Friday, February 17, 2023

வாத்தி (2023) தமிழ் - சினிமா விமர்சனம்


  சிவகார்த்திகேயனின்  பிரின்ஸ் , விஜய்-ன்  வாரிசு  படங்களைத்தொடர்ந்து  ஒரு  முன்னணி  தமிழ்  ஹீரோ  ஒரு  தெலுங்கு  டைரக்டரை  நம்பி  ஏமாந்த  சம்பவம் இது.  . தமிழ் , தெலுங்கு  என  இரு  மொழிகளில்  உருவான  படம்  என  அறிவிக்கப்பட்டாலும் இது தெலுங்கு  நடிகர்களை  வைத்து  எடுக்கப்பட்ட  தெலுங்குப்படத்தின்  தமிழ் டப்பிங்  வெர்சன்  தான்


கடந்த  ஐந்து  ஆண்டுகளாக  தெலுங்கில்  எந்த  ஒரு  ஹிட்  படமுமே  தராத  இயக்குநர்  வெங்கி  அட்லூரியை  நம்பி  தனுஷ்  ஒரு  படம்  பண்ணத்துணிந்தமைக்கு  பாராட்டுக்கள் .. ஆக்சுவலா  இவர்  வழக்கமாக  ரொமாண்டிக்  சப்ஜெக்ட்களை  எடுப்பவர். அவருக்கு  இது  மாதிரி சப்ஜெக்ட்  புதுசு . தனது  பெயரிலேயே  அட்லீ இருப்பதால்  வெங்கி  அட்லூரி  ஏற்கனவே  கல்வித்திட்டத்தை  சாடிய  படங்களான  சமுத்திரக்கனியின்  சாட்டை , விமல் -ன்  வாகை  சூடவா ,ஜோதிகாவின்  ராட்சசி , ஷங்கரின்  ஜென்டில்மேன், நண்பன், கமலின்  நம்மவர் , ஷாருக்கானின்  ஸ்வதேஷ் ( 2004), ராணி முகர்ஜியின்  ஹிட்ச்கி(2018)  போன்ற  பல  படங்களில்  ஏற்கனவே  வந்த  காட்சிகள் , வசனங்களை  அப்படியே   கதம்ப  மாலை  ஆக்கி  படம்  தந்திருக்கிறார்


 அசுரன்  படத்தின்  க்ளைமாக்ஸில்  தனுஷ்  ஒரு  வசனம்  சொல்வார் , உன்  கிட்டே  சொத்து  பத்து , நகை  நட்டு  இருந்தா  அதை  யாராவது  களவாடிட்டுப்போய்டலாம், ஆனா  கல்வியை உன்  கிட்டே  இருந்து  யாராலும்  திருட  முடியாது.., இந்த  வசனம்  ஏற்படுத்திய  தாக்கத்தில் உருவான  படம்  தான்  இது , ஆனால்  அந்தப்படத்தில்  அந்த  வசனம்  ஏற்படுத்திய  தாக்கத்தில்  பாதி  கூட  இந்த  முழுப்படமும்  தரவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை  நடக்கும்  காலகட்டம் 1998-1999. கதை  நடக்கும்  இடம்  தமிழக- ஆந்திர  எல்லையில்  உள்ள  சோழபுரம்  எனும்  கிராமம்


பிரைவேட்  ஸ்கூல்  அசோசியேசனின்  தலைவர்  தான்  வில்லன் . இவருக்கு  சொந்தமாக  ஒரு  தனியார்  பள்ளியும்  இருக்கிறது.   எவ்வளவு  செலவானாலும்  பரவாயில்லை , நம்ம  பிள்ளை  தனியார்  பள்ளியில்  தான்  படிக்கனும், அங்கே  தான்  தரமான  கல்வி  கிடைக்கும், அங்கே  படிச்சாதான்  டாக்டராகவோ, இஞ்சினியராகவோ  வர  முடியும்  என்ற  எண்ணம்  பெற்றோர்களுக்கு  ஏற்பட  வேண்டும்  என்ற  நினைப்பு  உள்ளவர்  வில்லன் . அரசாங்கப்பள்ளியில்  படிப்பது  இழுக்கு , அதில்  படிக்கும்  மாணவர்கள்  பெரிய  அளவில்  முன்னேறிவிட  முடியாது  என்ற  எண்ணம்  பெற்றோர்களுக்கு  வர  வேண்டும்  என்ற  எண்ணம்  உள்ளவர்  வில்லன் 


எல்லோருமே  தனியார்  பள்ளியிலேயெ  படித்து  விட்டால்  அரசுப்பள்ளிகளின்  நிலை  என்ன  ஆகும் ? எனவே  நாங்களே  அரசுப்பள்ளிகளை  தத்து  ஏடுத்துக்கொண்டு  எங்களிடம்  உள்ள்   ஆசிரியர்களை  வைத்து நடத்துகிறோம்  என  வில்லன்   சொல்லி  அரசுப்பள்ளிகளை கையகப்படுத்துகிறார். ஆனால்  அவர்  எண்ணம்  நல்ல    அனுபவம்  உள்ள  ஆசிரியர்களை  தனியார்  பள்ளிகளில்  நியமிப்பது , அதிகம் அனுபவம்  இல்லாத புதிய  ஆசிரியர்களை  அரசுப்பள்ளியில்  நியமித்து  டம்மி  ஆக்குவது தான்.


நாயகன்  வில்லனின்  தனியார்  பள்ளியில்  ஒரு  உதவி  ஆசிரியர். அவரை   ஒரு  கிராமத்து அரசுப்பள்ளியில்  ஆசிரியராக   வில்லன்  நியமிக்கிறார். இவரு  அங்கே  போய்  என்னத்தைப்பெருசா  பண்ணிடப்போறார்  என்ற  எண்ணத்தில்தான்  வில்லன்  நாயகனை  நியமிக்கிறார். ஆனால்  நாயகன்  அங்கே  போய்  என்ன  என்ன  தரமான  சம்பவங்களை  செய்கிறார்? வில்லனுக்கு  எப்படி  ஆப்பு  வைக்கிறார்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 



நாயகனாக  தனுஷ். அசுரன் , கர்ணன், திருச்சிற்றம்பலம்   போன்ற  படங்களீல்  மாஸ்  காட்டி  இருந்தார், அந்த  அளவுக்கு  இந்தப்படத்தில்  அவருக்கு  தீனி  இல்லை  என்றாலும்  அவர்  அந்த  கதாபாத்திரத்துக்கு  எந்த  அளவு  நியாயம்  செய்ய  முடியுமோ   அந்த  அளவு  செய்திருக்கிறார். அவரது  அரைக்கை  சட்டை   கை  மடிப்பு  கூட  வாத்தியார்  என்பதால்  எம் ஜி ஆர்  டிரசிங்  சென்சை  ஃபாலோ  பண்ணி  தான் இருக்கிறது . கதைப்படி  இவர்  வாத்தியாராக  வந்தாலும்  இவரது  ந்டை  உடை  பாவனைகள்  உடல்  மொழி  எல்லாம்  ஒரு  மாணவனைப்போலத்தான்  யூத்  ஃபுல்லாக  இருக்கிறது . பல  காட்சிகளில்  ரஜினியின்  பாதிப்பு  இருக்கிறது 


வில்லனாக  சமுத்திரக்கனி . இதுவ்ரை   அவரை  நாயகனாக , குணச்சித்திர கதாபாத்திரமாக  பார்த்த  நமக்கு  வில்லனாகப்பார்க்க  சங்கடமாக  இருந்தாலும்  நடிப்பில்  அவர்  எந்தக்குறையும்  வைக்கவில்லை . கார்ப்பரேட்  வில்லன்  போல கல்விக்கு  எதிரான  வில்லனாக  காட்டப்பட்டு  இருக்கிறார்


 நாயகியாக  சம்யுக்தா  அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  ஓக்கே , அவருக்கு  ஆடை  வடிவமைப்பாளராக  பணி  புரிந்தவருக்கு  ஒரு  சபாஷ் . சேலையில்  வரும்  ஃபிளிட்டைக்கூட  கன  கச்சிதமாக  ஒரு  டீச்சருக்கு எப்படி  இருக்க  வெண்டுமோ  அதே  போல   வடிவமைத்த  விதம்  ;பிரமாதம் , ஆனால்  படத்தின்  பின்  பாதியில்  இவரது  சுவட்டையே  காணவில்லை


 பாரதிராஜா  ஒரே  ஒரு  சீனில்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார். அருமையான  நடிப்பு . , ஆடுகளம் நரேன்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு , ஊர்  தலைவராக  வரும் சாய்  குமார் , மாணவராக  வரும்  கென்  கருணாஷ்  அனைவரும்  கச்சிதம் 


நாயகன்  கணக்கு  வாத்தியாராக  வருகிறார், ஆனால்  நாயகியை  சரியாக  கணக்கு  பண்ணவில்லை , அதே  போல்  நாயகி  பயாலஜி  டீச்சராக  வருகிறார், ஆனால்  நாயகனுடனான கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 




