Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts
Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts

Monday, July 27, 2015

‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா? - விஜய்சேதுபதி பேட்டி

ஆக்‌ஷன் மசாலா படங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் அதிகரித்துவரும் தமிழ்சினிமாவில் விஜய்சேதுபதியின் பாதை வேறாக இருக்கிறது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற மென்னுணர்வுத் திரைப்படத்தைத் தயாரித்து அதில் 55 வயது முதியவராக ‘கைலாசம்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படம், இரண்டு சர்வதேசப் படவிழாக்களுக்குத் தேர்வாகியிருக்கிறது என்ற செய்தியை முதன்முதலாக பகிர்ந்தபடி நம்மிடம் உரையாடினார் விஜய் சேதுபதி…
இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் எது?
எமலிங்கம். ரசிகர்கள், இயக்குநர்கள் என இரண்டு தரப்பிலும் ‘புறம்போக்கு’ படத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ‘புறம்போக்கு’ ஒரு தோல்விப்படம் என்று ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்துகொள்ளத் திரையரங்குகளுக்குப் பயணம் செய்துவிட்டு வந்தவன் நான். படப்பிடிப்புக்காகச் செல்லும் எல்லா ஊர்களிலும் ‘எமலிங்கம்… எமலிங்கம்’ என்று ரசிகர்கள் என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறார்கள். எமலிங்கத்துக்கு அவ்வளவு ரீச் கிடைத்திருக்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஜனநாதன் சார் என்னைக் கூப்பிடுவார் என்று நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அவர் எனக்கு இத்தனை பெரிய கதாபாத்திரம் கொடுத்தது எனக்குப் பெரிய கவுரவம் என்று சொல்ல வேண்டும். அவரது அரசியல் அறிவாகட்டும், நடிகனுக்கு அவர் தரும் சுதந்திரமாகட்டும், யார் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்பதிலாகட்டும், அவரைப் போன்ற இயக்குநர்கள் நம்மிடம் அபூர்வம். எமலிங்கம் நான் மிகவும் விரும்பி நடித்த கதாபாத்திரம்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறீர்கள்?
படப்பிடிப்பில் நடிக்கும்போது சில வசனங்கள் நம்மையும் அறியாமல் வந்து விழும். இயக்குநரின் அனுமதியோடு, அவருக்கு உவப்பாகவும் காட்சிக்குப் பொருத்தமாகவும் இருந்தால் அதைப் பயன்படுத்துவோம். இது எல்லா நடிகர்களும் செய்வதுதான். ஆனால், இந்தப் படத்தின் காட்சிகளைப் பற்றி இயக்குநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு என் மீது நம்பிக்கை வந்துவிட்டது.
“நீங்கள் வசனம் எழுதுங்கள் சரியாக வரும்” என்றார், இயக்குநர் பிஜூ சார். வசனம் எழுதுவதற்கான தகுதி இதுவல்ல என்று நான் மறுத்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாகயில்லை. நாம உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியாகப் பேசுவோம் என்றார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியாகப் பேசினோம். சில காட்சிகளை நடித்துப் பார்த்தோம். அப்படி இந்தப் படத்தில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களையும் நான் நடித்துப் பார்த்தேன். காட்சிகளைப் பேசும்போதும் நடிக்கும்போதும் ரெக்கார்ட் செய்தோம். பிறகு அதைப் போட்டுப் பார்த்து வசனம் எழுதினேன். இந்த முறை எல்லாப் படத்துக்கும் அல்லது எல்லாருக்கும் சரியாக வருமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் பிஜு. விஸ்வநாத்தை நீங்கள்தான் அழைத்து வந்தீர்களா?
இல்லை. அவருக்கு அறிமுகமே தேவையில்லை. ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பவன். ‘பீட்சா’ படத்துக்கு முன்பு நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அவர் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். அப்போது வேறோரு கதையை அவர் இயக்க இருந்தார். தயாரிப்பாளர் கூட முடிவான நிலையில் அந்தப் படம் நடக்காமல் போய்விட்டது. பிறகுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ கதையை அவரிடம் கேட்டு அதை நான் தயாரிக்கிறேன் என்று அழைத்துவந்தேன்.
இயக்குநருக்கு எடிட்டிங் தெரியவில்லை என்றும், படத்தை நீங்கள்தான் எடிட் செய்தீர்கள் என்று செய்தி வெளியானதே?
அப்பட்டமான பொய். பிஜூ சாரின் திறமை, படைப்புக்கு அவர் காட்டும் நேர்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தப் படத்தை தயாரித்தது, நடித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் நான் மூக்கை நுழைக்கவில்லை. அவர்தான் இந்தப் படத்தை எடிட்செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதுதான் உண்மை.
55 வயது முதியவர் தோற்றத்தை விரும்பி ஏற்க என்ன காரணம்?
‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயது தோற்றத்தில் நடித்தது தானாக அமைந்த ஒன்று. ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோரைவிட எனது கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நலன் குமாரசாமி விரும்பினார். இந்தப் படத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன் என்பது முதலில் முடிவாகவில்லை. வசனமெல்லாம் எழுதி முடித்துவிட்டேன்.
முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த நடிகர் வேறொரு படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அவர்தான் நடிக்க வேண்டும் என்று நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். ஆனால், குறித்த காலத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை. படத்தையும் உடனே தொடங்கவேண்டும். அதனால் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா, மேக் அப் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா என்றேன். அவர் சம்மதித்தார். ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்றுதான் இந்தக் கதாபாத்திரத்தை முயன்றேன். அது சரியாக வந்திருக்கிறது என நம்புகிறேன்.
இந்தப் படம் முதுமையைப் பற்றிப் பேசுகிற படமா?
நிச்சயமாக இல்லை. இதுதான் இந்தப் படத்தின் கதை என்று வரையறுத்துச் சொல்லவே முடியாது. 55 வயது முதியவரின் ‘பேபிஸ் டே அவுட்’. அப்பாவை இழந்து ஒரு மாதமே ஆன ரமேஷ் திலக். அவசரகால அழைப்புக்கு ஆம்புலன்சில் வரும் மருத்துவ உதவியாளர். அவரது அப்பாவைப் போலவே அடம்பிடிக்கும் 55 வயது கைலாசத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருகிறார். அந்தப் பெரியவரிடம் அவன் மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவனுக்கு சவாலாகிறது. அவர்களுக்குள் உணர்வு ரீதியான இணைப்பும் கிடையாது. ஆனால் அந்தப் பயணத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் நம் ஒவ்வொருவரையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
பயணம் நெடுகிலும் கொட்டிக் கிடக்கும் அபத்த நகைச்சுவை ரசிகர்களுக்கு அனுபவமாக இருக்கும். பயணத்தின் முடிவு என்ன என்பதும் இந்தப் படத்துக்கு முக்கியமானது. ரசிகர்களுக்கு அது நிச்சயமாகப் பிடிக்கும். இந்தப் படத்தை என் அம்மாவுக்கு போட்டுக்காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு “உங்க அப்பனைப் பார்க்கிற மாதிரியே இருக்குடா!” என்று சொன்னார். அண்ணன், தங்கை ஆகியோரும் அதையேதான் சொன்னார்கள். கைலாசம் ரசிகர்களுக்கு நெருக்கமான மனிதனாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.


நன்றி- த இந்து

Sunday, May 17, 2015

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை vs 36 வயதினிலே -

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' படங்களின் இயக்குநர் ஜனநாதனின் நான்காவது படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி என மூவரும் இணைந்திருக்கும் படம் எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது?
டைட்டில் கார்டில் ஆர்யா பெயருக்கு கிடைக்காத கைத்தட்டல் விஜய் சேதுபதிக்குக் கிடைத்தது.
கைதியாக இருக்கும் ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், ஆர்யா அதுகுறித்த எந்த சலனமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஜாலியாக உட்கார்ந்து கடலை சாப்பிடுகிறார். நீதிபதி தீர்ப்பு கூறியதும், என்னை போர்க்குற்றவாளியாகக் கருதி சுடுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். அப்போதே ரசிகர்கள் சத்தமில்லாமல் படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரி ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும் அனுபவம்மிக்க ஊழியர் விஜய் சேதுபதியை ஷாம் தேடிப் பிடிக்கிறார். இதற்கிடையில், போராளி கார்த்திகா, ஆர்யாவை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார். இதில் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
பாலு என்கிற பாலுச்சாமியாக தீவிரமான கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா கச்சிதமாக நடித்திருக்கிறார். அளவான வசனம், தீர்க்கமான பார்வை, நம்பிக்கையோடு இயங்குதல் என எல்லா தளங்களிலும் தன்னை செதுக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், மிகப்பெரிய ரயில் கொள்ளையை நடத்திய ஆர்யா எந்த இடத்திலும் புத்திசாலியாகவே காட்டப்படவில்லை.
ஷாம் சிறைச்சாலை அதிகாரி மெக்காலே கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். சட்டப்படிதான் எதையும் செய்வேன். சட்டம் தான் குற்றங்களைத் தடுக்கும். ''செஞ்ச தப்புக்கு ஏத்த மாதிரி கையை வெட்டணும், காலை வெட்டணும், தலையை வெட்டணும், தப்பு பண்ணவனை நடுரோட்டுல நிக்க வெச்சு கல்லாலயே அடிச்சு கொல்லணும்'' என்கிற ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக தீவிரமாக நடித்திருக்கிறார். நிதானமான, உறுதியான ஷாமின் நடவடிக்கைகள்தான் படத்தை நகர்த்தவே உதவுகின்றன.
தூக்கில் போடும் ஹேங்மேன் எமலிங்கம் கேரக்டரில் விஜய் சேதுபதி பக்கா ஃபிட். சென்னை பாஷை பேசிக்கொண்டு, சரக்கடித்துவிட்டு சலம்புவதும், எமோஷனில் கரைவதுமாக மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் முழுக்க ஃபெர்பாமன்ஸில் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதிதான்.
போராளியாக கார்த்திகா, குயிலி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார். காதல், கிளாமர், டூயட் என்று இல்லாத அழுத்தமான பாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்திகாவைப் பாராட்டலாம்.
ஜனாதிபதி தேர்தலில் நின்றதற்கான காரணத்தை விஜய் சேதுபதி சொல்வது, கைதி பல வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று தெரிந்ததும் விடுதலை செய்யப்படுவதும், அந்தக் கைதி குடும்பத்தை இழந்து கண்ணீரில் கரைவதும் என சமகால சூழலை கொஞ்சம் நையப் புடைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
விஜய் சேதுபதி அறிமுகப் படலத்தில் அப்படி ஒரு பாடல் அவசியம்தானா சாரே?
படத்தின் முக்கிய மையமாக இருக்கும் ஆர்யாவின் பின்புலம் என்னவென்றே தெரியவில்லை. கார்த்திகாவுக்கும் அப்படியே.
விஜய் சேதுபதியின் பின்புலமும், கதாபாத்திர வடிவமைப்பும் நேர்த்தியாகவும், இயல்பாகவும் உள்ளது.
எல்லோரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஷாம் எப்படி விஜய் சேதுபதியை மட்டும் கண்காணிக்காமலேயே இருக்கிறார்?
ஷாம் நினைத்திருந்தால் விஜய் சேதுபதிக்குப் பின்னால் இருக்கும் அந்த கூட்டத்தையே பிடித்திருக்கலாமே?
வெள்ளை பேப்பரில் பாலில் எழுதுவது, சமஸ்கிருதத்தில் துப்பு கொடுப்பது, சட்டையில் க்யுஆர் கோடு (QR code) எல்லாம் நல்ல ஐடியா தான். ஆனால், எதுவும் அடடே என ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு க்ளிக் ஆகவில்லை.
உலகக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதைக் குறித்து உரக்கப் பேசுகிறார் ஆர்யா. அதற்குப் பிறகு யாருமே அதை கண்டுகொள்வதில்லையே. மரண தண்டனையின் நீட்சியாகவே படம் நீள்கிறதே?
ஷாமும்- ஆர்யாவும் தனியாக பேசும் காட்சி எந்த அளவுக்கு காத்திரமாக இருந்திருக்க வேண்டும்? எதைப்பற்றியும் தெளிவுபடுத்தாமல் காமா சோமோவென்று நகர்வது எந்த விதத்தில் நியாயம்? படத்தின் மொத்த பலமும் அங்கே புஸ்ஸாகிப் போய்விடுகிறது.
செல்வகுமாரின் சிறைச்சாலை செட் 'ரியல்' உணர்வைத் தருகிறது. சிறைச்சாலை குறித்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், அதே போல படத்தின் திரைக்கதையை ஜம்ப் ஆகாமல் இருக்கும்படி கவனம் செலுத்தி இருந்தால், வசன ரீதியான பிரச்சாரத்தைத் குறைத்திருந்தால் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக பட்டா போட்டு அமர்ந்திருக்கும்.
ஆனாலும், அசுத்தம், மரணதண்டனை , கருணை மனு ஆகியவற்றைப் பேசிய விதத்தில் புறம்போக்கு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.


ஜோதிகா
ஜோதிகா
ஜோதிகாவின் மறுவருகை என்ற ஒற்றை காரணம் போதாதா '36 வயதினிலே' படத்தைப் பார்க்க?
'மொழி‘ படத்தில் சைகைகளால் அபிநயம் பிடித்த ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். ஜோதிகாவின் வரவேற்பை ஆமோதிப்பதைப் போல தியேட்டரில் குவிந்திருந்தது பெண்கள் கூட்டம்.
'36 வயதினிலே' திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை வசப்படுத்தியதா?
வருவாய்த் துறையில் வேலை செய்கிறார் வசந்தி தமிழ்ச்செல்வன் (ஜோதிகா). தமிழ்ச்செல்வன் (ரஹ்மான்) வானொலி அறிவிப்பாளர்.
ரஹ்மானுக்கு அயர்லாந்து செல்ல விருப்பம். அந்த விருப்பத்துக்கு வரும் சில தடைகளால் மனைவி ஜோதிகாவைத் திட்டித் தீர்க்கிறார். கண்ணை மூடித் தூங்கினா எல்லாருக்கும் கனவு வரும். அது இல்லை. வாழ்க்கையில சில உணர்வுகளால விஷனா பார்க்கிற கனவு என்று மனைவியிடம் கோபமுகம் காட்டுகிறார். அதற்குப் பிறகு கணவனாலும் சமூகத்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜோதிகா எப்படி சாதிக்கிறார்?
8 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் 'பேக் டு தி ஃபார்ம்' ஆகி இருக்கிறார் ஜோதிகா. சூர்யா பெயரை டைட்டிலில் போடும்போது எழும் விசில் சத்தத்தைக் காட்டிலும், ஜோ-வை திரையில் பார்க்கும்போது சத்தம் அதிகம் எழுகிறது. ஜோதிகாவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும் பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது அதிசயம்தான்.
டிராஃபிக்கில் சிக்கி ஆபிஸூக்கு லேட்டாக வந்து திட்டு வாங்குவது, தங்கப்பன் பெயரை தங்கப்பெண் என எழுதியதால் டோஸ் வாங்குவது, கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி கூனி குறுகுவது, கிண்டல் செய்பவர்கள் மூக்கை உடைக்க பொறாமையை பொங்க வைக்கும் அளவுக்கு பில்டப் கொடுப்பது, பஸ்ஸில் பயணிக்கும் பாட்டியின் சீட்டை பிடிப்பது, சீட் வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இடித்துவிட்டு பரவாயில்லை என சொல்வது, அயன்பாக்ஸ்ல மூஞ்சியை தேய்க்கிறேன் வா என் பொண்ணா நீ என மகளிடம் கோபப்படுவது என கிடைத்த எல்லா இடங்களிலும் அளவாக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா.
ஜோதிகாவின் ஃபெர்பாமன்ஸ் ஆஹா என்று சொல்லவைக்கவில்லை. ஆனால், அவ்வளவு பொருத்தமாக அடக்கமாக இருக்கிறது.
ஜோதிகாவின் கணவராக ரஹ்மானின் நடிப்பு ஓ.கே ரகம். ஆனால் கனவு, வாழ்க்கை, லட்சியம் என்று மூச்சு முட்ட பேசுபவர் வார்த்தைகளில் மட்டு மாடுலேஷன் காட்டுறார். அதை உணர்வாக, நடிப்பாக தரவில்லை என்பதுதான் வருத்தம். எனக்குத் தெரியாதுங்கிற ஒரே ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றது இந்த உலகத்துலயே நீ ஒருத்திதான் என ரஹ்மான் ஆதங்கப்படும்போது மட்டும் கவனிக்க வைக்கிறார்.
ஜோதிகாவின் தோழியாக அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அபிராமியின் எனர்ஜி பேச்சுக்கு ரசிகர்கள் கிளாப்ஸ் அடித்தனர்.
டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பயில்வான் ரங்கநாதன், பிரேம், தேவதர்ஷினி ஆகியோர் சரியான தேர்வு.
திவாகரனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.
மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் மறு ஆக்கம் செய்திருப்பது படத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது.
மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு அம்மா இருப்பதைப் போலவும், அம்மாவின் கிராமத்துக்குச் சென்று ரிலாக்ஸ் ஆகிவருவதைப் போலவும் காட்சிகள் இருக்கும். தமிழில் ஜோதிகாவுக்கு அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை.
ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்? இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.
எந்த வயதிலும் சாதிக்க முடியும். அதற்கு வயது தடையல்ல என்று சொன்னதற்காகவும், இயற்கை விவசாயம் என்பதை வலியுறுத்தியதற்காகவும் '36 வயதினிலே' படத்தை வரவேற்கலாம்.
தமிழில் இப்படிப்பட்ட படங்கள் ரீமேக் மூலமாகவாவது வருவது ஆரோக்கியமான விஷயம். முதல் நாள் வரவேற்பு நீடித்தால், தமிழ் சினிமாவில் இந்த சாதகப் போக்கு முழு பலன் தரலாம்



thanx - the hindu


  • Mohanraj  
    குட்
    about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • எஸ்.கெளதம்  
      இழந்துபோனதாக நான் நினைத்த ஜோதிகா மீண்டும் தன் திறமையை நிலை நாட்ட வந்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் படத்தை பார்த்தேன். அருமை..
      about 22 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
      anandan  Down Voted
      • Rajkumar  
        அட்டகாசம்.
        a day ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
        anandan  Down Voted
        • RAJA Mani  
          4stars!!! good movie
          Points
          1220
          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • RAJA Mani  
            I see it!!! its worth to watch ... The whole family movie!!!
            Points
            1220
            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Manikandan Kpm  
              நல்ல விமர்சனம் வந்துகொண்டு இருக்கிறது தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரைஅரங்கில் படம் பார்த்தவர்களிடம் .........:)
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Labam  
                Comeback jo anni

              Thursday, April 24, 2014

              ரேஸ் குர்ரம்' vs புறம்போக்கு'

              தெலுங்கில் வெளியாகியுள்ள 'ரேஸ் குர்ரம்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஷாம். அதுமட்டுமன்றி, தமிழில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜனநாதன் இயக்கத்தில் 'புறம்போக்கு' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
              இந்நிலையில் ஷாமுடன் பேசிய போது.. 



              தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது?


               
              " தெலுங்கில் என்னை 'கிக்' படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப் பட டைரக்டர். அந்த'கிக்' படம் சூப்பர் ஹிட். டைரக்டர் சுரேந்தர் என் மீது அன்பு கொண்டவர். அவரது அடுத்த படமான 'ஊசுற வல்லி' படத்தில் எனக்கு ஒரு சிறு ரோல் கொடுத்திருந்தார். அது என் மேல் வைத்துள்ள அன்புக்காகக் கொடுத்த வாய்ப்பு. அடுத்து அவர் கொடுத்த அர்த்தமுள்ள வாய்ப்புதான் 'ரேஸ் குர்ரம்'. அப்படி என்றால் ’வேகமாக ஓடும் குதிரை’ என்று அர்த்தம். இன்று பாக்ஸ் ஆபிஸில் வேகம்' எடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது."
              பொதுவாக தெலுங்கு திரையுலக அனுபவம் எப்படி உள்ளது?
              ''தெலுங்கில் எனக்கு இது 3 வது படம். இரண்டாவது ஹிட்படம். அங்கு தமிழ் நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதற்கான அடித்தளம் கமல்சார், விக்ரம்சார் ஆகியோரால் போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் போட்டுக் கொடுத்துள்ள பாதையில் என்னைப் போன்றவர்கள் சுலபமாக நடக்க முடிகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் பாணி அங்கும் தொடங்கியுள்ளது. இது ஆரோக்யமான அறிகுறி. ரவி தேஜாவும் சரி அல்லு அர்ஜுனும் சரி இணைந்து நடித்த போது ஈகோ பார்க்காமல் பேசிப் பழகி அன்பு காட்டினார்கள்.
              தமிழில் கூட ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளீர்களே?
              ''ஆம். 'புறம்போக்கு' படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கிறேன். எனக்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் 'இயற்கை'. அதை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் என்கிற திறமைசாலியின் படம்தான் 'புறம்போக்கு'. இதில் நாங்கள் மூன்று பேரும் இணைந்திருக்கிறோம். ''
              "புறம்போக்கில் உங்கள் பாத்திரம் எப்படி?"
              ''புறம்போக்கில் என் பாத்திரத்தின் பெயர் மெக்காலே. பெயர் வரும்போதே 'மெக்காலே; சட்டத்தின் ஆட்சி 'என்று வரும். அந்த அளவுக்கு சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி.சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். ஒரு வெளிநாட்டுப் பெண் தான் எனக்கு ஜோடி.
              போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம்.இதுவழக்கம் போலில்லை. இதை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டைலிஷாக இருக்கும்.
              நான் சட்டத்தை மதிக்கிற பாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர்தொடர்பில் இருப்பவர் .படத்தில் எங்கள் 3பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக இருக்கும். ஒன்றுக்கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவை. இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று பாத்திரங்களுமே தனித்தனி ஐடியாலஜி கொண்டவை. தான் நினைப்பதே சரி,செய்வதே சரி என்று இருப்பவர்கள் ''
              உங்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?
              ''மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார்.''
              ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி..?
              'உள்ளம் கேட்குமே' படம் முதல் ஆர்யா எனக்கு பழக்கம். ஆர்யா என் தம்பி மாதிரி, அவன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அம்மாவிடம் உரிமையுடன் சாப்பிடும் அளவுக்கு குடும்ப நண்பன்.
              ஆர்யாவின் வளர்ச்சி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலா படத்துக்கு காட்டிய 3 வருட உழைப்பு சாதாரணமல்ல. 'மதராசபட்டினம்' 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ராஜாராணி' என அவனது வளர்ச்சிகள்,வெற்றிகள் சந்தோஷமாக இருக்கிறது.
              விஜய் சேதுபதியின் வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கிறது. அவரும் பலவருடம் போராடி இருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை 'பீட்சா' 'சூதுகவ்வும்' படங்கள் மூலம் பிடித்துள்ளார். எப்போதும் அவர் ஜாலி சந்தோஷ மூடில் இருப்பவர். இப்போது இனிய நண்பராகி விட்டார். எங்களுக்குள் எவ்வித ஈகோவும் கிடையாது. ஆரோக்கியமான நட்பு மட்டுமே இருக்கிறது. எங்களுக்குள் எவ்வித போட்டி பொறாமை.. எதுவுமே இல்லை. இயல்பாக சௌகரியமாகப் போய்க் கொண்டு இருக்கிறது
              .'புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும் நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமானது. ஏப்ரல் 16 முதல் விஜய் சேதுபதியுடன் சென்னையில் நடிக்கப் போகிறேன். ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக இருக்கும்.''
              '6 மெழுகுவர்த்திகள்' படத்தில் நடித்ததில் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததா?
              ''சில சூழ்நிலைகளால் தப்பான மாதிரி சில படங்கள் அமைந்தன. '6' படத்துக்கு முன் என்னைப்பற்றி மாறுபட்ட அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் இப் படத்துக்குப் பிறகு ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்கிற பெயர் வந்திருக்கிறது.
              பலவிதங்களில் திறமைகாட்ட முடிகிற நடிகர் என்கிற பெயரை'6' படம் எனக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. முன்பெல்லாம் கண்ணில் படும் 10 பேரில் 2 பேர் என்னைக் கண்டு கொள்வார்கள். இப்போது 8 பேர் பேசுகிறார்கள். ஊக்கம் தருகிறார்கள். மரியாதை தருகிறார்கள் எனக்கு புது உற்சாகம் தருகிறார்கள். கௌரவம் கூடி இருப்பதாக உணர முடிகிறது. ஷாம் விளையாட்டுத்தனமான நடிகரல்ல. அவருக்கும் முயற்சி செய்கிற ஆர்வம் இருக்கிறது வாய்ப்பு கொடுத்தால் வெளிப்படுத்தும் திறமை இருக்கிறது என்று '6' படம் பேச வைத்திருக்கிறது. அதற்கான வணிகரீதியிலான பலனை இனிதான் அடைய வேண்டும்.''
              சொந்தமாக '6' படம் தயாரித்ததில் சிரமங்களை உணர்ந்தீர்களா?
              ''படம் பெரிதாக வசூல் இல்லை என்றாலும் திட்டமிட்டு எடுத்ததால் அனாவசிய செலவுகள் இல்லை. எனவே கையைக் கடிக்கவில்லை என்கிற அளவுக்கு வசூல் செய்தது. இழப்புகள் இல்லை.''
              சரியான வாய்ப்புகள் அமையாத போது நடிகர்கள் சொந்தமாக படமெடுக்கத் தொடங்குவது பற்றி...?
              ''அப்படி ஒரு சூழல் வரும் போது நிச்சயம் செய்துதான் ஆகவேண்டும். சரியான படங்கள் கதைகள் அமையாத போது நம்மை நாமே நிரூபித்துதான் ஆகவேண்டும்.''
              மீண்டும் சொந்தப் படம் எடுப்பீர்களா?
              ''தேவைப்பட்டால் எடுக்கத்தான் செய்வேன். சரியான திரைக்கதை, படப்பிடிப்பு செலவுத் திட்டத்துடன் வந்தால் செய்வேன். ராம் கோபால் வர்மாவிடம் இருந்த சுரேஷ் நல்ல கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அதை தயாரிக்கும் எண்ணம் உள்ளது.''
              இயற்கை 2, கிக். 2. எடுக்கப் படவுள்ளதாமே?
              ''எஸ். பி. ஜனநாதன் சமீபத்தில் நார்வே போய் வந்திருக்கிறார். அங்குள்ள துறைமுகம் அத்தனை அழகாக இருந்ததாகக் கூறினார். நிச்சயம்'இயற்கை 2ம் பாகம்'.. மட்டுமல்ல 'கிக். 2' ம் பாகமும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.''
              நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக இருக்க விருப்பம்?
              ''இது ஸ்கிரிட் வெற்றி பெறும் காலம். ஸ்கிரிட்தான் கதாநாயகன் என்று கடந்த 2 ஆண்டுகளாக அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் என்றும் ஒரு டைரக்டரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். 


              thanx - the hindu 

              Wednesday, January 08, 2014

              புறம்போக்கு - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி,

              இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் 

              நான் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் இல்லை- இயக்குநர் ஜனநாதன்

               

              இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நவீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரலாற்று பெட்டகம். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும், பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சினிமா கலைஞர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த சிந்தனைவாதியான இவர் இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி, ஷ்யாம், கார்த்திகா கூட்டணியின் நடிப்பில் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.



              #அது என்ன உங்கள் படத்துக்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்துள்ளீர்கள்?

