Skip to content

Thursday, January 07, 2016

ராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை -ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்


நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு கேது என்றால் அஞ்சாதவர்களே இல்லை. எந்தக் கிரகத்தோடு சேர்கின்றார்களோ. எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் ராகு கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான்.
பங்குவர்த்தகம், பந்தயம், லாட்டரி மூலம் பிச்சாதிபதியை லட்சாதிபதியாக்குவது ராகுவின் வேலையென்றால், பணத்தைப் பறித்து பரதேசியாக்கி மெய்ஞானத்தைத் தருவது, கேதுவின் செயலாகும். அரைகுறையாகப் படித்திருந்தும் அனுபவ அறிவால் மெத்தப் படித்த மேதாவிகளைத் தோற்கடிப்பவர் ராகு என்றால் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என ஆர்ப்பாட்டாம் இல்லாமல் அமைதியாக கருத்துகளை வெளிப்படுத்துபவர் கேது.
ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
சிம்மத்திலிருந்து தன் கதிர்வீச்சுகளால் உலகை ஆளவிருக்கிறார். மருத்துவத்துறை நவீனமாகும். மருந்துகளின் விலை குறையும். மரபணு ஆய்வுத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் அதிகமாகும். தேர்வில் புதிய முறை அமலாகும். பாடத்திட்டங்கள் மாறும். அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெற்றாலும் வேலைச்சுமையை அதிகம் சந்திக்க நேரிடும். புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமலாகும். ஓய்வு பெறும் வயதுவரம்பு குறைக்கப்படும். சூரியன் வீட்டில் ராகு அமர்வதால் புற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர்.
அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும். உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். இன, மத அடிப்படையில் போர் மூளும். 08.01.2016 முதல் 10.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மூட்டு வலி, எலும்புத் தேய்வு வந்து நீங்கும். 11.03.2016முதல் 15.11.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஒவ்வாமை, விபத்துகள், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். 16.11.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அறுவை சிகிச்சை, திருமணப் பிரச்சினை, வழக்குகள், நிம்மதியற்ற போக்கு வந்து நீங்கும்.
கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
கும்பத்தில் அமர்ந்து ஆட்சி செய்வார். சனி வீட்டில் கேது அமர்வதால் பரம்பரைப் பணக்காரர்களும், பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்படைவார்கள். மதமாற்றம் அதிகரிக்கும். மக்களிடையே உழைக்கும் குணம் குறையும். பழைய தொழிற்சாலைகள் நலிவடையும். வழிபாட்டுத்தலங்கள் வன்முறையால் சேதமடையும். தேர்த் திருவிழா கொண்டாட்டங்கள் குறைந்து யோகா, தியானம், கூட்டுப்பிரார்த்தனைகள் அதிகரிக்கும்.
பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காய்ச்சல், குடும்பப் பிரச்சினைகளால் மனநிம்மதியின்மை, பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை உள்ள காலகட்டத்தில் சதயம் நட்சத்திரக்காரர்கள் விபத்துகள், வழக்குகள் மற்றும் மரியாதைக்குறைவான சம்பவங்களைச் சந்திக்க நேரிடும். 21.03.2017 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சினைகள், பசியின்மை, முன்கோபத்தால் கணவன் மனைவி பிரிவு வந்து நீங்கும்.

மேஷம்

சொல்வன்மையும், செயல்திறனும் கொண்டவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு திடீர் யோகத்தையும், புகழையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உகந்த இடமல்ல. இருப்பினும் உங்கள் யோகாதிபதி சூரியனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களைக் குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் அமைதி நிலவும். எந்த ஒரு விஷயத்திலும் குழப்பம், தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகள் எதிர்த்துக் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள்.
அவர்களின் உரிமையில் தலையிடாதீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை கவலைகள், வீண் விரயங்கள், களவு, பணப் பற்றாக்குறை, சிறுசிறு விபத்துக ளெல்லாம் வந்து போகும். உடல் எடை அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு சம்பளம் கூடும். தற்காலிகப் பணியில் இருந்தவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு அடுத்தடுத்த பயணங்களையும் செலவுகளையும் தந்த கேதுபகவான் இப்போது 11-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை நினைத்தது நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தை ஆரோக்யம் சீராகும். புது வேலை அமையும். வீட்டில் மங்கள இசை முழங்கும்.
13.07.2016 முதல் 20.03.2017 வரை எதிலும் ஆர்வமின்மை, வீண் பகை, ஹீமோகுளோபின் குறைதல், நரம்புச் சுளுக்கு, தோலில் நமைச்சல், மறைமுக அவமானம் வந்து செல்லும். 21.03.2017 முதல் 25.07.2017 வரை அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

தெய்வீக சிந்தனை அதிகமுள்ளவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு கை, கால் வலி, கழுத்து எலும்புத் தேய்வு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டும். வீட்டை விரிவுபடுத்துவது அழகுப்படுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றிச் செலுத்துங்கள்
08.01.2016 முதல் 10.03.2016 வரை மனோபலம் கூடும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். 11.03.2016 முதல் 15.11.2016 வரை தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள். என்றாலும் இரத்த சோகை, சளித் தொந்தரவு வந்து செல்லும். 16.11.2016 முதல் 25.7.2017 படபடப்பு, கை, கால் மரத்துப் போகுதல் வந்து செல்லும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்துகொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். மூத்த சகோதரர்கள் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர் தலையிட அனுமதிக்காதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
21.03.2017 முதல் 25.07.2017 வரை கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கொஞ்சம் சிரமப்படுத்தினாலும் மற்றொரு பக்கம் விடாமுயற்சியால் முன்னேற வைக்கும்.

மிதுனம்

பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை சிரமப்படுத்திய ராகுபகவான் இப்போது ராசிக்கு 3-ல் வந்தமர்வதால் இனி தன்னம்பிக்கை உண்டாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். நிலுவையிலிருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புதிதாகத் தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். 08.01.2016 முதல் 10.03.2016 வரை மனோபலம் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
வியாபாரம் செழிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். பிரபலமான பகுதியில் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கேதுவின் பலன்கள்:
உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையைத் தந்துகொண்டிருந்த கேது இப்போது ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். அவருடன் மோதல்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கல்யாண முயற்சிகள் தாமதமாகும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்தாலும் சமாளிப்பீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டி வரும்.
இந்த ராகு, கேது மாற்றம் உங்களை கடினமாக உழைக்க வைத்தாலும் வெற்றிக் கனியைச் சுவைக்க வைப்பதாக அமையும்.

கடகம்

விருப்புவெறுப்பு பாராமல் அனைவர்க்கும் உதவுபவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு தைரியத்தையும், காரிய வெற்றியையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்வதால் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எச்சரிக்கை தேவை. எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள்.
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பேருந்துகளில் செல்லும்போது படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். . கண்பார்வைக் கோளாறு ஏற்படக்கூடும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.
08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். அண்டை மாநிலத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும்.
ராகுபகவான் உங்கள் சுகலாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் தடைகள் நீங்கும். சிலர் வீடு மாறுவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்து வந்த சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். பால்ய நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு தந்தையாருடன் கசப்புணர்வுகளையும், வீண் செலவுகளையும் தந்த கேது இப்போது ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும்.
செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். என்றாலும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
13.07.2016 முதல் 20.03.2017 வரை முன்கோபம், அடிமனதில் ஒருவித பயம், பதற்றம், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, அலர்ஜி வந்துப் போகும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. 21.03.2017 முதல் 25.07.2017 வரை புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
வளைந்துகொடுத்தால் வானம் போல் உயரலாம்.

சிம்மம்

ஆக்கும் சக்தி அதிகமுள்ளவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்து கொண்டு பேச்சால் பிரச்சினைகளையும், குடும்பத்தினருடன் பிரிவுகளையும் ஏற்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் இனி பேச்சில் கனிவு பிறக்கும். உங்களுடைய பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.
இரும்பு மற்றும் கால்சியம் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே உணவில் பச்சை காய், கீரை, கனி வகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். தூக்கம் குறையும். மின்னஞ்சல் மற்றும் கைப்பேசியில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிற மொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. தொண்டை வலி, வேனல் கட்டி, உடல் உஷ்ணம் வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவி கள் உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். மின்சாரம், கத்தரிக்கோல், நகவெட்டியைக் கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் அமர்ந்துகொண்டு நாலாவிதத்தில் உங்களை சிதறடித்த கேது இப்போது ராசிக்கு 7-ல் அமர்வதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்சினையால் பிரிவுகள் வரக்கூடும். மனைவி உங்கள் குறைநிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மனைவிக்கு கர்பப்பை வலி, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினைகள் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகனின் கோபம் குறையும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல மணமகன் அமைவார். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவர் உங்களைப் புரிந்துகொள்வார். பாதித் தொகை தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரர்களால் மதிப்புக் கூடும்.
இந்த ராகு கேது மாற்றம் ஆரோக்கிய குறைவையும், காரியத் தடங்களையும் தந்தாலும் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிய வைக்கும்.

கன்னி

கடமை உணர்வு அதிகமுள்ளவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு திக்குத் திசையறியாது திண்டாட வைத்த ராகுபகவான் இப்போது உங்கள் ஜென்ம ராசியை விட்டு விலகி 12-ம் விட்டிற்குள் இடம்பெயர்வதால் சோர்ந்து கிடந்த நீங்கள் இனி புத்துணர்ச்சியடைவீர்கள். கலையிழந்த உங்கள் முகத்தில் புன்னகை மலரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். உடல் ஆரோக்யம் சீராகும். வீரியத்தை விட்டு விட்டு காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள்.
குடும்பத்தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவார்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். என்றாலும் விரயஸ்தானமான 12&ல் ராகு மறைவதால் திட்டமிடாத பயணங்கள் அதிகமாகும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களும் இருந்துகொண்டேயிருக்கும். நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்கள் விட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச்செலவுகள் அதிகமாகும். அரசுக்கு முரணான விஷயங்களில் ஈடுபடாதீர்கள்.
ராகுபகவான் உங்கள் தனபாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துகொண்டு கணவன் மனைவிக்குள் பிரச்சி்னைகளை ஏற்படுத்திய கேதுபகவான் இப்போது ராசிக்கு 6-ம் இடத்தில் வந்தமர்வதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். தாம்பத்தியம் இனிக்கும்.
மனைவிக்கு இருந்துவந்த உடல் நலக் குறைவு சரியாகும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் உங்களின் கனவு நனவாகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.
இந்த ராகு கேதுப் பெயர்ச்சி விவேகமான முடிவுகளால் எதையும் சாதிக்க வைக்கும்.


