Showing posts with label மணம். Show all posts
Showing posts with label மணம். Show all posts

Thursday, September 03, 2015

சொர்க்கத்தின் சாவி! - கி.ராஜநாராயணன்

எனக்கு நெருக்கமாக ஒரு நண்பர் ஒருவர் இருந்தார். அவரை அவருடைய அத்தைதான் அன் போடு எடுத்து வளர்ந்து வந்தாள். அத்தைக்கு வயதாகி தலை சாய்ந்த வுடன், வீட்டு முன்வாசல் திண்ணைக் கட்டிலில் படுத்த படுக்கையாகிவிட்டாள். தளர்ந்த வயோதிகத்தைத் தவிர அத்தையை வேறு எந்த சீக்கும் அண்டவே இல்லை. சீக்குதான் இல்லை என்றாலும்கூட எப்பப் பார்த் தாலும் பொழுது முச்சூடும் அனத்திக் கொண்டே இருப்பாள். இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம் என்று நண்பர் யோசித்துக்கொண்டே இருந்தாராம்.
ஒருநாள் பக்கத்துத் தெருவில் ஒரு கல்யாணம். கதவைப் பூட்டிக்கொண்டு எல்லோரும் அங்கே புறப்படும்போது, பூட்டிய தலைவாசக் கதவின் பெரிய இரும்புச் சாவியை அத்தையிடம் கொடுத்தார்களாம். அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாளாம்.
அத்தையின் நிம்மதியின்மைக்கான முழுக் காரணம் உடனே புரிந்துவிட்டதாம் நண்பருக்கு. அதன் பிறகு இதே வழியைப் பின்பற்றினோம் என்றார். அத்தையின் சாவு நெருங்க நெருங்க, ஒரு வேற்றுச் சாவியை அத்தையின் கையில் நிரந்தரமாக கொடுத்து வைத்துவிட்டார்களாம்.
ஒருநாள் அத்தை இறந்துவிட்டார். முறையான இறுதிச் சடங்குகள் செய்வதற்காக உறவுமுறைகள் எல்லாரும் கூடி, அவரது உடம்பைக் குளிப்பாட்ட முனைந்தபோது… விரல் கள் அழுத்தமாக மூடியிருந்த அத்தை யின் ஒரு கையில் இருந்து அந்த சாவியை எடுக்க ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்திருந்ததாம். அப்போ ஒரு வேடிக்கை ஆசாமி இப்படி சொன்னாராம்: ‘‘மேலே சொர்க்கவாசல் பூட்டியிருந்தாக்கூட, தள்ளு தள்ளு… நானே சாவி கொண்டாந்துட்டேன்னு சொல்லி, திறந்திருப்பார் உங்க அத்தை.’’
‘‘ஞாயப்படி பார்த்தா அந்தச் சாவியையும் அத்தையோட பிரேதத் துடன் கூடவே வெச்சுத்தான் அவங்களை மேலே ’அனுப்பி’ இருக்கணும். எப்படி சும்மா வெறுங்கையோட அவங்களை மேலே அனுப்பி வைக்க முடிஞ்சுதோ…’’ என்று சொன்னார் ஒரு பெண்மணி. அதையும் இங்கே நினைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு!
ஒரு மாதாந்த வெள்ளிக்கிழமையன்று உத்தியம்மா வீட்டை ஒதுங்க வைத்து, சாணிப் பால் கரைசலால் மெழுக ஆயத்தம் செய்தாள்.
வீட்டினுள் அடைசலாக இருந்த சாமான் சட்டுகளையெல்லாம் ஓர ஒதுங்க வைக்கிறபோது உத்தியம்மாவின் கண்கள் தேடுவது அத்தையம்மாவின் சிறுவாட்டு வெள்ளிப் பணம், பாக்கி தங்க நகைககளை எல்லாம் அத்தையம்மா எந்த இடத்தில் புதைத்து வைத்துவிட்டுப் போயிருப்பார் என்பதைத்தான்.
அந்தக் காலத்தில் ஒளித்து வைக்க வேற வழியே கிடையாது. ஒழுக்கரைப் பெட்டிகள் புழக்கத்துக்கு பட்டிதொட்டிகளுக்கு வராத காலம் அது. ரூபாய் நோட்டுகளேகூட அவ்வளவாக சகஜமாகப் புழக்கத்துக்கு வரவில்லை.
அந்த வீட்டின் மண் தரையில் எல்லா இடத்தையும் நினைச்ச சமயத்தில் அடிக்கடி தோண்டியோ, நோண்டியோ பார்க்க முடியாது. குறிப்பிட்ட, சந்தேகம் வரும் இடங்களை மட்டும்தான் நோண்டிப் பார்க்க முடியும். அப்படிப் பார்த்த ஓர் இடத்தில் மண் சும்மாடு ஒன்று தலை காட்டியது. ‘‘வாங்க அத்தையம்மா’’ என்று மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, வெளிவாசக் கதவுகளெல்லாம் சரியாகப் பூட்டி யிருக்கா என்று பார்த்துவிட்டு, ஒரு பிள்ளைக் கடப்பாரையும், கொத்து வேலைக்குப் பயன்படும் தேய்ந்துபோன ஒரு கரணையையும் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் கொஞ்சம் தோண்டிய உடனே ஒரு தோண்டி தெரிந்தது.
வேகமாகப் போய் ஒரு கோழியைப் பிடித்துக்கொண்டு வந்து, அதன் ஒரு காலின் விரல்நுனியை அறுத்து ரத்தப் பலி காட்டிவிட்டு, மேற்கொண்டு தோண் டினாள். முயற்சி வீண் போகவில்லை.
வெள்ளி நாணயங்கள், தங்க நாணயங்கள், பழங்காலத்து தங்க ஆபரணங்கள் இன்னும் ஏதேதோ உள்ளே இருந்துகொண்டு சிரித்தன.
‘கையும் ஓடலை காலும் ஓடலை’ என்று சொல்வார்களே அந்த நிலைதான் உத்தியம்மாவுக்கு. மனசு கிடந்து திக்குமுக்காடியது. அதுமட்டுமா…
ஓவென்று கூப்பாடு போட்டு சங்… சங்… என்று கும்மாளமும் போட்டது மனசு.
‘கொடுக்கிற தெய்வம் கூரை யைப் பிய்த்துக்கொண்டுதான் கொட் டும்’ என்பார்கள். இதுவோ, தரையைப் பிய்த்துக்கொண்டல்லவா மேலெழுந்து துருத்திக்கொண்டு வந் திருக்கிறது. இதுவொரு வகை விபத்துப்போலத்தான்.
கரிசல்ச் சீமையில் ‘தன்னூத்து’ என்று சொல்வார்கள். அவனுக்கு எதுவும் பூமியின் கீழ் இருந்தே வர வேண்டும். குளமோ, குளத்துக்குள் கிணறோ தோண்டும்போது எதிர்பாராத கணத்தில் காத்துக்கொண்டே இருந்ததுபோல் பூமியின் அடியில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.
அந்த நீர் ஒருவருக்கானது அல்ல; ஊருக்கே ஆனது. அப்படி பீய்ச்சியடிக்கும் தண்ணீரைக் கண்டு விட்டால் ஆனந்தக் கூத்திடுவார்கள் மக்கள். ஊரே அதில் நனையும்.
தூங்கா நாயக்கரின் குடும்பம் அதில் இருந்து நிலம் நீச்சு என்று நிமிர்ந்து எழுந்து நின்றது.
எந்திரங்கள் இல்லாத தனிமனித உழைப்பை மட்டுமே கொண்டு வாழ்ந்த காலம் அது. எந்திரம் என்றால் அது சுற்ற வேண்டும்.
அப்போது திரிகை ஒன்றுதான் இருந்தது. அதுவும் கல்லால் ஆனது. அதன் கைப்பிடியும் உள் அச்சு மட்டுமே மரத்தில் ஆனவை.
உலக்கைகளுக்கான பூண்கள் பின்னால் வந்தவை. உரல்களும் மரத்தில் இருந்து பிறகு கல் பிறப் பெடுத்தவையாகும். இரும்புச் சுத்திய லுக்கு முந்தி இருந்தது கொட்டாப்புளி கட்டை.
வெகுநாள்ப்பட்ட வைரம் பாய்ந்த புளிய மரத்தில் இருந்து வந்ததினால் அது கொட்டாப்புளி எனப்பட்டது.
மரச்செக்குகள் கல் செக்குகளாயின. பருத்தியில் இருந்து கொட்டையையும் பஞ்சையும் பிரிக்கும் எந்திரம் முழுவதும் மரத்தினால் ஆனதே.
உலோகத்தினால் முதல் சக்கரம் செய்து எதிரிகளை வதைத்த முதலவன் அசோதை வளர்த்தெடுத்த கண்ணபிரானே. அந்த மாயம் அவனோடு போய்விட்டது.
ஓவியங்கள்: மனோகர்
- இன்னும் வருவாங்க…


நன்றி-த இந்து