நிலையம் ஒருவேளை எழுந்து நடக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்... மற்ற அணுமின் நிலையங்கள்போல 40 முதல் 50 சதவிகிதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அணுமின் நிலையத்தை ஓட்டுவதற்கு வேண்டிய மின்சாரத்தை எடுத்த பிறகு; கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியத் தொகுப்பு அனைவருக்கும் அவரவர் பங்கைக் கொடுத்த பிறகு; மின் கடத்தலின்போது ஏற்படும் இழப்பு போக, தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதே அரிது. நமது மின்சாரப் பிரச்னைக்கு கூடங்குளம் ஒரு தீர்வே அல்ல. இதெல்லாம் தெரியாத, புரியாத முட்டாள்கள் அல்ல தமிழர்கள்!''


சதீஷ் குமார், ஃபேஸ்புக்.


''அப்துல் கலாம்..?'' 


''மனிதநேயத்தோடு சிந்திக்கலாம்!''


வே.சித்திரவேலு, கருப்பம்புலம்.


''கார் கொடுத்தால் போய்விடுகிறார்கள், கரன்சி கொடுத்தால் போய்விடுகிறார்கள், பதவி கொடுத்தால் போய்விடுகிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் சொன்ன தையே சொல்லிக்கொண்டு பிடிவாதமாகப் போராடிவருகிறீர்களே... இதனால் உங்களுக்கு என்னதான் லாபம்?'' 



''என் குழந்தைகள், நம் குழந்தைகள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வத்தோடும் வாழ்வார்களே... அதுதான் லாபம்! சாகும்போது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நம்மால் முடிந்ததை உண்மையாகச் செய்தோம் என்ற பேரானந்தத்தைப் பெறலாமே... அந்தத் திருப்தி தரும் நிறைவுதான் லாபம்!''


நாசரேத் விஜய், கோவை.


''நீங்கள் ஒரு ஆசிரியர். நீங்கள் சொல்லுங்கள்... நம்முடைய கல்விமுறை சரிதானா? ஏன் தாய்மொழி வழிக் கல்வியை மறுக்கிறார்கள்? என்ன மாற்றம் நிகழ வேண்டும் நம் கல்வித் துறையில்?'' 


''சாராய வியாபாரம் செய்யும் கல்வித்தந்தை, வழிப்பறி நடத்தும் கல்வி நிறுவனம், வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஆசிரியர்கள்... இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கல்விமுறை எப்படி வெற்றி பெறும்? முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே அதைத் தூக்கி நிறுத்திவிடும் என்று நினைப்பது தவறு. குறைந்தது ஐந்து மொழிகள் மீது பற்றையும், புத்தகங்கள் மீது காதலையும், அறிவின் மீது தேடலையும் உருவாக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வியாளர்களே இன்றைய உடனடித் தேவை!''


மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.


''கூடங்குளம் அணு உலை விஷயத்தில் இலங்கையும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அப்படி எனில், சந்தர்ப்பம் அமைந்தால் அந்த நாட்டு அரசோடு இணைந்து போராடுவீர்களா?'' 


''தமிழர்களை இனப்படுகொலை செய்த,  இஸ்லாமியர்களைக் கொடுமைப்படுத்துகிற இலங்கை அரசோடு நிச்சயமாக இணைந்து போராட மாட்டோம். சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாகாத, ஈழத் தமிழர்களை, ஈழ இஸ்லாமியர்களை மனிதர்களாக நடத்தும், மனிதநேயம் கொண்ட சிங்கள மக்களோடு கைகோப்பதில் எந்தச் சுணக்கமும் இல்லை!''


தமிழ்வேல் திருப்பதி, ஃபேஸ்புக்.


''நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெற்று உங்கள் குரலை அங்கும் ஒலிக்கச் செய்யலாமே... என்ன தயக்கம்?'' 


''நாடாளுமன்றத்தில் குரல்கள் ஒலிக்கும் அழகை, ஒலிப்பதற்காக வாங்கும் கிம்பளத்தை, ஒலித்தவுடன் பீறிட்டுக் கிளம்பும் சமூகப் புரட்சிகளை எல்லாம்தான் கண் குளிரப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! 'ஆளும்’ மன்றங்களை நான் நம்பவில்லை; ஆட்கள் மன்றத்தைத்தான் நம்புகிறேன்!'

'
நித்யா ஜெயச்சந்திரன், ஃபேஸ்புக்.


''நீங்கள் பல நாடுகளில் வசித்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தில் சொல்லுங்கள்... இந்தியா குறித்த எந்த விஷயம் உங்களை மிகவும் அச்சுறுத்துகிறது? எந்த விஷயம் பெருமிதம்கொள்ளச் செய்கிறது? 


''இந்திய அரசியல்வாதிகள். அரசியல்வாத இந்தியர்கள்!'

'இதுவரை அணு உலை விபத்தால் மொத்தம் 50 பேர் மட்டுமே இறந்திருப்பதாகச் சொல்கிறது உலக அணு அமைப்பு. சமீபகால உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டும் ஜப்பா னின் ஃபுகுஷிமா விபத்தில் ஓர் உயிரிழப்புகூட இல்லை என்கிறார்கள். அணுஉலை விபத்தி னால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்கிறீர்களே... அதற்கான ஆதாரங்களை அடுக்க முடியுமா?''


''உங்கள் போராட்டங்களில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அனுமதிக்க மறுக்கிறீர் கள்?''


''சமீபத்தில் 'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் கூடங்குளம் பற்றிய விவாதத்தில் அந்தப் பிரச்னைகுறித்த தெளிவின்மையோடு பேசினார்கள் பல இளைஞர்கள். அதோடு உங்களைப் பற்றியும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். அப்படியான கண்ணோட்டத்துடன் இருக்கும் இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் விளக்கம்?''


- போராடுவோம்.

நன்றி - விகடன்



0 comments: