Showing posts with label கதைக்கலாம் கலக்கலாம் வாங்க…ஏற்காடு டூரும்... எக்ஸ்ட்ரா சாப்பாடும்!. Show all posts
Showing posts with label கதைக்கலாம் கலக்கலாம் வாங்க…ஏற்காடு டூரும்... எக்ஸ்ட்ரா சாப்பாடும்!. Show all posts

Monday, May 04, 2026

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க…ஏற்காடு டூரும்... எக்ஸ்ட்ரா சாப்பாடும்!வசமாக மாட்டிக்கொண்ட 'கட்' அடித்த அனுபவம்!

 


ஏற்காடு டூரும்... எக்ஸ்ட்ரா சாப்பாடும்! - வசமாக மாட்டிக்கொண்ட 'கட்' அடித்த அனுபவம்!

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் ‘’நண்பர்களுடன் ஊர் சுற்ற பொய் சொல்லி மாட்டிய அனுபவம்’’! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் மூன்றாவது கட்டுரை இதோ…

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜில் 1989 ல் பி எஸ்சி மேத்ஸ் படித்த நேரம், பசங்க எல்லாம் செட் சேர்ந்து ஏற்காடு டூர் போக பிளான் போட்டோம். கட் அடிச்சுட்டுதான். காலேஜ் டைம் காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை. வழக்கமாக சென்னி மலையிலிருந்து ஈரோட்டுக்கு காலை 8 மணி பஸ்ஸில் ஈரோடு வந்து பின் காலேஜ் செல்வது வழக்கம்.


ஆனால் டூர் போகும் நாள் அன்று காலையில் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால் நேரத்திலேயே போகவேண்டும் என பொய் சொல்லி காலை 6 மணிக்கே கிளம்பியாகி விட்டது.ஈரோடு டு சேலம் ஒரு மணி நேரம் ரயில் பயணம். சேலத்திலிருந்து ஏற்காடு பஸ்ஸில் போனால் 30 கிமீதான் தூரம், ஆனால் மலைப்பாதை என்பதால், போக்குவரத்து நெரிசல் என்பதால் மேலும் ஒரு மணி நேரம். ஆக மொத்தம் 3 மணி நேரம் + 3 மணி நேரம் போக வர 6 மணி நேரம் ஆகும். அங்கே சுற்றிப்பார்க்க 3 மணி நேரம், ஆக மொத்தம் 9 மணி நேரம் என்பது எங்கள் பிளான்.

நான், அம்மா, அப்பா மூவரும் சென்னிமலையில் தங்கி இருக்கிறோம். அக்கா வீடு ஈரோட்டில் இருக்கிறது. அம்மா என் அக்காவிற்கு போன் பண்ணி உன் தம்பி காலையில் சாப்பிடாமல் டிபன் பாக்ஸ் எடுத்துவிட்டு செல்லாமல் நேரத்திலேயே கிளம்பி விட்டான். காலேஜ் கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்கிறேன் எனக் கூறினான் ஆனால் எனக்குதான் மனசு கேட்கலை. நீ இரண்டு வேளைக்கும் சாப்பாடு கொடுத்து விட்டுடு என லேண்ட் லைன் போனில் தகவல் சொல்லிவிட்டார்.

அப்போது எல்லாம் செல்போன் கிடையாது. இருந்திருந்தால் அக்கா எனக்கு போன் பண்ணி இருப்பார். ஏதாவது பொய் சொல்லி தப்பி இருப்பேன். அக்கா ஈரோட்டில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை. அக்கா டிபன் பாக்ஸ் எடுத்துக்கொண்டு காலேஜ் வந்திருக்கிறார். உங்க தம்பி இன்னைக்குக் காலேஜே வரலை என சொல்லி இருக்கிறார்கள். சாப்பாடு எக்ஸ்ட்ரா சமைத்து வைத்து அது வேஸ்ட் ஆன கோபத்தில் அக்கா அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தைக்கூறி விட்டார்.


நாங்கள் ஆற அமர ஊர் எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு மாலை 6 மணிக்கு சென்னிமலை வந்தால் அங்கே அக்கா, அக்கா கணவர், அம்மா, அப்பா எல்லாரும் பஞ்சாயத்து பண்ண ரெடி ஆக அமர்ந்திருந்தார்கள். எனக்குப் பார்த்ததும் பகீர் என இருந்தது. ஆனால் படபடப்பை மறைத்துக்கொண்டு இயல்பாக இருப்பதுபோல் நடித்தேன்.

அக்கா என் சட்டைப்பாக்கெட்டை செக் பண்ண அதில் ஏற்காடு பஸ் டிக்கெட் இருந்ததைப்பார்த்து விட்டார். அடச்சே இதை பஸ்சை விட்டு இறங்கியதுமே எடுத்து வீசி இருக்க வேண்டும். அடுத்த முறை கட் அடிக்கும்போது இந்த வேலையை மறக்காமல் செய்யவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.


அம்மா,அப்பா இருவரும் படிப்பு அதிகம் இல்லை என்பதால். அவர்களை ஏமாற்றுவது எளிது எனவும் அக்கா படித்தவர் என்பதால் அவரை ஏமாற்றுவது சிரமம் என்பதையும் நான் அன்று கற்றுக்கொண்டேன். நல்லவேளை அடி எல்லாம் விழவில்லை. அரைமணி நேரம் அட்வைஸ் மட்டும் பண்ணிவிட்டு அக்கா கிளம்பிவிட்டார். டூர் அனுபவம், கட் அடித்த அனுபவம் வெற்றிகரமான தோல்வி.

thanx - kalki