Showing posts with label THRILLER. Show all posts
Showing posts with label THRILLER. Show all posts

Thursday, July 26, 2012

நிபந்தனை - சுஜாதா - சிறுகதை -சைக்கலாஜிக்கல் த்ரில்லர்

ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது.


பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது. யானைப்பாகன் பீடி குடித்துக்கொண்டு இருந்தான். எதிரே கட்டை குட்டையாகக் கோபுரம் தெரிந்தது. அருகே தெப்பக்குளம். அதற்கு எதிர்ப்புறத்தில் பழங்காலத்து மரக் கட்டடத்தின் உச்சாணியில் இருந்த விநோத கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து பேர் ஒன்பது அடிக்கக் காத்திருந்தார்கள். மணியடிக்கும்போது இரண்டு பொம்மை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளுமாம். மஹாராஜா செயலாக இருந்தபோது வாங்கிப் போட்ட கடிகாரம். இப்போது மஹாராஜாவே அந்தப் பதினைந்து பேரில் ஒருவராக இருந்தால் ஆச்சர்யப்படக் கூடாது என்று சோமசுந்தரம் எண்ணினான்.


”கோயிலுக்குப் போயிரலாமே முதல்ல” என்றாள் ஈஸ்வரி.

”இத பார்… எனக்குப் பசிக்குது. காலைல எழுந்து ஒரு காபி சாப்பிட்டது. ஒண்ணு ரெண்டு பிளேட் இட்லி தின்னாத்தான் வண்டி ஓடும்.”


”எங்க வந்தாலும் சாப்பாடுதான் உங்களுக்கு.”

”என்ன செய்யறது. வேளைக்கு வேளை செய்து போட்டு என்னைக் கெடுத்துவெச்சிருக்க.”

சோமசுந்தரம் காரை அந்தக் கட்டட நிழலில் நிறுத்தினான். மூஞ்சியைப் பார்த்து சுமார் என்று சொல்லக்கூடிய ஓர் ஓட்டலில் நுழைந்தார்கள். கல்லாவில் ஊதுபத்திப் பட்டைகள் அடுக்கியிருந்தன. பத்திரிகைகளின் இந்த வார அட்டைப் படப் பெண்மணி கேரளத்துத் தேங்காய்களை நினைவுபடுத்தினாள். குலைகுலையாகச் செக்கச் சிவந்த வாழைப் பழங்கள் தொங்கின. மரவள்ளியும் பலாவும் வறுவலாகப் பாலிதீன் பைகளில் அடங்கியிருந்தன. கமல்ஹாசனுக்குக் கீழே மலையாளத்தில் நண்டு நண்டாக ஏதோ எழுதியிருந்தது.


”எந்தா வேண்ட?” என்றான். காதில் பென்சில்.

”எனக்கு மலையாளம் தெரியாது. தமிழ்தான்.”

”சாரமில்லா… பரயு…”

”என்னத்தைப் பரயறது. ஈஸ்வரி, நீ என்ன சாப்பிடற?”

”எனக்கு ஒண்ணும் வேண்டாம். சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாம்னு இருக்கேன்.”

”சரியாப்போச்சு, மறுபடி ஓட்டலுக்கு வரணுமா?”

”ஏன்? வந்தா என்ன?” என்றாள் சற்று அழுத்தமாக.

”ஓ.கே! ஓ.கே!”

”சின்னப் புள்ளைலேர்ந்து எங்க அப்பாம்மா கத்துக்கொடுத்திருக்காங்க, சாமி கும்பிட்டுட்டுச் சாப்பிடணும்னு. உங்களுக்கு அது மூடநம்பிக்கையா இருக்கலாம். வேணா…”

”சேச்சே. இந்தச் சின்ன விஷயத்துக்குச் சண்டையைத் துவங்காதே. சரி… ஏம்ப்பா எனக்கு முதல்ல மூணு இட்லி, வடை. அப்புறம் பச்சைத்தண்ணி; பச்சைவெள்ளம். சுக்கைப் போட்டுக் காய்ச்சி மஞ்சளா ஒரு வெள்ளம் கொண்டுவெப்பிங்களே… அது வேண்டா. கேட்டோ?” என்றான்.

கணவனின் மலையாள முயற்சிகளில் சிரிப்பு வந்தது ஈஸ்வரிக்கு. கோபம் போய்விட்டது.

”முணக்குன்னா கோபமா?” என்றான்.

”பின்ன என்னவாம். நான் எது சொன்னாலும் அதுக்கு எதிராச் சொன்னா?”

”சரி! இன்னிக்கு ஒரு பிராமிஸ். நீ என்ன சொன்னாலும் சரி சரி. மறுப்பே தெரிவிக்க மாட்டேன். வெளியூர்ல ஓட்டல்ல வந்து எதுக்காகச் சண்டை போடணும்?”

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, ஈஸ்வரி அந்த அம்மாளைப் பார்த்தாள். பிராமண மாது. நாற்பது இருக்கலாம். கிழிந்த நார்ப்பட்டில் ஜாதிக்கட்டு; ரவிக்கையில் ஒட்டு; நெற்றியில் வெறுமை. நரை இழையோடிய தலை ஒரு சின்னத் தேங்காய் போல இருந்தது. அவர்களை அணுகி சன்னமாகப் பிச்சை எடுத்தாள். தயக்கமாகக் கை நீட்டி ஹாஸ்யமில்லாமல் சிரித்து மெல்லிய குரலில், ”அம்மா மஹாலட்சுமி, ஏதாவது காசு தாய
ேன்” என்றாள். பற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சோழிகள்.

அவள் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப்போய் பிச்சை எடுக்க வந்திருக்க வேண்டும் என்பது அவள் தோற்றத்திலும் கூசிக் குறுகிய தயக்கத்திலும் வெளிப்பட்டது.

சோமசுந்தரம் அவளுக்கு நாலணா கொடுத்தான்.
அவள் அதை வாங்கிப் பார்த்து, ”நாலணா போறாதுப்பா. குழந்தை பசியாக் கிடக்கிறாள். நானும் பட்டினி” என்றாள்.

”எவ்வளவு தரணும்கறிங்க பாட்டி?” ‘பாட்டி’ என்று அழைத்தது அசம்பாவிதமாக இருந்தாலும் ‘மாமி’ என்று அழைத்துத் தனக்கு ஒரு அவசியமில்லாத பிராமணத்தன்மையை வரவழைத்துக்கொள்ள சோமசுந்தரம் விரும்பவில்லை.

”ஒரு ரூபா கொடுத்தா எதிர்த்தாப்ல காபி கிளப்பில் ஒரு முழுச் சாப்பாடு கிடைக்கும். நானும் என் பெண்ணும் சாப்பிடலாமாக்கும்” அவள் தமிழில் மலையாள உச்சரிப்புத் தென்பட்டது. பாலக்காடாக இருக்கலாம்.


”இத பாருங்க… உங்களுக்கு ஒரு ரூபா கொடுத்தா உங்க வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்துபோயிடப் போறதில்லை. கொடுக்கிறத வாங்கிட்டுப் போங்க பெரியம்மா! வேற மூணு நாலு ஆளுங்ககிட்ட கேட்டா ஒரு ரூபா. அவ்வளவுதான்!” என்று சோமசுந்தரம் நடந்தான். ஈஸ்வரி சற்றுத் தயங்கினாள்.

”அம்மா மகாலட்சுமி; ஜகதீஸ்வரி; பூவும் பொட்டுமா அழகாத் தங்கமாட்டமா இருக்கியே. உனக்குத் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு புள்ளை பொறந்து எல்லாரும் செழிப்பா இருப்பீங்க. ஒரு ரூபா கொடுத்துட்டுப் போம்மா ராஜாத்தி.”

கணவன் அங்கிருந்து, ”அவகூட என்ன பேச்சு? வா வா!” என்று அவசரப்படுத்தினான். ஒரு கடைக்குள் நுழைந்தான். ”தொந்தரவு பண்ணாதிங்கம்மா, போங்க!” என்று ஈஸ்வரி நடக்க, அந்தப் பெண்மணி தொடர்ந்து கடைவாசல் வரைக்கும் நீட்டிய கையுடன் வந்தாள்.

கடைக்குள் ஆயிரம் உதவாக்கரை சாமான்கள் இருந்தன. எத்தனைவிதமான மர யானைகள். மரம் இழுக்கும் யானை, சேவிக்கும் யானை, ஏன்… யானை மேல் யானையைக்கூட விட்டுவைக்கவில்லை.

”என்ன, போனாளா?”

”இல்லீங்க. பாவம் அய்யர் சாதி.”

”ஆமா! அய்யர் சாதிதான். அதுக்குன்னு ஜாஸ்தி பணம் குடுக்கணும்கறியா? பிச்சைலேகூட வர்ணாச்சரம தர்மமா? இந்த யானை என்ன விலைங்க?”

”சட், அது வேண்டாங்க. புத்தி போவுது பாரு!”

”விலை கேட்டேன்! திருவனந்தபுரத்துக்கு வந்ததுக்கு ஞாபகமா யானை வாங்கிட்டுப் போக வேண்டாமா?”

”அது நல்லா இருக்குதில்ல?” என்று நீண்ட சதுரப்பாயின் மேல் தத்ரூபமாக ஒரு யானை வரையப்பட்டிருந்ததைக் காட்டினாள். ”ஹாலில் அலங்காரமா தொங்கவிடலாம். என்னப்பா விலை?”

பதினெட்டு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சுருட்டிக்கொண்டு கடைக்கு வெளியே வரும்போது, அந்த அம்மாள் இன்னும் நின்றிருந்தாள். அதே அரைக்கை நீட்டல். அதே அசட்டுச் சிரிப்பு. ஏழ்மையின் தங்க மெடல்கள். ஈஸ்வரிக்குக் குற்ற உணர்வு உறுத்தியது. ‘பதினெட்டு ரூபாய் கொடுத்து அலங்கார சாமான் வாங்குகிறாய். எனக்கு நாலணாவுக்குக் கணக்குப் பார்க்கிறாய்!’ என்று அவள் பார்வையே கேட்பது போல் தோன்றியது.

கணவன் கவனிக்காமல் காரை நோக்கி நடந்துகொண்டு இருக்க, ஈஸ்வரி இரண்டாம் முறை தயங்கி யோசித்தாள்.

”பாட்டி, உங்க பேர் என்ன?”

”அலமேலும்மா.”
”எந்த ஊர் நீங்க?”
”வடக்கே திருச்சூர்.”

”ஏன் இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைக்கும்படியா ஆய்டுச்சு?”

”அதை ஏண்டிம்மா கேக்கறே. எங்க தாத்தா சப்ரிஜிஸ்திராரா இருந்தார். ஆத்துல நாலு சேவகா இருந்தா. தென்னந்தோப்பும் துரவுமா காய் காய்ச்சு தாழ்வாரம் பூரா கொட்டியிருக்கும்.”

”அது சரி… இப்ப ஏன் இப்படி ஆய்டுச்சு?”

”எங்கப்பன் சொத்தையெல்லாம் அழிச்சுட்டு எங்கள நடுத்தெருவில் நிக்கவெச்சுட்டுப் போயிட்டான். சமையல்காரனுக்கு வாக்கப்பட்டேன். அவரும்
போய்ட்டார். நானும் என் பெண்ணும் மட்டும் தனியா.”

”கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையா?”

”இருக்கான். தம்பிக்காரன் திருச்சூர்ல வாத்தியாரா இருக்கான். ஆம்படையா பேச்சைக் கேட்டுண்டு துரத்திவிட்டுட்டான்.”

”வீட்டு வேலை ஏதாவது செஞ்சு பிழைக்கிறதுதானே?”

”பிழைக்கலாம். யாராவது வேலை குடுத்தாத்தானே? அதுக்குக்கூட சிபாரிசு தேவையா இருக்கு. இல்லைன்னா, திருடிப்பிடுவேனாம். இப்பகூட ஒரு நம்பூதிரி வீட்ல கூப்ட்டிருந்தா. போறதுக்குள்ள வேற பொம்மனாட்டி வந்துட்டா. என் மூஞ்சியப் பார்த்தா திருடற மாதிரியா இருக்கு. சொல்லும்மா. ஒரே ஒரு பொண்ணு. ஸ்கூலுக்குப் போயிண்டிருக்கு. மத்யானச் சாப்பாடு ஒரு சத்திரத்துல கிடைக்கும். இன்னிக்கெல்லாம் என்ன வயசுங்கறே எனக்கு? நாப்பத்திரண்டு. பசிச்சுப் பசிச்சு அறுபது வயசாட்டம் இருக்கேன். ‘பாட்டி’ங்கறே!”


”வீட்டு வேலை எல்லாம் செய்வீங்களா?”

”பேஷா! சமைப்பேன். பத்துப்பாத்திரம் தேய்ப்பேன். மாடு கறப்பேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். கைக்குழந்தைக்கு எண்ணெய் தேய்ச்சுவிடுவேன். வேண்டப்பட்ட காரியம் செய்வனாக்கம், எட்டூருக்கு வேலை செய்வேன்.”

சோமசுந்தரம் கார் வரை சென்று காத்திருந்து பொறுமையிழந்து திரும்பி வந்தான். ”என்ன ஈஸ்வரி… இங்கேயே நின்னுட்டே? இத பாருங்க அய்யர் வீட்டு அம்மா, காசு கொடுத்தாச்சில்ல? பேசாம போயிட வேண்டியதுதானே?”

ஈஸ்வரி அவனைக் கவனிக்காமல், ”இப்ப எங்ககூட வர்றீங் களாம்மா?” என்றாள்.

”எங்கே?”

”மெட்ராசுக்கு. வீட்டு வேலை செய்யறதுக்கு எனக்கு ஒரு ஆள் தேவையா இருக்கு.”

”வெயிட் எ மினிட், வெயிட் எ மினிட். என்ன ஈஸ்வரி… உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுத்துர்றதா?”

”சும்மா இருங்க! பாட்டி. பெரியம்மா! உங்களால மெட்ராஸ் வர முடியுமா, சொல்லுங்க!”

அம்மாள் கண்களில் முதல் தடவையாகப் பிரகாசம் ஏற்பட்டது. ”என்னம்மா இப்படிக் கேட்டுட்டே! உடனே புறப்பட்டு வரேம்மா! கடல் தாண்டிவேணும் னாலும் வரேன்!”

”கொஞ்சம் இரு ஈஸ்வரி!”

”இன்னிக்கு மத்யானம் நாங்க கார்ல இந்த ஊரைவிட்டுக் கிளம்பி நாகர்கோவில் போறம்.”

”இன்னிக்கே வந்துர்றேம்மா!” அவள் முகம் பூரா இப்போது அந்தப் பிரகாசம் பரவியிருந்தது. ”ஆனா கோமதி?”

”கோமதி யாரு?”

”எம் பொண்ணு. பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கா.”

”எப்பத் திரும்பி வரும்?”

”ஒரு மணிக்கு.”

”நாங்க ரெண்டு மணிக்குக் கிளம்பறம். உங்க பொண்ணையும் அழைச்சுக்கிட்டு வந்திருங்க. பொட்டி படுக்கையெல்லாம் கொண்டுட்டு வந்துருங்க.”

”பொட்டியுமில்ல… படுக்கையுமில்ல. ஒத்தக் கடையில ஒண்ணு ரெண்டு பை! பிளாட்ஃபாரத்திலாக்கும் படுத்துக்கறது” கண்களைத் துடைத்துக்கொண்டாள். ”மஹாலட்சுமி மாதிரிதாம்மா வந்து சேர்ந்தே நீ! நான் நாயா உழைக்கிறேன்! உடம்பைச் செருப்பா தேய்ச்சுப் போடறேன்

.”
”சரி, சீக்கிரம் போய்ட்டு வாங்க!”

”இதோ…” ஓடினாள்.

சோமசுந்தரம் மௌனமாகத் தன் மனைவியையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

”என்ன பாக்கறீங்க! வாங்க கோயிலுக்குப் போகலாம்!”

”நீ செய்றது சரிதானா? இது உனக்கே நல்லா இருக்கா? முன்னப்பின்னத் தெரியாத தேசத்துல முன்னப்பின்னத் தெரியாத பொம்பளைய கார்ல கூப்பிட்டு மெட்றாசுக்கு அழைச்சுட்டுப் போறதா?”

”காலைல என்ன சொன்னீங்க?”

”விசாரிக்க வேண்டாமா?”

”காலைல ஓட்டல்ல என்ன சொன்னிங்க?”

”மெட்ராஸ்ல கிடைக்காத பொம்பளைங்களா?”

”காலைல நீ என்ன சொன்னாலும் மறுப்பே தெரிவிக்க மாட்டேன்னு சொல்லல நீங்க?”

”அது சரி, ஆனா இந்த விஷயம்…”
”நடங்க கோயிலுக்கு.”
சட்டையைக் கழற்றி பேன்ட்டை மடக்கி அதன் மேல் வாடகை வேஷ்டி சுற்றிக்கொண்டு சோமசுந்தரம் வர, இருவரும் கோயிலுக்கு
ள் நுழைந்தார்கள்.
”ஆம்பளைங்களுக்கு மட்டும் சட்டையைக் கழட்டணும்னு என்ன ரூல் இது?” என்ற அவன் ஹாஸ்யத்தை அவள் கவனிக்கவில்லை.

”எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம். என்ன பிரயோசனம்? நடைமுறையில் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்? இந்த ட்ரிப்புக்கு இதுவரை எவ்வளவு ரூபா செலவழிச்சிருக்கம்? எத்தனை பெட்ரோல், எத்தனை சினிமா, எத்தனை ஐஸ்க்ரீம், எத்தனை கண்டாமுண்டா சாமான்கள்? ஓர் ஏழைப் பொம்பளைக்கு நாலணா குடுக்க மூக்கால அழறோம். நாம எல்லாம் மனுசங்க இல்லியா? இரக்கம் கிடையாது. வேற யாராவது பார்த்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா, யார் அந்த வேறு யாராவது? கோயிலுக்குக்கூடப் போக வேண்டாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்!”

சோமசுந்தரம் நடந்துகொண்டே கை தட்டினான்.
இருவரும் சந்நிதிக்குள் நுழைந்தார்கள்.
கோயிலைவிட்டு வெளியே சட்டை அணிந்துகொண்டு காசு கொடுத்துவிட்டு வெளியில் இறங்கியபோது, தாடிவைத்த ஆசாமி ஒருவன் சைக்கிளில் வந்து அவர்கள் அருகில் நிறுத்தி இறங்கினான். அவனைச் சமீபத்தில் பார்த்த மாதிரி இருந்தது.

”சார், ஒரு விஷயம்.”

”ஒண்ணும் வேண்டாம்ப்பா.”

”நான் ஏதும் விக்கறதுக்கு வரலையாக்கம். எதுத்தாப்பல கடைக்காரன்தான். அம்மாவும் அந்த அலமேலுவும் கொஞ்ச நேரம் முன்னாடி என் கடை வாசல்ல பேசிட்டிருந்ததைக் கவனிச்சேன். அம்மா அவளை மெட்ராசுக்கு அழைச்சுட்டுப் போறதா சொன்னது.”

”ஆமாம். என்ன இப்ப?”

”கோவிக்க வேண்டாம். அந்தப் பொம்பளைய நீங்க கூட்டிப் போகக் கூடாது.”
”ஏன்?”

”அது செரியில்ல.”

”சரியில்லைன்னா?”

”உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கு. எனக்குச் செரியா காதுல விழல. கேவலமானா பொம்பள. பதினாலு வயசுல ஒரு பொண்ணு. அதைத் தெருவுல அலையவிட்டு அதை வெச்சுச் சம்பாதிக்கிறவளாக்கம் அவ!”

”மை காட்! பொண்ணு ஸ்கூலுக்குப் போறதா சொன்னாளே?”

”பொய்! ஸ்கூலாவது ஒண்ணாவது. சுத்தப் பொய். இவளுக்கு ஏகப்பட்ட கடனாக்கும். திருச்சூர்ல தம்பி இருக்கான். அவன்கூட சரியா இருக்க முடியாம ஓடி வந்தாச்சு. எங்கிட்ட இருந்தே நூத்தம்பது ரூபா கடன் வாங்கியிருக்கு. வீட்டு வேலை ஒண்ணும் தெரியாது. வெறும் கச்சடை. உடம்பெல்லாம் பொய்யி. நான் சொல்றதைச் சொல்லிட்டேன்.”

சோமசுந்தரம் மனைவியைப் பார்த்தான். ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரிந்தது. ”என்னங்க இப்படிச் சொல்றான்?” என்றாள்.

அப்போது அலமேலு அம்மாளும் அவள் பெண் கோமதியும் ஒரு துணி மூட்டை, கோணிப்பை, தகரப் பெட்டி சகிதம் அவர்களை நோக்கி ஆர்வத்துடன் வந்துகொண்டு இருந்தார்கள்.

”இப்ப என்னங்க செய்யறது?” என்றாள் ஈஸ்வரி. சைக்கிள்காரனைப் பார்த்ததும் அம்மாவும் பெண்ணும் பிரேக் போட்டாற்போல் நின்றார்கள்.

”வாங்க அலமேலு அம்மா! வெளியூர் கிளம்பிட்டாப்பல?” என்றான். அவள் பார்வை சரிந்தது.

சோமசுந்தரம் அந்த கோமதியைப் பார்த்தான். வளர்த்தியான பெண். பதினாலு வயசுதான் இருக்கும். குழந்தை முகம். சாயம்போன பாவாடை. சாயம்போன தாவணி. பிளாஸ்டிக் மாலை ஒன்றைக் கடித்துக்கொண்டு இருந்தாள். கன்னங்கரேல் என்று தலைமயிர். கண்கள், கொஞ்சம் கொஞ்சம் தீபா.

”என்னம்மா, இந்த ஆளு உங்களைப் பத்தி வேற மாதிரி இல்ல சொல்றார்?”

”அய்யா! அவர் சொல்றதை நம்பாதீங்க! அவருக்கு நான் பணம் கொடுக்கணும்னு என்ன என்னவோ பொய் சொல்வார். எல்லாம் பொய்! அப்படி எல்லாம் இல்ல!”

”ஏய் மூதேவி! நீ எனக்கு ஒண்ணும் பணத்தை திருப்பித் தர வேண்டாம். வெளியூர்க்காரங்களை ஏமாத்தாதே!”
”அப்ப இவர் சொல்றது நிஜமா பெரியம்மா?”
”பொய்! எல்லாம் பொய்! நான் ஏழை. ஏழை சொல் அம்பலம் ஏறாதும்பா. எல்லாரும் சேர்ந்துண்டு அழிச்சாட்டியம் பண்ணி…”
ஈஸ்வரி, கோமதியைப��� பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தப் பெண் பூமியைப் பார்த்துக்கொண்டு கால் கட்டை விரலால் வட்டங்கள் வரைந்துகொண்டு இருந்தது.

ஈஸ்வரி, ”வாங்க போகலாம்” என்றாள்.

”இரு ஈஸ்வரி. இதைச் சரியா விசாரிச்சுரலாம். யார் பொய் சொல்றான்னு பார்த்துறலாம்!” என்றான் சோமசுந்தரம்.

”யார் பொய் சொன்னாலும், யார் நிஜம் சொன்னாலும் இந்த அம்மா நமக்கு வேண்டாம்!” என்றாள் தெளிவாக.

”அப்படி பட்டுனு சொல்லிட்டா எப்படி? உனக்கு உதவிக்கு வேணும்னுட்டுதானே…”

”மெட்ராஸ்லே கிடைக்காத பொம்பளைங்களா?”

”இந்த ஆள் சொல்றது எவ்வளவு தூரம் நிஜம்னு யாருக்குத் தெரியும்?”

ஈஸ்வரி கோபத்தில் வெடித்தாள். ”இப்ப நீங்க கிளம்பறீங்களா இல்லையா?”

சோமசுந்தரம் மௌனமாக காரை ஸ்டார்ட் செய்தான். மெதுவாக நகர்ந்தான். அந்த அம்மாள் அந்தப் பொண்ணுடன் கூட ஓடி வந்தாள். ”அய்யா! அம்மா! அம்மாடி! எனக்கு ஒரு வழி பண்ணிக் குடுப்பேன்னு நினைச்சேன்! ஏதோ பசிக் கொடுமையினால, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு இல்லாத கொடுமையில தவறுதலா நேர்ந்திருக்கலாம். நீங்க மன்னிக்கக் கூடாதா? என்னை உங்காத்துல சேர்த்துக்க வேண்டாம். பட்டணத்தில் அழைச்சுண்டுப் போய் ஏதாவது ஒரு ஆசிரமத்துல ரெண்டு பேரையும் சேர்த்துடுங்கோ. புண்ணியம் உண்டு! இந்த இடத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கோ.” தாடிக்காரனைக் காட்டி, ”இவாதான் என்னை அந்த மாதிரி பண்ணா! இவாதான் சொல்லிக்கொடுத்தா! இவாதான் சொல்லிக்கொடுத்தா!”


