Skip to content
Showing posts with label ஸ்ட்ராபெரி-திரை விமர்சனம்:. Show all posts
Showing posts with label ஸ்ட்ராபெரி-திரை விமர்சனம்:. Show all posts

Thursday, September 17, 2015

ஸ்ட்ராபெரி-திரை விமர்சனம்:

பணக்கார வீட்டுப் பையனை பேய் மிரட்டி எடுக்கிறது. ‘ஆவிகள் கடல் கடந்து வராது. நீ வெளிநாட்டுக்குப் போ’ என்று மந்திரவாதி எச்சரிக்கிறார்.
இன்னொரு பக்கம், பா.விஜய் ஓட்டிவரும் கால் டாக்ஸியை ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுக்கிறார்கள் அவ்னி மோடியும் அவரது அப்பா ஜோ மல்லூரியும்.
மனநிலை பாதிக்கப்பட்ட தேவயானி, கண வருடன் (சமுத்திரக்கனி) கடைத்தெருவுக்குப் போகும்போது சமுத்திரக்கனியின் உயிரைக் குறிவைத்து ஒரு லாரி அவர் மீது மோதுகிறது.
அவ்னி தன்னிடம் நெருங்கிப் பழகுவதைக் கண்ட விஜய் அதைக் காதல் என நினைத்துக் கொள்கிறார். அவ்னியோ பேய், பிசாசு சமாச் சாரங்களை விஜய்க்கு அறிமுகப்படுத்துகிறார்.
பணக்கார இளைஞன் நாட்டைவிட்டுப் போவது, சமுத்திரக்கனியின் மரணம், தேவ யானியின் மனநிலை, ஜோ மல்லூரியின் திட்டம் எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றுதான்: பள்ளி வாகன விபத்தில் பரிதாபமாக இறந்துபோன ஒரு குழந்தை!
அந்த குழந்தை இப்போது ஆவியாக உலவுகிறது. அது, விஜய்யிடம் ஏதோ பேச விரும்புகிறது. அது ஏன் பேச விரும்புகிறது? விஜய்யை அதைச் சந்திக்கவைக்க மல்லூரியும் அவ்னியும் ஏன் தவிக்கிறார்கள்? வெளிநாட்டுக்குப் போன இளைஞன் என்ன ஆனான்? சமுத்திரக்கனியின் போராட்டம் என்ன ஆயிற்று? இதையெல்லாம் நெகிழ்ச்சியும் மிரட்டலுமாகச் சொல்ல முயல்கிறது ஸ்ட்ராபெரி.
படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார் பா.விஜய். மிரட்டும் பேய், பழிவாங்கும் பேய் வகைகள் இந்தப் படத்திலும் இருந்தாலும் அவற்றினூடே சமூக விழிப்புணர்வுக்கான இழையை வலுவாகப் பின்னியிருப்பதில் இயக்குநர் விஜய் சபாஷ் போடவைக்கிறார். கதையை இரண்டு மூன்று பாதைகளில் நகர்த்திச்சென்று அவற்றை ஒன்றாக இணைக்கும் முயற்சி திரைக்கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. பேயைப் பேசவைப்பது, விபத்து சம்பவம், பேய்க்கு காலக்கெடு விதிப்பது போன்ற காட்சிகளால் சுவாரஸ்யம் கூட்ட முயல்கிறார்.
ஒரு கட்டம்வரை இவை படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகின்றன. மர்மங்களுக் கான காரணம் தெரிந்த பிறகு, படம் சண்டிக் குதிரைபோல படுத்துக் கொள்கிறது. மல்லூரியும் வில்லனும் என்ன ஆகிறார்கள் என்பதைக் காட் டிய விதத்தில் விறுவிறுப்பு, புதுமை இல்லை. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி அதிக சுவாரஸ்யங்கள் இல்லாமல் நகர்வது பலவீனம். முதல் பாதியில் கதை வேகம் எடுக்கும்போது திணிக் கப்படும் பாடல் காட்சிகள் படத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. கதையை நகர்த்திச்செல்ல வலுவான காட்சிகள் இல்லாததால் ஒரேவிதமான காட்சிகள் திரும்பத் திரும்ப வந்து அலுப்பூட்டுகின்றன.
பாடகராக ஜெயித்திருக்கும் பா.விஜய், நடிப்பில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். அவர் பயப்படுவது செயற்கைத்தனமாக உள்ளது.
கயிற்று ஊஞ்சலில் யோகாசனம் செய்தபடி வசீகரமாக அறிமுகமாகும் அவ்னிக்கு ஒரு கட்டம்வரை முக்கியமான பங்கு உள்ளது. அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். குறிப்பாக சுடுகாட்டுக் காட்சி! ஆனால் திரைக்கதை திடீரென்று இவரை அம்போ என்று விட்டுவிடுகிறது.
சமுத்திரக்கனி, தேவயானி, குழந்தை யுவினா ஆகி யோர் படத்துக்குப் பெரிய பலம். ஜோ மல்லூரி தன் பாத் திரத்தைச் செவ்வனே செய்திருக்கிறார். சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் கூர்மை. பேய்ப் படத்துக்குள் சமூக விழிப்புணர்வு வசனங்கள் இடம்பெறுவதும், கதையோடு அவை ஒட்டி வருவதும் ஆச்சரியம். தனியார் பள்ளிகளின் லாப நோக்கு, அசட்டை குறித்து பா.விஜய் எழுதியுள்ள வசனங்கள் சாட்டையடி.
ஒளிப்பதிவாளர் மாறவர்மனின் பங்களிப்பு பெரிய பலம். கிண்டி பாலம், போரூர் சிக்னல், மெரினாவை டாப் ஆங்கிளில் காட்சிப்படுத்தியிருப்பது அற்புதம். இசையமைப்பாளர் தாஜ் நூரின் பின்னணி இசை கச்சிதம்.
பாடல்களைக் குறைத்து, காட்சி களில் புதுமையை சேர்த்திருந்தால் ‘ஸ்ட்ராபெரி’ இன்னும் இனித்திருக்கும்.


நன்றி-த இந்து