               
              குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியதாக டார்வின் சொல்கிறார். இதையே ஏங்கல்ஸ் ஒரு இடத்தில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்துகொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இன்னும் அந்த பரிணாமம் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தானே அந்த இடத்தில் குறிப்பிடுவதாக அர்த்தம். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட தேசப்பிரிவினையில் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஏன் அண்மையில் இலங்கையில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே. அப்படியென்றால் நமக்குள் குரங்கின் குணம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே. அதைத்தான் இந்தப் படத்தில் கொண்டுவந்திருக்கிறேன். 



              அதேபோல மனித நாகரீகம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து வருவதற்கு நிறைய சிறைச்சாலைகள் வழியாக கடந்து வரவேண்டி யிருப்பதை நம் வரலாறு சொல்கிறது. யார் ஒருவன் இந்த சமூகத்திற்காக போராடுகிறானோ, அவன் அடக்கு முறைக்கு உள்ளாகியிருக்கிறான், கைது செய்யப்பட்டிருக்கிறான், கொலை செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் அவன் தியாகி ஆக்கப்பட்டிருக்கிறான். ஸ்பார்டகஸ், சாக்ரடீஸ் போன்ற நிறைய பேரை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான தியாகத்தை முன்வைத்துதான் சிறைச் 

              சாலை வழியே நாகரீகம் வளர்ந்தி ருக்கிறது என்பதற்கு வரலாறு இருக்கிறது. அதை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு சில இளைஞர்கள் போராட முன் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் இந்த படைப்பில் படைத்திருக்கிறேன்

              .
              #இந்தச் சமூகத்திற்காக வித்தியாசமான ஏதாவது விஷயங்களை அழுத்தமாக கொடுக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

               
              நான் பிறப்பால் தமிழன் என்கிற அடையாளத்தைப் பெற்றவன். ஒரு ஓவியனாகவோ, ஒரு கவிஞனாகவோ இருந்திருந்தால் அந்த வழியே என்னோட ஆர்ட் ஃபார்ம் பிரதிபலித்திருக்கும். நான் சினிமாக்காரனாக இருக்கிறேன். என்னுடைய அடையாளத்தை இந்த வழியில் சொல்லித்தானே ஆக வேண்டும். நீங்க பணம் கொடுக்கிறீர்கள் என்பதற்காக வெறும் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் நான் இல்லை. 


              அதற்கு பதில் வேறு வேலையை செய்வேன். இந்த சமூகத்திலிருந்து நான் ஒன்றை கற்றேன். அதை மீண்டும் என் பாதிப்பாக முன் வைக்கிறேன். இதில் விமர்சனம் இருந்தால் தாராளமாக முன் வைக்கலாம். நல்ல விஷயம் என்றால் ஆதரிக்கலாமே. என்னை இங்கே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வெற்றியாளனாகவே இருக்கிறேன். அப்படியென்றால் இப்படியான படங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான தேவையும் இங்கே இருக்கிறது. 



              #நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான படங்களை இயக்காததற்கு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்புதான் காரணமா?

               
              பல்வேறு வேலைகள். அதில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக வகித்த பதவி. இதில் முழு திருப்தியா எல்லோரும் சேர்ந்து இயக்குநர் சங்கக் கட்டிட வேலைகளை முடித்திருக்கிறோம். ஒரு படத்தை எடுப்பதைப் போலத்தான் அந்த வேலையையும் நான் நினைத்தேன். இடையிடையே சின்னச் சின்ன சங்கப்பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பதவிக் காலம் முடிந்தது. அடுத்த கணமே படவேலையை கையில் எடுத்துக்கொண்டேன். 



              #இந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பற்றி?

               
              அடிப்படையாக இரண்டு நாயகர்கள் படம் இது. மீண்டும் சிறந்த இயக்குநர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள இங்கே வேலை இல்லை. இங்கே எல்லாவகையிலும் அதிகமான வீச்சு அவசியமாக இருக்கிறது இவர்கள் இருவரும் மக்கள் விரும்பும் நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் உடனே தியேட்டருக்கு போகிறார்கள். இதில் யாரையும் எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. சின்ன படம், நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து போவதற்குள் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. 



              என்னு டைய படத்தை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்யாவும் விஜய் சேதுபதியும் தேவைப் படுகிறார்கள். அவர்களை வைத்து ஒரு ஜனநாதனின் படத்தைத்தான் நான் இயக்கப்போகிறேன். நாயகி கார்த்திகாவின் தேர்வும் அப்படித்தான். எனக்கு தமிழ் நன்றாக பேசும் நாயகியாக இருக்க வேண்டும். அவரால்தான் என் கதையை முழுக்க உணர்ந்து பிரதிபலிக்க முடியும் என்று தோணும். கதைக்குத்தேவையான தென்னிந்திய லுக், கலர், உயரம், உடல்மொழி எல்லாமும் அந்தப் பெண்ணிடம் இருந்தது. நம்ம ஆனந்த் இயக்கிய ’கோ’ வெற்றிப்படத்தின் நாயகி. இதெல்லாம் போதாதா. அப்படியும் ஒவ்வொரு முறையும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளன். 


              #இவ்வளவு வேலைகளுக்கு இடையே தயாரிப்பாளர் பொறுப்பு உங்களுக்கு அவசியம்தானா?


               
              எல்லாத்துக்கும் ஒரு சுதந்திரம் இருந்தால் சிறப்பாக அமையும் இல்லையா. என்னுடைய கிரியேட்டி விட்டி சுதந்திரத்திற்காக இந்த தயாரிப்பாளர் அணிகலனை எடுத்து அணிந்திருக்கிறேன். முதல் காப்பி மட்டும் நான் ஷூட் செய்கிறேன். அதுவும் நான் நினைக்க விரும்பிய விதத்தில் படைப்பு அமைய வேண்டும் என்பதற்காக. அவ்வளவுதான். மற்றபடி எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இங்கே இடம் தேவையில்லை. இயக்குநர் மணிரத்னம் இன்றைக்கும் இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறாரே. அவரும் இந்திய அளவில் பேசப்படுகிறாரே. ஆகவே, படைப்பு சுந்தந்திரத்திற்காக தாரளமாக ஒரு இயக்குநர் அந்த வேலையை தொடரலாம். 


              #ஷூட்டிங் எப்போது?


               
              தை 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம். இவ்வளவு நாட்களாக குலுமணாலியில் பனிப்பொழிவுக்காக காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம். சென்னையை களமாகக்கொண்டு ஏறக்குறைய இந்தியா முழுக்க ஷூட் செய்யவிருக்கிறோம். குலுமணாலியில் ஷூட்டிங் முடித்து பொக்ரான் வழியே ஜெய்ப்பூர், பின் அங்கே இருந்து ஜெய்ஷால்மர் பாலைவனம் வரைக்கும் பயணம் தொடர்கிறது. 


              thanx - tamil hindu

              Wednesday, October 02, 2013

              இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா விமர்சனம்

               

              ஹீரோ  நெம்பர் 1 அஸ்வின்  பிரைவேட் பேங்க்ல மார்க்கெட்டிங்க் ஸ்டாஃப்.ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து சரக்கு அடிச்ச நேரம் போக  ஆஃபீஸ் ஒர் க் பண்ணுவாரு , அது போக மிச்சம் இருக்கும் நேரத்தில் ஸ்வாதியை லவ்வுவாரு . காதலி கிட்டே வாய்க்கு வந்த படி பொய் பேசுவாரு . இவர் ஒரு சந்தர்ப்பத்துல சரக்கு அடிச்சுட்டு ஒரு விபத்துக்கு காரணகர்த்தா ஆகிடறாரு . அடி பட்ட பொண்ணுக்கு அரிதான ரத்த வகை இப்போ தேவை . அஸ்வின் தான் பொறுப்பு . இது  ஒரு டிராக் 


              ஹீரோ  நெம்பர்  2  விஜய் சேதுபதி .இவரும் சரியான சரக்கு பார்ட்டி . எதிர் வீட்டு நந்திதாவை சின்ன  வயசுல  இருந்தே லவ்வறாரு . இவர் டார்ச்சர்  சிம்பு நயன் தாராவை , சல்ன்மான் கான் ஐஸ்வர்யாராயை   செஞ்ச  டார்ச்சர்களை  விட பல மடங்கு அதிகமாகவே   அவரை உள்ளூர வெறுக்க ஆரம்பிக்கும்  நந்திதா  ஒரு கட்டத்தில்  ஒரு  உயிரைக்காப்பாற்ற  அவர்  ரத்தம் தேவை  என்றதும்  உதவ தூண்டுகிறார் , இது  இன்னொரு டிராக் 



              ஒரு பேட்டை  ரவுடி , அவனோட சம்சாரம்  செம கில்மா பார்ட்டி , குமுதா  டீச்சர்  மாதிரி அது என்ன பண்ணுது , புருஷன்  இல்லாம   வேற  2 பேரை அட்டர் டைம் ல வெச்சிருக்கு., தன் கள்ளக்காதலர்கள் 2 பேரையும்  தூண்டி  விட்டு  தன்  புருஷனையே கொலை பண்ண வெச்சிடுது. கொலையாளிங்க   2 பேரும்   சைக்கிள் ல அலைஞ்சிட்டு  இருக்காங்க , இது 3 வது  டிராக்

               மேலே  சொன்ன  3 டிராக்  கதையையும்   ஆய்த எழுத்து  மணி ரத்னம்  மாதிரி  எப்படி  இணைச்சு  கதை  சொல்றார் இயக்குநர்  என்பதே  மிச்சக்கதை . 


              ஜீவாவை வைத்து  ரவுத்திரம் என்ற   சுமாரான ஆக்சன்  படம்  கொடுத்த  இயக்குநர்   முழுக்க முழுக்க காமெடியில்  கலக்கி  இருக்கிறார் . அவருக்கு  ஒரு ஷொட்டு . திரைக்கதைக்கு  ரொம்பவே  மெனக்கெட்டு  இருக்கிறார் . பாராட்டுக்கள் 


               அஸ்வின்  தான்  ஹீரோ . ஆள்  படு ஸ்மார்ட் . காலேஜ்  பெண்கள்  , டீன் ஏஜ் பெண்கள் அனைவருக்கும், பிடிச்ச முகம் . நடிப்பும்  நல்லா  வருது .  காமெடி டயலாக் டெலிவரி  , டைமிங்க் சென்ஸ்  , லவ்வருடன் ஊடல் என   எல்லா ஏரியாக்களிலும்  இவர் பாஸ் மார்க்கைத்தாண்டி வாங்கி விடுகிறார் சர்வ சாதாரண்மாக .. சபாஷ் 



              விஜய் சேதுபதி  இதில்  செகண்ட்  ஹீரோ தான் . தொடர்ந்து  4 வெற்றிப்படங்கள்  கொடுத்து  கோடியில் சம்பளம் வாங்கும்  ஹீரோ இது போல தனக்கு  அதிக முக்கியத்துவம்  இல்லாத  கேரக்டர் என்றாலும்  தயங்காமல் ஒத்துக்கொண்ட   மனசுக்கு  ஒரு சலாம் . மனிதர் பின்னிப்பெடல் எடுத்து  விட்டார் . 



              ஓப்பனிங்க்கில் பசுபதி யுடன் பஞ்சாயத்து பேசும் காட்சியில்  , நந்திதாவை  கலாட்டா  செய்வது  , பட்டி மன்ற  ராஜாவுடன் மல்லுக்கு  நிற்பது  என  இவர் திரும்பிய பக்கம் எல்லாம் சிக்சர்களாக அடித்துத்தள்ளுகிறார் . வளர்ந்து  வரும்  ஹீரோக்கள்  , வளர்ந்த ஹீரோக்கள் இவரிடம் கற்க வேண்டியவை ஏராளம் 



              நந்திதா  வுக்கு   சேதுபதியை வெறுப்பது  , பின்  உள்ளூர விரும்புவது என   காதல் பறவை கேரக்டர் . ஓக்கே , பாஸ் மார்க்  வாங்கி  விடுகிறார் 


               ஸ்வாதி  பளிச்  முகத்துக்கும்  , அழகிய  உதட்டுக்கும்  இவர்  ஒரு  முன் உதாரணம் . அலை பாயும்  கூந்தலுடன்  , மிக கண்ணியமான  ஆடைகளுடன் இவர் வரும் காட்சிகள் எல்லாமே   அருமை .  காதலருடன்  ஊடல்  கொள்ளும் காட்சிகள் காதலர்களை கவரும் 



              மும்பை எக்ஸ்பிரசில் காமெடியில் கலக்கிய  பசுபதிக்கு  இதில்  தாதா கேரக்டர் , சுகர் பேஷண்ட்டான இவர் அந்த காதல் பஞ்சாயத்து காட்சியில் தியேட்டர்  சிரிச்சு மாளலை . 

               அந்த  கில்மா  லேடி  சோ க்யூட் . அவர் வரும் காட்சிகள் எல்லாம்  பின்னணியில்  பழைய பாட்டு  இசை பி ஜி எம்மாக வருவது  செம காமெடி . அவரது கள்ளக்காதலர்கள் இருவரும்  பண்ணும் கூத்துகள்   செம  கலக்கல்  ரகம் . விழுந்து  விழுந்து  சிரிக்க வைக்கிறது  


               


              இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



              1.  என் வீட்டில்  நான் இருந்தேனா? எதிர்  வீட்டில் அவள்  இருந்தாளா   பாட்டு, ஏன் என்றால் உன்  பிறந்த நாள்  என  2 பாட்டுக்கள் செம  ஹிட் ரகம் . மீதி  2 பாட்டும்   ஓக்கே  ரகம் . குறிப்பா  அந்த   குடி பாட்டு  தியேட்டரில்  செம அப்ளாஸ் வாங்குகிறது . ( ஓக்கே ஓக்கே படத்துக்குபின்   இப்போதெல்லாம் டாஸ்மாக்கில்  சரக்கு அடிச்சுட்டு புலம்பல் காதல் [பாட்டு ஃபேஷன் ஆகி வருது 