”ஸாரி பெரியம்மா. உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத நிலையில் இருக்கேன்!” சோமசுந்தரம் கியர் மாற்ற கார் வேகம் பிடித்தது.

அதன் கண்ணாடி வழியாக மூவரும் நிற்பதைப் பார்த்தாள் ஈஸ்வரி. புடவைத் தலைப்பில் அழுதுகொண்டு அலமேலு; சங்கிலியைக் கடித்துக்கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி; சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி.

கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு!



 நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Monday, July 23, 2012

நயாகரா-சுஜாதா - சிறுகதை

http://www.kirukkal.com/images/sujatha_OEA_old_1.jpg 

எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே எனக்கு ஞமஙம என்று மூக்கில் உறுத்தும். அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதற்குள் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும்.



இருந்தாலும் அமெரிக்காவுக்குப் போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால்,

1. ஜன்மம் சாபல்யம் அடையாது.

2. திரும்பி வந்ததும் ஜனங்கள் வெறுப்பேற்றும் (”என்ன சார் அவ்வளவு தூரம் போயிட்டு நயாகரா பார்க்கலை… உச்… உச்… உச்” எக்ஸெட்ரா).

எனவே, நயாகரா பார்க்கச் சென்றோம்.

அமெரிக்காவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக எங்களிடம் ஒரு ‘ஸீ யு.எஸ்.ஏ.’ ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் டிக்கெட் இருந்தது. ரொம்ப சல்லிசான டிக்கெட். அதை வைத்துக்கொண்டு அந்த கம்பெனியின் ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம், புறப்பட்ட இடத்துக்குத் திரும்ப வராத வரையில். ‘பரவாயில்லையே’ என்று வியக்காதீர்கள். இந்தச் சுதந்திர சீட்டில் ஒரே ஒரு சிக்கல். பெரும்பாலான ஃப்ளைட்டுகளுக்கு அட்லாண்டா போய்த்தான் போக வேண்டும்.

உதாரணம் நியூயார்க்கிலிருந்து பஃபலோ போவதற்கு, நியூயார்க் அட்லாண்டா, அட்லாண்டா பஃபலோ என்ற ரூட்டில்தான் போக முடியும். இது சென்னையிலிருந்து பெங்களூரு போக, சென்னை டெல்லி, டெல்லி பெங்களூரு போகிற மாதிரி! எனவே அவர்கள் ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை என்பது உங்களுக்குத் தெள்ளென விளங்கும் (‘தெள்’ என்றால் என்ன?) எனவே பத்து நகரங்களைப் பார்ப்பதற்குள் எத்தனை முறை அட்லாண்டா பார்த்திருப்போம் என்று நீங்கள் சுலபமாகக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அட்லாண்டா விமான நிலையத்தில் சிப்பந்திகள் அனைவரும். ”என்ன அண்ணா, மறுபடியும் வந்துட்டேளா” என்று விசாரிக்கும் அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டார்கள்.


நான் சொல்ல வந்தது நயாகரா பற்றி அல்லவா? நயாகராவுக்கு பஃபலோதான் விமான நிலையம். அங்கே போக வழக்கம் போல அட்லாண்டா விமான நிலையத்தில் காத்திருந்தபோது, பொடி நடையாகப் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று சென்று திரும்பியபோது, என் மனைவியின் அருகில் இரண்டு இந்தியர்கள் உட்கார்ந்துகொண்டு கையைத் தீவிரமாக ஆட்டிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிட்டே போனதில், ஒருவர் பிஸ்வாஸ். மற்றவர் சின்ஹா. பெங்காலிக்காரர்கள்.


இந்தியர்கள் எந்த மாநிலத்தவர்கள் என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒரு வாக்கியம் இங்கிலீஷ் பேசினால் போதும். மலையாளியை காலேஜ் என்று சொல்லச் சொன்னால் மதி. பெங்காலிகள் போல்ட்டை வோல்ட் என்றும் வோல்ட்டை போல்ட்* என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பெயருக்கும் ஓகாரம் சேர்த்துக்கொண்டு, ரங்கராஜன் என்பதை ரொங்கொரோஜன் என்பர்.

பிஸ்வாஸ், கல்கத்தாவில்ரொம்ப பிஸியான சர்ஜன் என்று தெரியவந்தது. சின்ஹா, மெட்டலர்ஜிஸ்டோ என்னவோ. இருவரும் லண்டனில் சந்தித்துக் கூட்டணி அமைத்துக்கொண்டு அமெரிக்கா வந்திருக்கிறார்கள். எங்களைப் போலவே இடங்களைச் சுற்றிப் பார்க்க ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கைவசம் வைத்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது, ”சே! டிக்கெட்டா இது! அட்லாண்டா அட்லாண்டா!” என்றனர். ரொம்ப நொந்து போயிருந்தார்கள். சக சோகத்தால் சினேகிதமாகிவிட்டோம். இப்போது நயாகரா பார்க்க பஃபலோ போகிறோம் எனக் கேட்டதும் சந்தோஷப்பட்டு எங்களை ஆட்கொண்டு. ”கவலைப்படாதே. நாம் எல்லோரும் சேர்ந்தாற் போலப் போகலாம்” என்றனர். என் மனைவியும் ஒப்புக்கொள்ள, எனக்கு வயிற்றைக் கலக்கியது.


எனக்குத் தெரிந்த பெங்காலி நண்பர்கள் எல்லோரும் நல்லவர்களே. அவர்கள் சரோட் வாசிப்பார்கள். பிரிட்ஜ் ஆடுவார்கள். கவிதை எழுதுவார்கள். சங்கீதம், நடனம் எல்லாம் சரிதான். ஆனால், சுலபத்தில் கோபித்துக்கொண்டுவிடுவார்கள். கொல்கத்தாவில் ஒரு பெங்காலி நண்பருடன் பார்ட்னராக பிரிட்ஜ் ஆடிக்கொண்டு இருக்கும்போது, நாலு ஸ்பேடை டபிள் பண்ணி ஆயிரத்து இருநூறு பாயின்ட் கொடுத்துவிட்டேன் என்று, என் மேல் பெஞ்சு நாற்காலியை வீசினார். அதனால் இந்த பெங்காலி தமிழ் நட்பு, நயாகரா வரை தாங்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயே உறவு அவ்வளவு பேப்பரில் போடும்படியாக இல்லை. சிநேகிதம் மெல்லிய கண்ணாடி போலிருந்தது. பிஸ்வாஸ் எதையாவது சொன்னால் அதற்கு நேர்மாறாக சின்ஹா சொல்ல, முணுக்கென்று சண்டை வந்துவிடும். சீ! நீ ஒரு மனுஷனா என்கிற தொனியிலே பெங்காலியில் ‘கீ!’ ‘கீ!’ என்று மூக்குக்கு மூக்கு தொட்டுக்கொண்டு எதிர்ப் பேச்சு துவங்கிவிடும்.

இருந்தும் இரண்டு பேரும் வலுக்கட்டாயமாக எங்கள் தோழமையை நாட, அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். ப்ளேனில் நாலு பேரும் வரிசையாக உட்கார்ந்துகொண்டோம். என் மனைவியிடம் சின்ஹா, ‘என்ன என்ன வாங்கினாய்’ என்று விசாரிக்க, நான் எழுத்தாளன் என்றதும் ‘சுனில் கங்குலியைத் தெரியுமோ?’ என்று பிஸ்வாஸ் கேட்க, ‘நான் தெரியாது’ என்று சொல்ல, நீ என்ன எழுத்தாளன் என்கிற மாதிரி பார்த்தார். பத்து நிமிஷத்துக்குப் பேசவில்லை. இவர்களிடமிருந்து பஃபலோவில் இறங்கின மாத்திரம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் வந்துவிட்டது.


இறங்கினவுடன், ‘வா’ என்று மனைவியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாகேஜ் செக்குக்கு ஓடிப் போய் சடுதியில் பெட்டி படுக்கைகளை விடுவித்துக்கொண்டு கலர் கலராக நகரத்துக்குப் போகும் பஸ்சுக்குக் காத்திருக்க, என் பின்னாலேயே, ”ரொங்கொரோஜன்!”

”ஓ, ஹலோ மிஸ்டர் பிஸ்வாஸ்! ஐ வாஸ் லுக்கிங் ஃபார் யூ!”

