Showing posts with label THRILLER. Show all posts
Showing posts with label THRILLER. Show all posts

Friday, June 29, 2012

சுஜாதா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் - சிறுகதை - திமலா


Writer Sujatha - Smiles at Chennai book fair 2006

உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது.



“நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி”




“ஒ நித்யா! நீயா?”




“உள்ளே வரலாமில்லையா?”




“தாரளமாக. உனக்கு யார் தடை செய்ய முடியும்?. அருகே வா! முத்தம் தருகிறேன்.




நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாக தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில் எழுத்துக்கள் அதி விரைந்தன.


சுவற்றில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று ‘ஆத்மா & கோ’வின் அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக் காட்டின.


ஆத்மா டச் போனில் “நியூயார்க்” என்று கூப்பிட்டு விட்டு “உட்காரேன் நித்யா” என்றான்.


நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.




“நியூயார்க் நியூயார்க்!”




“நியூயார்க் சார்”




“எத்தனை வேண்டுமாம்?”


“இருபது மில்லியன்”


“பத்தொன்பதுக்கு தீர்த்துவிடு”




“நிக்ஸ் சார்”


“வாங்குவது யார்?”


“ராத்சைல்டு”


“அந்தக் கழுகா?. சரியாக ஒரு நிமிஷம் பார். அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ”.




“சரி”


ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ””பிஸி பிஸி பிஸி. இந்த சமயத்தில் வந்தாயே?”  என்றான். நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில்கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பைஅதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிததுக் கொண்டான்.




துல்லியமாக சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன.




“க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா

நீ நிற்கிறாயே  என்னவேண்டும் சொல்”


“நான் யார் தெரியுமா உனக்கு?”


“என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ நியுயார்க்
பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு”.




“என்ன சொன்னே  நித்யா”




“ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்”.


“என்னவேண்டும? சொல்லவே இல்லையே”


“ஆத்மா,எனக்கு நீ வேண்டும்”




“நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே”




“என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்”




“பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்”




“ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்”




“ராத்திரிதான் வருகிறேனே”




“வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய்.  தூங்கி விடுகிறாய். காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை”




“தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?”


“அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ”




“ஹலோ டோக்கியோ”




நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.




“என்ன நித்யா இது?”


“ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே ஞாபகம் இருக்கிறதா?”




“அதற்கென்ன?”


“அனுமதி கிடைததிருக்கிறது” என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது  அவனிடம் காட்டினாள்    அதில் கம்பயுட்டர் அச்சில்




திமலா நிர்வாகம்
உங்கள் வேண்டுகோள்-
20-2-2080 அன்று காலை 10-16
உங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது
நேரந்தவறாமல் வரவும்
இந்த அட்டையையும் கொண்டு வரவும்
உங்கள் பார்வையாளர் எண் 164396
(இது செயற்கைக் காகிதம்)




ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு “அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம் போய்வா” என்றான்


நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் “ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும்.   ஒரு மணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும் உடைத்து..”




“இரு இரு எப்போது போகவேண்டும்”




“நாளை காலை 10-16″




“ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ·ப்ரீயா?”




அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது.




“நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் “




“ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது”




நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள். ”முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு  ஜப்பான்காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு”.




“ஸாரி கிடைக்கவில்லை” என்றது குரல்.




“போய் உன் தலையைத் தின்னு”




“ஸாரி தலை கிடையாது”




“இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்”




நித்யா பதற்றத்துடன் ” ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டு பேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே பேச்சு. அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!”




“கூட யாரையாவது அனுப்பட்டுமா?”




நித்யா அழ ஆரமபித்தாள்.




“நித்யா என்ன இது? இந்த நு¡ற்றாண்டில் யாரும் அழுவதில்லை”.




மேலும் அழுதாள்.




“இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்து கொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?”




“ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?”




“ஒன்று செய்யலாம், திமலா எவ்வளவு தூரம்?”




“நூற்றம்பது கிலோ”




“நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்”




“முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும். நான் போகிறேன். உனக்கு வாழ்க்கைப்பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டிருக்கலாம். ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா”




“ஸாரி பதில் இல்லை”

http://image1.indiaglitz.com/tamil/news/shankar010308_1.jpg


ஆத்மா சிரித்தான்.




“சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.  எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்”




“அப்படி எல்லாம் பேசாதே நித்யா”




“பின்னே என்ன?”




“அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு”




“முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம், என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.. ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை”.






“இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது  எனக்கு”.




“ஒரு முறை வந்துபார். உன் மனம் மாறிவிடும். கணவன் மனைவியாகப் போவது பெரும்  பாக்கியம் என்கிறார்கள்”.




“இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம்”.




“ஹலோ  ந்யூ யார்க்  என்ன ஆச்சு?” நித்யா டச்போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள்




ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை.


ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு “கோபம் கூடாது என் மனைவியே”என்றான்.


“நான் அனி உன் மனைவி இல்லை”


கம்ப்யூட்டர் குறுக்கிட்டது “ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது”.




“என்ன?”




“வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்”


நித்யா முகம் மலர்ந்தாள் “வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க” என்று கூவினாள்.


“மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனமும்“ என்றது கம்ப்.


ஆத்மா சிரித்து” திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?”.


நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.




மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகி விட்டாள். ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.  தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். டச்போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள். ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது.




திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!


கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம்  என் விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.


நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை


.
கணவன் மனைவி உறவுக்கு இந்த நூற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவிலலை. அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை.
குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது. கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள்.
அவள் ஜீன்களில் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான்.




இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஆத்மா ஒருவன் போதும், அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும்.
மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸி வந்து வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.




நித்யா ஏறிக் கொண்டாள் “எங்கே” என்றான் டாக்ஸி ஓட்டி.


“முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு
திமலா போகவேண்டும்  பத்தே காலுக்குள். உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?”.




“இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டிடத்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?”.




“அதிகப் படியாக ஐந்து நிமிஷம்”


“சரி”


டாக்ஸி நழுவியது.




அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.”ஒரு நிமிஷம்” என்று சொல்லி அதிவேக லி·ப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள். எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான்,




“ஹலோ லண்டன்!  மெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும். ஹலோ நித்யா”




“நேரமாகிறது கிளம்பு கிளம்பு”




“ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹியர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?”




“நாசமாப் போச்சு. திமலா!”




“ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா?.
இன்னும அரை மணி இருக்கிறதே, இதோ வந்துவிட்டேன்”.




ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.
பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை அதிகரித்தது. கடவுளே!
போக்குவரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.




“டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்”




“கவலைப் படாதீர்கள் ·ப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன  பூஸ்டர் வைத்திருக்கிறேன். திமலாவில் எந்த ப்ளாட்பார்ம்?”




“புரியவில்லை”




“உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?”




“மஞ்சள்”


“பத்தாவது ப்ளாட்பார்ம்”


வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின்
வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது.




ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.




அவனை உரசிக் கொணடாள்




திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது.


அப்பாடா!


ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.




நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.


‘திமலாவுக்கு வரவேற்கிறோம்’ என்று ஸோடியம் ஒளிர்ந்தது.




நித்யா வேகமாக நடந்தாள்.




நீண்ட சதுர இயந்திரங்கள் ’உங்கள் அனுமதிச் சீட்டை செருகுங்கள்‘ என்றன.




செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு

” நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லவும்”. சற்று தூரம் நடந்தார்கள். ஒன்பதாம் எண் கன்வேயருக்கு.
ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச் பளிச்சிட்டது.




‘இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்’ என்றது ஒலிபெருக்கி ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ் என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.




முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது. மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து …கோபுரம் தெரிந்தது.




நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள்.




பிரதான வாசல் திறந்திருந்தது. அவர் இங்கிருந்தே தெரிந்தார்.




நித்யா துள்ளினாள். “பார் ஆத்மா, அவர்தான்!”.




வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.




மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.




“அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!”




“உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்’என்று குரல் மேலே ஒலித்தது.




அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து “அர்ச்சனை உண்டா? என்ன மொழி?” என்றார்.




“தமிழ்” என்றாள் நித்யா.




அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார். மெலிதான இசை பரவியது.




துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-




“குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம் வினை ஓயுமே”





“சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூட்டருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா… பூலோக தெய்வம்..பிராசீனமான கோயில்.
நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்..





கற்பூர ஒளியில் ஆத்மா “த்ரில்லிங்!”என்றான்.

நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம்

BTW, here are the pictures of Sujatha which I took in the Chennai book fair 2006.
Writer Sujatha - Chennai book fair 2006

Thursday, June 28, 2012

சுஜாதா - த்ரில்லர் சிறுகதை - ஜோதியும் ரமணியும்

http://chummaaorublog.files.wordpress.com/2010/02/sujata-portrait.jpg

புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான்.


ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி அளக்கும் பயிற்சியில் பார்த்தேன். ‘‘என் பேர் ரமணி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்ல புதுசா சேர்ந்திருக்கேன். கை குடு’ என்றான். குடுத்த கை வெல்லப்பாகு போல் பிசுபிசுவென்றிருந்தது. நான் துடைத்துக்கொள்ள, ‘‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’’ என்று செயின் சர்வேக்கான சங்கிலியை என்னிடம் கொடுத்துவிட்டு நியூ ஆஸ்டலின் மூலையில் திரும்பி அங்கே ரத்தன்லாலிடம் எனக்குத் தெரியாமல் மறுமுனையைக் கொடுத்துவிட்டு வேறுவழியாக காண்டீனுக்கு போய்விட்டான்

. இருவரும் பேந்தா மாதிரி ஒரு மணி நேரமாகசெயினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். ‘என்னடா’ என்று பட்டூஸ் என்கிற பட்டாபிராமன் விசாரித்ததில் ரமணி அந்தப் பக்கம் இருக்கிறான். அளந்துகொண்டு இருக்கிறான் என்று இருவரும் சொல்ல, விசாரித்ததில் கேண்டீனில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ‘‘நானா! நீ வேற யாரையோ சொல்ற! எனக்கு சர்வே கிளாஸே கிடையாதே!’’ என்று சாது முகத்துடன் புளுகினதிலிருந்து அவனைக் கண்டாலே நானும் ரத்தன்லாலும் ஒதுங்கினோம். அந்த சம்பவத்தின் அவமானம் கலைய மூன்று மாதமாயிற்று.


ரமணி எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பான் என்பது யாருக்கும் தெரியாது. சிறு நாடகங்களாடுவது அவனது இயற்கை. சின்ன விஷயத்துக்குக்கூட பொய் சொல்வான். மணி என்ன என்றால், அரை மணி கூட்டிச் சொல்வான். திங்கள்கிழமையை வியாழக்கிழமை என்பான். புதிய ஆட்களைச் சந்திக்கும்போது முத்தரையன், ரமணி ஐயர், அல்டாப் உசேன் என்று இஷ்டத்துக்கு பேர் மாற்றிச் சொல்வான். சொந்த ஊர் கேட்டால் ஒரு நாள் ஹைதராபாத், ஒரு நாள் சின்னாளம்பட்டி, ஒரு நாள் மொரிஷியஸ். நிஜப் பெயர் ரமணிதானா என்று எங்களுக்கு ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.


திடீர் என்று மொட்டை போட்டுக்கொள்வான். இட்லி விழுங்கும் போட்டியில் மற்ற பேர் பதினைந்து இட்லியிலேயே தவித்துக்கொண்டு இருக்கையில் ரமணி லேட்டாக மெஸ்ஸக்கு வந்து சேர்ந்துகொள்வான். நாற்பது இட்லி போடச் சொல்லி சாம்பாரில் குளிப்பாட்டி கவளம் கவளமாக ஆக்கிக்கொண்டு கன்னங்களின் இடுக்கிலேயே வைத்துக்கொள்வான். போட்டிக்கான நேரம் தீர்ந்ததும் துப்பிவிட்டு இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வான். ஹாஸ்டல் தினத்தின்போது மார்க்கருடன் ராயபுரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து டென்னிஸ் கோர்ட்டில் நெற்றியில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ‘‘மார்க்கர் வருத்தப்படாதே! சரோ வரேன்னு சொல்லிவிட்டு வரலை பாரு. அதான் ரொம்ப துக்கம். எனக்கு ஒரு தேவாங்கு மட்டும் வாங்கிக் கொடுத்துரு’’


மார்க்கர், ‘‘கவலைப்படாதே தம்பி! சரோசா இல்லைன்னா சரசாவை இட்டாரேன்’’


‘‘எங்க இருக்கா சொல்லு’’ இவ்வாறு திரும்பத் திரும்ப உரத்த குரலில் அலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பத்தி நாடகம் போல இருக்கும். பிறகு ‘‘மார்க்கர், இப்டியே போ, ரெண்டு லைட்டு தெரியுது பாரு. அதுக்கு மத்தியில் நடந்து போ’’ என்று அனுப்புவான். சற்று நேரத்தில் ‘க்றீச்’ என்று ப்ரேக் சப்தம் கேட்கும்.


‘‘மார்க்கர் போய்ட்டான்டா’’


‘‘அவனா… அவன் ஏன் சாவறான். இன்னும் எவ்வளவு ஜிஞ்சர் அடிக்கணும் அவனுக்கு’’.

‘‘ரமணி தேவாங்கு வளக்கப் போறியா?’’

‘‘ஆமாடா’’

‘‘யார்ரா சரோ?’’

‘‘என் உயிர்க் காதலி. பேங்க்ல வேலைசெய்றா’’

‘‘எந்த பாங்க்?’’

‘‘ப்ளட் பாங்க்’’ என்று சிரித்தான்.

நியூ ஹாஸ்டலில் வடக்கத்தி மாணவர்களிடையே கைகலப்பு நேர்ந்தபோது ரமணி இடையே புகுந்து கையெடுத்துக் கும்பிட்டு சண்டையைச் சரளமாக இந்தி கவிதைகள் பேசி நிறுத்தினான். மற்றொரு சந்தர்ப்பத்தில் ப்ரேம் மல்ஹனை வெட்டக் கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினான். வளாகத்தில் ஓடிப்பிடித்து அவன் கழுத்தில் கத்தி வைத்துவிட்டு சற்று யோசித்து, ‘‘கை குடு! வியாழக்கிழமை நான் கொல்றதில்லை’’ என்றான்.


முதல் செமஸ்டருக்குள்ளே அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அலறத் தொடங்கி னார்கள். கிளாசுக்கு வரும்போது ஒரு ஜிம்மி நாய் கூட வந்து காத்திருக்கும். சிலவேளை உள்ளே எட்டிப் பார்க்கும். ‘‘வரேண்டா அவசரப்படாதே’’.


யாரைச் சந்தித்தாலும் கையை முதுகுப் பக்கம் முறுக்கி வலிக்கிறாற் போல் செய்துவிட்டுத்தான் விடுவான். ஏதாவது பதில் சொன்னால் நேராக அடிமடி மர்மஸ்தானத்தில் கை செலுத்தித் திருகுவான். நாம் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வரச் சிரிப்பான். அதீத பலாத்காரன். தொடாமல், அடிக்காமல், முதுகில் குத்தாமல், கன்னத்தில் தட்டாமல், அங்கே பிடிக்காமல் அவனால் பேசவே முடியாது!


பரீட்சை பேப்பர் திருத்துபவரை ஒருமுறை ரயிலிலிருந்து தள்ளுவதாகப் பயமுறுத்தியதில், ரமணி எல்லா சப்ஜெக்டிலும் பாஸ். கெமிஸ்டரி கிருஷ்ணசாமி ஒருமுறை வெற்றுப் பேப்பருக்கு நாற்பத்தைந்து போட்டார். ஓரத்தில் இரண்டு வரிதான் எழுதியிருந்தான்… ‘‘பட்டா, மார்க் போடலை… தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல தள்ளிடுவேன்’.’ தண்டவாளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அத்தனை ரெயில்களும் ஹாஸ்டலுக்கு அருகில் அலறிக்கொண்டு செல்லும். ‘‘எதுக்கப்பா பொல்லாப்பு, ரெண்டு பொண்ணு, வயசான அம்மா இருக்கா. கிறுக்குப் பய ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துட்டான்னா?’’ என்று மார்க் போட்டு விட்டார்.