சபாஷ்  டைரக்டர்

1  அரசுப்பள்ளியில்  மினிமம்  ஐந்து  மாணவர்களாவது  இருக்க  வேண்டும், இல்லையெனில்   பள்ளி  மூடப்படும்  எனும் நிலையில்  அந்த  ஐந்து  பேராவது  படிக்க  வர  வேண்டும்  என  மாணவர்களின்  பெற்றோரிடம்  நாயகி  கெஞ்சுவது  போல  ஒரு  காட்சி THE LITTLE BIG MASTER(2015) படத்தில் இருக்கும், அதை அப்படியே இதிலும் வைத்த லாவகம்


2 வண்டிக்கு  அச்சாணி  எப்படி  முக்கியமோ  அது  மாதிரி  குழந்தைகளுக்கு  கல்வி  மிக  முக்கியம் , என்ன தான்  நாம   ஆசிரியர்களை  கேலியும்  , கிண்டலும்  செய்தாலும்  நம்  வாழ்க்கையில்  மறக்க  முடியாத  நபர்களாக  நம்மை  மாற்றி   அமைக்கும்  டர்னிங்  பாயிண்ட் ஆக  ஆசிரியர்கள்  விளங்குகிறார்கள்  என்ற  கருத்தை  வலியுறுத்திய  விதம்


3  ஜாதி , மதம்,  ஏழை  , பணக்காரன்  என்ற  பாகுபாடு  இல்லாமல்  எல்லாரும்  சரிசமமாக  பழகக்கூடிய  இடம்  பள்ளிக்கூடம், ஆனால்  அங்கேயே  ஒரு  கட்டத்தில்  இவன்  நம்ம  ஆளு  , அவன்  பெரிய இடத்துப்பையன்  எனற  வித்தியாசம்  காட்டப்படும்போது  நாயகன்  அந்த  மாறுபாடான  எண்ணத்தை  வேரோடு  களைய  ஸ்பீடு , வெலாசிட்டி  என  இரு    சப்ஜெக்ட்  சம்பந்தமாக  பாடம்  நடத்தி  அவர்களுக்கு  உணர  வைக்கும்  மாஸ்  சீன் 


4  ஜிவிபியின்  இசையில்  ஒரு தலைக்காதலைத்தந்து  பாட்டு  செம  ஹிட்  அதை  படமாக்கிய  விதமும்  அருமை . வாத்தி  பாட்டு  தனுஷ்  ரசிகர்கள்  கொண்டாடலாம். பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


5  கல்வி  முறையில்  நிகழும்  அவலங்கள் , அரசியல்  ஆக்கப்ப்ட்ட  கல்வி  நிறுவனங்கள் , பெண்  கல்வியின்  அவசியம், அரசுப்பளிகள்  எப்படி  எதனால்  மூடப்படுகின்றது ? தனியார்  பள்ளிகள்  எப்படி  தனக்கான  பாதையைத்தேர்ந்தெடுத்து  வெற்றி  பெறுகின்றன, அரசுப்பள்ளிகளை  அரசாங்கம்  கை விடும்  நிலை , வியாபாரம்  ஆகி  விட்ட  கல்வி  போன்ற  விஷயங்களை  பெசிய  விதம் 

6  தனுஷின்  ஸ்க்ரீன் பிரசென்ஸ், க்ளீன்  ஷேவ்  லுக்  


7  அடல்ட்  கண்ட்டெண்ட்ஸ்  இல்லாத  , குடும்பத்துடன்  காணத்தக்க கண்ணியமான  காட்சிகள் 


8   1999 -2000  காலக்கட்டத்தை  கண்  முன்  நிறுத்தும்  ஆர்ட்  டைரக்சன் 


  ரசித்த  வசனங்கள் 


1  பணம்  எப்போ  வேணா  எப்படி வேணா  சம்பாதிச்சுக்கலாம், ஆனா  படிப்பு  தான்  மரியாதையை  சம்பாதித்துக்கொடுக்கும் 


2  யாருமே  இங்கே  தேவை  இல்லாத  ஆட்கள்  கிடையாது .ஒருத்தங்க  நமக்குத்தேவைப்படும்போது  அவங்க  என்ன  ஆளுங்க ( என்ன  ஜாதி ) என்பது  நம் கண்ணுக்கு  தெரியாது 

3  படிப்பை  பிரசாதம்  மாதிரி  கொடுங்க , அதை  ஃபைவ் ஸ்டார்  ஹோட்டல்  சாப்பாடு  மாதிரி  விற்காதீர்கள் 