”ஓட்டல் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.”

”அப்படியா சந்தோஷம்… ஸீ யூ!”

”உங்கள் இருவருக்கும் சேர்த்துத்தான்!”

”வாடகை ஒரு வேளை அதிகம் இருக்கப் போகிறது. நாங்கள்…”

”வாடகை பதினஞ்சு டாலர்!”

பதினைந்து டாலர் என்பது அமெரிக்காவில் ரொம்ப சீப். ”ஊருக்கு வெளியே இருக்குமோ என்னவோ?”

”சேச்சே! நயாகராவிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறதாம்!”

”சன்னலைத் திறந்தால் நயாகரா தெரியுமாம்” என்றார் சின்ஹா. என்னால் நம்ப முடியவில்லை.

”ஓட்டல் பேர் என்ன?”

கார்டைக் காட்டினான். ”இந்த பஸ் போகிற வழியில் இறக்கிவிடுமாம். டிரைவர்தான் சொன்னான். அமெரிக்காவில் கொஞ்சம் தீர விசாரித்தால் செலவு இல்லாத இடம் கிடைக்கும்.”

நான் என் மனைவியைப் பார்க்க அவள், ”அங்கேயே போகலாம்” என்றாள்.

”வாருங்கள். எதற்கு முப்பது டாலரும் நாற்பது டாலரும் கொடுக்க வேண்டும்?” என்றார் பிஸ்வாஸ். பஸ்ஸில் ஏறினோம். பிஸ்வாஸ், சின்ஹா, நான், மனைவி என்ற நாலு பேரும் இ.பிரியாத நண்பர்கள் போல உட்கார்ந்துகொள்ள, ‘பஸ் டிக்கெட் நான்தான் வாங்குவேன், நான்தான் வாங்குவேன்’ என்று சண்டை போட்டு டிக்கெட் ஐந்து டாலர் என்று தெரிந்ததும், ‘ஓட்டல் போய் செட்டில் பண்ணிடலாம்” என்றார்கள்.


பஃபலோ நகரம் பிழைப்பதே நயாகராவுக்கு வரும் டூரிஸ்ட்டு களால்தான். எங்கு திரும்பினாலும் நயாகராவுக்கு வழி போட்டிருந்தது. பஸ் வெண்ணெய் போலச் செல்ல, தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சி சுந்தரமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அங்கங்கே ஒளிந்துகொண்டு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்தது. நயாகரா, கனடா அமெரிக்க எல்லையில் இருப்பது உங்களில் ஜியாக்ரஃபி தெரிந்தவருக்குத் தெரிந்திருக்கும். கனடா சைடிலிருந்து பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கேள்வி. எங்களிடம் கனடியன் விசா இல்லை. அதற்கு மனுப் போடாமலிருந்தது என் மனைவிக்குக் குறை. ஷேக்ஸ்பியரின் ரோஜா போல, ஒரு நீர்வீழ்ச்சியை கனடாவிலிருந்து பார்த்தாலும் அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும் அது நீர்வீழ்ச்சிதான் என்பது என் சித்தாந்தம். பிஸ்வாஸைக் கேட்டேன், ”கனடியன் விசா இருக்கிறதா?”

”இல்லை. ஆனால், தற்காலிகமாக விசா தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

”நான் கேள்விப்பட்டது, அதெல்லாம் கிடையாது. ஒரு வாரம் முந்தி மனுப் போட்டால்தான் கிடைக்கும் என்று.”

”கேட்டுப் பார்க்கலாம்! கொடுக்காமல் போய்விடுகிறார்களா, பார்த்துவிடலாம்.”

பஸ் டிரைவர் சிரித்துக்கொண்டே நால்வரையும் இறக்கிவிட்டு, ”அதோ பார் ஓட்டல்” என்று காட்டிவிட்டு விலகினான்.




http://newspaper.li/static/a5cfc9e0b3215237028ce0de10e3bf35.jpg

பிரமாதமாகத்தான் இருந்தது ஓட்டல் கட்டடம், சொன்னதெல்லாம் சரிதான். நயாகரா நீர்விழ்ச்சி அருகிலேயே இருப்பது தெரிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ”பிஸ்வாஸ் நீங்கள் சரியாகக் கேட்டுக்கொண்டீர்களா? தினத்துக்குப் பதினைந்து டாலர் சொன்னானா? மணிக்கு பதினைந்து டாலரா?”

”தினத்துக்குத்தான். நீ வாயேன்” என்றார்.

அந்தப் பளபளப்பான ஓட்டல் கட்டடத்தில் போய் விசாரித்ததில் நாங்கள் தேடிச் சென்ற ந்யூ மெட்ரோ அதில்லை என்றும் அதற்கு அடுத்த கட்டடம் என்றும் தெரிய வந்தது.

”அடுத்த கட்டடமா? கட்டடமில்லையே! காலி மனையல்லவா இருக்கிறது?”

‘உன்னிப்பாகப் பாருங்கள் தெரியும்.”

பார்த்ததில் சின்னதாக ஒரு அமெரிக்கக் குடிசை போல ஒரு கட்டடம் தெரிந்தது. அதன் மூஞ்சியையே மறைக்குமாறு ‘ஓட்டல் மெட்ரோ வேகன்ஸி’ என்று சாக்பீஸில் எழுதியிருந்தது. அருகே சென்று பார்த்ததில் ஒற்றை மாடியுடன் மே ஃபிளவர் தினங்களில் கட்டிய கட்டடம் போல ஒன்று தெரிந்தது. வாயிற் கதவில் மணிப் பொத்தான் இருந்தது. அழுத்தியதில் சப்தம் வரவில்லை. கதவைத் தட்டினதில் லேசாகப் பொடி தூவித் திறந்துகொண்டது. உள்ளே டெலிவிஷன் அருகில் படுத்திருந்த நாய் என்னை ஒற்றைக் கண்ணால் பார்த்தது. இதுதான் ஓனரோ என்ற சந்தேகம் உடனே தீர்ந்தது. சுமார் எண்பது வயசு மதிக்கத்தக்க ஒரு கிழவர் மூக்கைத் தக்காளி நிறத்துக்குத் தேய்த்துக்கொண்டு வந்தார்.


”இங்கே ரூம் இருப்பதாக..?”

‘ட்வென்டி டாலர்ஸ்!”

”பஸ் டிரைவர் பதினைந்து என்று சொன்னான்.”

”ஓ.கே, ஃபிஃப்டீன்டாலர்ஸ்!” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து விரைவில் பதினைந்து பதினைந்து டாலருக்கு இரண்டு ரசீது எழுதி, ”ஐ டேக் அட்வான்ஸ்” என்றார்.

”ரூமைப் பர்க்கலாமா” என்றார் சின்ஹா.

”குட் ரூம், பே ஃபிஃப்டீன் டாலர்ஸ்.”

அட்வான்ஸாகப் பதினைந்து டாலர் கொடுத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட அறையை நோக்கிப் போனோம். சாவியைத் துவாரத்தில் தொடுவதற்கு முன்னமேயே கதவு திறந்துகொண்டது. உள்ளே ரூமை ஏழில் எட்டு பாகம் ஒரு கட்டில் அடைத்திருந்தது. குட்டியாக மேசை போட்டு, அதன் மேல் மேசை விளக்கு வைத்திருந்தது. உத்தரத்தில் இருந்த விளக்கைப் போடுவதற்கு ஸ்விட்சுடன் ஒரு கயிறு கட்டியிருந்தது. அதை இழுத்துப் பார்த்ததில், மாடியில் தடால் என்று உருண்ட சப்தம் கேட்டது.
பிஸ்வாஸ் என் அறையை எட்டிப் பார்த்து, ”உன் அறையும் இப்படித்தானா? ரொம்ப மோசம், இதற்குப் போய் பதினைந்து டாலரா? வழிப்பறி. கிழவனிடம் போய்ப் பணத்தைக் கேட்டு வேறு ஓட்டலுக்குப் போகலாம்” என்றார்.

”பாத்ரூம் எங்கே இருக்கிறது?” என்று என் மனைவி கேட்க, அந்த ஓட்டலில் தங்குபவர்கள் அத்தனை பேருக்கும், கிழவனுக்கும், நாய்க்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் என்பது தெரிய வந்தத
ு.
”வேண்டாம். வேறு இடத்துக்குப் போய்விடலாம்” என்றான் பிஸ்வாஸ்.

”நீதானே இங்கே அழைத்து வந்தாய்” என்றார் சின்ஹா.

”நீதான் பதினைந்து டாலரில் அறை வேண்டும் என்றாய்” என்றார் பிஸ். ‘நீதான் நீதான்…’ என்று இரண்டு பேரும் அடிதடிக்கு வந்துவிட்டார்கள். இடம் போதவில்லை.

”இது என்ன சோப்பா, மெழுகுவத்தியா?” என்று டேபிள் விளக்கை சின்ஹா போட்டுப் பார்க்க, ‘ஊய்’ என்று ஷாக் அடித்து விளக்கிலிருந்து பிசுபிசு என்று புகை வந்தது. விளக்கின் அடியில் ”டோண்ட் ஸ்விட்ச் ஆன்” என்று எழுதியிருந்தது. ”அமெரிக்காவில்கூட இந்த மாதிரி ஓட்டல் இருக்கிறது ஆச்சர்யம்தான்” என்றேன்.

”எங்கே அந்தக் கிழவன்?” என்று கீழே போய் விசாரிக்கப் போன பிஸ்வாஸ் உடனே திரும்பிவிட்டார். ”நாய் துரத்தறது” என்றார்.

”பதினைந்து டாலர் கொடுத்தாகிவிட்டது. ராத்திரி படுக்க மட்டும்தான் இந்த இடம்! என்ன போச்சு? முகம் கழுவிக்கொண்டு வாருங்கள். நயாகரா போய்ப் பார்க்கலாம்” என்றேன்.

நாய் போனதும் சின்ஹா பாத்ரூம் போய்விட்டார். கால்மணி கழித்து பிஸ்வாஸ் பாத்ரூம் வாசலில் காத்திருப்பது தெரிந்தது. ”இந்த ஆள் எப்போதும் இப்படித்தான். பாத்ரூம் போனால் ஒரு மணி நேரம்!” என்றார்.



http://image.shutterstock.com/display_pic_with_logo/205801/205801,1215720645,5/stock-photo-edge-of-niagara-falls-in-winter-14743486.jpg

”சேச்சே ! இவ்வளவு மோசம் என்று தெரியாமல் போய்விட்டது. ராஸ்கல் அந்த டிரைவரை உதைக்க வேண்டும். சின்ஹா! என்ன தூங்கிவிட்டாயா!”
அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று என் மனைவியை அவசரப்படுத்தி, வேறு ரூட்டாக நடந்து போய் நயாகரா பார்க்கச் சென்றோம். அங்கே நயாகராவின் அடிமடிக்கே அழைத்துப் போகும் படகுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு க்யூவில் போய் நின்றால், ”ரொங்கோ ரோஜன்” என்று கேட்க பின்னால் சின்ஹாவும் பிஸ்வாசும்!


நயாகராவில் எத்தனை காலன் ஒரு நிமிஷத்துக்கு ஊற்றுகிறது. எத்தனை மெகா வாட் சக்தி பண்ணுகிறார்கள், எத்தனை அழகு என்றெல்லாம் விவரம் கொடுத்து உங்களை அறுக்க விரும்பவில்லை. நயாகராவில் எனக்குப் பிடித்தது படகு அதன் அடியில் செல்லும்போது ஆரவாரமும் நம்மேல் படரும் குளிர் மழையும்தான். இந்தக் குளிர் மழையில் சின்ஹாவை பிஸ்வாசும், பிஸ்ஸை சின்னும் படம் பிடிக்க, காமிரா லென்ஸ் முழுவதும் நீர் கோத்துக்கொண்டுவிட, ‘சொன்னேன். கேட்டாயா?’ என்று நயாகராவைவிடச் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். படகைவிட்டு மேலே வந்து நாங்கள் கழன்றுகொள்ள விருப்பப்பட, ”வா கனடா பகுதிக்கு நடந்து போகலாம்” என்றார் பிஸ்வாஸ். ”வேண்டாம் விசா கொடுக்க மாட்டார்கள்” என்று சொல்ல, ”யார் சொன்னது? பாஸ்போர்ட்டுகளை சரண்டர் பண்ணிவிட்டால் ஒரு மணி நேரத்துக்கு அனுமதி கொடுப்பார்கள். அங்கேயிருந்து பார்ப்பதுதான் உத்தமம்” என்றார்.


நிஜமாகவே இங்கிருந்து தெரிந்த கனடியப் பகுதி கலகலப்பாகத்தான் இருந்தது. வ்யூவிங் டவர், வண்ண வண்ண விளக்குகள், ஜிலுஜிலுப்பு எல்லாமாக ஆசை காட்டியது. போய்த்தான் பார்க்கலாமே என்று பாலத்தைக் கடந்து கனடியப் பகுதிக்குச் சென்றோம். வாட்டசாட்டமாக ஒரு போலீஸ்காரி, ”லெட் மி ஸீ யுவர் பாஸ்போர்ட்ஸ்” என்றாள். ஆளுக்கு ஐந்து சென்ட் வாங்கிக்கொண்டாள். ”இங்கே நில்லுங்கள் பிஸ்வாஸ்” என்று பவ்யமாகச் சொன்னாள். ‘பார்த்தாயா!’ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தார். காத்திருந்தோம். அந்தப் பெண் மற்றொரு அதிகாரியைக் கொண்டுவந்து எங்களைச் சுட்டிக்காட்டினாள். பற்பல அமெரிக்கர்கள் உற்சாகமாக லைனைக் கடந்து சென்றுகொண்டிருக்க, எங்கள் நாலு பேரை மட்டும் தண்டையார்பேட்டை ஐ.டி. ஆஸ்பத்திரியில் போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். மற்றொரு வெள்ளைகார ஆபீஸர் வந்து இடது கையால் எங்கள் பெயர்களை ஒரு ஃபாரத்தில் எழுதி நிரப்பி, ”விசா இல்லை. அது இல்லாமல் கனடிய மண்ணில் அனுமதி கிடையாது. திரும்ப அமெரிக்கா செல்லுங்கள்” என்றார்.

சின்ஹாவுக்குக் கோபம். ”எதற்காக எங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல முடியுமா?”

”விசா இல்லை. அனுமதி இல்லை.”

”நாங்கள் இந்தியர்கள் என்பதால்தானே இந்த மாதிரி நடத்துகிறீர்கள்?”

”அதெல்லாம் இல்லை.”

”அமெரிக்கர்களை மட்டும் அனுமதிக்கிறீர்கள்?”

”அவர்களிடம் விசா இருக்கிறது.”

”எப்படித் தெரியும்?”

”எங்களுக்குத் தெரியும். பாருங்கள். அதிகம் வாதாடினால் உங்களைச் சிறைக்கு அனுப்புவோம்” என்று காகிதங்களை எங்களிடம் கொடுத்தார்.

”இந்தக் காகிதங்களை நயாகராவிலேயே போடுகிறோம்” என்று பிஸ்வாஸ் சிரித்தார்.

”அது உங்கள் இஷ்டம்! இந்தக் காகிதம் இல்லையென்றால் மறுபடி அமெரிக்காவில் அனுமதி கிடைக்காது. உங்கள் வாழ்நாளை இந்தப் பாலத்தின் மத்தியிலேயே கழிக்க விருப்பமென்றால் சரி.”
நான் அவசரமாகக் காகிதங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.

சின்ஹா திரும்பும் வழியெல்லாம், ”இந்தியர்கள் என்றால் எவ்வளவு மட்டமாக ட்ரீட் பண்ணுகிறார்கள்” என்று அரற்றிக் கொண்டே வந்தார்.

”நாம் அந்த மாதிரி நடந்துகொள்கிறோம்” என்றார் பிஸ்வாஸ்.

”நாம் என்ன தப்பாக நடந்துகொண்டுவிட்டோம்?”

”இல்லீகல் இமிக்ரேஷன்.”

”அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?”

”உனக்குத்தான் தெரியுமோ?”

இருவரும் கனடிய அமெரிக்க எல்லைக்கோட்டில் நின்று கொண்டு இரைச்சலாகச் சண்டை போட்டுக்கொண்டார்கள். கம்யூனிஸம், மார்க்ஸிஸம், விவேகானந்தா… என்று என்னென்னவோ வார்த்தைகள் எல்லாம் கேட்க, நான் மனைவியை அழைத்துக்கொண்டு விரைவாக நடக்க, சட்டென்று பிஸ்வாஸ், ”ரொங்கொரோஜன் எங்கே போகிறாய்?” என்று காலரைப் பிடித்து நிறுத்தினார். விதியே என்று நடந்து அமெரிக்கப் பகுதிக்கு வந்தோம்.

சின்ஹா தாகமாக இருக்கிறது என்று கோக்கோ கோலா மெஷினில் ஒரு ஐம்பது சென்ட் நாணயத்தைப் போட்டார். அமெரிக்காவில் இருந்த ஒரே ஒரு பழுதடைந்த கொக்கோ கோலா மெஷின் அது. காசை வாங்கிக்கொண்டு சும்மா இருந்தது.

சின்ஹா அதை அடித்து உதைத்து பற்பல சித்ரவதைகள் செய்து பார்த்தார். ஹ§ம்! போட்ட காசையோ, கோக்கோ கோலாவையோ தர மாட்டேன் என்று சொல்லிவிட்டது.

”அமெரிக்கர்கள் இத்தனை விஞ்ஞான முன்னேற்றம் அடைந்து என்ன பிரயோசனம்? ஒரு கோக்கோ கோலா மிஷினைச் சரியாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையே!”

”உனக்கு ஒரு கோக்கோ கோலா கிடைக்கவில்லை என்றால் மேற்கத்திய நாகரிகத்தைச் சாடுவது என்ன நியாயம்?”

”இதெல்லாம் வைத்து என்ன பிரயோசனம்? ஒழுங்காக வைக்க வேண்டும், இல்லை மிஷின் வைக்கவே கூடாது.”

”இந்த ஒரு மிஷின் வேலை செய்யவில்லை. எத்தனை மிஷின் வேலை செய்திருக்கிறது அதாவது எத்தனை கோக் சாப்பிட்டிருக்கிறோம்.”

”தட்ஸ் நாட் தி பாயின்ட்.”

”தட் இஸ் தி பாயின்ட்!”

”நீ ஒரு பூர்ஷ்வா… அடிவருடி!”

”நீ ஒரு சிவப்பு எலி…”

யார் சிவப்பு எலியோ, இரண்டு பேருக்கும் முகம் சிவந்து போனதென்னவோ வாஸ்தவம்.

கம்யூனிஸம் காபிடலிஸம் என்று குடுமியைப் பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் நான் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து, ”வா ஓடலாம்!” என்றேன்.

அதிகாலை எழுந்து சொல்லாமல்கொள்ளாமல் பஸ் ஏறி திரும்ப ப்ளேன் பிடித்து, உட்கார்ந்ததும் பெருமூச்சுவிட்டேன்.

”அப்பாடா ஒழிஞ்சாங்க.”

”ரொங்கோரோஜன்!” என்று பின் ஸீட்டில் ஒரு குரல் கேட்டது!


http://www.niagarafallslive.com/images/HorseshoefromSkylon.jpg

Saturday, July 21, 2012

ஓர் உத்தம தினம்- சுஜாதா - லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை

ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.


சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.


என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!


”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.


”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”


”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”

”கிடையாது.”

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.


”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.


”தேங்க்ஸ் மஞ்சு.”

”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”


”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”


”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”

”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.

”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”

”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”

டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.

”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”

”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.

”கையெடுங்க. சொல்றேன்.”

”எடுத்தாச்சு.”

”அந்தக் கை.”

”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”

”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”

”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.

”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”

”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”

”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.


பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.

”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”

”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”

”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”

”கோயிலுக்குப் போயாகணும்.”

”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”

”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”

”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”

”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”

”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”

”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.

”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”

”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”

மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும், சொல்ல வேண்டாம்.”

”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”

”சே, புத்தி போறதே!”

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.


கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” 


”தேங்க்யூ கர்னல்.”


”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”

”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.

”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”

”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.

”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”

”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”

”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.

”ஆமாம்மா.”

”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”

அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.

”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”

”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”

”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.

”எங்கேயாவது!”

”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”

‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”

”படிங்க.”

”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…

”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!



சி.பி -  ( accident to her husband)

Monday, July 02, 2012

மஹா பலி - லவ் த்ரில்லர் - சுஜாதா - சிறுகதை

http://farm4.static.flickr.com/3554/3312807515_4584031f64_o.jpg

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் ‘ஆஷோன்… ஆஷோன்’ என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக்கொள்ள… சென்னை-103-ஐச் சேர்ந்த ‘அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி’யின் ஆசிரியைகள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ”இங்கதான்டி ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’ ஷூட்டிங் எடுத்தாங்க” என்று வியக்க, கற்சிற்பிகளின் உளிச் சத்தம் எதிரொலிக்க, பிள்ளையார்களும் கொள்ளை -----------  சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்ட்டுகளுக்குக் காத்திருந்தார்கள். ‘கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?’


இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன் கரைக் கோயிலின் அருகில் வந்து கடற்கரைப் பக்கம் சென்றான். 1200 வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.


”கேமரா வேணுங்களா… நிக்கான், ஜப்பான்… ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?”

அவன் மௌனமாக இருக்க,

”செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க… கோலாப்பூரி…”


”…..”

”பேச மாட்டீங்களா?”

அவனுக்குப் பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொளதொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று ”சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!” என்றான் செருப்பு விற்ற சிறுவன்.


அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்துவிட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.


”எக்ஸ்கியூஸ் மி…”

அவர் திரும்ப, ”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”என் பெயர் அஜய். நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரெட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்.”

”ஓ! நீதானா அது? ‘யங்’காக இருக்கிறாயே?!”


”எனக்கு 25 வயது!”


”எனக்கு ஏறக்குறைய 70” என்றார். ”கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்… ஒருமுறை ‘பைபாஸ்’ ஆகி விட்டது. கடன் வாங்கின ஆயுள்!”

”மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்” என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம்வைத்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

”ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை. சான்றிதழ்களை அப்புறம் பார்க்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்… பிரசுரகர்த்தர்கள் கெடு.”

”என்ன புத்தகம்?”

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

”பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஓர் அந்தரங்கப் பார்வை…”

பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான ‘போஸ்’களில் படம் பிடித்துக்கொண்டு, ”என்ன மச்சி… கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!”

”இவர்களுக்கா பல்லவச் சிற்பக் கலை பற்றிச் சொல்லப்போகிறீர்கள்?”

”ஏன்?”

”பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசாரமற்றது.”


”நீயும் இந்தத் தலைமுறைதானே?”

”ஆம். ஆனால், வேறு சாதி.”


அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ”பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?”

”கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.”

அவர் அவனைச் சிநேகபாவத்துடன் பார்த்து, ”ஐ லைக் யூ!”

”எப்போது வேலைக்கு வரலாம்?”

”இப்போதே என்னுடன் வா… உன் பைகள் எல்லாம் எங்கே?”


”எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!”

”இவ்வளவுதானா?”

”இதில்கூடப் புத்தகங்கள்தான் அதிகம்.”

”செஸ் ஆடுவாயா?”

”சுமாராக.”

”சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப் பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமசும் படிப்பேன் என்று சொல்லாதே…”
”மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்.”


”கிரேட் யங்மேன். உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்.”


இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் கார் அருகில் சென்று, ”மாருதி ஓட்டுவாயா?”

”நான் ஓட்டாத வாகனமே இல்லை!” என்று சிரித்தான்.

”சிகரெட் பிடிப்பாயா?”

”இல்லை.”

”கல்யாணம் ஆகிவிட்டதா?”


”இல்லை.”

”பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?”

”உங்கள் இஷ்டம்.”


மாருதி காரைத் திறந்து, முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

”ஓட்டுகிறாயா?”


”இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது.”


”எந்த ஊர் நீ?”

”எதும் என் ஊர் இல்லை.”


கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அருச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.


”அமைதியான இடம்… இவன் பெயர் ஸ்னோ. இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?”


”இல்லை.”

”அலை ஓசை பழகிவிடும். மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக்கொள். மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில். மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்.”

”அப்படியா?!” – உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

”யாருக்கு ஷகால் பிடிக்கும்?”

”எனக்கு. உனக்கு..?”


”கன்டின்ஸ்கி.”


”ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டுசேர்த்திருக்கிறது உன்னை. நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.”


அவன் புன்னகைத்தான். ”மிகைப்படுத்துகிறீர்கள்…”


‘எதுவரை படித்திருக்கிறாய்?”


”கல்லூரிக்கு முழுதும் போகவில்லை. படிப்பு தடைப்பட்டுவிட்டது. பி.ஏ. ஹிஸ்டரி படித் தேன்.”

”எங்கே படித்தாய்?”

”லண்டனில்.”

”விட்டுவிட்டாயா?”

”ஆம். பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பின்…”

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்துவைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்… 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், ‘தி டவ் ஆஃப் பவர்’, மெக்கியாவல்லியின் ‘பிரின்ஸ்’, மோதியின் ‘ஜூரிஸ் புடன்ஸ்’…


”உன்னை வகைப்படுத்த முடியவில்லை.”

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.
'

முதல் மாதத்தில் அவன் முழுத்திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதிவைத்திருப்பதை எல்லாம் பிழையே இன்றி மிகச் சுத்தமாக எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவான். ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடுவார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்… சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்குக் கண்பார்வை மங்கியதால், படித்துக்காட்டினான். ஒருநாள், ”மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்தில் இருந்து படித்துக்காட்டேன்” என்றார்.


”என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது.”

”நான் தற்போது எழுதும் புத்தகத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?”

”இது நம் நாட்டுக்குத் தேவைஅற்றது.”

”எப்படிச் சொல்கிறாய்?” என்றார் கோபப்படாமல்.

”மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?”

”நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?”

”தெரிந்து..?”

”நம் இந்தியாவை ஒன்றுசேர்த்த இந்த மரபு இப்போது தேவை இல்லை என்கிறாயா?”

”இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்… அது போல் சோழ மண்டலம்…வேங்கி… இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது.”

”எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்.”


”காரணம், உங்களை எல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்.”

”இருந்தும் இந்த நாட்டை ஒன்றுசேர்ப்பது கலாசாரம்.”

”இல்லை… ஏழ்மை!”

”உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?”

”கரைக் கோயிலின் ஆர்க்கி டெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பி தான் என் ஹீரோ. மகேந்திரவர்மன் அல்ல.”

”மனம் மாறுவாய்” என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது அவனை அறிமுகப்படுத்தினார். ”வினித், திஸ் இஸ் அஜய்… வினிதா என் பெண்.”

”ஹாய், யு லைக் மியூஸிக்?”

”பிடிக்கும்…”

”ஃபில் காலின்ஸ்?” என்றாள் எதிர்பார்ப்புடன்.

”மொஸார்ட்” என்றான்.

”யக்…” என்றாள் அருவருப்புடன்.

”புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்…”

”ஃபிக்ஷன் ரெண்டாம்பட்சம்… ஐ ரீட் போயம்ஸ்.”

”போயம்ஸ்! மைகாட்…”

”தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்…” என்றார் சந்திரகுமார்.

”எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்!” என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் – மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்கவைத்தான். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்கவைத்தான்.

ஒருநாள் மாலை ‘ரொம்பப் போர் அடிக்கிறது’ என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ”கடற்கரைப் பக்கம் வாக்மென் போட்டுக்கொண்டு நடக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா?”

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ”இரவு எனக்கு நிலவொளியில் கரைக் கோயிலைப் பார்க்க வேண்டும்.”

”அழைத்துச் செல்கிறேன்!”

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. ”அவனைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும். இவனைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது.’

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக்காட்டிக்கொண்டு இருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது… ‘How did you die?’


கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

‘Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?’


வாசலில் ஜீப்பில் இருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்தபடியே அணுகினார்.

”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”ஐ’ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்” என்று அடையாள அட்டையைக் காட்டி, ”இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

கண்ணாடி போட்டுக்கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை; கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.


”இவன் பெயர் அஜய். என் செக்ரெட்டரி…”

”இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை. அவன் இங்கே இருக்கிறானா?”

”என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது.”


வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில். ”சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்… வி காட் ஹிம்!”

”விவரமாகச் சொல்லுங்களேன்?”

”இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?”

”இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரெட்டரி… ரொம்ப நல்ல பையன்.”

”புரொஃபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப் பெரிய தீவிரவாதி… மொத்தம் 18 கொலைகள் இவன் கணக்கில் உள்ளன.”

”சம்திங் பாஸிட்டிவ்லி ராங்… ஆள் மாறாட்டம்… போட்டோ தப்பு” என்றார்.


”அவன் இங்கேதான் தங்கி இருக்கிறானா?”

”ஆம்…”

”எந்த அறையில்?”

”மாடியில்!”

”என்னுடன் வாருங்கள்…” சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ”என் செக்ரெட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி. அழகுணர்ச்சி உள்ளவன், படித்தவன், சிந்திப்பவன்…”

அதிகாரி அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் இரை தேடும் சிங்கம் போல அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருந்தான். மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக… ஜன்னல் மலர் ஜாடியில் ரோஜா.


அதிகாரி அவன் மேஜை இழுப் பறைகளைச் ‘சரக்… சரக்…’ என்று திறந்தார். மலர் ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன.

”புரொஃபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா, உம் நம்பிக்கைக்குரிய காரியதரிசியின் சொத்துக்களை?”

சந்திரகுமார் அருகே சென்றார்.

”இது உங்களுடையது அல்லவே?”

மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி இருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மேகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.


”ஐ கான்ட் பிலீவ் இட்… திஸ் இஸ் இம்பாஸிபிள்!”

”இவன் பெயர் அஜய் அல்ல… இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போய் இருக்கிறான்?”


”கடற்கரைக்கு என்று சொன்னேனே!”


”பதற்றப்படாதீர்கள், அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும் வரை பதுங்கி இருக்கலாம்.”

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதப வென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.


”வெயிட்… யு கான்ட் டூ திஸ்… அவன் வேறு யாரையோ…”

”ஷட் அப் ஓல்ட்மேன்… கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு, தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள். வாயை மூடிக்கொண்டு நடப்பதைக் கவனிப்பது உசிதம்!”

”என்ன செய்யப்போகிறீர்கள்? காட்! என் மகள்… என் மகள் அவனுடன் இருக்கிறாள்!”

”அவளைக் காப்பாற்ற

முயற்சிக்கிறோம்.”

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியில் இருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. ‘என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது… ஆள்மாறாட்டத் தப்பு. இவன் இல்லை… தடுக்க வேண்டும்.’

”வர்றாங்க. எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டாப் போதும்!”

ஜன்னல் வழியே, வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. அவர்கள் கைகோத்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

”ரெடி!”

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான். நின்றான். வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

”நாம் வந்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டான், பூட்ஸ் அடை யாளங்களைப் பார்த்து. ஓடுங்க… பிடிங்க!”

இதற்குள் அஜய், வின்னியை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக்கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். தன் பையில் இருந்து எடுத்த துப்பாக்கியை வின்னியின் நெற்றியில் பதித்து, ”ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்… நில்லு!”

‘சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்’ என்று சந்திர குமார் நினைத்தார். ‘இப்போது கூட அனைத்தும் கனவு’ என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி காரில் திணித்து ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் ‘வாக்கிடாக்கி’யில் ஆணைகள் பிறப்பித்தனர். ”க்விக்! செண்ட் த ஜீப்… ஹி இஸ் ரன்னிங்…”


புரொஃபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொஃபசர் வெலவெலத் துப்போய், ”என் மகள்… என் மகளைக் காப்பாற்றுங்கள்…”

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.


”என்ன ஆச்சு… என் மகளுக்கு என்ன ஆச்சு..?”

”ஓ! ஷி இஸ் ஆல்ரைட்…”

”பையன்?”

”கடற்கரையில் சுட வேண்டி இருந்தது…” அவர்கள் அந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

”வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்?” என்று அவளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ”எங்கேயாவது அடிபட்டதா?”

”இல்லை அப்பா… அவன் என்னை எதும் செய்யவில்லை.”

”எதும் செய்யவில்லையா?!”

”நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்கு முன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்து விட வேண்டும்” என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!”

சந்திரகுமார் கரைக் கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களின் மீதும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

”அப்பா, அவர்கள் அவனை… அவனை…” என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்துகிடந்தான் அவன். மாருதியின் ஹெட்லைட் வெளிச் சத்தில் மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

‘உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்… இப்போது நம் எதிரி நாமேதான்!’


”மைகாட்! வாட் வென்ட் ராங்?” என்றார் சந்திரகுமார்.

”என்ன?”

”நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலி வாங்கும்படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே… எங்கே…?”

”அந்தக் கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்” என்றார் அதிகாரி!




http://www.bharatmoms.com/uploads/Image/writer-sujatha3.jpg