துலாம்

சொந்த முயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் நின்றுகொண்டு வீண் அலைக்கழிப்புகளைத் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டிற்குள் அமர்வதால் உங்களுடைய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். திடீர் பணவரவு உண்டு. எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் முக்கியப் பதவிக்கு தேர்ந்கெடுக்கப்படுவீர்கள். அதிக வட்டியுள்ள கடனை, குறைந்த வட்டிக்கு வாங்கி பைசல் செய்வீர்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 08.01.2016 முதல் 10.03.2016 வரை பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. மனைவி வழியில் செல்வாக்கு கூடும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை உங்கள் ரசனை மாறும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். என்றாலும் அலர்ஜி, கழுத்து வலி, தலைச்சுற்றல் வந்துபோகும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படப் பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். காசோலையில் வங்கிக் கணக்கை சரிபார்த்த பிறகு கையொப்பமிட்டுத் தருவது நல்லது.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளைத் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் கேது அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய நிலை உருவாகும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை உங்கள் மீது வீண் பழி, ஏமாற்றங்கள், பணம் மற்றும் பொருள் இழப்புகள், கணவன் மனைவிக்குள் மோதல்கள் வந்து செல்லும். வாழ்க்கை குறித்த விரக்தி ஏற்படும்.
இந்த ராகு கேது மாற்றம் உங்களைச் சின்ன சின்ன சுகங்களை இழந்து பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும்.

விருச்சிகம்

தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்துகொண்டு எதிலும் வெற்றிகளைத் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் சவாலான வேலைகளையும் சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆன்மிகவாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திரும்பத் தந்து நிம்மதியடைவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள். ஆபரணச் சேர்க்கை நடக்கும்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை அரசு காரியங்கள் விரைந்து முடியும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை திரும்பி வராது என்று கருதிய பணம் கைக்கு வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு வீண் குழப்பங்களையும், உறவினர் பகையையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். அலைபாய்ந்த மனசு இனி அமைதியாகும். அடிக்கடி கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். 4-ல் ராகு நிற்பதால் தாயாருடன் கசப்புணர்வுகள் வரும். தாயாருக்கு கழுத்து, முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை பணவரவு திருப்தி தரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். 13.07.2016 முதல் 20.03.2017 வரை குடும்பத்தில் சலசலப்புகள், மந்தம், மறதி, உடம்பில் இரும்புச் சத்து குறைதல் எல்லாம் வந்துப் போகும்.
இந்த ராகு, கேது மாற்றம் முணுமுணுக்க வைத்தாலும் திட்டமிடுதல் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

தனுசு

பகட்டான வாழ்க்கைக்கு மயங்காதவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு வேலைச்சுமையையும், அவமானங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்களுக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தந்தையாருடன் மனக்கசப்பு வந்துச் செல்லும். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். வீண் கவுரவத்திற்காகச் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். குலதெய்வப் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களுடைய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை முயற்சிகளுக்கு நல்ல பதில் வரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அயல்நாடு சென்று வருவீர்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை பழைய கடன் பிரச்சினையால் சேர்த்து வைத்த கவுரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.
கேதுவின் பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துகொண்டு தாயாருக்கு மருத்துவச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்வதால் தன்னம்பிக்கை பிறக்கும். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். இளைய சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 08.01.2016 முதல் 12.07.2016 வரை உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்து கிடைக்காதென்று கருதிய தொகை கைக்கு வரும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை மனசஞ்சலம், நிம்மதியின்மை, எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும்.
21.03.2017 முதல் 25.07.2017 வரை மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உடன்பிறந்தவர்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்களும் இருக்கும்.
இந்த ராகு கேது மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் எதிர்பாராத வெற்றிகளையும் தரும்.

மகரம்

நீதிக்குத் தலை வணங்குபவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துகொண்டு தந்தையாருடன் மனவருத்தங்களையும், செலவுகளையும் தந்த ராகுபகவான் இப்போது 8-ல் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். உங்களுடைய அடிப்படை நடத்தைகள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தந்தையாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். எளிதாக முடிக்க வேண்டிய சில விஷயங்களைக் கூட இரண்டு, மூன்று முறை அலைந்து முடிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும்.
வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தம்பதிகளுக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி பின்னர் நெளிய வேண்டாம். 08.01.2016 முதல் 10.03.2016 வரை தலைக்குனிவான சம்பவங்கள் நிகழக்கூடும். விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவ வேண்டாம்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை பணம் வரும். புது வேலை கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 16.11.2016 முதல் 25.7.2017 வரை திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு புது முயற்சிகளில் வெற்றியைத் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிற்குள் அமர்வதால் இனி அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். குடும்பத்தினருடன் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. பல் வலி, காது வலி, பார்வைக் கோளாறு வந்துச் செல்லும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை சுபச்செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 13.07.2016 முதல் 20.03.2017 வரை வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வழக்கு சாதகமாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.
இந்த ராகு கேது மாற்றம் பக்குவப்படுத்துவதுடன், வாழ்க்கையின் சூட்சுமத்தை உணர்த்துவதாக அமையும்.

கும்பம்

வாரி வழங்கும் வள்ளல்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை ராசிக்கு 8-ல் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்கான சோதனைகளைத் தந்த ராகுபகவான் இப்போது 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறையும். பிரிவுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தால் சச்சரவுகள் வரும்.
பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைகூர்ந்து பேசாதீர்கள். மனைவிக்கு அறுவை சிகிச்சை, ஃபைப்ராய்டு பிரச்னை, நெஞ்சு வலி வந்துப் போகும். குடும்பத்தினரிடம் எதையும் மறைக்க வேண்டாம். அவர்களுக்குத் தெரியாமல் பெரிய முடிவுகளோ, முயற்சிகளோ எடுத்து சிக்கிக்கொள்ளாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. அவ்வப்போது உறக்கமில்லாமல் போகும். திருமணம் தள்ளிப் போய் முடியும். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தை பிரிய வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை.
08.01.2016 முதல் 10.03.2016 வரை தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. என்றாலும் வேனல் கட்டி, உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வந்து போகும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கும். 11.03.2016 முதல் 15.11.2016 வரை வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு வாங்க கட்ட கடன் கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே பிரச்சினையில் சிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் இனி பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தடுமாறிக்கொண்டிருந்த உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ராசிக்குள் கேது அமர்வதால் உடல் நலம் பாதிக்கும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள் மற்றும் அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பாராம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள். 08.01.2016 முதல் 12.07.2016 வரை பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 21.03.2017 முதல் 25.07.2017வரை பரபரப்பாகக் காணப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி ஓய்வின்றி உழைக்க வைப்பதுடன் தன் கையே தனக்குதவி என்பதை உணர வைக்கும்.

மீனம்

சமாதானத்தை விரும்புபவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களுடைய திறமையை முடக்கிய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்வதால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சச்சரவுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள்.
அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிக்கு இருந்துவந்த நோய் வெகுவாகக் குணமடையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்கு வர்த்தகம் மூலமாக பணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொள்வீர்கள். ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். அரசாங்க பதவி சிலருக்குத் தேடி வரும். ஆனால் சளித் தொந்தரவு, கண் எரிச்சல், செரிமானக் கோளாறு வந்து போகும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை வேலைச்சுமையால் டென்ஷன், காரியத் தடங்கல், ஆடம்பரச் செலவுகள் என வந்து போகும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். பணவரவு உண்டு.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து கொண்டு பல இன்னங்களையும், சுகவீனங்களையும் தந்த கேது இப்போது 12-ம் வீட்டில் சென்று மறைவதால் மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். ராஜதந்திரமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். தோற்றப் பொலிவு கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் நினைத்தது நிறைவேறும். புது வேலை கிடைக்கும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். அவ்வப்போது தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணருவீர்கள்.
சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
இந்த ராகு கேது மாற்றம் எல்லா வளங்களையும் தருவதுடன், எதையும் சாதிக்க முடியும் என்ற தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக அமையும்.


thanx - the hindu

பனி மலர்-கருணை மலர்

1]போலீஸ் = கடைசியா சிம்புவை எங்கே பாத்தீங்க?

நயன் தாரா =,ஹன் சிகா வீட்ல
ஓஹோ.ஏம்மா நீங்க எங்கே பார்த்தீங்க?
ஹன் சிகா =, நயன் தாரா வீட்ல


================


2]பனி மலர் னு பேர் வெச்சவங்க கூலா இல்லாம கோபப்படுவதும் கருணை மலர் னு பேர் வெச்சவங்க கருணைக்கிழங்கு கூட அரியத்தெரியாம இருப்பதும் சகஜம்தானே?


============

3]ஓணம்,சித்திரக்கனி க்கு மட்டும் வீட்டு வாசல்ல கோலம் போட்டா அது கேரளாு.மார்கழி மாசம் ஸ்பெசலாவும் மீதி 335 நாள் நார்மலாவும்கோலம்போட்டா தமிழ்


===============



4]யாருமே பொண்ணு கொடுக்காததால் நொந்த மாப்ளை மேரேஜ் பிக்ஸ் ஆன மாப்ளை கிட்டே என்னைப்போல் திருமணம் பண்ணிக்காம வாழமுடியுமா?ன்னு கேட்டாராம்#ராம்தாஸ்



============



5]தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மேடையில் முழங்க வேண்டிய பாட்டு.செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேண்டும்




===============



6]கோயிலில் லெக்கின்ஸ் அணிந்து வந்து போராடப்போகும் புரட்சிப்பெண்கள் டக் இன் சர்ட் பண்ணாமல் டாப்சை வெளியே எடுத்துவிட்டு வந்தால் தேவலை



=================



7]தலைவர்களின் மைனஸ்


1 ஜெ = எதேச்சாதிகாரம்

2 கலைஞர் = குடும்ப அரசியல்
3 வை கோ = விடுதலைப்புலி முத்திரை


4,ராம்தாஸ் = ஜாதிப்பற்று/வெறி

===========

8]டி எல் ல கூட்டம் இருக்கா?ன்னு பார்த்து ட்வீட் போடுபவர் சுயநலவாதி.மனசுக்கு தோணும்போதும் நேரம் கிடைக்கும்போதும் ட்வீட்டுபவர் பொதுநலவாதி



============




9 நவீன தமிழச்சியா தன்னைக்காட்டிக்கொள்பவர்கள் கூட மாடர்ன் டமிழச்சி னு ஸ்டைலா இங்க்லீஷ்ல பேர் வெச்சிக்கறாங்க



=============



10 எதிரெதிராய் காண்கையில்,


பிகரு முறைத்தால் கழட்டி விடப்பட்ட காதல்.
பிகரோட அம்மா முறைத்தால் கள்ளக்காதல்..!"



================


11]60,000 * என் பாலோவர்ஸ் எல்லாருக்கும் நன்றி இதற்கு,,, நன்றிகடனா இனி டெய்லி கவிதை எழுதறதை குறைச்சுக்கறேன்

=============

12 வேலை மெனக்கெட்டு 60000 பாலோயர்சை ஆராய்ச்சி செஞ்சதில் பெண் பாலோயர்ஸ் % ரொம்பக்கம்மியா இருக்கு.அதனால் சமையல் டிப்ஸ் ,கோலம் இப்டி இறங்கறேன்

=============

13 FB ல ஒரு பொண்ணு எனக்கு சளி பிடிச்சிருக்குனு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.8769 பேர் எனக்கும் தான்.சேம் பிஞ்ச் னு கமெண்ட் போட்டிருக்காங்க.


===============

14 உத்தியோகம் புருஷ லட்சணம்-

மத்தியான தூக்கம் பொண்டாட்டி லட்சணம்

=============

15 பொண்ணுங்க எல்லாம் அவங்க போட்ட கோலத்தைத்தான் அப்டேட்டறாங்களா ? பக் வீட் ஆண்ட்டி கோலத்்தை அபேஸா?ன்னு கண்டுபிடிக்கனும்

==============

16 ஒரு பொண்ணு : "ப்ச்"" னு பகல்ல ஸ்டேட்டஸ் போட்டா ஆபீஸ் ஒர்க் சலிப்பாவும் இருக்கலாம்.வீட்ல கணவர் தந்த முத்தத்தின் களிப்பாவும் இருக்கலாம்


===========

17 புது ஆண்டின் முதல் நாளில் 10 படங்கள் ரிலீஸ் ஆவது 17 வருடங்களுக்குப்பின் # 1/1/2016

================

18 உலகில் பெரிய போதை காதலியின் விழி.
உலகின் சிறந்த பாதை அவரவர் சொந்த ஊருக்குப்போகும் பாதை

===============

19 தினமும் WALK போவேன் என்னும் WALKக்குறுதியுடன் இருந்தால் உடல் நலத்தேர்வில் என்றும் வெற்றிதான்

================

20 உங்க காதலன் பேரு சேகரா இருந்தா நீங்க பாட வேண்டிய பாட்டு


வ"சேகரா" உன் நெஞ்சினிலே

===============

அழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:

குழந்தை என்னும் அற்புதம் நமது வாழ்வில் என்னென்ன அதிசயங் களை நிகழ்த்தும் என்பதைச் சில குடும்பங்கள், ஒரு பள்ளிக்கூடம், ஒரு அநாதை ஆசிரமம் ஆகியவற்றின் பின்புலத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.



ஏதோ ஒரு விதத்தில் குழந்தை குறித்த ஏக்கங்களும் சிக்கல்களும் சந்தோஷங் களும் கொண்டவர்கள்தாம் இந்தப் படத்தின் கதை மாந்தர்கள். குழந்தை என்னும் அம்சம் ஒவ்வொரு குடும்பத் தின் உணர்வு தளத்தில் என்னவாக உருமாறுகிறது என்பதைக் காட்சிப் படுத்தியபடி நகரும் படம் மையப் பிரச்சினையாக ஒரு பள்ளிக்கூடத்தின் நாடகத்தை முன்னிறுத்துகிறது. அந்த நாடகத்தின் மையமும் ஒரு குழந்தைதான்.


குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கும் ஆசிரியை, ஆண் குழந்தைக்காகத் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர், பிறந்த குழந்தையைப் பார்க்கக்கூடத் தன் கணவன் வரவில்லையே என்று தவிக் கும் தாய், வயிற்றில் கருவையும் பொறுப் பற்ற காதலன்குறித்த வேதனையை மனதிலும் சுமக்கும் இளம் பெண், பெற் றோரின் பொறுப்பற்ற சண்டையால் பாதிக் கப்படும் சிறுவன், புத்திர சோகத்தால் தவிக்கும் இணையர், நாடகத்தில் குழந்தை இயேசுவாகத் தோன்ற நிஜக் குழந்தையை அழைத்துவர வேண்டுமே என்று தவிக்கும் மாணவர்கள் ஆகியோரின் உணர்ச்சிகள் வலுவாகப் பதிவாகியிருக்கின்றன. இவற்றினிடையே அநாதை ஆசிரமம் ஒன்றின் அன்றாட வாழ்வும் இயல்பாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.



தனித்தனியாக இருக்கும் இந்தக் கதைகளின் பொது அம்சம் குழந்தை என்றாலும் அந்தக் குழந்தை ஒரே குழந்தை அல்ல. வெவ்வேறு குழந்தைகள். எனவே இந்தக் கதைகளை இணைக்க வேறு சரடுகள் தேவைப்படுகின்றன. அந்தச் சரடுகளை உருவாக்கிய விதத்தில் இயக்குநர் அதீதமான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.


பரஸ்பரம் சம்பந்தமே இல்லாத நபர் களைத் தற்செயல் நிகழ்வுகள் இணைத்து வைப்பது இயற்கைதான். ஆனால் தற் செயல் நிகழ்வுகள் இயல்புத் தன்மையை மீறிச் செல்லும்போது நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. ‘வேண்டாத’ குழந்தை கூவத்தில் போடப்படுவது நம்பகமான நிகழ்வுதான். ஆனால் குழந்தை ஒன்றைத் தேடி அலையும் சிறுவர்கள் கண்ணில் அந்தக் குழந்தை படுவது தற்செயலின் மந்திரக் கணம். இப்படி ஒரு இடத்தில் நடந்தால் அதை விட்டுவிடலாம். இதே அதிசயம் திரும்பத் திரும்ப நிகழும்போது தற்செயல் என்பதே திரைக்கதையை ஓட்டும் உத்தியாக மாறிச் செயற்கையாக வெளிப்படுகிறது.


வயிற்றில் நிறைமாதக் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள ஒரு பெண் முயற்சி செய்ய, ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதியின் கண்ணில் அவள் படுவதும் அவளுக்கு ஆண் குழந்தை பிறப்பதும் தற்செயல் உத்தியின் அதீதப் பயன்பாடுதான். குழந்தையைக் கடத்துவது என்னும் விபரீத முடி வைச் சிறுவர்கள் எடுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். ஆனால் பிறந்து இரண்டு மூன்று நாட்களே ஆன ஒரு குழந்தையைக் கடத்திச் செல்லும் முறையில் வேடிக்கையும் விறுவிறுப்பும் இருக்குமளவுக்கு நம்பகத்தன்மை இல்லை.


நாடகம் நடக்கும் நேரத்தில் குழந்தை காணாமல்போகும் உப நாடகமும் இதே ரகம்தான். ஜான் விஜய்யின் பாத்திரம் வலிந்து திணிக்கப்பட்டதாக உள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் இணையர் ஒன்றிணையும் காட்சியும் நாடகத்தனமாகவே இருக்கிறது. சதுரங்கப் போட்டி தொடங்கியதுமே அதன் முடிவு என்ன என்பது தெரிந்து விடுகிறது.



இந்தக் குறைகளை மீறியும் படம் பார்வையாளர்களைக் கவர்கிறது என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் உணர்ச்சிகளைக் கையாண்ட முறையும் நடிகர்கள் அவற்றை வெளிப்படுத்திய முறையும்தான். பெரும்பாலான காட்சி களில் வெளிப்படும் உணர்ச்சிகள் மனதைத் தொடுகின்றன. குறிப்பாக, இலங்கைத் தமிழ் இணையரின் புத்திர சோகம். ஈழத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனிமையின் வெறுமையில் அமர்ந் திருக்கும் காட்சி படத்தின் சட்டகத்தைத் தாண்டி விரியும் யதார்த்தச் சித்திரம். இந்தச் சித்திரம் எழுப்பும் சலனங்கள் ஆழமானவை.


கருணாஸின் பாத்திரப் படைப்பு கச்சிதம் என்றால் அவருடைய நடிப்பு அற்புதம். கருணாஸுக்குள் இருக்கும் இவ்வளவு திறமையான நடிகரை இயக்குநர் சார்லஸ் அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். இலங் கைத் தமிழ்ப் பெண்ணாக வரும் ரித்விகா வின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.



தம்பி ராமய்யா, வினோதினி, கரு ணாஸ், ரித்விகா ஆகியோரின் தேர்வு மிகவும் பொருத்தமானது. கேப்டன் சாணக்யா, யாழினி, நேஹா பாபு, ராஜேஷ் குணசேகர் ஆகிய சிறுவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தை விறுவிறுப்பாக ஓட்டிச் செல்லவும் குழந்தைகள் பற்றிய படத்துக்கான உணர்வைப் படம் முழுவதும் ஏற்படுத்த வும் இவர்கள் பெரிதும் பயன் பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசவிடாதது ஒரு பெரிய ஆறுதல்.


விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் சிறப்பான ஒளிப்பதிவு படத்தின் ஆதார பலம். வேத்சங்கர் சுகவனத்தின் இசை படத்தின் மற்றுமொரு சிறப்பு. ‘அழகு குட்டி செல்லம்’ என்ற பாடல் முதல் முறை கேட்கும்போதே மயக்குகிறது. இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் மனதை அள்ளுகிறது.


‘அழகு குட்டி செல்லம்’ குழந்தை களை மையமாகக் கொண்ட படம். முழுக்க முழுக்கக் குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தும் படம் அல்ல. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொதுவான உலகின் சில பகுதிகளைப் படம் சித்தரிக்கிறது. நுண்ணுணர்வுடனும் கவித்துவத்துடனும் சில காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. தனித் தனிக் கதைகளை இணைத்த விதத்திலும் சில கதைகளை வடிவமைத்த விதத்திலும் நம்பகத்தன்மை கூட்டியிருந்தால் படம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கும். கலாபூர்வமான சாதனையாக வும் இருந்திருக்கும்.


நன்றி - த ஹிந்து

ஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 தகவல்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படங்கள் - இடது: பிடிஐ | வலது: ஜி.நாதன்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படங்கள் - இடது: பிடிஐ | வலது: ஜி.நாதன்
இந்தியத் திரையுலகம் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜன.6) பிறந்தநாள். ஆஸ்கர் விருதை வென்ற மேடையில் கூட "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் பேசி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் வெளிவருகிறது என்றால், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டு வியக்க அவரது இசை மட்டுமல்ல... தனிப்பட்ட சிறப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.



* பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது எந்த ரசிகர் ஆட்டோகிராப் கேட்டாலும் நின்று போட்டு விட்டுதான் கிளம்புவார். அதற்கு எவ்வளவு நேரமானாலும் பொறுத்திருக்க தயங்கமாட்டார். ஆனால், அவர் மசூதியில் தொழுகை செய்துவிட்டு வரும் போது, யார் கையெழுத்து கேட்டாலும் "இங்கு இறைவன்தான் பெரியவர். அவரை மிஞ்சிய ஆள் நானில்லை. இங்கு வைத்து என்னிடம் கையெழுத்து கேட்காதீர்கள்" என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவார்.



* தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும்போது, ஒரே நேரத்தில் பல்வேறு பாடல்கள் கொடுக்க வேண்டியது இருக்கும். அந்த சமயத்தில் தனியாக அவருடைய ஸ்டுடியோவில் போய் உட்கார்ந்து கொண்டு நிறைய பாடல் மாதிரிகளைத் தயார் செய்வார். அதனை தனது உதவியாளர்களிடம் கொடுத்துவிடுவார். "3, 5 மாதிரிகளை இந்த இயக்குநருக்கும் 7, 9 மாதிரிகளை இந்த இயக்குநருக்கும் அனுப்பிவிடுங்கள்" என்று சரியாக இயக்குநர் எந்த மாதிரியான பாடல்களை விரும்புவார்கள் என்று தேர்ந்தெடுத்து அனுப்பி ஒப்புதல் வாங்குவது தான் ரஹ்மான் ஸ்டைல்.



* பாடல்கள் இசையமைப்பைத் தாண்டி அவருக்கு நடிப்பதில் ஆர்வமே கிடையாது. அந்த அளவுக்கு பயங்கர கூச்ச சுபாவம் கொண்டவர். 'ஜெய் ஹோ' பாடலை தயார் செய்தவுடன் இந்தியாவே கொண்டாடியது. ஆனால், அதை படமாக்கப்பட்ட கஷ்டம் இயக்குநர் பரத் பாலாவுக்கு மட்டுமே தெரியுமாம். கேமரா முன்னால் நடிப்பதற்கு மிகவும் கூச்சப்பட்டு இருக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்து முழுமையாக தயாரானவுடன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார் பரத் பாலா. உடனே அப்பாடலை திரையிட எல்லாம் தயார் செய்துவிட்டு தன் அம்மாவை அழைத்து வந்து, "இந்த மாதிரி ஒரு பாடலை தயார் செய்திருக்கிறேன் அம்மா. நீங்கள் பாருங்கள்" என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார்.



* ரஹ்மான் உடன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் வேகமாக கார் ஓட்டக் கூடியவர் என்று. அவர் கார் ஒட்டும்போது அவருடன் உட்கார்ந்து போக அவருடன் பணிபுரிபவர்கள் பயப்படுவார்கள். அந்தளவுக்கு படுவேகமாக கார் ஓட்டக் கூடியவர். ஆனால், சாலை விதிகளை கச்சிதமாகக் கடைபிடிப்பவர்.




* எவ்வளவு பெரிய மதிப்புடைய கார்கள் வைத்திருந்தாலும், பழைய அம்பாசிடர் காரை மட்டும் மிகவும் ரசித்து ஓட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.


* ரஹ்மான் மிக அருமையாக மிமிக்ரி செய்வார். அதிலும் வைரமுத்து போல மிமிக்ரி செய்வது அவருக்கு விருப்பமான ஒன்று.



* பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இசையமைப்பார். வீட்டில் இருந்து இரவு நேர பாடல் ஒலிப்பதிவுக்கு கிளம்பும்போது, குழந்தைகள் தூங்கியவுடன்தான் கிளம்புவார். அந்த அளவுக்கு குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் உடையவர். மேலும், இவருடைய மகன் அமீனுக்கும், இவருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள். (ஹேப்பி பேர்த் டே அமீன்!!)



* இயக்குநர் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் 'இந்தியன்' படத்துக்கு பணியாற்றி வந்த நேரம். அந்த மெட்டுகள் அனைத்தையும் ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டுக் கொண்டு ஆஸ்திரேலியா பயணமானார். அப்போது விமான நிலையத்தில் தெரியாமல் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்யக் கொடுத்துவிட்டார். விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனிங்கில் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்துவிட்டால், அதில் உள்ளவை அனைத்துமே அழிந்துவிடும். வேலை அவசரத்தில் கொடுத்ததால், சுமார் 25 மெட்டுகள் அழிந்துவிட்டன. அப்போது சென்னை திரும்பியவுடன் இயக்குநர் ஷங்கர், பாடல்கள் வேண்டும் என கேட்கவே, ஹார்ட் டிஸ்க்கை போட்டுப் பார்த்தால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரும் அதிர்ச்சி. ஆனால், அவர் சோகத்தில் எல்லாம் உட்கார்ந்துவிடவில்லை. உடனடியாக எந்த மாதிரி எல்லாம் மெட்டுகள் பண்ணினோம் என்று யோசித்து ஒரே நாளில் 'இந்தியன்' பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.


* உலக அளவில் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், இவருடைய பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அனுமதியே கிடையாது.



* எவ்வளவு முக்கியமான வேலைகள் இருந்தாலும் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில் அவர் தவறுவதில்லை. இந்தியாவில் முக்கியமான தர்காக்கள் எந்த சந்துக்குள் இருந்தாலும் சென்று பார்த்து தொழுதுவிட்டு வருவது ரஹ்மான் வழக்கம்.



 tha hindhu

ஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்புவதற்கா?

234 சட்டமன்ற தொகுதிகளிலும் "சாதனை வி்ளக்க இலட்சிய பேரணி "யை  தொடங்கியுள்ளது ஆளும் கட்சியான அதிமுக. இது,  வரும் தேர்தலில் அதிமுக தனித்துக் களம் காண எடுத்து வைத்துள்ள முதல் அடி என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்,  சிறு சிறு இயக்கங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு,  மோடி அலையை முறியடித்து 37 தொகுதிகளில் வென்றதுபோல, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற, முதல்வர் ஜெயலலிதா அதிரடி வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 3 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், எதிர்க்கட்சியான தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என்பதில் மதில்மேல் பூனையாகவே இருக்கிறது. திமுக தரப்பும், மக்கள் நலக் கூட்டணியும், மத்தியில் ஆளும் பாஜகவும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. ஆனால் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்,  யாருடன் கூட்டணி என்பதை முன்கூட்டியே சொல்லாமல் இருப்பதை ஒருவித அரசியல் வியூகமாகவே கருதுவதால்,   திமுக, கடுகடுப்புடனேயே அவரை பார்த்து வருகிறது. இருப்பினும் மெல்லவும் விழுங்கவும் முடியாத நிலையிலேயே அக்கட்சி உள்ளது. 


கடந்த செப்டம்பர் மாத மத்தியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  தமிழகம் முழுக்க 'நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்'  தொடங்கி, டிசம்பர் 29 ம் தேதி வரை  சென்னை நீங்கலாக,  தமிழகத்தின் பிற மாவட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.  இந்த மக்கள் சந்திப்பின் போது ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதா ஆட்சி குறித்தும், முந்தைய திமுக ஆட்சி குறித்தும் ஒப்பிட்டுப் பேசி, தேர்தல் பிரசாரம் போலவே கூட்டங்களை நடத்தினார். இன்று (புதன்) சென்னையில்  நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் நிறைவு சந்திப்பை நிகழ்த்துகிறார்.

அதே போல பாமகவும், திமுகவிற்கு முன்னதாகவே அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மண்டல மாநாடு நடத்தியும்,  துண்டுப் பிரசுரம் வெளியிட்டும் தேர்தலுக்கு தயாராகியுள்ளது. 


இதனிடையே மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்,  கூட்டணி பற்றி வாய்திறக்காமல் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளிலும், ஒரு சில போராட்டங்களை நடத்தியும்,  தமிழக அரசியல் அரங்கில் வலுவான இடம்பிடிப்பதில் முனைப்புக் காட்டுகிறது.



மத்தியில் ஆளும் பாஜக,  தமிழகத்தைப் பொறுத்தவரை பலமில்லாமலேயே காட்சி அளிக்கிறது.  கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது,  தங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று இருந்த பாரிவேந்தர் தலைமையிலான  இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதிலும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை கூட்டணியில் இணைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள  தமிழக பாஜக தலைவர்களின் இரு குழுக்கள்,  கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் எப்படியும் தேர்தல் நேரத்தில்,  திமுகவோடு கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்பதால் அக்கட்சியின் பிரசாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. 
இந்நிலையில், ஆளும் அதிமுக  234 தொகுதிகளிலும் இன்று "சாதனை வி்ளக்க  இலட்சிய பேரணி" யை  தொடங்கி,  களத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளது.
இந்தப்பேரணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் என முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, அதிமுகவின் 5 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு அச்சிடப்பட்டுள்ள விளக்க கையேடுகளை பொதுமக்களுக்கு விநியோகித்து, பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
அதேபோல அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில்,  வரும் 9 ம் தேதிமுதல் 26ம் தேதிவரை மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிமுகவின் செயல்பாடு திமுக,  பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளைப்போன்று பலமானதாக இல்லை என்பதை உணர்ந்து, அதிமுகவின் தகவல் தொழிநுட்ப பிரிவு,  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரத்யேக ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தக் கூட்டங்களில், அதிமுக அரசின் தொலை நோக்கு திட்டங்கள், சமூக வலைத் தளங்களை அதிமுக வளர்ச்சிக்கும், தேர்தலுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் யுக்திகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள  அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் #Mission234 என்று குறிப்பிடப்பட்டு செய்திகள், அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன. 
அதிமுக,  மத்தியில் ஆளும் பாஜகவோடு இணக்கமான நிலையில் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கி,  இலை அலையை மீண்டும் நிரூபிக்கவே  அக்கட்சியின் தலைமை  விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த வாரம் சென்னை திருவான்மியூரில் நடந்த  அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசுகையில், கூட்டணி விசயத்தில், சட்டமன்ற தேர்தலின் போது சூழலுக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இது, தான் விரும்பும் சூழல் தமிழ்நாட்டில் தற்போது இல்லை என்பதை உணர்த்துவதற்காகவும், அதிமுக உடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்று சில அரசியல் கட்சிகளை, குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியை  சிந்திக்க வைக்கும் தந்திரமாகவும் இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 
மக்கள் நலக்கூட்டணி,  அதிமுக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியும், முடிவெடுக்கவிடாமலும்  இழுத்தடிக்க வைப்பதன் மூலம்,தனது கட்சிக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணி உருவாகாமல் தடுக்க முடியும். இதனால் தேர்தல் நெருக்கத்தில் மற்ற கட்சிகள் திண்டாடும் தருணத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலைப்போன்றே ஒரு சில உதிரி கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தனித்தே களம் காணலாம் என்ற எண்ண ஓட்டம் ஜெயலலிதாவுக்கு இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் மாத மழைவெள்ளம் அதிமுக அரசுக்கு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அது மழை வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வெளிப்பட்டது. அதனையும் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட சில தேர்தலுக்கே உண்டான சில 'கவனிப்புகள்' மூலம் சரிக்கட்டிக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருப்பதால் தனித்து போட்டியிட அதிமுக தயங்காது.
இருப்பினும் திமுக, காங்கிரஸ், தேமுதிக என்று பலம் வாய்ந்த கூட்டணி அமைந்தால் அப்பொழுது வேண்டுமானால், பொதுக்குழு கூட்டத்தில் பேசியதுபோல் மக்கள் நலக்கூட்டணியையோ அல்லது அதில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை மட்டுமோ ஜெயலலிதா, தனது கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
ஜெயலலிதா அவ்வப்போது வெளிப்படுத்தும் அதிரடி மற்றும் அசாத்திய  துணிச்சல் சில நேரங்களில் அவருக்கு வெற்றியையும், சாதகமான நிலையையும் ஏற்படுத்தி உள்ளது போன்றே, சில நேரங்களில் அவரையும் கட்சியையும் நெருக்கடியிலும் தள்ளி உள்ளது.  அதே போன்று இந்த தேர்தலில் ஜெயலலிதா எடுக்கும் முடிவு அவருக்கும், அவரது கட்சிக்கும் எத்தகைய நிலையை உருவாக்கும் என்பது தேர்தல் நெருக்கத்திலேயே தெரியவரும்.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ தொடங்கலாம் என்பது. அதே போன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பும் அடுத்த மாதம் வர வாய்ப்பு உள்ளது. அப்படி இந்த இரண்டு வழக்குகளில் எந்த தீர்ப்பு வந்தாலும், அது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கூட்டணி வியூகம் எப்படி வேண்டுமானாலும் மாறிப்போக வாய்ப்பு உண்டு.
- தேவராஜன்


நன்றி - விகடன்