Showing posts with label சினிமா ரசனை. Show all posts
Showing posts with label சினிமா ரசனை. Show all posts

Wednesday, January 13, 2016

உலகப்பட இயக்குநர் ஆவது எப்படி?

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, குறும்படங்கள் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து தனது முதல் திரைப்படத்தை (Who’s that knocking at my door Black & white 1967) இயக்கி ஆண்டுகள் 48 ஆகின்றன. கடந்த நவம்பர் 17-ல் தனது எழுபத்துமூன்றாம் வயதில் அடியெடுத்து வைத்த இவரை, இத்தனை ஆண்டுகள் திரையுலகில் இருந்தும், திறமையில் துளிக்கூட மங்காத இயக்குநர் என்று தாராளமாகக் குறிப்பிட முடியும். இத்தனை வருடங்கள் சுறுசுறுப்பாகத் திரையுலகில் இயங்கிய / இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் உலக அளவில் மிகச் சிலரே இருக்கின்றனர் (ஸ்பீல்பெர்க் இன்னொரு உதாரணம்).



‘முத்திரை’ இயக்குநர்
ஸ்கார்ஸேஸியின் படங்களின் விசேஷ அம்சங்கள் என்ன? எதனால் அவரை இன்றுவரை அற்புதமான இயக்குநர் என்று திரைப்பட வெறியர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?
சில இயக்குநர்களின் படங்களை, எந்தக் காட்சியை கவனித்தாலும் அது அவரது படம் என்பதைச் சொல்லிவிட முடியும். அவர்களது முத்திரை அந்தப் படங்களில் அப்படிப் பதிந்திருக்கும். முத்திரை என்பது, வெறும் ஷாட்கள் அமைக்கும் முறை, லைட்டிங், ‘கட்’கள் போன்றவை இல்லை (mise en scène). அந்த இயக்குநரின் மனதில் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றி என்னென்ன தனிப்பட்ட எண்ணங்கள் இருக்கின்றனவோ, அவை அப்படியே அந்தப் படங்களின் காட்சிகளிலும் பிரதிபலிக்கும். இதுவே, நான் குறிப்பிட்ட ‘முத்திரை’ என்ற வார்த்தையின் பொருள். இதனை ‘auteur’ என்ற வார்த்தையால் (இந்தப் பதத்தை ஒரு அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்) விளக்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர்தான் ஸ்கார்ஸேஸி.
எப்படிப்பட்ட படங்களை இதுவரை ஸ்கார்ஸேஸி இயக்கியிருக்கிறார் என்று கவனித்தால், Biopic என்று சொல்லக்கூடிய, உண்மைச் சம்பவங்கள் கொண்ட படங்கள், வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய படங்கள்தான் அவரது திரைவாழ்க்கையில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இதுவரை ஒன்பது திரைப்படங்களை அப்படி இயக்கியிருக்கிறார் (Boxcar Bertha, Raging Bull, The Last Temptation of Christ, Goodfellas, Casino, Kundun, The Aviator, Hugo மற்றும் The Wolf of Wall Street).



இதற்கு அடுத்தபடியாக, Gangster Crime திரைப்படங்கள். இவற்றில், GoodFellas, Casino, Gangs of New York, Mean Streets, The Departed ஆகியன அடங்கும். கூடவே, தனிப்பட்ட மனிதர்களின் அடிமன உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் ஸ்கார்ஸேஸி பல படங்களை எடுத்துள்ளார். அவை: Taxi Driver, Cape Fear, Bringing out the Dead, Shutter Island போன்றவை. இவை தவிர, நகைச்சுவைப் படங்கள் (Alice doesn’t live here Anymore, The King of Comedy, After Hours) ஆகியவையும், Musical படங்களையும் (New York, New York) எடுத்திருக்கிறார்.
இயல்பின் எல்லைவரை
ஸ்கார்ஸேஸியின் படங்களில் வரும் கதாபாத்திரங்களைக் கவனித்தால், அவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவு உள்ளவர்களாக இருப்பார்கள். இந்தக் கதாபாத்திரங்களை அவர் விரிவாகக் காட்டும்போது, அவரது படங்களின் தொனியைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் பலமுறை எழுந்துள்ளன. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை முழுவதுமாக ஸ்கார்ஸேஸி காட்டும்போது, அவர்களின் போராட்டம், எழுச்சி, தோல்வி, மாற்றங்கள் போன்றவற்றை அவர் முடிந்தவரை இயல்பாக, உள்ளது உள்ளபடி காட்டுகிறார் என்பதைக் கவனித்தால் அந்தக் குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்பது புரிந்துவிடும்.
ஸ்கார்ஸேஸியின் படங்களில் வன்முறை அதீதமாகக் காண்பிக்கப்படும். ஆனால் காட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் மிக இயல்பாகவே தோன்றூம். உதாரணமாக, Goodfellas படத்தில், ஜோ பெஸ்சி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான டாம்மி என்பவன், ஒரு பாரில் பில்லி பேட்ஸ் என்ற மற்றொரு பிரபல ரவுடியை அடித்தே மயக்கமுறச் செய்யும் காட்சி வரும்.
அதே படத்தில், சிறிய வேடத்தில் நடித்த சாமுவேல் ஜாக்ஸனை டாம்மி கொல்லும் காட்சியும் அப்படிப்பட்டதே. இதன் பின் வந்த Casino படத்தின் இறுதியில், அதே ஜோ பெஸ்சி நடித்த நிக்கி என்ற கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் மாட்டை அடிப்பதுபோல் அடித்துவிட்டு, நகருக்கு வெளியே உயிரோடு புதைப்பார்கள். தற்காலத்தில் மிக அதிகமாகப் புழங்கும் இப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகளையும் என்றோ ஸ்கார்ஸேஸி செய்துகாட்டிவிட்டார். இவற்றையெல்லாம், இவை ரவுடிகளோடு சம்மந்தப்பட்ட காட்சிகள் என்பதால் இயல்பாக, அப்படியப்படியே காட்ட வேண்டும் என்பது அவரது முடிவு.
சமூகத்தைக் கண்காணிப்பவர்
தனது 14-வது வயதில் பாதிரியாராக மாறுவதற்கான படிப்பில் ஈடுபட்டார் ஸ்கார்ஸேஸி. ஆனால், அவரால் அதில் தொடர முடியவில்லை. பாதிரியாராக ஆசைப்பட்ட ஒரு நபரின் படங்களில் தெறிக்கும் வன்முறை என்பது சுவாரஸ்யமான முரண்தானே? ஸ்கார்ஸேஸியின் The Last Temptation of Christ படமும் அதனால்தான் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது என் யூகம்.
ஸ்கார்ஸேஸியின் இன்னொரு விசேஷம், அவரது படங்களில் அவர் ஷாட்களை அமைக்கும் முறை. அவரது படங்களின் ஷாட்கள் பெரும்பாலும் குறுகிய அளவிலேயே cut செய்யப்படும். இவற்றை ஸ்கார்ஸேஸியே எடிட்டிங் டேபிளில் முடிவு செய்வார். கூடவே, ஒரு ஷாட்டுக்குள் இடம்பெறும் விஷயங்கள் மிகவும் உயர்தரமாகவும் ஆடம்பரமாகவும் (rich feel) இருக்கும் கதாபாத்திரங்களின் பின்னணி இவரது பெரும்பாலான படங்களில் அப்படி இருப்பதால்.
தனது படங்களின் மூலம், தொடர்ச்சியாக, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை மிகக் கவனமாகக் கண்காணித்துப் படம் பிடித்தே வந்திருக்கிறார் ஸ்கார்ஸேஸி. இதற்கு அட்டகாசமான எடுத்துக்காட்டு Taxi Driver.
ஏன் ஸ்கார்ஸேஸியின் சில படங்கள் கிட்டத்தட்ட ஒரே போன்ற கருவைக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக Goodfellas, Casino & The Wolf of Wall Street? தனது திரை வாழ்க்கையை ஸ்கார்ஸேஸி தொடங்கிய காலத்தில் அவரிடமிருந்து பல பரிசோதனை முயற்சிகள் வெளிப்பட்டன. இளமையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதுமையில், நம்மிடம் இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும்போது, எதைச் செய்ய வேண்டும் என்று நன்றாக யோசித்தே முடிவுசெய்ய முடியும் என்பது அவரது கூற்று. ஆகவே, அவரது சில படங்கள் ஒரே போன்ற கருவைக் கொண்டிருப்பது என்பது, அந்தப் படங்களை உருவாக்க வேண்டும் என்று அவருக்குள் எழுந்த ஆழமான எண்ணத்தினால்தான் என்பதை அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
தற்போது கிட்டத்தட்ட 17 வருடங்களாக அவரது மனதில் இருந்த ஒரு கதையைப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ஸ்கார்ஸேஸி. படத்தின் பெயர் Silence. கதை, வழக்கப்படி பிரச்சினைக்குரியதுதான். பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், இரண்டு போர்த்துக்கீசியப் பாதிரியார்கள், ஜப்பானில் கிறிஸ்துவத்தைப் பரப்ப மேற்கொள்ளும் பயணம் விவரமாக வருகிறது. 1966-ல் ஜப்பானிய மொழியில், ஷுஸாக்கு எண்டோ (Shsaku End) என்பவரால் எழுதப்பட்ட நாவல் இது. 2016-ல் திரைக்கு வரும்.
- தொடர்புக்கு: [email protected]

நன்றி - த ஹிந்து

Monday, November 23, 2015

இவர்கள் விட்டுச்சென்ற பாதையில்...

  • ‘காகஸ் கி பூல்’
    ‘காகஸ் கி பூல்’
  • குரு தத் - ‘பியாஸா’
    குரு தத் - ‘பியாஸா’

தரமான ரசனையை நோக்கி மக்களைத் திருப்பும் வேலையைச் செய்துவரும் இந்திய ‘ஆஃப்பீட்’(off-beat) திரைப்படங்களைத் தந்த முன்னோடிகள் சிலரைப் பற்றி பார்த்தோம். இதுபோன்ற படங்களை எடுத்த குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோரைக் கடந்த வாரம் அறிந்துகொண்டீர்கள். இந்தப் பட்டியலில் குறிப்பிடத் தக்க மற்றொருவர் குரு தத்.


பெயரை மாற்றிக்கொண்ட கலைஞன்

முப்பத்தொன்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த குரு தத், இவர்களை விடச் சற்றே வித்தியாசமானவர்.பெங்களூருவில் பிறந்தவர். சிறுவயது முதலே கல்கத்தாவில் வளர்ந்தார். அறிவுஜீவியாகவே வாழ்ந்தவர். வசந்த குமார் சிவ்ஷங்கர் படுகோனே என்ற இயற்பெயருக்குப் பதில், குரு தத் என்ற பெயரை கல்கத்தாவில்தான் வைத்துக்கொண்டார். இதனாலேயே, இவர் ஒரு பெங்காலி என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

பூனாவின் பிரபாத் பில்ம் கம்பெனி என்ற பிரபல ஸ்டுடியோவில் மூன்று வருட ஒப்பந்த வேலையில் 1944-ல் சேர்ந்தார் குரு தத். அதற்கு முன்னர் டெலிஃபோன் ஆபரேட்டராக இருந்தார். இந்த ஸ்டுடியோவில் சேர்ந்த பின்னர்தான் திரைப்பட ஆர்வம் அவருக்குள் எழுந்தது. பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அங்கே தனது வாழ்நாள் நண்பராக மாறிய தேவ் ஆனந்தின் நவ்கேதன் நிறுவனத்தில் தனது முதல் படத்தை (பாஸி - 1951) இயக்கினார்.

மறுபடியும் அதே நிறுவனத்தில் தேவ் ஆனந்தை வைத்து அவர் இயக்கிய ‘ஜால்’ இரண்டாவது படமாக அமைந்தது. இதன்பின்னர் ‘பாஸ்’, ‘ஆர் பார்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55’ ஆகிய படங்களில் அவரே நாயகனாக நடித்து இயக்கினார். இப்படங்கள், இந்தித் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக குரு தத் இயக்கியவை. எனவே ஜனரஞ்சகப் படங்களாகவே இவை விளங்கின.


‘பியாஸா’

இந்தப் படங்களுக்குப் பின்னர் இவர் இயக்கிய ‘பியாஸா’என்ற திரைப்படம்தான் இன்றளவும் குரு தத்தின் பெயரை உலகெங்கும் கொண்டுசேர்த்தது. ஒரு ஏழைக் கவிஞன், அவனது கல்லூரிக் காதலி, இவனது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு இவனைக் காதலிக்கத் தொடங்கும் ஒரு பாலியல் தொழிலாளி, கல்லூரிக் காதலியின் கணவன் ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு, இயல்பான, உணர்வுபூர்வமான ஒரு கதையைப் படமாக்கியிருந்தார் குரு தத்.

ஒரு கட்டத்தில் அவரது கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் கருதப்படும். இவரைச் சுற்றியிருக்கும் அனைவரும் சுயநலவாதிகள் என்பதைப் புரிந்துகொண்டு, தன்னை விரும்பிய பாலியல் தொழிலாளிப் பெண்ணுடன் இறுதியில் கிளம்பும்படியான கதை. ஸாஹிர் லுத்யான்வி என்ற புகழ்பெற்ற கவிஞரின் கதையில் இருந்து எடுத்த சில அம்சங்கள் இப்படத்தின் இயல்புத்தன்மையை உறுதிப்படுத்தின. படம் மிகுந்த பிரபலமடைந்தது.

இப்படத்துக்குப் பின்னர் குரு தத்தின் ‘காகஸ் கி பூல்’ வெளியாகியது. அச்சமயத்தில் படுதோல்வி அடைந்தாலும், பின்னாட்களில் திரைப்பட ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்த படங்களில் அதுவும் ஒன்று. இந்தப் படத்தில் ஒரு திரைப்பட இயக்குநராக குரு தத் நடித்திருப்பார். மனைவியின் குடும்பத்தினர் இவரை இளப்பமாக நடத்துவார்கள்.

காரணம், அச்சமயத்தில் திரைப்பட இயக்குநர் என்பது சமூகத்தில் அந்தஸ்து குறைந்த வேலையில் இருப்பவர் என்று கருதப்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருக்கும் ஒரு நபர், எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்த ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி, அவள்மீது காதல் கொள்ளும் கதை. இதனால் ஏற்கெனவே திருமணமான அவரது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இவரது மகள் இறைஞ்ச, அப்பெண் மனம்மாறி, கதாநாயகி வாழ்க்கையைத் துறந்து ஒரு பள்ளியில் ஆசிரியை ஆகிவிடுகிறாள். அனைவரும் அவரை விட்டுப் பிரிந்த நிலையில் குடிக்கு அடிமையாகி, இறுதியில் இயக்குநர் நாற்காலியில் இவர் உயிரை விடுவதோடு படம் முடியும்.


திரையும் வாழ்வும்

நிஜ வாழ்விலும் இதேபோல் தனது முப்பத்தொன்பதாம் வயதில், மதுபானத்தோடு அளவுக்கதிகமாகத் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் 1964 அக்டோபர் பத்தாம் தேதி இரவில் குரு தத் இறந்துபோனார். இதற்கு முன்னரே இரண்டு முறைகள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்த நான்கு இயக்குநர்கள் இந்தியாவின் ஜனரஞ்சகத் திரைப்படங்களை வேறு ஒரு நிலைக்கு உயர்த்தினார்கள். அதுவரை ஆடல்கள், பாடல்கள், சண்டைகள் என்று இருந்த திரைக்களம், இவர்களது இயல்பான படங்களால் தாக்கம் பெற்று, திரை ரசிகர்களது ரசனையின் தரத்தை உயர்த்தியது. தமிழ்நாட்டில் கூட இவர்களின் பாதிப்பு நிலவியது. பாலசந்தர் படங்களில் ரிஷிகேஷ் முகர்ஜியின் பாதிப்பை சர்வநிச்சயமாக உணர முடியும். இவர்களின் படங்கள், நாம் மேலே பார்த்தபடி, சென்னையில் கூட நன்றாக ஓடியிருக்கின்றன.

இவர்கள் விட்டுச்சென்ற பாதையில்தான் இந்தியாவின் ஆஃப்பீட் திரைப்படங்கள் இன்றும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பாலு மகேந்திரா, மகேந்திரன், சுதீர் மிஷ்ரா, அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், விக்ரமாதித்ய மோட்வானே, ராஜ்குமார் குப்தா, சுஜோய் கோஷ், ரிதுபர்ணோ கோஷ், கிரீஷ் கர்நாட், ஷாஜி கருண், புத்ததேவ் தாஸ்குப்தா மற்றும் பல இயக்குநர்கள் தற்சமயம் இந்தியாவின் திரைப்படங்களை உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமே. இந்தப் பட்டியலில் மணிகண்டன், வெற்றிமாறன், பிரம்மா ஆகியோர் இணைந்துள்ளது, தமிழிலும் இனி அருமையான ஆஃப்பீட் மற்றும் கலைப்படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையை உறுதி செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்

thanks the hindu

Monday, September 28, 2015

தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்

  • ‘காட்ஃபாதர் II’ படத்தில் குரு லீ ஸ்ட்ராஸ்பெர்க்குடன் ராபர்ட் டி நீரோ

    ‘காட்ஃபாதர் II’ படத்தில் குரு லீ ஸ்ட்ராஸ்பெர்க்குடன் ராபர்ட் டி நீரோ
  • பொது நிகழ்வொன்றில் குருவும் சீடரும்

    பொது நிகழ்வொன்றில் குருவும் சீடரும்
சென்ற கட்டுரையில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய நாடகக் கலைஞரான ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த மெதட் ஆக்டிங் என்ற நடிப்பு உருவாகக் காரணமாக அமைந்த சூழல் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவெனில், தான் ஆராய்ந்து உருவாக்கிய இந்த நடிப்பு முறைமைக்கு ‘system’ என்றே முதலில் பெயரிட்டார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவர் இந்த முறையை உருவாக்கிப் பல ஆண்டுகள் கழித்துதான் ‘மெதட் ஆக்டிங்’ என்ற பதம் உருவாக்கப்பட்டது.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய இந்த முறைமையில் மூன்று செயல்முறைகள் முக்கியமானவை. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம். இவைதான் தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’குக்குக் காரணிகளாக விளங்குகின்றன.
1. ஒரு நடிகன், ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தப் பாத்திரத்தைப் பற்றிய பல கேள்விகளை மனதில் எழுப்பிக்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷனில் அந்தக் கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி வரும்போது, ‘அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?’ என்ற கேள்வி உதவும். இதுபோல், ‘எனக்கு இந்தச் சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்திருந்தால் எனது ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும்?’ என்பது இதன் இன்னொரு வடிவம். இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு உண்மையான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை ஒரு நடிகன் சிறப்பாக நடிக்க முடியும்.
2. குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த நாடகத்தில் செய்யக்கூடிய செயல்களை அலசி, ஏன் அப்படிப்பட்ட செயல்களை அது செய்கிறது என்று யோசித்தல். இப்படி யோசித்தால், அந்த நாடகத்தில் இருக்கும் சம்பவங்களுக்கு மிகவும் முன்னர், அந்தக் கதாபாத்திரத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து அது நடந்துகொண்ட முறைகளைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். உதாரணத்துக்கு, ஒரு போலீஸ்காரனைக் குத்திக் கொன்றுவிடுகிறாள் கதாநாயகி. ஏன் என்று யோசித்தால், அவளது வாழ்வில் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர்களால் இன்னல்களை அனுபவித்திருக்கிறாள் என்பது புரியும்.
அதாவது, அந்தக் குறிப்பிட்ட நாடகத்தில் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு கதாபாத்திரத்தின் குணங்களை விளக்குதல் (இதற்குப் பெயர்தான் தற்போது ‘கேரக்டர் ஸ்கெட்ச்’ என்று திரைக்கதைகளில் சொல்லப்படுகிறது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி விளக்கிவிட்டார்). இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய முடிவுக்கு வருதல், அந்தக் கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவும்.
3. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும், குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன என்பதை அந்த நடிகர் உணர வேண்டும். நாடகத்தை முழுவதும் பார்த்தால், கடைசியில் அந்தக் கதாபாத்திரத்தின் லட்சியத்தில் அது வெல்கிறதா, தோற்கிறதா என்பது புரிந்துவிடும் (கதாநாயகியை மணந்துகொள்ளுதல், கதாநாயகியோடு தற்கொலை செய்துகொள்ளுதல், கதாநாயகியின் தந்தையைக் கொல்லுதல், கதாநாயகியோடு ஊரை விட்டே ஓடுதல், இத்யாதி…).
ஆனால், அப்படித் தனது இறுதி லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் ஒவ்வொரு காட்சியாக அந்தக் கதாபாத்திரம் நடிக்கும்போது, அந்த ஒவ்வொரு காட்சியிலும் அதன் நோக்கம் என்ன என்பதை நடிகர்கள் உணர வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காட்சியின் நோக்கம், பல் தேய்க்க வேண்டும் என்றுகூட இருக்கலாம். ஸ்க்ரிப்டில் அது வெளிப்படையாக இருக்காது. ஆனால், அதனை அந்த நடிகர் உணர வேண்டும். அப்போதுதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
இப்படி உணர்வதற்கு, அந்தக் காட்சியை அந்த நடிகர் உடைத்து, சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். எப்படியென்றால், பல் தேய்க்க ப்ரஷ்ஷைத் தேடுவதாக, ப்ரஷ் கிடைத்தும் பேஸ்ட்டைத் தேடுவதாக, பேஸ்ட்டைத் தேடும்போது யாராவது வந்து கழுத்தறுப்பதாக, இப்படிப் பல காட்சிகள் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன நோக்கம் என்பதை அந்த நடிகர் தெரிந்துகொள்ள வேண்டும். ப்ரஷ் கிடைத்தவுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்தலாம்.
பேஸ்ட் கிடைத்ததும் உற்சாகம். கழுத்தறுப்பு கேஸ் வந்ததும் கோபம் - ஆனால் அதை வெளிப்படுத்த இயலாத இயலாமை - இப்படி. அதேபோல் வசனங்களைப் பேசுவதிலும், ஒவ்வொரு வரியிலும் ஒளிந்திருக்கும் குணங்களை வெளிப்படுத்தவும் அந்த நடிகர் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணம்: கழுத்தறுப்புடன் பேசும்போது நைச்சியமாக அவரை வெளியேற வைத்தல் - அதற்கேற்ற முகபாவம் - இப்படி.
இப்படியாக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியே. உண்மையாகவே இலக்கணம் எழுதி அதைத் தொகுத்து வைத்தவர் இவர். ஆனால், இவர் இப்படி இலக்கணம் எழுதிய 1900-களில் மெதட் ஆக்டிங் என்ற விஷயமே இல்லை. இவரது குறிப்புகளிலிருந்து வளர்ந்து, பின்னாட்களில் பலராலும் பின்பற்றப்பட்டு, மெருகூட்டிச் செய்யப்பட்ட விஷயமே இந்த மெதட் ஆக்டிங். எனவே, அதற்கு முழுமுதல் காரணம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்றுதான் சொல்லியாக வேண்டும்.
மெதட் ஆக்டிங் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கு முன்னர், இன்னும் சில சுவையான தகவல்களையும் கவனிப்போம்.
‘காட்ஃபாதர்- 2’ திரைப்படத்தில் நடித்ததற்காக, ‘சிறந்த துணை நடிகர்’ பிரிவில் இருவர் பரிந்துரைக்கப்பட்டனர். அந்த இருவரில் ஒருவர் குரு. இன்னொருவர் அந்த குருவின் சிஷ்யர். ஒரே சமயத்தில் ஒரே படத்துக்காக நாமினேட் செய்யப்பட்ட இந்த குரு-சிஷ்ய ஜோடியில் பரிசை இறுதியில் வென்றது குருவல்ல. சிஷ்யரே குருவையும் விஞ்சி நடித்தமைக்காக சிறந்த துணை நடிகர் பரிசை வென்றார்.
அந்த சிஷ்யரின் பெயர் - ராபர்ட் டி நீரோ. அவரது குருநாதர், டி நீரோவுக்கு மட்டுமல்லாமல் அல் பசீனோ, மர்லின் மன்ரோ, ஜேம்ஸ் டீன், டஸ்டின் ஹாஃப்மேன், பால் ந்யூமேன் போன்ற ஒரு டஜன் நடிகர்களுக்கு குருவாக விளங்கினார். ‘ஹாலிவுட்டில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்ற புகழுக்குச் சொந்தக்காரர். மர்லின் மன்றோ இறந்த சமயத்தில், அவரது உயிலின்படி அவரது சொத்துக்களில் 75 சதவீதத்தை இந்த நபருக்கு எழுதி வைத்தார். காரணம் - ‘அவர் எனக்கு ஒரு தந்தையைப் போல. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் புகழின் உச்சியை அடைய முழுமுதல் காரணம் இவர்தான்’ என்று சொல்லியிருக்கிறார் மன்றோ.
அவர்தான் லீ ஸ்ட்ராஸ்பெர்க். எப்படி ரஷ்யாவில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிகர்களை அவதானித்து அவரது சிஸ்டத்தை உருவாக்கினாரோ, அப்படி ஸ்ட்ராஸ்பெர்க்குக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஒரு கிரியா ஊக்கியாக இருந்தார் என்று அறிகிறோம். ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த லீ ஸ்ட்ராஸ்பெர்கை பாதித்த பின்னணிக் கதை பரபரப்பான ஒரு திரைக்கதை போன்றது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடர்புக்கு [email protected]

நன்றி-தஹிந்து

Wednesday, August 19, 2015

சினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர்!-கருந்தேள் ராஜேஷ்

  • கிரிம்ஸன் பீக் படக் காட்சிகள்
    கிரிம்ஸன் பீக் படக் காட்சிகள்
உண்மையில் கியர்மோ டெல் டோரோவை ‘நல்ல இயக்குநர்' என்ற வார்த்தைகளில் மட்டுமே அடக்கிவிடமுடியாது. ஃபேரி டேல்ஸ் எனப்படும் தேவதைக் கதைகள், பழங்கால இருண்ட சக்திகள், சாத்தான்கள், சுரங்கப் பாதைகள், பூச்சிகள் ஆகியவை கியர்மோ டெல் டோரோவுக்கு (Guillermo Del Toro) மிகவும் பிடிக்கும். எனவே, அவரது எல்லாப் படங்களிலும் இவற்றின் தாக்கத்தைக் காண முடியும்.
‘த டெவில்ஸ் பேக்போன்'(The Devil's Backbone), ‘பான்ஸ் லேப்ரிந்த்'(Pan's Labyrinth) ஆகிய இரண்டு அருமையான படங்களைக் கொடுத்திருப்பவர் இவர். இவற்றோடு, ‘ஹெல்பாய்' என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து இரண்டு அட்டகாசமான படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். மிகச் சமீபத்தில் ‘பஸிஃபிக் ரிம்' (Pacific Rim) படத்தில் ஏலியன்களோடு போராடும் பிரம்மாண்ட இயந்திரங்களை உருவாக்கியவர்.
ஆனால் இவையும் கியர்மோ டெல் டோரோவைப் பற்றிய முழுமையான விவரங்களை நமக்கு அளித்துவிடாது. ‘The Strain' என்ற பெயரில், டிராகுலாவைப் போன்ற பண்டைய கால ரத்தக் காட்டேரி ஒன்று தற்காலத்தில் அமெரிக்காவில் நாசம் விளைவிப்பதைப் பற்றி மூன்று பாகங்களில் நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அது இப்போது தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது (முதல் சீஸன் முடிந்து இப்போது இரண்டாவது சீஸன் வந்துகொண்டிருக்கிறது).
இத்தோடு, பீட்டர் ஜாக்ஸன் இயக்கிய ‘த ஹாபிட்' (The Hobbit) படங்களில் உண்மையில் இவர்தான் ஆரம்பத்தில் இயக்குநர். ஆனால் ஸ்டுடியோ மூலமான தாமதத்தினால் அதிலிருந்து விலகிவிட்டார். இருந்தும் அப்படங்களில் கியர்மோவின் பெயர், திரைக்கதையில் வருவதைக் காண முடியும். சில வீடியோ கேம்களின் உருவாக்கத்திலும் பணிபுரிந்திருக்கிறார். கூடவே, ஒருசில நல்ல ஸ்பானிஷ் திகில் படங்களையும் தயாரித்திருக்கிறார் (The Orphanage, Mama போன்றவை). இவற்றுக்கு சம்பந்தமே இல்லாத ‘குங்க்ஃபூ பாண்டா' படத்துக்கும் இவர்தான் தயாரிப்பாளர்.
கியர்மோவின் படங்களில், இப்போதுவரை கொண்டாடப்படும் ஒரு அருமையான உலகப்படமான ‘பான்ஸ் லேப்ரிந்த்'தை எடுத்துக்கொண்டால், அதன் உணர்வுபூர்வமான கதையோடு, அக்கதையில் இடம்பெறும் ஜந்துக்கள், அவற்றின் ஒப்பனை, அவற்றின் பின்னணி, அவற்றின்மூலம் சொல்லப்படும் கதை ஆகியவற்றில் மிகச் சிறிய துணுக்குகள் கூட அருமையான வேலைப்பாடுகளால் நிரம்பி, அவற்றின் அழகியல் நம்மைக் கவர்வதை உணர முடியும்.
இதுவேதான் அவரது பிற படங்களிலும் இருக்கும். ரத்தக்காட்டேரியாக இருந்தாலும் (The Strain), தேவதைகளாக இருந்தாலும் (Hellboy both parts), வினோதமான ஜந்துக்களாக இருந்தாலும் (அவரது எல்லாப் படங்களுமே), ஒரே ஒரு காட்சியைப் பார்த்தால்கூட அது கியர்மோ டெல் டோரோவின் படம்தான் என்பதை எளிதில் சொல்லிவிட முடியும் என்பதே அவரது திறமைக்குச் சான்று. தனது படங்களில் இடம்பெறும் இப்படிப்பட்ட வித்தியாசமான ஜந்துக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமான தனித்துவத்தைப் பெற்றிருக்கும்படி பார்த்துக்கொள்வது கியர்மோவின் ஸ்டைல். ஹெல்பாயின் இரண்டாம் பாகத்தில் வரும் மிகப் பெரிய மரங்களின் தேவதை ஒரு உதாரணம்.
ஒரு திகில் படத்தை அழகியல் உணர்வுகளோடு எப்படி எடுப்பது என்பதற்குக் கியர்மோ டெல் டோரோவின் படங்கள்தான் உதாரணம். அவரது படங்களில் இடம்பெறும் கொடிய சக்திகளுடன் அவற்றை லேசாக ரசிக்கவும் வைக்கும் அம்சம் ஒன்றும் இருக்கும். அவற்றுக்கு உணர்வுகளும் இருக்கும். இப்படிப்பட்ட தேவதைகள் மற்றும் ராட்சத ஜந்துக்களை கியர்மோ படைப்பதற்கு, சிறு வயதில் அவருக்கு அவற்றின் மீது இருந்த விருப்பமே காரணம். இப்படிப்பட்ட வித்தியாசமான ஜந்துக்களை அப்போதிலிருந்து இப்போதுவரை கியர்மோ காதலிக்கிறார்.
அவற்றின்மீது அவருக்கு அளப்பரிய விருப்பம் இருக்கிறது. இதனாலேயே அவரது படங்களுக்கு ஒருவித வெறித்தனமான 'கல்ட்' ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மிகச் சில இயக்குநர்களுக்கே இப்படிப்பட்ட ஒரு ‘கல்ட்’ அந்தஸ்து இருக்கும் (பழைய ஜார்ஜ் லூகாஸ், க்வெண்டின் டாரண்டினோ, கய் ரிட்சீ, ஜான் கார்ப்பெண்டர், ஸாம் ரெய்மி, கெவின் ஸ்மித் ஆகியவர்கள் ‘கல்ட்' என்ற பதத்துக்குச் சரியான உதாரணங்கள்).
தற்போது ‘கிரிம்ஸன் பீக்' (Crimson Peak) என்ற, 1901-ல் நடைபெறும் கதையைக் கொண்ட ஒரு திகில் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் கியர்மோ. இதில் பண்டைய கால வீடு ஒன்று இடம்பெறுகிறது. கியர்மோவைப் பொறுத்தவரை, அந்த வீடும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வகிக்கிறது. மனிதர்களைப் போல், செடிகொடிகளைப் போல், இந்த வீடும் மெல்ல மெல்ல அழுகுகிறது. அதன் மேல்பாகம் முற்றிலும் அழுகி, கீழ்பாகம் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும்படியான வீடு அது. உயிரோடு இருக்கும், சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்துவாக அந்த வீட்டைக் காட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் கியர்மோ.
‘வழக்கமான திகில் படங்கள் இப்போதெல்லாம் மிக வேகமான எடிட்டிங்குடன், ரத்தம், கோரம் ஆகியவற்றில் நாம் பார்த்துப் பார்த்து சலித்துப்போன காட்சிகளுடனேயே எடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றைப் போல் இல்லாமல், சிறு வயதில் நாம் பார்த்து ரசித்த திகில் படங்களைப் போல ஒன்றை எடுக்கவேண்டும் என்பதாலேயே கிரிம்ஸன் பீக் படத்தை மெதுவானதாக, படிப்படியாக திகில் அம்சங்கள் வெளிப்படும்படி எடுத்திருக்கிறேன்.
இப்படத்தில் ஆடியன்ஸைப் பயத்தின் உச்சத்தில் விரட்டும் சில காட்சிகள் உள்ளன. ஆனால், அவை பழைய நாவல் ஒன்றைப் படிக்கும்போது எப்படி சிறுகச்சிறுக பய உணர்வு நம்மை ஆட்கொள்ளுமோ அப்படி இருக்கும்' என்று இப்படத்தைப் பற்றிக் கியர்மோ சொல்லியிருக்கிறார். கிரிம்ஸன் பீக் படத்தில் க்ராஃபிக்ஸுக்கு முக்கியத்துவம் குறைவு. இதில் வரும் பாழடைந்த மாளிகையை முற்றிலும் ஒரு செட்டாக உருவாக்கியே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் கியர்மோ. அந்த மாளிகையை நிர்மாணிக்க அவருக்கு ஆறு மாதங்கள் ஆயின.
கிரிம்ஸன் பீக் படத்தின் விசேஷக் காட்சியைப் பார்த்த திகில் கதைகளின் மன்னன் ஸ்டீஃபன் கிங், இப்படத்தை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரையும் புகழாதவர் ஸ்டீஃபன் கிங் என்பதை உணர்ந்தால் அவரது வார்த்தைகளின் முக்கியத்துவம் விளங்கும். அக்டோபரில் வெளியாகும் க்ரிம்ஸன் பீக் படத்துக்காக கியர்மோவின் வெறித்தனமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்துக்குப் பின்னர் 'பஸிஃபிக் ரிம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கியர்மோ அறிவித்திருக்கிறார். கூடவே The Strain தொலைக்காட்சித் தொடரின் மூன்றாவது சீஸனுக்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இவற்றின்மூலம் தனது விசேஷமான, அழகும் கோரமும் ஒருங்கே நிரம்பிய ஜந்துக்களுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்க கியர்மோ தயார். இத்தனை விதமான வித்தியாசமான, உணர்வுகள் நிரம்பிய ஜந்துக்களை கியர்மோவின் படங்களைத் தவிர வேறெங்கும் பார்க்க இயலாது என்பதால் திகில் ரசிகர்கள் அவற்றைத் தவறவிட வேண்டாம்.
நுழைவாயில்
ஹாலிவுட்டில், தான் உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கும் சாத்தான்கள், காட்டேரிகள், பூதங்கள், பிசாசுகள், மர்மமான ஜந்துக்கள் ஆகியவற்றால் பிரம்மாண்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவைத்திருக்கும் இயக்குநர் ஒருவர் இருக்கிறார். இத்தனை விதமான ஜந்துக்களுக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையையும் உருவாக்கி, அதனா லேயே ரசிகர்களின் மனதையும் கவர்ந்த அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் இவ்வகைப் படங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் மாறக்கூடும்.
கியர்மோ டெல் டோரோ


நன்றி - த இந்து