              2.  பேங்க்  டேமேஜராக  வரும் எம் எஸ் பாஸ்கர்   ஆஃபீஸ் மார்க்கெட்டிங்க் ஸ்டாஃப்க்கு ஃபோன்  அடிப்பதும்  , கான்ஃபெரென்ஸ்  கால் போட்டு அவர்களை லைனுக்கு கொண்டு வருவதும் , அவர்கள் எல்லாரும்  ஒரே  ரூமில் சரக்கு அடிச்சுட்டு  இருப்பதை மறைக்க  நாடகம் ஆடுவதும்   கலக்கல் காமெடி . எம் எஸ் பாஸ்கர்   அஸ்வினிடம் சிடு சிடுப்பவர் , அருகில் அமர்ந்திருக்கும்  லேடி ஸ்டாஃபிடம் சிரிப்பது செம ஃபாஸ்ட்  ரீ ஆக்‌ஷன்



              3.  ஸ்வாதி   ஊடல்  கொண்டு  ஆட்டோவில்  ஏறி  தன் பின்னால  காதலன் ஃபாலோ பண்ணி வருவான் என எதிர்பார்த்து ஏமாறுவது  பின்  அவனுக்கே ஃபோன் பண்ணி ஏண்டா என்னை ஃபாலோ பண்ணலை ? என  உரிமையாய் கேட்பது  லவ் லி சீன் 


              4  நடுவுல  கொஞ்சம் பக்கத்தைக்கணோம் படத்தில் அந்த  ரிப்பீட்  டயலாக் ஹிட் ஆனதால்  அதே சாயலில்  இதிலும்  ஒரு ரிப்பிட்  டயலாக் வருது . செம காமெடி . கொஞ்ச நாட்கள்  டி வி காமெடி ஷோக்களீல் வந்து  போகும் 



              5  வ குவாட்டர் கட்டிங்க் கை நினைவுபடுத்துவது போல்  இருந்தாலும்   விஜய் சேதுபதி  ஒரு ஆஃப்க்காக அலையோ அலை என அலைவது செம காமெடி 



              6.  க்ளைமாக்ஸில் எல்லாரும் அவ்வளவு  சீரியசாக   ஹாஸ்பிடலில்  ரத்த தானத்துக்கு வெயிட்ட  விஜய் சேதுபதி எல்லார் முன்னிலையிலும்   நந்திதாவிடம் ரொமான்ஸ் பண்ணும் காட்சி   தியேட்டரையே குலுங்க வைத்த  கலக்கல் காமெடி 


              7.  அந்த  கில்மா லேடி  - கள்ளக்காதலர்கள் டெலி ஃபோன் உரையாடல்கள்   செம கலக்கல் காமெடி . கதையின்  சீரியஸ்னெஸ்சையே தொலைத்து விட்டாலும்   இந்த காமெடி  டிராக்  ரொமப்   புதுசு  ( வடிவேல் என்கவுண்ட்டர் ஏகாம்பரமாய் வரும் போலீஸ் ஸ்டேஷன் கள்ளக்காதல் காமெடியை  நினைவுபடுத்தினாலும் ) 


              8 . கொலை செய்யப்பட்ட  ரவுடியின்  தம்பியாக வரும் புரோட்டா   சூரி  தன் அண்ணியை கையும் களவுமாக பிடிப்பதும்  , பின் அவர் காதல் வலையில்  விழுவதும்  கொஞ்சம்  முகம்  சுளிக்க வைத்தாலும்   சி செண்ட்டர் ஆடியன்ச் இடம் அப்ளாஸ் அள்ளும் 


              9  சித்தார்த்  விபின்  இசை அருமை , பின்னணி இசையிலும் ஸ்கோர் பண்ணிடறார் . நந்திதாவின் பாய் ஃபிரண்டாக  ஒரு கேர்கடரிலும் இயற்கையான நடிப்பை வழங்கி  இருக்கார் , குட் 




              இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



              1.  படத்தின்   முன் பாதியில்   மிகத்தெளீவாக  இரு காதல்  கதைகளை காமெடியோடு  சொன்ன  இயக்குநர்   பின் பாதியில்  தடுமாறியது ஏனோ ?  எல்லா கதை டிட்ராக்கையும்  எப்படி இணைப்பது   என்ற   இடியாப்பசிக்கலில் இயக்குநர்  தடுமாறி விட்டாரே > 


              2. எப்போ பார்த்தாலும்  சரக்கு சாப்பிடும்   ஒரு ஆள்  ரத்த தானம் செய்ய தகுந்த ஆளா?  ரத்த தான விதிப்படி  ரத்த தானம்  கொடுக்கும்  முன் அவன் குடிச்சிருக்கக்கூடாது என்ற விதியை  ஃபாலோ  செய்த இயக்குநர்  ஒரு செயின் ட்ரிங்க்கர்  ரத்த தானம் செய்ய முடியாது என்ற விதியை மறந்தது ஏனோ ? 


              3  டேமேஜர்   ஸ்டாஃபிடம்  கிராஸ் செக் செய்ய எதுக்கு கான்ஃபிரன்ஸ் கால் போடனும் ? நீ எங்கெப்பா   இருக்க்? கஸ்டம்ர்  வீட்டு லேண்ட் லைன்  நெம்பர் சொல்லு என கேட்டு அந்த நெம்பருக்கு கூப்பிட்டால் மேட்டர்  ஓவர்  


              4  எதிர்  வீட்டில்   லவ் டார்ச்சர் செய்யும்  விஜய் சேதுபதியிடம் இருந்து  தப்பிக்க பட்டி மன்ற  ராஜா குடும்பம்  ராத்திரியோட ராத்திரியா  வீட்டை காலி பண்ணிட்டுப்போய்ட்டா   விஷயம்  ஈசியா  முடிஞ்சிடும் , ஏன்  பல வருசமா அங்கே இருக்கனும் ? சொந்த  வீடா  இருந்தாத்தான்  சிக்கல் , வாடகை  வீடுதானே  ? காலி பண்ணிடலாமே? 


              5  அஸ்வினை டேமேஜரிடம்  போட்டுக்குடுக்கும்  துரோகியாக  ஒரு மலையாளியைக்காட்டியது உள்  நோக்கம் கொண்டது . இதே போல்  சேரன் படத்திலும் சீன் வரும் . தேவையற்ற இன  விரோதத்தை  இது  ஏற்படுத்தும் இதே படம் மலையாளத்தில்  டப் செய்யப்பட்டால்  சங்கடம் தானே ?  எனவே முடிந்த வரை   இந்த மாதிரி  துரோகி கேரக்டர் என்ன இனம் ? என்ன ஜாதி என்பதை  டீட்டெய்லாக சொல்லாமல்  விடுவதே நல்லது 






              மனம் கவர்ந்த வசனங்கள்



              1. டேய்.உன் செல் போன் இன்பாக்ஸ் எப்பவும் க்ளீனா இருக்கே எப்டி? அது என்ன டாய்லெட்டா? அடிக்கடி க்ளீன் பண்ண? உன் கிட்டே ஏதோ தப்பு இருக்கு 



              2 . வாழ்வை சுவராஸ்யம் ஆக்க ரெண்டே வழி 

              1 அழகான பொண்ணை லவ் பண்ணுவது

               2 மார்க்கெட்டிங் லைன் ல ஜாப்


              3 துப்பட்டாவை சரி பண்ணிக்கோன்னு சொன்னவனுக்கு தாங்க்ஸ் சொன்னேன்.அது தப்பா.டேய் என்னை நல்லாப்பாரு.நான் துப்பட்டாவே போடலை


              4  என்னை அதிகமா அழ வெச்சதும் நீ தான்.அதிக முறை சிரிக்க வெச்சதும் நீ தாண்டா


              5 டேமேஜர்.-நீ கஸ்டமர் ப்ளேஸ்ல தான் இருக்கே னு நான் எப்படி நம்ப? அவர் கிட்டே போனை குடு. 



