Wednesday, April 13, 2011

பணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பார்வை

Hilarious political cartoon images
 தேர்தல் கமிஷனின் பார்வைக்கும்  ஒரு பட்டியல் போய் இருக்கிறது.   பணத்தினால் வெற்றி முடிவு செய்யப்படும் தொகுதிகளின் நிலவரம் இங்கே...

1. மதுரை மேற்கு: மாவட்டத்திலேயே மிக
அதிகமாகப் பணம் விளையாடும் தொகுதி.  கவர்களைக் கொடுப்பதற்காக தொகுதிக்காரர் ஒருவரையும், பக்கத்துத் தொகுதிக்காரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இரவில் பட்டுவாடா முடிந்ததும் காலையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போன் செய்து, 'கவர் வந்துச்சா?’ என்று கேட்டு உறுதி செய்கிறார்கள். யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்! 

2. மதுரை மத்தி:  மேற்கு தொகுதியைப்போலவே இங்கும் பட்டுவாடா டீம் பக்கா. அபார்ட்மென்ட்கள், வசதியான குடியிருப்புகளைக்  கவனிப்பதற்காக வக்கீல்கள் தலைமையில் 'கவர் டீம்’ போட்டு இருக்கிறார்கள். மற்ற இடங்களில் பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது!

3. மதுரை வடக்கு:  இந்தத் தொகுதியில் இடத்துக்கு ஏற்ப ஓட்டுக்கு 100 முதல் 1,000 வரை அனல் பறக்கிறது. நிலைமை இழுபறியாகலாம் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, இங்கு பணம் இப்போது தாறுமாறாய்ப் பாய்கிறது!


4. மேலூர்: இங்கே நிலைமை உல்டா.  வேட்பாளர் வேகமாக முன்னேறுகிறார் என்றதுமே, ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் பலரும் பதுக்கிவிட்டார்கள். கடைசி நேரம் என்பதால், இப்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் 200 முதல் 500 வரை சப்ளை ஆகிறது!

5. திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.

6. மானாமதுரை:  ஓட்டுக்கு 200 என்ற கணக்கில் 80 ஆயிரம்  பேருக்கு கவர்கள் போய்விட்டதாகப் பேச்சு.  இதில் இடையில் சில ஆட்கள் சுருட்டியதும் நடந்து இருக்​கிறது.

7. சங்ககிரி: சுற்றி உள்ள கிராமங்களில் 500 வரை கைகளில் திணிக்கப்பட்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் பசையோடு நடமாடுகிறார்கள்.

8. மேட்டூர்:  ஓட்டுக்கு 500 என்று பட்டுவாடாவைத் தொடங்கிவிட்டனர்.


9. வேலூர்:  எப்போதும்போல இல்லாமல் இந்த முறை வைட்டமின் 'ப’-வுடன் பலரும் திரிகிறார்கள்.   வேண்டியவர்கள் மூலம் நபருக்கு 300 வீதம்  வழங்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து விட்டு ஒருவர் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கணும் என்று சொல்ல உடன் வந்தவர்கள் அந்த ஆளை அடித்து திருத்தி இருக்கிறார்கள்.

10. காட்பாடி:  கடுமையான போட்டி காரணமாக திடுமெனப் பணம் இறைக்கத் தொடங்கிவிட்டார்கள். நபருக்கு 300 முதல் 700 வரை போணி ஆகிறதாம். அடுத்த  தரப்பிலும் இறங்கிவிட்டார்கள்.   300 முதல் 500 வரை பட்டுவாடா ஆகிறதாம்!

11. கீழ்வைத்தியணான் குப்பம்:   300 தாராளமாகக் கையில் விளையாடுகிறது!

12. சோளிங்கர்: கட்சி வேட்பாளரை விட சுயேச்சை ஒருவர்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

13. திருச்சி மேற்கு:  பவர் கட்டாகும் சமயத்தில் படபடவெனப் பண விநியோகம் நடக்கிறதாம். சில நேரத்தில், 'இந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்... அந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்’ என்று அதிகாரிகளுக்குத் தகவல் பறக்கிறது. அதிகாரிகள் அங்கு சோதனைக்கு செல்லும் நேரத்தில், வேறு ஒரு இடத்தில் கமுக்கமாக விநியோகம் நடக்கிறதாம். கொடுக்கப்படும் பணம் 500!

14. ஸ்ரீரங்கம் : 'பணம் கொடுத்தாலும், பணம் பெற்றாலும் கைது செய்யப்படுவார்கள்’ என்ற தேர்தல் கமிஷனின் விதி இங்குதான் அமலானது. பணம் கொடுத்தவர்களில் பிரதானமானவர் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்!

15. லால்குடி:  அதிகாலையில் நியூஸ் பேப்பரைப்போல சரசரவென வேஷ்டி, சேலைகள் சப்ளை ஆகின்றன. அந்தத் துணியைப் பிரித்துப் பார்த்ததும், கூடுதல் உற்சாகம் அடைகிறார்கள். காரணம் செல்லோ டேப் வைத்து துணிக்குள் ஒட்டிருக்கும் 500 நோட்டு!

16. நாகப்பட்டினம்:  பண விநியோகப் பொறுப்பு தெருவில் ஒருவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில நோட்டுகளை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பார். தெருவில் இருப்பவர்கள் வெளியே கிளம்பினால், அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே பாக்கெட்டுக்குப் பணத்தை மாற்றிவிடுவார்!

17. பாப்பிரெட்டிப்பட்டி:   200 முதல் 500 வரை பரவலாக பட்டுவாடா நடக்கிறது!

18. தளி: பலமான கூட்டணி என்றாலும்  நூலிழையில் சறுக்கிவிடக் கூடாது என்று பயம். அதனால், கையில் எடுத்திருக்கும் ஆயுதம், பணம்!

19. திருவாரூர்: 500 விநியோகம் அமோகமாய் நடக்கிறது. கட்சியின் அடிமட்டக் கிளை செயலாளர்கள் வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்தாலும், காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை!

20. நன்னிலம்:  ஆளும் கட்சிக்காரர்களுக்கு 500. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு 1000 அள்ளித் தருகின்றனர். அதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களை எதிர்க் கட்சி என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்!

21. கும்பகோணம்:  இங்கே முதல் கட்ட  விநியோகமே 1,000 என்று தொடங்கிவிட்டார்கள். 'ப’ தவிர வேறு எதுவும் கை கொடுக்காது என்பதில் தெளிவாக இருப்பதால், குடும்பம் ஒன்றுக்கு 5,000 கடைசிக் கட்டத்தில் கொடுக்கிறார்கள்!

22. பேராவூரணி:  கிளை ஒன்றுக்கு 10,000 மட்டுமே கொடுக்கப்படது. இதை எப்படி வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது என விழிக்கிறார்கள்!

23. அரவக்குறிச்சி:  தொகுதி முழுக்க பணம் விளையாடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

24. விழுப்புரம்:   500 தொடங்கி 1,000 வரை அள்ளிவிடப்படுகிறது!

25. திருவண்ணாமலை:  முதல் ரவுண்டிலேயே 500 கொடுத்து குளிப்பாட்டிவிட்டனர். இரண்டாவது சுற்று ஆரம்பம்!

26. அந்தியூர் :  கூடுதல் வாக்குகள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த கூப்பனைக் கொடுத்து ஒரு டி.வி.எஸ். சூப்பர் எக்ஸ்.எல். வண்டி வாங்கிக்கொள்ளலாமாம். 'இதுக்குப் பிறகும் ஓட்டை மாத்தியா போடப் போறாங்க..?!’ என்பது  நினைப்பு!

27. மடத்துக்குளம்:   500 தொடங்கி 1,000 வரை கொடுப்பதுடன,  சில பல வீடுகளுக்கு மிக்ஸியும். 

28. கன்னியாகுமரி:  படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது!

29. ஆத்தூர் : தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதிக்குள் இருக்கும் நம்பிக்கையானவர்கள் வீடுகளில்  பணத்தைப் பதுக்கிவிட்டனர்.  வீடு வீடாக 500 முதல் 3,000 வரை கொடுத்து முடித்துவிட்டனர். கரை வேட்டி கட்டாத நபர் நிதானமாக வீடு வீடாகப் போய்ப் பட்டுவாடா செய்கிறார்!

30. தூத்துக்குடி:  பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், டோக்கன் முறையைக் கையாளுகிறார்கள். 

31.  திருச்செந்தூர்:  தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது!

32. ஸ்ரீவைகுண்டம்:  'பணம் கொடுக்கிறாங்க’ என்று திடீர் திடீரென வதந்திகள் பரவி மக்கள் ஆளாய் பறக்கிறார்கள்.

33. ஓட்டப்பிடாரம்:  பணம் இறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, ஆங்காங்கே கோயில் பிரசாதம்போல குறைந்த அளவாக மட்டும் பட்டுவாடா நடக்​கிறது!

34. அருப்புக்கோட்டை:  தேர்தல் அறிவிப்பதற்கு சில மாதம் முன்பே, பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்த கட்டமாக, டோக்கன் மூலம் 500 விநியோகம் நடைபெற்றது. வீட்டுக்கு ஒரு கூப்பன் வழங்குகிறார்கள். அந்த கூப்பனுக்கு 3,000 மதிப்புள்ள அன்பளிப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்படுகிறது!

35. திருச்சுழி:  ஓட்டுக்கு 500 என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி முழுவதும் செலவழிக்கிறார்கள். யாரா இருந்தாலும்... காசு!

36. விருதுநகர்:  கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்!

37. பெரம்பலூர் : வாக்காளர்களின் செல்போனுக்கு டாப்- அப் பண்ணிக் கொடுப்பது, இலவசமாக சிலிண்டர் சப்ளை செய்வது என பெண்களைக் கவர்கிறார்கள்!

38. ஜெயங்கொண்டம்:   வார்டு பொறுப்பாளர்கள் மூலமாக இரவோடு இரவாக ஓட்டுக்கு 200 வீதம் அள்ளி வீசி அனைவரையும் கவர் செய்துவிட்டார்கள்! 

39. போடி:  சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணனின் அண்ணி பரிமளாவைப் பணம் கொடுத்ததாக போலீஸார் கைது செய்த பின்னரும் பட்டுவாடா நடக்கத்தான் செய்கிறது. அந்தப் பக்கம், ஓட்டுக்கு 1,000 என விநியோகம் நடக்கத் தொடங்க, அசந்து நிற்கிறார்கள் மக்கள்!   

40. ராதாகிருஷ்ணன் நகர்:  சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்!

41. கொளத்தூர்:  கடந்த ஒரு வாரமாகவே வார்டு வாரியாக இரவு 9 மணிக்கு மேல் கரன்ட் கட் ஆகிப் பண விநியோகம் வெள்ளமாகப் பாய்ந்தது. ''நம்ம ஏரியாவுக்கு எப்ப கரன்ட் கட் பண்ணுவீங்க?'' என்று கேட்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தி இருந்தனர். ஏரியாவில் பேப்பர் போடும் ஆட்களை எல்லாம் ஒரு இடத்தில் அழைத்து மீட்டிங் போட்டு இருக்கிறார்கள். பேப்பரில் பணம் விழவும் வாய்ப்பு இருக்கிறது!

42. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முஸ்லிம்கள் ஓட்டுகள் அதிகம் என்பதால், அவர்களைக் குறிவைத்து பணம் விநியோகம் நடக்க ஆரம்பித்தது. கவுன்சிலர் தலைமையிலான குழுதான் பணத்தை விநியோகம் செய்கிறது!

43. மயிலாப்பூர் :  எப்படியும் வெல்ல வேண்டும் என்று... பண விநியோகம் ஏரியாவில் பாய்கிறது. காங்கிரஸின் போட்டி வேட்பாளர் மட்டும் இதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்!

