Saturday, June 01, 2024

சாமான்யன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹெய்ஸ்ட் டிராமா )

   

 மண்ணுக்கேத்த  பொண்ணு , மருதாணி , ஹலோ  யார்  பேசறது  ஆகிய  மூன்று  படங்களை  ஒரே  ஆண்டில்  (1985)           இயக்கிய  ராம ராஜன்  1986. ல்  நம்ம  ஊரு  நல்ல  ஊரு  என்ற  படத்தில்  நாயகனாக  ,புதுமுகமாக  அறிமுகம்  ஆகி  மக்களிடையே  பெரும்  வரவேற்பைப்பெற்றார். அவரது  லைஃப்  டைம்  அச்சீவ்மெண்ட்  ஆக  கரகாட்டக்காரன் (1989)  அமைந்தது . மொத்தம்  44  படங்களில்  நாயகனாக  நடித்த  அவர்  கடைசியாக  நாயகனாக  நடித்த  படம்  மேதை (2012)   சரியாகப்போகவில்லை.அவரது  கடைசி  வெற்றிப்படம்  தெம்மாங்குப்பாட்டுக்காரன் (1997)


பூ  மனமே  வா  (1999) , அண்ணன்  (1999) , பொன்னான  நேரம் (2001)  , சீறி வரும்  காளை ( 2001)  என  அவரது  கடைசிப்படங்கள்  தோல்விகளாகவே  முடிந்தன பலருக்கும்  தெரியாத  ஒரு  தகவல்  கிராமராஜன்  என  அறியபப்ட்ட  அவர் ஹலோ  யார்  பேசறது  (1985)  , மறக்க  மாட்டேன்   (1985)    ஆகிய  இரு  க்ரைம்  த்ரில்லர்  படங்களை  இயக்கினார்  என்பது.


ஈரோடு  ஸ்டார்  தியேட்டரில்  கரகாட்டக்காரன்  185  நாட்கள்  ஓடியது . மதுரையில்  ஒரு  வருடம்  ஓடியது . ரஜினி  படங்களுக்கு  நிகரான  வசூல்  சாதனைகளை  லோ  பட்ஜெட்  படங்களான  இவரது  வில்லேஜ்  சப்ஜெக்ட்  படங்கள்  செய்தன 


12  வருடங்களுக்குப்பின் , ஒரு  நீண்ட  இடைவெளிக்குப்பின்  மீண்டும்  நாயகன் ஆக  வந்திருக்கிறார், வங்கிக்கொள்ளையை  அடிப்படையாகக்கொண்டு  தமிழில்  வந்த  முக்கியமான  படங்கள்  கே  பாக்யராஜ்  நடித்த  ருத்ரா (1991)  அஜித்  நடித்த  துணிவு (2023) . அந்த  வரிசையில்  இதுவும்  ஒரு  வெற்றிப்படமாக  அமைந்ததா? என்பதைப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், அவருடைய  சம்பந்தி  கம்  நண்பன் , இன்னொரு  நண்பன்  என  மூன்று  பேர்   ஒரே  சமயத்தில்   மூன்று  வெவ்வேறு  இடங்களை  அட்டாக்  செய்கிறார்கள் . நாயகன்  ஒரு  வங்கியில்  புகுந்து  கையில்  உள்ள  சூட்கேசில்  உள்ள  வெடிகுண்டைக்காட்டி   பயமுறுத்துகிறார். வங்கியில்  பணி  ஆற்றும்  மேனேஜர்  , அசிஸ்டெண்ட்  மேனேஜர்  வீடுகளில்  மீதி  இருவரும்  நுழைந்து  துப்பாக்கி  முனையில்  குடும்பத்தினரை  மிரட்டுகின்றனர் . இவர்கள்  நோக்கம்  என்ன? டிமாண்ட்  என்ன? என்பதை  அறிய  போலீஸ்  அதிகாரி  தன்  படையுடன்  களத்தில்  இறங்குகிறார்/


முதல் பாதி இப்படி  பரபரப்புடன்  செல்ல  பின்  பாதியில்  ஃபிளாஸ்பேக் . நாயகனின்  மகளுக்கு  நாயகனின்  நண்பனின்  மகனுடன்  திருமணம்  செய்து  வைக்கிறார்  நாயகன். இருவருக்கும்  ஒரு  குழந்தை  பிறக்கிறது . நகரில்  வாடகை    வீட்டில்  வசிக்கும்  அவர்கள்  ஹவுஸ்  ஓனர்  தொல்லை  தாங்காமல்  ஒரு  சொந்த  வீடு  வாங்க  முடிவு  எடுக்கிறார்கள் 


  அகலக்கால்  வைத்து  விடுகிறார்கள்  . 90 லட்சம்  ரூபாய்  மதிப்பில்  ஒரு வீட்டை  வங்கிக்கடன் மற்றும்  பில்டர்ஸ்  கடன்  மூலம்   வாங்க  நினைக்கிறார்கள் .பில்டர்ஸ்  தரமற்ற  முறையில்  வீட்டைக்கட்டிக்கொடுக்க  கரை இடிந்து  விழுந்து  குழந்தைக்கு  மருத்துவச்செலவே  20  லட்சம்  ஆகி  விடுகிறது .சுற்றியும்  கடன். க்ரெடிட் கார்டு  கடன் , ஹவுசிங்  லோன்  கடன் , ஹாஸ்பிடல்  செலவு  கடன்  என  அவங்க  மிகவும்  சிரமப்படுகிறார்கள்  ஒரு கட்டத்தில்  வங்கியின்  கடன்  வசூல்  டார்ச்சர்  தாங்க   முடியாமல்  தற்கொலை  செய்து  கொள்கிறார்கள் .


  இதற்கு  மேல்  சாமான்ய  மக்கள்  இது  போல  கஷ்டப்படக்கூடாது  என  முடிவு  எடுக்கும்  நாயகன்  பின்  வங்கிக்கொள்ளை  சம்பவத்தை  அரங்கேற்றுகிறான். இறுதியில்  என்ன  நடந்தது  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  ராமராஜன் . கம்  பேக்  படம்  என  பாராட்டுவதா?  அல்லது  அவரது  உருவத்தைப்பார்த்து  பரிதாபப்படுவதா? தெரியவில்லை .  தொப்பை  ஓவராகப்பாட்டு  பார்க்கவே  பாவமாக  இருக்கிறது .  இவர்  மனம்  ஒத்துழைத்த  அளவு  உடல்  ஒத்துழைக்கவில்லை என்பது  தெரிகிறது . இவரால்  ஓடி ஆடி  நடிக்க  முடியவில்லை ,  பெரும்பாலான  காட்சிகளை  சேரில்  உட்கார்ந்த  நிலையில்  தான்  ஷூட்  செய்து  இருக்கிறார்கள் . ஆனாலும்  அவரது  தன்னம்பிக்கைக்கு    ஒரு சபாஷ் 


நாயகனின்  மகளாக  நக்‌ஷா   சரண்  மற்றும்  மாப்பிள்ளையாக  லியோ  சிவக்குமார்  நடித்திருக்கிறார்கள் 


  நண்பர்கள்  ஆக  எம்  எஸ்  பாஸ்கர் , ராதாரவி  இருவரும்  நிறைவான  நடிப்பு . போலீஸ்  ஆஃபீசர்  ஆக  கே  எஸ்  ரவிக்குமார்  , பேங்க்  மேனேஜர்  ஆக  போஸ்  வெங்கட்  ஆகியோர்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 


இசை  இளையராஜா . பின்னணி  இசைக்கு  மட்டும்  புக்  செய்தால்  அவராக  முன்  வந்து  ஒரு  பாட்டுக்கான  சிச்சுவேஷனை  உருவாக்கி  இசை  அமைத்தாராம், அந்தப்பாட்டு  ஹிட்டு 


இயக்குநர்  ராகேஷ்   திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்




சபாஷ்  டைரக்டர்


1  பஸ்  டிரைவர்கள் , கண்டக்டர்கள்  தாங்கள்  ஓசியில்  சாப்பிட  நெடுஞ்சாலையில்  தரமற்ற  ஹோட்டல்  அருகே  வண்டியை  நிறுத்தி  பயணிகளை கடுப்பேற்றுவதை  ஓப்பனிங்  சீனிலேயே  கண்டிக்கும்  விதம் 


2  ராமராஜனின்  மெகா  ஹிட்  படங்களில்  வரும்  பாடல்களை  ஆங்காங்கே  சாமார்த்தியமாக  ஓட  விட்டது  நாஸ்டாலஜிக்  மொமெண்ட்சை  தருகிறது 



  ரசித்த  வசனங்கள் 


1    வீட்டுக்கு  வெளியே  கக்கூஸ்  இருந்த  வரை  இத்தனை  வியாதிகள்  எல்லாம்  இல்லை , எப்போ  வீட்டுக்கு  உள்ளே  கக்கூஸ்  வந்ததோ  அப்பவே  இல்லாத  வியாதிகள்  எல்லாம்  வந்திருச்சு 


2  போலீஸ்  காரங்களுக்கு  எந்த  பேங்க்ல  லோன்  தர்றாங்க ?


 நான்  என்ன  பண்ண  ? ரூல்ஸ்  அப்படி  இருக்கு 


3  பெயரோ  கல்யாண் , ஆனால்  இன்னும்  திருமணம்  ஆகவில்லை 


4  நான்  மட்டும்  அங்கே  வந்தேன் , உன்னை  டவ்சரோட  உக்கார  வெச்சுடுவேன்


  டவுசரோடதான்  என்  வாழ்க்கையே  ஆரம்பிச்சுது , நல்லா  தான்  போய்க்கிட்டு  இருக்கு  


6  அக்கா  , கொஞ்சம்  இஞ்சி  இருந்தா  கொடுங்க 


 ஏம்மா,  நோ  டி வி  நியூஸ்  எல்லாம்  பார்க்கவே  மாட்டியா?


 இல்லக்கா  , நான்  ஃபேஸ்  புக் ,  இன்ஸ்டா  மட்டும்  தான்  பார்ப்பேன்


சரி  உள்ளே  வந்து  எல்லாத்தையும்  பாரு 


7  உலகத்துல  இருக்கும்  மனிதர்களை  ரெண்டே  வகையாப்பிரிச்சுடலாம்,  1  பணம்  கொடுக்கிறவங்க  2  பணம்  வாங்கறவங்க 


8  இன்னைக்கு பாட்டு பாடி பால் கறக்க முடியாது. மிஷினை மாட்டி விடுறேன், நீயே கறந்துக்கோ” 


9   நான்  மீன்  குழம்பு  வெச்சா  அதை  மீனே  சாப்பிடாது


10  ஏம்மா, உங்க  முதுகில் ஒரு  பட்டாம்பூச்சி  உக்காந்திருக்கே  அதை  அனுப்பி  விடுங்க  முதல்ல 

 அது டாட்டூ மேன் 

11  ஜப்தி  பண்ணுன  வீட்டை  நாம  வாங்க  வேணாம், அவங்க  கனவு  உடைஞ்ச  இடத்துல  நம்ம  வாழ்க்கையை  ஆரம்பிக்கனுமா? 


12  எங்கே  கட்டிடங்கள்  அதிகமா  கட்டப்பட்டுக்கொண்டு  இருக்கோ  அங்கே  வளர்ச்சி  அதிகமா  இருக்குனு  அர்த்தம் 


13  குழந்தை  வாய்  விட்டு  அழுதாத்தான்  அம்மாவுக்கே  குழந்தை  பசியா  இருக்குனு  தெரிஞ்சு  பால்  குடுப்பா , ஆனா  குழந்தை  / பொண்ணு  முகத்தைப்பார்த்தே  அவளோட  தேவை  என்னனு  தெரிஞ்சு  அதை  நிறைவேத்தி  வைக்கறவன்  தான்  அப்பா 


14  சின்ன சின்ன கடையில்கூட கடன் அன்பை முறிக்கும், என எழுதி இருக்கு, பேங்கில் கடன் ஆயுளை முறிக்கும் என எழுதி போடணும்.


15  பிறக்கப்போற  குழந்தைக்கு  டாக்டர்  ஆகு  எஞ்சினியர்  ஆகுன்னு  சொல்லிக்கொடுக்காம  கடன்  வாங்காம  வாழ  வழி  பாருனு  சொல்லிக்கொடுங்க 


16  ஏழையாக்கூட  சாகலாம், ஆனா  கடனாளியா  சாகக்கூடாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஹீரோ  ஓப்பனிங்  சீனில்  பஸ்சை  விட்டு  இறங்கும்போது  இடது  காலை   முதலில்  வைப்பது  போல்  எடுத்ததைத்தவிர்த்திருக்கலாம், வலது  கால் தானே  ராசியானது ? 


2  ஃபிளாஸ்பேக்  காட்சி  மிக  நீளம். பொதுவாக  ஷங்கர்  படங்களில்  அரை  மணி  நேரத்தில்  சொல்ல  வந்த  ஃபிளாஷ்பேக்கை  வலிமையாக  சொல்லி  விடுவார். 3  மணி  நேரப்படத்தில்  அரை  மணி  நேர  ஃபிளாஸ்பேக்  பெரிதாக  இருக்காது , ஆனால்  இப்படம்  மொத்தமே  இரண்டரை  மணி  நேரம், அதில்  ஒன்றே  கால்  மணி  நேரம்  ஃபிளாஸ்பேக்  தான் 


3    இடைவேளை  ட்விஸ்ட்  இதுவரை  எந்த  தமிழ்  சினிமாவிலும்  வராதது  என  நாயகன்  பேட்டி  அளித்ததைப்போல  பிரமாதமாக  எல்லாம்  இல்லை ,  அவர்  ஒரு  முன்னாள்  ராணுவ  வீரர்  என்ற  ட்விஸ்ட்  தான்  அது ,. ஒர்க்  அவுட்  ஆகவில்லை .  அவரது  உருவம்   பார்த்தால்  அப்படித்தோன்றவில்லை 


4   சும்மா  தள்ளி  விட்டாலே  விழுவது  போன்ற  மூப்புடன்  இருக்கும்  நாயகனை  பேங்க்  மேனேஜர்  கண்டு பயந்து  நடுங்குவது  கேலிக்கூத்து 


5   தேவை  இல்லாமல்  அகலக்கால்  வைத்து  விட்டு  சக்திக்கு  மீறிக்கடன்  வாங்கி  விட்டு  பழியை  எல்லாம்  வங்கி  மேல்  போடுவது  எந்த  வகையில்  நியாயம் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ராமராஜன்  முன்னாள்  ரசிகர்கள்   , நைண்ட்டீஸ்  கிட்ஸ்  மட்டுமே  படம்  பார்க்க  முடியும், இக்கால  2 கே  கிட்ஸ்க்குப்படம்  பிடிக்காது .  ரேட்டிங்  2 / 5 , ஆனந்த  விகடன்  மார்க்  மே  பி  35 , குமுதம்  ரேங்க்கிங்  மேபி  சுமார் 


நன்றி - அனிச்சம்  மின்  இதழ்  1/6/2024 

0 comments: