Showing posts with label பாரதிராஜா. Show all posts
Showing posts with label பாரதிராஜா. Show all posts

Tuesday, November 18, 2014

என்னைத் தூங்கவிடாத இருவர் -பாரதிராஜா


படைப்பாளிகளையும், குறும்பட இயக்குநர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற திறமைசாலிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் என்ற அறிவிப்புடன், 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிறுவனத்தின் தொடக்க விழா நவம்பர் 10-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். நடிகர் சித்தார்த், விஜய் சேதுபதி, சிம்ஹா, இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
விழாவினை தொடக்கி வைத்து இயக்குநர் பாரதிராஜா பேசியது:
"'ஜிகர்தண்டா' படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை எல்லாம் பார்த்தபோது, என்ன இது இவ்வளவு வன்முறை படமா இருக்கிறதே என்று நினைத்தேன். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்துவிட்டதே என்று கவலைபட்டேன். சில நாட்களுக்கு பிறகு 'ஜிகர்தண்டா' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரட்டி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
'ஜிகர்தண்டா' பார்த்துவிட்டு எனக்கு இரண்டு நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இதற்கு முன்பு இதேபோன்று மணி ரத்னம் இயக்கிய 'நாயகன்' பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் புதிய சிந்தனைகளோடு வருகிறார்கள். சினிமா தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் வடுக்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். நான் எந்த ஒரு நடிகையும் நடிச்சு காட்டுங்க என்று கூறி தேர்வுசெய்ய மாட்டேன். ஒருத்தரை பார்ப்பேன், பிடித்திருந்தால் வாப்பா என்று அழைத்து வந்து நடிக்க வைப்பேன். நான் காட்டுல பூத்த பூ மாதிரி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் பிருந்தாவனம் கார்டனில் பூத்த பூ போல இருக்கிறார்கள். நன்றாக செதுக்கிறார்கள்.
சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு தெரியாத ஒன்று சினிமா வியாபாரம்தான். முதல் இரண்டு பட ஹிட் கொடுத்துவிட்டு, மூன்றாவது படம் ஒப்பந்தமானபோது சம்பளத்தைத் தயங்கித் தயங்கி 15 ஆயிரம் என்று கேட்டேன். ஆனால், என்னுடைய உதவியாளர் பாக்யராஜ்தான் சண்டைப் போடு 30 ஆயிரம் வாங்கி கொடுத்தார். எனக்கு சினிமா மட்டுமே எடுக்க தெரியும். வியாபாரம் தெரியாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்று கார்த்திக் சுப்புராஜ் தொடங்கியிருக்கும் இந்நிறுவனம் சிறப்பாக வர வேண்டும்" என்று வாழ்த்தினார்.
ரஜினி இடத்தை உடனே அடைய நினைப்பது தப்பு: எஸ்.ஜே.சூர்யா
இந்த விழாவில் கலந்து கொண்டு எஸ்.ஜே சூர்யா பேசியதாவது, "நாம தியேட்டர் சைடு தான் ரொம்ப வீக்கா இருக்கோம். அந்த உண்மையை ஒப்புக்கிட்டுத்தான் ஆகணும். இங்க பெரிய ஹீரோக்களோட படங்கள் தவிர மற்ற ஹீரோக்களோட படங்களுக்கு அவ்வளவா தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது. அது உண்மைதான். ஆனா அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.
இப்போ ரஜினி படம் ரிலீசாகுதுன்னா அதே அளவு தியேட்டர்கள் என்னோட படத்துக்கும் கெடைக்கணும்னு ஆசைப்படுறது தப்பு. ஒரு சாதாரணம் பஸ் கண்டக்டரா இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கார்னா அதுக்கு அவரோட உழைப்பு ஒரு காரணம்.
பல வருடங்கள் உழைப்பு அதுக்கு பின்னாடி இருக்கு. அப்படிப்பட்டவர் இடத்துக்கு சினிமாவுக்குள்ள வந்த உடனே வர ஆசைப்படுறது தப்பு. அவரோட படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரியே என்னோட படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கணும்னு ஆசைப்படுறதும் தப்பு" என்று கூறினார். 



நன்றி - த இந்து

Tuesday, April 16, 2013

அன்னக் கொடியும் கொடி வீரனும் ஹீரோ பேட்டி


சினிமா

பாரதிராஜாவை காப்பி அடித்தேன்!

மகிமைராஜன்

பாரதிராஜாவின், ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்படத்தில் கொடிவீரனாக ஆடு மேய்க்கும் ஹீரோ லக்ஷ்மண், எஸ்.ஆர்.எம். யுனிவர்சிடியின் எம்.பி.. ஸ்டூடண்ட். கூடவே தமிழக அளவில் கிரிக்கெட் ஆடிய பேட்ஸ்மேன். கொடி வீரனாக கோவணம் கட்டிக் கொண்டு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?" - கேட்டால், வேர்ல்ட் கப் மேட்ச்ல பாகிஸ்தானுக்கு எதிரா சச்சின் அடிச்ச செஞ்சுரி போல அத்தனை த்ரில்" என்று சிலிர்க்கிறார் லக்ஷ்மண்.



எப்படி வந்தது சினிமா வாய்ப்பு?

