Tuesday, October 13, 2020

கல்லுக்குள் ஈரம் (1980)– சினிமா விமர்சனம் ( கிராமியக்காதல்)

 


தனது  சிஷ்யனை   ஹீரோ  ஆக்கும் முயற்சியில்  ஜெயிக்கும் குருவுக்கு தானே அதே போல் ஹீரோ ஆனா என்ன? எனும் ஆசை தோன்றியதில் வியப்பில்லை

புதிய  வார்ப்புகள்  ஹிட் ஆனதால்  அடுத்து  பாரதிராஜா தனது  ஒளிப்பதிவாளர்  பிஎஸ் நிவாஸ்  இயக்கத்தில்    நடித்த  படம்  தான் இது .இந்தப்படத்தைப்பற்றி அறிமுகம்  செய்யும்  முன்  இந்தப்படம்  பார்க்கத்தூண்டிய  பாட்டைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். சிறு பொன்மணி   அசையும்  செம  ஹிட் மெலோடி .கவிஞர்  வைரமுத்து  தன் மனைவியின்  பெயரை  வைத்து  எழுதிய  பாடல்  என்று சிலரும்,  அதை  எழுதியதே  அவர்  மனைவிதான், இவர்  பேரைப்போட்டுக்கிட்டார்  என்றும்  சிலர்  சொல்றாங்க

 

ஒரு கிராமத்துக்கு  சினிமா  ஷூட்டிங்க்காக   படக்குழு  வந்து  இறங்குது. படத்தோட ஹீரோ  இந்தப்படத்தோட ஹீரோ கிடையாது , ஆனா  பட டைரக்டர்  தான்  இந்தப்பட  ஹீரோ

 

அந்த  கிராமத்தில்  வசிக்கும்  இரு பெண்கள் ல ஒருத்தி  ஹீரோ  மேல  ஆசைப்படறா, இன்னொருத்தி  டைரக்டர்  மேல  ஆசைப்படறா, இவங்க  2  பேரின்  காதல்  நிறைவேறுச்சா  ? இல்லையா? என்பதுதான்  க்ளைமாக்ஸ்

 

பொதுவா  சினிமா  ஷூட்டிங்  ஒரு சினிமால  காட்டினா  அல்லது  சினி ஃபீல்டு  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  வெச்சா  அந்தப்படம்  ஓடாது  என  கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்  உண்டு . உதா  கே பாக்யராஜின்  தாவணிக்கனவுகள் ,  எஸ்  வி சேகர்  நடிச்ச  சினிமா சினிமா ,  நீங்களும் ஹீரோதான் , சிவாஜி  பிரபு  நடிச்ச  சாதனை

 

படத்துல  என்னை  ஆச்ச்சரியப்படுத்திய  விஷயம் இந்தப்படத்துல  2  நாயகிகள்  அறிமுகம். ஆனா  பாரதிராஜா  வழக்கப்படி  ஆர்  வரிசைல  பேர் வைக்கலை . ஏன்னா  அதிகாரப்பூர்வமா  இவர்  டைரக்டர்  கிடையாதே?

 

ஆந்திரா  லேடி  சூப்பர்  ஸ்டாரா  விஜய சாந்தி  வருவார்னு இந்தப்படம் பார்க்கும்போது  யாருமே    நினைச்சிருக்க மாட்டாங்க .விஜயசாந்திக்கு  சின்ன  ரோல் தான்  நல்லா  பண்ணி  இருந்தாங்க

 

 ஆனா  அருணா  தான் மெயின் . மொத்தப்படத்தையும் தன்  இரு கண்களால்  தாங்கி இருந்தாங்க  என்னா  பொண்ணுடா  இவ  அப்டினு ஒரு சொலவடை உண்டு   , அந்த  மாதிரி  என்ன  கண்ணுடா இது  என  சொல்ல வைக்கும் அபாரமான  வீச்சு  உடைய கண்கள்  அவர்  தன் கண்களால்  வெட்கம், ஆச்சரியம் , கோபம், அழுகை , இயலாமை  என நவரசங்களையும்  கொட்டும்போது  பிரமிக்க வைக்கிறார்

 

பாரதிராஜாவின்  ஃபேவரைட்  காமெரா ஆங்கிளான  சிங்கிள்  கண்ணுக்கு  டைட்  க்ளோசப்  வைக்கும் ஷாட்கள்  இதில் ஏராளம். துணிகள்  சலவை  பண்ணும்  ரோல்  நாயகிக்கு  .  பாரதிராஜாவின்  உடைகளை  அவர்  கொண்டு வந்து  தரும்  பிரசண்ட்டேசன்  ஆஹா அருமை