44. விருகம்பாக்கம்.:  குடிசை வாழ் மக்களில் யாராவது 2,000 ரூபாய்க்குள் தாலி, தோடு, மூக்குத்தி, வளையல் என்று எதையாவது மார்வாடிக் கடையில் அடகு வைத்திருந்தால், வீடுகளுக்கு வந்து அந்த ரசீதை கேட்டு வாங்கிப் போகிறார்கள். மார்வாடிக் கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு, 'இன்னார் வருவார்... அவரிடம் நகையை கொடுத்துவிடவும்' என்று சொல்லிப்போகிறார்கள்!

45. திருவள்ளூர்:  கூரியர் கம்பெனி மூலம் தபால் வரும் பாணியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பணம் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு பார்சல் வருகிறது. அதை எடுத்துச் செல்லும் பைக் ஆசாமிகள், கூரியர் தபால் பைகளை அள்ளிக்கொண்டு பறக்கிறார்கள். 1,000 வீதம் வீடுகளுக்கு கவர் விநியோகம் நடக்கிறது!

46. அம்பத்தூர்:   நள்ளிரவில் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால், குறிப்பிட்ட மத ஸ்தலத்துக்கு பெண்களை அழைக்கிறார்கள். ஆண்கள் போகலாம். ஆனால், வாசலில் நிற்க வேண்டும். பெண்களிடம் கவர்கள் தரப்படுகின்றன. தலைக்கு 1,000 வீதம் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி பணம் கவரில் இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடுகளில், ஆண்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாறுகிறது! 

47. திருவொற்றியூர்': டோல்கேட் அருகே மீனவக் குப்பத்து மக்களிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பணம் விநியோகம் செய்ய... தகவல் போய் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை வந்தது. உடனே அந்த இளைஞர் 21,000 மட்டும் தெருவோரம் வீசிவிட்டு, பைக்கில் தப்பினார். ஹவாலா ஸ்டைலிலும் பணம் கை மாறுகிறது. சிறு துண்டு பேப்பரில் அம்புக் குறி வரையப்பட்டு இருக்கும். அந்த பேப்பரை குறிப்பிட்ட வீட்டில் போய்க் கொடுத்தால், 1,000 தருகிறார்கள்!

48. கும்மிடிப்பூண்டி : வினோதமான முறையில் இங்கு பணப் பட்டுவாடா நடக்கிறது.   கார்கோ ஜீன்ஸில் இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதிகளில் நிறைய பாக்கெட்டுகள் இருக்கும். அந்த பாக்கெட்டுகள் முழுவதும் கரன்ஸிகள். எங்கே பணம் தேவை என்று செல்போன் அடிக்கிறார்களோ, உடனே அந்த படை ஸ்பாட்டில் ஆஜராக... பணம் கைமாறுகிறது.

49. ஆலந்தூர்: இங்கே   500 நோட்டுகளை அமர்க்களமாக விநியோகம் செய்கிறார்கள். கையும் களவுமாக சிலர் பிடிபட்டு இருந்தாலும், பணப்பட்​டுவாடா தொடர்கிறது.

50. மதுரவாயல்:   ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோக​மாக நடக்கிறது.


டிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..

Tuesday, April 12, 2011

கலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியின் கலக்கலான காமெடி நாடகம்..

http://www.tamilmaxs.com/Admin/event/306_12591259Gnani.jpg

ஆனந்த விகடனில் ஞாநி பக்கங்கள் வந்தப்பவும் சரி.. அது குமுதம், கல்கி என இடம் மாறும்போதும் சரி.. மாறாத அம்சம் ஒன்றுதான்.. அது எழுத்தாளர் ஞாநி அவர்களின் சமூக அக்கறை சார்ந்த கோபம் + கலைஞர் குடும்ப ஆட்சி எதிர்ப்பு... 

இப்போ தேர்தல் சமயத்துல அவரது நாடகம் அம்மா ,அய்யா ரெண்டு பேரையும் போட்டு கிழி கிழி என கிழிச்சிருக்கு.. 


ஆப்புக்கு ஆப்பு….தேர்தல் சிரிப்பு நாடகம்/ஞாநி
.

நாடகத்தைப் பார்க்க : (http://kizhakkupathippagam.blogspot.com/2011/04/blog-post_09.html).
படிக்க: கீழே:

கட்டியக்காரன்:
பரத கண்டம் என்று சொல்லப்படும் இந்திய உபகண்டத்திலே போதை தேசம் என்று ஒரு நாடு இருக்கிறது. வரைபடத்தில் அது எங்கே என்று சிரமப்பட்டு கூகிள் மேப்பிலெல்லாம் தேட வேண்டாம். 
(அப்போது கோரஸ் வந்து ஒரு டாஸ்மாக் கடை போர்டுடன் நிற்கிறது. எதிரே தெருவில் ஒருவன் போதையில் விழுந்து கிடக்கிறான்)

கட்டியக்காரன்:
ஒவ்வொரு தெருவிலும் டாஸ்மாக் என்று ஒரு போர்டு போட்டிருக்கும். அந்த தேசம்தான் போதை தேசம். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அங்கே ஒரு விசித்திரமான ஏலம் நடக்கும். யாருக்கு நாம் அடிமையாக இருப்பது என்று மக்கள் தாங்களே முடிவு செய்வார்கள். ஏலத்தில் மிக அதிகமான இலவசங்களை யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்கே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அடிமையாக இருப்பதாக ஒப்புக் கொண்டு விடுவார்கள்.

இந்த ஏலத்துக்கு ஒரு பெயர் வைத்திருந்தார்கள். எலெக்‌ஷன் அல்லது தேர்தல் என்று இதற்குப் பெயர். ஏலத்தை மேற்பார்வையிட ஒரு அதிகாரி இருந்தார். அவர் பெயர் டி.என்.ஏலன். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் ஒரு ஐம்பது நாட்களுக்கு அவருக்கு வானளாவிய அதிகாரம் கிடைக்கும்.

(ஏலனும் அதிகாரிகளும் மேடையின் குறுக்கே நடந்து செல்கிறார்கள். )

ஒவ்வொரு முறை ஏலம் அறிவிக்கப்படும் போதும் இரண்டு பெரிய கம்பெனிகள் மட்டுமே ஏலம் கேட்பார்கள். சின்னச் சின்ன கம்பெனிகள் தொழிலதிபர்கள் எல்லாரும் இந்த பெரிய கம்பெனிகளில் அடியாள் வேலைக்குப் போவிடுவார்கள். போதை தேசத்தின் 234 ஊர்களிலும் ஏலம் நடக்கும். அதிகமான ஊர்களில் ஏலத்தில் ஜெயித்த கம்பெனிக்கு மொத்த போதை தேசமும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். ஏலம் கிடைத்த கம்பெனியின் சின்னச் சின்ன குத்தகை பேரங்கள் எல்லாம் அடியாள் கம்பெனிகளுக்குக் கிடைக்கும்.

இரண்டில் ஒரு பெரிய கம்பெனியின் பெயர் எம்.எம்.கோ. அது சுருக்கமான பெயர். முழுப் பெயர் மனைவிகள் மக்கள் கம்பெனி. அதன் தலைவர் ஆப்பய்யா. போதை தேசத்தில் மட்டுமல்ல பரத கண்டத்தில் இதர 64 தேசங்களிலும் யாருக்கும் ஆப்பு வைப்பதில் அறுபது வருட அனுபவம் உடையவர்.

(ஆப்பய்யா ஒரு சக்கர நாற்காலியில் வருகிறார். சுற்றிலும் குடும்பத்தினர். எல்லாரும் ‘நான்தான் தள்ளுவேன். நான்தான் தள்ளுவேன் ‘ என்று முண்டியடிக்கிறார்கள்.)

இன்னொரு கம்பெனியின் பெயர் யுபிஎஸ் கோ. அதாவது உடன் பிறவா சகோதரி கம்பெனி. இதன் தலைவி பெயர் ஆப்பம்மா. ஆப்பய்யாவின் அனுபவம்தான் இவர் வயது. உடன்பிறவா சகோதரிக்காக தன் உயிரையே… மன்னிக்கவும், தன் கம்பெனியில் யாருடைய உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டார். வெளியாட்கள் மட்டுமல்ல, தன்னோடு இருப்பவர்களுக்கே ஆப்பு வைப்பதில் இவர் தேர்ச்சி உடையவர்.

(ஆப்பம்மா வருகிறார். கூட யூபிஎஸ் அவருக்கு விசிறியபடி வருகிறார். கூட சிலர் வருகிறார்கள்.)

ஆப்பம்மா: இவங்கள்லாம் யாரு ?

யூபிஎஸ்:
எல்லாரும் நம்ம கம்பெனி ஆளுங்கதான்ம்மா. நான் உங்க வளர்ப்பு சகோதரி. இது என் தம்பி. அதனால, இவரு உங்க வளர்ப்பு மகன். இவரு வளர்ப்பு மக. இவரு வளர்ப்பு தம்பி. இவரு வளர்ப்பு அண்ணன். இவர் வளர்ப்பு மாமா. இவரு வளர்ப்பு பேரன்..

ஆப்பம்மா:
சரி சரி. மீதி பேரை அப்பறமா பாக்கறேன். டயர்டா இருக்கு. எஸ்டேட்டுக்குப் போலாம்.(போகிறார்கள்)

கட்டியக்காரன்:
அடுத்தடுத்த தேர்தல்களில் மாறி மாறி ஜெயித்து அனுபவம் பெற்றிருந்த ஆப்பய்யாவுக்கும் ஆப்பம்மாவுக்கும் இந்த தேர்தலின்போது எதிர்பாராத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. புது ஏலக் கம்பெனி ஒன்று களத்தில் குதித்தது. அதன் தலைவர் சவாலய்யா. எதுக்கெடுத்தாலும் சவால் விடுகிற இவர் விட்ட ஒரு சவால் ஆப்பய்யாவையும் ஆப்பம்மாவையும் அதிரவைத்துவிட்டது.

(சவாலய்யா மைக் முன்னால் பேசுகிறார்)

சவாலய்யா:
மக்களே, ஒவ்வொரு தேர்தல்லயும் இந்த ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் மாறி மாறி உங்களை ஏமாத்தி ஏலம் எடுத்துகிட்டிருக்காங்க. 234 ஊர்ல தேர்தல் நடக்குது. எல்லா ஊர்லயும் இவங்களோட அல்லக்கைங்களை அனுப்பி ஓட்டு வாங்கறாங்க. ஒரு ஊர்லயாவது இவங்க ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நிந்து உங்க ஓட்டைக் கேட்டிருக்காங்களா, கெடையாது. ஏன்? நேருக்கு நேரே ஒரு ஊர்ல இவங்க தோத்துட்டா, அவமானமாப் போயிடும். இவங்களுக்குள்ளாற ரகசியமா அக்ரிமெண்ட் வெச்சிருக்காங்க. நீயும் நானும் மாறி மாறி இந்த ஜனங்களைக் கொள்ளையடிப்போம்னு. உண்டா இல்லியா ? இல்லைன்னா எதுக்கு பயப்படறீங்க ? நேருக்கு நேர் வந்து மோதுங்க பாப்போம். முடியுமா உங்களால?

(கோரஸ் மக்களாக ஆங்காங்கே பேசுகிறது.)

மக்கள்: அதானே. ஏன் இவங்க ஒருத்தரையொருத்தர் எதிர்த்து நிக்கறதே இல்ல ? அதானே. அதானே..

(மீடியா ஆப்பய்யாவையும் ஆப்பம்மாவையும் துரத்துகிறது.)

மீடியா:
சவாலய்யாவோட சவாலைப் பத்தி என்ன நினைக்கறீங்க ? என்ன நினைக்கறீங்க ?

(ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் பதில் சொல்லாமல் ஓடுகிறார்கள்.)

கட்டியக்காரன்: சவாலய்யா விட்ட சவாலு பத்திகிச்சு. எங்கே போனாலும் ஜனங்க இதைப் பத்தியே பேசறாங்க. மீடியா கேட்டுகிட்டே இருக்கு. இது என்னடா புதுக் குழப்பம்னு அய்யாவும் அம்மாவும் மண்டையை உடைச்சுக்கிட்டாங்க. அவங்கவங்க கம்பெனி ஆட்களோட ஆலோசனை நடத்தினாங்க.
(ஆப்பய்யாவும் மனைவிகள் மக்களுடன் பேசுகிறார். ஆப்பம்மா யூபிஎஸ்சுடன் பேசுகிறார்.)

(இரு பக்க ஆதரவாளர்களும் பரபரப்பாக புத்தகங்களைத் தேடிப் பார்த்து தங்கள் தலைமையிடம் சொல்கிறார்கள்)

ஒருவர்:
அய்யா.. இந்த தொகுதிதாங்க இருக்கறதுலயே தம்மாத்தூண்டு….

மற்றவர்: அம்மா… இந்த தொகுதிதாங்க இருக்கறதுலயே தம்மாத்தூண்டு…
ஆப்பய்யா (மைக்கில்): எப்போதும் மக்கள் கருத்தையே மகேசன் கருத்தாகக் கருதி தலைவணங்குபவன் இந்த ஆப்பய்யன் என்பதால் இந்த முறை நான்……
ஆப்பம்மா(மைக்கில்) : அந்த தீயசக்தியை தேசத்தை விட்டே ஓட ஓட விரட்டுவதற்காக, இந்த முறை நான்…..
கட்டியக்காரன்: ஆப்ஸ் ஒன் ஆப்ஸ் டூ ரெண்டும் பேரும் ஒரே தொகுதியில போட்டியிடறதா அறிவிச்சுட்டாங்க..

சவாலய்யா: சபாஷ். சரியான போட்டி. இடையிலே நானும் இங்கே போட்டியிட்டு எவரோ ஒருவர் தோற்கவோ ஒருவர் வெல்லவோ காரணமாகிவிட்டேன் என்று அவப்பெயரை அடைய விரும்பாமல் இந்த ஏலத்தைப் புறக்கணிக்கிறேன்.

கட்டியக்காரன்:
சவாலய்யா மட்டும் இல்ல. இந்த தொகுதியில வேட்பு மனு தாக்கல் செய்த அத்தனை பேரையும் சுயேச்சைகளையும், ஆப்ஸ் ஒன்ணும் ஆப்ஸ் டூவும் ஆஃப் பண்ணிட்டாங்க. ஒரு வோட்டு கூட இப்பிடி அப்பிடி போய், தான் அடிபடக் கூடாதுன்னு உஷாரா வேலை பார்த்தாங்க….ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் ஒரு கணக்கு போட்டாங்க.


அய்யா கோரஸ்1: இந்த தொகுதில மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 945 வாக்காளப் பெருமக்கள் இருக்காங்க. ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் குடுத்தா சுமார் 15 கோடி ரூபாய் ஆவுது.

அம்மா கோரஸ் 1: அய்யா ஆயிரம் குடுத்தா நம்ம ரெண்டாயிரம் குடுப்போம்…


அய்யா கோரஸ் 2: .அம்மா ரெண்டாயிரம் குடுத்தா நம்ம மூவாயிரமா குடுத்துடுவோம்.


அம்மா கோரஸ் 2: எப்பிடிப் பாத்தாலும் 50, 60 கோடிதானே செலவாகப் போகுது.

கோரசில் ஒருவர் கட்டியக்காரனிடம்: எதுக்குங்க ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்லாம் குடுக்கணும் ? அவங்களா வந்து ஓட்டு போடமாட்டாங்களா ?

(கட்டியக்காரன் சிரிக்கிறான். கோரஸின் இதர உறுப்பினர்களும் வந்து சிரி சிரி என்று சிரிக்கிறார்கள்.)

கட்டியக்காரன்: ஊருக்குப் புச்சா நீ ? இது பெரிய கம்பெனிங்க ரெண்டும் நடத்தற பிசினெஸ். முதல்ல போட்டுதான் அப்பால எடுக்கணும். இத்துனூண்டு போட்டா இம்மாம் பெரிசா எடுக்கலாம். இம்மாம் பெரிசு எடுத்துட்டா, அடுத்த தபா இத்துனூண்டு குடுத்தாலும் ஒண்ணும் கொறஞ்சுபோய்டாது. தெரிஞ்சுதா?

அதுனால நம்மாண்ட இருக்கற கோடானு கோடில ஒரு பத்து அம்பது கோடியை இங்கே எறக்கிவிடலாம்னு ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் நினைச்சாங்க.. அப்பதான் அந்த நினைப்புல ஆப்பு வெச்சாரு டி.என்.ஏலன்.

(டி.ஏன்.ஏலன் நுழைகிறார். அதிகாரிகளை அழைத்து உத்தரவிடுகிறார்.)

ஆலன்: ஒரு ஆட்டோ, கார், பஸ், ரயில், லாரி, மாட்டு வண்டி, பைக், சைக்கிள், விடாம செக் பண்ணுங்க. பணம் வெச்சிருந்தா ஏது அந்தப் பணம், எதுக்கு எடுத்துட்டுப் போறாங்க, எங்கே எடுத்துட்டுப் போறாங்க எல்லாத்துக்கும் பதில் கேளுங்க. பதில் சரியா இல்லாட்டி பணத்தைப் பிடுங்கி கவர்ன்மெண்ட் அக்கவுண்ட்ல போடுங்க…..

(கோரஸ் தானே மக்களாகவும் அதிகாரிகளாகவும் நடிக்கிறது.)

கோ 1: எதுக்குய்யா இவ்வளவு பணம் எடுத்துட்டுப் போறே?

ம 1: திருப்பதிக்கு வேண்டுதல் சாமி. உண்டியில போடப் போறோம்.

கோ 1: இந்தா இதை மட்டும் எடுத்துகிட்டுப் போய் மொட்டை அடிச்சுக்க. மீதிய நாங்களே உண்டியில போட்டுடறோம்…

(மீதி கோரஸ் சிரிக்கிறது.)

ஏலனிடம் அதிகாரிகள்: யெஸ் சார்.

ஏலன்: போஸ்டர் ஒட்ட விடாதீங்க. சுவத்துல எழுத விடாதீங்க. லவுட் ஸ்பீக்கர் கட்டிகிட்டு கார்ல சுத்த விடாதீங்க… கத்த விடாதீங்க..

அதிகாரிகள் : யெஸ் சார்.

(ஆப்பய்யாவிடமும் ஆப்பம்மாவிடமும் கோரஸ் சொல்கிறது)

கோரஸ்: கஞ்சா ஹெராய்ன் கூட கடத்திடலாம் போலருக்குது. கேஷ் எடுத்துட்டுப் போவ முடியலீங்க…



ஆப்பய்யா: கவலைப்படாதீங்க.. இன்னிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடறோம், இல்ல ? காசு செய்யற வேலையை அதுவும் செய்யும் பாருங்க…

(அவர் முன்னால் மைக் நீட்டப்படுகிறது. ஆதரவாளர்கள் ஆரவாரம்.)

ஆப்பய்யா: ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை அளித்து, பெண்களை அறிவில் உயர்ந்தவர்களாக, பொது அறிவு மிகுந்தவர்களாக ஆக்கி மகிழ்ந்திருக்கும் நம் அரசு, உங்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, வீடு தோறும் இலவசமாக யந்திரக் கலப்பான் அல்லது யந்திர அரைப்பான் அளிப்போம். கல்லூரி படிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் மடியிலே வைத்துக் கொஞ்சி விளையாடிட…… (விசில் சத்தம்) ஆளுக்கொரு….. அழகிய எழில் மிகுந்த… மடிக்கணிணியும் அளிக்கப்படும்.

(ஆப்பம்மாவின் ஆதரவாளர்கள்: ‘அய்யோ அம்மா தாயே..” என்று பிச்சையிடுவது போல கூக்குரலிடுகிறார்கள். )

ஆப்பம்மா: எச்சில் கையால் காக்கா ஓட்டாத ஆப்பய்யா இயந்திரக் கலப்பான் அல்லது அரைப்பான் என்கிறார். கலியுகக் கர்ணன் வழி வந்த நான், கலப்பானும் தருவேன். இடிப்பானும் தருவேன். கலந்து, இடித்து, கரைத்து, அரைத்து களைத்துப் போன சகோதரிகள் காற்று வாங்கிட மின் விசிறியும் தருவேன். கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் மடி இருக்கிறதா? பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ? எனவே அவர்களுக்கும் மடிக்கொரு கணிணி அளிப்பேன். (விசில்)

கோரஸ் : அய்யோ தலைவரே..


ஆப்பய்யா: அறிவிக்க இன்னும் ஏராளமாக இருக்கின்றன. இடையிலே சற்று நீர் அருந்தி இளைப்பாற நினைத்தால், சதிகாரர்கள் சந்துமுனையிலே சிந்து பாடுகிறார்கள். எனக்கு இலவச இருசக்கர ஊர்தி கிடைத்துவிட்டது என்று சுயநலத்தோடு திருப்தியடையாமல், என் வயதில் பாதியே இருந்தாலும் முதியவர்களாகிவிட்ட அத்தனை 45 வயது நிரம்பியவர்களுக்கும் இதுபோன்ற இருசக்கர ஊர்திகள் வழங்கப்படும்.

கோரஸ்: தாயே….


ஆப்பம்மா: சக்கர ஊர்தியில் கூட சிக்கனமா.. ? நான் ஆட்சி அமைக்கும்போது நாற்பது வயதைக் கடந்த அனைவருக்கும் நாற்சக்கர ஊர்தியும், முப்பதைக் கடந்த அனைவருக்கும் மூன்று சக்கர ஊர்தியும், இருபதைக் கடந்த எல்லாருக்கும் இரு சக்கர ஊர்தியும் அளிப்பேன்.

கோரஸ்: தலைவரே…

ஆப்பய்யா: வீடு தோறும் காலையில் எழுந்து கதிரவன் முகம் கண்டு, களிக்கும் வேளையிலே, வீதியிலே வண்ண வண்ணக் கோலம் போடுவதற்கான கோலப் போடியும், வாசல் தெளிப்பதற்கான தண்ணீர் வாளியும், அதை முகந்து ஊற்ற மூக்குள்ள குவளையும், குப்பை நீக்கி தூய்மையை செய்வதற்கான பூந்துடைப்பமும் தென்னந்துடைப்பமும், ஆறு மாத காலத்துக்கு வீட்டில் பாத்திரம் தேய்ப்பதற்கான சோப்புக்கட்டியும், அளிக்கும் எம் அரசு.

ஆப்பம்மா: வீடு பெருக்கி பாத்திரம் தேய்த்தால் போதுமா ? குளியலறையையும் கழிப்பறையையும் யார் கவனிப்பார்கள் ? எனவே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் குளிப்பதற்காக மாதந்தோறும் மூன்று சோப்புகளும், துவட்டிக் கொள்ள ஏழு கைத்தறித் துண்டுகளும், குடும்ப அட்டையில் வழங்குவேன். கழிப்பறையை சுத்தப்படுத்த பினாயில் பாட்டில்கள் இரண்டும், அறையை வாசனைப்படுத்த ஓடோனில் ஏர் பிரஷ்னர் இரண்டும் மாதாமாதம் அளிப்பேன்.

கோரஸ்: தலைவா…

ஆப்பய்யா: நாளெல்லாம் உழைத்துக் களைத்த எம் தமிழ்க் குடும்பங்கள் நிம்மதியாக உறங்கிட பாய்களும், பாய்கள் மேல் அன்னத்தூவி போன்று மென்மையான இலவம்பஞ்சு மெத்தைகளும் விரித்திட எமது அரசு ஏற்பாடுகள் செய்யும்.

