Showing posts with label ஆரஞ்சு மிட்டாய் -திரை விமர்சனம்:. Show all posts
Showing posts with label ஆரஞ்சு மிட்டாய் -திரை விமர்சனம்:. Show all posts

Friday, August 07, 2015

ஆரஞ்சு மிட்டாய் -திரை விமர்சனம்:

வணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’.
108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வருகிறார்கள். பிடிவாதம், வீம்பு ஆகியவற்றோடு நிராகரிப்பின் வலியையும் சுமந்துகொண்டிருக்கும் கைலாசத்துடன் மருத்துவமனை நோக்கி அவர்களது பயணம் தொடங்குகிறது.
நோய்வாய்ப்பட்ட முதுமையிலும் தன் ஆளுமையை இழக்காமல் வாழ்க்கையை ரசிக்கும் கைலாசத்தின் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் சத்யாவும் ஆறுமுகமும் திண்டாடுகிறார்கள். அவரது உடல்நலம் மோசமான நிலையில் இருப்பதை அறிந்து கொள்ளும் சத்யா, பாதி வழியில் அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவமனையில் தங்கப் பிடிக்காமல் வெளியேறும் கைலாசத்தை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குப் புறப்படுகிறார். கைலாசத்தை அவரது வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தாரா? கைலாசத்தின் மகன் என்ன செய்கிறார்? அவர் நிலை ஏன் இப்படி இருக்கிறது?
மனித உறவுகளின் அருமையும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான தேடலும்தான் படத்தின் ஆதார மையம். சத்யா, கைலாசம் என்னும் இரு பாத்திரங்களை வைத்து இந்த இரண்டு அம்சங்களையும் அறிமுக இயக்குநர் பிஜு விஸ்வநாத் கையாள்கிறார். உறவுகளைப் பேணுதல் என்பது சக வாழ்வுக்கான அடிப்படை. சுயநலத்துக்காக அதைத் தவிர்ப்பவர்கள் தங்கள் எதிர்கால வேதனைகளுக்கான விதைகளைப் போட்டுக்கொள் கிறார்கள். இளம் இயக்குநர் பிஜு விஸ்வநாத் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட கனமான விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அவருடன் இணைந்து இந்தக் கதையை எழுதியிருக்கும் விஜய் சேதுபதியின் முயற்சியும் பாராட்டுக்குரியது.
பெரியவரின் ஏக்கம் மட்டுமின்றி அவருக்குள் உயிர்ப்புடன் இருக்கும் குறும்பும் பதிவாகியிருப்பது மனித இயல்பை உணர்ந்த சித்தரிப்பு. காதலை விடவும் தன் பணியை நேசிக்கும் சத்யாவின் அணுகு முறை இளைஞர்களிடையே அரிதாகக் காணப்படும் குணம். அதை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரித்திருப்பது இயக்குநரின் வெற்றி.
இரவில் ஆட்டோவில் பயணிப்பது, முதியவர் உற்சாகமாக நடனமாடுவது என்று கொண்டாட்டத்துக்கும் குறைவில்லை.
நரைத்த தலை, தடித்த மூக்குக் கண்ணாடி, காவியேறிய பற்கள், சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடும் குழந்தைத்தனம் என்று கைலாசமாகக் கச்சிதம் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் அவரது உடல் மொழியில் நோய்வாய்ப்பட்ட முதியவருக்கான தளர்வை அதிகம் காண முடிய வில்லை. ஒப்பனையும் சீராக இல்லை.
அப்பாவின் வயதையொத்த கைலாசத்திடம் இனம்புரியாத ஓர் ஒட்டுதலை உணரும் அவரசகால மருத்துவ உதவியாளராக ரமேஷ் திலக் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுபாலா, காதலியாக நடித்திருக்கும் அஷ்ரிதா ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ஒரு பாடல் மனதை அசைக்கிறது. பின்னணி இசை படத்தின் ஒலி வடிவிலான பாத்திரமாகவே இருக்கிறது.
கனமான கதை, யதார்த்தமான சித்தரிப்பு ஆகியவை இருந்தும் முழுமையான திரைப்பட அனுபவம் கூடவில்லை. கதையை நகர்த்திச் செல்லப் போதிய சம்பவங்கள் இல்லாததே இதன் காரணம். உணர்வு தளத்திலும் காட்சி மொழியிலும் நடிப்பிலும் வலுவாக வெளிப்படும் இந்தப் படம், விரைவிலேயே ஒரு குறிப்பிட்ட தடத்துக்குள் சிக்கிக் கொண்டு தேங்கி நிற்கிறது. ஒன்றே முக்கால் மணிநேரமே ஓடும் இந்தப் படம் அந்த நீளத்துக்குக்கூட நியாயம் செய்யும் அளவுக்கு வலுவான சம்பவங்களோ தேக்க மற்ற திரைக்கதையோ அமையவில்லை. எனவே நீளமான குறும்படம் பார்த்த உணர்வையே தருகிறது இந்தப் படம்.
கைலாசத்தின் உடல் நிலைக்கு அவர் ஆரஞ்சு மிட்டாயைச் சாப்பிடக் கூடாது. ஆனால் அவருக்குப் பிடித்திருக்கிறது, சாப்பிடுகிறார். இதையே தலைப்பாக வைத்ததன் மூலம் இனிப்பும் புளிப்பும் கலந்த அந்த மிட்டாயைப் போலத் தான் வாழ்க்கையும் என்று இயக்குநர் சொல்லவருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
காட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லப்படும் இந்தச் செய்தி, முழுமையான திரைப்பட அனுபவமாக மாறத் தவறுகிறது.

நன்றி - த இந்து