Showing posts with label அன்னக்கொடியும் கொடிவீரனும். Show all posts
Showing posts with label அன்னக்கொடியும் கொடிவீரனும். Show all posts

Sunday, February 24, 2013

பாரதிராஜா, இளையராஜா மீண்டும் மோதல் @ அன்னக்கொடியும் கொடிவீரனும்"

பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள்.

காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

"பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.


 நன்றி - தினமலர்



மதுரையில் இருந்து கிளம்பி வந்து பல்வேறு போராட்டங்களைக் கடந்து தங்களது திறமையால் தமிழ் திரையுலகத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி உட்கார்ந்தவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். ஒருவர் இயக்கத்திலும், மற்றொருவர் இசையமைப்பிலும் நிகரற்று விளங்குகிறார்கள்.


இருவரும் பால்ய கால நண்பர்கள் என்பதால் அடிக்கடி ஊடலும், கூடலும் இருக்கும் என்பது இயற்கை.


ஆனால் தற்போது இருவருக்குள்ளும் இனி சேரவே முடியாது என்ற அளவுக்கு ஏதோ பிரச்னை வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



சமீபத்தில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீடு தங்களது சொந்த மண்ணான மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட இளையராஜாவை, பாரதிராஜா ஒருமையில் அழைத்துப் பேசியதும், சில அறிவுரைகள் வழங்கியதும், இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனது. சொந்த மண்ணில் தன்னைப் பற்றி பாரதிராஜா இவ்வாறு கூறியது இளையராஜாவின் மனதை பாதித்தது.



இதுதான் இருவருக்குள்ளும் அவ்வப்போது உண்டான சண்டை, வெளி உலகுக்குத் தெரிய வரக் காரணமாகிவிட்டதாம்.


தங்களது திறமையால் தமிழ் உலகில் நிகரற்று விளங்கும் இருவரும் நட்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


thanx - dinamani

Tuesday, February 05, 2013

அன்னக்கொடியும் கொடிவீரனும்

அன்னக்கொடியும் கொடிவீரனும்’ பட இசை வெளியீட்டு விழா என்றுதான் அறிவித்தது அழைப்பிதழ். ஆனால், மதுரை அரசரடி மைதானத்தில் அன்று அரங்கேறியதோ 'இமயத்திற்கு மரியாதை’ விழா. பாரதிராஜாவின் 36 வருட திரை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் நடந்த விழாவை 80-களின் திரை நட்சத்திரங்கள் கலகல கலாட்டாவாக நடத்த, நெகிழ்ந்துவிட்டார் பாரதிராஜா.


 பாரதிராஜாவை முதன்முதலில் சந்தித்தது, ஹீரோவாக அறிமுகமானது உள்ளிட்ட சம்பவங்களைப் பகிர்ந்துகொண்ட பாக்யராஜ், 'என் குருநாதரின் ஆசியுடன் சினிமாவில் நான் என்னுடைய செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கப்போகிறேன். படத்தின் தலைப்பை பாரதிராஜா அறிவிப்பார்!'' என்றபடி ஒரு துண்டுத் தாளை அவரிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் பாரதிராஜாவுக்கு முகமெல்லாம் அதிர்ச்சி. 'படத்தின் பெயர் 'துணை முதல்வர்’ சப் டைட்டில் 'அன் அப்போஸ்ட்!'' என்று வாசித்த பாரதிராஜா, ''அட சண்டாளா... மாட்டிவுட்டுட்டான்யா!'' என்று சிரித்தார்.  


பார்த்திபனின் பேச்சு முழுக்கக் குறும்பு தெறித்தது. 'மயிலு, முத்துப்பேச்சி, பாஞ்சாலி, பஞ்சவர்ணம்னு அவரோட கதாநாயகிகள் பேரு எல்லாம் 'நச்’னு மனசுல பதிஞ்சிரும். ஆனா, அவர் படத்து ஹீரோக்கள் எவன் பேரும் என் ஞாபகத்துல இல்லை. ஏன்னா, எந்த நாயகனையும் நம்ம மனசுல நிக்கவிட மாட்டாரு அவரு. ஹீரோவை சப்பாணி ஆக்கிடுவாரு. அதே சப்பாணி சிகப்பு ரோஜாவோடு வந்தா, மென்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவாரு. சுதாகர் மாதிரி ஒரு அப்பாவி கிடைச்சா... கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதை மேல ஏத்திவிட்ருவாரு. இப்படி எல்லா ஹீரோவையும் கேவலப்படுத்திக்கிட்டே இருந்தா... அவங்க மூஞ்சி எப்படி நமக்கு ஞாபகத்துல இருக்கும்?



பாரதிராஜாவுக்கு ஒரு மன வருத்தம் உண்டு. 'ஊர்ல எல்லாரும் வந்து பாராட்டுறாங்க. ஆனா, வீட்ல சரியான மரியாதை கொடுக்க மாட்டேங்குறாங்களே’னு சொல்லுவார். 'இந்த பாரதிராஜா எவ்வளவு சாதிச்சிருக்கான். அவனை ஏன்யா சராசரி மனுஷனா ட்ரீட் பண்றாங்கன்னு 'தண்ணி’ப்பட்ட... ஸாரி, தனிப்பட்ட முறையில் வருத்தப்படுவார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை உங்களோடு நாங்க இருப்போம். தமிழ் சினிமா இருக்கிற வரை நீங்க இருப்பீங்க!'' என்று நெகிழ்வாக முடித்தார்.


வடிவுக்கரசி பேசியபோது, '' 'முதல் மரியாதை’ படத்துல, சிவாஜி சாரோட ஜோடின்னதும் 'தங்கப்பதக்கம்’ கே.ஆர்.விஜயா மாதிரி நடிக்கப்போறோம்னு சந்தோஷமாப் போனேன். ஆனா, அங்க போய் நின்னதுமே முஞ்சில கரியப் பூசுனாங்க, காதுல தண்டட்டி போட்டாங்க. அப்புறமா, 'அப்பச்சி கோவணத்தைக் காத்து தூக்கிட்டுப் போயிடுச்சாம். அடுப்பு ஊதுற குழல்ல அப்படி என்னடா ராகம்?’னு வசனம் பேசவெச்சாரு. நான் நொந்துட்டேன். அந்த கேரக்டர் எனக்குப் பிடிக்கவே இல்லை. டைரக்டர் மேல உள்ள கோபத்தைத்தான் படத்துல சிவாஜி சார் மேல காட்டினேன்!' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.



சத்யராஜ் பேச்சு முழுக்கத் தகடு தகடுதான். ''நான் நடிச்ச முதல் லவ் சப்ஜெக்ட் 'கடலோரக் கவிதைகள்’தான். அதுக்கு முன்னாடி 75 படத்துல வில்லனா நடிச்சிருக்கேன். நான் ஸ்க்ரீன்ல வந்து நின்னதுமே, 'சூப்பர் ரேப் சீன் இருக்குடா’னு ஆடியன்ஸ் எல்லாம் கை தட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, அப்படிப்பட்ட என் கையில ஆட்டுக்குட்டியைக் கொடுத்து, 'டீச்சர்... டீச்சர்’னு நடிக்கவெச்சவர் பாரதிராஜா!'' என்றார் சத்யராஜ்.



''எங்க காலடி படாத இடமே கிடையாது இந்த மதுரையில். பாரதிராஜாவைப் பாராட்ட வந்த வங்க எல்லாம் அவங்கவங்க அனுபவிச்ச விஷயத்தை அழகாச் சொன்னாங்க. ஆனா, அவரை அதிகமாப் புரிஞ்சுக்கிட்டவன் நான்தான். என்னை அதிகமாப் புரிஞ்சுகிட்டவர் அவர்தான்!'' என்று நெகிழ்ந்த இளையராஜா, இருவருக்கும் இடையிலான நெருக் கத்துக்கு மேலும் பல சம்பவங்களைக் குறிப் பிட்டார்.  



இறுதியில் பேச எழுந்தபோது, உணர்ச்சிப்பிழம்பாக நெக்குருகிவிட்டார் பாரதிராஜா.


''நான் கோபத்தின் உச்சம். அவன் இசை உலகின், தத்துவ உலகின் உச்சம். இந்த பாரதிராஜா சினிமாவைத்தான் ஜெயிச்சேன். நீ சமூகத்தையே ஜெயிச்சவன்டா. நீ மிகப் பெரிய கலைஞன். உனக்கு வித்தை கர்வம் வேணும். வெச்சிக்கோ. இப்பக்கூட எனக்கும் உனக்கும் சண்டை. ஏ இசைஞானி... இந்த மதுரை மண்ணில் நான் ஒன்றைப் பிரகடனப்படுத்துகிறேன்... இங்கே இருந் திருக்க வேண்டிய இன்னொரு தூண் (வைரமுத்து) இங்கே இல்லை. 



நீ உருவாக்கின தூண் இங்க இல்லை. ஒரு எறும்பு உன்னைக் கடிக்குதுடா. அதுக்காக நீ அதைக் கொல்லக் கூடாதுடா. கீழே எடுத்துவிட்றணும்டா. இந்த மண்ணில் ஒரு மொட்டைக் கோபுரம் நின்றுகொண்டு இருக்கிறது கட்டப்படாமல். நீ நினைத்தால் கட்டி முடிக்கலாம். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என்ற மூன்று கோபுரங்களும் எழுந்து நிற்கும். நிக்கவைக்கணும். நான் கை கொடுக்குறேன்... நீ..?'' என்று கேள்வியோடு பாரதிராஜா நிறுத்த, சிந்தனையில் ஆழ்ந்தார் இளையராஜா.


நல்ல கனவுகள் நனவாகட்டும்!


நன்றி - விகடன்