Showing posts with label நிறுவனர். Show all posts
Showing posts with label நிறுவனர். Show all posts

Friday, November 13, 2015

இளைஞர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சொன்ன யோசனைகளில் 5

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!
யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
திராளியைக் கலாய்க்கிறதுன்னா நமக்கு அவ்ளோ ஜாலி, சந்தோஷம்! ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும்தான் பார்க்கிறோமேஞ் எத்தனை ஸ்டேட்டஸு, எத்தனை மீம்ஸு, எத்தனை ஜிஃப் இமேஜஸு! எல்லாம் எதிராளியை நக்கல், நையாண்டி பண்றதாவே இருக்கு! 
ஒருத்தர் பண்ற தப்புகளை காமெடி கலந்து சொல்றது ஒண்ணும் தப்பில்லை. அதே நேரம், நமக்கு நாமே விமர்சனம் பண்ணிக்கத் தெரிஞ்சிருக்கணும். நம்ம தப்பை உணரவும் ஒப்புக்கவும் ஒரு மனசிருக் கணும். தப்பு பண்றவன் மனுஷன்; தப்பு பண்ணதை ஒப்புக்குறவன் பெரிய மனுஷன்.
படகுல பிரயாணம் பண்ணின ஒரு பெரிய படிப்பாளி, படகோட்டிகிட்ட, 'உனக்கு வேதாந்தம் தெரியுமா, தத்துவ ஞானம் தெரியுமா, இலக்கியம் தெரியுமா?'ன்னு கேட்டுக்கிட்டே போனார். அவன் ஒவ்வொண்ணுக்கும் தெரியாது, தெரியாதுன்னு சொல்லவும், 'அடடா! நீ உன் வாழ்க்கையில கால்வாசியை வீணடிச்சுட்டியே, அரைவாசியை வீணடிச்சுட்டியே, போச்சு, உன்னோட முக்கால்வாசி வாழ்க்கை வீணா போச்சு!'ன்னு நக்கலடிச்சுக்கிட்டே வந்தாராம்.
கடைசியா அவன், 'சரி சாமி, உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'ன்னு கேட்டானாம். 'தெரியாதேப்பா’ன் னாராம். உடனே அவன், 'நான் முக்கால்வாசி வாழ்க்கையை வீணடிச்சது இருக்கட்டும் சாமி, படகுல ஓட்டை விழுந்துடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல மூழ்கப்போகுது. இப்ப உங்க வாழ்க்கை முழுக்கவே வீணா போகப் போகுதே, என்ன பண்ணப் போறீங்க?'ன்னானாம்.
உங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாது. ஒவ்வொருத்தர்ட்டயும் ஒரு டேலன்ட் இருக்கு, தலைவா!
1998, 99வாக்குல நடந்த ஒரு சின்ன சம்பவம்.
அப்போ நான் கம்ப்யூட்டர்களை அஸெம்பிள் பண்ணி விக்கிற ஒரு கடையில டெக்னீஷியனா வேலை செய்துட்டிருந்தேன். எங்ககிட்ட ஒரு மேடம் போன் பண்ணி, தன் கம்பெனிக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆர்டர் கொடுத்திருந்தாங்க. அது ரெடியானதும், அதை அவங்களுக்கு இன்ஸ்டால் பண்ணிக் கொடுக் கிறதுக்காக நான் போயிருந்தேன். இப்போ மாதிரி பிராட்பேண்ட் கனெக்‌ஷன் எல்லாம் அப்போ கிடையாது. டயல்அப் முறையில் தான் இன்டர்நெட் கனெக்ட் ஆகும். வணிக நிறுவனங்களுக்குள் கம்ப்யூட்டரின் பயன்பாடு அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மூக்கை நுழைச்சிட்டிருந்துது. மேடம் நான் வேலை செய்யறதைப் பக்கத்துல இருந்து பார்த்தபடியே, அது என்ன, இது என்னன்னு கேட்டுட்டிருந்தாங்க.
'ஓ.எஸ். இன்ஸ்டால் பண்ணியிருக்கேன் மேடம்! இது வொர்க் பண்றதுக்கு ஒரு டிரைவ் இப்ப போடணும்ஞ்'னேன். உடனே அவங்க, 'என்கிட்டேயே ரெண்டு டிரைவர்கள் இருக்காங் கப்பா. புதுசால்லாம் நீ டிரைவர் போடவேணாம்' னாங்க. எனக்கு பக்குனு சிரிப்பு வந்துடுச்சு. 'இல்லீங்க மேடம், இந்த சாஃப்ட்வேர் வொர்க் பண்றதுக்கான டூல்தான் டிரைவர்ங்கிறது. அதைத்தான் சொன்னேன்'னேன்.
அதோடு முடியலை. 'உங்க ஃபைல்ஸை இங்கே ஸேவ் பண்ணிக்கலாம்'னு விளக்கினேன். 'இல்லப்பா, ஃபைல்ஸையெல்லாம் நான் பீரோவிலேயே வெச்சுக்குவேன்'னாங்க எனக்கு மண்டையைப் பிச்சுக்கலாம்போல இருந்தது. 'அப்ளிகேஷன்ஸ்’
பத்திச் சொல்லும்போதும் தப்பா புரிஞ்சுக்கிட்டு, 'என்ன அப்ளிகேஷன்? யார் அனுப்பியிருக் காங்க?'னு ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்கஞ் நான் அப்படியே ஷாக்காயிட்டேன். 'என்ன மேடம், நீங்க நிஜமா கேக்கறீங்களா, இல்ல காமெடி பண்றீங்களான்னு எனக்குப் புரியலை'ன்னு சொல்லிட்டு, வேர்டு, டாகுமென்ட், புரொகிராம் பத்தியெல்லாம் கடகடன்னு சொல் லிட்டுக் கிளம்பத் தயாரானேன்.
கம்ப்யூட்டருக்கான தொகைக்கு செக் கொடுத்தாங்க. அதுக்கு ரிசீப்ட் எழுதும்போது, அவங்க கம்பெனி பேரைக் கேட்டேன். டக்குனு ஏதோ சொன்னாங்க. புரியலை. 'பார்டன்ஞ் மறுபடி சொல்லுங்க, மேடம்'னேன். மறுபடியும் சொன்னாங்க. அப்பவும் புரியலை. 'ஸாரி மேடம், புரியலை! ஸ்பெல்லிங்கோட சொல்லுங்க, ப்ளீஸ்!'னேன். ஸ்பெல்லிங் கோடு கம்பெனி பேரைச் சொன்னாங்க. அப்பவும் எனக்குத் தெளிவா புரியலை. தலையைச் சொறிஞ்சேன்.

'பாருப்பா, Benevolent Human Resources Private Limited - ங்கிற பேரை எவ்வளவு நிறுத்தி நிதானமா சொல்லியும், ஒரு நாலு வார்த்தை, அதை உன்னால சரியா உள்வாங்கிக்க முடியலை. கம்ப்யூட்டர் கம்பெனியில வொர்க் பண்றதால, அதன் டெக்னிக்கல் வேர்ட்ஸ் உனக்கு வேணா பழகியிருக்கலாம். ஆனா, கம்ப்யூட்டர்ங்கிறது எனக்குப் புதுசு. இப்பத்தான் அதுல முதன்முறையா பழகவே போறேன். அப்படி யிருக்கிறப்போ, அது பத்தி எனக்குத் தெளிவா விளக்காம, ஏனோதானோன்னு சொல்லிட்டு அவசரமா கிளம்பறே! இதெல்லாம்கூட இந்தம்மாவுக்குத் தெரியலையேன்னு உன் மனசுக்குள்ள ஒரு நக்கல் வேற! கஸ்டமர்கிட்ட இப்படி நடந்துக்கச் சொல்லித்தான் உங்க கம்பெனியில உனக்குச் சொல்லிக் கொடுத்தாங்களா?'ன்னு அவங்க நிறுத்தி நிதானமா கேட்டப்போ, செருப்பால அடிச்ச மாதிரி இருந்துது எனக்கு.
என் தப்பு எனக்குப் புரிஞ்சுது. புரிஞ்சுதுங்கிறதைவிட உறைச்சுதுன்னு சொல்லலாம். இன்னிக்கு 'விண்டோஸ்’னா, அது கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் குறிக்கிற வார்த்தைன்னு ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும். ஆனா, இருபது வருஷத்துக்கு முன்னால, விண்டோஸ்னா அது ஜன்னலைத்தான் குறிக்கும், இல்லையா?
அதனால, 'ஸாரி மேடம், ரொம்ப ஸாரி!'ன்னு நூறு ஸாரி கேட்டுக்கிட்டு, ஒவ்வொண்ணைப் பத்தியும் அவங்களுக்குத் தெளிவா, விளக்கமா எடுத்துச் சொன்னேன். அது மட்டுமில்லாம, என்னோட கம்பெனி இன்டர்காம் நம்பரை அவங்ககிட்ட கொடுத்து, 'கம்ப்யூட்டர் சம்பந்தமா வேற ஏதாவது சந்தேகம், உதவி தேவைன்னாலும் தயங்காம கூப்பிடுங்க மேடம், உடனே வந்து எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லித்தரேன்'னு பவ்வியமா சொல்லிட்டுக் கிளம்பினேன்.
சரிதானே ப்ரோ, நான் செஞ்சது?
 - இன்னும் பேசலாம்