பாரதிராஜாவுக்கும் எங்க அப்பாவுக்கும் முப்பது வருட ஃப்ரெண்ட்ஷிப். பாரதிராஜா எங்க ஊர்ல நாடகம் போடும்போதெல்லாம் எங்க அப்பா தான் முதல் பார்வையாளர். அப்புறம் பிஸினஸ்ல தீவிரமாகிட்டார். எங்க தாத்தா நிலக்கோட்டையில தியேட்டர் வெச்சுருந்தார்.


 அங்ககூட பாரதிராஜா நாடகம் நடத்திருக்கிறார். ஆனா, இதுபோல எந்த அனுபவமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தவுடன் நடிகனாக்கிட்டார். நான் தியேட்டருக்குப் போய் சினிமா பாக்கறதே கம்மி. அப்படி இருந்த என்னை நடிக்க வர்றீயான்னு கேட்டு லீட் ரோல் கொடுத்ததுல ஆரம்பத்துல திணறித் தான் போயிட்டேன்."

முதல் நாள் ஷூட்டிங்?

ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனுக்கு ஸ்கீரின் டெஸ்ட் பண்ணும்போது எல்லாரும் டச்சப் பண்ணிட்டு வந்தாங்க நான் கேஷுவலாதான் போனேன். என்ன நினச்சார்னு தெரியலை என்னைப் பார்த்து யூ ஆர் செலக்டட்னு சொல்லிட்டார். அப்புறம் கேமரா முன்னாடி நடிக்கறதுலையும் திணறினேன். பாரதிராஜா எப்படி நடிச்சுக் காண்பிக்கிறாரோ அப்படியே அவரைப் பார்த்து காப்பி அடிச்சேன். சீன் ஓகே ஆயிடுச்சு.


 அவர் என்னை செட்ல பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையா சிரிப்பார். நடிகனா என்னை அங்கீகரிச்சுட்டார் என்பதற்கு அடையாளம் தான் அந்தச் சிரிப்பு. பதினாறு வயதினிலே கமலுக்குப் பிறகு எனக்குத்தான் பாரதிராஜா கோவணம் கட்டிவிட்டார்."

கிரிக்கெட் கனவு?

கிரிக்கெட் கிரிக்கெட்னு ஒரு காலத்துல பதறித் திரிஞ்சேன். பாலாஜி, அஸ்வின் எல்லோரும் எனக்கு க்ளோஸ். நடிகர் விஷ்ணுகூட கிரிக்கெட்லேயும் சினிமாவுலேயும் எனக்கு சீனியர். தமிழக அளவுல எல்லா மேட்ச்லையும் ஆடிட்டேன். ஆனா, நடிக்கணும் வந்துட்டேன். கிரிக்கெட்ல டெடிகேஷன் முக்கியம். நடிச்சுட்டே விளையாட முடியாது. அதனால கிரிக்கெட் கனவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. சினிமாவுல ஆல்ரவுண்டரா வர உழைக்க ஆரம்பிச்சுட்டேன்."



ஹீரோயின் கார்த்திகா?

இவங்களை நினைச்சுத்தான் ரொம்ப பயந்தேன். மும்பைப் பொண்ணு. பெரிய ஹிட் படத்துல நடிச்ச ஹீரோயின். தமிழகத்தை மயக்கி வைத்திருந்த நடிகை ராதாவின் பொண்ணு... இதெல்லாம் என்னைப் பயமுறுத்துச்சு. ஆனா, பழகறதுல கார்த்திகா பக்கத்துவீட்டுப் பொண்ணு போல அத்தனை பாந்தம். என் ஆரம்பக் கட்டக் கூச்சங்களை அசால்டா சமாளிச்சாங்க. கார்த்திகாவுக்கும் எனக்கும்தான் அதிக சீன். பல சமயங்கள்ல நான் சொதப்பியிருக்கேன் அப்போ கார்த்திகா காண்பிச்ச பொறுமை அபாரமானது."


அடுத்து?

பாண்டிராஜ், சமுத்திரக் கனி... என்று பிரபல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்காங்க. எதுவும் முடிவு பண்ணலை. பட் இவங்க ரெண்டு பேரையும் மிஸ் பண்ணக்கூடாது. ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்வரட்டும். பிறகு அதிகாரபூர்வமாய்ச் சொல்றேன்" - சிக்கிக்காமல் சிரிக்கிறார் லக்ஷ்மண்.


நன்றி - கல்கி 

Sunday, February 24, 2013

பாரதிராஜா, இளையராஜா மீண்டும் மோதல் @ அன்னக்கொடியும் கொடிவீரனும்"

பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள்.

காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

"பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.


 நன்றி - தினமலர்



மதுரையில் இருந்து கிளம்பி வந்து பல்வேறு போராட்டங்களைக் கடந்து தங்களது திறமையால் தமிழ் திரையுலகத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி உட்கார்ந்தவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். ஒருவர் இயக்கத்திலும், மற்றொருவர் இசையமைப்பிலும் நிகரற்று விளங்குகிறார்கள்.


இருவரும் பால்ய கால நண்பர்கள் என்பதால் அடிக்கடி ஊடலும், கூடலும் இருக்கும் என்பது இயற்கை.


