Showing posts with label suspense. Show all posts
Showing posts with label suspense. Show all posts

Thursday, November 01, 2012

skyfall - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/uploads/2012/10/Skyfall-wallpapers-James-Bond-Movie-15-500x299.jpg 



ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்து 50 வருஷங்கள் ஆகுது.டெக்னிக்கலா சினி ஃபீல்டு எவ்வளவோ முன்னேறிடுச்சு. கோடிக்கணக்கில் செலவு பண்றவங்க கதை , திரைக்கதைல கவனம் செலுத்துனா மட்டும் போதாது. இந்த மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கு வெரைட்டி லொக்கேஷன்ஸ், ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் காட்டிட்டே பர பரனு படத்தை நகர்த்தனும். இந்த உண்மையை இந்நேரம் புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறேன்.


உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள்  பற்றிய தகவல்களை  ஒரு ஹார்டு டிஸ்க்ல வெச்சிருக்காங்க ஜேம்ஸ்பாண்ட் பணி புரியும்  உளவுத்துறைல.. அதை வில்லன் அபேஸ் பண்ணிடறான்.உடனே நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த உளவுத்துறை மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் போட்டு இதை கலைச்சுடனும்னு சொல்றாங்க.. கூட்டம் நடக்கும்போதே வில்லன் அங்கேயே வந்து அட்டாக் பண்றான்.


 வில்லன் வேற யாரும் இல்லை. அதே உளவுத்துறைல ஆல்ரெடி பணி ஆற்றியவன் தான். அவன் டார்கெட்டே  அந்த லேடி எம் என்பவரை போட்டுத்தள்ளத்தான் ஐ மீன் கொலை பண்றது.  ஜேம்ஸ் பாண்ட்  அவரை காப்பாத்துனாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


படத்தோட ஓப்பனிங்க் சீன் செம கலக்கல். 17 நிமிடங்கள் ஓடும் ஒரு சேசிங்க் சீன். விக்ரம் படத்துல கமல் , பிராஜக்ட் ஏ படத்துல ஜாக்கிசான் வீட்டின் மொட்டை மாடிகளில் , கூரைகளில் ஓடி துரத்துவது போல இதுல் ஹீரோ சேஸ் பண்றாரு . இவர் ஜேம்ஸ் பாண்ட் ஆச்சே.. அதனால பைக்ல.. எல்லா ஓட்டு வீட்டின் கூரையில் பைக்கில் போகும் காட்சி அப்ளாசை அள்ளுது.. 


அந்த சேசிங்க் முடியறப்ப ரயிலில் ஜம்ப் பண்ணும் சீன் கலக்கல். அந்த சேசிங்க்கை ஹீரோயின் அப்பப்ப லைவ் அப்டேட் பண்ணும் உரையாடல் காமெடி.. 

இந்த ஓப்பனிங்க் பிரம்மாண்டம் முடிஞ்ச உடனே நயன் தாரா - பிரபுதேவா இனி இணைய மாட்டாங்க, பிரிவுதான்னு நியூஸ் வந்தப்ப நயன் முகம் எப்படி வாடிப்போச்சோ அப்படி ஆகிடுது படம்.


 அதுக்குப்பிறகு வரும் சம்பவங்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமா கேப்டன் பட ரேஞ்சுக்குத்தான் இருக்கு.. 


http://hdfreewallpapers.com/walls/2012/10/08/berenice_marlohe_in_skyfall-wide.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தின் முதல் 20 நிமிட ஆக்‌ஷன் கலக்கல்ஸ், அந்த காட்சிக்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை அபாரம்


2. ஜேம்ஸ் பாண்ட் ஒரு பந்தயத்தில் கையில் தேள் வைத்து சரக்கு அடிக்கும் ஸ்டைலிஸ் சீன்


3. வில்லன் லிஃப்ட்டில்  போகும்போது பின்னாலயே அதுவரை பூனை போல் ஃபாலோ பண்ணியவர் லிஃப்ட் கிளம்புனதும் புலி போல் பாய்ந்து லிஃப்ட்டின் கம்பியை பிடித்து தொங்கியபடி செல்லும் லாவகம்.. நோ டூப், நோ கிராஃபிக்ஸ்.. செம ஆக்‌ஷன்