              சாரி சார் .அவருக்கு நாக்குல பிராக்சர் 


              6  தாதா - நான் தான் அண்ணாச்சி பேசறேன் .



               நந்திதா - அம்மா.போன் உனக்குத்தான்.நம்ம மளிகைக்கடை அண்ணாச்சி பேசறார் 


              7 லவ் மேட்டரு.பீல் ஆகிட்டாப்ல. ஆப் சரக்கு அடிச்சா கூல் ஆகிடுவாப்ல # சூப்பர் ஹிட் ஆகப்போகும் ரிப்பீட் டயலாக் 


              8.  இன்னொரு  வீட்டில் வாழப்போற பொண்ணு அது 

               நோ நோ  ஸ்ட்ரைட்டா என்  வீட்டுக்குத்தான்  வரப்போகுது 



              9  ஸ்வேதா - என்னைப்பத்தி எந்த டீட்டெய்லும்  உனக்குத்தெரியலைடா , உன்னைப்பற்றி சொல்லட்டா , நீ செஸ்ட்  முடியை ட்ரிம் பண்ணி இருக்கே  , போதுமா? 

               10  ஆமா , தாத்தா  ஃபோட்டோ வெச்சியே , அதுக்கு பொட்டு வெச்சியா? 


               டேய் , தாத்தாவை  விடு , நீ என்னை மதி போதும் 


               உன் ஃபோட்டோவுக்கு பொட்டு வெச்சிடவா? 



              11 குமுதா  வீட்டு வாசல்ல விளக்கு வெச்சு  கும்முன்னு  இருக்கு, நீ ஏம்மா கம் முன்னு  இருக்கே?  கேட்டா உம்முன்னு ஆகிடறே ? 


              12  எல்லாரும்  மப்புல இருக்காங்க , எப்படியா விசாரிப்பது ?

               சார் , இவனுங்க தான் உண்மை பேசுவ்சாங்க 



              13  டேய் , கொலையாளீ எப்படி  இருப்பான் ? 

               ஆள்  ஹைட்டு , வெயிட்டு , ஒயிட்டு , ஃபுல் டைட்டு 


              14  அவன் ஓவரா பேசறான் , அவனை  ஜட்டியோட லாக்கப்ல உட்கார வை 

               அய்யய்யோ இன்ஸ்பெக்டர் , நான் ஜட்டியே போடலை


              15  எதுக்கு சைக்கிள் ல போறோம் ? 


               பைக்கை எடுத்துட்டு வந்தா போலீஸ் நெம்பர்  பிளேட்டை வெச்சு கண்டு  பிடிச்சுடுவாங்க , அதான் சைக்கிள் அதுவும்  திருட்டு சைக்கிள் 



              16  இப்போ வேணாம் , இருட்டட்டும் 

                இப்ப்வே மணி மிட் நைட்  12 ஆச்சு , இன்னும் எதுக்கு  இருட்டனும் ? 



              17  அவன்  ஒயின் ஷாப்லயா வேலை செய்யறாரு ? 

               அவனாலதான்  ஒயின் ஷாப்ல எல்லாரும்  வேலை செய்யறாங்க 


              18  ஏன்   நைட் டைம்ல  கூலிங்க் கிளாஸ் போட்டிருக்கே? 


               ஆம்பளை  அழக்கூடாது , அழுதா  வெளில  தெரியக்கூடாது  , அதான் 


               அது சரி , கிளாஸ் ஏன் ஒன் சைடு உடைஞ்சிருக்கு ?

               ஏன்னா  என்னோடது  ஒன் சைடு லவ் இல்லையா? அதான்  



              19  உன்  நல்ல மனசுக்கு நல்ல சரக்காவே  கிடைக்கும் 


              20  எல்லாரும்  லவ்வர் பேரை நெஞ்சுல பச்சை குத்துவாங்க ஆனா இவன் 


               இவன் ? 


               நெத்தில   குத்தி இருக்கான்  



              21   ஜெயில்ல   ஃபோர்க் , ஸ்பூன் எல்லாம் தர மட்டாங்கடா 


               அடேய் , அதாடா முக்கியம் ,. நான் எவ்ளவ் சீரியசா பேசிட்டு இருக்கேன் ? 



              22  கில்மா லேடி - உங்கண்ணன் சட்டை உங்களுக்குத்தான் பொருத்தமா  இருக்கு 



              23  அவ செத்ததுக்கு இவன் ஏன் அழறான் ?


               அவன்  ரொம்ப சாஃப்ட்டான ஆள் சார் , யார் செத்தாலும் அழுவான் 


              24 . ஹாஸ்பிடலில் வாசலில்  - ஏய் இந்தா இந்த  ஹார்லிக்சில் நீ கொஞ்சம்  குடி , மீதியை நான்  கொஞ்சம்  குடிக்கிறேன் 

               நமக்கு  என்ன ஃபர்ஸ்ட் நைட்டா  நடக்குது ?


               

              படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


              1.ஓப்பனிங்கிலேயே பசுபதி ,ரோபோ சங்கர் ,விஜய் சேதுபதி அலப்பறைகள் 


               2 க்ளைமாக்சில் விஜய் சேதுபதியின் கலக்கல் காமெடியில் தியேட்டர் அதிர்ந்தது# இஆபா



              காலாவதி ஆகிவிட்ட கே ஆர் விஜயா ,திருமதி ஆகிவிட்ட சினேகாவிடம் இருந்து புன்னகை அரசி பட்டத்தை ஸ்வாதிக்குத்தரலாம் 






              ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 45


               குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -நன்று

              ரேட்டிங் =  3.25 / 5


              சி பி கமெண்ட் -இஆபா - முன் பாதி கலக்கல் காமெடி .பின் பாதி மொக்கை காமெடி - விகடன் மார்க் = 45, ரேட்டிங் = 3.25 / 5 .ஏ சென்ட்டரில் ஹிட்.  வித்தியாசமான   காமெடி படங்களை ரசித்துப்பார்ப்பவர்கள், விஜய் சேதுப்தி ரசிகர்கள்   ரசிச்சுப்பார்ப்பாங்க  . பெண்களும் விரும்பிப்பார்க்கும்படி தான் இருக்கு . நெய்வேலி மகா லட்சுமியில் படம் பார்த்தேன் . தியேட்டர்  சுமார் தான்