4  குழந்தை  ஆசைப்பட்டதை  நாம  வாங்கிக்கொடுக்கலைன்னா  அந்தக்குழந்தை  அன்னைக்கு  மட்டும்தான்  அழும், ஆனா  அதை  வாங்கிகொடுக்க  முடியலையேனு   அவங்க  அம்மா, அப்பா  காலம்  பூரா  அழுதுட்டு  இருப்பாங்க 


5  தரமான  கல்வி  வேணும்னா  காசு  கொடுக்கனும்

6  படிக்கனும்கற  ஆசை எவனுக்கு  வந்தாலும்  பணம்  கட்டுனாத்கான்  நல்ல  கல்வி  கிடைக்கும்கற  எண்ணத்தை  விதைக்கனும்


7  நம்  நாட்டைப்பொறுத்தவரை  கல்வி  ஒரு நாந்பிராஃபிட்டபிள்  சர்வீஸ்


8    தயவு  செஞ்சு  நீ  அரசியலுக்கு  வந்துடாத 


 ம்ஹூம்,கல்வில  கிடைக்கற  காசு  அரசியலில்  கிடைக்காது 


9  ஜீரோ  ஃபீஸ்  ஜீரோ  எஜூகேஷன்  , மோர்  ஃபீஸ்  மோர்  எஜூக்கேஷன், இதுதான்  இப்போ  ட்ரெண்ட்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பல்லாண்டு  வாழ்க  படத்தில்  எம் ஜி ஆர் , இவண்  பட  க்ளைமாக்சில்  இரா  பார்த்திபன்  பேசியே  வில்லன்களை  திருத்துவது  போல  நாயகன்  ஓவராகப்பேசிப்பெசி  எல்லோரைய்ம்  திருத்துவது  ஓவர் 


2 நாயகனுக்குக்கொடுக்கப்படும்  ஓவர்  பில்டப் , கடவுள்  ரேஞ்சுக்கு  தூக்கி  வைப்பது  எல்லாம்  அய்யகோ 


3  தமிழ்ப்படத்துக்கான  சாயல்  கொஞ்சம்  கூட  இல்லாதது  பெரிய  மைனஸ் 


4  நாயகன் ஆசிர்யராக  பள்ளி  மாணவர்க்ளுக்கு  க்ளாஸ்  எடுக்கிறாரா? ஆடியன்சான  நமக்கு  பாடம்  நடத்தறாரா? என  அப்பப்ப  டவுட்  வரும்  அளவு  ஓவரோ  ஒவர்  பிர்சங்கங்கள் 


5 படத்தில்  காதல்  காட்சிகள் , காமெடி  டிராக்  எதுவும்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை , நமக்கு  ஒரு  கனெக்ட்டையும்  கொடுக்கவில்லை


6  பாரதியார் வேடம்  போட்டு  வரும்  நாயகன்  போடும்  ஒரு  ஃபைட்  சீன்  காமெடியாக  இருக்கிறது , அதை  தவிர்த்திருக்கலாம் 


7  பிரச்சாரப்படம்  போல , ஆர்ட் ஃபிலிம்  போல  பல  காட்சிகள்  படமாக்கப்பட்ட  விதம் 

8  பிள்ளைகளை  பள்ளிக்கு  அனுப்ப  மாட்டோம் என  அடம்  பிடிக்கும்  பெற்றோர்  பஞ்சாயத்தார்  முன்னிலையில் தனுஷ்  பேசும்  3  நிமிச  வசனத்தில்  மனம் மாறி  அனுப்புவது  நம்ப  முடியாத  நாடகத்தனம்

9  நாயகன்  ஊரை  விட்டு  விரட்டப்படும்  தருணம்  ஒரு  பையன்  பேசும்  சின்ன  வசனத்தால்  மொத்த  ஊரும்  மனம் மாறும்  காட்சி  நம்ப  முடியாத இடம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  எதுவும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -வாத்தி (2023) தமிழ்- பி சி செண்ட்டர்களில் ஈசியாக ஹிட் ஆகக்கூடிய ,முன் கூட்டியே யூகிக்க முடிந்த திரைக்கதைதான்,ஹாங்க்காங் படமான . THE LITTLE BIG MASTER(2015) ஹிருத்திக் ரோஷன் நடித்த ஹிந்திப்படமான SUPER 30 ஆகிய படங்களின் அட்லி வெர்சன் பட்டி டிங்கரிங் கதை தான். தெலுங்கு டப்பிங் படம் போல படம் பூரா தெலுங்கு ஆர்ட்டிஸ்ட்கள், லிப் சிங்க் செட் ஆகவே இல்லை. ஆனந்த விகடன் மார்க் =41 , ரேட்டிங் 2.5 /5