Showing posts with label judgement. Show all posts
Showing posts with label judgement. Show all posts

Thursday, November 01, 2012

கோவை இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு , கேஸ் விபரம்

 மாலை மலர் செய்தி

கோவை, அக். 29-
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). அருமை மகன் ரித்திக் (7).
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.
திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான். உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர். இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோ கரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர். வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை 2011 ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு கோவை மகளிர் கோட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.எதிர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்தார்.
கடந்த 15-ந்தேதி சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கர நாராயணனும், 22-ந்தேதி எதிர்தரப்பில் வக்கீல் சர்மிளாவும் வாதாடினர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (29-ந்தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மனோகரன் இன்று காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 10.30 மணி அளவில் நீதிபதி சுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்தார். முதல் வழக்காக முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம், உன் மீது கூட்டு சதி, குழந்தைகளை கடத்துதல், கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், கொலை செய்தல், பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு மனோகரன் தெரியாது என்றார். அதைத் தொடர்ந்து மனோகரனின் வக்கீல் ஷர்மிளாவிடம் நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு ஷர்மிளா இல்லை என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

 

 தினமணி

கோவையில் இரட்டைக் கொலை: மனோகரனுக்கு தூக்கு தண்டனை


கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.


கோவையில் 2010ஆம் ஆண்டு முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகளைக் கடத்திச் சென்று, முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து அக்டோபர் 29ம் தேதி, இந்த வழக்கில் மனோகரன் என்பவர் குற்றவாளி என்று நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் தீர்ப்பளித்திருந்தார். குற்றவாளிக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.




கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், 2010 அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.



இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி, அங்கலங்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2010 நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளைக் கொலை செய்த இடத்தைக் காட்டுவதற்காக மோகனகிருஷ்ணனை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர். கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் வேன் சென்றபோது, தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்; மனோகரன் சிறையிலடைக்கப்பட்டார்.



மனோகரன் மீதான இந்த வழக்கு விசாரணை 2011 ஜூன் 23-ஆம் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் மொத்தமாக 121 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருள்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.



7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பில் 47 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த்தரப்பில் 6 பேர் சாட்சிகளாக அனுமதிக்கப்பட்டு 5 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.



அக்டோபர் 22-ஆம் தேதியுடன் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன், அக்டோபர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் நீதிபதி முன், மனோகரனை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சங்கரநாராயணன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வழக்குரைஞர் ஷர்மிளா ஆஜரானார்.



இந்த வழக்கில் ஆள் கடத்தல், கூட்டுச் சதி, கற்பழித்தல், கொலை செய்தல், சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ், சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மனோகரனைக் குற்றவாளி என்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இத் தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.



மனோகரனுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.



அரசு வழக்குரைஞர் சங்கர நாராயணன், ஏற்கெனவே இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி, கற்பழித்துக் கொலை செய்த 2 வழக்குகளில் உயர் நீதிமன்றமும், 5 வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்துள்ளது. மேலும், இதேபோல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை, உச்ச நீதிமன்றம் விசாரித்து தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது என்றார்.

நன்றி - தினமணி , மாலை மலர்