இதயம்  படத்தில்  ஹீரோ முரளி  கடைசி  வரை தன் காதலை சொல்லாமலே இருப்பாரே அதற்கு முன்னோடி இந்தப்பட நாயகி அருணாதான், கடைசி  வரை வாய் விட்டு தன் காதலை  வெளிப்படுத்தாத கேரக்டர்

 

சுதாகர்  பட  ஷூட்டிங் படி  ஹீரோவா வந்தாலும்  அதிக  வேலை  இல்லை

 

பாரதிராஜாவுக்கு  இதில்  ஹீரோ  வேடம்  என்றாலும்   இயக்குநர்  ஆகவே  வருவதால்  இவரது  நடிப்பைப்பற்றி முழு விமர்சனம்  சொல்ல  முடியவில்லை. பைத்தியமாக  எப்படி நடித்துக்காட்டுறார்  என்பதும்  ,  ஒரு பெண்  எப்படி வெட்கப்படும் காட்சியில்  நடிக்கனும்  என  சொல்லித்தருவதும்  அழகு / மற்றபடி  அவர்  ஷூட்டிங்  ஸ்பாட்டில்  எப்போதும்  சிடு சிடு என  கோபமாகவே இருப்பார்  என  பேச்சு  உண்டு   , அதை  அப்படியே  காட்டி இருக்காங்க

 

 வாகை  சந்திர சேகருக்கு  வித்தியாசமான  ரோல் . மலையூர் மம்பட்டியான்  செந்தில்  கேரக்டரை  நினைவுபடுத்துது

 

சினிமா  ஷூட்டிங்கை வேடிக்கை  பார்க்கும்  கிராம மக்கள்   அதே போல்  ஒரு டம்மி  ஷூட்டிங்  மாதிரி  சிச்சுவேஷன்  ரெடி  பண்ணுவதும்  அதை  ஒட்டி வரும்  பாட்டும் அட்டகாசம்

 

தோப்பில் ஒரு நாடகம் நடக்குது  ஏலேலெங்கிளியே

தோகை மயில்


கவுண்டமணிக்கு ஒரு முக்கிய ரோல் உண்டு 

 

ஒளிப்பதிவு  குட் . இசை  கலக்கல் .  வைரமுத்துவின்  வைர  வரிகள் அம்சம்

 

அசிஸ்டெண்ட்  டைரக்டர்  கே  ரங்கராஜ்  தான்  வசனம்

 


 நச்  வசனங்கள்

 

1       1   வர்றவளுக்கு  ஒத்தாசையா இருக்கனும்னுதான்  ஒத்திகை பார்க்கறேன்

ஒத்திகையை  சமையல்கட்டோட   நிறுத்திக்குங்க


2 டவுன்ல இருந்தவங்களுக்கு இந்த கிராம சாப்பாடு பிடிக்குமா?


 நானும் கிராமத்துல இருந்து வந்தவன் தான் குடுங்க சாப்பிடறேன்


திரைக்கதையில் சில  நெருடல்கள்



1  இதற்கு முந்தைய  படமான  நிழல்கள்  தோல்வி அடைந்ததற்கு   முக்கியக்காரணம்   நெகடிவ்  க்ளைமாக்ஸ்   மற்றும் அனைத்து  கேரக்டர்களுக்கும்  சோக முடிவு  என்பதே  என்று உணர்ந்தும் இந்தப்படத்திலும்  அதை  பிரதிபலித்தது ஏனோ?


2   விஜயசாந்தி  சுதாகரிடம்  தன் காதலை வெளிப்படுத்தி   அவர்  மறுக்கும்போது   தற்கொலை  வரை தன் காதல்  போகும் என்ற  மன உறுதியை  அவர்  வெளிப்படுத்தவே இல்லை . க்ளைமாக்சில்  சுதாகர்  தன் கண் எதிரே  விஜய சாந்தி  நடனம்  ஆடிக்கொண்டே  விழுந்து  இறக்கும்போது  போதிய அதிர்ச்சியை  பதிவு  செய்யலை




சி.பி ஃபைனல்  கமெண்ட் -  காதலிப்பவர்கள், காதல்  கொண்டவர்கள்  அனைவருக்கும்  படம் பிடிக்கும். பாரதிராஜா  ஹீரோவா  நடிச்சா  யார் பார்ப்பது  என்ற  எண்ணம்  இல்லாமல்  அருணா  நடிப்பு  இளையராஜா  இசைக்காகவே பார்க்கலாம். ரேட்டிங் 2.75 / 5  . யூ  ட்யூப்ல் கிடைக்குது

0 comments: