Showing posts with label இதுதாண்டா போலீஸ் (2016) =AGADU( TELUGU-2014)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இதுதாண்டா போலீஸ் (2016) =AGADU( TELUGU-2014)- சினிமா விமர்சனம். Show all posts

Friday, January 08, 2016

இதுதாண்டா போலீஸ் (2016) =AGADU( TELUGU-2014)- சினிமா விமர்சனம்

நடிகர் : மகேஷ் பாபு
நடிகை :தமன்னா
இயக்குனர் :ஸ்ரீனு வைத்லா
இசை :தமன்
ஓளிப்பதிவு :குகன் கே.வி.
சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்த மகேஷ்பாபுவுக்கு போலீசாகும் தகுதி இருப்பதை உணர்ந்த போலீஸ் அதிகாரியான ராஜேந்திர பிரசாத், அவரை போலீசாக்க எண்ணி தத்தெடுத்து வளர்க்கிறார். ராஜேந்திர பிரசாத்துக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறார். ஒருநாள் ராஜேந்திர பிரசாத்தின் மகன் செய்த தவறு, கொலையாக மாற, அந்த கொலைப்பழியை ஏற்று ஜெயிலுக்கு செல்கிறார் மகேஷ் பாபு. தனது கனவை சிதறடித்த மகேஷ் பாபு மீது ராஜேந்திர பிரசாத் வெறுப்பு கொள்கிறார்.

செய்யாத தவறுக்காக கொலைப்பழியை ஏற்று சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படும் மகேஷ் பாபு அங்கேயே வளர்ந்து பெரியவனாகி, ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். மேலும், என்கவுன்டர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் உருவெடுக்கிறார். இவரது நடவடிக்கைகள் பெரிய பெரிய ரவுடிகளையும் மிரளச் செய்கிறது.

இந்நிலையில், மிகப்பெரிய தாதாவான சோனு சூட், பொதுமக்களுக்கு பெரிய தீங்கை விளைவிக்கும் மின்சார திட்டம் ஒன்றை தன்னுடைய ஊரில் நிறுவப் பார்க்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறார். இதனால் இவரை எதிர்க்கவே அனைவரும் பயப்படுகின்றனர். 

இந்நிலையில், சோனு சூட் ஊருக்கு மாற்றலாகி வருகிறார் மகேஷ் பாபு. இவர் அந்த ஏரியாவுக்கு வந்த சமயத்தில் சோனு சூட், வெளிநாட்டுக்கு சென்றுவிட, சோனுவுக்கு அடிமட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் பின்னி பெடலெடுக்கிறார். இதையறியும் சோனு வெளிநாட்டிலிருந்து இங்கு வர நினைக்கிறார். இதற்கிடையில், அந்த ஊரில் ஸ்வீட் கடை வைத்திருக்கும் தமன்னாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் மகேஷ் பாபு. தமன்னாவுக்கு போலீஸ் என்றாலே பிடிக்காது. இருப்பினும், அவளை எப்படியாவது கவர முயற்சிக்கிறார். 

மறுபக்கம், அதே ஊரில் தன்னை சிறுவயதில் தத்தெடுத்து வளர்த்த ராஜேந்திரபிரசாத்தும் வசித்து வருகிறார் என்பது மகேஷ்பாபுவுக்கு தெரிய வருகிறது. அவர் மகேஷ்பாபு மீதுள்ள வெறுப்பால் அவனிடம் பேச தயங்குகிறார். ஒருகட்டத்தில் மகேஷ்பாபுவின் உண்மை நிலை தெரிந்து, அவனிடம் பேச ஆரம்பிக்கிறார். அப்போது, சோனுவின் திட்டத்திற்கு அடிபணியாத கலெக்டரான தனது மகனை அவன் கொன்றுவிட்டதாக ராஜேந்திர பிரசாத் கூறுகிறார். இதனால், சோனுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார் மகேஷ் பாபு.

இறுதியில், மகேஷ் பாபு சோனுவின் திட்டத்தை முறியடித்து, தன்னுடைய பகைமையை எப்படி தீர்த்துக் கொண்டார்? என்பதே மீதிக்கதை. 

மகேஷ் பாபு முதல் பாதியில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்திருக்கிறார். அதேபோல், பிற்பாதியில் சோனுவின் திட்டத்தை முறியடிக்க இவர் செய்யும் காமெடியான தந்திரங்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இவருக்கு உறுதுணையாக பிரம்மானந்தமும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். 

இனிப்பு கடை நடத்தும் தமன்னாவுக்கு முதல் பாதியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகளை தவிர பாடல்களுக்கு மட்டுமே அதிகமாக தலையை காட்டியிருக்கிறார். இருப்பினும் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

தாதாவாக வரும் சோனு சூட், ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டாமல் தோரணையிலேயே மிரட்டுகிறார். அதேநேரத்தில், மகேஷ்பாபு தனக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார் என்பதுகூட தெரியாத அப்பாவியாகவும் அழகாக பளிச்சிடுகிறார். ராஜேந்திர பிரசாத், மும்தாஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நடிப்பை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆக்ஷன் படமென்றால், ஆரம்பத்தில் சென்டிமெண்ட், காதல், நகைச்சுவை என்றும், பிற்பாதியில் ஆக்ஷன் மட்டுமே இருக்கும் என்ற தடையை தகர்த்தெறிந்துள்ளது ‘இதுதாண்டா போலீஸ்’. முதல்பாதி முழுக்க ஆக்ஷனும், பிற்பாதியில் எதிரியை வீழ்த்த மகேஷ் பாபு செய்யும் தந்திரங்களை மிகவும் நகைச்சுவையாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. அதேபோல், அனல் தெறிக்கும் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘இதுதாண்டா போலீஸ்’ அதிரடி.

http://cinema.maalaimalar.com/2016/01/08175244/Idhu-Dhanda-Police-movie-revie.html