பரிசு யாருக்கு?
சென்ற இதழில் கேட்டிருந்த புதிர்க் கேள்விக்கான சரியான விடை: ஏ.எம்.ரவிவர்மா. இந்தப் பெயரின் சிறப்பம்சத்தை மிகச் சரியாகச் சொன்னவர்களில் சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த உமா நடராஜன் என்ற வாசகிக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய 'மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.
சரி, அந்தப் பெயரில் அப்படி என்ன சிறப்பம்சம்? ஆங்கிலத்தில் (AMRAVIVARMA)  வலமிருந்து இடமாகப் படித்தாலும் அதே பெயர் வரும்படியான (palindrome) பெயர் அது.

இளைஞர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர்
மார்க் சக்கர்பெர்க் சொன்ன யோசனைகளில்
ஒரு ஐந்து மட்டும் இங்கே
** தடைகளை உடனே தகர்த் தெறியுங்கள். இல்லையெனில், உங்க ளால் வேகமாகச் செயல்படமுடியாது!
**  நாம் தோற்றுப்போவதற்கான ஒரே காரணம், ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்!
**  உண்மையில் நம் எல்லோரிடமுமே போதுமான புத்திசாலித்தனமும் திறமையும் இருக்கின்றன. ஆனால், நாமே அதை நம்பவில்லையென்றால், நாம் கடினமாக உழைக்கப்போவது இல்லை. பின்பு வெற்றி மட்டும் எங்கிருந்து வரும்?
**  உங்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுபவர்களோடு சேர்ந்திருங்கள். இது கொஞ்சம் குரூரமான யோசனையாகத் தோன்றினாலும், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் சென்று சாதித்து, அவர்களை அசத்த வேண்டும் என்கிற உத்வேகத்தை இது தரும்.  
**  'என்னால் செய்யமுடியும் மிக முக்கியமான ஒரு விஷயத்தைதான் இப்போது செய்துகொண்டி ருக்கிறேனா?' என்று தினமுமே ஒரு முறை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

சவால்!

புத்திசாலி நண்பர்கள் மூன்று பேர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார்கள். அவர்கள் மூவருமே இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களை இன்டர்வியூ செய்த அதிகாரி, அவர்களிடம் நான்கு தொப்பிகளைக் காண்பித்தார். அவற்றில் இரண்டு வெள்ளை நிறம்; இரண்டு கறுப்பு!
அவர் அவர்களை ஒரே திசையில் பார்க்கும்படியாக, ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு வரிசையாக நிற்கவைத்தார்.
'உங்களிடம் காண்பித்த நான்கு தொப்பிகளில் ஒன்றை உங்களுக்குத் தெரியாமல் நான் எடுத்து வைத்துக்கொண்டுவிட்டேன். மற்ற மூன்று தொப்பிகளையும் ஆளுக்கொன்றாக உங்கள் மூவரின் தலைகளிலும் வைத்திருக்கிறேன். யார் மிகச் சரியாக தன் தலையில் வைக்கப்பட்டுள்ள தொப்பி என்ன நிறம் என்று சொல்கிறாரோ, அவரே இந்த வேலைக்குத் தகுதியானவர்' என்றார். கூடவே, 'நினைவிருக்கட்டும்ஞ் உங்கள் மூவரில் எவர் ஒருவர் தவறான விடை சொன்னாலும், நீங்கள் மூவருமே தகுதி இழந்தவர்கள் ஆவீர்கள்' என்றும் சொன்னார்.
சரி, நீங்கள் சொல்லுங்கள்ஞ் வரிசையாக நிற்கும் இந்த மூவரில் யாரால் சரியான விடையைச் சொல்ல முடியும்? ஏன்? எப்படி?  
04466802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, 'ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாமே?!

- thanx- vikatan

Monday, November 18, 2013

ஆன்லைன் பிஸினஸுக்கு விளம்பரம் -அருண் அத்தியப்பன் சிறப்புப் பேட்டி (டிக்கெட்கூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.)

அருண் அத்தியப்பன், நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ticketgoose.com. (படம்: ஸ்ரீபரத்)

வேலையை விட்டுவிட்டு பிஸினஸ் ஆரம்பிப்பதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். அப்படி ஆரம்பித்த பிஸினஸ் ஒரு கட்டத்தில் தோற்றுப்போய் மீண்டும் வேலைக்குப் போகும் சூழல் வந்த பிறகு திரும்பவும் பிஸினஸ் ஆரம்பிப்பதற்கு, பல மடங்கு துணிச்சல் இருந்தால்தான் அது சாத்தியம். அப்படிப்பட்டவர்தான் டிக்கெட்கூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அருண். சமீபத்தில் டை(tie- the indus entrepreneurs) விருது வாங்க வந்திருந்த அவரிடம் ஒரு நீண்ட பேட்டி.



முதல் பிஸினஸ் எப்படி தோற்றது என்று கேட்பதற்கு முன்பு, அவருடைய ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பதை அவரிடமே கேட்டோம்?



நாமக்கலில் பிறந்தவன் நான். பிறகு கோவையில் இருக்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். படித்தது மெக்கானிக்கலாக இருந்தாலும் சாப்ட்வேர் துறையில் ஆர்வம் இருந்தது. இருந்தாலும் கேம்பஸில் பாஷ் (Bosch) நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில காலம்தான் இருந்தேன். அதன்பிறகு நாமக்கல் வந்து சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.



சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முடிவு செய்தபிறகு ஏன் நாமக்கலில் உங்களது நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்?



நாமக்கலில் ஆரம்பிப்பதற்கு எந்த பெரிய காரணமும் இல்லை. இப்போது இருக்கும் தெளிவு அப்போது இல்லை. மேலும், என்னை நம்பியவர்கள் எல்லாம் நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்ததால் அங்கு ஆரம்பித்தேன். ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, அங்கிருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், லாரி நிறுவனங்கள் உள்ளிட்டவர்களிடம் காலையில் பேசுவேன். மேலும் அவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரியாததால் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காண்பித்து, இவ்வாறு உங்களுக்கு பயன்படும் என்பதை சொல்லி.பிறகு சாயங்காலம் வந்து அவர்களுக்கான மென்பொருளை எழுதுவேன். இது கூடவே கார்மென்ட் பிஸினஸும் செய்துவந்தேன். இதில்தான் பிரச்னை, கார்மென்ட் பிஸினஸ் சரியாக போகவில்லை.இதனால் பத்துலட்ச ரூபாய் அளவுக்கு கடன் ஆகிவிட்டது.



உங்களுடைய சாப்ட்வேர் பிஸினஸை ‘ஸ்கேல் அப்' செய்ய முடியவில்லையா?



