Showing posts with label attarintiki daredi. Show all posts
Showing posts with label attarintiki daredi. Show all posts

Monday, October 07, 2013

attarintiki daredi - அத்தரிண்டிக்கி தாரிதி (தெலுங்கு) -சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

ஆந்திராவில் ‘பவர் ஸ்டார்’ படம் என்றாலே தாறுமாறான ஓபனிங் கிடைக்கும்.  பவர் ஸ்டார் என்றால் அய்யோ நம்ம ஊர் பவர் ஸ்டார் இல்லைங்கோ!!  எப்போதும் ஆந்திராவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.  இவர் நடித்த ‘குஷி’ படம் அங்கு வெளியான போது வசூலில் சரியான புயல் உருவானது. டிரண்டி உடைகளிலும், தனக்கென்ற ஒரு தனிப்பட்ட தோரணையிலும் பார்வையாளரை வலையில் அடைப்பவர் பவன் கல்யாண்.  சரி துதி பாடுவதை நிறுத்திவிட்டு விமர்சனத்திற்குள் நுழைவோம்.

இப்படத்தை பொருத்தவரை டைட்டிலிலே கதை அடங்கியுள்ளது.  பல கோடிகளுக்கு அதிபதியான செல்வந்தர் பூமம் இரானி. இவருடைய மகள் நதியா.  நதியா ஸ்டேடஸில் பின் தங்கியுள்ள மாப்பிள்ளையை மணம் முடிக்க, காதல் திருமணத்தை எதிர்க்கும் அப்பா பூமம், மகளை வீட்டைவிட்டு துரத்துகிறார்.  பல வருடம் கழித்து தன் பேரனாகிய (மகனின் மகன்) பவன்கல்யாணிடம் தன் மகள் நதியாவை அழைத்து வரவேண்டும், ஒரு முறை அவளை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.  தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற பவன் கல்யாண் ஹைதராபாத் வருகிறார்.நதியா வீட்டில் டிரைவராக சேருகிறார். அவர் மனதை மாற்றி தன் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுகிறாரா என்பது தான் மீதிக் கதை.


‘ஜல்சா’ படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரிவிக்ரம், பவன் கல்யாண், இசையமைப்பாளர் டி.எஸ்.பி (தேவி ஸ்ரீ பிரசாத்) கூட்டணியில் வெளிவந்துள்ள படம் இது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் திருட்டு டிவிடி இணையதளத்தில் வெளியானதால் ஏகப்பட்ட சர்ச்சைகள். பவன் கல்யாண் பண நஷ்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக கூறியது தீப்போல் டோலிவுட்டில் பரவியது.  படம் வெளியான போது ஆந்திராவில் மட்டுமல்ல தமிழ் நாட்டில் கூட தாறுமாறு ஓப்பனிங் கிடைத்தது.

டோலிவுட் படங்களில் பேமிலி டிராமாவென்றால் ஒரு டெம்ப்ளேட் அமைந்திருக்கும். இப்படமும் அந்த விதி மீறாதபடி அமைந்துள்ளது.  


1) அனைத்து கதாபாத்திரங்களுக்கிடையே கதாநாயகன் மட்டும் வித்தியாசமாக அமைந்திருப்பார்.  டான்ஸ், பாடல், ரொமான்ஸ் இப்படி பல பிரிவுகலும் சூரக்கோட்டை சிங்கக் குட்டியாக விளங்குவார்.  ஹைடெக் யூத் போல் காட்டப்படும் இவர்கள் ஷுரிட்டி, க்ளாரிடி இப்படி ஆங்கிலத்தில் சம்மந்தமற்ற ரைமிங் வசனங்களை பேசுவார்.

2) கண்டிப்பாக குடும்பம் ஏதோ ஒரு வகையில் பிரிந்திருக்கும். இல்லை குடும்பத்தினருடன் ஒற்றுமை இல்லாமல் போகும். கதாநாயகன் தான் அக்குடும்பத்தை இணைக்கும் பாலமாக திகழ்வார்.  கடைசியில் மூன்று நான்கு பக்கங்களுக்கு சென்டிமென்ட் வசனங்கள் பேசி க்ளைமாக்ஸில் குடும்பம் இணைவது தான் சுப முடிவாக திகழும்.

3) திரைக்கதைக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பிரம்மானந்தம் புகுத்தப்படுவார் இவர் வரும் காட்சியை வைத்து அரை மணி நேரத்திற்கு படத்தை ஒப்பேற்றுவர்.

4) ஹீரோ போகும் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். கண்டிப்பாக ஹீரோவின் வீர தீர சாகசம், பஞ்ச் டைலாக்குகளுக்கு அப்பெண் மயங்கி விழ வேண்டும்.

5) எல்லாவற்றிற்கும் மேல் முக்கியமாக முதற் காட்சியில் ஒரு நிகழ்வு நடக்க வேண்டும். அதேபோன்ற நிகழ்வு க்ளைமாக்ஸில் நடக்கும் போது தான் தவறு செய்த மனிதர்கள் திருந்த முடியும்.


உதாரணம் ‘மிஸ்டர் பெர்பக்ட்’ இப்படத்தில் குடும்ப நெறிகள் மீது நம்பிக்கையற்றவர் பிரபாஸ். சிறு வயது பிரபாஸிடம் அப்பா நாஸர் இவரின் கையில் நீரை விட்டு அதை பிடித்துக் கொள்ளச் சொல்வார். ஒற்றைக் கையால் இவரால் அதை பிடிக்க முடியாது.  இரண்டு கைகளை குவித்துக் கொண்டு தங்க வைப்பார்.  அப்போது நாஸர் இப்படித்தான் குடும்பம், சேர்ந்திருந்தால் தான் வாழ முடியும் என்று அறிவுரை கூறுவார். அப்பா சொன்ன இந்நெறியை க்ளைமாக்ஸில் நினைவூட்டி குடும்பத்தின் உன்னதத்தை நாயகன் உணர்த்துவார்!! இப்படி க்ளைமாக்ஸில் கண்டிப்பாக மாரல் ஆஃப் தி ஸ்டோரி அமையப்படவேண்டும்.

இதைப்போன்ற பேமிலி டிராமாக்களில் கண்டிப்பாக முதற்காட்சியை தவற விடக் கூடாது. ஏனெனில் அது தான் க்ளைமாக்ஸின் தூண்டிலாக அமைந்திருக்கும்.  இப்படத்திலும் அப்படித்தான் முதற் காட்சியில் ஸ்டேடஸ் குறைவாக ஒரு மாப்பிள்ளையை மணமுடித்து வந்ததால் அப்பா பூமம் இரானியால் மகள் நதியா விரட்டப்படுகிறார். ளைமாக்ஸில் நதியாவின் மகள் சமந்தாவை, நாயகன் மணமுடிக்கப் பார்க்கும் போது நதியாவின் கணவர் வெறும் டிரைவர் உனக்கு எப்படி என் பெண்ணை கொடுப்பது எனக் கேட்கிறார்.  இப்போது தான் ஹீரோ தன் தாத்தா பூமம் இரானி நதியா மீது காட்டிய கோபம் மட்டும் தவறா?? 


ஜீன்ஸ் படத்தில் வருவது போல் அவங்க செய்தது தப்புன்னா, நீங்க செய்ததும் தப்புதான்!!. நீங்க செய்தது சரின்னா, தாத்தா செய்ததும சரிதான்!! என்று வசனம் பேசுகிறார். இதனால் குடும்பம் இணைகிறது. கடைசியில் ஆனந்தம் ஆனந்தம் பாடும் க்ளைமாக்ஸ்.

இப்படத்தை பேசுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை.  அனைத்துமே நாம் வழக்கமான சினிமாவில் பார்த்ததொன்று தான்.  பவன் கல்யாணின் ஹீரோயிசம் ரொம்ப ஓவராக அமைந்துள்ளது.  சும்மா சும்மா பக்கத்திலே இருப்பவர்களைப் போட்டு அடிச்சுக்கிட்டே இருக்காரு. இந்த ரயில்வே ஸ்டேஷன் 15 நிமிஷத்திற்கு என் கன்ட்ரோல்ல வேணும்னு சொல்வது போன்று எவ்ளவோ விஷயம்.

சமந்தா, ப்ரணிதா, கோட்டா ஸ்ரீனிவாசராவ், நதியா, பூமம் இரானியின் நடிப்பு ஏற்கனவே வேறொரு படத்தில் வேறு கதாபாத்திரமோ அல்லது இவர்களே நடித்துப் பார்த்த ஒன்றாகத்தான் திகழ்கிறது. தமிழில் கடந்த சில படங்களில் வெறும் இரைச்சலை மட்டும் இசையென படைக்கும் டி.எஸ்.பி. தெலுங்கில் மட்டும் நல்ல பாடல்களைத் தருகிறார்.  இப்படத்தில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளது.

மொத்தத்தில்: ரொம்ப நாளுக்கு பிறகு தெலுங்கில் வழக்கமான ஒரு பேமிலி டிராமா, போர் அடிக்காமல் போகின்றது.
a
  • நடிகர் : பவன் கல்யாண்
  • நடிகை : சமந்தா
  • இயக்குனர் :த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்