Showing posts with label சினிமா தொடர். Show all posts
Showing posts with label சினிமா தொடர். Show all posts

Wednesday, November 18, 2015

ஆஸ்கருக்குச் செல்லும் புரட்சிப் பாடகர்!

கோர்ட்
கோர்ட்

எப்போதாவது ஒருமுறைதான் இப்படி அதிசயம் நடக்கிறது. ‘காக்காமுட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘விசாரணை’என மூன்று தமிழ்ப் படங்கள் தற்போது ஒரே சமயத்தில் உலகம் முழுக்கச் சுற்றுகின்றன. புகழ்பெற்ற திரைப்பட விழாக்களை உலகின் பல நாடுகளிலிருந்து செல்லும் அற்புதமான பல படைப்புகள் முற்றுகையிடுகின்றன. விருதுகளும் வாங்குகின்றன. ஆனால், இந்தியாவிலிருந்து திரைவிழாக்களுக்குப் போகும் படங்கள் மிகக் குறைவு. தமிழிலிருந்து செல்லக்கூடிய படங்களோ மிக மிக அரிது.


மலையாளத்தில் பலப்பல வருடங்களாகவே கலைப் படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கன்னடத்திலும் அப்படியே. இவற்றுக்குப் பின்னர்தான் தமிழ் வருகிறது. இதை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்திப் பார்த்தால், வங்காளப் படங்களே தரமான கலைப் படங்களைப் பல்லாண்டு காலமாக அளித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப் பின்னரே மராத்தி போன்ற இதர வட இந்திய மொழித் திரைப்படங்கள் வருகின்றன.


சத்யஜித் ராய்க்கு முன்னரே

இந்தியாவில் கலைப் படங்கள் வரிசையாக வெளியாக ஆரம்பித்தது வங்காள மொழியில்தான். சத்யஜித் ராய் அப்படிப்பட்ட வங்காளக் கலைப்படங்களின் பிதாமகராக உலகெங்கும் கருதப்படுகிறார். அவரது படங்களால் தாக்கம் பெற்றுத் தங்களின் திரை வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொண்ட இயக்குநர்கள் உலகெங்கும் பலர் உண்டு. ஆனாலும், சத்யஜித் ராய்க்கு முன்னரே தனது முதல் படத்தை எடுத்தும், அந்தப் படம் வெளிவராமல் போய் அதன் பின் பல அருமையான, தரமான கலைப் படங்கள் எடுத்து, இப்போது உலகெங்கும் பெரும்புகழ் பெற்றிருக்கும் ரித்விக் கட்டக்கும் இந்தியாவின் கலைப் படங்கள் உலகெங்கும் சுற்ற ஒரு முக்கியமான காரணம்.

ஆனால், சத்யஜித் ராயைத் தெரிந்தவர்கள் பலருக்கு ரித்விக் கட்டக்கைத் தெரியாது. காரணம், ராயைப் போல் கட்டக் ஒரு கனவான் அல்ல. மிகுந்த பிடிவாதத்தோடு, தான் நினைத்ததைச் செய்துகொண்டு ஒரு போராளியைப் போல வாழ்ந்தவர் கட்டக். இதனாலேயே அவரது ஒவ்வொரு படத்துக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அவரது முதல் படமான ‘நகோரிக்’, சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவருவதற்கு மூன்று வருடங்கள் முன்னரே, 1952-லேயே முடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அப்படம் 1976-ல்தான் வெளிவர முடிந்தது. அதற்குள் ரித்விக் கட்டக் இறந்திருந்தார்.

கட்டக் இயக்கிய படங்கள் மொத்தமே எட்டுதான். சில படங்களுக்குக் கதை, திரைக்கதை ஆகியவையும் எழுதியுள்ளார். புனே திரைப்படக் கல்லூரியிலும் கட்டக் பணிபுரிந்திருக்கிறார். அங்கே இவரிடம் படித்தவர்தான் ஜான் ஆப்ரஹாம். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற படத்தை தமிழில் எடுத்தவர்.


கலைப் படங்களின் பொற்காலம்!

இந்தியாவின் திரைப்படங்களில் இப்படியாக ரித்விக் கட்டக், சத்யஜித் ராய் ஆகியோர் தொடங்கிய பயணம்தான் தரமான கலைப் படங்கள் உலகம் முழுக்க அனுப்பப்படக் காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மிருணாள் சென்னும் கலைப் படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்தார். இந்த மூவருடனும் சேர்ந்து தபன் சின்ஹாவும் வங்காள மொழியில் கலைப் படங்கள் எடுக்கத் தொடங்கிய அறுபதுகளே கலைப் படங்களில் வங்காளம் மற்றும் இந்தியாவின் பொற்காலம்.

இக்காலத்துக்கும் முன்னரே, 1925-லேயே பாபுராவ் பெயிண்டர் எடுத்த சவ்காரி பாஷ் (Savkari Pash) என்ற மவுனப் படம், ஒரு நல்ல கலைமுயற்சியாக இப்போதும் கருதப்படுகிறது என்றாலும் அக்காலகட்டத்தில் வரிசையாக இப்படிப்பட்ட கலைப் படங்கள் வரத் தொடங்கியிருக்கவில்லை. இதில் நடித்திருந்தவர் சாந்தாராம். இதுபோலவே, கான் திரைப்பட விழா தொடங்கிய 1946-ல், சேத்தன் ஆனந்தின் ‘நீச்சா நகர்’ Neecha Nagar திரைப்படம், சிறந்த திரைப்பட விருது வாங்கியிருக்கிறது.

இவர்களுக்குப் பின்னர் ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காசரவள்ளி, மணி கௌல், கோவிந்த் நிஹலானி போன்றோர் மிகத் தரமான கலைப் படங்கள் எடுத்த இந்திய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


ஓர் அழகான பிரிவு

இப்படிப்பட்ட கலைப் படங்கள் ஒருபுறம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே, ஆஃப்-பீட் (Off-beat cinema) படங்கள் என்ற குறிப்பிட்ட வகைப் படங்களும் பிரபலமாகிக்கொண்டிருந்தன. வணிகப் படங்களுக்கும் கலைப் படங்களுக்கும் இடையே வளர்ந்த ஒர் அழகான பிரிவு இது. வணிகப் படங்களின் கூறுகளான பாடல்கள், நகைச்சுவை ஆகியன இவற்றில் இருக்கும். அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கருவை எடுத்துக்கொண்டு, அந்தக் கதையை மிக இயல்பாக ஆடியன்ஸுக்கு அளித்த படங்களே ஆஃப்-பீட் படங்கள். இவற்றை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, குரு தத், பாஸு சட்டர்ஜி, பாஸு பட்டாச்சார்யா ஆகியோர்.

இவர்களில் குரு தத் தவிர மீதி மூவரும் வங்காளிகள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். வங்காளத்தின் தன்மை அப்படிப்பட்டது. இவர்களைப் பற்றி விரிவாக இனி வரும் வாரங்களில் கவனிக்கப்போகிறோம். தற்காலத்திலும் இப்படிப்பட்ட ஆஃப்-பீட் படங்களும் கலைப்படங்களும் இந்தியாவில் வரத்தான் செய்கின்றன. அவை பெரும்பாலும் இந்தி, மராத்தி, வங்காளம், மலையாளம் ஆகிய மொழிகளிலேயே எடுக்கப்படுகின்றன. ‘ஷிப் ஆஃப் தீஸியஸ்’ (Ship of Theseus) ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஃபன்றி (Fandry) இன்னொரு அற்புதமான படம்.

வரும் வருடத்தின் ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘கோர்ட்’ (Court), உண்மையில் மிக முக்கியமான பிரச்சினையொன்றை, நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம். ஒரு சமூகப் போராளி, புரட்சிப் பாடகர், அரசினால் கைதுசெய்யப்பட்டுவிடுவார். காரணம் என்னவென்றால், மலம் அள்ளுபவர்களைப் பற்றிய இவரது பாடல் ஒன்றைக் கேட்ட மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்றும், இதனால் அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த இந்தப் புரட்சிப் பாடகரைக் கைது செய்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் போராளியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜராகிறார். ஒவ்வொரு முறையும் இவரை பெயிலில் அனுப்ப வேண்டும் என்று அவர் வாதாடும்போதும் வழக்கு ஒத்திவைக்கப் பட்டுக்கொண்டே வருகிறது.

அரசுத் தரப்பின் வழக்கறிஞர், இந்தப் புரட்சிப் பாடகர் மிக ஆபத்தானவர் என்றும், இவரை வெளியில் விட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து என்றும் வாதிடுகிறார். அந்தப் பாடகருக்கோ வயது அறுபதுக்கும் மேல். பல உடல் உபாதைகளால் அவதியுறுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே படம். இந்தியாவின் நீதித் துறையை இத்தனை கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் ஒரு படம் இயல்பாக வெளிவந்து, ஆஸ்கருக்கும் அனுப்பப்படுகிறது என்பதே முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான், இந்தப் படத்தில் பல விஷயங்களும் பகடியாகவே சொல்லப்பட்டிருப்பதால் ஆட்சியாளர்களுக்கு அது புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. சமகாலத்தில் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றை ஒரு வருடம் முன்பே இப்படத்தில் எடுத்துக் காட்டிவிட்டனர்.

தற்சமயத்தில் சமுதாய அக்கறை என்பது அருகிவருகிறது. இந்தக் காலகட்டத்தில், எங்கோ யாரோ இன்னமும் சமுதாய அக்கறையோடு சிந்திக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே கோர்ட், ஃபன்றி போன்ற படங்கள். இதுபோலத் தமிழகத்திலும் சமூக அக்கறையுடைய படைப்பாளிகள், நேர்மையான, வெளிப்படையான, எந்த வித சமரசமும் இல்லாத உண்மையான படங்களைத் தர முன்வர வேண்டும். ஆனால் இது இன்னமும் கனவாகவே இருக்கிறது. அது மட்டும் நடந்துவிட்டால், உலகப் பட வரிசையில் தமிழ் சினிமாவுக்குத் தனியிடம் கிடைக்கும். அந்தக் காலம் விரைவில் வருமா

thanks the hindu

Saturday, April 25, 2015

கமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்


மகள் ஸ்ருதியுடன் கமல்ஹாசன் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
மகள் ஸ்ருதியுடன் கமல்ஹாசன் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

கா.இசக்கிமுத்து

thehindu-thanx
"கமல் சார் எப்போதுமே ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, 'இல்லை... இது முடியாது' என்று கூறினால், அவருக்கு பிடிக்கவே பிடிக்காது" என்று ஆச்சர்யத்துடன் ஆரம்பித்தார் நிகில். கமல்ஹாசனின் பர்சனல் பக்கம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டவை என் மொழி நடையில்...
பிடிக்காத வார்த்தை 'முடியாது'
எப்போதுமே கமல்ஹாசன் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கூறினால், அதை உடனடியாக முடியாது என்று மறுத்துவிட்டால் அவருக்கு பிடிக்காது. சொல்லும் விஷயத்தை கடைசி வரை முயற்சி செய்து, அது முடியாமல் போனால் மட்டுமே ஏற்றுக் கொள்வார். எப்போதுமே ஒரு விஷயத்தை முடிக்க முடியும் என்று எப்போதுமே சொல்வார். எவ்வளவு கஷ்டமான காட்சியாக இருந்தாலும், அக்காட்சி நினைத்த மாதிரி வரும் வரை விடவே மாட்டார். அவருடைய கலையுலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு பிடிக்காத வார்த்தை 'முடியாது'.
'விருமாண்டி' வசனத்துக்குச் சொந்தக்காரர்
'விருமாண்டி' படத்தில் "மன்னிக்க தெரிந்தவன் மனுஷன், மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்" என்று ஒரு வசனம் வரும். அதை நிஜ வாழ்க்கையில் பின்பற்றுவதனால்தான் படத்தில் வைத்தார். ஏனென்றால், ஒரு விஷயத்தில் தப்பு செய்து விட்டோம் என்றால், அவருடம் சென்று நீங்கள் இப்படி சொன்னீர்கள், நான் இப்படி செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்.
ஒருவர் பேசும் போது, பேசுவர் பொய் பேசுகிறாரா இல்லையென்றால் உண்மை பேசுகிறாரா என்பதை உடனடியாக கண்டுபிடித்துவிடுவார் கமல். அவரிடம் பேசும்போது நிறுத்தி நிறுத்தியோ, எச்சில் விழுங்கியோ அல்லது அவருடைய கண்ணைப் பார்க்காமலோ பேசினால், உடனடியாக பேசுபவர் பொய் சொல்கிறார் என்று கூறுவார் கமல். அதேபோல, நாம் ஒரு கேள்வியைக் கேட்டால், கேட்பவர் யாரோ அவருடைய கண்ணைப் பார்த்து மட்டுமே பதிலளிப்பார் கமல்.
அவருடைய கண்ணுக்கு தெரிகிற தூரத்தில் இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இங்கிருந்துக் கொண்டே இருவரும் என்னப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்படியே சொல்வார். 'அரங்கேற்றம்' சமயத்தில் டப்பிங் தியேட்டரில் பல நேரங்களில் அமர்ந்து கவனித்ததால் வந்தது என்று கூறுவார். பல சமயங்களில் பேசிவிட்டு இவரிடம் பேச வருபவர்களிடம் "நீங்கள் இதை தானே பேசிக் கொண்டிருந்தீர்கள்" என்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுவார்.
மகள்களுக்கு அட்வைஸ் செய்யாத தந்தை
ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரிடமுமே எப்போதும் நீங்கள் இப்படி வரவேண்டும், இப்படி பண்ண வேண்டும் என்று எதையுமே கூற மாட்டார். எப்போதுமே அவர்களுடைய என்ன பிடிக்கிறதோ அதை பண்ணட்டும். அப்படி பண்ணினால் மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க முடியும் என்று நினைப்பவர் கமல்.
"ஒரு துறையில் நாம் இருக்கிறோம் என்றால், அந்த துறையில் நமது பெயர் இடம்பெற வேண்டும்" என்று கமலின் தாயார் அடிக்கடி கூறுவார். அதை அப்படியே தனது பிள்ளைகளிடம் கூறுவார் கமல். இதுநாள் வரை ஏன்.. இப்படி படம் நடிக்கிறாய்.. இப்படி நடிக்க வேண்டும்... இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எந்த ஒரு விஷயத்தை கமல் தனது மகள்களிடம் கூறியதில்லை.
எனது வளர்ச்சிக்கு காரணம் கமல் சார்: நிகில்
நீங்கள் கமலிடம் பணிபுரிவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நிகிலிடம் கேட்டபோது, "தமிழ் திரையுலகில் இப்போது 300 படங்களை கடந்து மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறேன். என்னைப் பார்ப்பவர்கள் அனைவருமே எப்படி தொழில்நுட்ப விஷயத்தில் இவ்வளவு அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்பார்கள் ஆச்சர்யமாக. அதற்கு காரணம் கண்டிப்பாக கமல் சார்.
தொழில்நுட்பம் வளர வளர நாமும் அதோடு சேர்த்து வளர வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவோம் என்று கூறுவார் கமல் சார். ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டே வருகிறேன். இன்னும் 15 நாட்களில் இதுவரை இந்திய திரையுலகில் யாருமே பண்ணாதே ஒரு புதிய தொழில்நுட்பத்தில் கால் பதிக்க இருக்கிறேன்.
கமல் சாரிடம் பணிபுரிவது கடினம் என்று கூறுவார்கள். என்னைப் பொறுத்தவரை கமல் சாரிடம் பணிபுரிவது நான் செய்த பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால், இன்றைய நான் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணம் அவர் தான். எப்போதுமே ஒரு விஷயம் என்னிடம் சொல்கிறார் என்றால், ஏன் சார் என்று கேட்க மாட்டேன். எதற்காக சொல்கிறார் என்று எனக்கு தெரியும். அவர் சொல்வதை விட, எதை யோசித்து இதை சொல்கிறார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆகவே தான் எனக்கு கமல் சாரிடம் பணிபுரிவது எளிதாக இருக்கிறது.
கமல் சாரைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட தகவல்களை வெளியிட ஒரு தளமாக 'தி இந்து' தமிழ் ஆன்லைன் இருந்ததற்கு நன்றி. இன்னமும் புதுப்புது விஷயங்களை கமல் சாரிடம் கற்றுக்கொண்டே வருகிறேன். ஆகவே இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் ஸ்டார் டைரியில் சந்திக்கலாம்" என்றார் உற்சாகத்துடன்.

Friday, April 24, 2015

உத்தம வில்லன் -தருணங்கள் - கமல்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
"கமல் சார் தனது குருநாதர் கே.பி சாரைப் பற்றி பேசாத நாளைக் காணவே முடியாது. அந்த அளவுக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். கமலின் குரு பக்தியைப் பற்றி கூற நிறைய தகவல்கள் இருக்கின்றன" என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் நிகில். இனி நிகில் கூறியவை என் மொழி நடையில்...
கமல்ஹாசனின் தயாரிப்பு முயற்சி
ராஜ்கமல் நிறுவனம் தொடங்கப்பட்டவுடன் அந்நிறுவனத்தின் முதல் படத்தை கே.பாலசந்தர் தான் இயக்க வேண்டும் என்று விரும்பி அவரிடமும் கேட்டார் கமல்ஹாசன். சரி பண்ணலாம் என்று தெரிவிக்க, கமலுக்கு மிகுந்த சந்தோஷம். நான் உங்கள் அலுவலகத்துக்கு வந்து செக் தருகிறேன் என்று கமல் கூற, அதை ஏற்க மறுத்துவிட்டார் கே.பி. "நான்தான் உன் நிறுவனத்துக்கு வந்து வாங்கிக்கொள்ள வேண்டும்" என்று கூறி, சென்னை - எல்டாம்ஸ் சாலையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்துக்கு வந்து செக் வாங்கிக் கொண்டார் கே.பி. ஆனால், அந்த பட வாய்ப்பு ஏனோ அமையவில்லையே என்ற வருத்தம் கமலுக்கு இப்போதும் இருக்கிறது.
நான் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதுக்கு முக்கிய காரணம் கே.பி மட்டும்தான் என்று அடிக்கடி சொல்வார் கமல். இருவரும் சந்தித்த முதல் தருணம் சுவாரசியமானது.
கே.பி.யை சந்தித்த முதல் தருணம்
கே.பாலசந்தரிடம் இருந்து முதல் முறையாக கமலுக்கு அழைப்பு ஒன்று வந்தது. சரி, உதவி இயக்குநருக்காக தான் அழைக்கிறார் என்று நினைத்துச் சென்றார். அப்போது கமலின் அம்மா "ஒரு போட்டோ எடுத்துட்டு போடா" என்று தெரிவித்திருக்கிறார். கமலை நடிக்கத்தான் பாலசந்தர் அழைத்திருக்கிறார் என்பது தான் அவரின் எண்ணம். கமல் "போட்டோ வேண்டாம்" என்று தெரிவிக்க, அவருடைய அம்மாவோ கையில் எடுத்துகிட்டு போ என்றால் போ என்று கூறி போட்டோவை திணிக்க, போட்டோ எடுத்துக் கொண்டு பாலசந்தர் அலுவலகம் சென்றார் கமல்.
கமலைப் பார்த்தவுடம் கே.பி கேட்டது: "போட்டோ எடுத்துக்கிட்டு வந்தியா?" என்றுதான். அப்போது அம்மா கொடுத்த போட்டோ வேண்டா வெறுப்பாக பேன்டில் திணித்து வைத்திருந்தை எடுத்து கொடுத்தார் கமல்.
உதவி இயக்குநராக சேரப் போகிறோம் என்று நினைத்துச் சென்ற கமலை நடிகனாக்கி அழகு பார்த்தவர் கே.பி. கமல் கொடுத்த போட்டோவில் இரண்டு கைகளையும் உயர்ந்திக் கொண்டிருப்பார். அந்த போட்டோவில் இருப்பதைப் போல கமலை 'அரங்கேற்றம்' படத்தில் ஒரு காட்சியில் கையை உயர்த்தி நடிக்க வைத்தார்.
'உத்தம வில்லன்' தருணங்கள்
முதலில் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்க கமல் கேட்டபோது 'நடிக்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டார் கே.பி. ஆனால், கமல் தான் விடாமுயற்சியாக நின்று நடிக்க வைத்தார். முதல் நாள் படப்பிடிப்பு அன்றும், "இப்போதுகூட ஒன்றும் பிரச்சினையில்லை. எனக்கு வயதாகிவிட்டது" என்றார் கே.பி. அப்போது, "நீங்கள் கற்றுக் கொடுத்த வித்தை என்னிடம் இருக்கிறது சார். நான் கதையை மாற்றிக் கொள்கிறேன்" என்று கூறினார் கமல்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் கூட, சீக்கிரம் டப்பிங்கிற்கு ஏற்பாடு பண்ணு என்று தெரிவித்து முழுப்படத்திற்கும் டப்பிங் பேசி முடித்து விட்டார் கே.பி. ஆனால், படம் முடிந்து கே.பியால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இப்போது கமலுக்கு உண்டு.
நேரடியாக தொடர்பு கொண்டு பேசாத கமல்
