Showing posts with label ஆர்யா பேட்டி. Show all posts
Showing posts with label ஆர்யா பேட்டி. Show all posts

Monday, February 16, 2015

புறம்போக்கு

புறம்போக்கு படத்தில் நடிகர் ஆர்யா
புறம்போக்கு படத்தில் நடிகர் ஆர்யா

எல்லா தினமும் காதலர் தினம்தான்: ஆர்யா பேட்டி

தமிழ் சினிமாவில் இப்போதைய ‘காதல் இளவரசன்’ யார் என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட ஆர்யாவின் பெயரைத்தான் சொல்லும். ஆர்யாவை காதலர் தின ஸ்பெஷல் பேட்டிக்காக சந்தித்தோம்.
“பாஸ்... நான் அந்த மாதிரி ஆளில்லை. ஏன் என்னை திரும்பவும் வம்பில் மாட்டி விடு றீங்க” என்று முதலில் நழுவினாலும், பிறகு சகஜமாக கேள்விகளை எதிர்கொண்டார் ஆர்யா.
‘புறம்போக்கு’ படத்தில் மறுபடியும் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறீர்களே?
‘புறம்போக்கு’ வழக்கமான ஆக்‌ஷன் படம் கிடையாது. இது இயக்குநர் ஜனநாதனின் படம். அவருடைய படங்கள் வழக்கமான பாணியில் இல்லாமல் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையை எடுத்துச் சொல்லும். அதே நேரத்தில் அதில் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். ‘புறம்போக்கு’ என்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.
தொடர்ச்சியாக இரண்டு நாயகர்களைக் கொண்ட படங்களில் நடிக்கிறீர்களே?
இரண்டு, மூன்று நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் அதில் கதையும், திரைக்கதையும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதற்காக நான் தனி ஹீரோ படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. வித்தியாசமான கதைகளை தேடுகிறேன் என்றுதான் சொல்கிறேன். நிறைய நடிகர்கள் நடித்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ‘புறம்போக்கு’ படத்தில் நான், ஷாம், விஜய் சேதுபதி என்று எங்கள் மூவருக்குமே முக்கியமான பாத்திரம்தான். இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஜனநாதன் சார்தான். நாங்கள் மூவருமே அல்ல.
ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும், ப்ளேபாய் இமேஜ் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறதே?
நான் எந்த இமேஜுக்குள்ளும் மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் திரையுலகினரும் சரி, மக்களும் சரி என்னை அப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘ராஜா ராணி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற படங்களின் தாக்கம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
உங்களுடன் நடிக்கும் நாயகிகளுக்கு நெருக்கமான நண்பராக வலம் வருகிறீர்கள். அதன் ரகசியம் என்ன?
ஒரு ரகசியமும் கிடையாது. நீங்கள் ஒரு படப்பிடிப்புக்கு போனால் உங்களுடன் நடிக்கும் நாயகியுடன் பேச மாட்டீர்களா? 3 முதல் 4 மாதம் வரை தொடர்ச்சி யாக படப்பிடிப்பு இருக்கும்போது அவர்களுடன் தொடர்ந்து பேசு வோம். அது நட்பாக மாறுகிறது. நான் எப்போதும் நட்புக்கு மரி யாதை கொடுப்பவன்.
படங்களின் வெற்றி தோல்வி மட்டுமின்றி, உங்களைப் பற்றி வரும் செய்திகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களே.. எப்படி?
படங்களின் வெற்றி, தோல்வி என்பது என் கையில் இல்லை. அது மக்கள் கையில் இருக்கிறது. ஒரு படம் எதனால் வெற்றியடைந்தது, எதனால் தோல்வியடைந்தது என்று அலசி ஆராயும் நேரத்தில் நான் என்னுடைய உழைப்பை அடுத்த படத்துக்கு செலவிடுவேன். ஒரு படம் தோல்வியடைந்தால் ஏதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது என்று நினைப்பேன். அதுபோல் ஒரு படம் வெற்றியடைந்து விட்டாலும் அதை என் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. ஏனென்றால் அது என்னுடைய வெற்றியல்ல; ஒட்டுமொத்த படக்குழுவினரின் வெற்றி.
அதேபோல என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால் படங்களில் நடிக்க எனக்கு நேரம் இருக்காது. அதனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
‘அமர காவியம்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படத்தை தயாரித்த திருப்தி கிடைத்தது. வசூல் ரீதியில் படம் சரியாக போகாவிட்டாலும் நல்ல படம் என்று விமர்சகர்களின் பாராட்டு கிடைத்தது. அதுவே எனக்கு சந்தோஷம்.
காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
காதல் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான விஷயம். பெற்றோர், நண்பர்கள், மனைவி இவை அனைத்தையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் அவருடைய முதல் காதல் மனதுக்குள் இருக்கும். அப்படி இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். என்னை பொறுத்தவரை பிப்ரவரி 14 மட்டும் காதலர் தினம் அல்ல. காதலர்களுக்கு தினமும் காதலர் தினம்தான்.
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? காதலுக்காக கிறுக் குத்தனமாக எதையாவது செய்திருக்கிறீர்களா?
மாட்டிவிடுறீங்களா?.. நான் காதலிக்கவே இல்லை என்று சொல்லவில்லையே. காதலித் திருக்கிறேன். காதலுக்காக செய்த ஒவ்வொரு விஷயமும் கிறுக்குத்தனமான விஷயம்தான். காதலியின் பிறந்த நாளன்று ஒவ்வொரு காதல னும் நண்பர்களிடம், ‘காதலிக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்’ என்று யோசனை கேட்பார்கள். வாழ்த்து அட்டை, பூ, கீ-செயின், உடைகள் இப்படி எல்லாமே பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். இப்படி காதலுக்காக செய்த எல்லாமே பிற்காலத்தில் கிறுக்குத்தனமாகத் தோன்றும்.
எப்போது திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறீர் கள்? உங்களுடையது காதல் திருமணமாக இருக்குமா?
கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அது எப்போது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் எனக் கும் விஷாலுக்கும் போட்டி நடந்து கொண்டிருக் கிறது. முந்துவது விஷாலா அல்லது நானா என்பது எங்கள் இருவரது கையிலும் இல்லை.
உங்களது பெண் தோழிகளில் உங்களுக்கு நெருக்கமானவர் யார்?
உண்மையைச் சொன்னால் திரையுலகில் எனக்கு நெருக்கமான தோழிகள் இல்லை. என்னு டைய பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகள்தான் இப்போதும் எனக்கு நெருக்கம். நான் ஒன்றும் இல்லாதவனாக இருந்த காலம் முதல் இன்று வரை அந்த நட்பில் விரிசலே ஏற்பட்டதில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இதைப் பார்க்கிறேன்.


thanx - the hindu