திடீர் என்று ராத்திரி ஒன்பதரைக்கு ‘‘வா ஓடியன்ல புதுப் படம் போலாம்’’ என்று எல்லாரையும் திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போவோம். ரமணி, ‘‘டிக்கெட் வாங்கிட்டு வரேன்’’ என்று படியேறிவிடுவான். ட்ரெய்ன் வந்து எல்லோரும் ஏறிக்கொள்ள அது நகர்ந்ததும் ரமணி எங்கள் தேசிய கீதமான ‘‘முண்டபக்கற மாரபக்கற ஓய் ஓய் ஓய்! சைதாப்பேட்டை க்ரோம்பேட்டை ஓய் ஓய் ஓய்!’’ சொல்லியபடி இறங்கி, ‘‘டேய் டிக்கெட் வாங்கலைடா, போய்ட்டு வாங்க’’ என்று டாட்டா காட்டுவான்.


இவன் கொட்டம் தாங்க முடியாமல் அத்தனை பேரும் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தாலும் அவனை நேர்கொள்ளும்போது நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நம் எல்லோரிடமும் உள்ள கோகுல கிருஷ்ணனின் விஷம இச்சை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக ஆண்கள் காலேஜில் ஒரு பெண் லெக்சரராக சேரப்போகிறாள் என்று தெரிந்தபோது கதிகலங்கிப் போனோம். எப்போது ராஜினாமா கொடுப்பாள், மூணு நாளா… ஒரு வாரமா? என்று ரமணி இல்லாதபோது பந்தயம் கட்டி னோம்.


‘‘எலக்ட்ரானிக்ஸ் லெக்சரர்றா… ரமணி ஆட்டோ. அதனால ப்ரச்னை வராது’’ என்றேன்.

‘‘ஹாஸ்டல்ல ரூம் கொடுக்கப் போறாங்களாம்.

‘‘போச்சுரா.

’’
அவளை முதலில் ஸ்டேஷனில் வைத்துத்தான் பார்த்தோம். இந்த வருஷம்தான் பாஸ் பண்ணியிருக்க வேண்டும். படிப்பிலேயே கவனமாக, உடம்பை பார்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள் போல. மொத்தமே பத்து கேஜிதான் இருந்தாள். அஞ்சடிக்கு ஒரு அங்குலம்தான் மிஞ்சியிருந்தாள். பலமாக ஊதினால் விழுந்துவிடுவாள். ரமணி அவளை ஒற்றைக் கையால் தூக்கிவிடலாம். யாராவது காதலிக்க வேண்டும் என்றால் மிகுந்த கற்பனை வேண்டும் என்று தோன்றியது.


‘‘குழந்தைடா அது’’ என்றான் நித்யானந்தன். ‘இரு’ என்றான் ரமணி. அவள் வந்து சேரும்போதே, ரமணியை சந்திக்கும் துரதிர்ஷ்டமாகிவிட்டது. சபர்பன் ரயில் நிலையத்தில் புது ஜமக்காளம் சுற்றின படுக்கையும் தகரப் பெட்டியும் நடுவயதுத் தந்தையுமாக வந்து இறங்கியபோது, ரமணி ரெயில்வே பெஞ்சில் சிகரெட் கடைக்காரனிடம் கடன் சொல்லிக்கொண்டு இருந்தான். ‘‘குடுக்கலைன்னா என்ன ரமணி? ஒண்ணாம் தேதி குடு. அதுக்கு எதுக்கு கையை முறுக்கறே!’’

‘‘எக்ஸ்க்யூஸ் மி! ஹாஸ்டலுக்கு எப்டி போகணும்?’’

ரமணி சட்டென்று அஜித்குமாரின் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொண்டு அருகே சென்று ‘‘ஐயா எனக்கு அனகாபுத்தூர் போகணும். மெயின் ரோட்டுக்கு போகணும்… கண் தெரியலை. கூட்டிட்டுப் போறீங்களா?’’


‘‘ஸாரி ஸாரி’’ என்றாள்.


‘‘இவன் பேரு மோகன்தாஸ் காந்தி. எனக்காகப் பரீட்சை எழுதுவான். ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத் திருக்காங்க’’


‘‘மன்னிச்சுக்கங்க. நாங்களே குரோம்பேட்டைக்குப் புதுசு. உங்க பேர்?’’

‘‘அனகாபுத்தூர் அழகேசன்’’.


அனைவரும் சிரிப்பை அடக்கி கொள்வதைப் பார்த்தாள்.

‘‘அனகாபுத்தூரா?’’ என்று நான் வியக்க, ‘‘சும்மாரு’’ என்று அதட்டினான்.


‘‘எதிர்லயே ஹாஸ்டல் தெரியறதே’’ என்றாள்.

‘‘பர்ஸ்ட் இயரா நீங்க?’’ என்றான்.

‘‘இல்லை, லெக்சரரா சேர வந்திருக்கேன்’’.

‘‘லெக்சரரா?’’ என்று அட்டகாசமாகச் சிரித்தான். தந்தை ‘‘ஜோதி! வா, கண்டவாளோட பேசாதே!’’

ரமணி எழுந்து அப்பனின் சட்டையைப் பிடித்தான்.

‘‘என் பேரு கண்டவன் இல்லை. மரியாதையா பேரு கேளு. தி நேம் இஸ் எல்.ரமணி’’

‘‘ஏய் சட்டையை விடு’’.

ரமணி, ‘‘டேக் இட் ஈசி. நீங்க போங்க சார். பாப்பா பயந்துக்கப் போறது. இப்படியே மேம்பாலத்தைக் கடந்தா அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கு’’.


‘‘என் பேர் கண்டவனாடா?’’

‘‘கண்டுக்காதே ரமணி’’.

‘‘வாம்மா, ஸ்டேஷன் மாஸ்டரைக் கேக்கலாம்’’.

‘‘கணபதி ஐயர்! உம்ம பொண்ணு எப்படி சேர்றான்னு பாத்துர்றேன்!’’ என்றபோது ‘‘என்ன நீ மரியாதை இல்லாமப் பேசறே?’’ என்று அந்த பெண் ரமணியை அதட்டினாள். சற்று நேரம் பூமி சுழல்வது நின்றது.


இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நாங்கள் பயந்துகொண்டு ரமணியை பார்க்க, அவள் யதார்த்தமாக, ‘‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருக்கு. என்னைத் தடுக்க நீ என்ன டைரக்டரா?’’


ரமணிக்கு இது புதுசு. இது வரை அவனை எதிர்த்தோ, ஏன் சமமாகவோகூட யாரும் பேசியதில்லை.


‘‘வா ஜோதி’’.

‘‘ஜோதியா? கவனிச்சுக்கறேன்.’’


ஜோதி ரிஜிஸ்ட்ராரிடம் பொறுப்பேற்ற கையோடு நடந்ததை ஒரு புகார் கடிதமாக எழுதிக் கொடுத்தாள். அப்போது ஆரம்பித்தது யுத்தம். டைரக்டர், ரமணியைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ‘‘உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ப்ராக்டிக்கல். ஜோக்ஸ் செய்றியாம். மனசுக்குள்ள என்னன்னு நினைச்சுட்டிருக்கே? ஒழுங்கா படிச்சு வெளிய வரணுமா? டிஸ்மிஸ் ஆகணுமா?’’


ரமணி தாசனுதாசனாக ‘‘சார் இனிமே அந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் வராது. இது உறுதி. எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. விசாரிச்சுப் பாருங்க. ஸ்டேஷன்ல என் சாயல்ல ஒரு பிச்சைக்காரன் இருக்கான் சார். அவன் பேரும் ரமணி. அவனைப் பத்திதான் என் மேல குற்றம் சொல்லியிருக்காங்க. புதுசில்லையா? காலைலதான் ஊர்லருந்து வந்தேன்’’


‘‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஸ்டேஷன்ல மிஸ் ஜோதிகிட்ட நீ நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுது முதல்ல.’’


‘‘எழுதலைன்னா என்ன ஆகும் சார்… தெரிஞ்சுக்கலாமா?’’


‘‘உன்னை சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்.’’.


‘‘வேண்டாம் சார். எங்கம்மா அப்பா உயிரை விட்டுருவாங்க. ரெண்டு பேருக்கும் ஹார்ட் வீக். எந்த பேப்பரைப் வேணா காட்டுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்.’’


அந்தக் கடிதத்தில் ‘‘சாது ரமணதாஸ், கேம்ப் மெட்ராஸ் 44’’ என்று கையெழுத்துப் போட்டான்.


அந்தப் பெண் இரண்டாம் வருஷத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்தபோது வகுப்பில் வந்து ரமணி உட்கார்ந்தான். அவனைப் பயத்துடன் பார்த்தோம்.


‘‘ரமணி இது உன் க்ளாஸ் இல்லை’’

‘‘அட ஜோஜோ… எப்படி சொல்லிக் கொடுக்கறதுன்னு டைரக்டர் ரிப்போர்ட் கேட்டிருக்கார்’’.

ஜோதி, ‘‘தி பீரியட் ஆஃப் தி மல்ட்டி வைப்ரேட்டர் இஸ் ஒன் பை ஸி ஆர்’’ என்றபோது, ‘‘உன் பீரியட் எப்ப?’’ என்றான். அவள் எழுதுவதை பாதியில் நிறுத்தி கரும்பலகையிலிருந்து திரும்பிப் பார்த்தாள். ‘‘ரமணி, இது உன் கிளாஸ் இல்லை. இப்ப வெளிய போ’’ என்றாள்.


‘‘நான் ஃபேகல்ட்டி மாத்திட்டேன். இப்ப எலக்ட்ரானிக்ஸ்’’.
‘‘கிளாஸ் ரிஜிஸ்டர்ல உன் பேர் இல்லை. போ… கெட் அவுட்.’’

‘‘நீயே எழுதிக்க என் பேரை. எல்.ரமணி. டி.நம்பர் 504. இல்ல கொடு, நான் எழுதறேன்’’.

ரிஜிஸ்தரில் தன் பெயரை எழுதினான். ‘‘லேடி லேடி, எங்கிட்ட வாடி. எல்லாம் சொல்லித் தாடி’’

ஒரு கணம் அவனையே கோபமாகப் பார்த்தாள். அந்த எளிய முகத்தில் அத்தனை கோபம்தான் சாத்தியம் என்பதுபோல் சட்டென்று கண்களில் நீர் நிரம்பியது. எத்தனை சபைகளில் எத்தனைப் பெண்கள் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்தமான பிரதிநிதிபோல சரித்திரம் கடந்து சற்றுநேரம் நின்றாள். பிறகு சாக்பீஸ் கையைத் துடைத்துக்கொண்டாள்.


‘‘தங்கைகளைப் படிக்கவெக்க முதமுதலா வேலைக்கு வந்து சேர்ந்திருக்கேன். ஏன் இப்படிப் படுத்தறீங்க?’’ என்றாள்.

ரமணி ‘‘டேய் படுத்தாதீங்கப்பா. எத்தனை தங்கைங்க?’’ என்றான். சிகரெட் பற்றவைத்தான். பெஞ்சின் மேல் கால் போட்டுக்கொண்டு ஊதினான். எதிர்பாராதவிதமாக ஜோதி என்னைப் பார்த்து, ‘‘576, நீ போய் ரிஜிஸ்ட்ராரைக் கூட்டிட்டு வாப்பா’’ என்றாள்.

ரமணி என்னைப் பார்த்து, ‘‘ரங்குஸ், பலி விழும்’ என்றான்.

நான் மௌனமாக இருக்க, ‘‘கிளாஸ்ல நாப்பது பேர் இருக்கீங்க.. யாருக்கும் தைரியம் இல்லையா?’’ என்றாள். துரியோதனின் சபைபோல மௌனம்,.
‘‘நான் போறேன் மிஸ். எங்கிட்ட லெட்டர் குடுங்க’’ என்றான் ரமணி
அவளே போர்டை அழித்துவிட்டு டைரக்டரைச் சந்திக்கச் சென்றாள்.
மறுநாள் நோட்டீஸ் போர்டில் எல்.ரமணியின் மேல் மூன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிட்டிருந்தது. ‘தப்பான வகுப்பறையில், தவறான வார்த்தை
கள் பேசினது, வகுப்பில் புகை பிடித்தது. விசாரணை முடியும் வரை ரமணிக்கு வகுப்புகளில் நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவித்தது.
அதன் பிரதியை ப்யூன் கொண்டு வந்து கொடுக்க ரமணி அவனைத் துரத்தி அடித்தான். ‘‘வக்காளி, எனக்கு நோட்டீஸ் குடுக்க வைஸ் சான்சிலர் தாண்டா வரணும். எல்லாத்தையும் எல்லாரையும் பத்தவைக்கிறேன் பாரு. சிட்டில உள்ள அத்தனை காலேஜ்லயும் ஸ்ட்ரைக்’ என்று ஆபீஸ் வளாகத்தில் சத்தம் போட்டான்.

அப்படி ஏதும் நிகழவில்லை. ஹாஸ்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றான். நடுராத்திரியில் திரும்பி வந்து ஜோதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு முன் சத்தம் போட்டான். ‘‘வெளிய வாடி ஏய்!’’ என்று கல்லெறிந்தான். புது ஹாஸ்டல் கட்டுவதற்காகக் கட்டியிருந்த தற்காலிக நீர்த் தொட்டியில் குதித்து ஈரமாக வந்து அவள் கதவைத் தட்டினான். ‘‘ஜோதி ஏய் ஜோதி, ரியலி சாரி ஜோதி. எனக்குப் பேதி ஜோதி. நான் ஏன் அப்படின்னு வெளிய வந்தா சொல்றேன். ஐ லவ் யு ஜோதி!’’

அந்த அறை இருட்டாக மௌனமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து டிசௌஸா, மொரைரா, வெங்கடேசன், நான் எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றோம். அந்த அறையில் சலனமே இல்லை. பாவம் அந்தப் பெண், கிலியில் நடுங்கிக்கொன்டு சுருண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.


ஹாஸ்டலிலிருந்து வகுப்பறைக்குச் செல்லும் பாதையில் சரக்கொன்றை மரங்களும் செம்பருத்தியும் நிழல் தரும் ஃபுட்பால் மைதானத்தில் ஒரு டக்கோட்டா ஏரோப்ளேன் இருக்கும். பேருந்துகளின் பணிமனை ஒன்று இருக்கும். ஜோதி அவ்வழியே தன் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற போது, ஒரு புல்லட்டில் கடகடவென்று புழுதி பறக்க ஓட்டிவந்து அவளருகில் சுற்றி நிறுத்தி, ‘‘வா வா, க்ளாஸ்ல கொண்டுவிடறேன்’’. அவள், ‘‘என்கூட பேசாதே’’ என்று விரைவாக நடக்க, அடிக்கடி த்ராட்டிலை விர்விர் பண்ணிக்கொண்டு பாடிகார்டு போல கூடவே ஓட்டி வந்தான்.


அவள் மேலாடைத் தாவணியைப் பிடித்து இழுத்ததாக ஜோதி தன் புகார் கடிதத்தில், போலீஸ் எழுதச் சொன்னார்கள். பாதுகாப்பு கேட்டிருக்கிறாள். பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார். டைரக்டரின் அலுவலகத்திலும் அவர் க்வார்ட்டர்ஸிலும் போலீஸ்காரர்கள் நின்றார்கள். டைரக்டருக்கு மகா கோபம். மன்னிப்பே கிடையாது என்று வி.சி. ஆபிஸக்கு எழுதி பர்மிஷன் வாங்கி கேம்பஸைவிட்டு நீக்கி மூணு வருஷம் ரஸ்டிகேட் பண்ணும்படி சிபாரிசு செய்தார். லெக்சரர் டி.எம்.டி. ஜோதியைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வாரண்ட்டுடன் வந்திருந்தார்கள்.


ஹாஸ்டலில் ரமணியைத் தேடினால் காணவில்லை. மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக முடிச்சு முடிச்சாகக் கூடி இருக்க, டைரக்டரிடம் இந்த தடவை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.


அவர், ‘‘படிக்கிற பையன், ரேங்க் வாங்குற பையனுக்கு மன்னிப்பு கேளுங்கப்பா. இந்தப் பொறுக்கி எல்லாரையும் கொடுமைப்படுத்திருக்கான். இவனை யாராலயும் காப்பாத்த முடியாது.’’.

‘‘இருந்தாலும் இத்தனை கடுமையாத் தண்டிக்கணுமா?’’

‘‘இது குறைந்தபட்சத் தண்டனை. யூனிவர்சிட்டி ரூல்ஸ் அப்படி’’ என்றார்.

‘‘யாராவது ரமணிகிட்ட போய்ச் சொல்லி ஊருக்குப் புறப்பட்டுப் போகச் சொல்லிரலாம்’’ என்று யோசனை சொன்னார்கள். ‘‘இல்லைடா, அவனை ஒருமுறை உள்ள தள்ளினால்தான் புத்தி வரும்’’

‘‘மூணு வருஷம் டீபார் பண்றது தப்புடா. அவன் வாழ்க்கையே பாழாகிடும்’’.

ரமணி லோக்கல் ட்ரெய்னிலிருந்து இறங்கி தூரத்தில் வந்துகொண்டு இருக்க, அவனை நோக்கி ஓடினேன். ‘‘ரமணி இப்படியே ஊருக்குப் போய்டு. உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்காங்க.’’

‘‘அப்படியா? வெரிகுட் வெரிகுட்… எங்க?’’

‘‘டைரக்டர் ஆபிஸ்ல… போய்டுரா.’’

‘‘தேவையில்லை. யார் அந்த இன்ஸ்பெக்டர்? விசாரிக்கிறேன்.’’

‘‘ரமணி உன்னை மூணு வருஷம் டீபார் பண்ணிருக்காங்க. ஜெயில்ல போடுவாங்க. இது விளையாட்டில்லை புரியுதா?’’

‘‘என்னடா தப்புப் பண்ணிட்டேன்? எதுத்தாப்பல பஸ் வருது. ஒதுங்கிக்கன்னு அந்தப் பொண்ணைத் தொட்டேன், அவ்வளவுதான்’’.

‘‘நம்பச் சொல்றியா? ஏன் இப்படி மரமண்டையா இருக்கே ரமணி?’’

‘‘பாரு, நம்பாட்டிப் போங்க. ஐ டோண்ட் கேர்’’.

‘‘ரமணி சாரிடா’’.

‘‘நானே சாரி இல்லை. நீ ஏண்டா சாரி. ஜோதி அக்கா… எப்படி இருக்காங்க?’’

‘‘பயத்துல இன்னிக்கு பூரா கிளாஸ் வரலை. டைரக்டர் ஆபீஸ்லயே இருக்காங்க.’’

‘‘போய்ப் பார்த்தாகணும்’’.

‘‘வேண்டாம் ரமணி’’.

‘‘போடா!’’
டைரக்டர் ஆபீசில் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம். ‘‘ரமணி ரமணி’ என்று கோஷமிட்டதும் ரமணி அரசியல் தலைவன்போல வணங்கிவிட்டு ‘உங்களுக்கெல்லாம் நண்பர்களே, ரோஷமுள்ளவர்களே! நாட்டுக் கட்டைகளே! என் மேல இருக்கிற அக்கறைக்காக ஆளுக்கொரு ஏக்கரா நிலம் ஜூலியஸ் சீஸர் உங்களுக்கு கொடுத்தாச்சு பழவந்தாங்கல்ல. தட்டுங்கடா கையை! வாழ்க ஜோதிபாய். மெஸ்ல நெய் ரோஸ்ட் போடச் சொல்லு. இப்ப வந்துர்றேன்’’ என்று உள்ளே சென்றான்.


உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து முதலில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டு ரமணி மெல்லத்தான் வெளியே வந்தான். அவன் கையில் விலங்கு மாட்டினதுபோல் கர்ச்சீப் கட்டியிருந்தான். அதைச் சடுதியில் பிரித்து அவிழ்த்து, ‘‘த்ரீ சியர்ஸ் டு ஜுலியஸ் சீஸர், ஹிப் ஹிப் ஹ§ர்ரே, முண்ட பக்கற மார பக்கற ஓய் ஓய் ஓய்!’’ சொல்லிவிட்டு இரு கைகளையும் உயர்த்தி ‘‘கை தட்டுங்கடா. எல்லா ஆர்டரையும் வாபஸ் வாங்கிட்டாங்க. போலீஸ் கேஸ§ம் வாபஸ்’’.


நாங்கள் குதூகலத்துடன் ‘‘என்னம்மா…எப்படி?’’


‘‘ஒரே ஒரு பொய் சொன்னேன். சால்வ் ஆயிருச்சு. நமக்குக் கைவந்த கலையாச்சே’’


‘‘என்னடா சொன்னே?’’


‘‘எனக்கு லுக்கிமியா… ஆறு மாசத்தில சாவப்போறேன். அந்த துக்கத்தை மறக்கத்தான் இந்த தமாஷ் எல்லாம் செய்தேன்னேன். டைரக்டர் அப்படியே அழுதுட்டார். அந்தப் பெண்ணும் தேம்பித் தேம்பி அழுதுது. பாரு எம்மேல சாஞ்சுகிட்டு அழுததில சட்டையெல்லாம் ஈரம்! எல்லா புகாரையும் வாபஸ் வாங்கிடுத்து. இன்ஸ்பெக்டர்கூட புறப்படறப்ப ஓரக்கண்ணைத் துடைச்சுகிட்டுத்தான் போனார். பாத்தியா? இந்தா சாப்பிடு’’ என்று வேர்க்கடலை கொடுத்தான்.


அதை உடைத்தபோது உள்ளே எதிலும் பருப்பு இல்லை! ரமணியின் மற்றொரு ஏமாற்று வித்தை.


‘‘டேய் போறுண்டா. இனிமேலாவது பொய் சொல்றதை விட்டுருடா.’’


‘‘பொய்தாண்டா என் உலகத்தை சுவாரஸ்யமாக்கறது. பொய் இல்லைன்னா வாழ்க்கையே … உலகமே இல்லை!’’ என்றான்.


மூன்றாவது செமஸ்டருக்குள் ஜோதி ராஜினாமா கொடுத்து விட்டாள். கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போய் விட்டதாகச் சொன்னார்கள்.

ஊருக்குப்போன ரமணி மூன்றாவது செமஸ்டருக்கு வந்து சேரவே இல்லை. அதன்பின் அவனை நாங்கள் பார்க்கவே இல்லை. ஏன் என்று விசாரிக்கப் பயமாக இருந்தது.


நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய்,சிறுகதைகள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL14wJu9e9O_PLdPtcyr__0Bk2HIaKfgjWPOmr1JYNm_Nfpv3E5faZsQnxaErcOkENBT1dVhOhxIq7OFFpoKG2rT796s7YSeFBM92d9GppyHCM2Y6bfkhh_G_EP4PJZqGNDckF_FdC827k/s320/writer+sujatha+family+2.jpg

Wednesday, April 18, 2012

CRASH POINT BERL IN - ஹாலிவுட் த்ரில்லர் சினிமா விமர்சனம்

http://i41.tinypic.com/20f43ef.jpg 

90 பேர் பயணம் செய்யும் ஃபிளைட் கிளம்பறப்ப ரன் வேல ஒரு மோதல்.... லைட்டா விமானத்துல அடிப்பட்டுடுது... விமானி கவனிக்காம மேலே போயிடறார்.. ஐ மீன் டோட்டலா இல்ல.. வானத்துல மேலே போயிடறார்.  விமானம்  தி மு க கட்சி மாதிரி ஜாம் ஆகிடுது.. 

தலைமை விமானி ஜெ மாதிரி.. தான் சொல்றது தான் சரின்னு சொல்ற ஈகோ பிடிச்ச ஆள்.. துணை விமானி தான் ஹீரோ.. அவர் ராகுல் காந்தி மாதிரி.. எந்தக்காலத்துல ராகுலுக்கும், ஜெவுக்கும் ஒத்து போய் இருக்கு?இருக்கற ஆபத்து பத்தாதுன்னு 2 பேரும் வாக்குவாதம் பண்ணியே டைம் வேஸ்ட் பண்றாங்க.. 

இப்போ பிரச்சனை என்னன்னா விமானத்துல அடிப்பக்கம் ஓட்டை ஆகிடுச்சு. விமானம் எங்காவது விழுந்து மோதப்போகுது.. விமானத்துல  ஏகப்பட்ட பயணிகள் இருக்காங்க.. 


http://i2.listal.com/image/904066/600full-crash-point%3A-berlin-screenshot.jpg

 விமானம் விழப்போகும் இடம் பெர்ல் என்ற இடம்.. மினிஸ்டர் என்ன நினைக்கறார்னா ஆனது ஆகிடுச்சு விமானம் இங்கே வந்து விழுந்தா ஏகப்பட்ட உயிர் பலி ஆகும்.. அதனால கடைசி வரை முயற்சி பண்றது. காப்பாத்த முடியலைன்னா 2 ஜெட் விமானம் அனுப்பி நடு வானிலேயே அந்த பயணிகள் விமானத்தை அழிச்சிடறது.. 


இப்போ விமானத்தில் பயணம் செய்யும் ஒரு எலக்ட்ரிக்கல் எஞ்சினியர், ஒரு சின்னப்பையன் உதவியோட  ஓரளவு  விமானத்தை சரி பண்ணிட்டாங்க.. ஆனா அந்த விமானத்தை அழிக்க ஜெட் விமானம் 2ம் வந்துடுது.. 

 பயணீகள் நிலை என்ன? உயிர் தப்பிச்சாங்களா? ஹீரோவான துணை பைலட்டும், ஹீரோயினான ஏர் ஹோஸ்டலும் லிப் டூ லிப் கிஸ் அடிச்சாங்களா? போன்ற சுவராஸ்யமான கேள்விகளுக்கு படம் பாருங்க.


கிட்டத்தட்ட பயணம் கதை போல் தான்.. அதுல தீவிரவாதி இருக்கான். இதுல அதெல்லாம் இல்லை. மற்றபடி பிரச்சனை ஒண்ணுதான்.  பயணம் செய்யும் எல்லா பயணிகளையும் நம் மனசில் பதிய வைக்க இயக்குநர் கையாளும் உத்தி கிளாஸ்.. 

விமானி,உதவி விமானி இருவருக்குமான உரையாடல்கள் குட்.. ஹீரோயின் செம ஃபிகர்ப்பா என கொண்டாட முடியாவிட்டாலும் மொக்கை ஃபிகர் என திண்ட்டாட தேவை இல்லை

60 டன் எடை உள்ள விமானம் 400 கிமீ வேகத்துல போகுது.. 35 நிமிஷத்துல மோதப்போகுது என டெம்ப்போ ஏத்தும் விஷயத்தில் இயக்குநருக்கு கிடைப்பது வெற்றி

http://myfilms.pl/thumb/1_11077.jpg


மனம் கவரும் வசனங்கள்


1. ஏமாறுவதற்காகவே உருவான இனம் தான் பெண் இனமா? ( மனசுக்குள்ள நயன் தாரான்னு நினப்பு )


2.  மிஸ். நைட் டின்னர்க்கு வர்றீங்களா?

 அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்.. 

 நீங்க சாப்பிடுவீங்களா? எப்பவும் சாப்பிடவே மாட்டீங்களா? 

இப்படியே 2 பேரும் கடலை போட்டுட்டே இருந்தா  ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவீங்க. 


3. ஹாய் மிஸ்.. என் கூட வந்துடறீங்களா? உங்களை “ வெச்சு” காப்பாத்துறேன்

 ஹா ஹா கண்டிப்பா.. பைலட் கிட்டே சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்.. 


4.  எதுக்காக என்னை கிஸ் பண்ணுனீங்க? 

 ஹி ஹி சும்மா குடுத்துப்பார்த்தேன்


5.  எப்படி 50 வருஷமா ஒரே மனைவி கூட  காலம் தள்ளறீங்க?

 எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருக்கறப்பவே நம்ம மனசுல இருக்கறதை சொல்லிட்டா எப்பவும் சண்டையே வராது.. 


6. தைரியமா இருக்கற மாதிரி நடிக்காதே.. அது உன்னால முடியாது


7. நம்ம மேரேஜ் ரிங்க் எங்கே?

 அது தொலைஞ்சு  ஒரு வாரம் ஆகுது.. அதையே இப்போ தான் பார்க்கறீங்களா? ( ஏம்மா. புருஷனுக்கு 1000 வேலை இருக்கும், சம்சாரத்தோட விரலை எல்லாம் பார்க்க நேரம் இருக்குமா? ஹி ஹி )


8.  விமானத்துல ஒரு கோளாறு.. சரி பண்ண 4 பேர் கீழே வரனும்.. 

 நீங்க போகாதீங்க.. வேற யாராவது போகட்டும். 

 யாரும் போற மாதிரி தெரியலை


9. இந்த உலகத்துல ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு நமக்கு நெருக்கமான உறவோட உயிர் இறப்பு


http://www.carl-duisberg-deutschkurse.de/uploads/pics/berlin_03_daf_06.jpg


10. சப்போஸ் இந்த விபத்துல நாம தப்பிச்சுட்டா அதுக்குப்பிறகு வாழும் வாழ்வு ரொம்ப புதுசாவும் அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்.


11. கோல்டு மெடலிஸ்ட் பொண்ணு மாதிரியா அவ நடந்துக்கறா? எல்லாத்துலயும் அலட்சியம். இந்த உலகத்துல கஷ்டப்படாம முன்னேறனும்னு நினைக்கறதே தப்பு

12. அவருக்குப்பதிலா நீங்க யாராவது போய் செத்து இருக்கலாமே. இப்படி அநியாயமா செத்துட்டாரே..? இல்லை நீங்க தான் அவரை கொன்னுட்டீங்க.



13. ஒரு கை  மட்டும் நல்லா  இருக்கற பைலட்டால எனக்கு எந்த வித பயனும் இல்லை. அதனால.......


14.  இந்த ஐ பேட்ல 500 பாட்டு இருக்கு.. சாகரதுக்கு முன்னால எந்தப்பாட்டை கேட்டா நல்லது?

15. பறந்துட்டு இருக்கறப்ப முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் பைலட்டுக்கு மட்டுமே உண்டு. வேற எவனுக்கும் அது கிடையாது


16. வயசாச்சுன்னாலே பல பிரச்சனைகளை நாம சந்திக்க வேண்டி வருது

17. இந்த விமான விபத்தால நீங்க கத்துக்கிட்டது என்ன? 

நமக்கு கிடைச்ச இந்த லைஃப்ல மத்தவங்களைப்பற்றியும் திங்க் பண்ணனும்


http://nylonsmovies.com/images/cache/screen_image_237861.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள்


1.  விமானத்தில் அவ்வளவு பெரிய ஓட்டை விழுந்து இருக்கு.. விமானம் 3400 அடி  உயரத்துல 400 கி மீ வேகத்துல போகுது.. அங்கே எவ்ளவ் காத்து இழுக்கும்? கிட்டே போனாலே இழுத்து தூக்கி வெ:ளீல வீசிடுமே.. ஆனா விமானத்துல இருக்கற அந்த குண்டு எஞ்சினியர், விமானி கேப்டன், துணை விமானி அந்த சின்னப்பையன்னு எல்லாரும் என்னமோ போயஸ் தோட்டத்துக்குள்ள சசிகலா போற மாதிரி சர்வ சாதாரணமா போய்ட்டு வர்றாங்களே.. அது எப்படி?

