Showing posts with label முத்துராமன். Show all posts
Showing posts with label முத்துராமன். Show all posts

Sunday, December 27, 2015

சினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-எஸ்பி.முத்துராமன்

  • சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
    சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
  •  ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
    ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
‘துணிவே துணை’ படத்தில் அபர்ணா நடிக்கும் ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும்’ என்ற பாடல் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. அந்தப் படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவின் உதவியாளராக கலா பணியாற்றினார். மிகவும் சுறுசுறுப்பு. நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். அவர் தான் இன்றைக்கு உலகப் புகழ் பெற்ற ‘மானாட மயிலாட’நிகழ்ச்சியை நடத்தி வருபவர் என்பது எங்களுக்குப் பெருமை.
திரையுலக முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் வழித் தோன்றல் ரகுராம் மாஸ்டர், அவர் மனைவி கிரிஜா, அவருடைய தங்கைகள் கலா, பிருந்தா ஆகியோரும் நடனக் கலைக்காக சேவை செய்தவர்கள், செய்கிறவர்கள். அந்தக் கலை குடும்பத்தை மனமாறப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இன்று சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக அசத்தி வரும் அழகு, நான் இயக்கிய ‘துணிவே துணை’ படத்தில் அறிமுகமானவர். அப்போது அவரை சண்டைக் காட்சிகளில் பங்குபெற வைத்தோம். சிறந்த சண்டை வீரராக பல படங்களில் பங்கு பெற்றார். உள்ளுக்குள் இருந்த திறமை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று சொல்வதைப் போல இன்றைக்கு சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். அதற்குக் காரணம் முயற்சி திருவினையாக்கும் என்பதே. நடிக்க வருகிறவர்கள் சின்ன வேஷம், பேரிய வேஷம் என்று பார்க்காமல் கிடைத்த வேடத்தில் திறமையைக் காட்டி முன்னேற வேண்டும். துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் பின்னாளில் உலகம் புகழும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆகவில்லையா?
 - அழகு
‘துணிவே துணை’ படத்தில் அசோகன் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத் தில் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அசோகனையும், வில்லன்களையும் ஹெலிகாப்டர் துரத்துகிற மாதிரி காட்சி. அப்போது அசோகன், ‘ஹெலிகாப்டர் கீழே வரும்போது எனக்கு கைக்கு எட்டும் தூரத்தில்தான் வருகிறது. நான் பிடித்து விடட்டுமா? என்றார். ‘ஐயையோ… அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். ஹெலிகாப்டர் கவிழ்ந்துவிடும்’ என்று நான் கத்தினேன். ஹெலிகாப்டரை, கார் மீது இடிக்க வைத்து ரிஸ்க்காக பல ஷாட்களை எடுத்து ஒருவித த்ரில்லோடு படமாக்கினோம்.
அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மஞ்சப் பையுடன் வந்த துளசிராம் தயாரிப்பாளர் ஆனார். அடுத்தப் படத்தையும் தயாரிக்க முன் வந்தார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அப்போது துளசிராம் தயாரிப்பாளர் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு, சில நிபந்தனைகள் போட்டுக்கொள்ளலாம் என்றார். ‘முதல் படம் எப்படி எடுத்தோமோ, அப்படியே எடுப்போம். நிபந்தனைகள் என்றால் எங்களை விட்டுவிடுங்கள்’ என்று நங்கள் ஒதுங்கிக்கொண்டோம். சினிமா என்பது கடல். ஒரு படத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட முடியுமா?



நடிகர்கள் முத்துராமன், ஜெய்சங்கர் இருவரும் நட்பு அடிப்படையில் எங்கள் படங்களில் எப்போதும் நடிக்கத் தயாராகவே இருந்தார்கள். தயாரிப்பாளர் யார்? கதை என்ன என்று கேட்கவே மாட் டார்கள். அட்வான்ஸ் என்பது பணமாக இல்லை, வாய் வார்த்தையில் மட்டும் தான். அவர்களது டைரியை எடுத்து, ‘10 நாட்கள் எஸ்பி.எம் படம்’ என்று தேதி குறித்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். நான் குறிப்பிட்ட தேதிகளை யாருக்கும் ஒதுக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் இப்படி ஒரு புரிதலோடு இருந்தது எங்களுக்குப் பெரிய பலமாக இருந்தது. இதெல்லாம் வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் இருக்கும் நட்பு அடிப்படையில் செய்தது.


அடுத்து நாங்கள் எடுத்தப்படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘காலங்களில் அவள் வசந்தம்’. முத்துராமன், ஸ்ரீவித்யா, சந்திர கலா, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர். ஒரு பெண், தன்னைவிட படிப் பில், அந்தஸ்தில், அழகில் பெரிய இடத்து மாப்பிள்ளைதான் வேண்டும் என்று தட்டிக்கழித்து முதிர்கன்னியாகி விடுவார். அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். ஸ்ரீவித்யா எந்தக் கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்கக்கூடிய நல்ல நடிகை. எங்கள் குழுவில் நட்போடு பழகினார்.
என் மனைவி இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறும்போது அவர் அழுத அழுகைக்கு, நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. அவர் உடல் நலமில்லாமல் கேரளாவில் இருக்கும்போது அவரை நான் பார்க்க விரும்பினேன். கமல் பார்த்துவிட்டு வந்த தாக செய்தி வந்தது. கமலிடம் போய் நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். கமல், ‘வித்யா யாரையுமே பார்க்க விரும்பவில்லை. நீங்கள் போய் பார்த்தால் அவர் வேதனை அதிகமாகுமே தவிர உடல்நலம் குணமாகாது’ என்று கூறினார். சில நாட்களிலேயே அவர் இறந்த செய்தி வந்தது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அறிந்த எனக்குக் கண் கலங்கியது. அவரை பார்க்கக்கூட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கும் இருக்கிறது.



‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யாவுக்குத் தங்கையாக சந்திர கலா நடித்தார். அவருக்கும் முத்து ராமனுக்கும் திருமணம் நடக்கும். முதிர் கன்னியான ஸ்ரீவித்யா தன் நிலையை நினைத்து மனநிலை பாதிப்புக்குள்ளாவார். அதைக் கண்ட தங்கை சந்திரகலா தன் அக்கா குணமடைய தன் கணவனையே அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வார்.



திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடு செய்யும் நேரத்தில் மீண்டும் அக்காவுக்கு மனநிலை பாதிக்கப்படும். தந்தை அசோகன் மகள் ஸ்ரீவித்யாவை ஊருக்கு அழைத்துச் செல்வார். தன்னைப் பார்த்து அழும் அசோகனிடம் ஸ்ரீவித்யா, ‘தங்கை தனது கணவரைத்தான் எனக்குக் கணவராக்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. தங்கையின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல்தான் பைத்தியமாக நடித்தேன்’ என்று கூறுவார்.



இளம்பெண்கள் ‘தனக்கு வரும் கணவன் இப்படி இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும்’ என்று கனவு கண்டு, வரும் எல்லா மாப்பிள்ளைகளை யும் ஒதுக்கினால் முதிர்கன்னிகளாக ஆக வேண்டியிருக்கும் என்பதை இந்தக்கதையின் மூலம் உணர்த்தினோம். இந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தக் கதையை எங்களிடம் உரிமை வாங்காமலேயே ஹிந்தியில் எடுத்து அந்தப் படம் வெற்றி பெற்றது. அந்த விஷயமே எங்களுக்குக் காலம் கடந்துதான் தெரிந்தது. அதனால் அவர்களோடு போராட முடியவில்லை. கதையின் உரிமையை வாங்காமல் மற்ற மொழியில் படம் எடுப்பது தவறு. அது படைப்பாளிகளின் உழைப்பை ஏமாற்றுவதாகும். உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.



அன்று ஏரியில் வீடு கட்டினோம். இன்று வீட்டுக்குள் ஏரி. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம். இந்த வெள்ளத்தில் இளைஞர்கள் மழையில் நின்று கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது, உதவிகள் செய்தது வருங்காலத்தில் அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தந்தது.



பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மனிதநேயமுள்ள அனைவரையும் வணங்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம். வடியும் கண் ணீரைத் துடைத்துக்கொண்டு அடுத்த வாரம் நான் தூக்கி வளர்த்த உலக நாயகன் கமல் பற்றி எழுதப் போகிறேன். அது எந்தப் படம்? எந்த சூழலில் அமைந்தது? அடுத்த வாரம் பார்ப்போம்.
இன்னும் படம் பார்ப்போம்...

தஹிந்து

Thursday, October 29, 2015

சினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்!=எஸ்பி.முத்துராமன்

அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து மூன்றாவது முறை யாக படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்தத் தயாரிப் பாளர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பசாமி. அந்தப் படம் ‘ரிஷிமூலம்’. சிவாஜிகணேசனுடன் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் உள் ளிட்டவர்கள் இதில் நடித்தார்கள். இயக்குநர் மகேந்திரன் சார் படத்துக்கு கதை - வசனம் எழுதினார்.
என்னுடன் கொண்ட நட்பு முறையில் நான் இயக்கிய கமல், ரஜினி நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’, கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’, பார்த்திபன் நடித்த ‘தையல்காரன்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதி தந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு ‘முள்ளும் மலரும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்தவர். சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர். நான் இயக்கிய வெற்றிப் படங்களில் அவருடைய பங்களிப்பும் உண்டு.
இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ என்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அப் போது கே.பாலசந்தர் சார் ரஜினிகாந்திடம் ‘‘உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?’’ என்று கேட்டார். ரஜினி சொன்ன பதில்: இயக்குநர் மகேந்திரன். இது மகேந்திர னுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு.
கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாததால் ஏற் படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம்தான் ‘ரிஷி மூலம்’. கணவன்- மனைவி கதாபாத் திரங்களில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா வும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகன். படத்தில் கே.ஆர்.விஜயா தன் பிடிவாதத்தால் கணவனிடம் கோபித் துக்கொண்டு 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்வார்.
அத்தனை ஆண்டுகால இடைவெளிக் குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தை செண்டிமெண்டாக நெகிழ்ச்சியோடு படமாக்க திட்டமிட் டோம். அண்ணன் சிவாஜியிடம், ‘‘நீங்கள் இருவரும் சந்திக்கும்போது வசனமே இருக்காது. முக பாவனையை மட்டும் குளோஸ் அப் காட்சிகளில் எடுக்கப் போகி றேன். ஒருவரது கண்களை இன்னொரு வரது கண்கள் பார்க்க வேண்டும். இருவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் எடுப்பேன். நீங்கள் சொல்ல வரும்போது வாய் பேசத் துடிக்கும். விஜயா அவர்களின் காதுகள் கேட்க காத்திருக்கும். உங்கள் முகத்தில் பேசும் பாவனை, விஜயா முகத்தில் பேசுங்கள் என்ற பாவனை… இப்படி குளோஸ்அப் பாவனைகளில் காட்சியைச் சொன் னேன். சிவாஜிக்கும், புன்னகை அரசிக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! கண்கள் பேசின… உதடுகள் துடித்தன… முக பாவத்திலேயே நடித் தார்கள். வசனமே இல்லாமல் மூன்று, நான்கு நிமிடங்கள் நகரும் அந்தக் காட்சி பாராட்டுகளைப் பெற்றது.
சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா இருவரும் சமாதானம் ஆன பிறகு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இளையராஜாவின் துள்ளல் இசை; ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்… சிவாஜியும், விஜயாவும் வெளுத்துக் கட்டினார்கள். அவர்களைப் போல காதலர்கள், திருமண தம்பதிகள்கூட அப்படி ஓர் உணர்வை காட்ட முடியாது.
அந்தப் பாடலை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதத்தின் ஊரான கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் எடுத்தோம். பசுமை சூழ்ந்த அந்த மலைப் பகுதிகளில் படமாக்க திட்ட மிட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இடங்களைத் தேர்வு செய்தோம். அதை சிவாஜி அவர்களிடம் சொன்னபோது ‘‘முத்து… அண்ணனை ரொம்ப அலைய விடாதீங்க. நான் என்ன உங்கள மாதிரி ஓடி ஆடுறவனா? மலை மேல எல்லாம் ஏறாம கீழேயே எடுத்து முடிப்பா…’’ என்றார்.
அந்தப் பாடலை படமாக்க தொடங் கினோம். முதலில் கீழே இரண்டு, மூன்று ஷாட்களை எடுப்பது, அப்படியே 10 அடி தள்ளிப்போய் அங்கே சில ஷாட்களை எடுப்போம். இந்த இடத்தில், அந்த இடத் தில் என்று மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போய் மலை ஏறிய களைப்பே தெரியாமல் மலை உச்சிக்கு அண்ணனை அழைத்துப் போய்விட்டோம். மலை உச்சியில் இருந்து அந்த இடத்தை பார்த் தவர், ‘‘அருமையான இடம். எப்படியோ என்னை மலை உச்சிக்குக் கொண்டு வந்து, நீ எடுக்க நினைச்ச காட்சியை எடுத்து சாதிச்சுட்டே’’ என்றார். இதுதான் கதாநாயகன் போக்கில் போய் சாதித்துக்கொள்வது என்பதாகும்.
அப்பா, அம்மா, மகன் சென்டிமெண்ட் காட்சிகள், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சக்ரவர்த்தி நடிப்பு, மகேந்திரன் சார் வசனம், இளையராஜா இசை, கவியரசர் பாடல் இப்படி எல்லாம் இணைந்து அந்தப் படம் வெற்றி அடைந்தது. படத்தின் 100-வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினோம். விழா மேடையில் தயாரிப்பாளர் கருப்பசாமி, அண்ணன் சிவாஜிக்கு வைர மோதிரம் அணிவித்தார். ‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டே’’ என்ற தோரணையில் அண்ணன் சிவாஜி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையே எனக்கு வாழ்த்தாக இருந்தது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கருப்பசாமியைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். சரியாக திட்டமிட்டு ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். படத்தில் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்த உடனே என்னிடம் வந்து, ‘‘இதுவரைக்கும் இத்தனை லட்சம் செலவு’’ என்று எழுத்துபூர்வமான கணக்கை காட்டுவார். ‘‘ஒவ்வொரு செட்யூலுக்கும் என்ன செலவாகிறது என்பது ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டும்’’ என்பார். இது அவசியமான ஒன்று. சினிமா எடுக்கும்போது செலவை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு எடுத்தால் நிச்சயம் நஷ்டம் வராது. நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களும் எடுத்தோம், பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தோம். எல்லாவற்றுக்கும் சரியான திட்டமிடல் இருந்ததால் படம் பட்ஜெட்டுகளுக்குத் தகுந்த மாதிரி எடுக்க முடிந்தது.
நடிப்புக்கு இலக்கணமான அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு தன் வரவு- செலவு பற்றி ஒன்றும் தெரியாது. நடிப்பு… நடிப்பு… நடிப்பு… இதுதான் அவரது சுவாசம். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது சகோதரர் வி.சி.சண்முகம்தான் முறையே சேமித்து முதலீடு செய்து வைத்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் சிவாஜிகணேசன் குடும் பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி, துஷ்யந்த், விக்ரம்பிரபு, ஹரிசண்முகம் எல்லோரும் ஒற்றுமை யுடன் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. கூட்டுக்குடும்ப பெருமையை உணர சிவாஜி குடும்பத்தைப் பாருங்கள்.
இனி, நீங்கள் ஆர்வத்தோடு எதிர் பார்க்கும் கட்டத்துக்கு வரவிருக்கிறேன். என் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி நடிக்க வந்தார்? அவரை வைத்து 25 படங்கள் இயக்கியது எப்படி? உலகநாயகனுக்கு 10 படங்கள் இயக் கிய அனுபவங்கள் என்னென்ன? அவர்கள் இருவருக்கும் எனக்கும் உள்ள உறவு முறைகள்? நான் இயக்கிய 45 படங் களுக்கு இசையமைத்த இசையமைப் பாளர் இளையராஜாவின் இணைப்பு என்ன? பஞ்சு அருணாச்சலத்தின் பங்கு? என் தாய் வீடான ஏவி.எம்மில் எனக்கு கிடைத்த மரியாதை என்ன… என்பதைப் பற்றியெல்லாம் சுவையாக சொல்லப் போகிறேன்.
படிக்கத் தயாராகுங்கள்.
- இன்னும் படம் பார்ப்போம்…

த்ஹிந்து