
சுந்தர் பிச்சை | கோப்புப் படம்: கமல் நரங்
'இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா' என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்துவிட்டது.
கூகுள் சாம்ராஜ்யம்
எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இணைய உலகில் கூகுள் ஓர் அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.
அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) ஆக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 'ஆண்ட்ராய்ட் ஒன்' என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்தபோது அவர் பிரபலமடைந்தார்.
ஆலமரமாய்…
சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர், ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். 2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.
ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது. பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.
ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.
விரியும் ஆதிக்கம்
சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது. ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.
சென்னையின் புதல்வர்
சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.
சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுளின் இணை நிறுவனரான லாரி பேஜ் "அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்" எனப் பாராட்டுகிறார்.
சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
அடுத்த பாய்ச்சல்
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இவை போன்ற தயாரிப்புகள் எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை இருக்கிறார்.
ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அழைக்கப்படும் சுந்தர் பிச்சை இப்போது சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்ட நிலையில், கூகுளின் அடுத்த பாய்ச்சல் நிச்சயம் மகத்தானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
நன்றி - த இந்து
- valthukalabout 13 hours ago(0) · (0)reply (0)
- KK.Palanivelஅமேரிக்கா,இங்கிலாந்து போன்ற மேல்நாடுகளுக்கு பணியாற்ற சென்ற நமது தமிழர்கள் அங்கே உயர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டால்,திறமை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாம் அவர்களை பாராட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.உதா: கணித மேதை ராமானுஜம். அவர்கள் மீது புகழ் வெளிச்சம் பரவினால் மட்டுமே அவர்களை பற்றி அறியப்படும் நிலைக்கு ஆளாகிறோம். இல்லையா?about 13 hours agoPoints1960
- SNS,O Nathanதமிழனையும் அவனின் அறிவு திரமையெயும் உலகளவில் தெரிந்து புரிந்துக்கொள்ளக்கூடிய மகத்தான செயல்களை செய்து "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து செல்லடா" என்ற பலமான மொழிக்கு வழி வகுக்க வைத்த நமது அருமை சுந்தர் பிச்சை அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்களும் கோடானக்கோடி வணக்கங்களும் உரித்தாகுக!about 13 hours agoPoints1670
நற்செய்தி மாலை
இனி தமிழனிடம்- சுந்தர் பிச்சையிடம்- அறிவுப் பிச்சை எடுக்கவேண்டும்! இனிய நல் வாழ்த்துகள்!about 14 hours agoPoints1125- Tthanjaialagarasanஇப்போ எல்லாம் சீப் ஆகணும்னா தாடி வைச்சுனுக்கமா வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்about 15 hours agoPoints770