4. வில்லன் ஹீரோவுக்கு பின்னால் கூரையில் பாம் வீசி ஒரு பெரிய ஓட்டையை போட ஹீரோ “ இதனால எனக்கு என்ன பாதிப்பு? : என ஹீரோ நக்கல் அடிக்கும்போது வில்லன் “ இப்போ பாரு கண்ணா” என்பது போல பார்க்க அந்த ஓட்டை வழியே ஒரு பெரிய ரயிலே வந்து விழும் காட்சி.. 


http://image.buzzintown.com/files/movie/upload_14000/upload_original/342490-skyfall.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏன் கார் ரியர் வ்யூ மிரரை உடைச்சே? 

  ஹீரோயின் - முன்னாடி பார்க்கறவங்களுக்கு கண்ணாடி  பின்னாடி  தேவையில்லை  ( என்னாடி சொன்னே/?)



2. லேடி எம் - ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு.. பாண்ட் இப்போ பைக்ல அவனை துரத்தி போய்ட்டு இருக்காரா? 


 இப்போ 2 பேரும் ரயில்ல போய்ட்டு இருக்காங்க.. 


 வாட்? 

 ஐ மீன் ரயில் மேல 


3. பாண்ட் - நான் வீட்டுக்குப்போய் ஃபிரெஸ் ஆகிட்டு வர்றேன்


 உன் வீட்டை வித்தாச்சு, மேரேஜ் ஆகாத ஒரு உளவாளி செத்துட்டா உடனே அவன் வீட்டை ஜப்தி பண்ணிடுவாங்க.. இது ரூல்


4. பாப்பா , என் எக்ஸ்பீரியன்ஸ் வெச்சு சொல்றேன், ஃபீல்டு ஒர்க் ரொம்ப கஷ்டம். வேணாம், நீ வேற வேலை பார்ப்பது நல்லது 


5. சாப்பாடு ருசியா இருக்கனும்னா சமையற்காரனா இருக்கனும்னு அவசியம் இல்லை ( ஓஹோ நல்ல சமையற்காரிக்கு புருஷனா இருந்தா போதுமா? ) 


6. உங்க கைரேகை மேட்ச் பண்ணி  ரெடி பண்ணின துப்பாக்கி இது.. உங்களால மட்டும்தான் சுட முடியும்.. 



7. மிஸ்டர் பாண்ட், குடுத்ததை எல்லாம் போறப்ப திருப்பிக்குடுத்துடனும் 


ஹூம், உலகம் ரொம்ப மாறிடுச்சு 


8. மிஸ்.. நான் எதையும் ஆர்டர் பண்ணலையே? இன்க்ளூடிங்க் யூ.. 


9. மிஸ்டர் பாண்ட், என்ன கத்தியால ஷேவிங்க் பண்றீங்க? நாகரீக உலகத்துல ஏகப்பட்ட நவீன வழிமுறைகள் வந்தாச்சே? 


மிஸ்.. பல விஷயங்களை பழைய முறைல செஞ்சாத்தான்  நல்லாருக்கும் ( டபுள் மீனிங்க் ) 


10. பயம்னா என்ன?னு உனக்குத்தெரியுமா? 


 தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கலை.. 



11. மேடம்,  பாதுகாப்பு அமைச்சகத்துல உங்களை கூப்பிடறாங்க.. 

 வேலை செய்ய வேண்டிய நேரத்துல  மீட்டிங்க் அட்டென்ட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண சொல்றீங்களா? 


12. இந்த உலகத்துல எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு.. உன்னோட விலை என்ன? 


 உன்னை கொல்றது


13. இந்த சிஸ்டத்துல குறிப்பிட்ட  சில ஃபைல்களை யாராவது சர்ச் பண்ணாலே ஆட்டோமெட்டிக்கா எரேஸ் பண்ற மாதிரி செட் பண்ணி வெச்சிருக்கு.. யாராவது உள்ளே புகுந்து ஏதாவது செய்ய நினைச்சா எரேஸ் ஆகிடும் . உலகத்துலயே 6 பேருக்கு மட்டும்தான் அந்த கலை தெரியும்


 அடடா, உங்களுக்கு ஏதும் தெரியாதா?

 ஹா ஹா, அந்த 6  பேருக்கு கத்துக்குடுத்ததே நான் தானே? 


14. ரயிலை ஓடி துரத்தி வில்லனை பிடிக்க ரயிலில் ஜம்ப் பண்ணும் பாண்டிடம் ஒரு அப்பாவிப்பயணி - வீட்டுக்குப்போக இவ்வளவு அவசரமா? 



15. நீங்க பண்றது அஃபீசியல் வேலை இல்லையே? 

 அதே சமயம் அது என் பர்சனல் வேலையும் இல்லை.. 

 என் வேலைக்கு உலை வைக்காம இருந்தா சரி


16. உளவாளி ஆக அநாதையாக இருப்பதே ரொம்ப பெரிய தகுதி 


http://www.moviedeskback.com/wp-content/uploads/2012/05/James-Bond-Skyfall-007-wallpapers-1.jpg



 இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள், சில சந்தேகங்கள்



1. படத்தோட ஓப்பனிங்க் சீன் ஆக்‌ஷன்ல ஓடும் ரயிலில் ஹீரோவும் , வில்லனும் கட்டிப்புரண்டு ஃபைட்டிங்க். ஹீரோயின் ரைபிளால் குறி வெச்சுக்கிட்டே மேலிடத்துல ஐடியா கேட்கறா. இப்போ சுட்டா ஜேம்ஸ் பாண்ட் மேல பட்டுட வாய்ப்பு இருக்குங்கறா. உடனே மேலிடம் “ வேற வழியில்ல ஷூட். அப்டினு ஆர்டர் குடுக்க அவ ஷூட் பண்றா. நெஞ்சுக்கு குறி வெச்சு. கரெக்டா வில்லன் விலக  பாண்ட் குண்டு பட்டு கடல்ல விழறாரு. 

 இந்த மாதிரி ரிஸ்க்கான டைம்ல எதுக்கு நெஞ்சுக்கு குறி வைக்கனும்? காயப்படுத்தி பலவீனப்படுத்த கால்லயோ, தோள்லயோ கைலயோ , உயிருக்கு ஆபத்தில்லாத  பகுதில சுட்டா யார் மேல குண்டு பட்டாலும் பரவாயில்லையே? 



2. ஜேம்ஸ் பாண்ட் கடல்ல விழும் இடம் அந்த லேடிக்கு தெரியும். அங்கே போலீஸ் ஆட்களை விட்டு தேடாமயே அவர் செத்துட்டதா எப்படி முடிவுக்கு வர்றாங்க? டெட் பாடி கிடைக்காம ஒரு ஆள் செத்துட்டதா முடிவுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதே?அப்புறம் எப்படி பாண்ட் செத்துட்டதா அவர் வீட்டை ஜப்தி பண்ண முடியும்?


3. உயிர் பிழைச்ச பாண்ட்  மேலிடத்துக்கு ஏன் தகவல் தெரிவிக்கலை? மறுபடி பணியில் சேரும்போது யாரும் அது பற்றி கேட்கவே இல்லையே? எங்க ஆஃபீஸ்ல எல்லாம் கம்யூனிகேஷன் கரெக்டா இருக்கனும். லீவோ, பர்மிஷனோ மேலிடத்துக்கு தகவல் சொல்லிடனும்.


4. ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னால அவருக்கு ஃபிட்னெஸ் டெஸ்ட் நடக்குது. அந்த காட்சிகள் செம போர்.  வைஜயந்தி ஐ பி எஸ் , சத்ரியன் போன்ற தமிழ்ப்படங்களில் கூட இண்ட்ரஸ்ட்டிங்கா எடுத்திருந்தாங்க.. அவர் ஃபிட்னெஸ் இல்லைன்னு தெரிஞ்சும் மேடம் எம் எப்படி ராங்கா ஜாயினிங்க் ஆர்டர் குடுக்க முடியும்? கலைஞர் மாதிரி ஊழல் பண்ண வழி இல்லை. எல்லா ரிக்கார்ட்சும் கம்ப்யூட்டரைஸ்டு. என்ன தைரியத்துல அப்பாயிண்ட் பண்ணுனாங்க..? 


5. சாதாரண அவதூறு  வழக்குல கைதானவங்களையே  நம்ம ஆளுங்க ஜாமீன்ல வர முடியாத படி பாதுகாப்பா வெச்சு விசாரிக்கறப்ப , ஒரு நாட்டின் பாதுகாப்பையே அசைத்த வில்லனை போலீஸ் கஸ்டடில அப்படியா அசால்ட்டா வெச்சிருப்பாங்க? கை விலங்கு கால் விலங்கு எல்லாம் போட்டு சங்கிலியால் கட்டி 50 போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்க வேணாம்? என்னமோ ராமநாராயணன் எடுக்கும் லோ பட்ஜெட் படம் மாதிரி 3 போலீஸ்.  குருவி சுடற மாதிரி சுட்டுட்டு அவன் எஸ் ஆகறான்.. ஹய்யோ அய்யோ 



6. வில்லன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு மாறு வேஷத்துல ரயில்ல தப்பிக்கறான். மத்த எல்லா போலீஸ் ஆஃபீசரும் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி இருக்காங்க. இந்த தத்தி ஃபங்க் விட்டிருக்கான்,. அவ்ளவ் முடி இருக்கு. ஆனா போலீசாலே கண்டு பிடிக்க முடியலை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. 


7. க்ளைமாக்ஸ்ல ஒரு வீடு. அதுல ஹீரோவும் மேடம் எம் லேடியும் பதுங்கி இருக்காங்க.. தத்தி வில்லன்  பல ஆளுங்களை நடராஜா மாதிரி நடக்க வெச்சு அனுப்பறான், மாட்டிக்கறாங்க. 20 பேரையும் பாண்ட் போட்டுத்தள்ளறாரு. டெக்னிக்கலா எவ்ளவோ டெவலப் ஆகியாச்சு. பெரிய டைம் பாம் போட்டா மேட்டர் ஓவர். இதை எவனும் கேள்வி கேட்டுடக்கூடாதுன்னு “ அவன் எனக்கு உயிரோட வேணும்”னு டெம்ப்ளேட் வசனம் வேற. சகிக்கலை.. ஹீரோ என்ன நமீதாவா? உயிரோட பிடிச்சு ஜப்பான் அழகி பட்டம் தரப்போறாரா வில்லன்..? 


8. க்ளைமாக்ஸ்ல சுரங்கப்பாதைல போகும் ஜேம்ஸ் பாண்ட் எதுனால கதவை மூடாமயே போறாரு? அந்த வீட்டுக்கு பாம் வெச்சிருக்காரு. வெடிக்கப்போகுது, தீ பரவும்னு தெரியும். கதவை மூடுனா பாதிப்பு கம்மியா இருக்குமே?



9. க்ளைமாக்ஸ் காட்சிகள்ல ஜேம்ஸ் பாண்ட் படங்கள்லயே இதுதான் செம மொக்கை.. அர்ஜூன் படங்கள்ல கூட இப்படி காட்ட மாட்டாங்க/... 



10. படத்துல ஷாங்காய் ,  மக்காவ் என 2 லொக்கேஷன்கள் மட்டும்தான். அதிக இடங்கள் காட்டவே இல்லை.. 2 ஹீரோயின் பேருக்கு.. அதுல ஒரு ஹீரோயின் டிக்கெட் ( அயிட்டம் ). பொதுவா ஜேம்ஸ் பாண்ட் படங்கள்ல அவர் எப்படி ஹீரோயினை மடக்கப்போறாரு? வளைக்கப்போறாரு? அப்டினு ஆர்வமா பார்ப்பாங்க ஆடியன்ஸ். இதுல பல கை பட்ட பஞ்சாமிர்தமா வரும் டிக்கெட்டை அவர் வளைச்சா என்ன? வளைக்காட்டி என்ன?


11. அவ்ளவ் பெரிய மீட்டிங்க் நடக்கும் ஹாலில் பாதுகாப்புக்கு 4 போலீஸ் தானா? நம்ம இந்தியாவிலேயே 100 போலீஸ் இருக்குமே? தனி ஆளாய் வரும் வில்லன் தன்னிடம் இருக்கும் சாதா துப்பாக்கியால் அனைவரையும் வீழ்த்தறான்



12. ஜேம்ஸ் பாண்ட் படம்னா வித்தியாசமான சாகச ஆயுதங்கள் வித விதமா வெச்சிருப்பாரு. இதுல எதுவுமே இல்லை..  இது மாபெரும் மைனஸ் 


http://www.bangersandnash.com/wp-content/uploads/2012/10/berenice-marlohe-in-skyfall-wallpaper.jpeg



இந்தப்படத்தை பல ஆங்கில வலைப்பூக்கள் ஆஹோ ஓஹோன்னு பாராட்டி இருக்கு. ரேங்க் கூட 10 க்கு 8 என போட்டிருக்கு.. ஏன்னு தெரியல. 



 சி. பி கமெண்ட் -  ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆக்‌ஷன் விரும்பிகள் பார்க்கலாம். ஆனா எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்னு சொல்லிட முடியாது . ரெண்டே கால் மணி நேரம் போர் அடிக்காம படம் போனாலும்  ஜேம்ஸ் பாண்ட் ஆக்‌ஷன் காட்சிகள் மொத்தமே 17 நிமிடங்கள் தான்.  ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன். 2 இடத்துல ரொமான்ஸ் நடக்கற மாதிரி இருக்கு. ஆனா சென்சார் கட், ஸ்டில்லை நம்பி போகாதீங்க


 இந்தப்படத்தை பத்தி ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இதுதான் ஜேம்ஸ் பாண்ட் சரித்திரத்திலேயே அப்படியாக்கும் இப்படி ஆக்கும் என படத்தின் ஹீரோ அள்ளி விட்ட பேட்டியின் தமிழாக்கம் காண 




diski -twitter sent a dm -
Udhayakumar Durai Udhayakumar Durai
@soundparty

அது ரிவர் வ்யூ மிரர் இல்லை, ரியர் வ்யூ மிரர், rear view mirror. தமிழில் தவறாகவே எழுதுகிறோம், நிறய நாவல்களில் இதை பார்த்திருக்கிறேன்
அட..ஒருவாட்டி கேட்டுப் பாருங்க..
சும்மா அதிருதில்லே
http://www.puradsifm.com/

அட..ஒருவாட்டி கேட்டுப் பாருங்க..
சும்மா அதிருதில்லே
http://www.puradsifm.com/

Monday, July 02, 2012

மஹா பலி - லவ் த்ரில்லர் - சுஜாதா - சிறுகதை

http://farm4.static.flickr.com/3554/3312807515_4584031f64_o.jpg

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் ‘ஆஷோன்… ஆஷோன்’ என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக்கொள்ள… சென்னை-103-ஐச் சேர்ந்த ‘அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி’யின் ஆசிரியைகள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ”இங்கதான்டி ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’ ஷூட்டிங் எடுத்தாங்க” என்று வியக்க, கற்சிற்பிகளின் உளிச் சத்தம் எதிரொலிக்க, பிள்ளையார்களும் கொள்ளை -----------  சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்ட்டுகளுக்குக் காத்திருந்தார்கள். ‘கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?’


இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன் கரைக் கோயிலின் அருகில் வந்து கடற்கரைப் பக்கம் சென்றான். 1200 வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.


”கேமரா வேணுங்களா… நிக்கான், ஜப்பான்… ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?”

அவன் மௌனமாக இருக்க,

”செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க… கோலாப்பூரி…”


”…..”

”பேச மாட்டீங்களா?”

அவனுக்குப் பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொளதொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று ”சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!” என்றான் செருப்பு விற்ற சிறுவன்.


அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்துவிட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.


”எக்ஸ்கியூஸ் மி…”

அவர் திரும்ப, ”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”என் பெயர் அஜய். நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரெட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்.”

”ஓ! நீதானா அது? ‘யங்’காக இருக்கிறாயே?!”


”எனக்கு 25 வயது!”


”எனக்கு ஏறக்குறைய 70” என்றார். ”கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்… ஒருமுறை ‘பைபாஸ்’ ஆகி விட்டது. கடன் வாங்கின ஆயுள்!”

”மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்” என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம்வைத்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

”ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை. சான்றிதழ்களை அப்புறம் பார்க்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்… பிரசுரகர்த்தர்கள் கெடு.”

”என்ன புத்தகம்?”

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

”பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஓர் அந்தரங்கப் பார்வை…”

பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான ‘போஸ்’களில் படம் பிடித்துக்கொண்டு, ”என்ன மச்சி… கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!”

”இவர்களுக்கா பல்லவச் சிற்பக் கலை பற்றிச் சொல்லப்போகிறீர்கள்?”

”ஏன்?”

”பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசாரமற்றது.”


”நீயும் இந்தத் தலைமுறைதானே?”

”ஆம். ஆனால், வேறு சாதி.”


அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ”பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?”

”கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.”

அவர் அவனைச் சிநேகபாவத்துடன் பார்த்து, ”ஐ லைக் யூ!”

”எப்போது வேலைக்கு வரலாம்?”

”இப்போதே என்னுடன் வா… உன் பைகள் எல்லாம் எங்கே?”


”எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!”

”இவ்வளவுதானா?”

”இதில்கூடப் புத்தகங்கள்தான் அதிகம்.”

”செஸ் ஆடுவாயா?”

”சுமாராக.”

”சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப் பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமசும் படிப்பேன் என்று சொல்லாதே…”
”மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்.”


”கிரேட் யங்மேன். உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்.”


இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் கார் அருகில் சென்று, ”மாருதி ஓட்டுவாயா?”

”நான் ஓட்டாத வாகனமே இல்லை!” என்று சிரித்தான்.

”சிகரெட் பிடிப்பாயா?”

”இல்லை.”

”கல்யாணம் ஆகிவிட்டதா?”


”இல்லை.”

”பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?”

”உங்கள் இஷ்டம்.”


மாருதி காரைத் திறந்து, முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

”ஓட்டுகிறாயா?”


”இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது.”


”எந்த ஊர் நீ?”

”எதும் என் ஊர் இல்லை.”


கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அருச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.


”அமைதியான இடம்… இவன் பெயர் ஸ்னோ. இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?”


”இல்லை.”

”அலை ஓசை பழகிவிடும். மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக்கொள். மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில். மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்.”

”அப்படியா?!” – உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

”யாருக்கு ஷகால் பிடிக்கும்?”

”எனக்கு. உனக்கு..?”


”கன்டின்ஸ்கி.”


”ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டுசேர்த்திருக்கிறது உன்னை. நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.”


அவன் புன்னகைத்தான். ”மிகைப்படுத்துகிறீர்கள்…”


‘எதுவரை படித்திருக்கிறாய்?”


”கல்லூரிக்கு முழுதும் போகவில்லை. படிப்பு தடைப்பட்டுவிட்டது. பி.ஏ. ஹிஸ்டரி படித் தேன்.”

”எங்கே படித்தாய்?”

”லண்டனில்.”

”விட்டுவிட்டாயா?”

”ஆம். பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பின்…”

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்துவைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்… 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், ‘தி டவ் ஆஃப் பவர்’, மெக்கியாவல்லியின் ‘பிரின்ஸ்’, மோதியின் ‘ஜூரிஸ் புடன்ஸ்’…


”உன்னை வகைப்படுத்த முடியவில்லை.”

