Showing posts with label பாபி சிம்ஹா. Show all posts
Showing posts with label பாபி சிம்ஹா. Show all posts

Wednesday, August 26, 2015

உறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் - பாபி சிம்ஹா நேர்காணல்

'உறுமீன்' படத்தில் நடிகர் சிம்ஹா
'உறுமீன்' படத்தில் நடிகர் சிம்ஹா
‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா, தற்போது ‘உறுமீன்’, ‘கோ 2’, ‘வீரா’, ‘மெட்ரோ’ உட்பட பல படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவரும் அவரை சந்தித்தோம்.
‘உறுமீன்’ படத்தின் போஸ்டர்களில் நீங்கள் வித்தியாசமான கெட்-அப்களில் இருக்கிறீர்கள். அப்படத்தின் கதைக்களம் என்ன?
அது ஒரு ஆக் ஷன் த்ரில்லர் படம். கொஞ்சம் ஃபேண்டஸியும் கலந்திருக்கும். இப்படத்தின் இயக்குநர் சக்திவேலும் நானும் 7 வருட நண்பர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அப்போது உருவான கதைதான் ‘உறுமீன்’. நம் கண்முன் நடக்கும் விஷயங்கள், பேப்பரில் வரும் சம்பவங்கள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் ஒரு சமூக கருத்தைச் சொல்லியிருக்கிறோம்.
‘ஜிகர்தண்டா’ படத்துக்கு பிறகு உங்களது படங்கள் வெளியாக ஏன் இத்தனை தாமதம்?
‘உறுமீன்’, ‘பாம்பு சட்டை’, ‘கோ 2’, ‘வீரா’, ‘மெட்ரோ’ என்று நிறைய படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் படங்கள் வெளிவருவது என் கையில் இல்லையே. ஒரு சில காரணங்களால் அவை தள்ளிப்போகிறது. விரைவில் ஒவ்வொரு படமாக வெளியாகும். நான் எதற்காக ஆசைப்பட்டு கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்தேனோ, அந்த கனவு நிறைவேறி இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன்.
எந்த மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்?
அப்படி எந்த ஒரு ஆசையும் எனக்கு கிடையாது. நல்ல கதை, திரைக்கதை இருக்கவேண்டும். கதையைக் கேட்கிறபோதே ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு கதை பிடித்துவிட்டால் போதும், எந்த வேடமாக இருந்தாலும் உடனே களத்தில் இறங்கி விடுவேன். மற்றபடி நாயகன், துணை நடிகர், வில்லன் இப்படி எந்த ஒரு வித்தியாசமும் நான் பார்ப்பதில்லை.
‘ஜிகர்தண்டா’ என்ற படம் இல்லாவிட்டால் பாபி சிம்ஹா எந்த இடத்தில் இருந்திருப்பார்?
‘ஜிகர்தண்டா’ படத்தில் கண்டிப்பாக நான் இருந்திருப்பேன். ஏனென்றால் நானும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து நிறைய குறும்படங்கள் பண்ணியிருக்கிறோம். அப்போதே எனக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை தெரியும். ஒரு வேளை நான் அந்தப் படத்தில் நடிக்காமல் போயிருந்தால் இந்த வளர்ச்சி இருந்திருக்காது. ஆனால், ஒரு நடிகனாக நல்ல கதைகளை தேடிக்கொண்டு இருந்திருப்பேன்.
எந்த இயக்குநரோடு பணிபுரிய விரும்பு கிறீர்கள்?
அனைத்து இயக்குநர்களோடும் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னை பொறுத்தவரை சினிமா ஒரு பள்ளிக்கூடம். அதில் ஒரு மாணவனாக நான் தினமும் ஏதாவது கற்றுக் கொண்டே இருப்பேன். இயக்குநர்கள்தான் எனக்கு வாத்தியார்கள். அந்த வகையில் எனக்கு ஒவ்வொரு வாத்தியாரின் வகுப்பறையிலும் மாணவனாக இருக்கவே ஆசை.
முன்புபோல உங்களால் சுதந்திரமாக சென்னையை வலம் வர முடிகிறதா?
முன்பு நான் வெளியில் போனால் யாருமே கண்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது என்னைப் பார்க்கும் சிலர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஒருசில இடத்தில் இப்படி கேட்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்ற இடங்களில் எல்லாம் “இதற்கு தானே ஆசைப்பட்டாய் சிம்ஹா” என்று மனதுக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும்.
காதலிக்கிறீர்கள், திருமணம் செய்யப் போகிறீர் கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறதே?
ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்துகொள்ளும் யோசனையே இல்லை. இப்போதுதான் ஏதோ நல்ல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் இப்போதைக்கு இல்லை.

நன்றி - த இந்து

Tuesday, August 18, 2015

கோ-2 வில் கமல் , அஜித்? -இயக்குநர் ஷரத் பேட்டி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெரும் வசூல் வெற்றியைப் பெற்ற படம் 'கோ' . இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷரத். பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசியதிலிருந்து...
‘கோ' படத்தின் தொடர்ச்சிதான் ‘கோ-2' படமா?
இதுவொரு அரசியல் த்ரில்லர். ஆனால் முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல. ஜான் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். போலீஸ் அதிகாரி வேடமே இனி பண்ண மாட்டேன் என்று சொன்னவர் இந்தக் கதையைக் கேட்டதும் ‘இதுல மட்டும் நடிச்சிடுறேன்; ரொம்ப பிடிச்சிருக்கு’ என்றார். அதேபோல் பாலசரவணன் வரும் காட்சிகளும் களைகட்டும். இவர்கள் சிரிப்புக்கு கேரண்டி என்றால் பாபி சிம்ஹா - பிரகாஷ்ராஜ் ஆகிய இருவருக்குள் நடக்கும் யுத்தம் படத்துக்கு த்ரில்லர் தீனி போடும்.
பிறகு ஏன் 'கோ-2' என்று தலைப்பு வைத்தீர்கள்?
அது என்னுடைய ஐடியாவே கிடையாது. படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் “நீங்க சொன்ன கதை ‘கோ' மாதிரி இருக்கு. ‘கோ-2' என்று வைக்கலாம்” என்றார்.அந்தத் தலைப்பை வைத்த உடன் கிடைத்த வரவேற்பு பிரமாதமாக இருந்தது. இன்னும் ‘கோ' படத்தை மறக்கவில்லை என தோன்றியது. தயாரிப்பு நிறுவனம் ஒரு முடிவை எடுக்கும்போது அதற்குக் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும். அதனால் நானும் ஒப்புக்கொண்டேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
‘உன்னைப் போல் ஒருவன்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். ‘பில்லா-2' படத்துக்கு கதை, திரைக்கதை ஆகியவற்றை இயக்குநர் சக்ரியோடு இணைந்து எழுதினேன். அந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நான்தான் வசனம் எழுதினேன். எனக்குத் தாய் மொழி தெலுங்கு. ‘பில்லா-2’க்கு முன்பு தெலுங்கில் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறேன்.
ஒளிப்பதிவுதான் உங்கள் ஏரியாவா?
நான் ஒளிப்பதிவாளராக ஆனது ஒரு விபத்துதான். லண்டனில் பிலிம் ஸ்கூலில் படித்திருக்கிறேன். அங்கு ஒளிப்பதிவையும் கற்றுக்கொடுப்பார்கள். எனக்கு ஒளிப்பதிவு பிடிக்கும். அமெரிக்காவுக்கு அவ்வப்போது சென்று ஏதாவது படித்துவிட்டு வருவேன். ரெட் கேமிரா அறிமுகமானபோது கமல் சார் வாங்கினார். அப்போது நானும் ஒரு கேமிரா வாங்கினேன்.
அந்த கேமிராவை வைத்துக்கொண்டு நண்பர்களுக்கு ஜாலியாகச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிற நீயே ஒரு படம் பண்ணு என்று சொல்லி ஒளிப்பதிவு வாய்ப்பும் கொடுத்தார். நான் ஒளிப்பதிவு பண்ணிய ‘புரோக்கர்' என்ற தெலுங்குப் படத்துக்கு மாநில விருது கிடைத்தது. அதற்கு பிறகு அந்த நண்பருக்கு மீண்டும் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினேன். நிறைய ஒளிப்பதிவு வாய்ப்புகள் வந்தன. நான் தவிர்த்துவிட்டேன்.
கமல், அஜித்தோடு பணியாற்றியபோது அவர்களுக்குக் கதைசொல்லிக் கவர்ந்திருக்கலாமே?
ஒரு குறிப்பிட்ட நடிகரோடு படம் பண்ண வேண்டும் என்று கதை எழுதக் கூடாது. உண்மையைச் சொன்னால் நான் இயக்குநராக கையெழுத்திட்ட 3-வது படம் ‘கோ-2'. நான் படப்பிடிப்புக்குப் போன முதல் படம் இதுதான். கடந்த ஆண்டு ஒரு தெலுங்குப் படம், அப்புறம் ஒரு தமிழ் படம் என இரண்டு படங்களைக் கைவிட்டுவிட்டார்கள்.
இவரோடு பண்ண வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் வளரவில்லை. எனக்கு கமல் சாரோடு படம் பண்ற வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. ஒரு நாள் கண்டிப்பாகப் பண்ணுவேன். அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர். முதலில் நான் என்னை நிரூபிக்க வேண்டும். அப்புறமாக அவர்களோடு இணைந்து படம் பண்ணுவேன்.
கமல், அஜித், பிரகாஷ்ராஜ் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்
கமல் சார் ஒரு நாலேஜ் பேங்க். அவரிடம் படத்தைத் தவிர்த்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பார். அஜித் சார் ஒரு ஜாலியான ஆள். முழு சந்தோஷத்தோட இரு என்பார். எனக்கு என் குடும்பத்தை மிகவும் பிடிக்கும்.
அவருடன் பழகிய பிறகுதான் எனக்கு என் குடும்பத்தை இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது. பிரகாஷ்ராஜ் சாரோடு பணியாற்றுவது மிகவும் எளிது. பிரகாஷ்ராஜ் பற்றி தப்புத் தப்பாக சொல்லுவார்கள். அவர் தனக்கென்று சில வரைமுறைகள் வைத்திருப்பார். அந்த வரைமுறைகளின்படி பணியாற்றினால் அவரால் நமக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.

Tuesday, March 17, 2015

இணைய விமர்சகர்களை கிழி கிழி கிழிக்கப் போகிறதா இந்தப் படம்? - 'மசாலா படம்' இயக்குநர் பேட்டி

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ராஜீவ் மேனன் ஆகிய இருவரிடம் சினிமா கற்றவர். இப்போது ‘மசாலா படம்’ மூலமாக இயக்குநராகி இருக்கிறார். “ராஜீவ் மேனன் இயக்குநரான பிறகும் மணிரத்தினத்தின் ‘குரு’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதேபோல ஒளிப்பதிவும் பண்ணுவேன். ஒளிப்பதிவு வேறு, இயக்கம் வேறு” என்று தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் லஷ்மண். அவருடன் உரையாடியதிலிருந்து…
‘மசாலா படம்’ தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே... படத்தின் கதையைப் பற்றிச் சொல்லுங்கள்?
இந்தப் படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. எல்லா வயதினருக்கும் மூன்று விஷயங்கள் பொதுவாக இருக்கும். சினிமா, அரசியல், கிரிக்கெட். சினிமாவுக்குள் சினிமா (CINEMA IN CINEMA)என்பது ஒரு பிரிவு. அதில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. வாழ்க்கையிலிருந்து சினிமா(LIFE IN CINEMA) அதாவது ரசிகர்களின் பார்வையில் சினிமா என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதை யாருமே தொடவில்லை. அதைத் தொட்டிருக்கிறேன். சிவா, சிம்ஹா எல்லாருமே சினிமாவை ரசிக்கிற ஆளாகத் தான் வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு என்ன படம் பிடிக்கிறது, எதற்குக் கை தட்டுகிறார்கள் எனச் சொல்ற படம் ‘மசாலா படம்’
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் இயக்குவதற்குத் தைரியம் எப்படி வந்தது?
இயக்குநர் ஆகவேண்டும் என்றால், யாரிடமாவது உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்குப் பிறகு ஒளிப்பதிவாளருக்குத்தான் பொறுப்பு அதிகம். அப்படி இருக்கும்போது உதவி இயக்குநர் கற்றுக் கொள்வதைவிட, ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி நிறைய கற்றுக் கொண்டேன். அதை வைத்து கமர்ஷியல், யதார்த்தம் என்ற இரண்டுக்கும் நடுவே ஒரு விதத்தில் ‘மசாலா படம்’ பண்ணியிருக்கிறேன்.
முதல் படமே இவ்வளவு சிக்கலான கதை ஏன்?
ரசிகனோட பார்வையில் ஒரு படம் பண்ணியிருக்கேன். அதுதான் உண்மை. ஏன் மக்கள் மசலாலா படத்தைக் கொண்டாடுகிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட கதையே. இப்படியிருக்கும் கதையை யார் முதல் படமாகத் தேர்வு பண்ணுவார்கள் சொல்லுங்க. என்னுடைய திறமைக்கு ஒரு சவால்தான்.
‘மசாலா படம்’ படத்தில் இணைய விமர்சகர்களை விமர்சனம் பண்ணியிருக்கிறார்களா?
இந்தப் படத்தோட ட்ரைலர் வரும்போது இதற்கான விடை தெரியும். ரசிகர்களே விமர்சகர்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லையா.. ஒருத்தன் போய் படம் நல்லாயில்லை என்று சொன்னால் பத்து பேர் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவனுடைய கருத்துக் கணிப்பு சரியாக இருக்கும் என்று நினைப்பார்கள். இதைதான் இப்போதுள்ள இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள். அதைத் தொட்டிருக்கிறேன்.
ரசிகன், விமர்சகன் ஆவது சரியா, தவறா?
இரண்டுமே சொல்லவில்லை. மசாலா பிரிவு கண்டிப்பாக ப்ளஸ் என்றுதான் சொல்கிறேன். ட்ரைலரில் ஒரு வசனமே இருக்கிறது. “தயாரிப்பாளர்கிட்ட 2 கோடி இருப்பதால் படம் எடுக்கிறார். என்னிடம் 120 ரூபாய் தான் இருக்கிறது. அவருக்கு 2 கோடி முக்கியம் என்றால் எனக்கு 120 முக்கியம் அதனால் நான் கேட்பேன்” என்ற வசனமே வைத்திருக்கிறேன். 120 ரூபாய் கொடுக்கிறேன்ல அதற்கு நான் விமர்சனம் பண்ணுவேன் என்று சொல்கிறான். இன்னொருபுறம் நீங்க இப்படி விமர்சனம் கொடுப்பதால் என்ன தப்பு நடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன்.


நன்றி  - த இந்து