கமல் அடைந்திருக்கும் உயரத்துக்கு, கே.பியிடம் நேரடியாக போனில் பேசலாம். ஆனால், தன்னுடைய குருநாதரிடம் இதுவரை நேரடியாக பேசியதில்லை கமல். முதலில் கே.பியிடம் அனந்து என்ற உதவியாளர் இருந்தார், அவருக்கு பிறகு மோகன் இருந்தார். முதலில் கமல் இவர்களிடம் தான் போன் செய்து, "சார்.. ப்ரீயாக இருக்கிறாரா.." என்று கேட்டுவிட்டு அவர்கள் கூறும் தகவலின் படி கே.பியிடம் போனில் அழைத்துப் பேசுவார்.
அதேபோல தான் கே.பியும். நேரடியாக கமலிடம் பேச மாட்டார். நிகிலிடம் போன் செய்து "நான் கமலைப் பார்க்க வேண்டும். எந்த நேரத்தில் ப்ரீயாக இருக்கிறார் என்று சொல் வருகிறேன்" என்பார். ஆனால், கமல் அலுவலகத்துக்கு கே.பி வருவது கமலுக்கு பிடிக்காது. பலமுறை இதேபோல் நடந்து, இறுதியாக கமல், கே.பி அலுவலகம் சென்று பேசுவிட்டு வருவார்.
சமீபத்தில் 60-வது பிறந்த நாள் நடைபெற்றது. கமல் தூய்மை இந்தியா திட்டத்தில் அன்றைய தினத்தில் இணைந்ததால் கடுமையான பணிகள் இருந்தது. அந்த நேரத்தில் நிகிலை கே.பி அழைத்து "கமல் எப்போது ப்ரீயாக அலுவலகத்தில் இருப்பான்னு சொல்லு. நான் வருவதை அவன்கிட்ட சொல்லாதே" என்றார். ஆனால் கே.பி அலுவலகம் வந்தால் கமல் சங்கப்படுவார் என்று கமலிடன் நிகில் கூறிவிட்டார். கமலிடம் கூறியவுடன் சற்றும் தாமதிக்காமல், "பத்திரிக்கையாளர் சந்திப்பு முன்பு நான் கே.பி சாரைப் பார்த்துவிட்டு வருகிறேன். சாரை இங்கே வரவேண்டாம் என்று கூறிவிடுங்கள்" என்றார். நிகிலும் கே.பியிடன் தெரிவித்துட்டார்.
கமல் நேரடியாக கே.பி அலுவலகம் சென்று ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தான் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அன்றைய தினத்தில் கமலுக்கு இருந்த பணிகளுக்கு அடுத்த நாள் போகியிருக்கலாம். ஆனால், தனது குருநாதர் மீது அளவு கடந்த அன்பு, பாசம், பக்தி என அனைத்து கொண்டவர் கமல்.
கமல் - பாலசந்தர் இருவரது குரு - சிஷ்யன் உறவு குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிகிலிடம் கேட்டேன். அப்போது...
"உம்மைக் குவித்து எம்மைப் புடைத்து
உமியை ஒதுக்கி உளகல் நீக்கி
சலியாதெம்மைச் சலித்து எடுத்து
சோறாய் வடித்து சமயல் மன்ன!
உலையில் சூட்டிலெம் உளம் பொங்காது
நலமே பொங்கக் கிண்டிக் கிளறி
இலைக்கு மாறாய் கலையை விரித்து
இதுவரை படையா விருந்தாய் எம்மை
இவ்வுலகுக்களித்த தொழில் விற்பன்ன!
சந்தை பேரம் செய்தே எம்மை
கந்தல் வடிவில் விற்கும் தெருவில்
தையற் கடையினை நிறுவிய எங்கள்
அய்யர்க் கென்றும் நன்றியைச் சொல்லுபல்
ஆயிரத் தொருவன் நான் வேறென்ன?
இவர் போல இனிமேல் வராது என்னும்
இகத்தின் கூற்றை மாற்றிடவெண்ணி
பயிற்றுவித்தே பயணித்தார் எமை
இவர் போலேயே எல்லாம் பண்ண.
அவர் ஒற்றை ஆளாய் செய்ததை இன்று
கூடி செய்யும் குழுவில் நாளை
பாகுபட்டதோர் தனியன் வருவான் - அவனை
பெற்று வளர்த்திடச் சந்ததித் தொடராய்
கற்றுத் தொடரும் அடுத்த தலைமுறை
காத்து நிற்குது எந்தன் வீட்டில்
கேட்டிடச் சொல்லும் கவைக்குவ்வாத
குட்டிக் கதையாய் நீர்த்து விடாமல்
நீர் ஒரு தொடரும் கதையாய் என்றும்
வாழ்ந்திட வாழ்த்தும் பேரப் பிள்ளை-என்
வீட்டில் போக பலரும் உண்டு
வாழிய என்றுமை வாழ்த்தும் வேளை
நீடிய ஆயுள் எமையே சேரும்.
போகிற போக்கில் கற்றுத் தந்த
பேராயர் நேயர் எந்தை கே.பி (K.B)
வாழ்க வென்று எந்தை நாமம்."
இது 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவுக்காக மறைந்த கே.பி சாரை நினைத்து கமல் சார் எழுதிய வரிகள். இந்த வரிகளை மீறி நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது" என்றார்.
கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு [email protected]


நன்றி - த  இந்து