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.
'

முதல் மாதத்தில் அவன் முழுத்திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதிவைத்திருப்பதை எல்லாம் பிழையே இன்றி மிகச் சுத்தமாக எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவான். ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடுவார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்… சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்குக் கண்பார்வை மங்கியதால், படித்துக்காட்டினான். ஒருநாள், ”மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்தில் இருந்து படித்துக்காட்டேன்” என்றார்.


”என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது.”

”நான் தற்போது எழுதும் புத்தகத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?”

”இது நம் நாட்டுக்குத் தேவைஅற்றது.”

”எப்படிச் சொல்கிறாய்?” என்றார் கோபப்படாமல்.

”மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?”

”நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?”

”தெரிந்து..?”

”நம் இந்தியாவை ஒன்றுசேர்த்த இந்த மரபு இப்போது தேவை இல்லை என்கிறாயா?”

”இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்… அது போல் சோழ மண்டலம்…வேங்கி… இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது.”

”எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்.”


”காரணம், உங்களை எல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்.”

”இருந்தும் இந்த நாட்டை ஒன்றுசேர்ப்பது கலாசாரம்.”

”இல்லை… ஏழ்மை!”

”உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?”

”கரைக் கோயிலின் ஆர்க்கி டெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பி தான் என் ஹீரோ. மகேந்திரவர்மன் அல்ல.”

”மனம் மாறுவாய்” என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது அவனை அறிமுகப்படுத்தினார். ”வினித், திஸ் இஸ் அஜய்… வினிதா என் பெண்.”

”ஹாய், யு லைக் மியூஸிக்?”

”பிடிக்கும்…”

”ஃபில் காலின்ஸ்?” என்றாள் எதிர்பார்ப்புடன்.

”மொஸார்ட்” என்றான்.

”யக்…” என்றாள் அருவருப்புடன்.

”புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்…”

”ஃபிக்ஷன் ரெண்டாம்பட்சம்… ஐ ரீட் போயம்ஸ்.”

”போயம்ஸ்! மைகாட்…”

”தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்…” என்றார் சந்திரகுமார்.

”எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்!” என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் – மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்கவைத்தான். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்கவைத்தான்.

ஒருநாள் மாலை ‘ரொம்பப் போர் அடிக்கிறது’ என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ”கடற்கரைப் பக்கம் வாக்மென் போட்டுக்கொண்டு நடக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா?”

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ”இரவு எனக்கு நிலவொளியில் கரைக் கோயிலைப் பார்க்க வேண்டும்.”

”அழைத்துச் செல்கிறேன்!”

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. ”அவனைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும். இவனைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது.’

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக்காட்டிக்கொண்டு இருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது… ‘How did you die?’


கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

‘Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?’


வாசலில் ஜீப்பில் இருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்தபடியே அணுகினார்.

”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”ஐ’ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்” என்று அடையாள அட்டையைக் காட்டி, ”இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

கண்ணாடி போட்டுக்கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை; கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.


”இவன் பெயர் அஜய். என் செக்ரெட்டரி…”

”இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை. அவன் இங்கே இருக்கிறானா?”

”என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது.”


வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில். ”சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்… வி காட் ஹிம்!”

”விவரமாகச் சொல்லுங்களேன்?”

”இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?”

”இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரெட்டரி… ரொம்ப நல்ல பையன்.”

”புரொஃபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப் பெரிய தீவிரவாதி… மொத்தம் 18 கொலைகள் இவன் கணக்கில் உள்ளன.”

”சம்திங் பாஸிட்டிவ்லி ராங்… ஆள் மாறாட்டம்… போட்டோ தப்பு” என்றார்.


”அவன் இங்கேதான் தங்கி இருக்கிறானா?”

”ஆம்…”

”எந்த அறையில்?”

”மாடியில்!”

”என்னுடன் வாருங்கள்…” சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ”என் செக்ரெட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி. அழகுணர்ச்சி உள்ளவன், படித்தவன், சிந்திப்பவன்…”

அதிகாரி அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் இரை தேடும் சிங்கம் போல அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருந்தான். மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக… ஜன்னல் மலர் ஜாடியில் ரோஜா.


அதிகாரி அவன் மேஜை இழுப் பறைகளைச் ‘சரக்… சரக்…’ என்று திறந்தார். மலர் ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன.

”புரொஃபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா, உம் நம்பிக்கைக்குரிய காரியதரிசியின் சொத்துக்களை?”

சந்திரகுமார் அருகே சென்றார்.

”இது உங்களுடையது அல்லவே?”

மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி இருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மேகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.


”ஐ கான்ட் பிலீவ் இட்… திஸ் இஸ் இம்பாஸிபிள்!”

”இவன் பெயர் அஜய் அல்ல… இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போய் இருக்கிறான்?”


”கடற்கரைக்கு என்று சொன்னேனே!”


”பதற்றப்படாதீர்கள், அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும் வரை பதுங்கி இருக்கலாம்.”

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதப வென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.


”வெயிட்… யு கான்ட் டூ திஸ்… அவன் வேறு யாரையோ…”

”ஷட் அப் ஓல்ட்மேன்… கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு, தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள். வாயை மூடிக்கொண்டு நடப்பதைக் கவனிப்பது உசிதம்!”

”என்ன செய்யப்போகிறீர்கள்? காட்! என் மகள்… என் மகள் அவனுடன் இருக்கிறாள்!”

”அவளைக் காப்பாற்ற

முயற்சிக்கிறோம்.”

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியில் இருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. ‘என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது… ஆள்மாறாட்டத் தப்பு. இவன் இல்லை… தடுக்க வேண்டும்.’

”வர்றாங்க. எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டாப் போதும்!”

ஜன்னல் வழியே, வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. அவர்கள் கைகோத்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

”ரெடி!”

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான். நின்றான். வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

”நாம் வந்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டான், பூட்ஸ் அடை யாளங்களைப் பார்த்து. ஓடுங்க… பிடிங்க!”

இதற்குள் அஜய், வின்னியை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக்கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். தன் பையில் இருந்து எடுத்த துப்பாக்கியை வின்னியின் நெற்றியில் பதித்து, ”ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்… நில்லு!”

‘சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்’ என்று சந்திர குமார் நினைத்தார். ‘இப்போது கூட அனைத்தும் கனவு’ என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி காரில் திணித்து ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் ‘வாக்கிடாக்கி’யில் ஆணைகள் பிறப்பித்தனர். ”க்விக்! செண்ட் த ஜீப்… ஹி இஸ் ரன்னிங்…”


புரொஃபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொஃபசர் வெலவெலத் துப்போய், ”என் மகள்… என் மகளைக் காப்பாற்றுங்கள்…”

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.


”என்ன ஆச்சு… என் மகளுக்கு என்ன ஆச்சு..?”

”ஓ! ஷி இஸ் ஆல்ரைட்…”

”பையன்?”

”கடற்கரையில் சுட வேண்டி இருந்தது…” அவர்கள் அந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

”வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்?” என்று அவளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ”எங்கேயாவது அடிபட்டதா?”

”இல்லை அப்பா… அவன் என்னை எதும் செய்யவில்லை.”

”எதும் செய்யவில்லையா?!”

”நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்கு முன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்து விட வேண்டும்” என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!”

சந்திரகுமார் கரைக் கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களின் மீதும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

”அப்பா, அவர்கள் அவனை… அவனை…” என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்துகிடந்தான் அவன். மாருதியின் ஹெட்லைட் வெளிச் சத்தில் மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

‘உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்… இப்போது நம் எதிரி நாமேதான்!’


”மைகாட்! வாட் வென்ட் ராங்?” என்றார் சந்திரகுமார்.

”என்ன?”

”நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலி வாங்கும்படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே… எங்கே…?”

”அந்தக் கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்” என்றார் அதிகாரி!




http://www.bharatmoms.com/uploads/Image/writer-sujatha3.jpg