கோரஸ்: தாயே


ஆப்பம்மா: தரையிலே படுத்து உறங்கிட தமிழ் மக்கள் என்ன தரித்திரர்களா ? பாயுடன் மெத்தையுடன், ஒவ்வொருவரும் நிம்மதியாக படுத்து உறங்கிட குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இலவசமாக இரும்புக் கட்டில் அளிப்பேன்.

கோரஸ் இருபுறமும் மாறி மாறிப் பார்க்கிறது. ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் ஒலி வராமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

மீடியா (பொதுமக்களில் ஒருவரிடம் மைக்கை நீட்டி): சார். எல்லா ரேஷன் கார்டுக்கும் இலவச கலர் டி.வி குடுத்தாங்களே.. இப்ப இப்பிடி மேலும் மேலும் இலவசமா அறிவிச்சுகிட்டே போறாங்களே…இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?


பேட்டி தருபவர்: இட் ஈஸ் வெரி வெரி ராங். எகானமியே நாசமாப் போயிடும். ஜனங்களை சோம்பேறியாக்கிடும். டெவலப்மெண்ட் ஸ்கீம்சுக்கு ஃபண்ட்ஸ் இல்லாமப் போய்டும். நாடே நாசமாப் போய்கிட்டிருக்கு.

மீடியா: நீங்க கவர்ன்மெண்ட் டி.வி வாங்கினீங்களா ?


பேட்டி தருபவர் (அசட்டுத்தனமாக சிரித்தபடி) ஹி ஹி. நான் வாங்கலேன்னா, என் பேர்ல வேற யாரோ எடுத்துட்டுப் போய்டுவாங்க இல்ல. மிஸ்யூஸ் ஆயிடும் பாருங்க.

மீடியா: அப்பறம் அதை என்ன சார் பண்ணீங்க..?


பேட்டி தருபவர்: என் பேரன் ரூம்ல அவனுக்குன்னு வெச்சிகிட்டிருக்கான். என் ஒய்ஃப் இப்ப நிம்மதியா தனியா ஒரு சீரியல் விடாம பாக்க முடியறது..


கட்டியக்காரன்:(ஏலனிடம் வந்து): என்ன சார் இது.. இதெல்லாம் வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்கற மாதிரி இல்ல இருக்கு. இதுல எல்லாம் நீங்க தலையிடமாட்டீங்களா ?

ஏலன்: லஞ்சம் குடுக்கற மாதிரிதான்னும் எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். ஆனால் செக்‌ஷன் 324 கீழே இதெல்லாம் வரல. இதெல்லாம் கொள்கை அறிவிப்புகள். அதுல நான் தலையிட முடியாது.

(ஆப்பய்யன் பேசுவது மறுபடியும் கேட்கிறது: )


ஆப்பய்யன்: குடும்பம்தான் நமது சொத்து. எனவே ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இன்னொரு குடும்பம் உருவாக வழி செய்யும் விதத்தில், வீட்டுக்கு ஒரு மணமகனையோ மணமகளையோ தேர்ந்தெடுத்து, அவருக்குப் பொருத்தமான ஜோடியைக் கண்டறிந்து திருமணம் செய்து வைக்க, எங்கள் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.


ஆப்பம்மா: பொருத்தமற்ற மணமக்களைத் தேர்வு செய்து, மீதி எல்லா குடும்பங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி, தன் குடும்பம் மட்டும் கொழிக்கச் செய்வதே தீய சக்தியின் நோக்கம் என்பதால், வீட்டுக்கு ஒரு திருமண திட்டத்தை நான் செயல்படுத்தும்போது, மணமகனுக்கும் மணமகளுக்கும் சரியான ஜாதகப்பொருத்தம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சொல்ல, மாவட்டம் தோறும் கம்யூட்டர் உதவியுடன் ஜாதகம் கணித்து பொருத்தம் தெரிவிக்கும் ஜோசியர்கள் குழுவையும் ஏற்படுத்துவேன்.

ஏலன் உள்ளே வந்து உரக்க : சைலன்ஸ்…..! பிரசார நேரம். . முடிஞ்சாச்சு. இன்னும் 36 மணி நேரத்துல வாக்குப்பதிவு ஆரம்பமாகும். வாக்குப்பதிவு முடிந்த 36 மணி நேரத்துல வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.


கட்டியக்காரன்: ஆப்ஸ் ஒண்ணும் ஆப்ஸ் ரெண்டும் ஒரு ஆள் விடாம எல்லாரையும் ஓட்டு போட வைக்கணும்னு உத்தரவு போட்டிருந்தாங்க… அதனால அவங்க கம்பெனிக்காரங்க அலைஞ்சு அலைஞ்சு ஆளுங்களை பூத்துக்குக் கொண்டாந்தாங்க…..

(கோரஸ் ஆட்களை விதவிதமாகத் தூக்கிக் கொண்டு போகிறது. )

கட்டியக்காரன்: போதை தேச வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒரு ஏலம் நடந்ததே இல்லை. போதையில இருந்த குடிமக்கள்லாம் கூட போய் ஓட்டு போட்டாங்க… இலவச டி.வி,பெட்டி, இலவச வேட்டி சேலை குடுக்கறப்ப எப்பிடிக் கூட்டம் இருக்குமோ அப்பிடி கூட்டம் வந்து சேர்ந்துது.


ஏலன் (வந்து) கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்….. டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ், ஃபைவ், ஃபோர், த்ரீ, டூ…….


ஒருவர் ஓடிவந்து : சார்.. சார்… ஒன் சொல்லிடாதீங்க. அப்பறம் ரிசல்ட்டை அறிவிக்க வேண்டி இருக்கும்.

ஏலன்: அறிவிச்சா என்னய்யா…

வந்தவர்: அறிவிக்க முடியாது சார்.


ஏலன்: ஏன்யா… (வந்தவர் அவர் காதுக்குள் கிசுகிசுக்கிறார். ஏலன் ஆச்சரியப்படுகிறார். )

ஏலன்: கால் அன் எமர்ஜென்சி மீட்டிங்….

(ஏலனுடன் கோரஸில் சிலர் அதிகாரிகள் போல உட்கார்ந்துகொள்கின்றனர்.)

ஒருவர்: சார். மொத்தம் பதிவான வாக்குகள் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 832. அதுல ஆப்பய்யா 79 ஆயிரத்து 416 ஓட்டு வாங்கியிருக்காரு. ஆப்பம்மாவும் 79 ஆயிரத்து 416 ஓட்டு வாங்கியிருக்காரு. இப்ப யாரை சார் வின்னிங்னு சொல்றது? டையாயிடுச்சே.

(கட்டியக்காரனும் கோரசின் இதர உறுப்பினர்களும் ஆச்சரியத்தோடு ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். ஏலன் குறுக்கும் நெடுக்கும் சிந்தித்தபடி நடக்கிறார். கோரசும் கூடவே நடக்கிறது. அவர் நின்றால் நிற்கிறது. நடந்தால் நடக்கிறது.)

ஏலன்: மொத்த வாக்காளர்கள் எத்தனை பேர் ?

ஒருவர்: ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 945 சார்…

ஏலன்: பதிவான வாக்கு எவ்வளவு சொன்னீங்க ?

ஒருவர்: எல்லா ஓட்டும் பதிவாயிடுச்சு சார்.

ஏலன்: என்னய்யா சொல்றே.. இதுவரைக்கும் எந்த ஏலத்துலயும் 70 பர்சென்டுக்கு மேல ஓட்டு விழுந்ததே இல்லியே…..

ஒருவர்: யெஸ் சார். ஆனா இந்த தேர்தல்ல அய்யாவும் அம்மாவும் நேருக்கு நேரா நிந்ததுனால, ரெண்டு சைடும் ஒரு ஆள் விடாம பொறுக்கிகிட்டு வந்துட்டாங்க சார்.

ஏலன்: நோ நோ.. கிவ் மி தி எக்சாக்ட் ஃபிகர். (ப்)போல் ஆனது எவ்வளவு ?

ஒருவர்: ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 832 சார்..

ஏலன்: அப்ப எத்தனை பேர் ஓட்டு போட வரலே?

ஒருவர்: 113 பேர் சார்.

ஏலன்: யார் யார் அந்த 113 பேர் ? அவங்களையும் ஓட்டு போட வெச்சிட்டா போச்சு….

ஒருவர்: (பட்டியலை எடுத்து) சார். ஏற்கனவே ஒரு லிஸ்ட் ரெடி பண்ணியிருக்கு சார். படுத்த படுக்கையா சுய நினைவே இல்லாம உள்ளூர், வெளியூர் ஹாஸ்பிடல்ல இருக்கறவங்கன்னு ஒரு பட்டியல் தயார் பண்ணியிருக்கு சார். அவங்களா இருக்கும்.

ஏலன்: எடுய்யா அந்த லிஸ்ட்டை….

ஒருவர் (எடுத்துவந்தபோதே பார்த்தபடி) சார்……இதுல மொத்தம் 112 பேர்தான் சார் இருக்கு. அப்போ…

கோரஸ் (ஒவ்வொருவரும்): அப்போ ?

ஏலன்: ஒரே ஒருத்தர்தான் மிச்சம். அந்த ஒரு ஆள் ஓட்டு போட்டாதான் ஹண்ட்ரட் பர்சென்ட் போலிங்னு சொல்ல முடியும். யார் அந்த ஓட்டர்… ட்ரேஸ் பண்ணுங்க….

(அடுத்து கோரஸ் மீடியாவாக மாறி ஏலன் முன்னால் நிற்கிறது.)


ஒருவர்: ஏன் சார், ரெண்டு பேர் சமமா ஓட்டு வாங்கி டை ஏற்பட்டா, டாஸ் போட்டு பூவா தலையா கேட்டு முடிவு செய்யவேண்டியதுதானே சார்.

ஏலன்: அதை தேர்தலுக்கு முன்னாடியே செஞ்சுடலாமே. எதுக்கு தேர்தல் நடத்தணும் ?

ஒருவர் - டாஸ் வேணாம் சார். திருவுளச் சீட்டு போடலாம் இல்லையா?

ஏலன்: ரெண்டும் ஒண்ணுதான்யா. டாஸ் போட்டா செக்குலர். திருவுளச் சீட்டுன்னா கம்யூனல்.

ஒருவர்: மீதி இருக்கற அந்த ஒரு வாக்காளர் ஓட்டு போட்டப்பறம்தான் முடிவை அறிவிப்பேன்னு சொல்ல உங்களுக்கு அதிகாரம் இருக்கா சார். ?

ஏலன்: தேர்தல் முடியறவரைக்கும் எல்லா அதிகாரமும் எனக்கு இருக்கு.

ஒருவர்: அந்த ஒரு ஓட்டர் யார்னு சொல்லுங்க சார்….

ஏலன்: அவரைப் பாக்கதான் எங்க அதிகாரிங்க போயிருக்காங்க.


கட்டியக்காரன்: யாரா இருக்கும் அந்த வாக்காளர்…. ? ம்ம்…

(கோரஸ் டாஸ்மாக் கடை போர்டுடன் நிற்கிறது. நாடக ஆரம்பத்தில் இருந்த அதே டாஸ்மாக் கடை. அதே ஆள் முன்னே விழுந்து கிடக்கிறான். அஞ்சலை நடந்து வந்து அவனை உலுக்கி எழுப்புகிறாள். )

அஞ்சலை: ஏதுய்யா காசு உனக்கு..


போதை ஆள்: (விழித்தபடி) அஞ்சலை…..அஞ்சலை… ஓட்டு போட்டியா ?


அஞ்சலை: அடச்சீ… தேர்தல் முடிஞ்சு ரெண்டு நாளாவுது.. இன்னும் எண்ணிக்கினே இருக்காங்க…ஓட்டு போட்டியான்னு கேக்கறே நீ..


போதை ஆள்: போட்டியா, போடலியா? உனுக்கும் சேர்த்துதான் என்கிட்ட ஆயர்ரூவா குடுத்தான் மாணிக்கம்.