சாப்ட்வேர் பிஸினஸ் நன்றாக இருந்தாலும், அதில் ஒரு தவறு செய்துவிட்டேன். டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒரு சாப்ட்வேரை தயாரித்து கொடுத்தபிறகு, வேறு துறை நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரிக்க ஆரம்பித்தேன். இதை செய்யாமல் ஒரு துறைக்கு எழுதி, அதிலிருக்கும் பிரச்னைகளை களைந்து, அடுத்தடுத்த நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அப்போது சிறிய வயது என்பதால், ஒரு வேலையைச் செய்யாமல் வேறு வேறு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டேன்.



அதன் பிறகு என்ன செய்தீர்கள்?



10 லட்ச ரூபாய் கடனாகிவிட்டது. இப்போதே பத்து லட்ச ரூபாய் பெரிய தொகை, இந்த தொகையை 1997-ம் ஆண்டே இழந்திருந்தேன். மேலும் அந்த சமயத்தில் எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் செய்யாமல், சென்னைக்கு வந்துவிட்டேன். என்னுடைய நெருங்கிய உறவினர்கள்தான் அந்த தொகையை எனக்கு கொடுத்து உதவி செய்தார்கள்.



வேலை எளிதாக கிடைத்ததா?



ஒரு வேலை கிடைத்தது, அதாவது ஒரு டெக்னாலஜி நிறுவனம் எனக்கு பயிற்சி கொடுக்கும். அந்தப் பயிற்சியை நான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் சுமார் 7 மாதங்கள் வரை வேலை செய்தேன். ஆனாலும் சம்பளம் சரியாக கிடைக்கவில்லை. இந்த சமயங்களில் என் மனைவி ஊரிலே இருப்பார்கள். சென்னையில் வைத்து சமாளிக்கக் கூட முடியாது. மாலை நேரங்களில் என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே இருந்தேன். இப்போது முன்னணியில் இருக்கும் ஒரு டெக்னாலஜி நிறுவனத்தில் இன்டர்வியூ வரைக்கும் முடித்து ஹெச்.ஆரில் உங்களுக்கு வயதாகி விட்டது. உங்களை விட சிறியவர்கள் இருக்கும் டீமில் உங்களைச் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் இதே பிரச்னை இருந்தது. ஆனால் அப்போதைக்கு அங்கு டெக்னாலாஜி நபர்கள் குறைவாக இருந்ததால் என்னை எடுத்துக்கொண்டார்கள்.



அப்போது எந்த மனநிலையில் இருந்தீர்கள்?


வேலை இல்லை, 10 லட்சம் கடன் என்ற நிலைமையில் ஒரு வேலை கிடைத்தது கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. ஹெச்.சி.எல்லில் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டதற்கு இப்போது ரூ.10,000 வாங்குகிறேன், ரூ.12,000 போதும் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு ரூ.15,000 சம்பளமாக கொடுத்தார்கள். ஆனால் உள்ளே போனபிறகுதான் தெரிந்தது, மற்றவர்களின் சம்பள விவரம். இருந்தாலும் என்னுடைய வேலையை பார்த்த பிறகு அடுத்த ஆறு மாதங்களில் ஓரளவு நல்ல சம்பள உயர்வு இருந்தது!



2007-ம் ஆண்டுதான் டிக்கெட்கூஸ் நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்! இடையில் என்ன செய்தீர்கள்?



இடையில் நிறுவனம் மாறினேன். அமெரிக்காவில் மூன்று வருடம் வேலை பார்த்தேன். முக்கியமாக கடனை அடைத்தேன். அங்குதான் என்னுடைய நண்பன் கார்த்திகேயனை சந்தித்தேன். பிறகு இந்தியா வந்து நான், கார்த்தி, இன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்தோம். ஆனால், எங்கள் இருவராலும் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அந்த நிறுவனத்தில் தொடர முடியவில்லை. வெளியே வந்துவிட்டோம்.


இந்த நிறுவனத்துக்கான ஐடியா எப்படி கிடைத்தது?


ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அந்த எண்ணத்தை ஏன் விட வேண்டும் என்று பலவிதமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தோம். ஒரு முக்கியமான பண்டிகை நாளில் கார்த்தி ஈரோட்டில் இருந்து சென்னை வருவதற்கு பஸ் கிடைக்கவில்லை என்றும் கஷ்டப்பட்டு ஒரு பஸ்ஸைப் பிடித்தேன் என்றும் சொல்லிவிட்டார். ஆனால் என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.


டிக்கெட்டில் ஏதோ பிஸினஸ் வாய்ப்பு இருப்பதாகவே எனக்குப்பட்டது. கார்த்தி காலையில் என்னை வந்து பார்ப்பதற்குள் ஊரில் இருக்கும் சில பஸ் ஆப்பரேட்டர்களிடம் பேசி அந்த பிஸினஸ் மாடலை ஓரளவுக்கு உருவாக்கி வைத்திருந்தேன். காலையில் வந்ததும், இன்னும் சில டெக்னிக்கல் நண்பர்களுடன் பேசி இந்த ஐடியாவை ஓ.கே செய்தோம்.



அதெப்படி அனைத்து ஆன்லைன் பஸ்டிக்கெடிங் நிறுவனங்களுக்கும் ஒரே கதை?



ரெட்பஸ் நிறுவனம் எங்களுக்கு ஒரு வருடம் முன்பு ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் இதை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு அப்படி ஒரு நிறுவனம் இருப்பதே தெரியாது. நாங்கள்தான் முதல் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். இந்த ஐடியாவை ஓ.கே செய்துவிட்டு கார்த்தி ஊருக்கு போவதற்காக கோயம்பேடு செல்லும் போதுதான் இந்தியாபஸ்டிக்கெட்.காம் என்ற ஒரு நிறுவனத்தை கார்த்தி பார்த்திருக்கிறார். இருந்தாலும் இந்த பிஸினஸுக்கு வாய்ப்பு இருப்பதாகவேத் தெரிந்தது. அதனால் தைரியமாக ஆரம்பித்தோம். கார்த்தியின் நண்பர் வாசுவையும் உடனடியாக இங்கு வரவழைத்து எங்களுடன் சேர்த்துக்கொண்டோம்.



அதென்ன டிக்கெட் கூஸ்? கூஸ் என்றால் வாத்து இனம்தானே? நம்மவர்கள் வாத்துக்கு கொடுக்கும் மரியாதை வேறுதானே?



கூஸ் இது வேறு இனம். இந்த பறவை அதிக தூரம் பறக்க கூடியது. டிக்கெட் புக் செய்கிறவர்களும் அதிக தூரம் பயணம் செய்பவர்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்தோம். இன்னும் சில பெயர்கள் இருந்தது. ஒரு மீன் வகை அதிக தூரம் பயணம் செய்யும். அதை வைக்கலாமா என்றும் கூட யோசித்தோம். அனைத்து பெயர்களையும் எழுதி குலுக்கி என் பெண்ணை எடுக்கச் சொன்னேன். அவள் எடுத்தது கூஸ். ஆனால் நீண்ட நாளைக்கு பிறகுதான் மக்கள் எங்களை இப்படிதான் நினைக்கிறார்கள் என்று புரிந்தது?



முதல் டிக்கெட் விற்பனை செய்ய உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியது?



நிறுவனத்தை ஆரம்பித்தவுடன் கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்களை கொடுத்தோம். 10 நாட்களில் முதல் டிக்கெட் விற்பனை செய்தோம். ஆனால் அடுத்த டிக்கெட் விற்பதற்கும் 10 நாட்கள் ஆகியது. நாங்கள் ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒரு கோட்டாவை வாங்கி வைத்திருந்தோம். அது வேலைக்கு ஆகவில்லை. சமயங்களில் அது கடைசி சீட்டாக இருந்தது, நாங்கள் வாங்கி வைத்திருக்கும் கோட்டாவை விட வாடிக்கையாளர்களுக்கு அதிக டிக்கெட் தேவைப்பட்டது, உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்பட்டது.



இந்த பிரச்னைகளைக் களைய பஸ் ஆப்பரேட்டர்களுக்கு இலவச சாப்ட்வேர் வழங்குவதன் மூலம், அனைத்து டிக்கெட்களையும் ஆன்லைன் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அதிலும் சிக்கல். இலவசமாக கொடுத்ததும் 4 ஆப்பரேட்டர்களை மட்டும் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது.



அவர்களின் பயம், இலவசமாக கொடுக்கும் போது எங்களிடம் எதுவும் கேட்க முடியாது. சாப்ட்வேர் வைத்து பிஸினஸ் செய்து, பிறகு எதாவது பிரச்னை வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அந்த சாப்ட்வேருக்கு விலை வைத்தோம். 40 ஆப்பரேட்டர்களை எங்களுடன் இணைத்தோம்.


ஆன்லைன் பிஸினஸுக்கு விளம்பரம் முக்கியமே?



ஆமாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், எங்களுடைய யுக்தியை மாற்றினோம். அதுவரைக்கும் வாடிக்கையாளர்கள் மூலமாகதான் பிஸினஸ் நடந்து வந்தது. இன்னும் சில மாதங்களில் மார்க்கெட்டிங்குக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம்.



உங்களுடைய நிறுவனத்துக்கு ஏன் வெளிநாட்டில் பணம் திரட்டினீர்கள்?


இந்தியாவில் திரட்டக் கூடாது என்பது அல்ல. நான் அமெரிக்காவில் சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். கார்த்தி 10 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். அதனால் அங்கிருக்கும் தொடர்புகளை வைத்து வெளி நாட்டில் முதலீட்டை திரட்டினோம்.


வென்ச்சர் கேப்பி ட்டல் முதலீட்டை திரட்டும் போது அவர்கள் வெளியேற ஐ.பி.ஓ. வந்தாக வேண்டுமே?



ஆமாம். அவர்கள் வெளியேற வாய்ப்பு கொடுத்துதானே ஆகவேண்டும். மேலும், ஐ.பி.ஓ. வரும் போது கம்பெனியின் நிதி நிலைமையும் பலமாகும். இன்னும் சில நிறுவனங்களை இணைக்கலாம். மேலும் வளரும் நாடுகளில் இதற்கான மார்க்கெட் இப்போது அதிகரித்து வருகிறது,



break even ஆகிவிட்டீர்களா?


இன்னும் ஆகவில்லை.இன்னும் இரண்டு வருடத்துக்கு break even செய்யும் எண்ணம் இல்லை. ஆனால் அது பிரச்னையே இல்லை. வளர்ச்சியைக் குறைத்தால் break even ஆகலாம். ஆனால் இப்போது வளரும் பாதையில் இருக்கிறோம்.


ஆன்லைன் பிஸினஸ் என்பது கடல், எதாவது diversification செய்யும் எண்ணம் இருக்கிறதா?


diversification நல்லதுதான். ஆனால் பிஸினஸில் வளர்ச்சி முடிந்துவிட்ட போது அதை செய்வதுதான் நல்லது. இப்போதைக்கு இந்தியாவின் சொகுசு பேருந்தின் சந்தை மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் ஆன்லைன் மார்கெட் ரூ. 2,000 கோடிதான், இதில் எங்களின் பங்கு ரூ. 52 கோடி(கடந்த நிதி ஆண்டு) மட்டுமே. இதிலேயே வளர்வதற்கு வாய்ப்பு இருக்கும் போது இப்போதை diversification திட்டம் ஏதும் இல்லை.


மீண்டும் பிஸினஸ் செய்வதற்கான மன உறுதி எங்கிருந்து வந்தது?



பிஸினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எப்போதுமே மனதில் இருந்தது. இடையில் கடனை அடைக்கத்தான் வேலைக்கு போனேனே தவிர, நிரந்தரமாக இருக்க அல்ல. மேலும் நிம்மதியான சூழ்நிலையை விட, சவாலான சூழ்நிலையில்தான் என்னுடைய முழுதிறமையும் என்னால் வெளி ப்படுத்த முடியும். அதற்கு பிஸினஸ்தான் ஒரே வழி.


thanx - the hindu