Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Monday, August 24, 2015

தங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் : பி.ஆர்.சோமசுந்தரம் நேர்காணல்

பி.ஆர்.சோமசுந்தரம், நிர்வாக இயக்குநர், உலக தங்க கவுன்சில்
பி.ஆர்.சோமசுந்தரம், நிர்வாக இயக்குநர், உலக தங்க கவுன்சில்
தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் தலைப்புச் செய்திதான். தங்கத்தின் தேவை என்ன, விற்பனை எவ்வளவு உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் சென்னை வந்திருந்தார். அந்த சமயத்தில் அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...
திருநெல்வேலி சொந்த ஊர். படித்தது சென்னையில். சார்டர்ட் அக்கவுண்டட் படித்தவர். ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டாண்டர்டு சார்டட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராக இரு வருடங்கள் பணியாற்றியவர். 2013 ஜனவரியில் இருந்து உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
எப்எம்சிஜி, வங்கி, உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்துவிட்டு இப்போது உலக தங்க கவுன்சிலில் எப்படி?
படிப்பு என்பது ஒரு ஆரம்பம் தான். டிகிரி முடித்தவுடன்தான் படிப்பே ஆரம்பிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் போது இவை மூன்று வெவ்வேறு துறைபோல தெரிந்தாலும் இவை அனைத்து கிட்டத்தட்ட ஒன்றுதான். நாம் செய்ய வேண்டிய வேலையைப் புரிந்துகொள்வதும், சரியான கேள்வி கேட்கும் திறன் இருந்தாலும் பெரும்பாலான வேலைகளைச் செய்யலாம். வங்கித்துறையில் இருக்கும்போது தங்கத்தை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அதனால் இங்கு சேர்ந்தேன்.
கடந்த 35 வருடங்களில் தங்கத்தில் கிடைத்த வருமானம் (பணவீக்கத்துக்கு பிறகு) என்பது கிட்டத்தட்ட 3.94 சதவீதம்தான். தங்கத்தை முதலீடு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
நாம் நம்புகிறோமோ இல்லையோ உலகத்தில் பலர் தங்கத்தை நம்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிடைக்கும் வருமானத்தை வைத்து முடிவுக்கு வரமுடியாது.
கிரீஸ் பிரச்சினையில் வங்கியில் பணத்தை எடுக்க அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தங்கத்தை வைத்து பொருள் வாங்கப்பட்டது. காரணம் சர்வதேச அளவில் தங்கத்துக்கு என்று ஒரு விலை இருக்கிறது. மேலும் தங்க அடமானம் என்பது பொருளாதார நடவடிக்கையை ஊக்கப்படுத்துகிறது.
ஆரம்பத்தில் தங்கத்தை அடிப்படையாக வைத்துதான் நாட்டில் கரன்ஸி அச்சடிக்கப்பட்டது. அதன் பிறகு கரன்ஸி அச்சடிக்கும் முறை மாறி இருக்கிறது. உலகில் பல நாடுகளில் கரன்ஸி அச்சடிப்பதை அதிகரித்திருக்கிறார்கள், ஆனால் தங்கதை உற்பத்தி செய்ய முடியாது. கரன்ஸி புழக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை உயரும் என்பது தியரி.
பண முதலீடு என்றால் வட்டி கிடைக்கும், ரியல் எஸ்டேட்டில் வாடகை கிடைக்கும். ஆனால் தங்கம்என்பது ஒரு உலோகம். அதற்கு மதிப்பு கிடையாது என்பதால், முதலீடு செய்வதற்கான இடம் இல்லை என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்களே?
பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு டிவிடெண்ட் கிடைக்கலாம். அல்லது முதலீடு செய்த தொகையே வராமல் போகலாம். மற்ற முதலீட்டு வாய்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்துதான் முடிவுக்கு வர முடியும். தங்கத்துக்கு வட்டி கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தங்கம் என்பது உற்பத்தி செய்ய முடியாதது என்பதையும் மறக்ககூடாது. தங்கத்தை பயன்படுத்தி நடக்கும் தொழில்கள் அதிகம். இதற்கெல்லாம் மதிப்பு இல்லையா.
சீனா செய்தது போல நாணயத்தின் மதிப்பை குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் தங்கத்தில் அப்படி செய்ய முடியாது. தங்கத்தின் விலையை தனிநபரோ, தனி நாடோ தீர்மானிக்க முடியாது. இதுபோன்ற asset class- யை வைத்துக்கொள்வதில் தவறில்லையே.
தங்கத்தின் மீதான ஈர்ப்பை உருவாக்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தங்கத்தை சேர்ப்பதிலே முடிவடைந்து விடுகிறது. அதே தங்கத்தை அவசர தேவைக்காக அடகு வைத்து அதை மீட்காமல் மூழ்கி பல சமூக சிக்கல்கள் உருவாகிவருகிறதே?
சில வருடங்களுக்கு முன்பு, சகட்டு மேனிக்கு கிரெடிட் கார்டு கொடுத்து வங்கிகள் சுட்டுக்கொண்டன. ஆனாலும் கிரெடிட் கார்டு கொடுப்பதை நிறுத்தினார்களா? அந்த நடைமுறையை சரி செய்தார்கள். அதுபோல சில இடங்களில் தங்கம் அடகு சரியாக நடப்பதில்லை. அதற்காக தங்கத்தின் மீதான ஈர்ப்பை சரியில்லை என்று சொல்ல முடியாதே. இதற்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்படி யோசிக்கலாம். தங்கம் இல்லை என்றால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி இருப்பார்கள். அவர்களின் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கும்.
தற்போது இளைஞர்கள் பலரும் வளர்ந்து வரும் நிதி சார்ந்த முதலீடுகளான மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது வருங்காலத்தில் தங்கத்தின் தேவை எப்படி இருக்கும்?
அனைத்து நிதி சார்ந்த முதலீடுகளும் நல்ல வருமானம் கொடுக்கும் போது தங்கம் வருமானம் கொடுக்காது. அனைத்து நிதி சார்ந்த முதலீடுகள் மோசமாக இருக்கும் போது தங்கம் நல்ல வருமானம் கொடுக்கும். நிதிசார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதில் தவறில்லை. மொத்த முதலீட்டில் தங்கத்தில் முதலீடு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம்.
தங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல. உலகில் எப்போது அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்று கணிக்க முடியாது. அப்போது தங்கத்தின் தேவை புரியும். அதிக பணவீக்கம் நிலவும் சூழலில் தங்கம் உதவும். இந்த சூழ்நிலையில் தங்கத்தை பற்றிய விழிப்புணர்வு தேவை. நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாவிட்டாலும் தங்கம் சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
அரசின் தங்க அடமானத் திட்டம் குறித்து உங்கள் கருத்து?
அனைத்து வகையான தங்கத்திலும் மக்கள் உணர்வுபூர்வமாக இல்லை. நகையை மாற்றுவதற்கு பலர் வருகிறார்கள். அந்த அனைத்து தங்கமும் உருக்கப்படுகிறது. அதேபோல அடமானத் திட்டத்தில் வரும் தங்கமும் உருக்கலாம். ஆனால் தங்கத்தை கொண்டு வருபவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். நல்ல மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். அனைத்து திட்டங்களும் வெற்றி அடையும் என்று கருத முடியாது. ஆனால் அதற்கான சூழ்நிலைகளை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கால மாற்றத்தில் அனைத்தும் நடக்கும்.
கோல்ட் இடிஎப், கோல்ட் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பெரிய வெற்றி அடையவில்லையே. தங்க நகை அடமானத் திட்டம் வெற்றி அடையுமா?
இந்த திட்டம் உடனடியாக வெற்றி அடையும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காக கொண்டு வராமல் இருப்பது நல்லதில்லை.
1998-ம் ஆண்டுக்கு முன்பு அனைத்து பங்குகளும் பத்திரங்களாக/காகிதங்களாக இருந்தது. 1998ம் ஆண்டு டீமேட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அப்போதும் இதேபோல பேச்சுகள் இருந்தன. முதல் சில வருடங்களுக்கு பெரிய மாற்றம் இல்லை. ஆனால் இப்போது 99% பங்குகள் டீமேட் வடிவில்தான் இருக்கின்றன. மாற்றத்துக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாற்றம் தானாக நடக்கும்.

Tuesday, July 28, 2015

தங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி?

'எப்படா இந்த நகை விலை குறையும் என பலரும் கவலைப்பட்ட நாட்கள் மாறி, கடந்த சில நாட்களாக 'ஜாக்பாட்' போல நகைகளை எடுக்கும் வாய்ப்பாக தங்கம் மார்க்கெட் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது  வாங்கிட்டா மட்டும்போதுமா, அதை எப்படி பராமரிக்கிறது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். 

அப்படி கேட்பவர்களுக்கான பதிலையும் கூடவே,  காஸ்ட்லி புடவையான பட்டுப்புடவையை பராமரிக்கும் முறைப்பற்றியும்  இங்கே சொல்லியிருக்கிறோம். 

படிச்சுக்கோங்க.. தெளிஞ்சுக்கோங்க..!

கற்கள் பதித்த நகைகள்:

* பலருக்கும் மிகப்பெரிய கவலை அடிக்கடி வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்துவிடுவதுதான். நல்ல பளிச் லுக்கிற்கு, கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

* பொதுவாகவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலரும் நகை வாங்கும்போது பெரும்பாலும் கற்கள் பதித்த நகைகளை வாங்குவதில்லை. அதை தொடர்ந்து தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கான தீர்வு, நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு, சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை நீங்கி புத்தம் புது நகையாக ஜொளிக்கும்.

வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை பராமரித்தல்:

* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.

மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.

* அரை டம்ளர் தண்­ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்­ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.

* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் காட்சியளிக்கும்.

முத்து நகைகள்

* முத்து பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில், வெள்ளை நிற காட்டன் துணியில், முடிந்து வைப்பது நல்லது.

* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின், முத்து நகைகளை அணிவதே சிறந்தது.

தங்க நகைகள்

* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அதில் பதிக்கப்பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.

* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.

பட்டுப்புடவைக்கான பராமரிப்பு:

புடவைதான் எந்த ஒரு பெண்ணுக்கும் அழகைத் தரக்கூடியது. அந்த விஷயத்தில் பட்டுப்புடவை இன்னும் அழகுக்கு அழகூட்டும்.. அதை பராமரித்தலில்தான் அத்தனை சிரமம் இருக்கும். அதைப்பற்றித்தான் தற்போது பார்க்கப்போகிறோம்.

* விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன், பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

* எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. டிரைவாஷ் தான் சிறந்தது.

* ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5 அல்லது 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீ­ர் விட்டு அலசினால் எண்ணெய் கறை போயே போச்சு.

* பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்­ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டி முடித்துவிட்டு, டிரைவாஷ் செய்து  பிறகு வைக்கவும்.

* அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக் கூடாது. இல்லையெனில் ஜரிகை பாழாகிவிடும்

* பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் அப்படியே வைத்திருப்பதை தவிர்த்து, துணிப் பையில் வைக்கலாம்.

- வே. கிருஷ்ணவேணி

நன்றி - விகடன்

Saturday, July 02, 2011

தங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவர் டேக்கியது எப்படி?

http://www.jewelry-designs.tk/wp-content/uploads/Wedding-jewellery-images-malabar-gold-1.jpg
உச்சத்தைத் தொட்ட தங்கம்!
மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து நெகட்டிவ் செய்திகள் அதிகம் வரும்பட்சத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1,450 டாலருக்குமேல் செல்ல வாய்ப்புண்டு’ என கடந்த இதழில் சொல்லி இருந்தோம். ஆனால், நாம் எதிர்பார்த்ததைவிட 1,461 டாலருக்குமேலே சென்றிருக்கிறது. நம் நாட்டில் கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காலை 10 கிராம் தங்கம் 20,744 ரூபாயாக இருந்தது.

 மூன்றே நாட்களில் இதன் விலை 21,194 ரூபாயாக உயர்ந்தது. இந்த விலையேற்றத்துக்கு என்ன காரணம்? விஷம்போல ஏறிவரும் உலகப் பணவீக்கம், அமெரிக்க டாலர் தொடர்ந்து பலவீனமடைந்து வருவது, மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் உக்கிரமாகி வரும் பதற்றமான சூழ்நிலை, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்கள்தான் தங்கம் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.


அமெரிக்காவின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கடந்த 5-ம் தேதி அன்று 1.5 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை.
சரி, அடுத்த வாரம் தங்கம் விலை எப்படி இருக்கும்?

மேற்சொன்ன காரணங்கள் இன்னும் மோசமாகும்பட்சத்தில் தங்கம் விலை கூடிய விரைவிலேயே 1,500 டாலரைத் தொட வாய்ப்பிருக்கிறது. 1,500-ஐ தொடவில்லை என்றாலும் 1,470 டாலரை நோக்கியாவது செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிலைமை சீரடையும்பட்சத்தில் 1,440 டாலரைத் தொடவும் வாய்ப்பிருக்கிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdLJosJpTrmSA2yUgtecMtz03aQM9Q9SVMzxuJdnmFlx8KdGg0PU_Q2ruA0cfgdZ41o1OB6PyYcCBcyUlprYynkV3fg1B2SBFE2YtY0z4dKghbOcaQOc92KlQ0eXVtKRHak04ZXpg6/s1600/artificial+jewellery.jpg

வெளுத்து வாங்கிய வெள்ளி!

தங்கம் விலை உயர்ந்ததை யட்டி வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 38 டாலராக இருந்தது. ஆனால், மூன்றே நாட்களில் அது 39.75 டாலராக உயர்ந்தது. நம் நாட்டில் கடந்த திங்கள்கிழமை அன்று காலை வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 55,870 ரூபாயாக இருந்தது. அதே வெள்ளி புதன்கிழமை இரவு 58,485 வரை உயர்ந்தது.

இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணங்கள் இரண்டு. சீன தொழிற்துறைக்குத் தேவைப்படும் வெள்ளியின் அளவு கணிசமாக அதிகரித்திருப்பது ஒரு காரணம். இந்தியாவில் இப்போது கல்யாண சீஸன் என்பதால் பலரும் கிலோ கணக்கில் வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவித்து வருவது இன்னொரு காரணம்.

சரி, அடுத்த வாரம் வெள்ளி விலை எப்படி இருக்கும்?

சர்வதேச நிலைமை எப்படி இருக்கும் என்பதை வைத்தே வெள்ளி விலை குறையுமா அல்லது கூடுமா என்பது தெரியும். இப்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்த்தால், வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு 39.75 டாலருக்கு மேலே செல்லுமா என்பது சந்தேகமே. ஆனால், குறையும்பட்சத்தில் 38 டாலர் வரை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு.

கிடுகிடு கச்சா எண்ணெய்!


கச்சா எண்ணெய் 2008-ல் இருந்த உச்சபட்ச விலையை இப்போது தொட்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை காலை ஒரு பேரல் விலை 108.43 டாலர் என்கிற அளவில் விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில் தொடர்ந்து நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அதன் விலையும் உயர்கிறது.


கடந்த இரண்டரை ஆண்டுகளாக கச்சா எண்ணெய் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால், இப்போது உருவாகி இருக்கும் புதிய சூழ்நிலையைப் பார்த்தால், அதன் விலை இப்போதைக்கு 100 டாலருக்குக் கீழே குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1r4DRfD2WXU_0eB7tE7n5gKRlU3x3lIUs79devx_5tUJtbiHZMlZx3DUBNMcjQMKKW0_8OVl3zcNVi7LTS1Iel6mlqu1FgwesqVTXhyHpRpC3hD6KZQqWBMLoyXS1ygrMAYevF3bmlMrR/s400/Indian_Bridal_Jewellery_Designs4.jpg

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி வேகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆசிய நாடுகளின் வளர்ச்சி கடந்த ஆண்டு 9 சதவிகிதமாக இருந்தது. இது இந்த ஆண்டு 7.8 சதவிகிதமாக குறையும் என்றும், கடந்த ஆண்டு 8.6 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி இந்த ஆண்டு 8.2 சதவிகிதமாகக் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

முழிக்க வைக்கும் மிளகாய்!
மிளகாய் உற்பத்தி குறையும் என்கிற செய்தி காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று அதன் விலை கடுமையாக உயர்ந்தது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் இந்த மாதம் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடியும் கான்ட்ராக்ட் 226 ரூபாய் உயர்ந்து 9,100 ரூபாயாக விலை போனது. ஜூன் கான்ட்ராக்ட் 9,792 ரூபாய்க்கும், ஜூலை கான்ட்ராக்ட் 10,008 ரூபாய்க்கும் விலை போனது. இதன் எதிரொலியாக அடுத்த சில நாட்களில் சில்லறை மார்க்கெட்டிலும் மிளகாய் விலை உயர வாய்ப்புண்டு என்கிறார்கள் மிளகாய் வியாபாரிகள்.

மஞ்சள் விலை உயர்ந்தது!

கடந்த பல வாரங்களாக விலை குறைந்து வந்த மஞ்சள் விலை இப்போது உயர ஆரம்பித்திருக்கிறது. ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் மொத்த வியாபாரிகள். கடந்த புதன்கிழமை நிலவரப்படி, விரலி மஞ்சள் விலை ஒரு குவிண்டால் 7800 முதல் 9709 வரை இருந்தது. இப்போதைக்கு சந்தைக்கு வருகிற மஞ்சள் மூட்டைகள் உடனுக்குடன் விலை போய்விடுவதால் அடுத்த சில நாட்களில் அதன் விலை உயரவே வாய்ப்புண்டு என்கிறார்கள்.

நன்றி - நாணயம் விகடன்

Sunday, May 01, 2011

ஒரு கோல்டன் ஆப்புர்ச்சுனிட்டி.. மிஸ் பண்ணிடாதே கோகிலா

http://www.fashionclothingtoday.com/wp-content/uploads/2010/10/Traditional-Jewellery-of-India.jpg 
அட்சய திருதியை 'தங்க'மான இ.டி.எஃப்!
ந்தவிதமான முதலீடாக இருந்தாலும் சரி, அதன் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக ஏறியிறங்கி இருக்கிறது. உலக அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகள் பாரதூரமாக ஏறியிறங்கி இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலைகூட 147 டாலர்கள் வரை உயர்ந்து, அதன்பிறகு கடுமையாகச் சரிந்தது.

ஆனால், தங்கத்தின் விலை மட்டும் இறங்காமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. இந்த விலையேற்றத்தை எதிர்பாராத பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.

நகையாக வாங்கினால், பாதுகாப்பு, டிசைன் பழையதாகிவிடுவது, செய்கூலி, சேதாரம் என பல பிரச்னைகள்.விஷயம் தெரிந்த சிலர் மட்டும் வங்கிகள் விற்கும் தங்கக்காசுகளை வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இந்த காசுகளை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்வதில்லை என்ப தோடு, தங்க நகைக் கடைகளில் விற்கும்போது அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.


இந்த பிரச்னைக்களுக்கெல்லாம் ஒரு எளிய தீர்வாக நினைத்த நேரத்தில் தங்கத்தை வாங்கி, விற்று லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான் கோல்ட் இ.டி.எஃப்.
கோல்ட் இ.டி.எஃப். என்றால் என்னமோ ஏதோ என்று அஞ்சத் தேவையில்லை.
 http://www.teamads.in/jewellery/admin/upload/ifresh-face-girl-female-model.jpeg
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகைதான் 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்’ என அழைக்கப்படும் இ.டி.எஃப் கள்.இந்த இ.டி.எஃப்.களில் பல வகை உண்டு. வங்கிப் பங்குகள், நிஃப்டி பங்குகள், ஜூனியர் நிஃப்டி பங்குகள், இன்ஃப்ரா பங்குகள் என பலவிதமான இ.டி.எஃப். திட்டங்கள் உள்ளன. இதில் ஒன்றுதான் கோல்ட் இ.டி.எஃப். தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிற முதலீட்டாளர்களுக் காகவே இந்த கோல்ட் இ.டி.எஃப். திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.

இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன. ஆனால், இன்றோ 10 கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் வந்துவிட்டன. என்.எஸ்.இ.கோல்ட்.காம் (http://www.nsegold.com) எனும் இணையதளத்தை பார்த்தாலே தெரிந்துவிடும், அந்த திட்டங்கள் குறித்த சகலமும்.
கோல்ட் இ.டி.எஃப்.பை பேப்பர் தங்கம் என்றும் சொல்கிறார்கள்.

நகைக் கடைகளில் நகையாக தங்கம் வாங்கும்போது அதை தொட்டுப் பார்த்து உணரலாம். ஆனால் இ.டி.எஃப். மூலம் முதலீடு செய்யும்போது அது நம் டீமேட் கணக்கில் அது யூனிட்களாக வரவு வைக்கப்படும். ஒரு யூனிட் என்பது கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்துக்கு சமமானது.


பொதுவாக, இ.டி.எஃப். திட்டத்தை ஆரம்பிக்கும் முன்பே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கணிசமான அளவு தங்கத்தை வாங்கி சேர்த்து வைத்திருக்கும். அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகரிக்க அதிகரிக்க தன் வசம் இருக்கும் தங்கத்தை சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
 http://1.bp.blogspot.com/_Q09g8aDEtNc/TBBvmNcuwxI/AAAAAAAAPBY/Xuv4hel8eYc/s1600/Indian-Wedding-Jewellery-Hitex-International-Gem-Jewellery-Expo-2010.jpg
தங்கம் விலை உயரும்போது அது நம்முடைய இ.டி.எஃப். யூனிட்களிலும் எதிரொலிக்கும். அதாவது, வெளி மார்க்கெட்டில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் உயர்ந்தால், நம்மிடம் இருக்கும் கோல்ட் இ.டி.எஃப். யூனிட்டின் மதிப்பும் சுமார் 10 ரூபாய்க்கு உயரும்.

விலை குறைந்தால் நம்மிடம் இருக்கும் யூனிட்டின் மதிப்பும் குறையும்.
சில ஆண்டுகளுக்குப் பின் நல்ல லாப விலைக்கு வந்தபிறகு அதை விற்று லாபம் பார்க்க நினைத்தாலும் விற்று பணமாக்கிக் கொள்ளலாம். அல்லது தங்கமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், குறைந்த பட்சம் ஆயிரம் கிராம் தங்கத்துக்கு சமமான யூனிட்கள் இருந்தால் மட்டுமே தங்கமாக வாங்கிக் கொள்ள முடியும். ஒரு கிலோ தங்கத்தை வெளி மார்க்கெட்டில் நேரடியாக வாங்கும்போது வாட், செல்வ வரி, இன்ஷூரன்ஸ் போன்றவை செலுத்த வேண்டும். ஆனால், இ.டி.எஃப். யூனிட்களை தங்கமாக மாற்ற புரோக்கரேஜ் கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்.

எப்படி முதலீடு செய்யலாம்?

கோல்ட் இ.டி.எஃப்.-யில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு மட்டும் இருந்தால் போதும். பங்குகளை வாங்க நீங்கள் ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்கிலேயே கோல்ட் இ.டி.எஃப். யூனிட்களையும் வாங்கலாம். பங்குச் சந்தை வர்த்தகமாகும் நேரத்தில் இந்த ஃபண்டுகளும் வர்த்தகமாகும். தேவைப்படும் நேரத்தில் எளிதாக வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒவ்வொருவரின் போர்ட்ஃ போலியோவிலும் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவிகிதம் வரை தங்கம் இருக்கலாம்.

பலரும் தங்கத்தில் முதலீடு செய்யாமல் விட்டதற்கு என்ன காரணம்? முதல் காரணம், குறுகிய காலத்தில் தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது, கல்யாணம், காட்சி யின்போதுதான் நம் மக்கள் தங்க நகையை வாங்குகிறார்களே ஒழிய, முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வாங்குவது என்பது இன்னும் நம் மக்களிடம் பிரபலமாகவில்லை. 

மூன்றாவது, தங்க எஸ்.ஐ.பி-யில் முதலீடு!
நகைக்கடைகளுக்கு போய் ஒரு கிராம், இரண்டு கிராம் என தங்க நகை வாங்க முடியாது. ஆனால், கோல்ட் இ.டி.எஃப்.பில் ஒரு யூனிட் தங்கத்தைகூட வாங்க முடியும். மாதந்தோறும் ஒன்றிரண்டு யூனிட் கோல்ட் இ.டி.எஃப். வாங்கினால் கூட சில மாதங்களில் ஒரு கணிசமாக யூனிட்கள் நம் வசம் சேர்ந்திருக்கும்.
 http://i8.lulzimg.com/i/1edd1995.jpg

அனைத்து இ.டி.எஃப்.களும் கிட்டத்தட்ட ஒரே அளவு வருமானத்தைத்தான் கொடுக்கும். காரணம், ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனமும் தன்னிடம் இருக்கும் மொத்த தொகைக்குமே தங்கத்தை வாங்குவதில்லை. அதிகபட்சமாக 10 சதவிகித தொகையை ரொக்க மாகவோ அல்லது இதர கடன் திட்டங்களிலோ முதலீடு செய்யும்.

இதுபோல எவ்வளவு தொகையை வைத்திருக்கிறார்களோ, அதற்கேற்றார்போல இ.டி.எஃப்.-ன் வருமானம் கூடவோ, குறையவோ வாய்ப்பிருக்கிறது.

இனியாவது சேமிப்பின் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்வோமா?


நன்றி - நாணயம் விகடன்