அஞ்சலை: அடப்பாவி…அந்தக் காசுலதான் ரெண்டு நாளா குடிச்சுகினு இருக்கியா.. அவன்கிட்ட காசு வாங்காதேன்னு சொன்னேன் இல்ல. ஏன்யா வாங்கினே…

போதை ஆள்: சும்மா வர சீதேவியை யாராவது வேணாம்னு சொல்வாங்களா… சரி அவனுக்கு நான் சத்தியம் பண்ணியிருக்கேன். சொல்லு. நீ நான் சொன்னாமாதிரி ஓட்டு போட்டியா இல்லியா…

அஞ்சலை: ஓட்டும் போடல..பூட்டும் போடல…இவுரு சத்தியம் பண்ணியிருக்காராம் பெரிய சத்தியம். சத்தியம் வாங்கினவன் ஒரு பெரிய யோக்கியன் பண்ணவன் இன்னொரு பெரிய யோக்கியன்.. தூ..

போதை ஆள்: ஏய், போட்டியா இல்லியா…

அஞ்சலை: நீ இப்பிடி போட்டுட்டு வுழுந்து கெட. ….ம்…பேருக்கு ஒரு புருஷன், எனக்கு…வெக்கக்கேடு…
(போகிறாள். போதை ஆள் குழறியபடி பின்னே நடக்க முயன்று விழுகிறான்)

கட்டியக்காரன் : அப்ப இந்த அஞ்சலைதான் இன்னும் ஓட்டு போடாத ஒரே ஆளு… ஏன் அஞ்சலை ஓட்டு போடல…?

(கோரஸ் தேர்தல் கமிஷனின் அதிகாரிகளாக அஞ்சலையை சுற்றி உட்கார்ந்திருக்கிறது.)

ஒருவர்: ஏம்மா நீங்க ஓட்டு போடலை ?

அஞ்சலை: பேக்டரில காலையிலருந்து டூட்டில இருந்தேன். மத்யானத்துக்கு மேல போய் ஓட்டு போடலாம்னு இருந்தேன். திடீர்னு எக்ஸ்போர்ட் ஆர்டருக்கு அவசரமா பேக் பண்ணனும். இருந்து பண்ணிட்டுப் போய்டுன்னாங்க. மேற்கொண்டு காசு தரேன்னாங்க. வேலை முடிக்கறப்பவே சாயந்தரம் ஏழுமணியாயிடுச்சு.

ஒருவர்: எவ்வளவு காசு ?

அஞ்சலை: 175 ரூபா…

இன்னொருவர்: ஏம்மா ஓட்டு போட்டா ஆயிரம் ரெண்டாயிரம்னு கட்சிக்காரங்க குடுத்துருப்பாங்களே…

அஞ்சலை: அவன் எதுக்கு எனக்கு சும்மா காசு குடுக்கணும்? நான் வேலை செய்யறேன். சம்பாதிக்கறேன்.

இன்னொருவர்: அப்போ நீ டி.வி பொட்டி வாங்கிக்கலியா….

அஞ்சலை: என் வூட்டுக்காரன்தான் போய் வாங்கினான். வாங்கின அடுத்த நாளே அதை கேரளாவுக்கு வித்துட்டான். அந்தக் காசையும் குடிச்சு அழிச்சான். கட்டையில போறவன்…

இன்னொருவர்: இத பாரும்மா அஞ்சலை. உன் ஓட்டை நீ இப்ப போடலாம். இன்னும் ஒரு வாரம் டயம் இருக்கு. அடுத்த திங்கட்கிழமை நீ ஓட்டு போடணும்.

அஞ்சலை: அதான் எல்லா ஓட்டும் போட்டு முடிஞ்சுடுச்சே. எண்ணிக்கிட்டிருக்கறதா இல்ல சொன்னாங்க.

இன்னொருவர் : எண்ணியாச்சு. ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் சரி சமமா ஓட்டு வாங்கியிருக்காங்க. இன்னும் ஓட்டு போடாதது நீ ஒரு ஆள்தான். நீ ஓட்டு போட்டு இதை முடிச்சு வெக்கணும். உனக்கு முழுப் பாதுகாப்பு தரப்படும்.

அஞ்சலை: அப்பிடின்னா.. ?

இன்னொருவர்: உன்கூடவே ரெண்டு போலீஸ் இருப்பாங்க. நீ பாக்கலாம்னு சொன்னாதான் யாரையும் உன்ன பாக்க வுடுவாங்க. இவங்கதான்.

(இருவர் அஞ்சலைக்கு சல்யூட் அடிக்கிறார்கள்.)


கட்டியக்காரன்: ஒரே ஒரு ஓட்டுல ரெண்டு கம்பெனிகளோட எதிர்காலமும் அடங்கியிருக்கு. அஞ்சலையோட ஓட்டை எப்பிடி வாங்கறதுங்கறதுதான் இப்ப அப்பய்யாவுக்கும் ஆப்பம்மாவுக்கும் கவலை.

(கோரஸ் இரு பக்கமும் இரு தலைவர்களின் ஆதரவாளர்களாகப் பிரிந்திருக்கிறது. அய்யாவும் அம்மாவும் அவர்களுடன் ஆலோசிக்கிறார்கள்.)

ஆப்பய்யா: யார்யா அந்த அஞ்சலை ?


கோரஸ் 1: டெக்ஸ்டைல் பேக்டரில பேக்கிங்க் செக்‌ஷன் ஒர்க்கருங்கய்யா.

ஆப்பம்மா: குடும்பத்துல கூட யார் யார் இருக்காங்க ?

கோரஸ் 2: ஒரே ஒரு ஆள்தான். ஹஸ்பண்ட்.


ஆப்பய்யா: அவன் என்னைய்யா பண்ணிகிட்டிருக்கான்?

கோரஸ் 3: நம்ம டாஸ்மாக்கோட ரெகுலர் கஸ்டமர் தலைவா.

ஆப்பம்மா: கொழந்தைங்க இல்லியா?

கோரஸ் 4: ஒரு பையன் ஒரு பொண்ணு. பையன் ஆறாங்கிளாஸ். பொண்ணு மூணாவது. ஊர்ல படிக்கறாங்க…

ஆப்பய்யா: ஊர்ல யார்யா இருக்காங்க ?

கோரஸ்: அஞ்சலையோட அண்ணன் இருக்காரு. அம்மா இருக்காங்க. அப்பா இல்ல. கால் ஏக்கர்ல அண்ணன் விவசாயம் பாக்கறாரு.

ஆப்பம்மா: அவங்களைக் குடும்பமா என்னை வந்து பார்க்க ஏற்பாடு பண்ணுங்க…

கோரஸ்: அவங்க வரமாட்டாங்க. வந்தா அஞ்சலை உதைக்கும்.

ஆப்பய்யா: அந்த அண்ணனுக்கு இலவச டிராக்டர் வழங்கப்படும்னு சொல்லுங்கய்யா…

கோரஸ்: வேணாம் தலைவா. அப்பறம் அந்தம்மா, இலவச விதை, இலவச பூச்சி மருந்து , இலவச உரம், இலவச கடப்பாரை, இலவச மண்வெட்டி, இலவச கலப்பைன்னு ஆரம்பிச்சுடும்.


ஆப்பம்மா: யார் சொன்னா அவ கேப்பா ?

ஆப்பய்யா: யார் சொன்னா அவ கேப்பா ?

கோரஸ் : யார் சொன்னா அஞ்சலை கேப்பா, யார் சொன்னா அஞ்சலை கேப்பா? (என்று குறுக்கும் நெடுக்கும் அலைகிறது)

(அஞ்சலை முன்னால் மீடியா)


அஞ்சலை: யார் சொன்னாலும் கேக்கமாட்டேன். எனக்கும் கொஞ்சம் புத்தியிருக்குது இல்ல.. நானே யோசிச்சுதான் முடிவு செய்வேன்.

(அஞ்சலை செல்போன் அடிக்கிறது)

அஞ்சலை: ( போனில்) சொல்லு கண்ணு. அம்மாதான் பேசறேன். ( பக்கத்தில்) என் பையன் செல்வம் பேசறான். (போனில்) சொல்லு. பக்கத்துல செல்வி இருக்குதா? என்னா?…. வேணாம். வேணாம். நீங்க யாரும் இப்ப இங்கே வரத் தாவலை. எல்லா எழவும் முடியட்டும். அப்பால வரலாம். …என்னாது….. ஆயாவுக்கு போட்டோ எடுக்கணுமா…. யாரோட ? ரெண்டு பேரோடயுமா… அதெல்லாம் ஒண்ணும் வாணாம். போட்டோ எடுத்தா ஆயுசு கம்மியாயிடும்னு சொல்லிடு. நான் உன்னோட அப்பால பேசறேன். இங்கே நிறைய டி.வி.காரங்கள்லாம் வந்துக்கறாங்க. அவங்களை அனுப்பிட்டு பேசறேன். சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்கு..

ஒருவர்: எப்பிடிப்பட்ட ஆட்சி அமையணும்னு நீங்க ஆசைப்படறீங்க அஞ்சலை ?


இன்னொருவர்: ஆட்சி மாற்றம் வேண்டும்னு நினைக்கறீங்களா ?

இன்னொருவர்: கடந்த ஆட்சியைப் பத்தி என்ன நினைக்கறீங்க ?

அஞ்சலை: எதுக்கு எல்லாரும் சுத்தி வளைக்கறீங்க ? யாருக்கு ஓட்டு போடப் போறேன்னுதானே கேக்கறீங்க ? அது சட்டப்படி ரகசியம். சொல்ல முடியாது. போய்ட்டு வாங்க. (கோரசும் அஞ்சலையும் கலைகிறார்கள்.)

(கோரஸ் ஆப்பய்யா, ஆப்பம்மாவிடம் பேசுகிறது.)

(ஆப்பய்யா குடும்பம் சக்கர நாற்காலியை வேகமாக தள்ளுகிறது.) அவர் பதறியபடி: மெதுவா மெதுவா. எங்கே இவ்வளவு அவசரமா என்னை தள்ளிகிட்டுப் போறீங்க ?

குடும்பம்: அஞ்சலையோட அம்மாவைப் பார்க்க…..ஊருக்கு போறோம்.

(கோரஸ் ஆகாயத்தைப் பார்க்கிறது. ஹெலிகாப்டர் சத்தம். )

ஒருவர்: ஆப்பம்மா ஹெலிகாப்டர்……

ஆப்பய்யா: சீக்கிரம் போய்யா…

கட்டியக்காரன்: ( கையில் பேப்பர் படித்தபடி) இது அப்பாய்யாவோட பேப்பர் . ஆப்பொலி. இது ஆப்பம்மாவோட பேப்பர் நமது ஆப்பு. என்ன போட்டிருக்கு பார்ப்போமா? ஆப்பொலி நியூஸ்.அஞ்சலையின் அன்னையுடன் தமிழினத் தலைவர். நலம் விசாரித்தார். என் மகள் எப்போதும் உங்கள் ஆதரவாளர்தான் என்றார் அஞ்சலையின் தாயார். நமது ஆப்புல என்ன நியூஸ் ? அன்னையர் சந்திப்பு. அஞ்சலையின் அன்னையை தமிழகத் தாய் சந்தித்தார். என் மகள் ஒரு போதும் தீய சக்தியை ஆதரிக்க மாட்டாள். அவள் உங்கள் பக்கம்தான் என்றார் அஞ்சலையின் தாய்…. அடப்பாவிங்களா?

அஞ்சலை ( போனில்) கூப்புடு அந்தக் கெழவியை… தூங்குதா ? ராத்திரிலாம் முழிச்சிகினு தலைவரையும் தலைவியையும் பாக்க முடியுது. நான் கூப்ட்டா தூக்கமா.. ஒரேயடியா தூங்க சொல்லு. அப்பனோட சேந்து ஆத்தாவும் இல்லன்னு நினைச்சுக்கறேன். இந்த தேர்தல் முடியறவரைக்கும் அங்கே யாராவது ஏதாவது செஞ்சீங்க, அப்பால அவ்வளவுதான். சொல்லிட்டேன். (போனை வைக்கும்போது அவள் கனவன் வருகிறான்)

இன்னாய்யா திடீர்னு வூட்டு ஞாபகம் வந்துச்சா…இன்னிக்கு கடை லீவு வுட்டாங்களா.. என்னாது இது புது டிரஸ் போட்டுகினு இருக்கே..

அஞ்சலை கணவன்: ( அசட்டுத்தனமாக சிரித்தபடி) நல்லா இருக்குது இல்ல.. இந்த ஷர்ட் அய்யா வாங்கிக் குடுத்தாரு. இந்த பேண்ட்டு அம்மா எடுத்துக் குடுத்தாங்க. எப்பிடி இருக்குது..

அஞ்சலை: ஜட்டி யாரு எடுத்துக் குடுத்தாங்க. போய்யா பொறம்போக்கு… ஏய் போலீஸ்.. வெளியில நிக்கறாங்களே ரெண்டு பார்ட்டி லீடரும் கூப்பிடுங்க அவங்களை…

போலீஸ் சென்று இருவரை அழைத்து வருகிறது.

அஞ்சலை: இந்த ஆளுக்கு ஏதாவது வாங்கிக் குடுத்தீங்க, அப்பால தேர்தல் கமிஷனாண்ட சொல்லிடுவேன். தெரிஞ்சுதா..

இருவரும்: சரிம்மா…( போகிறார்கள்)

அஞ்சலை ( போலீசிடம்) எல்லாம் ஒழுங்கா முடியறவரைக்கும் இந்த ஆளை இந்த வூட்டாண்டையே வுடாதீங்க. சரியா. வுட்டீங்கன்னா உங்க ரெண்டு பேரையும் மாத்திர சொல்லிருவேன். புரியுதா.. ஏய். எல்லாத்தையும் கழட்டிக் குடுத்துட்டுப் போ.

கட்டியக்காரன்: அஞ்சலைகிட்ட என்ன சொல்லி என்ன கொடுத்து அவ ஓட்டை வாங்கறதுனு புரியாம ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் தவியா தவிச்சாங்க….. அஞ்சலை மீடியால பேசின ஒவ்வொரு வார்த்தையையும் ஆப்ஸ் டீமுங்க துருவித் துருவிப் பாத்தாங்க…

(அஞ்சலையுடன் மீடியா பேசுகிறது.)


அஞ்சலை: இத பாருங்க. தேர்தல், அரசியல் பத்தி எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. வேற எதாவது இருந்தா கேளுங்க..

மீடியா1 : உங்களுக்குப் பிடிச்ச சாப்பாடு என்னங்க அஞ்சலை ?

அஞ்சலை: முட்டைக் கொழம்பு புடிக்கும்.

மறுபக்கம்: ஆப்பய்யா: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கெல்லாம் தினசரி ரெண்டு முட்டை இலவசம்னு சொல்லிடலாமா?

(கோரஸ் அது சரிப்படாது என்பது போல தலையாட்டுகிறது.)

மீடியா 2: உங்களுக்குப் பிடிச்ச கலர் எது ?

அஞ்சலை: கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு…

மறுபக்கம்: ஆப்பம்மா: நான் ஆட்சிக்கு வந்ததும் எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் , பேருந்துகளுக்கும் ரயில்களுக்கும், வீடுகளுக்கும் கறுப்பு வண்ணம் அடிக்கும்படி உத்தரவிடுவேன்னு சொல்லலாமா?

(கோரஸ் தலையிலடித்துக் கொள்கிறது.)

மீடியா 3: உங்களுக்கு பிடிச்ச ஹாபி… ம்… பொழுதுபோக்கு என்னங்க ?

அஞ்சலை: அப்பிடின்னா?

மீடியா 4: வேலை முடிஞ்சப்புறம் சும்மா இருந்தா எதுனாச்சும் விளையாடுவாங்க இல்ல ? அந்த மாதிரி…

அஞ்சலை: ஆங். அதுக்குலாம் இப்ப நேரம் இல்ல. முன்னலாம் தாயபாஸ் வெளையாடுவேன்.

(ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் கையைப் பிசைகிறார்கள்.)

மீடியா 5: டி.வி பாப்பீங்களா ?

அஞ்சலை: ஏதாச்சும் சிரிப்பா இருந்தா பாப்பேன். கொட்டாய்ல போய் சினிமா பார்ப்பேன்.

(ஆப்பய்யா, ஆப்பம்மா முன்னால் உட்கார்ந்திருக்கும் கோரசும் ‘தலைவா”, ‘தாயே’ என்றபடி துள்ளி எழுகிறது.)

(அஞ்சலை வீட்டுக்குள் அஞ்சலை எதிரே திடீரென்று ஒருவன் பாடிக் கொண்டு வந்து குதிக்கிறான்: கூட அஞ்சலையின் போலீஸ்.)

வந்த சினிமா நடிகன்: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை…. இது ஊரறிந்த உண்மை… நான் செல்லுகின்ற பாதை ……

அஞ்சலை (ஆச்சரியத்துடன் சட்டென்று அவனை இடைமறித்து ) அய்ய்ய்…..கைப்புள்ள…..நீங்க எங்க வந்தீங்க…

வந்தவன்: (அசட்டுத்தனமாக் சிரித்து): என் பாட்டை பாடி முடிக்க விடு அஞ்சலை.. நாட்டோட எதிர்காலமே உன் கையிலதானே அஞ்சலை இருக்கு.. நீ போடற அந்த ஒரு ஓட்டுலதானே இருக்கு… (பாடுகிறான்) நான் செல்லுகின்ற பாதை.. ஆ..ப்பய்யன் காட்டும் பாதை…

அஞ்சலை (சட்டென்று தீவிரமாகி): ஓ..பிரசவத்துக்கு வந்தீங்களா… சீச்சீ பிரசாரத்துக்கு வந்தீங்களா?

வந்தவன்: ஆமா அஞ்சலை..

போலீஸ் 1: அம்மா. இன்னும் வெளியில பத்துப் பதினஞ்சு ஹீரோ ஹீரோயினெல்லாம் காத்துகிட்டிருக்காங்க. நாங்கதான் ஒவ்வொருத்தராதான் உள்ள வுடுவோம்னு நிக்க வெச்சிருக்கோம்..


போலீஸ் 2: ஆப்பய்யா அனுப்பி மொத்தம் 5 பேர். ஆப்பம்மா அனுப்பி மொத்தம் 5 பேர்.

அஞ்சலை: இதுலயும் சமானமாதான் இருக்காங்களா… எல்லாரையும் மொத்தமா வர சொல்லுங்க….

(கோரஸ் நடிகர்களாக பாவனையில் உள்ளே வருகிறது. )


அஞ்சலை: ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்பாங்க. அது நெஜமாதான் இருக்குது.. இத பாருங்க. எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப புடிக்கும். நல்லா ஆடறீங்க. பாடறீங்க ஆக்ட் குடுக்கறீங்க… அத்தோட நிறுத்திக்குங்க.. என்னா ? என்னை மாதிரி ஜனங்களோட பிரச்சினையெல்லாம் உங்களுக்கு என்னா தெரியும் சொல்லுங்க. ஏ.சி கார்ல வரீங்க. போறீங்க. ஏசி வூட்டுல உக்காந்துகினு இருக்கீங்க.. . இப்ப நான் பேக்கிங் செய்யறேன். ஷோக்கா செய்வேன்.

என்னா குடுத்தாலும் கரீட்டா பேக் பண்ணிடுவேன். என்னக் கொண்டு போய் நடிக்க சொன்னீங்கன்னா, அசிங்கமாயிருக்காது ? உங்களை வந்து பேக் பண்ண சொன்னா, பார்சல்லாம் புட்டுக்காது ? அதுனால உங்களுக்கு தெரிஞ்சது நடிக்குறது. அத்த ஒயுங்கா செய்யுங்க. நான் காசு குடுத்து வந்து கொட்டாய்ல பாக்கறேன். அவ்வளவுதான். அல்லாரும் என் வூட்டாண்ட வந்தது ரொம்ப சந்தோஷம். குரூப்பா நில்லுங்கப்பா.. ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.

(அசடு வழிய கோரஸ் அஞ்சலையுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறது. அஞ்சலை வழி அனுப்புகிறாள். கோரஸ் வெளியேறுகிறது.)

கட்டியக்காரன்: நடிகர் நடிகைகளை அஞ்சலை திருப்பி அனுப்பிட்டா. ஆனா, அஞ்சலையால திருப்பி அனுப்ப முடியாத இன்னொரு விஷயம் இருந்துச்சு..

(அஞ்சலை வீட்டுக்குள் திரும்பியதும் வெளியே சென்ற போலீஸ் திரும்ப வருகிறது. இருவர் கையிலும் பெரிய மூட்டைகள்.)

அஞ்சலை: இன்னாப்பா இது.. எனக்கு ரெண்டு பெரிசும் ஏதாவது மொய் அனுப்பியிருக்காங்களா? அதெல்லாம் கூடாதுன்னு அன்னிக்கே சொல்லி வுட்டேன் இல்ல..

போலீஸ் 1: இல்லம்மா. இதெல்லாம் தபால் ஆபீசுக்கும் கூரியர் கம்பெனிக்கும் வந்துருக்குற லெட்டருங்க. எல்லாம் உனக்கு வந்துருக்குற லெட்டருங்க..

அஞ்சலை: யாரு அனுப்பியிருக்காங்க…

போலீஸ் 2: ஜனங்கதான். எல்லா ஊர்லருந்தும் வந்திருக்குதாம்.இன்னும் வந்துகிட்டே இருக்குதாம்.

அஞ்சலை: நம்மள மாதிரி ஜனங்க சொன்னா இன்னான்னு கேட்டுக்கணுமே அதான மொறை. எல்லா லெட்டரையும் படிக்கணுமே..

போலீஸ் 1: இத்தனையுமா…

அஞ்சலை: ஆமா. உங்களுக்கும்தான் பொழுது போவல இல்ல..சும்மா வெட்டியாதானே வெளியில நிந்துகினு இருக்கீங்க ? வாங்க பிரிக்கலாம்..

(போலீசும் அஞ்சலையும் மூட்டைகளை நடுவில் வைத்து அருகே உட்கார்கிறார்கள். கோரஸ் சுற்றிலும் வட்டமாக நிற்கிறது.)

கோரஸ் 1: அன்புள்ள அஞ்சலையம்மாவுக்கு…

கோரஸ் 2: எங்க எல்லார் சார்பாவும் இப்ப நீங்க

கோரஸ் 3: முடிவெடுக்கப் போறீங்க…

கோரஸ் 4: அய்யா கிட்டயும்

கோரஸ் 5: அம்மா கிட்டயும்

கோரஸ் 6: நீங்க கண்டிப்பா கேக்கணும்…

(கோரஸ் தொடர்ந்து படிக்கிறது)


கட்டியக்காரன்: ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஆட்சி நடத்தின விதம், கட்சி நடத்தின விதம் எல்லாத்தையும் பத்தி, நேருக்கு நேரே அவங்க கிட்ட கேக்க இதான் சரியான சமயம்னு. நெறைய்ய பேர் அஞ்சலைக்கு லெட்டர் எழுதியிருந்தாங்க. அஞ்சலை ஓட்டு போடறதுக்கு முந்தி, என்னலாம் யோசிச்சு பார்க்கணும்னு எழுதியிருந்தாங்க… யாருக்கு ஓட்டு போடலாம்னு கொஞ்சம் பேர் எழுதியிருந்தாங்க. யாருக்கு ஓட்டு போடக் கூடாதுன்னு கொஞ்சம் பேர் எழுதியிருந்தாங்க. எல்லாத்தையும் படிச்சுட்டு அஞ்சலை சொன்னா…





அஞ்சலை (வட்டத்திலிருந்து வெளியே வந்து) : ரெண்டு தலைவருங்களோடவும் நேருக்கு நேரா பேசணும். அது என்னப்பா.. நேரடி ஒளிபரப்பு.. அதுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்க…..

(ஆப்பய்யா ஒரு பக்கம் வந்து உட்கார்கிறார். ஆப்பம்மா ஒரு பக்கம் வந்து உட்கார்கிறார். எதிரே நடுவில் அஞ்சலை.)


கட்டியக்காரன்: வணக்கம் நேயர்களே. இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த நேருக்கு நேர் மக்கள் கேட்கிறார்கள். நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஒரு ஓட்டுக்காக தேர்தல் முடிவு காத்திருக்கும் அபூர்வ நிகழ்ச்சியின் கதாநாயகியான வாக்காளர் அஞ்சலை, தன் ஓட்டுக்காக காத்திருக்கும் இரு பெரும் கட்சித் தலைவர்களையும் நேருக்கு நேர் மக்கள் சார்பாக கேள்விகள் கேட்பார்.

அஞ்சலை: ரெண்டு பேருக்கும் வணக்கம். மொதொ கேள்வி…… புருஷன் தெனமும் குடிச்சுட்டு ரோட்டுல வுழுந்து கெடந்தா பொம்பளை எப்பிடி குடித்தனம் நடத்துவான்னு உங்களுக்கு தெரியுமா ?

(ஆப்பய்யாவும் ஆப்பம்மாவும் பேசுகிறார்கள். அடுத்து அஞ்சலை பேசுகிறாள். ஒலி இல்லை. பேசும் பாவனை மட்டும். கோரஸ் பலமாக கைதட்டுகிறது. கை தட்டிக் கொண்டே இருக்கிறது. கட்டியக்காரன் முன்னே வந்து பேசுகிறான்.)


கட்டியக்காரன்: நிகழ்ச்சி முடிந்ததும் அய்யாவும் அம்மாவும் அஞ்சலையை தனியா ஒரு நிமிஷம் பார்க்கணும்னு சொன்னாங்க.

(ஆப்பய்யா சக்கர நாற்காலியில் நுழைகிறார். கூட வந்தவர்களை வெளியே போகும்படி சைகை செய்கிறார். எல்லாரும் போய்விடுகிறார்கள். அஞ்சலை தன்னுடைய காவலர்களை வெளியே போகச் சொல்கிறாள். போய்விடுகிறார்கள். )

(திடீரென ஆப்பய்யா, சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து அஞ்சலை காலில் விழுகிறார். அஞ்சலை பதறிப் போகிறாள்.)

அஞ்சலை: அய்யோ என்னாங்க இது.. நீங்க எனக்கு அப்பா வயசுல இருக்கீங்க.. நீங்க போய்….

ஆப்பய்யா: இத பாரும்மா. நெஜமாவே உன் கால்ல விழுந்து கேக்கறேன். உன்கிட்ட வேற எதைச் சொல்லியும் ஒட்டு கேக்க முடியல. உண்மையை சொல்லி கேக்கறேன். .இந்த தேர்தல்ல மட்டும் நான் தோத்துப் போய்ட்டா, அத்தோட என் குடும்பமே நாசமாப் போயிடும். இத்தனை வருஷமா கட்டிக் காப்பாத்தின குடும்பம். தயவு பண்ணும்மா.

(அஞ்சலை பெரிய கும்பிடு போடுகிறாள். ஆப்பய்யா தானே சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வெளியே போகிறார்.)

(அஞ்சலை அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள்.)

(ஆப்பம்மா உள்ளே வருகிறார். கூடவே யூ.பி.எஸ். காவலர்கள். அவர்களை வெளியேறும்படி ஆப்பம்மா சைகை செய்கிறார். அவர்கள் போய்விடுகிறார்கள்.)


அஞ்சலை (சட்டென்று எழுந்து): அம்மா…. உங்களுக்கு என் அக்கா வயசு. என்னை விட பெரியவங்க.என் கால்லலாம் வுழுந்து ஓட்டு கேக்காதீங்க அவுருதான் அப்பிடி பண்ணிட்டாரு..


ஆப்பம்மா: சே. அந்த ஆள் அதுலயும் முந்திகிட்டாரா? பரவாயில்லை. நான் மூணு தடவை உன் கால்ல விழறேன்.. (மும்முறை நமஸ்கரித்துவிட்டு) அஞ்சலையம்மா, ஒரு பொண்ணுக்குதான் இன்னொரு பொண்ணோட கஷ்டம் தெரியும். இந்த தேர்தல்ல நான் ஜெயிக்காட்டி என்னை அரசியலை விட்டு மட்டும் இல்ல, ஊரை விட்டே இவங்க துரத்திடுவாங்க..

(அஞ்சலை பெரிய கும்பிடு போடுகிறாள். ஆப்பம்மா வெளியேறுகிறார்.அஞ்சலை அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள்.)

(சில நொடிகளுக்குப் பிறகு டி.என்.ஏலனும் அதிகாரிகளும் வருகின்றனர்.)

ஏலன்: அம்மா, நீங்க இன்னிக்கு ஓட்டு போடவேண்டிய நாள். சாயந்தரம் 5 மணி வரைக்கும் எப்ப வேணாலும் போடலாம். நாங்க தயாரா இருக்கோம்.

அஞ்சலை: இப்பவே வந்துடறேன். ஒரு வாரமா ஒயுங்கா வேலைக்கு போகமுடியல.. நீங்க சொன்னதுனால பேக்டரிகாரங்களும் எனக்கு லீவு குடுத்துருந்தாங்க.. இன்னிக்கு மதியம் டூட்டிக்காவது வேலைக்கு போவணும்..

(அஞ்சலை எழுந்து ஏலன் முன் செல்ல, இரு காவலர்கள் தொடர, வெளியேறுகிறாள். கோரஸ் மீடியாகாரர்களாக மேடையில் காத்திருக்கிறது.)

கட்டியக்காரன்: அஞ்சலை ஒரு பொறுப்புள்ள பிரஜையா தன்னோட கடமையை நிறைவேற்றிட்டாங்க. தேசம் எந்த நாள்லயும் மறக்கவே முடியாத ஒரு வரலாற்று நிகழ்ச்சியா இது அமைஞ்சிடுச்சு.

(அஞ்சலை மேடைக்கு வருகிறாள்.)

மீடியா 1: ஓட்டு போட்டுட்டீங்களா ?

(அஞ்சலை சிரித்தபடி தன் விரலைக் காட்டுகிறாள்.)

மீடியா 2: இப்ப சொல்லுங்க….யாருக்கு ஓட்டு போட்டீங்க.. ?

மீடியா ஒவ்வொருவரும்: சொல்லுங்க. சொல்லுங்க..

அஞ்சலை: சொல்றேன்.

(மீடியா ஆர்வமாகக் கேட்கிறது)

அஞ்சலை: நான் ரெண்டு பேருக்கும் ஒட்டு போடல. யாருக்கும் என் ஓட்டு கெடையாதுன்னு சொல்லிட்டேன்.

மீடியா: கெடையாதா?

அஞ்சலை: ஆமா. நாப்பத்தொம்போது ஓன்னு ஒண்ணு இருக்குது. அதும்படி யாருக்கும் ஓட்டு போட இஷ்டமில்லேன்னு சொல்லிரலாம். நாம ஏதாவது சொல்லணும்னு நினைச்சா அத்தையும் கூடவே எழுதிக் குடுக்கலாம். நான் அதைத்தான் செஞ்சேன்.

மீடியா 1: எப்பிடி அஞ்சலை உனுக்கு அதெல்லாம் தெரியும்?

அஞ்சலை: இந்த ஒரு வாரத்துல உங்களை விட அதிகமா எனக்கு எல்லாம் தெரிஞ்சுப் போச்சு. எத்தினி பேர் லெட்டர் போட்டாங்க. எம்மாம் விஷயம் எழுதினாங்க. எல்லாம் படிச்சுப் பார்த்தேன் இல்ல ? அவ்வளவு ஏன் ? உங்க தலைவருங்களைப் பத்தி கூட உங்களுக்குலாம் தெரியாதது எனக்கு தெரியும்.. அத்த வுடு. ரெண்டு பேரும் சரியில்ல, யாருக்கும் ஓட்டு இல்லன்னு சொல்லிட்டேன்.

மீடியா: அப்பிடின்னா யாரை ஜெயிச்சதா சொல்றது…..?

அஞ்சலை: அது உங்க பாடு. சட்டத்தை திருத்துங்க. இது இப்ப எவ்வளோ ஓட்டையா இருக்குது தெரியுமா ? ஏலன்தான் சொன்னாரு. நெறைய ஊர்ல ஜெயிக்கறவன் வாங்கின ஓட்டை வுட, ஓட்டே போடாதவங்கதான் அதிகம்னு.ஒரு ஆள் நாப்பது ஒட்டு வாங்கறார். எதுத்து நிந்த ரெண்டு பேர் ஆளுக்கு முப்பது ஓட்டு வாங்கறாங்க. அந்த அறுபது ஓட்டுக்கும் அர்த்தமே இல்லாம போயுடுது. இதெல்லாத்தையும் மாத்துங்க.அப்பதான் உங்க தேர்தல் ஒயுங்கா இருக்கும். இத்தினி நாளா நீங்க எல்லாம் என் மேல ரொம்ப அன்பா இருந்தீங்க. அல்லாருக்கும் நன்றி..( கும்பிடுகிறாள்)

கட்டியக்காரன் : அஞ்சலை…… நீங்க அடுத்து தேர்தல்ல நிப்பீங்களா?


அஞ்சலை: நிந்தா போவுது. ஆனா எல்லாத்தையும் முதல்ல மாத்துங்க. அப்பதான் இந்த அஞ்சலை மாதிரி ஆளுங்கள்லாம் தேர்தல்ல நிக்க முடியும். வணக்கம்.

(நாடகம் முடிகிறது.)

ஒரு பின்குறிப்பு:

இந்த நாடகத்தை எழுத உந்துதலாக அமைந்தது ஒரு திரைப்படம்.

சில வருடங்கள் முன்பு திரைப்பட இயக்குநர் நண்பர் சரவணன் என்னிடம் ஸ்விங் ஓட் என்ற கெவின் காஸ்னர் நடித்து தயாரித்த படத்தின் டி.விடியைக் கொடுத்து, இதே போல ஓர் அரசியல் படம் உங்களால் உருவாக்கமுடியும் என்றார்.

ஏற்கனவே என் தவிப்பு என்ற அரசியல் சார்ந்த நாவலை திரைப்படமாக்க நான் எடுத்த சில முயற்சிகள் பயன் தரவில்லை. எனினும் ஸ்விங் ஓட்ட் என்னைக் கவர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஒற்றை வாக்காளரை சார்ந்து சிக்கலை சந்திக்கும் சூழலில் அது அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் வேறொரு கதையை நான் மனதில் உருவாக்கி வைத்திருந்தேன். 2009 மக்களவை தேர்தல் சமயம் இதை திரைப்படமாக சிலரிடம் பேசியது பயன் தரவில்லை.

2011 தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மறுபடியும் இதை யோசித்தேன். தொலைக்காட்சி சேனல் எதிலேனும் ஒரு மணி நேர வீடியோ படமாக இதை ஒளிபரப்பலாம் என்று தோன்றியது. கட்சி சார்ந்த சேனலகளல்லாத ஸ்டார் விஜய், பாலிமர், ஸீ டிவி, இமயம், ராஜ் ஆகியவற்றில் இருக்கும் சில நண்பர்கள் மூலம் விசாரித்தேன். எந்த சேனலும் இதற்கு தயாராக இல்லை.

எனவே இன்னும் என் கைவசம் என் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும் நாடக மீடியத்தில் இதை உருவாக்க முடிவு செய்தேன். மூன்று நாட்களில் நாடகத்தை எழுதி மூன்று நாட்கள் ஒத்திகை செய்து, ஏப்ரல் 9 அன்று பெசண்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் எங்கள் பரீக்‌ஷா குழு நாடகத்தை அரங்கேற்றியது. திரளாக வந்திருந்த பார்வையாளர்கள் நாடகத்தைப் பெரிதும் ரசித்துப் பாராட்டினர். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களுடன் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிக் கலந்துரையாடினோம். நாடக நிகழ்வுக்கு கிழக்கு பதிப்பகம் உதவி செய்தது.


நாடகத்தின் கேமரா பதிவை பத்ரி கிழக்கு பதிப்பகத்தின் இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (http://kizhakkupathippagam.blogspot.com/2011/04/blog-post_09.html) இன்னும் தொடங்கப்படாத தொலைக்காட்சி சேனலான புதிய தலைமுறையும், மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் தன் சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தும் வீடியோ மேகசினுக்காகவும் நாடகத்தைப் படம் பிடித்துள்ளனர்.



இங்கே தரப்பட்டிருப்பது நாடகத்தின் முழுப்பிரதி.

மிக குறுகிய காலத்தில் இந்த நாடகத்தை உருவாக்கி நிகழ்த்த முடிந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.-ஞாநி

இதில் பங்கேற்றவர்கள்:

கட்டியக்காரன்: நீல்சன் தேர்தல் அதிகாரி ஏலன்: ராம்ஜி ஆப்பய்யா: ஞாநி ஆப்பம்மா: சாய்கிருபா அஞ்சலை: கிறிஸ்டினா அஞ்சலையின் கணவன்: பிரபு சவாலய்யா: செந்தில் பல்வேறு பாத்திரங்களைச் செய்யும் கோரஸ்: பாஸ்கர் பாலாஜி லோகபாலாஜி ரகு குங்குமராஜ் அனிஷ் ரஞ்சித் கலைவாணன் ஹரிஹரன் பிரதீப் பிரபாகர், யுகேந்திரன், ஐஸ்வர்யா, ஹரன் பிரசன்னா. ஒளி: பாஸ்கர். பின்னரங்கு உதவி: ராஜா, வெங்கடேசன், சூர்யா, சிநேகா


 டிஸ்கி  - இந்த நாடகத்தை வெளியிட அனுமதி அளித்த திரு ஞாநி அவர்களுக்கு நன்றி

இலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgihNcTDDhejqNKcTcdgxylWY2pAJGYG-n5fcijtyxt9vs-3SkxP9EcDFzLUORFkQ3_obI7B_AnL0CmT-D4B42FeE9K4XENUMbpS17znxbWaKgqvw3ZudGCnJYNqxpQzvFzpmOBhNviVk/s400/Jr-NTR-Ileana-In-Om-Sakthi-Tamil-Audio-Release-Stills-2_preview.jpg
உடுக்கை இடை அழகி இலியானாவுடன் ஜெய்ப்பூர்,ஹரித்வார்,காஷ்மீர் போன்ற உல்லாச நகரங்களுக்கு ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?நம்ம இளய தளபதி விஜய்க்கு போட்டியா டான்ஸ் காட்சிகளில் எக்சசைஸ் பண்ணும் ஹீரோ ஜூனியர் என் டி ஆர் அவர்களை நக்கல் அடித்துக்கொண்டே கமெண்ட்ட,கலாய்க்க ஆசையா?

கள்ளக்காதலி அல்லது நல்ல காதலியுடன் ஆள் இல்லாத தியேட்டரில் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆசையா?அப்போ நீங்க கண்டிப்பா ஓம் சக்தி  தெலுங்கு டப்பிங்க் படத்தை பார்க்கலாம்.


ஆந்திரா காரங்க எல்லாம் எம்புட்டு புத்திசாலிங்க என்பதை இந்தப்படத்தின் சூப்பர் ஹிட் ரிசல்ட்ல இருந்து தெரிஞ்சிக்கலாம்.
இலியானோவோட சதையை பற்றி பார்க்கறதுக்கு முன்னால படத்தோட கதை என்னென்னு பார்ப்போம்.. ( ரொம்ப முக்கியம்?).

ஒரு ராஜ குடும்பத்து கைல( கலைஞர் குடும்பம் அல்ல) சக்தி மிக்க வைரம் இருக்கு.. அதை கைப்பற்ற சில தீய சக்திகள் (ஜெயா & சசி அல்ல) முயற்சி செய்யுது. அது கைல இருந்தா உலகத்தையே ஆளலாமாம்..( நல்லா சுத்துறாங்கடா பூவை...)அதை தடுக்கறாரு ஹீரோ.. அவர் பெரிய சீக்ரெட் ஏஜண்ட் வேற.. ( இடைவேளை அப்பத்தான் அந்த அரிய உண்மை தெரிய வருது.. ( அடிங்கொய்யால... )

டைட்டில் போடறப்ப ஓலைச்சுவடில எழுத்துக்கள் ஓடுது.. நல்ல முயற்சி.. ஏம்ப்பா கோடம்பாக்கம் டைரக்டர்ஸ்.. நோட் பண்ணிக்குங்கப்பா.. உல்டா பண்ணிடலாம் இந்த ஐடியாவை.. 
ஒரு அம்மா கணவன் கொல்லப்பட்டதும் தன்னோட கணவனோட கண்களை எடுத்து உயிரோட இருக்கற தன் 10 வயசு மகன் கண்களை தோண்டி எடுத்து ரீ பிளேஸ்மெண்ட் பண்றாரு.. படு கேவலமான சீன் இது.. கண் தானம்  பற்றி தெரில போல டைரக்டருக்கு.. ஒருவருக்கு ஒரே ஆளின் 2 கண்ணையும் வைக்க மாட்டாங்க.. 

மகனோட முகத்துல கணவனோட கண் இருந்தா அந்த பையன் அம்மாவை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பான்..? என்னய்யா யோசிக்கறீங்க?
ஒரு செண்ட்ரல் மினிஸ்டர் பொண்ணு இப்படியா லூஸ் மாதிரி இருப்பா..?( பொதுவாவே பொண்ணுங்கன்னா , தமிழ் சினிமா ஹீரோயின்கள்னாலே லூஸ் மாதிரி தான் சித்தரிக்கறாங்க..)மிட் நைட்ல பீரோல இருந்து பல பணக்கட்டுக்களை அள்ளி சாக்குப்பைல போட்டுக்கிட்டு அவ ஃபிரண்ட்ஸோட பிக்னிக் போறாளாம்.. ( திரைக்கதை எழுதுனவன் மட்டும் என் கைல சிக்குனான்.. அவன் செத்தான்..)




அது கூட தேவலை.. டூர் வந்த இடத்துல அந்த லூஸ் ஹிந்திப்படத்தை பிளாக்ல பார்க்குது.. ( அதை அவ சொந்த ஊர்லயே செய்யலாமே..?)அப்போ தான் ஹீரோ எண்ட்ரி ஆகறாரு. பிளாக்ல டிக்கெட் வித்து ஹீரோயினை தியேட்டருக்குள்ளே அனுப்பறாரு... அந்த பிளாக் டிக்கெட் வருமானத்துல வந்த பணத்தை ஏழைகளுக்கு ஆன் த ஸ்பாட் பிரிச்சுத்தர்றாரு.. ( அடடா.. எம் ஜி ஆருக்குக்கூட இந்த யோசனை வர்லையே,...?)

ஹீரோயின் லூஸ் என காண்பிப்பதில்  இயக்குநர் இன்னொரு ஷாட் வெச்சிருக்கார்.. ஒரு பாலைவனத்துல பயணம் பண்றப்ப.. எல்லாரும் நா வறண்டு தாகத்தால தவிக்கறப்ப சூடா டீ வேணும்னு கேக்கறாரு... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8ymmNxEwDfOhc3fPvaxzTnqh91kYylDRHCYvzTPIz79Id_xEx01MfVHoIr79Gfc2Y2UewkzW0R3MywF-gWfuNeyS6joob_NOL3pMJ37T52xFTthGsiPYig3-whGiE6JSnCJ0oEPpqzvPX/s1600/ileana%252B8.jpg

கேவலமான படத்தில் வந்த படு கேவலமான காமெடி வசனங்கள்

1. பார்க்கத்தான் அவரு தங்கத்தமிழன்.. சீறுனா சிங்கத்தமிழன்.. ( அப்போ ஏறுனா சொங்கித்தமிழனா?)

2.   இது வேலை செய்யுமா?


போடா புண்ணாக்கு.. முதல்ல உன்னுது வேலை செய்யுமா?

எது?
 மூளை..


( டபுள் மீனிங்காம்...சிங்கிள் மீனிங்க்கே எழுத வர்ல...)

3.  பாப்பா கைல ஒரு பாப்பாவையே தர ஏற்பாடு நடக்குது.. ஜாக்கிறதை.. 

4. ஹீரோயின் - மிஸ்டர் சக்தி.. நான் படுத்துக்கப்போறேன்..

நானும் துணைக்கு வரவா?

5. உனக்கு ஐ லவ் யூ என 1000 பேரு எழுதித்தரலாம்.. ஆனா ஐ டோண்ட் லவ் யூ என யாருமே எழுதிக்கொடுத்திருக்க மாட்டாங்க.. எப்பூடி..

(ஹூம்.. கேவலமான ஐடியா)

6. வில்லன் - நானே ஒரு விஷப்பாம்பு.. எனக்குப்பால் புகட்டுனவங்களுக்கே விஷம் குடுத்துப்போட்டுத்தள்ளிட்டுத்தான் நான் இந்த ஸ்டேஜ்க்கு வந்திருக்கேன்.. ( சொந்த அம்மாவைக்கொலை பண்ணிட்டு நாயி பஞ்ச் டயலாக் பேசுது.. )
http://s1.hubimg.com/u/333908_f520.jpg

பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சுமாரா இருந்தாலும் இலியானா கிளாமருக்காக அதை எல்லாத்தையும் சகிச்சுக்கலாம்..

நைட் ஆகிப்போச்சுன்னா இது காதல் தேசம் அல்லவா? போன்ற இலக்கியநயம் மிக்க பாடல்களை எழுதியவர் நா முத்துக்குமார்... 

ஒளிப்பதிவாளருக்கு ஒரே ஒரு கேள்விதான்.. இலியானாவை ஒரு சீனில் கூட க்ளோசப்பில் அவர் முகத்தை காட்டலையே ஏன்? ( முகத்தை யார் பார்க்கறா?ன்னு நினைச்சுட்டாரோ..?)
http://www.dailomo.com/tamil/content_images/1/ileayana.jpg
இடைவேளைக்குப்பிறகு மாயாஜால மந்திரக்காட்சிகள் அதாவது காதுல பூ சீன்கள் அதிகம்.. அதனால அந்த ஃபிளாஸ்பேக் சீன் ஆரம்பிக்கறப்பவே நைஸா எஸ்கேப் ஆகிக்கலாம்.. அதுக்குப்பிறகு இலியானா நோ எண்ட்ரி.. 

பாடல் காட்சிகளில் ஜூனியர் என் டி ஆர் கிராஃபிக்ஸ் உதவியுடன் என்னென்னவோ பண்றார்.. விஜய் வகையறாக்கள் எச்சரிக்கை... 

ஆந்திராவில் இந்தப்படம் அமோக வெற்றி அடைந்திருக்கலாம்.. ஆனா இங்கே 10 நாட்கள் தான் ஓடும்//

http://1.bp.blogspot.com/_maPlgJCAIqk/S-lftfpE2FI/AAAAAAAAASk/4zmHqAyVQ4Y/s1600/Ileana-actress-wallpapers.jpg

டிஸ்கி - எதுக்கு ஒரு டப்பா பட விமர்சனத்துல இத்தனை ஸ்டில்லு..? ஹி ஹி .. படம் தான் பார்க்கற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான்