Showing posts with label ஞானி. Show all posts
Showing posts with label ஞானி. Show all posts

Saturday, February 23, 2013

இசை ஞானி இளையராஜா மீதான 18 குற்றச்சாட்டுகள்



இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.


1. ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது.


2. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர்.



 3. தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்;


4. வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை.

5. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்;


6. அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார்.

7. தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார். அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர்.

8. முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார்.


9. யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர்.


10. 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர்.

11. அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர்.

12. பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர்.


13. அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர்.


14. தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர்.


15. பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை.


16. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார்.


17. எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர்.


18. "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.



இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா?

இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) 



ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? 

 நன்றி -

rozavasanth (@rozavasanth)

Saturday, November 03, 2012

ஓ பக்கங்கள் ஞானியின் கடிதம் டூ சின்மயி

அன்புள்ள சின்மயிக்கு

அன்புள்ள சின்மயிக்கு


வணக்கம். 


நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார்.

 சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.



அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும், இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.



முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால், அடங்க மறு, அத்துமீறு, போராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். 



உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல. 



ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ‘ஹையங்கார்கள்’தான். ராமானுஜத்தை, அன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.




சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில், இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ‘ஈ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. 


பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான், அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும். 



‘மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான், ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.



ட்விட்டரில், பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரிய, நீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.



இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடு, மீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். 



ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோ, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோ, மீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும், அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள், கேலிகள் செய்வது நிச்சயம் தவறு. 



இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது.

 .
அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளை, அவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும்.



 ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ? 



மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் , அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால், அதில் சிலர், கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்..



 உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை. 



இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரி, உங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரி, ட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து. 


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும், சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள், நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள், குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.



நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மை, மொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும், என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்பு, பணம், புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.




“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? 



இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன், நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம், வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். ‘பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டு, அதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால், அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவே, உங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை. 



சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள், காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள், அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.



இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள்.


 அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூட, தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.



உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஞாநி


கல்கி 3-11-2012

thanx - kalki ,gnani

Wednesday, October 31, 2012

ஜெ -வுக்கு மனசாட்சி இருக்கிறதா? ஓ பக்கங்கள் ஞானியின் அறச்சீற்றம்

பக்கங்கள்

மனசாட்சி அரசியல்!

ஞாநி

எம்.ஜி.ஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு, தாம் கொடுத்த வாக்குறுதியைத் தம் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.


அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்தி தான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார். பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போதெல்லாம் தம் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து, அதைக் கேட்டு அதன்படியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் ராஜாஜி விவாதிப்பது நடந்திருக்கிறது. அப்படி விவாதிக்கும் குரலைத் தான் காந்தி மனசாட்சி என்று வர்ணிக்கிறார்.

இப்போதைய அரசியல் வாதிகளுக்கெல்லாம் மனசாட்சி உண்டா என்று தெரியவில்லை. சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று சொன்னபோது தம் மனசாட்சி சொன்னபடி அப்படிச் செய்வதாகச் சொல்லியிருந்தார். கலைஞர் கருணாநிதியின் இன்னும் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் சுயசரிதையானநெஞ்சுக்கு நீதிஎன்ற தலைப்பே மனசாட்சியைக் குறிப்பதுதான்


 ஆனால் அந்தப் புத்தகத்தில் அதன் குரல் எதுவும் ஒலிப்பதில்லை என்பது கண்ணதாசனின் வனவாசத்தைப் படித்தால் புரியும். கருணாநிதியின் வெளி மனசாட்சியாக முரசொலி மாறன் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. மாறன் சொன்னது எல்லாவற்றையும் கருணாநிதி கேட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை. சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மாறன் சொன்னதைக் கேட்காமல் அமைத்து, தேர்தலில் அடி வாங்கினார்.


இனி சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது அவருடைய மனசாட்சியின் சொல் கேட்டுத்தான் என்றே தோன்றுகிறது. நாமே சாதிக் கட்சிதானே, அப்புறம் மீதி சாதிக் கட்சிகளுடன் அணி சேர்ந்தால் என்ன முழுகிப் போய் விடும் என்று அவர் மனசாட்சி சொல்லியிருக்கலாம்.


கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவின்படி மனசாட்சி என்று ஒன்று தனியே இருப்பதாக நம்பலாமா என்று தெரியவில்லை. மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சிகளும் கூட தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று தா. பாண்டியனை நினைக்கும்போது நம்பத் தோன்றுகிறது.



சிலருடைய மனசாட்சிகள் ( இருந்தால்) என்ன சொல்லும் என்று அறிய நான் ஆசைப்படும் பட்டியலில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.


குறிப்பாக மன்மோகன்சிங், மாயாவதி, சுப்பிரமணியன் சுவாமி. மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் இல்லை. காரணம், அவர் தன் மனசாட்சி ஏதாவது குரல் எழுப்பினால், நீ யார் என்னைக் கேள்வி கேட்க என்று அதைக் கைது செய்ய உத்தரவிட்டு விடுவார் என்ற பயத்தினால் அது தானே தலைமறைவாகி விட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது.


மம்தாவைப் போலவே பிடிவாதமும் உறுதியும் நிரம்பித் ததும்புபவரான ஜெயலலிதாவின் மனசாட்சியும் இதேபோல கியூ பிராஞ்சுக்கு அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை அங்கீகரித்து அவர் அறிக்கை வெளியிட்டிருப்பதால், ஜெயலலிதாவின் மனசாட்சியும் அவரைப் போலவே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


எம்.ஜி.ஆர். ...தி.மு.கவை ஆரம்பித்து 41 வருடங்கள் ஆவதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்தான் முதன்முறையாக அவர் மனசாட்சி குறிப்பிடப் படுகிறது. எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதி அவர் தொண்டர்களைக் காப்பாற்ற தம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும். ஏன் அந்தத் தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும்? அவர்கள்தான் அண்ணாவின் தி.மு.கவை தன் சுயநலத்துக்காகக் கைப்பற்றிய தீயசக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டு அண்ணாவின் அரசியலையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் காப்பாற்றுவார்களாம்.


என் மனசாட்சிக்கு சரி என்று தெரிந்தவரைஎன்று ஜெயலலிதா இந்த அறிக்கையில் சொல்கிறார். அவருடைய இந்த நீண்ட நெடிய அர்ப்பணிப்பு வாழ்க்கையில் எதையெல்லாம் அவர் மனசாட்சி சரியென்று சொல்லியது, எதையெல்லாம் தவறென்று சொல்லியது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. அது ஒரு பெரும் பட்டியலாக இருக்கும் என்பதால், ஒரு சிலவற்றிலேனும் அறிய முடிந்தால் நலம்.



எம்.ஜி. ஆர் உயிரோடு இருந்த கடைசி காலத்தில் அவர் ஆட்சி பற்றி புகார் செய்து பிரதமர் ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினாரே, அது மனசாட்சி சரியென்று சொன்னதால்தானா?


தனக்கெதிராக சதி நடப்பதாக அறிவித்து உதவியாளர்/உடன் பிறவா சகோதரி சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றி அவர் உறவினர்கள் மீது வழக்குகள் தொடுத்தபோது மனசாட்சி என்ன சொல்லிற்று? திரும்பவும் சில வாரங்கள் கழித்து சசிகலாவை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்ட போது மனசாட்சி என்ன சொல்லிற்று ?


காரணமே சொல்லாமல் ..எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் சபாநாயகர் வரை ஆறு வாரத்துக்கொருமுறை மாற்றப்படுவதும் மனசாட்சியின் சரியைக் கேட்டுத்தானா?


தீய சக்தியின் ஊழலை எதிர்த்துத் தனிக்கட்சி கண்ட எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியவர் சொத்துக் குவிப்பு வழக்குக்காக ஒவ்வொருமுறை பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், மனசாட்சி என்ன சொல்லும்?


உங்களில் ஒருத்தியாக நிற்பேன் என்று அணு உலை எதிர்ப்புப் போராட்டக் காரர்களிடம் சொன்ன சில மாதங்களிலேயே அவர்கள் அத்தனை பேர் மீதும் தேசத் துரோக வழக்கு போடச் செய்வது மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தானா?


பொதுவாக மனசாட்சி என்பது ஒருவரின் சரி, தவறு இரண்டையும் அவரிடம் சொல்லும் என்பதே மனசாட்சியைப் பற்றிய உளவியல் மருத்துவக் கருத்து. ஆனால், ஜெயலலிதாவின் மனசாட்சி மட்டும் . பன்னீர்செல்வம் பாணியில் இடுப்பை வளைத்து முதுகைக் கவிழ்த்து எதற்கெடுத்தாலும் சரி என்று மட்டுமே சொல்லும் விசித்திர மனசாட்சியாக அமைந்திருப்பது உளவியல் மருத்துவத் துறைக்கே ஒரு மாபெரும் சவாலாகப் படுகிறது.


பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதாதே என்று ஒரு குரலும், எழுது என்று ஒரு குரலும் என் மனசுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. எழுதுவதே சரி என்று மனசாட்சி சொல்லிவிட்டதால் எழுதிவிட்டேன்.


ஒரு வேதனைப் பொன்விழா!

இந்திய - சீனப் போர் நடந்து 50 வருடங்களாகின்றன. இதை நிச்சயம் பொன்விழாவாகக் கொண்டாட முடியாது.


ஆனால் 1962ல் நடந்த இந்த யுத்தம் இந்திய அரசியலில், இந்திய வெளியுறவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒற்றைப் பெரும் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த யுத்தம் பற்றிய உட்கட்சிக் கருத்து மோதலின் தொடர்ச்சியால், இரண்டாக உடைந்து மார்க்ஸிஸ்ட் கட்சி உதயமாயிற்று. தேர்தல் அரசியலில் நுழைந்தபின்னர் தனித் திராவிட நாடு கோரிக்கையை எப்படி, எப்போது கைவிடுவது என்று தவித்துக் கொண்டிருந்த தி.மு..வுக்கும் அண்ணாவுக்கும் இந்த யுத்தம் நல்வாப்பாக அமைந்தது. நேருவின் உலகளாவிய ராஜதந்திர பிம்பம் இந்த யுத்தத்தால் நொறுங்கியது.


உண்மையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்னையை யுத்தமாக்கி இந்திய - சீன உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்தபெருமைஇந்திய அரசியல்வாதிகளுக்கும் சீனத் தலைவர்களுக்கும் உரியது.



இன்று இந்த யுத்தம் பற்றிப் பேச இந்தியாவிலும் சரி சீனாவிலும் சரி அரசியல் தலைமைகள் விரும்பவில்லை. ஆனால் இதை நினைவுபடுத்தித் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பகைமையை நீட்டிப்பதில் அமெரிக்காவுக்கு லாபம் இருக்கிறது. தன்னை முற்றிலும் அமெரிக்காவின் தோழனாக இந்தியா காட்டிக் கொண்டால், அது நிச்சயம் சீன - இந்திய உறவை கடுமையாகப் பாதிக்கும்.


சீனாவுடன் வர்த்தகத்தின் மூலம் தோழமையை வளர்த்துக் கொள்வதுதான் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நல்லது. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் தலைவலிகளைத் தணிக்க சீனாவுடன் நட்பை உருவாக்குவதுதான் இந்தியாவுக்கு சரியான தீர்வு. தலாலாமாவுக்கு விருந்து வைத்தாலும்கூட, திபெத் விஷயத்தில் இந்தியா, சீனாவின் நிலையையே ஆதரிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மட்டும்தான் சீனாவுடன் இருக்கும் ஒரே உறுத்தல். இதைப் பேசித் தீர்க்க முடியும். வணிக உறவுகளை பலப்படுத்தினால் இது சாத்தியம்.


இந்தியாவையும் சீனாவையும் பிரித்து வைத்துக் குளிர் காயும் தந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பயன்படுத்தும். மன்மோகன் போன்றோர் அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தச் சூழ்ச்சியிலிருந்து இந்தியா எளிதில் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை.

 நன்றி  -கல்கி, ஞானி , புலவர் தருமி