Showing posts with label இயக்குநர் பேட்டி. Show all posts
Showing posts with label இயக்குநர் பேட்டி. Show all posts

Sunday, January 10, 2016

'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பாண்டிராஜ் பேட்டி

‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அடங்குவதற்குள் தனது அடுத்த படமான 'கதகளி'யில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வந்தவரிடம் உரையாடியதிலிருந்து…




'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..
முதன்முறையாக என்னிடமிருந்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். நம்முடைய பேச்சில் ‘கதகளி ஆட்டம் ஆடிட்டாண்டா’ என்று சொல்லுவோம் இல்லையா, அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்தேன். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒருவனின் வாழ்வில் விதி விளையாடுகிறது. அதற்கு அவன் ஆடும் ஆட்டம்தான் இப்படம். ஒரு பூனை துரத்தத் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும். இதற்கு மேல் நம்மால் ஒட முடியாது என்று தெரிந்தவுடன் திரும்பி நம்மைத் தாக்கப் புலி மாதிரி பாயும். அப்படி ஒருவனுடைய கோபம், ஆக்ரோஷம், ருத்ர தாண்டவம்தான் 'கதகளி'.



முதன்முறையாக மாஸ் படம் பண்ணிய அனுபவம்?
என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்துக்கு நான் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அந்தச் சம்பவத்தையும் கதையையும் பார்த்தீர்கள் என்றால், முன்னுக்கு வர நினைக்கும் ஒரு நாயகனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு படத்தை விஷால் ஒப்புக்கொண்டதே எனக்கு ஆச்சர்யம்தான். அவர் ‘பாண்டியநாடு' படம் பண்ணியிருப்பதால், இப்படம் அவருக்கு எப்படி வரும் என்று தெரியும்.



அனைவருக்குள்ளும் ஒரு நாயகன் இருக்கிறான். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஒரு ஹீரோயிசம்தான் இப்படத்தில் இருக்கும். 40 பேரை அடிக்கிறது, 20 நடனக் கலைஞர்களோடு ஆடுவது, சுமோ பறப்பது, இப்படி எதுவுமே இதில் இருக்காது. இது விஷால் படமா, பாண்டிராஜ் படமா என்று கேட்டீர்கள் என்றால் இது இருவரின் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.



இனிமேல் மாஸ் ஹீரோ படங்கள் மட்டும்தானா?
குறைந்த பட்ஜெட்டிற்குள் ஒரு நல்ல குழந்தைகள் படமோ, குடும்ப படமோ பண்ணிக்கொண்டுதான் இருப்பேன். புதுமுகங்களை வைத்துக் கூட படம் பண்ணுவேன். மாஸ் படங்களின் வெற்றிக்கு மயங்கி அதன் பின்னால் கண்டிப்பாகப் போக மாட்டேன். குடும்பம் படம், த்ரில்லர் படம் இப்படி ஒவ்வொரு தளத்திலும் படங்கள் பண்ணிக்கொண்டிருப்பார் மணிவண்ணன் சார். அவரை மாதிரி முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்பதுதான் என் ஆசை.
‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பின் மூலம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
வடபழனியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கப் போனபோது, இறுதியில் ‘A Pandiraj Film' என போடும்போது கைதட்டினார்கள். மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அந்தக் கைதட்டலைக் கேட்கும்போது என்னை அறியாமல் அழுதுகொண்டிருந்தேன். மக்கள் வெளியே பார்க்கும்போது, ‘படம் நல்லாயிருக்கு சார்’ என்று சொல்லும்போது ஒரு பொறுப்பு வந்திருக்கிறது.




‘பசங்க 3' எப்போது எனக் கேட்கிறார்கள், நல்ல தருணத்தில் அப்படத்தையும் பண்ணுவேன். பொதுவாகவே, ரசிகர்களுக்கு ஒரு படத்தில் கருத்துச் சொன்னால் பிடிக்காது. ஆனால், இப்படத்தில் நிறைய கருத்து சொல்லியிருக்கிறோம், அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இனிமேல் எந்த ஒரு படம் பண்ணினாலும், அதில் ஒரு நல்ல விஷயம் இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன்.



தயாரிப்பாளர் பாண்டிராஜைக் காணோமே?
இந்த வருடம் கண்டிப்பாக எனது தயாரிப்பு நிறுவனத்தில் ஓரிரு படங்கள் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். மற்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. அப்படித் தயாரிக்க முடியாமல் போனால் கூட, ஒரு நல்ல படத்தை வாங்கி வெளியிட்டுவிடுவோம். எனது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து கண்டிப்பாக ஒரு நல்ல படம் தயாரிப்பாகவோ வெளியீடாகவோ இருக்கும். அதை உறுதியாகச் சொல்லுவேன்.



‘இது நம்ம ஆளு' வெளியீட்டுப் பணிகள் எந்த அளவில் இருக்கிறது?
‘இது நம்ம ஆளு' இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். காதலர் தினத்துக்கு வெளியானால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கான பின்னணி இசைக் கோப்பு பணிகளெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் கையில்தான் எல்லாம் இருக்கிறது, என் கையில் எதுவுமே இல்லை.


THANX - THE HINDU

Saturday, October 10, 2015

‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நேர்காணல்

  • படப்பிடிப்பில் த்ரிஷாவுக்கு ஒப்பனை செய்கிறார் கமல்
    படப்பிடிப்பில் த்ரிஷாவுக்கு ஒப்பனை செய்கிறார் கமல்
“சினிமா என்பது ஒரு கலைதான். அதில் கலைப் படம், வர்த்தகரீதியான படம் என்ற ஒரு விஷயமே கிடையாது. 10 லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு படம் எடுத்தாலும் அந்தப் பணம் எப்படித் திரும்ப வரும் என்றுதான் பார்க்கிறார்கள்” என்று மெல்லிய தாடியை வருடிக்கொண்டு சிரிக்கிறார் 'தூங்காவனம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ராஜேஷ் எம்.செல்வா. படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்தவரிடம் பேசியதிலிருந்து…
‘தூங்காவனம்' படத்தைப் பற்றிச் சொல்லுங்கள். மிக விரைவாகப் படத்தை முடித்துவிட்டீர்களே?
இந்தப் படத்தில் கமல் சார் ஒரு சராசரி மனிதர். அவருடைய கடமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம்தான் கதை. ‘தூங்காவனம்' த்ரில்லர், குடும்பப் பின்னணி கலந்த முழுமையான ஒரு படமாக இருக்கும். கமல் சார் இந்த மாதிரியான கதைக் களத்தில் ஒரு படம் பண்ணி நீண்ட நாட்கள் ஆகின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே ஒருபுறம் எடிட்டிங் நடக்கும். படப்பிடிப்பு முடிவடையும்போது, எடிட்டிங்கும் முடிந்து படம் தயாராக இருக்கும். படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாள் டப்பிங்குக்கு வந்துவிட்டோம். எடிட்டிங்குக்காக மட்டும் தனியாக 2 மாதம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.
ஏழு வருடங்களாக கமலிடம் பணியாற்றிவருகிறீர்கள். அவரிடம் வியந்து பார்க்கும் விஷயம் என்றால் எதைச் சொல்லுவீர்கள்?
பெரிதாக ஒரு விஷயத்தை நாம் சொல்லி விட்டோம் என்று நினைத்தோம் என்றால் அதைவிடப் பெரிய விஷயத்தை உடனடியாகச் சொல்லுவார் கமல் சார். இப்போது அடுத்த கட்ட தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது தயாரிப்பாளரிலிருந்து படக் குழுவினர்வரை ஐ-பாட் மாதிரியான ஒரு பொருள் கையில் இருக்கும். படப்பிடிப்பின்போது கட் என்று சொன்ன அடுத்த நொடி அவர்களுடைய ஐ-பாடில் எடுத்த காட்சியைப் பார்க்கலாம். மொத்தப் படக் குழுவினரும் அந்தக் காட்சியில் திருத்தங்கள் ஏதாவது இருந்தால் சொல்லலாம்.
தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருந்தாலும், அங்கும் பார்க்கலாம். படப்பிடிப்பு தாமதமானது என்றால், “என்னப்பா… இன்னும் முதல் ஷாட் எனக்கு வரவில்லை” என்று தயாரிப்பாளர் கேட்கலாம். இந்த விஷயத்தை கமல் சார் பண்ணியிருக்கிறார். இந்த மாதிரியான விஷயங்களை எங்கிருந்து எடுக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடம் நானே கேட்டிருக்கிறேன். இதைப் போல நான் வியக்கிற விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
கமல் தனது கதைகளை எந்தக் களத்திலிருந்து எடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கமல் சாரின் வேகத்துக்கு இன்னும் நம்முடைய தொழில்நுட்பம் தயாராகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேரம், பணம், தொழில்நுட்பம் இந்த மூன்றும் இருந்தால் போதும். அவரிடம் நிறைய ஐடியாக்கள் இருக்கின்றன.
‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’(Planet of the Apes) என்று ஹாலிவுட்டில் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன அல்லவா, அந்த மாதிரியான ஒரு கதையை கமல் சார் 20 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டார். அதை நான்தான் அவருக்கு டிஜிட்டலாக மாற்றிக்கொடுத்தேன். அந்தக் கதையைப் படிக்கும்போது எனக்குக் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. அதற்குத் தலைப்புகூட வைத்துவிட்டார். ஆனால், அதை நான் சொல்ல முடியாது. ‘மர்மயோகி' கதையைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் குளிர் ஜுரத்தில் படுத்துவிட்டேன். ஏனென்றால் உதவி இயக்குநராக அப்படத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம்.
ஒவ்வொரு காட்சியிலும் 2,000 முதல் 3,000 துணை நடிகர்கள் இருப்பார்கள். கமல் சார் எப்போதுமே அதிகமான உதவி இயக்குநர்கள் வைத்துக்கொள்ள மாட்டார். ‘மர்மயோகி' பெரிய படம் என்பதால் மொத்தமாக 6 உதவி இயக்குநர்கள்தான். நான் சொல்லும்போது அதன் பிரம்மாண்டம் தெரியாது. படமாகப் பார்க்கும்போதோ, கதையாகப் படிக்கும்போதோதான் தெரியும்.
‘தூங்காவனம்' இயக்குநர் நீங்கள்தான் என்று கமல் கூறியபோதும், கமலை முதல் நாள் இயக்கியபோதும் ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லுங்கள்...
அவர் வாய்ப்பு கொடுத்த தினத்தை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஒரு நாள் ரொம்ப கோபமாக அலுவலகம் வந்தார். அனைவரையும் திட்டிவிட்டு மேலே உள்ள அவருடைய அறைக்குச் சென்றுவிட்டு என்னை அழைத்தார். யாருக்கோ அல்லது எனக்கோ வேலை போகப் போகிறது என்றுதான் நினைத்தேன். “நான் முடிவு பண்ணிவிட்டேன், நீதான் இந்தப் படத்தை இயக்க வேண்டும்” என்றார். அப்படியா சார் என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டுக் கீழே வந்துவிட்டேன். மாலையில்தான் நாம் கமல் சாரை இயக்கப்போகிறோம் என்ற உணர்வே எனக்கு முழுதாக உறைத்தது.
அதேபோல படப்பிடிப்புத் தளத்தில் அவர் இயக்கும்போது ஆக் ஷன் என்று அவர் சொல்ல மாட்டார், மூன்று வருடங்களாக நான்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். மானிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘கட்' மட்டும் அவர் சொல்வார். இந்தப் படத்தில் ‘கட்'டும் நான் சொல்ல வேண்டியதிருந்தது. அவ்வளவுதான்.
தொழில்நுட்பரீதியாக கமல் படப்பிடிப்புத் தளங்களில் எப்படி?
நாளை இதைப் பண்ணப் போகிறோம் என்று இரவு சொல்லிவிடுவார். எப்படி என்று எல்லாரும் யோசிப்போம், இறுதியில் எப்படியும் முடியாது என்று நினைத்து விட்டுவிடுவோம். காலையில் படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போதும், எப்படியும் முடியாது என்ற மனநிலையில்தான் இருப்போம். மாலையில் அந்தக் காட்சியை நினைத்ததை விட மிகவும் அற்புதமாக முடித்திருப்போம். அதுதான் கமல் சார். எப்படி என்று சொல்ல முடியாது, ஏனென்றால் எல்லாமே கமல் சாரின் ஐடியாக்கள்.
‘உத்தம வில்லன்' படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
‘உத்தம வில்லன்' தோல்வி என்று நான் நினைக்கவே இல்லையே. அப்படம் தோல்வி என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். சரியான நேரத்தில் திட்டமிட்டபடி வெளியாகியிருக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் வசூல் என்பதுதான் ஒவ்வொரு படத்துக்கும் பெரியது. அந்தப் படம் முதலில் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. வியாபாரத்தில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
 - ராஜேஷ் எம். செல்வா

நன்றி-தஹிந்து

Wednesday, November 12, 2014

சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தின் வில்லன் இயக்குநர் சமுத்திரகனி பேட்டி

சமுத்திரகனி | படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சமுத்திரகனி | படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
புழுதி பறக்க உழுதுகொண்டிருக்கும் வயல், அதன் அருகே மலையடிவாரத்தில் ஒரு குடிசை. கண்களில் கோபம் கொப்பளிக்க தன் அடியாட்களுடன் வயலில் இறங்கி அந்தக் குடிசையை நோக்கி வீறுநடை போடுகிறார், சமுத்திரகனி. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் கேமராவுக்குள் பதிவாகும் இந்தக் காட்சியை, தானும் ஒரு ரசிகனாக மாறி இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். 


மதுரை அழகர்கோயில் மலைச்சாரல் பகுதி யில் சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த சமுத்திரகனியை சந்தித்தோம்

.
சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விசாரணை’ என்று 2 படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறீர்களே? 


எல்லா கதாபாத்திரங்களுமே நல்ல கதாபாத்திரங்கள்தான். நாம அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கி யம். ‘ரஜினி முருகன்’ படம் மாதிரி எனக்கு இன்னொரு கதை அமைவது கஷ்டம். அதே போல ‘விசாரணை’ கதையின் கோணமும் ரொம்பவே புதியது. இதுமாதிரியான வேடங் கள் வரும்போது நான் எதைப்பற்றியும் யோசிக் காமல் சம்மதித்து விடுகிறேன். 


உங்கள் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கிட்ணா’ படத்தில் நீங்கள் 5 விதமான மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகக் கேள்விப்பட்டோம். இது உண்மையா? 


 
‘கிட்ணா’ படத்தில் நாயகனின் பெயர் கிருஷ்ணா. ஊர்ப்பக்கமெல்லாம் கிருஷ்ணாவை ‘கிட்ணா’ என்றுதான் அழைப்பார்கள். இது ஆடு மேய்ப்பவனின் கதை. மழைக்காலம், வெயில்காலம் என்று சூழலுக்கு தகுந்தமாதிரி இடம் விட்டு இடம் மாற வேண்டிய தொழில் அது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகால பயணம் இந்தப்படம். 1975ல் தொடங்கி 2010 ல் முடியும். இந்தப்படத்தில் நாயகனின் 28 வயதில் தொடங்கி 68 வயது வரைக்குமான காலகட்டம் வரைக்கும் காட்சியாக்கப்போகிறேன். 


இந்தக் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன். இதற்காக வயதான கதாபாத்திரம் வரைக்கும் படமாக்க வேண்டும் என்பதால் ஐந்து விதமான கதாபாத்திரம் கதைக்கு அவசியமாகப்படுகிறது. இந்த காலகட்டத்துக்கு காத்திருந்து மற்ற நாயகர்கள் நடிக்க தயாராக இல்லை. அதனால் நானே நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். பிப்ரவரி முதல் தொடர்ந்து படப்பிடிப்பு இருக் கும். 2015 ம் ஆண்டின் இறுதி வரைக்கும் படப்பிடிப்பு நகரும். 



தனுஷ், சிவகார்த்திகேயன், தினேஷ் என்று இளம் நாயகர்களோடு எளிதாக ஒன்றிவிடுகிறீர்களே? 


 
அட்டகாசமான இளைஞர்கள் இன்று தமிழ் சினிமாவுக்குள் படை எடுத்து வருகிறார்கள். அப்படி வரும் புதியவர்களை நாம்தான் இருகரங்களை நீட்டி மனதார வர வேற்க வேண்டும். அவர்களோடு இணைந்து பயணிக்கவேண்டும். ‘அந்த காலத்தில் எல்லாம் அப்படி, இப்படி!’ என்று பேசிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லையே. 



தற்போதைய சினிமாக்களில் கதை திருட்டு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே? 


 
என் விஷயத்தில் அதுமாதிரி எந்த நிகழ்வும் நடந்ததில்லை. அதனால் கதைத் திருட்டு பற்றி நான் ஏதும் கூற விரும்பவில்லை. 



இயக்குநர் சமுத்திரகனியை இனி அதிகம் பார்க்கமுடியாதா? 

 
தவிர்க்க முடியாத நண்பர்களுக்காக செய்யும் விஷயம், நடிப்பு. அதேநேரத்தில் இயக்குநராகவும் எனக்கு பல கனவுகள் இருக்கின்றன. ‘கிட்ணா’ படத்தைப்போல இன்னும் நான்கு, ஐந்து விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும் என்று மனதில் வைத்திருக்கிறேன். தொடர்ந்து அதன் வேலைகளும் நடந்துகொண்டே இருக்கும். 



நன்றி- த இந்து