Showing posts with label ஸ்டெர்லைட் ஆலை. Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட் ஆலை. Show all posts

Wednesday, April 03, 2013

ஸ்டெர்லைட் ரகசியம் - வைகோ! @ ஜூனியர் விகடன்


வளைக்கப் பார்த்தார் அந்த ஆலையின் அதிபர்!
ஸ்டெர்லைட் ரகசியம் சொல்லும் வைகோ!


ஆலையைப் பூட்டும் உத்தரவு வந்ததுமே அனைவரும் வாழ்த்து சொன்னது வைகோவுக்குத்தான். 'இது எங்களின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று, ம.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அங்கும் சென்று வைகோ வாதாடினார். ஏப்ரல் 2-ம் தேதி, உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்லி செல்வதற்கு வழக்கறிஞர் தேவதாஸு​டன் தயாராகிக்கொண்டு இருந்த வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் சந்தித்தோம். 

''ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று, இந்தப் பிரச்னையை நீங்கள் எப்போது கையில் எடுத்தீர்கள்?'


''என்னுடைய வாழ்நாளில் வரலாற்று முக்கியத்​துவம் வாய்ந்த ஒரு சாதனையைப் படைத்த மனநிறைவோடு, உங்களைச் சந்திக்கிறேன். மக்கள் மன்றத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு இன்று ஒரு விடிவு பிறந்துள்ளது. இன்று, சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு ஓரளவு உருவாகியுள்ளது. ஆனால், இந்த ஆலையை அவர்கள் தொடங்கத் திட்டமிட்டபோது அப்படி இல்லை. 'வளர்ச்சியைத் தடுக்கிறோம்’ என்றுகூட சிலர் பிரசாரம் செய்தனர். எனவே, மக்களிடம் விழிப்பு 
உணர்வை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கினோம்.

1994-ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கினர். அந்த ஆலையில் இருந்து விஷப் புகை வெளி​யேறினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று, அந்த மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் கொந்தளித்துப்போன மக்கள், இரும்புக் கம்பி, சம்மட்டி சகிதமாகச் சென்று அந்த ஆலையை அடித்து நொறுக்கினர். மக்கள் போராட்டமாக அது வெடித்தது. உடனே, அந்த மாநில அரசு ஆலையின் லைசென்ஸை ரத்துசெய்துவிட்டது. கோவாவில் தொடங்க அரசிடம் அனுமதி கேட்டனர். அங்கு அனுமதி கிடைக்கவில்லை. குஜராத் சென்றனர். அங்கேயும் அனுமதிக்கவில்லை. அதன் பிறகுதான், தமிழகத்துக்கு வந்தனர்.
தமிழ்நாட்டில் அனுமதி கிடைத்துவிட்டது. ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்குப் பசுமை அடர்த்தி இருக்கவேண்டும் என்பது தளர்த்தப்பட முடியாத விதிமுறை. ஆனால், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் ஆலையை அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினர். தூத்துக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் அந்தக் காலகட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். இந்த ஆலையைத் தொடங்கினால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தினோம். சரியாகச் சொன்னால் 1996-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் இருந்தது முதல், கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாதத்தை எடுத்துவைத்தது வரை இந்த 17 ஆண்டு காலமும் என்னுடைய முக்கியமான வரலாற்றுக் கடமையாக இதைச் செய்தேன்.''


''இந்த ஆலையின் செயல்பாடுகள் காரணமாக எப்படிப்​பட்ட பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்கிறீர்கள்?''


''நிலம், நீர், காற்று ஆகிய மூன்றுமே மாசுபடு​கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நச்சுக் காற்றை சுவாசிப்பதால், மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் புற்றுநோயால் இறந்துள்ளனர். அவர்கள் மரணத்துக்குக் காரணம் புற்றுநோய் என்பதுகூட தெரியாத அறியாமையில் இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் மாசுபட்ட நிலத்தடி நீரைக் குடித்ததால் செத்து மடிந்திருக்கிறது.


 இங்கிருந்து மாதிரி எடுத்து அனுப்பப்பட்ட தண்ணீரை ஆய்வுசெய்த உலகப் புகழ்பெற்ற அமெரிக்கச் சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செரானி, 'இந்தத் தண்ணீரைக் குடித்தால், மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படும். கால்நடைகள் இறந்துவிடும்’ என்று அறிக்கை கொடுத்துள்ளார். இவை அனைத்தும் இத்தனை ஆண்டு காலம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி காலை லேசாக நச்சுவாயு வெளியேறியபோது மரங்களில் இருந்த இலைகள் பட்டுப்போயுள்ளன. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்படியானால் பெரிய பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், பாதிப்பின் அளவு அதிகரிக்கும். இன்னொரு போபால், தென்தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பதறித்தான் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தோம்.

'எங்களை, எங்கள் பிள்ளைகளை, பேரப்​பிள்ளைகளை ஆரோக்கியமாக வாழவிடுங்கள். ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்துங்கள்’ இப்படி ஓர் துண்டுப் பிரசுரம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதுதான் உண்மை.''


''உங்களது மனதை மாற்றும் காரியத்தில் அந்த நிறுவனம் இறங்கவில்லையா?''


''எனது பொது வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கியமான சோதனை, இந்தப் பிரச்னை. எத்தனையோ முறை, யார் யாரோ என்னை வந்து பார்த்து இந்த விவகாரத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று துடித்தனர். ஆனால், யாருக்கும் நான் இடம் கொடுக்கவில்லை. நீதித் துறையில் இருந்த மிக முக்கிய​மான, நான் மதிக்கக்கூடிய மனிதர் ஒருவர்  என்னை போனில் அழைத்து, 'உங்களைப் பார்க்க வரணும்’ என்று நேரம் கேட்டார். நானும் வரச் சொன்னேன். குறிப்பிட்ட நாளில் எங்கள் கட்சி அலுவலகமான தாயகத்தில் நான் காத்திருந்தேன். அவரும் வந்தார். 

'ஸ்டெர்லைட் பற்றி தவறான தகவல்கள் உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றன. நீங்கள் நினைக்கும் அளவுக்கு அது சுற்றுச்சூழலைப் பாதிக்காது. ஸ்டெர்லைட் சேர்மன் அனில் அகர்வால் உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறார். நீங்கள் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், அவர் உங்களை வந்து பார்க்கத் தயாராக இருக்கிறார். அதுக்காகத்தான் நான் டெல்லியில் இருந்து வந்தேன்’ என்றார். 'நீங்க தப்பா நினைக்காதீங்க. எனக்கு அவரைப் பார்க்க விருப்பம் இல்லை’ என்று சொன்னேன். 'அவரைப் பார்க்கிறதுல என்ன தவறு?’ என்று அவர் கேட்டார். 'எங்க கிராமத்துல, பனமரத்துக்கு கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்லுவாங்க. நான் அவரை எதற்காகச் சந்தித்தாலும் தவறாகத்தான் பேசப்படும். எனக்கு அகர்வாலைப் பார்க்க விருப்பம் இல்லை. ஸ்டெர்லைட் சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று சொல்லிட்டேன். அவர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்.


அதன் பிறகு ஒருநாள், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு தம்பதி வந்தனர். கணவன் என்னிடம், 'தமிழகத்தின் முக்கியமான தலைவர் நீங்கள். உங்களுக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது’ என்று புகழ்ந்தார். அவரது விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். அதில் 'அனில் அகர்வால், மேனேஜிங் டைரக்டர் - ஸ்டெர்லைட்’ என்று இருந்தது. 'வைகோ எனக்கு உங்களிடம் பேச பத்து நிமிடம் நேரம் வேண்டும். நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள்’ என்றார்.


 'ஸாரி மிஸ்டர் அகர்வால்.. எனக்கு உங்களிடம் பேச விருப்பம் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கே பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி​விட்டேன். இருபது நாட்களுக்குப் பிறகு, டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தேன். என்னுடைய பக்கத்து சீட்டில் அதே அகர்வால் உட்கார்ந்து இருந்தார். எனக்கு வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு, ஸ்டெர்லைட் வழக்கு சம்பந்தமான ஃபைலைப் படித்துக்கொண்டே வந்தேன். அவர் ஏதோ புத்தகம் படித்தார். அருகருகே இருந்தும் இரண்டே கால் மணி நேரமும் எதுவும் பேசவில்லை. இப்படி எத்தனையோ முறை அவர்கள் என்னை வளைக்கப் பார்த்தனர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், இல்லை என்றால் அது தூத்துக்குடி வட்டாரத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதில், எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.''


''ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகளில் நீங்களே ஆஜராகி வாதாடி வருகிறீர்களே?''


''நான் சட்டம் படித்தபோது, 'தவறான ஆட்களுக்​காகவும் ஆஜராக வேண்டி வருமே?’ என்று என்னுடைய அக்கா கேட்டார். மூன்று தமிழர்களின் தூக்குக்கு எதிராகவும் புலிகள் மீதான தடையைக் கண்டித்தும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஆலை விவகாரத்திலும் நானே வாதாடியபோது, நியாயமான காரியங்களுக்காக வாதாட இந்த சட்டப் படிப்பு பயன்பட்டது என்ற மனநிறைவை அடைகிறேன்.

 உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஆஜராக நான் காத்திருந்தேன். அப்போது, அங்கே வந்த இரண்டு போலீஸார் என்னிடம், 'நீங்கள் இங்கே உட்காரக் கூடாது. வெளியே போங்க’ என்று விரட்டினர். நான் வாதாட வந்திருக்கிறேன். எனக்கு பாஸ் இருக்கிறது என்று சொல்லியும் கேட்கவில்லை. அங்கிருந்த வழக்கறிஞர்கள் எனக்காகப் பேசிய பிறகுதான் அந்தப் போலீஸார் அமைதி அடைந்தனர். நான் வாதாட வேண்டிய நேரத்தில், முன்வரிசையில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்தேன்.

 பக்கத்​தில் உட்கார்ந்திருந்த ஒரு வழக்கறிஞர், 'இந்த ஸீட்டில் நீங்கள் உட்காரக் கூடாது. வேறு ஒருவர் வருகிறார் எழுந்திருங்கள்’ என்றார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது. தலை குனிந்தபடி எழுந்தேன். ஆனால் நீதிபதி ரவீந்திரன் இதைக் கவனித்திருக்கிறார். அந்த வழக்கறிஞரைப் பார்த்து, 'இவர் மிஸ்டர் வைகோ. வழக்கில் ஆஜராக வந்திருக்கிறார். அவரை எப்படி உட்காரக் கூடாது என்று நீங்கள் சொல்லலாம்? நீங்க உட்காருங்க மிஸ்டர் வைகோ’ என்று சொன்னார். நான் அதிர்ந்துவிட்டேன்.


 உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு நீதிபதி என்னை அறிந்து இப்படிச் சொன்னது, காயம்பட்ட மனசுக்கு மருந்து போட்டதைப் போல இருந்தது. என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டும் வகையில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சொன்னபோது, 'ஸ்டெர்லைட் ஆலையை ரத்னகிரியில் சம்மட்டியை வைத்து மக்கள் அடித்து நொறுக்கினர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றுதான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறோம். இங்கும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நாங்கள் எங்கே போவோம்? இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை இல்லை. எங்கள் மக்களின் பிரச்னை!’ என்று உணர்ச்சிவசப்பட்டு நான் பேசுவதற்கும் நீதிபதிகள் அனுமதித்தனர். நான் மனநிறைவுடன் செய்த வாதம் அது. நீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும், ஆலையைப் பூட்டும் வரை எனது போராட்டம் தொடரும்.''


''நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் உடனுக்குடன் ஜெயலலிதா நிறை​வேற்றுகிறாரே... அதன் ரகசியம் என்ன?''


(சிரிக்கிறார்) ''காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரிதான்... எல்லாமே தற்செயலாக நடந்தது. இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். முதல்வர் அதைச் செய்தபோது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. நான் சொன்னதால்தான் அவர்கள் நிறைவேற்றினார் என்று சொல்லவில்லை. சேவல் கூவவில்லை என்றாலும் பொழுது விடியும். நான் கூவியதால்தான் பொழுது விடிந்தது என்று சேவல் நினைத்தால், அது சேவலின் அறியாமை. எங்களுக்குக் காரியம் நடக்கிறது. அது போதும். பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!''  


- கே.ராஜாதிருவேங்கடம்
படம்: ஆ.முத்துக்குமார்

thanx - vikatan

readers views


1. சென்னை உயர் நீதி மன்றம் பாட்டியின் கையில் இருக்கிறது. எனவே உடனே ஒரு மூடுவிழா நாடகம். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதி மன்றத்துக்கு செக் வைத்து விட்டது. வைகோவுக்கும், இவரின் பாத்திரத்துக்கும் ஆப்பு வைத்துவிட்டதை படிக்கல் வில்லையா?


2. ஆலையை மூடும் பட்சத்தில், பத்தாயிரம் பேர் நேர் முகமாகவும், மறைமுகமாகவும் வேலை இழப்பதை பற்றி வைகோ என்ன நினைக்கிறார், அதற்கு மாற்று வழிகள் எதையும் யோசித்தாரா என்பதையும் கேட்டிருக்கலாமே?
[ பி.கு. இந்த கருத்து வைகோவை அறிந்து கொள்ளவே அன்றி , அவருக்கு எதிராக அல்ல.]


3. பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!'' பாத்திரம் ஓட்டை ஒடுசல், கரடு முரடா இருந்தாலும், கை நிறைய காசு கிடைக்குது. பாத்திரத்துக்கு ஓட்டு கிடைக்குது, வைகோவைப்போல வெட்கங்கெட்டவர் கிடைக்க மாட்டார். எத்தனை முறை அவமானபடுத்தினாலும் அதிமுகவை விட்டு வேறு கட்சியுடன் சேரமாட்டார்.


4. அம்மாவிடம் அன்று 49 கோடி வாங்கியதும் மக்கள் நலனுக்குத்தான் என்று நம்புவோம் 
இப்படி எந்த தொழிச்சலை வந்தாலும் எதிர்த்து போராடினால் எப்படி நாடு முன்னேறும்


5. பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!.....வரும் தேர்தலில் அம்மா உங்களுக்கு ஐந்து அல்லது ஆறு பணியாரம் கண்டிப்பாய் தருவார்.......


6. கடைசி பதில்.......... தாங்க முடியலைடா சாமி ............. ம தி மு க வுக்கு 10 நாடாளுமன்ற சீட்டு பார்சல் !!!!!!!!!!!

7. வைகோ இவ்வளவு கஷ்டப்பட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது... இவரை வளைக்கபபார்த்தார்கள் முடியவில்லை... ஆனால் தற்பொழுது நீதி துறையையே வளைத்துவிட்டார்களே... அதாங்க 100 கோடி டெபாசிட்... அதுக்கு கமிஷன் எவ்வளவுன்னு நீதிபதிகளுக்கே வெளிச்சம்...

8.எங்க கிராமத்துல, பனமரத்துக்கு கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்லுவாங்க... அப்படியா எந்த கிராமம் அது? எங்க கிராமத்தில பனமரத்துக்கு கீழே நின்னு கள்ளை குடிச்சாலும் பாலுன்னுதான் சொல்லுவாங்க. மனுசங்கள நம்பவே மாட்டாங்களா உங்க கிராமத்தல?


9. ஆலையைப் பாதுகாப்புடன் இயக்குவது என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர, மூடுவது என்பது தமிழக நலனுக்கு நல்லதல்ல. 

அதே சமயம், இந்த ஆலையைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்த அம்மையார் தான் தற்போது முதல்வராக இருக்கிறார் என்கிற முக்கியமான தகவலை ஜூ.வி மறைத்திருக்கிறது.

10/ வை.கோ. வாழ்க! வை.கோ. வுக்கு ஆதரவு தராத தமிழர்கள் மடையர்களே!



Sunday, March 31, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை - திடீர்த்திருப்பம்

3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி பணியாளர்கள் போராட்டம் ! ( படங்கள் ) 
 
 
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்,‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

‘ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடிவிடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் உத்தரவிட்டது.

இப்போது ‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் கடந்த 1994 ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிலிருந்தே அந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களும் துவங்கின. அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்த அந்த ஆலை நிர்வாகம், கடந்த 23 ஆம் தேதி, சல்பர்டை ஆக்ஸைடு அதிகமாக வெளியேறியதை கட்டுப்படுத்த தவறியது.

அதனைத்தொடந்து ஆலைக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தது.வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதன் பாதிப்பு தெரியும் என்கிற உளவுத்துறையின் தகவல் அரசு கவனத்துக்கு சென்றது.

அதனைத்தொடர்ந்து எப்பொழுதுமே கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பிலிருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தவறவிட்டு விழித்துக் கொண்டதுபோல் ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதனிடையே  ஸ்டெர்லைட் ஆலையில் வேலைபார்த்து வரும் பணியாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இன்று பணியாளர்கள் குடும்பத்தார் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,"ஆலையின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அந்த பாதிப்பை அகற்றுவது எப்படி என்று பார்க்க வேண்டும்? அதற்கென்று உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை முடுக்கிவிட்டு கண்காணிக்க செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மூடிவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.

ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருக்கும் சுமார் இருபதாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் என்னாகும்? எனவே ஆலையை மூடாமல் தொடர்ந்து இயங்க செய்யவேண்டும். சட்டவிதிமுறைப்படி இயக்க கடுமையாக கண்கானிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆலைக்கு எதிராகவும் ஆலைக்கு ஆதரவாகவும் நடந்துவரும் போராட்டங்களை பார்த்து சிரிக்கவா அழுகவா என விழித்துக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி பொதுமக்கள்.

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்  
 
நன்றி - விகடன்
 

 
 
. தூத்துக்குடி: ரசாயனவாயு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரச்னையில், தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நேற்று மூடப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், மதுரை பை-பாஸ் ரோட்டில், "வேதாந்தா' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதை உருக்கி, தாமிர பிளேட்டுகள், அதைச்சார்ந்த பொருட்களாக மாற்றி, இங்கிருந்து, வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 
 
 கடந்த, 1993ல், இந்த ஆலைக்கு, முதல்வராக இருந்த ஜெ., அடிக்கல் நாட்டினார். 1996ல், இங்கு, உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த ஆலை, 5,000 பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு, கந்தக அமிலம் உற்பத்தி உள்ளிட்ட பல பிளான்ட்டுகள் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ மற்றும் போராட்டக் குழுவினர், 17 ஆண்டாக, தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
 
 வைகோ, சமூக அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, இந்த ஆலை இயங்க, 2010 செப்., 28ல், சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதையேற்று, 2010 அக்., 18ல், ஐகோர்ட் உத்தரவிற்கு, இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட், ஆலை இயங்க அனுமதியளித்தது. 2012 நவ., 6ல், ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் நீடித்தது. இந்த ஆலையை மூடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், வைகோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், ஏப்., 2ல், தீர்ப்பு கூறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் வாயு கசிவு: இதனிடையே, மார்ச் 23ம் தேதி அதிகாலை, இந்த ஆலையின், கந்தக அமில முதல் பிளான்ட், பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டபோது, அதிலிருந்து, கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்து காற்றில் கலந்தது. அந்த காற்றை சுவாசித்த, தூத்துக்குடி நகர், புறநகர் பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆலையை மூட வேண்டுமென, பொதுமக்கள், கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு மனு அனுப்பினர். கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்த, பிளான்டை ஏன் மூடக்கூடாது என, ஆர்.டி.ஓ., லதா, ஆலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆலையை ஆய்வு செய்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உறுப்பினர் செயலர், விளக்கம்கேட்டு, தனியாக நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, வைகோ தலைமையில், போராட்டக் குழுவினர், மார்ச் 25ல், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும், மார்ச் 28ல், ஆலையை முற்றுகையிடவும் முயன்றனர். கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடின. இதனிடையே, ஆலை தரப்பினர் தந்த விளக்கம் திருப்தி இல்லாததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கந்தக-டை-ஆக்சைடு அதிகளவு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதித்து, காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றம் சாட்டிய, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கார்த்திகேயன், பொதுமக்களின் புகார், கலெக்டர் அறிக்கை அடிப்படையில், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்ட படி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட, நேற்று முன்தினம் இரவு, ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் நகல், கலெக்டர், மின் வாரியம், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்று, ஆலைக்கான மின் இணைப்பை, மின் வாரியத்தினர் துண்டித்தனர். கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற ஆர்.டி.ஓ., லதா, தாசில்தார் ஆழ்வாரம்மாள், மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ஆலையிலுள்ள அனைத்து பிளான்ட்டுகளிலும், உற்பத்தி நிறுத்தப்பட்டு, அவை படிப்படியாக மூடப்பட்டன. தொழில்நுட்ப காரணங்களால், ஆலையை முற்றிலும் மூட, 30 மணி நேரத்திற்கும் மேலாகுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொண்டாட்டம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு, வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், பொதுமக்கள், வியாபாரிகள், போராட்டக் குழுவினர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது, மக்களின், 17 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், இந்த உத்தரவை எதிர்த்து, ஆலை தரப்பில், ஐகோர்ட்டில், ஓரிரு நாளில், மேல்முறையீடு செய்யப்படுமென, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு வைகோ பாராட்டு: "ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, தாமிர உருக்கு ஆலையான, ஸ்டெர்லைட் ஆலையால், நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியன நஞ்சாக மாறி வருகிறது. கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலமும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என, 17 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 23ம் தேதி, ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
 
 
 
 பல இடங்களில், மரம், செடி, கொடிகள் நிறம் மாறி கருகிப் போயின. இதையடுத்து, ஆலையை மூடக் கோரி, கடந்த மூன்று நாட்களாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சரியான நடவடிக்கையை, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதற்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆலை மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

ஆலையை திறக்கக்கோரி மனு: மூடப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை, மீண்டும் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, அதன் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் கோகுல் தாசிடம், மனு கொடுத்தனர். ஆலை மூடப்பட்டதால், தாங்கள் வேலையிழந்து, தங்களின் குடும்ப வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்படுமென, அதில் குறிப்பிட்டுள்ளனர். அது போல, தொழிலதிபர்களின் கூட்டமைப்பும், இந்த ஆலையை திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
நன்றி - தினமலர்