2. விமானத்துல போறப்ப செல் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கனும்கறது விதி ( ரூல்ஸ்) ஆனா ஒரு ஆபத்து  வந்த பின் சிக்னல் கிடைக்கலை.. எல்லாரும் செல் ஆஃப் பண்ணுங்கன்னு சொல்றாங்களே அது ஏன்? அதைக்கேடு ஒரு ஆள் இதென்ன புதுக்கதையா இருக்கு? செல் ஆஃப் பண்ண முடியாதுனு சொல்றாரே?

3. துணை பைலட்டுக்கு விமானத்தை காப்பாத்தவும், கேப்டன் கிட்டே வாக்குவாதம் செய்யவும் தான் நேரம் சரியா இருக்கு. ஹீரோயின் கூட ரொமான்ஸ் பண்ண நோ சான்ஸ்.. அதுக்குப்பதிலா எலக்ட்ரிக்கல் எஞ்சினியருக்கு ஹீரோயினை ஜோடியா போட்டிருந்தா ரொமான்ஸ்க்கு ரொமான்ஸ்.. ஜாலிக்கு ஜாலி ( சும்மா ஜோக் )

3. விமானம் இறக்க முடியலை, எல்லா பயணீகளும் முன்னால வந்து உக்காருங்கன்னு சொன்னதும்.. எல்லாரும் எந்திரிக்கற மாதிரி காட்றாங்க.. ஆனா மறுபடி வர்ற சீன்கள்ல எப்பவும் போல அவங்கவங்க சீட்ல தான் இருக்காங்க.. 

4. க்ளைமாக்ஸ்ல கேப்டன் விமானத்தின் ஓட்டைக்கு கீழே அந்தரத்தில் தொங்கறார்.. அப்போ காத்து பயங்கரமா அடிக்கும்.. ஆனா வீரபாண்டியக்கட்ட பொம்மன் மாதிரி வசனம் எல்லாம் பேசறார்... அது எப்படி கேட்கும்?

5. ஜெட் விமானம் 2ம் விபத்து நடந்த விமானத்தை அழிக்க கிட்டே போய் நிக்குது.. இன்னும் 35 செகண்ட்ல நீங்க அந்த விமானத்தை அழிக்கலாம்னு ஆர்டர் வருது.. ஆனா அதுக்குப்பிறகு 20 நிமிஷமா சும்மாவே இருக்காங்க.. 


6. அந்த 60 வயசான ஜோடிங்க மேல எரிச்சல் தான் வருது.. பாசமோ அல்லது பரிதாபமோ வர்லை.. ஒரு வேலை வயசுக்கு மீறிய காதலில் இருப்பதாலா? தெரியலை.. 


http://berlin.cafebabel.com/public/berlin/Berlinale/2011/20110081_6.jpg

பரபரப்பான, விறு விறுப்புகுறையாத இந்த த்ரில்லரை அனைவரும் பார்க்கலாம்.. பெண்கள் பார்க்கும் தரத்தில், குழந்தைகளூம் பார்க்கும் விதத்தில் படம் இருக்கு.. 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன். இது 2009ல ரிலீஸ் ஆன படம் 90 நிமிஷங்கள் ஓடுது.. இது உண்மைச்சம்பவத்தை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட படம்

Director:

Thomas Jauch

Writers:

Bettina Platz, Marc Hillefeld

Stars:

Peter Haber, Maximilian von Pufendorf and Bernadette Heerwagen
http://www.probertencyclopaedia.com/photolib/people/Bernadette%20Heerwagen%20(PD).jpg


Friday, February 04, 2011

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilnow.com/movie/images/yutham-sei.jpg

காதல் கதையை எந்த அளவு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அதே மாதிரி ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியையும் மென்மையாக சொன்னதற்காகவே  இயக்குநர் மிஷ்கின் பாரட்டுக்கு உரியவர் ஆகிறார்.சாஃப்ட் ஹீரோ என பெயர் எடுத்த யதார்த்த நாயகன்  சேரன் இந்த படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கின் எல்லை வரை சென்று அடக்கி வாசித்திருக்கிறார்.

படத்தோட கதை என்ன?சொல்றக்கு தர்மசங்கடமா இருந்தாலும் முடிஞ்சவரை கவுரவமான வார்த்தைகளில்  சொல்றேன்.பெண் சுகத்தை அனுபவிக்க முடியாத 60 வயசு கிழ போல்ட்டுங்க ஆள் வெச்சு பெண்களை கடத்திட்டு வந்து குடோன்ல தங்களோட அடியாளை விட்டு ரேப் பண்ண சொல்லி லைவ் ஷோ பார்க்கறாங்க. அவங்க காரியம் முடிஞ்சதும் கொலை பண்ணிடறாங்க.. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பெற்றோர் அந்த கும்பலை பழி வாங்கறாங்க..

கேட்கறதுக்கு சங்கடமா இருக்கற கதையோட ஒன்லைனை இயக்குநர் முடிஞ்சவரை ரொம்ப டீசண்ட்டா சொல்லி இருக்கார்..வெல்டன் ஒர்க்.


படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல இருந்தே தன்னோட ஃபேவரைட் டாப் ஆங்கிள் ஷாட்ஸ்,ஒயிடு ஆங்கிள் ஷாட், சிம்பாலிக் ஷாட்னு இயகுநர் அசத்தறார்.சேரன் அறிமுக காட்சி எந்த பில்டப்பும் இல்லாம சாதாரணமா இருக்கறதே நல்லாருக்கு.. ஆனா அவரால ஒரு சி பி சி ஐ டிக்கான தோரணை, பாடி லேங்குவேஜ் இதெல்லாம் மெயிண்ட்டெயின் பண்ண முடியல.உயரம் கம்மி,எக்சசைஸ் பாடி இல்லை.. இருந்தும் இவரைக்களம் இறக்கியது துணிச்சல்தான்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7coTQrjvLNBH5oGH8bibFpZN41QkoIBUbG4cXKjhlKGbrCN3c7dl9LxPuHlqkCS3XBhAwF7pH_yuUebbzEhk10APpuU8twGXU92I5DDhYsMhqVZdEkkHaL3Vr9DQah7JOSnMqpZYGHmdL/s1600/Yutham-Sei-Poster-3.jpg
சேரன் மேலதிகாரியையோ,சக ஆஃபீசர்ஸையோ மதிக்காம தெனாவெட்டா நடக்கறது விக்ரம் பட கமல் நடிப்பை ஞாபகப்படுத்துது...அப்படி அவர் நட்ந்துக்க காரணம் தன்னோட தங்கை கடத்தப்பட்டதுதான் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

அதே போல் ஒரு போலீஸ் ஆஃபீசருக்குண்டான டிரஸ்ஸிங்க்சென்ஸ் என்ன?என்பதை சேரன் சரியாக அப்சர்வ் பண்ணாமல்  இருக்கிறார்
(அன் யூனிஃபார்ம்ல இருக்கறப்ப கட்டம் போட்ட சட்டை போடறது, சட்டையின் முதல் பட்டனை கழட்டி விட்டிருக்கறது...இப்படி..)

படம் போட்ட முதல் 25 நிமிஷங்களுக்கு பின்னணி இசை ஒரு ஆர்ட் ஃபிலிமுக்குண்டான இசை தான். இயக்குநரின் அபார தன்னம்பிக்கை அசர வைக்கிறது.