ஆனால் தற்போது இருவருக்குள்ளும் இனி சேரவே முடியாது என்ற அளவுக்கு ஏதோ பிரச்னை வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



சமீபத்தில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீடு தங்களது சொந்த மண்ணான மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட இளையராஜாவை, பாரதிராஜா ஒருமையில் அழைத்துப் பேசியதும், சில அறிவுரைகள் வழங்கியதும், இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனது. சொந்த மண்ணில் தன்னைப் பற்றி பாரதிராஜா இவ்வாறு கூறியது இளையராஜாவின் மனதை பாதித்தது.



இதுதான் இருவருக்குள்ளும் அவ்வப்போது உண்டான சண்டை, வெளி உலகுக்குத் தெரிய வரக் காரணமாகிவிட்டதாம்.


தங்களது திறமையால் தமிழ் உலகில் நிகரற்று விளங்கும் இருவரும் நட்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


thanx - dinamani

Thursday, December 20, 2012

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://timesofindia.indiatimes.com/photo/14210217.cms 

விகடன் மேடை - வைரமுத்து

மீரா முகம்மது, தோப்புத்துறை.


''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''


''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு விகடன் மேடை - வைரமுத்து

செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.


6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.


6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''


சி.வந்தனா, குமுளி.


''அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?''


''அது ஒரு துணுக்கு.

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாரா கிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.


தூக்கில் தொங்கலாம்; ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்..? விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்..? கிணற்றில் குதிக் கலாம்; ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந் தால்..? தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்துபோனால்..?


தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:

''அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?''


உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது!''


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.


''சென்னை வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?''


''நான் காதலித்த மனிதர்களின் கடைசித் தருணங்கள்.


ஒரு குழந்தை நிலாவைப் பார்த்துக் கை நீட்டுவதுபோல, என் பள்ளி நாட்களில் இருந்து யாரையெல்லாம் பார்க்கத் துடித்துப் பரவசப் பட்டேனோ, அந்த மகா கலைஞர்களின் இறுதி அஞ்சலியை இறுதி வரை இருந்து செலுத்திய நிகழ்வுகள்தாம் மறக்க முடியாத சம்பவங்கள்.


கண்ணம்மாப் பேட்டை.


எரிமேடையில் கிடத்தப்பட்ட உடல் எருக் களால் மூடப்படுகிறது. கொள்ளியிட்ட பிறகு, எல்லோரும் போய்விட்டார்கள். தங்க உடல் தின்னத் தாவுகிறது தீ. நானும் நண்பன் அறிவுமதியும் மட்டும் இடுகாட்டில் எஞ்சி நிற்கிறோம். நான் ஓடிப்போய் சிதையில் விழுந்து எருவைத் தள்ளி மீண்டும் முகம் பார்க்க முனைகிறேன். கை பிடித்து இழுத்த நண்பனோடு எரியும் வரை இருந்து கண்ணீரோடு விடைபெறுகிறேன். அது என் காதல் கவிஞன் கண்ணதாசனுக்கு நான் செலுத்திய அஞ்சலி.


மெரினா கடற்கரை.


தங்கத்தைப் பூட்டிக்கொண்டு குழிக்குள் இறங்கு கிறது சந்தனப் பேழை. அரசியல், கலை உலக மனிதர் கள் சுற்றி நிற்கிறார்கள். ஓரத்தில் கவலை கட்டிய கண்களோடு நின்ற என்னை, 'வைரமுத்து வா; நீயும் மண்ணுத் தள்ளு’ என்று கை நீட்டி அழைக்கிறார் அந்நாள் அமைச்சர் க.ராசாராம். குனிந்து புறங்கையில் மணல் தள்ளுகிறேன். சந்தனப் பேழை மேல் சரசரவென்று சரிகிறது மணல். நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எம்.ஜி.ஆருக்கு நான் மண் தள்ளுவேனென்று.


பெசன்ட் நகர் மயானம்.


மின் மயான மேடையருகே பிரபு - சத்யராஜ் - நான் மூவர் மட்டும். பட்டு வேட்டியில் சுற்றப்பட்டிருக்கிறது புவியாண்ட கலைஞனின் பூத உடல். விசைப்பலகையில் தூக்கிவைக்கிறோம். கடைசியாக முகம் பார்த்துக் கண் மூடிக்கொள்கிறோம். செத்தும் சாகாத ஒரு ஜீவசரித்திரத்தை அடுப்புக்குள் விசிறியடிக்கிறது விசைப்பலகை. நடிகர் திலகம் சிவாஜியின் கடைசிக் கணங்களில் கனத்த மனத்தோடு நான்.


அந்த மூன்று மகா கலைஞர்களுக்கும் பிள்ளைக்கடன் செய்தது எனக்கு வரமா? வலியா?


நினைக்கும்போது எல்லாம் வலித்து வலித்து அடங்குகிறது இற்றுப்போன இருதயம்!''


ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.


''இலக்கியத்தில் நகைச்சுவை உண்டா?''


''உண்டு. ஒன்று சொல்கிறேன்.


சங்க இலக்கியத்துக்கு எழுத்தெண்ணி உரையெழுதியவர் அவ்வை துரைசாமிப் பிள்ளை. 'உரைவேந்தர்’ என்று ஓங்கு புகழ் பெற்றவர். ஒரே இடத்தில் உட் கார்ந்து எழுதி எழுதி அவருக்கு மூல நோய் கண்டுவிட்டது. அந்தத் துயரத்தை அவர் மைந்தர் அவ்வை நடராசன் எனக்கு நயமாகச் சொன்னார்:


'என்ன பண்றது கவிஞர்? 'உரை’ எழுதியே எங்க அப்பாவுக்கு 'மூலம்’ வந்துட்டது’.


நினைக்கும்போது எல்லாம் என்னைக் குலுக்கும் நகைச்சுவை இது!''


கி.ராமகிருஷ்ணன், சென்னை-24 


''உண்மையில் யார் உயர்ந்த மனிதன்?''


''ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

சமூக மனிதன்; குடும்ப மனிதன்; தனி மனிதன்.

இதில் சமூக மனிதன் என்பவன் மகா நடிகன்; நடித்து வெல்பவன்.

குடும்ப மனிதன் என்பவன் பாதி நடிகன்; நடித்துத் தோற்கிறவன்.

தனி மனிதன் என்பவன்தான் மெய்ம் மனிதன். ஒப்பனை இல்லாமல் அவன் அவனாகவே இருப்பவன்.

மூன்று பேருக்கும் மதிப்பெண் இட்டுப் பார்க்க வேண்டும். சமூக மனிதனையும் குடும்ப மனிதனையும்விட ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிற தனி மனிதன் எவனோ அவனே உயர்ந்த மனிதன்!''


ரஜினி முருகன், வேலூர்.



''உங்களை மன்றாடிக் கேட்கிறேன்... 'கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்?''


''உங்கள் கேள்வியை ரஜினியின் செவி களுக்குக் கொண்டுசென்று அவர் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.


ஊடகத்தில் வெளியிடப்படும் 'கோச்சடை யானின்’ முதல் பாடல் இதுதான்.
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:



தீபிகா:  செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்...
இதயம்                                                       
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
 நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
 இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
 சிறுகோட்டுப் பெரும்பழம்   
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே



 ரஜினி: பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
 வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
அப்பப்பா!



இசையோடு கேட்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்!''



ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


''திரையுலகில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?''



''தேடிக்கொண்டேயிருக்கிறேன் - 'சின்ன சின்ன’ ஆசை பாடிய மின்மினியை!
சூரியனைப் பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி; இந்தியாவைச் சுழற்றியடித்த பாட்டுக்குச் சொந்தக்காரி.


என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? இதுவரைக் கும் தகவல் இல்லை.


'அன்புள்ள மின்மினி!


உன் தங்கக் குரலால்தான் என் தமிழ் கேட்டது உலகம். உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் இனிய அன்பளிப்பாக என் சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உனக்கு ஒதுக்கிவைத்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்து சகோதரி!''


நிறைவு செய்கிறேன்;

நன்றி.






டிஸ்கி -1.இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டிhttp://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html


2. நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html3. 

3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

4 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html

 


Thursday, December 13, 2012

என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

விகடன் மேடை

வாசகர் கேள்விகள்... கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்!
படம்: ரவிவர்மன்
ஜி.தியாகு, திருத்துறைப்பூண்டி.


''எம்.ஜி.ஆரோடு உங்களுக்கு நெருக்கம் இருந்ததா?'' 



''1984 ஒரு 'முகூர்த்த’ மாதத்தின் அதிகாலை 4.30 மணி.


பாரதிராஜாவின் புதுமனை புகுவிழா.


கட்டிய பட்டு வேட்டியோடு கட்டிய பசுமாட்டை அவர் வீட்டுக்குள் இழுத்துச்செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களால் பரபரப்பானது தெரு.
யாரும் எதிர்பார்க்கவில்லை.


தன் துணைவியார் வி.என்.ஜானகியோடு வெள்ளைத் தங்கமாய் வீட்டுக்குள் நுழைகிறார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


பதற்றத்தில் புது வீடு படபடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை வீட்டில்.


கூடத்தில் முதலமைச்சரை அமர்த்திவிட்டு, பசுமாட்டை இழுத்துக்கொண்டு பால் கொண்டுவர ஓடுகிறார்கள் பாரதிராஜா தம்பதி. என் காதுக்குள் சொல்லிவிட்டுப் போகிறார் பாரதிராஜா:


'எம்.ஜி.ஆருக்குக் கம்பெனி கொடுங்கள்.’

அப்போது எம்.ஜி.ஆருக்கு என்னை யாரென்றே தெரியாது. என் பெயர் வைரமுத்து என்று சொல்லிக்கொள்ளவும் தயக்கமெனக்கு. சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்; ஜானகி அம்மையார் தனி நாற்காலியில்.


என் காதலுக்குரிய கதாநாயகனை அன்றுதான் அணுக்கத்தில் பார்க்கிறேன்.
இந்த ரோஜா விரல்களா வாள் சுழற்றியவை? மந்திரி குமாரியின் வீரமோகனை - குலேபகாவலியின் தாசனை - மகாதேவியின் வல்லபனை - மதுரை வீரனின் வீரனை - சக்கரவர்த்தித் திருமகளின் உதய சூரியனை - நாடோடி மன்னனின் வீராங்கனை, மார்த்தாண்டனை - ஆயிரத்தில் ஒருவனின் மணிமாறனை அவருக்குள் தேடித் தேடி ரசித்ததில் ஏழு நிமிடங்கள் கழிந்துபோயின.


என்னோடு அவரும் பேசவில்லை;


அவரோடு நானும் பேசவில்லை. அதற்குள் பால் வந்துவிட்டது; எழுந்துகொண்டேன்.

பிறகு, சில விருது மேடைகளிலும், ஒரு படத் தொடக்க விழாவிலும், ஒரு படக் காட்சியிலும் அவரைச் சந்தித்தேன்.

இவ்வளவுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமான அணுக்கம்!''


பா.செல்வி, கள்ளக்குறிச்சி.


 ''அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'' 


''எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக்கொடுங்கள்; அப்படியே நெஞ்சில் ஒட்டும்.


ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.


மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.


நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.


ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.


ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.


ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.


எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.


ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள் தமிழாசிரியப் பெருமக்களே!''


பாரதி செழியன், சென்னை.


''கோபத்தைக் குறைக்க என்ன வழி?'' 


''சக மனிதன் செய்யும் தவறுதான் நமக்குக் கோபத்தை மூட்டுகிறது. தவறுகளை நகைச்சுவையாக் கிக்கொள்வதைப் போல் கோபத்தைக் குறைக்க நல்ல வழி இல்லை.


வேலைக்காரரை அழைத்து, 'தபால் தலையை ஒட்டிக்கொண்டு வா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால் தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர்.


நீங்களும் நானுமென்றால் கோபத்தைக் கொட்டி இருப்போம்.


ராஜாஜி சொன்னார்:


'பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்த நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே.’


ராஜாஜியால் அது முடிந்தது; கேள்வி கேட்ட உங்களால் கூட முடியும்; பதில் சொன்ன என்னால் அது முடியுமா தெரியவில்லை!''


தாமரைக்கண்ணன், திருப்பூர்.


 ''இந்தியாவின் பொருளாதாரம்பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''ஒரு துறையில் ஒருவன் சற்றே புகழோடிருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற மூடநம்பிக்கையின் முட்டைக்குள் நீங்கள் வசிக்கிறீர்கள். பொருளாதாரம்பற்றிப் பேசும் அறிவுடையவன் அல்லன் நான். என்ன தான் இந்தியாவின் நிதியமைச்சர் என் நண்பராக இருந்தாலும், அவரிடம் இதுபற்றி நான் அறிய முயன்றதில்லை. ஆனாலும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறதா தேய்கிறதா என்று அறிந்துகொள்ளும் அளவுகோல் ஒன்றை அறிவேன்.



எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ... அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கு இப்போது தந்து வரும் வட்டி விகிதம் 8.5 விழுக்காடு. மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 9 விழுக்காடு.


ஆனால், ஜப்பானில் வைப்புத் தொகைக்கு வட்டி கிடையாது. மாறாக, உங்கள் பணத்தைப் பாதுகாத்துவைப்பதற்காக உங்க ளிடமே வைப்பு நிதிக்குக் காப்புத்தொகை வசூலிக்கும் ஜப்பானிய வங்கி.


இந்தியாவில் 8.5 விழுக்காடு வட்டி கொடுத்து வாங்கப்படும் வைப்பு நிதி, 10 முதல் 13 விழுக்காடு வட்டிக்குத் தொழிற் கடனாக வழங்கப்படுகிறது. அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப்பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்துகொண்டேயிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.


இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வோர் இந்தியத் தலையும் தாங்குகிறது!''


ம.இராஜ்குமார், வில்லூர்.


 ''உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர் தாக்குகிறார்களே... நீங்கள் திருப்பியடிக்க வேண்டாமா?'' 


''தேவையில்லை.

நீங்கள் ரசிக்க முடியாத ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்.


நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம் கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய் மாறியே தீருகிறோம்.


பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ் என்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போதெல்லாம் பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.


தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே திரும்ப வந்தால், அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால், அது திரிபுநிலை. இதை சைகோசிஸ் [Psychosis] என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக் குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட, சிகிச்சை தருவதே சிறந்தது!''




இரா.கரியப்பா, சூலூர்


''சிலையாவதுதான் ஒரு மனிதனின் உச்சகட்டப் புகழா?'' 



''அப்படிச் சொல்ல முடியாது. மனிதர்களைப் போலவே சிலைகளுக்கும் ஆயுள் உண்டு. அரசு - அரசியல் - சாதி - மதம் -  நிறுவனம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சிலைகள், அந்த ஐந்தும் விழுகிறபோது தாமும் விழுந்துவிடுகின்றன.



சாலைகளில் நிற்கின்ற சிலைகளின் ஆயுள், சாலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவால் திறந்துவைக்கப்பட்டுச் சாலைகளின் சந்திப்பில் நின்ற கலைவாணர் சிலை, மேம்பாலம் கட்டும்போது இடம் பெயர்க்கப்பட்டு ஓரச்சாலையில் ஒதுங்கிவிட்டது.


சென்னையின் தென் வாசலில் கம்பீரமாக நின்ற ஜவஹர்லால் நேருவின் சிலை கத்திப்பாரா மேம்பாலத்திற்குப் பிறகு, உயரம் குறைந்து ஒடுங்கிவிட்டது.


மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பெயர்கள் மறக்கப்பட்ட பல சிலைகள் வெறும் பொம்மைகளாகிவிடுகின்றன.


உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே.


எனவே, மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல - செயல்களால் மற்றும் சித்தாந்தங்களால்!''


தரும.சரவணன். தஞ்சாவூர்.


''இங்கிதம் என்றால் என்ன?'' 


''நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.


புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!''



- இன்னும் பேசுவோம்... 



பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்
part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

Thursday, December 06, 2012

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

என்.கோமதிசங்கர், வீரவநல்லூர்.


 ''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''


''இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில் - இருப்பவர்கள் கோர நரகத்தில்.
பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் ராணுவத்திற்குச் செய்தி போகிறது; அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது.


கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.


ரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது.


பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள்.


எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது.


அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள்.


இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.



இது அதிகரிக்கும்பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டுவிடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது?


இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது?


இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல.


ஆனால் ஒன்று: விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று; மீண்டும் எழுவதும்தான்.''


சி.கார்த்திகேயன், சாத்தூர்.


 ''மறைந்த பேச்சாளர்களில் உங்களால் மறக்க முடியாதவர்?''


''கா.காளிமுத்து.
சொற்களின் சுந்தரன்; வாக்கியங்களின் வாத்தியக்காரன்; சங்கத் தமிழைத் தெருவெல்லாம் வீசிப்போன தென்பாண்டித் தென்றல்; 'அடாணா’வை உரைநடையில் வாசித்த கவிதைக் கச்சேரியாளன்.
இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டாம் உயிர் பெற்று மதுரைக்குத் திரும்பிக்கொண்டுஇருந்தவரை பாண்டியன் ரயிலில் சந்தித்தேன்.
அவர் கையிலிருந்தது 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. கண்ணில் நீர் மிதக்கச் சொன்னார்:


'நான் உயிர் பிழைத்ததில் ஒரே ஒரு நன்மை கவிஞர். பிழைக்காதிருந்தால், 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்காமலே செத்துப் போயிருப்பேனே...’


ஒருவர் கரத்தை ஒருவர் பற்ற... இருவர் கரத்திலும் விழுந்தது கண்ணீர்.


எனக்கொரு கனவு இருந்தது.




கலைஞர் - வைகோ - காளிமுத்து என்ற முத்தமிழின் முக்கூட்டுச் சங்கமத்தை என் நூல் வெளியீட்டு விழா ஏதேனுமொன்றில் நிகழ்த்த வேண்டும் என்ற நெடுங்கனவு.


அரசியல் என் கனவின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டது;


மரணம் மறு பக்கத்தை எரித்துவிட்டது.''


சி.கொ.தி.மு.விக்னேஷ்குமார், கோபி.


 ''அண்மையில் உங்களைக் கவர்ந்த பெண்கள்?''


''பெண்கள் அல்லர்; சிறுமிகள்.


பாகிஸ்தானின் புரட்சிப்பூ மலாலா, உலகத் தலைவரின் மகள் என்ற கர்வத்தைக் கண்ணில்கூடக் காட்டிக்கொள்ளாத கறுப்பு தேவதை மலியா ஒபாமா, இசையுலகின் பிஞ்சு நட்சத்திரம் பிரகதி.


இந்த மூன்று தேவதைகளை எந்த ஊடகத்தில் பார்த்தாலும் பாசமே மேலிடுகிறது.


உங்கள் மூவருக்கும் என் வளர்பிறை வாழ்த்துக்கள் மலர்களே.''


நா.வெங்கடேசன், மதுரை. 


 ''ரஜினிக்கும் உங்களுக்குமான மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?''



'' 'பாபா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பாடலுக் காக அவசரமாய் அழைக்கிறார் ரஜினி. பரபரப்பாகச் சென்றடைகிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் உடையையும் காலணிகளையுமே மாறிமாறிக் கவனிக்கின்றன அவரது காந்தக் கருவிழிகள். புறப்பட எத்தனித்தபோது 'சற்றே பொறுங்கள்’ என்றார். 'உங்கள் உடைக்கும் காலணிக்கும் பொருத்தமில்லை’ என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் 'வெள்ளைத்தாள் கொண்டுவா’ என்று தன் உதவியாளருக்கு ஓசையோடு கட்டளையிட்டார். அந்த வெள்ளைத்தாளை விரித்து என் பாதம் பதிக்கச் சொன்னார். 


பேனா எடுத்து அதில் என் பாதத்தை வரையச் சொன்னார். 'இதே அளவுக்குக் காலணிகளை அனுப்பிவைக்கிறேன்’ என்றார்.


ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து வீடு திரும்பினேன். 'ரஜினி சார் கொடுத்தனுப்பினாராம்’ என்று ஒரு பெட்டியை நீட்டினார்கள் என் உதவியாளர்கள். பிரித்துப் பார்த்தால்,


என் காலுக்குப் பொருத்தமான காலணிகள்!


நான் எழுதியது பொய்யில்லை:

'பாசமுள்ள மனிதனப்பா
மீச வச்ச குழந்தையப்பா.’ ''


அ.குணசேகரன், புவனகிரி.


 ''மூன்றாம் உலகப் போரில் தகப்பனாகிய கருத்தமாயி மகனாகிய முத்துமணியை வெட்டிக் கொன்றது நியாயமாகத் தெரியவில்லையே?''


''குற்றம் புரிந்த மகன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்ற சோழனை 'மனுநீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரிந்த நமக்கு, சமூக விரோதியாகிய மகனை வெட்டிக் கொன்ற கருத்தமாயியை 'மண்நீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரியவில்லையே?''


செ.அ.நெய்னா, சென்னை.


 ''மனிதன் எப்போது மகான் ஆகிறான்?''


''புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன. துய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப்போகிறது.


துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும்போது, ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.


பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகிவிடுகிறது.


புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான்.''


கே.ரூபிணி, தில்லைஸ்தானம்.


''பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்வீர்களா? தவிர்ப்பீர்களா?''


''உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் 'நீர்ப்பறவை’ பாடல்களில் இயக்குநர் சீனுராமசாமி உரிமையோடு பல திருத்தங்கள் கேட்டார். மெட்டுக்கும் கதைக்கும் நியாயமென்று பட்ட திருத்தங்களையெல்லாம் செய்துகொடுத்தேன்; பாடல் வெளிவந்தது.



'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய்  நிலைக்கிறாய்’
 


என்ற வரிகளை சில கிறித்துவ நண்பர்கள் வருத்தப்பட்டுத் திருத்தச் சொன்னார்கள்.


எவர் மனதும் புண்படக் கூடாது என்பதற்காக


'என்னுலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்’
என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஊதியம் தராத என் கிறித்துவ நண்பர்களுக்கே திருத்தம் செய்து தருகிற நான், ஊதியம் தருகிற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திருத்தம் செய்து தர மாட்டேனா?''



லதா சீனுவாசன், சென்னை-40.


 ''உடம்பு எதுவரைக்கும் நன்றாக இருக்கும்?'' 



''கண்ணுக்குத் தூக்க மாத்திரையும் - கட்டிலுக்கு ஊக்க மாத்திரையும் தேவைப்படாத வரைக்கும்.''



- இன்னும் பேசுவோம்...




readers view


 1. Kalpana3 Days ago
கவிஞர் வைரமுத்து சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கையில் வைத்து அழுத்தப்படும் பணமும், கத்தியில் வைத்து அழுத்தப்படும் கத்தியும் சில தமிழரை..அம்மையாரின் விஷயத்தில் தமிழ் தெரிந்தவராக என்று கொள்ளவேண்டும். அழுத்தப்படும் விஷயம் முதலானதாக இருக்க வேண்டும் என்பது என் யூகம்.

கவிஞர் சொன்னதற்கு ஏன் அம்மாவுக்கு உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது என்பதுதான் ஆச்சரியம். இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்றவுணர்ச்சி உதைத்திருக்கும் போல.

தனி மனித வாழும் உரிமையாக அம்மையார் போதிப்பது (இல்லையில்லை கருத்துப்பதிவு என்கிற பெயரில் கதாகாலேட்சபம் பதிவது) என்ன என்று விளங்கவில்லை. இதே விகடனின் சாதி கலவரங்கள் குறித்து வெளியான ஒரு கட்டுரைக்கு "சாதிகளை ஒழித்துவிட முடியாது; ஆனால் சாதி உணர்வோடு வாழ்வதை தனி மனிதரது நம்பிக்கை விஷயமாக விட்டு விட வேண்டும்" என்கிறார் இந்த முனைவர். எங்கு சென்று முட்டிக்கொள்வது?
இருக்கும் நாட்டின் கேவலமான கலாச்சார விழுமியங்களே வெளிப்படுகின்றன.

ஐ,நா அமைப்பின் சார்ட்டர்களை கரைத்து குடித்த ரீதியில் இந்த கனமாணிக்கம் கட்டவிழ்த்து விட்ட இன்னொரு கதை "ராணுவ ரீதியாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முனைவதை எதிர்தரப்பு தீவிரவாதம் கொண்டு மோதியதை காணச்சகியாமல் ஐ.நா இலங்கையை விட்டு வெளியேறியது" என்பது. ஐ.நாவின் பொது செயலாளர் முதல் ஐ.நாவின் நடவடிக்கைகளை பரிசீலித்து வெளியிட்ட உள்தணிக்கை குழுவின் சமீபத்திய அறிக்கைகளோ வேறுவிதமாய் வெளிவந்துள்ளது. அம்மையார் என்ன இறுதி ஈழப்போரின்போது களப்பணியில் ஈடுபட்டிருந்த காரிய வீராங்கனையா? இல்லையே? தன் வீட்டில் அதுவும் லிவுங் ரூமில் கணினியில் முன்னால் நாள் முழுதும் அமர்ந்து ஆங்கில கலப்புடன் (அதுகூட அம்மையாரின் தத்துவப்படி பெரிய அறிவுஜீவிதம் என்ற நினைப்பு) தப்பும் தவறுமாக தமிழை குதறியபடி தட்டெழுதுவதுதானே இவர் செய்யும் செயல்.

கோனார் தமிழ் துணைவன் சுருக்கமென்று சொல்லும் இந்த முனைவரது கல்வித்தகுதி சந்தி சிரிக்கின்றது. நானும் என மாணவப்பருவங்களில் கோனார் தமிழ் துணைவனை படித்திருக்கிறேன். செய்யுள் பகுதிக்கான விளக்கவுரைகள் கோனாரின் உண்டு. கோனார் பதிப்பக மற்றும் எழுத்தாசிரியரின் மகள் மணிமேகலை எனக்கு தமிழாசிரியராக தமிழ் போத்திருக்கிறார். இருக்கும் உயர்கல்வித்துறை சந்தி சிரிப்பதை போலவே இருக்கிறது இந்த முனைவரது கருத்துப்பதிவுகள்.
2. Dr.Mrs.MeenakshiPrabhakar7 Days ago
கவிஞர் கொடுத்திருக்கும் இலங்கை தமிழரின் நிலையை பார்க்கும் போது இன உணர்வாளர்களின் கதறல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக தெரியவில்லை.

வீணாவது மனித வளம்.ஒரு நாட்டின், உலகத்தின் உயர்வு.தனி மனித திறன் இன அடிப்படையில் தேக்கப்படுவது குற்றம்.சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் இன உணர்வு இல்லையெனில் அரசின் நேரடி சீரமைப்புக்கு வர முடியும்.தனி மனித வாழும் உரிமை கோரி, உரியதை பெற்று நல வாழ்வு வாழ முடியும்.

பத்து பேர் சாதாரண சூழலில் சேர்ந்து பேச போவதில்லையே.சாதாரண சூழல் நிறுவ முனையும் நிலையில் அரசு தரப்பில் குழு நிலைப்பாடு கண்காணிக்கப்படுவதில் தவறில்லை.

சந்தேகம் இடையூறு செய்யாத சூழல் வேண்டுமெனில் அரசுடன் ஒத்துழைத்து, தன் தனி மனித உரிமை நிறுவிக்கொள்ள வேண்டியது மக்கள்.

இரு தரப்பிலும் பணி நியமனம், சம உரிமை தரும் செயலை, பேரின வாத அரசு என சொல்வது எப்படி பொருந்தும்?.அப்படிப்பட்ட அரசு முன்பு எடுத்த நிலைப்பாடு போல், தமிழரை வெளியேற்ற அல்லவா பார்க்கும்?

இன உணர்வு தனி மனித நம்பிக்கையே.அந்த அடிப்படையில் தனி நாடு, பிரிவினை வாதம் எழுவது அரசு கொள்கைக்கு, மனித நேயம் அவசியமாகும் உலக அமைதிக்கு முரணானது.

இன உணர்வினடிப்படையில், ஏற்படும் ஒவ்வாமையை தனி மனித அளவில் அவரே நிகர் செய்ய முன் வர வேண்டும்.மனித நேயம் மலர வேண்டும்.தன் திறன் பயனாக்க வேண்டும்.அல்லது அச்சூழலிலிருந்து வெளியேற வேண்டும்.ஊறி விட்ட நிலைப்பாடு மாறுவது கடினமே.ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் தரும் தனி மனித திறனை தன் நாட்டுக்கு தந்தாலென்ன என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.அலைகள் மாரடிப்பதில்லை.அலைகள் விடாமுயற்சியின் அடையாளம்.அலைகளின் நோக்கம் தனி மனித வாழும் உரிமையேயன்றி , தனி நாடு அல்ல.

மீண்டுமெழும் அலைகள் விடாமுயற்சியாய் கோருவதும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதும் தனி மனித உரிமை நிறுவுவதிலேயே நிலையாகும்.

கடல் வணிகத்தில் தனி முத்திரை பதித்திருக்கும் இலங்கை, இன்னும் உயர முடிவது தமிழர் ஒத்துழைப்பினால்.இலங்கையை உயர்த்துவதே இலங்கை மக்களின் கடமை.போர் , போராட்டம், கலவரம், ஒத்துழையாமை, பிணக்கு இவை இனி நிரந்தரமாக முடியாது.

கடல் வணிகம் , தமிழர் என்ற நிலையில் கடற்படையாகும் தனித்திறன், அரசுடன் ஒத்துழைக்கும் நிலையில், நாட்டை உயர்த்தும் பயனாகும்.

இலங்கையின் இயற்கை வளம் அபூர்வமானது.இன உணர்வு தேக்கம்.பிராந்திய ரீதியான பாதுகாப்பு அணுகுமுறை, உலக வளம் காப்பதாய், உயர்த்துவதாய் மாறும் நிலையில், இலங்கை இந்தியாவுடன் நில வழிப்பாதையில் இணைக்கப்படுவது ஒருங்கிணைந்த இந்தியா உருவாவது, சர்வ தேச நாடுகள், ஐ.னா.அமைப்பின் கீழ் அரசு முறையில் இனையும் சாத்தியம் தரும்.
thanx - vikatan



 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html