போலீஸ் என்கொயரி நடத்தும்போது சேரனின் பாடி லேங்குவேஜ் அழகு..அவர் என்கொயரியில் உதவி செய்த சிறுமிக்கு கை கொடுத்து நெகிழ்வது பரவசமான காட்சி.


http://mimg.sulekha.com/tamil/yudham-sei/yudham-sei_m.jpg
எல்லாவற்றையும் விட முக்கியமாக சிலாகித்து சொல்ல வேண்டிய விஷயம் இடைவேளைக்கு முன் வரும் அந்த ஃபைட் சீன் தான்.. நடை பாதை (பாலம்)யில் சேரன் நடந்து வர்றார்.. வில்லன் குரூப் கத்திகளுடன் வர சாதாரணமாக சமாளிக்கும் அந்த சீன் ஃபைட் மாஸ்டர், இயக்குநர்,ஹீரோ,ரீ ரெக்கார்டிங்க் என கலக்கலான காக்டெயில் உழைப்பு.அதுவரை ஒரு இறுக்கத்துடன் செல்லும் படம் அப்போதுதான் முதல் அப்ளாஸை அள்ளுகிறது.

வீட்டுக்குள் கூட சேரன் ஷூ போட்டுட்டே சுத்தறது ஏன்?னு தெரியல.அப்புறம் சில சீன்களில் பிரவுன் கலர் ஷூ போட்டு வரும் சேரன் அடுத்த ஷாட்டில் பிளாக் கலர் ஷூ போட்டு வர்றார். கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்..

பிரமாதமாக எதிர்பார்க்கப்பட்ட கன்னித்தீவுப்பொண்ணா? கட்டழகு கண்ணா? பாட்டு செம டப்பாங்குத்து... அந்த பாட்டுக்கான டான்ஸ் மூவ்மெண்ட்,குதூகல இசை எல்லாம் கலக்கலாக இருந்தும் அந்தப்பாடல் வலுக்கட்டாய இடைச்செருகல் என்பதால் ஆடியன்சை பிரமாதமாக கவரவில்லை.அது திரைக்கதையின் இறுக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

அந்தப்பாட்டில் குரூப் டான்சர்கள் டீசண்ட்டாக புடவையில் வருவதும்,அவர்கள் கூந்தலோரம் ஒரு பெரிய பூ சூடி வருவதும் வித்தியாசம்.

அதே போல் என்கொய்ரியின் போது சேரன் டான்ஸ் கிளாசில் டீச்சரிடம் விசாரணை செய்கையில் பின்புலத்தில் தெரியும் ஃபிகர்கள் செம ஃபிரஸ்..( இந்த களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குது?)

வழக்கமாக ஆங்கில படத்திலும் சரி, தெலுங்கு,தமிழ்ப்படங்களிலும் சரி..வில்லன் குரூப் ஜீப்களில் வந்து இறங்கும்போது காது ஜவ்வே கிழிஞ்சிடும்..ஆனால் இதில் சைலண்ட்டாக காண்பித்தே டெம்ப்போவை ஏற்றுகிறார்கள்.

ஒய். ஜி மகேந்திரனுக்கு வித்தியாசமான ரோல். கேரக்டருக்காக மொட்டை அடிச்சு நல்லா நடிச்சிருக்கார்.அவரது மனைவியாக வருபவர் க்ளைமாக்சில் கத்திக்குத்து பட்டதும் காட்டும் துடிப்பும், ரீ ஆக்‌ஷனும் அபாரம்.

ராஜேஷ் குமார் மாலை மதியில் எழுதிய வானவில்லுக்கு 1000 நிறங்கள் நாவலில் இருந்து சில சீன்கள் சுடப்பட்டுள்ளது. ( ராஜேஷ்குமாரே  எந்த ஆங்கில நாவலில் இருந்து சுட்டரோ?) குறிப்பாக ஒய் ஜி மகேந்திரன் தன் குடும்பத்தில் உள்ளது போலவே உயரம் எடை உள்ள அநாதை பிணங்களை ரெடி பண்ணீ கொளுத்திப்போடும் இடம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb8F1TVr_PLW0nfugqv6FoS1mLqXcOYcJK4hR6IlZnowK00yu2BVoMIJk7EaSb7UW6kPhhrl8Yfulied6UYIPBmSWXidoXRSEMnzdunZTh96B15uDHuoHWvdvifkzTEKEM9efzDw39FjM/s1600/yaavarukkum.blogspot.com.jpg
வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்திலும் ஆங்காங்கே தென்பட்ட வசன முத்துக்கள்

1.  அந்தப்பொண்ணு காணாம போயிட்டா....

இல்லை ஊரை விட்டு ஓடிப்போயிட்டா.. காதலனோட போறவ சொல்லீட்டா போவா?


2. கடைசில போலீஸ் விசாரனைல அவன் உண்மையை ஒத்துக்கிட்டான்.

ஒத்துக்கிட்டானா? ஒத்துக்க வெச்சீங்களா?

ம் , ஜட்ஜ்மெண்ட் கொடுத்த ஜட்ஜை போய் கேளுங்க...


3.   அந்தப்பொண்ணுக்கு என ஆச்சு?

ஏம்மா பொண்ணு , உனக்கு எதும் ஆகலையேன்னு சந்தோசப்படு.

4. நான் ஒரு போலீஸ்காரன். இன்னொரு போலீஸ்காரன் கிட்டே தோக்க மாட்டேன்..( அப்போ திருடன் கிட்டே தோத்தா பரவால்லியா?)


5. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?

நீங்க பெத்த குழந்தைக்கு குழந்தை பெத்துக்கற உறுப்பு சிதைஞ்சு போச்சு...

6. வன்முறைன்னா என்னன்னே தெரியாத அந்த குடும்பம் வேட்டைக்கு தயார் ஆச்சு..


7. அமைதியான சூழல்ல வாழ்ந்த அந்த குடும்பத்தை அசிங்கமான இடத்துல புதைக்க வேண்டியதா போச்சே..

8. வாழ்க்கைன்னா என்ன? நரகம் தான் வேற எதுவும் இல்ல..(LIFE IIS NOTHING BUT HELL)

9. என் கண்ணுக்கு  அதெல்லாம் தெரியல. எனக்கு என் தங்கை வாழ்க்கைதான் முக்கியம்.

உன் சுயநலத்துக்காக சட்டத்தை அடகு வைக்க சொல்றியா?

10.கொஞ்சூண்டு அறிவை வெச்சுக்கிட்டு இவ்வளவு தப்பு பண்ண ஒருத்தனால முடிஞ்சா  இவ்வளவு அறிவை வெச்சு நாங்க எவ்வளவு பண்ணலாம்?

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1. க்ளைமாக்சில் கத்தியால் வில்லனை 4 தடவை இப்படியும் அப்படியும் வெட்டுவது போல் வரும் சீனில் ரத்தம் பக்கெட்டில் இருந்து வருவது போல் வ்ந்துட்டே இருக்கு..

2. ஒரு சீனில் சேரனுக்கு முன் 3 போலீஸ் ஆஃபீசர்ஸூம் கை கட்டி நிக்கறாங்க..

3 ஒரு சீனில் அண்டர் கிரவுண்டில் காலை 6 மணீக்கு கூட்ட வரும் பெண் டெட் பாடியை பார்த்து அளறும் சீனில் மஞ்சள் வெயில் பிரகாசமாக அவ்வளவ் வருமா?

4. ஆரம்ப அறிமுக சீனில் சேரன் தன்னுடன் ஜூனியராக வரும் 2 ஆஃபீசர் பர்சனல் ஃபைலை குப்பைத்தொட்டியில் போடும் சீன்.

இயக்குநர் சபாஷ் வாங்கும் இடங்கள்

1. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்துக்கு காதல், டூயட், காமெடி எல்லாமே அநாவசியமே என்பதை உணர்ந்து கலக்கலாய் திரைக்கதை அமைத்தது.

2.பல சந்தர்ப்பங்களில் ஃபைட் சீன் வைக்கும் வாய்ப்பு இருந்தும் அவற்றை தவிர்த்து விட்டு  ஒரே ஒரு சீனில் மட்டும் ஃபைட் வைத்தது..

3.பின்னணி இசை புலனாய்வுப்படத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து வேலை வாங்கியது.

4. பெண்களும் பார்க்கும்படி பாலியல் பலாத்கார கொலைக்கதையை எடுத்தது


சி செண்ட்டர் ரசிகர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்காது. ஏ செண்ட்டர்களில் 70 நாட்கள் ஓடும் ( ஏப்ரல் 14).. பி செண்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

..எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

டிஸ்கி -

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்