Showing posts with label எம் ஜி ஆர். Show all posts
Showing posts with label எம் ஜி ஆர். Show all posts

Friday, April 12, 2013

எம் ஜி ஆர் கூப்பிட்டும் ஏன் நான் போகலை ? -உதிரிப்பூக்கள் -இயக்குநர் மகேந்திரன் பேட்டி

பிரார்த்தனையிலும் காமத்திலும்தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. நான் அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன்!'' - கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். 


'முள்ளும் மலரும்’, 'உதிரிப்பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'ஜானி’ உட்பட 12 படங்களில் தமிழ் சினிமாவின் திசையைப் புரட்டிப்போட்ட யதார்த்த இயக்குநர் இப்போது மீண்டும் களத்தில். சத்யராஜ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்தவரைச் சந்தித்தோம்...



'' 'முள்ளும் மலரும்’ படம் வெளிவந்து 35 ஆண்டு களுக்குப் பிறகும் அந்தப் படம்குறித்த சிலாகிப்பும் சிலிர்ப்பும் இருக்கிறது. ஆனால், படம் உருவான காலகட்டத்தில் என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது?''


''நான் சினிமா டைரக்டர் ஆகணும்னு ஊசிமுனை அளவுகூட விரும்பியது இல்லை. 'முள்ளும் மலரும்’ நாவலில் எனக்குப் பிடிச்ச சின்னச் சின்ன விஷயங்களை எடுத்து விஷ§வலுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை அமைச்சேன். எந்த சினிமாவிலும் பொதுவா படம் முழுக்கச் சண்டை போடுறவங்க, க்ளைமாக்ஸ்ல 'மன்னிச்சிடு’னு சொல்லி சமரசம் ஆகிடுவாங்க. ஆனா, 'முள்ளும் மலரும்’ படத்தில் நான் அப்படி ஒரு வழக்கமான க்ளைமாக்ஸ் வைக்கலை. காளி கொஞ்சம் மனசைச் சமாதானப்படுத்திக்குவானே தவிர, கடைசி வரை தன் இயல்பில் இருந்து மாற மாட்டான்.


 தங்கச்சி கல்யாணத்துக்குச் சம்மதிச்ச பிறகும்கூட, 'இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்’னு சரத்பாபுகிட்ட சொல்வான். மனித சுபாவம் அப்படித்தான்.


ரொம்ப ரசிச்சு ரசிச்சு... இழைச்சு இழைச்சு அந்தப் படத்தை எடுத்தேன். ஆனா, படத்தோட டபிள் பாசிட்டிவ் பார்த்துட்டு, 'அங்கே ஒரு டயலாக்... இங்கே ஒரு டயலாக் இருக்கு. என் தலையில மண்ணை வாரிப் போட்டுட்டியே’னு தயாரிப்பாளர் வேணு செட்டியார் கன்னாபின்னானு திட்டினார். செட்டியார் பையன் என்னை அடிக்கவே வந்தார். ஆனா, படம் வெளியாகி மூணு வாரத்துக்கு அப்புறம் பிளாக்ல டிக்கெட் விக்கிற அளவுக்கு ஹிட் ஆச்சு.


 'இந்தா பிளாங்க் செக். எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக்கோ’னு சந்தோஷமாக் கொடுத்தார் வேணு செட்டியார். 'வேணாம்ணே... எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீங்க. அது எத்தனையோ கோடிக்குச் சமம். அதுவே எனக்குப் போதும்’னு செக்கைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அந்தப் படத்தில் நடிச்சதுக்குத்தான் ரஜினிக்கும் ஸ்டேட் பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. ரஜினிக்குக் கிடைச்ச முதல் விருது என் படம் மூலமாக் கிடைச்சதில் எனக்கு டபுள் சந்தோஷம். அந்த 'முள்ளும் மலரும்’ நினைவுகள் இன்னும் எனக்குள் சந்தோஷத்தை விதைச்சிட்டுதான் இருக்கு!''


''அப்போதைய சினிமா சூழல் பிடிக்காமல்தான் நீங்கள் படம் இயக்கியதாக முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இப்போது தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கிறது?''


''காளி சொன்ன அதே வசனம்தான்... 'இப்பவும் எனக்குப் பிடிக்கலை சார்!’ ஆரம்ப கால தமிழ் சினிமாவையே என்னால் ஏத்துக்க முடியலை. அப்போ புராண, இதிகாசக் கதைகளையும், நாடகங்களையும் மட்டுமே படங்களா எடுத்தோம். ஆனா, இப்பவும் டிராமா வடிவத்திலேயேதான் சினிமா இருக்கு. 1955-லேயே 'பதேர் பாஞ்சாலி’ படம் எடுத்துட்டார் சத்யஜித் ரே. 

அந்தக் காலகட்டத்தில்தான் அதீத நடிப்பு, அளவில்லாத பாடல்கள் வெச்சு ஹரிதாஸ், அசோக்குமார் படங்கள் எடுத்துட்டு இருந்தோம். 'பராசக்தி’, 'மனோகரா’ படங்களில் ரசிகர்களுக்கே வாய் வலிக்கிற அளவுக்கு வசனம் பேசுவாங்க. பல படங்கள் அழுவாச்சிக் காவியங்களா இருந்தன. கட்டாயக் கல்யாணமா இருந்தாலும் சேடிஸ்ட் புருஷனா இருக்கக் கூடாது. மனைவியின் உணர்வுகளுக்கு மரியாதை தர்ற நல்ல கணவனா இருக்கணும். இதைத்தான் நான் சினிமாவிலும் எதிர்பார்க்கிறேன்!''


''ஏன் இவ்வளவு விரக்தி. அப்படி தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிக்காத அம்சம் என்ன?''


''ஏங்க... இந்தியாவுல எவ்வளவு ஊழல் நடக்குது. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு நாட்டுல எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அது எதையுமே கண்டுக் காம, காதலை மட்டுமே படமா எடுத்துத் தள்றோம். வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமாக்களைப் பார்த்துட்டு, 'ஒவ்வொரு நாட்டுக் கும் ஒரு பிரச்னை இருக்கு. உங்க நாட்டுல 'ஐ லவ் யூ’ சொல்றது மட்டும்தான் சார் பிரச்னையா இருக்கு’னு கேலி பேசும் அளவுக்குத்தான் தமிழ் சினிமா இருக்கு. காதல் சொல்ல மெனக்கெடுறதுதான் சினிமாவா? லாஜிக் இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் எங்கேயும் ரீச் ஆகாது!''


''சரி... நல்ல சினிமாவா இருக்க எது அவசியம்?''


''வழக்கமான பாதையில் இருந்து கொஞ்சம் விலகினாலே அது நல்ல சினிமாதான். நல்ல சினிமாவுக்குப் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்ட்டிஸ்ட் தேவை இல்லை. மனசுதான் தேவை. உதாரணம் சொல்லி விளக்கும் அளவுக்குக்கூட இங்கே சூழல் இல்லை. பல மராட்டிய, இரானிய, கொரியன் படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே வர்றதில்லை. மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களை மட்டும்தான் திரையிடுறாங்க. டி.வி, டி.வி.டி., திரைப்பட விழாக்கள்னு எங்கேயும் அப்படியான யதார்த்த சினிமாக்களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சாமான்ய ரசிகனுக்கு, நாம காட்டுவதுதான் சினிமா. 


பாட்டு, டான்ஸ், ஃபைட் இருக்கும் மசாலாப் படம் பார்த்துட்டு, இதுக்கு மேல சினிமானு ஒண்ணு கிடையாதுனு நினைப்பாங்க. இப்படி ஒரே மாதிரி படங்கள் வர்றதால, மக்கள் அதைத்தான் விரும்பிப் பார்க்கிறாங்கபோலனு ஒரு கருத்துப் பிம்பம் உருவாகும். ஆனா, உண்மை என்ன? கேரளாவுல கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபடு றாங்க. அதுக்கு மிக முக்கியக் காரணம், அங்கே தரமான இலக்கிய ரசனையின் மேல் சினிமா கட்டமைக் கப்பட்டு இருக்கு. மக்கள் மன நிலையை ஆரோக்கியமான திசை களை நோக்கி மோல்டு பண்ற கலை தான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது!''


(மேலும் மேலும் மகேந்திரன் உணர்ச்சிவசப்பட்டதால்,  உரையாடலைத் திசை திருப்பினேன்...)

''எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான அலைவரிசை இருந்ததே?''


''அழகப்பா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னால் நான் தமிழ் சினிமாவின் அபத்தங்களைப் புட்டுப்புட்டு வெச்சுப் பேசினேன். அப்பவே என்னைக் கவனிச்சிருக்கார் அவர். அப்புறம் சென்னைக்கு வந்து அவரோட அறிமுகமாகி, சினிமா வாய்ப்புகளில் எனக்கு பிரேக் கிடைக்காம மூணு தடவை நான் ஊருக்கே போயிரலாம்னு முடிவெடுத்தப்போ, 'வேண்டாம்’னு தடுத்து நிறுத்தியவர் அவர்தான்.

 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூணு தேசிய விருதுகள் ஜெயிச்சது. விருதுகளைப் பெற்றுக்கொள்ள டெல்லிக்குப் போனோம். அப்போ அங்கே எம்.ஜி.ஆரும் இருந்தார். அவர் கால்ல விருதைவெச்சு, 'இந்த விருதுக்கு நீங்கதான் காரணம்’னு சொன்னேன். 'குடத்துல இருக்குற விளக்கை எடுத்து வெளியேவெச்சேன். பிரகாசமா எரியுறது மகேந்திரன் சாமர்த்தியம். நான் ஏன் சினிமாவுக்கு உங்களை இழுத்துவந்தேன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களா?’னு சிரிச்சார்.


 'நாளைக்கு ராமாபுரம் தோட்டத்துக்கு வாங்க. ஒரு முக்கியமான பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கப்போறேன்’னு சொன்னார். பெரிய பொறுப்பு எதுவும் கொடுத்துருவாரோங்கிற பயத்துல நான் போகவே இல்லை. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!''


''இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களை ஈர்த்திருக்கும் இயக்குநர்கள் யார்?''


''முதல் படம் நல்லா பண்ணியிருக்கார்னு ரொம்ப ஆர்வமா சிலருக்கு போன் பண்ணிப் பாராட்டுவேன். ஆனா, அறிமுக வாய்ப்பில் புதுமுகங்களை வெச்சு நல்ல படம் தருபவர், அடுத்த படத்திலேயே பெரிய ஆர்ட்டிஸ்ட், பெரிய பட்ஜெட்னு ரூட் மாறிடுறார். யாரையும் நம்ப முடியலை. உலக சினிமா டிரெண்ட் தெரிஞ்ச சின்சியர் இயக்குநர்களும் இங்கே இருக்காங்க. முதல் படத்துல திரும்பிப் பார்க்க வைத்த ஒரு இயக்குநர், அடுத்த படத்துலயும் சிந்திக்கவெச்சார். ஒரு படம் தோல்வி அடைஞ்சாலும் அலட்டிக்காமத் தன் பாணியைத் தொடர்ந்து சினிமா பண்ணிட்டு இருக்கார் இன்னொருத்தர். இப்படி ரெண்டு, மூணு இயக்குநர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே சமயம், ஒண்ணு, ரெண்டு படங்கள் மட்டும் நல்லா வர்றது தமிழ் சினிமாவுக்கு நல்லது இல்லையே!''


''உங்களுக்குப் பிறகு ரஜினிக்குள் இருக்கும் நடிகனை வேறு யாரும் கண்டுகொள்ளவே இல்லையே?''


''இன்னைக்கும் ரஜினி மகா நடிகன்தான். அதுல சந்தேகம் வேண்டாம். ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் ரஜினி இப்படித்தான் இருக்கணும், நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டாங்க. ஆக்ஷன் படங்களில் நடிப்பது புலி வாலைப் பிடிச்ச மாதிரி. அதை ரஜினியாலும் விட முடியலை. சாண்டில்யனின் சரித்திர நாவல் ஜலதீபம். அதன் மூன்றாவது பாகத்தில் 'என் வழி தனி வழி’னு கடல் தளபதி கன்னோஜி சொல்வான். அதைத்தான் இப்போ ரஜினி செய்துட்டு இருக் கார். அமிதாப் பச்சன் நடிப்பை ரொம்ப சுலபமா கிராஸ் பண்ற திறமையும் சக்தியும் ரஜினிக்கு இருக்கு. ஆனா, அதுக்கு அவரோட ரசிகர்கள் வழிவிடணும்!''  


''நீங்கள் இயக்கும் பட வேலைகள் எப்படிப் போய்க்கொண்டு இருக்கின்றன?''


''குடும்ப உறவுகளை மையமாவெச்சு சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குகிறேன். கொடைக்கானல்தான் லொகேஷன். ரெட் ஒன் கேமராவில் ஷூட் பண்ணலாம்னு திட்டம். பழைய உற்சாகத்தை உணர்றேன்!''


நன்றி - விகடன்


 வாசகர் கருத்து 


 1. மகேந்திரனது படங்களை பார்த்திருக்கின்றேன். "லாஜிக்கும் (தர்க்கமும் என்று தமிழில் சொல்லலாம்) இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் ரீச் ஆகாது என்கிறார்". சரி. இவர் அப்படி ஏதாவது படமெடுத்திருக்கின்றாரா? கேள்வி கேட்டால் இல்லையென்று தானே சொல்ல வேண்டியிருக்கும்.

தமிழ் சினிமாவின் அவலங்களை பற்றி பேச எந்த தமிழ் திரைப்பட படைப்பாளிகளுக்கும் அருகதை இல்லை எனவே சொல்லவேண்டும். தனிமனித துதிபாடலின் வெளிப்பாடாகவே தமிழ் சினிமா வளர்ச்சியடைந்திருக்கின்றது. என்ன செய்வது? பார்ப்பது மந்தைகள்ளல்லவா? மீறி எவராவது வித்தியாசமாக படமெடுத்தால் திரையரங்கு பற்றி எறிந்துவிடும். அந்த அளவிற்கு சகிப்பின்மை மற்றும் அறிவின்மை.

ரஜினிகாந்தை மகா நடிகன் என்று இவர் விவரித்ததும் இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை காணாமல் போக செய்துவிட்டார்.



2. மகேந்திரன், பா இயக்குனர்கள் எல்லாரும் ஒரே டைப் தான். தாங்க தான் தமிழ் சினிமாவோட சரித்திரத்தையே மாதிட்டோம்னு சொல்வாங்க. எல்லாருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, யாதார்த்த எடுங்க இல்லேன இரானியன் சினிமா பாருங்க. ரொம்ப சிம்பிள்.




3. தமிழ் சினிமா - இப்படித்தான்

1. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க.

2. சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்.

3. நீங்க எல்லாம் தொண்டை கிழிய பேசி கிளாஸ் எடுத்தாலும் கடைசில இருக்கற Studentsக்கு கேக்குமான்னு சந்தேகம் தான்.. ஆனா ஹீரோ பாடறது நாலு கிலோமீட்டர் சுத்தளவுல எல்லோருக்கும் கேக்கும்.

4. ரேப் சீனை தடுக்கவரும் நம்ம ஹீரோ (படுபாவி பய ) , வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.ஆனா அந்த பொண்ணு ஹீரோயினா இருந்து அதுவே அடுத்த சீன்ல அரைகுறையா ஆடும் போது நம்மாளு கண்டுக்க மாட்டாரு..

5. கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.


6.ஹீரோவிடம் மாட்டிவிடும் தனது கையாளை வில்லன் குறி பார்த்து சுடுவான் ...கையால் அருகிலே ஜென்ம விரோதி ஹீரோவை சுட மாட்டான் ...

7.என்ன சோக காட்சி என்றாலும் ஹீரோயின் புல் மேக்கப்தான் ...

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் 


4. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!"
யூகங்கள் :
1. அரசவை இயக்குனர் பதவி
2. Film Institute Chairman
3. தமிழ்நாடு டாக்குமெண்டரி படத் தயாரிப்பு.
4. கலைமாமணி விருது குழுவின் தலைவர்.
5. டாக்டர் பட்டம்.

நல்ல வேளை, மனிதர் பிழைத்தார். 


5. நல்ல எண்ணங்கள் கொண்ட படைப்பாளி தான் கடவுள் ,அந்த வரிசையில் மகேந்திரன் ஒரு கடவுளே .தன் மக்களுக்கு நல்ல ரசனை கொண்ட எண்ணங்களை பகிர்ந்தளித்தார் .மக்கள் ரசனையை உயர்வாகவே மதிப்பிட்டார் .மகேந்திரன்,நீங்கள் தன் படைப்பாளி .இந்த சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது .


6. நல்ல இயக்குனர் தான் ஆனால் இவர் எடுத்த 12 படங்களில் 3 தானே
ஞாபகம் இருக்கிறது..மீதி? இவர் இயக்கிய மற்ற படங்கள்

ஜானி(சுமார் படம் நல்ல பாடல்கள்)
அழகிய கண்ணே
அன்புள்ள மலரே
கண்ணுக்கு மை எழுது
மெட்டி (இவர் சொதப்பிய நல்ல கதை )
நண்டு (இவர் சொதப்பிய நல்ல கதை)
ஊர் பஞ்சாயத்து
சமஸ்தானம்
கை கொடுக்கும் கை(கன்னட பட ரீமேக்)


7. இடைவெளியில் தமிழ் சினிமா வேறு பரிமாணத்திற்குப் போய் விட்டது. தொழில் நுட்பம், காட்சியமைப்பு, போன்றவை எல்லாம்...

ஆரண்ய காண்டம் போன்ற படங்களும் இதே ஊரில் தான் படமாக்கப் பட்டிருக்கின்றன என்பதையும் இவர் உணர்ந்து கொண்டால் நல்லது. கமர்சியலாக வெற்றி பெற வேண்டும் என்பது தான் இங்குள்ள நெருக்கடி.

ரசிகர்களை அதற்குத் தயார் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஹன்சிகாவையும், அஞ்சலியையும் தானே இன்னமும் அட்டைப் படத்தில் போட்டு விற்று காசு பார்க்க வேண்டியிருக்கிறது... 



8. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு படம் எடுத்தா சென்ஸார் வெட்டுவான் இல்லைன்னா அம்மா வெட்டும் .
அது சரி , நீங்க அப்படி ஏதாவது படம் எடுக்காமல் குடும்ப உறவுகளை மையமாவெச்சு படம் எடுக்க காரணம் ?
ஐயா , நான் உங்கள் படங்களின் தீவிர ரசிகன். உங்கள் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன் .
'கை கொடுக்கும் கை' முதல் பாதி அப்படியே , உரிமைக்குரல் படம்.
'ஊர்ப் பஞ்சாயத்து' எதில் சேர்த்தி ?
'அழகிய கண்ணே' , ஓமன் படத்தின் உங்கள் பிரதிபலிப்பு. 



Friday, December 28, 2012

கோழிகூவுது

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-prn1/c0.0.403.403/p403x403/537640_316794115103466_872665832_n.jpg

கோழிவிற்ற தனது அனுபவத்தைக் கதையாக்கி ஒரு சமுகப்பிரச்சினையுடன் அசோக் -சிஜா ரோஸ் மூலமாக ஒரு அற்புதமான காதல் கதையைக் கோர்த்துச் சொல்ல வந்திருக்கிறார் கோழிகூவுது இயக்குனர் ரஞ்சித்.டிசம்பர் 28 இல் படம் வெளீயாக தேதி குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் சினிமாவில் தான் சந்தித்த பழைய கசப்பான அனுபவங்களை மறந்து மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார் கோழிகூவுது இயக்குனர் ரஞ்சித். 




பண்ருட்டி அருகில் இருக்கும் சிருவத்தூர்ங்கிற கிராமத்திலிருந்து சினிமாவிற்குப் புறப்பட்டு வந்தவர் ரஞ்சித்.  தனது சிறிய வயதில் பிழைப்புக்காகச் செங்கல் சூளையில் வேலைபார்த்திருக்கிறார். ஏன்.. கோழிக்குஞ்சு வியாபாரம் கூட செய்திருக்கிறார். அதில் சேர்த்தை காசை சென்னையில் உதவி இயக்குனராகனும்னு பலபேர்கிட்ட இழந்திருக்கிறார். கேட்கவே கஷ்டமா இருக்குல்ல… உதவி இயக்குனர்களிடம் காசு பிடுங்கித் தின்று உடம்பை வளர்க்கும் வீணாப்போன இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதே அருவருக்கத் தக்க விஷயம்தான்.




படங்களில் வேலை செய்தும் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் மிகவும் ஒடிந்து போயிருந்த ரஞ்சித் தனது  பூர்வீகத் தொழிலான கோழிக்குஞ்சு வியாபாரத்தையே  களமாக்கி, கூடவே ஒரு அழகான காதலைச் சேர்த்து கோழி கூவுது படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். இதன் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஏ.நாகராஜன் உடனே ஒத்துக் கொண்டு பட வேலைகளை ஆரம்பித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ரஞ்சித்திடம் படத்தினைப் பற்றி சிறிது உரையாடினோம்.

http://www.mysixer.com/wp-content/uploads/2012/12/Kozhi-Koovuthu-Press-Meet-Stills-8.jpg


படத்தின் கரு என்ன ..? உங்க கோழி நாட்டுக்கோழியா..? அல்லது `ஈமு` கோழியா..?



புரிந்து கொண்டு உஷாரான ரஞ்சித்,`அட ஏங்க நீங்கவேற… பத்திரிக்கைகள்ல ஈமு கோழியோட விளம்பரம்தான் பார்த்திருக்கேனே தவிர, அதை நான் நேர்லகூட பார்த்தது கிடையாது. படம் ஆரம்பிச்சு பாதி ஷூட்டிங் முடிஞ்சா சமயத்துலதான், அந்தப்பிரச்சனையே ஆரம்பமாச்சு!. ஆனாலும், இதுல கோழிக்குஞ்சு வியாபாரத்துல நடக்கிற மோசடியைச் சொல்லியிருக்கேன். 




நானே இதைப் பதிவு பண்ணியிருக்கக்கூடாதுதான்!. இருந்தாலும், மக்களுக்கு சொல்லிடலாம்னு தோணுச்சு. ஏன்னா, நான் நூறு ரூபாய்க்கு பத்து கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறேன்னா, ரெண்டு, மூணு நாள்லேயே செத்துப்போயிரும்!. அந்தப்பாவத்தை நாம சம்பாதிக்கனுமா?ன்னு தோணுச்சு. அதனாலதான் இந்தக்கதையை கையிலெடுத்தேன்!. 



அதனால கோழிக்குஞ்சு வியாபாரிகளோட வாழ்வியல் கொஞ்சம் பாதிக்கப்படலாம்னு தோணுது. இருந்தாலும், எங்களுக்கு வேற வழி இல்லைங்கிறதையும் கொஞ்சம் அழுத்தமா பதிவு பண்ணியிருக்கேன்..



பாவத்தைப் போக்கக் காசு செலவுபண்ணிக் காசி ராமேஸ்வரம்னு போவாங்க… நீங்க என்னடான்னா  செஞ்ச பாவத்தைப் படம் பண்ணி காசாக்கிட்டீங்க…



சிரிக்கிறார்….


http://www.indiancinemagallery.com/Gallery2/d/882139-1/Kozhi+Koovuthu+stills+_76_.jpg



மாஸ் ஹீரோக்கள்  என்று முடிவுசெய்யாமல் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருப்பவர்களை வைத்துப் படம் செய்ததன் நோக்கம்..?



வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பவர்கள்தாம் ஈசியாக  உடன் வருபவர்களையும் கைகொடுத்து அழைத்துச் செல்வார்கள்… வெற்றியின் சிகரத்தில் இருப்பவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் என்பதல்ல… அவர்களுக்கும் நமக்குமான தூரம் அதிகமாக இருக்கும் அதுதான் பிரச்சினை…(ரொம்ப கவனமாத்தான் பேசுறாரு ) அத்துடன் இளம் நடிகர்கள் என்றால் அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளியே கொண்டு வந்துடணும்ங்கிற சுதந்திரம் நமக்கு இருக்கும்…



 அப்பொழுது தான்  இயக்குனரா நாமளும் ஜெயிக்க முடியும். படத்தோட ஹீரோ அசோக், ரோகினி மேடம்கூட நடிச்ச ஒரு சீனுக்கு ஒரே டேக்ல மூணு பக்க வசனம் பேசுனாரு!. தவிர, வில்லனா நடிச்சிருக்கிற போஸ் வெங்கட், ரோகினி மேடம், புதுமுக ஹீரோயின் சிஜா ரோஸ். எல்லாருமே  அவங்களோட பங்களிப்பை, கொஞ்சம் அதிகமாவே கொடுத்திருக்காங்க!



சில்க்ஸ்மிதாவின் ‘கோழி கூவுது’ படத்திற்கும், இந்தப்படத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?



படத்துக்கு முதல்ல ‘கோழி’ன்னுதான் தலைப்பு வச்சிருந்தோம்!. ஆனா, அது வேற ஒருத்தருடைய தலைப்புங்கிறதுனால பயன்படுத்த முடியலை.. அப்புறம் தான் ‘கோழி கூவுது!’ என்று பெயர் வைத்தோம், நேரா… கங்கை அமரன் சார்கிட்ட போய் நின்னோம்!. படத்தோட கதையைக் கேட்ட அவர் முழு மனசோட சம்மதிச்சு ‘சந்தோஷமா பயன்படுத்திக்கோ’ன்னு பாராட்டுனாரு.



 அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். அதேசமயம், அவருடைய ‘கோழி கூவுது’க்கும் இந்தப்படத்துக்கும் சம்மந்தம் கிடையாது! தமிழ் ரசிகர்கள் ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்து ரசித்த கிராமத்துக் காதலை அழகா சொல்லியிருக்கேன்!”



படத்துல அசோக் எந்தக் கோழியை அதிகம் விரட்டுகிறார்..?



ஆஹா… படம் டிசம்பர் 28 வெளியாகி இருக்கிறது… அப்புறம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்…இப்போ கோழியை..சாரி ஆளை விடுங்க… என்று எஸ்கேப் ஆகிறார்.


 http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kozhi%20Koovuthu%20Movie%20Latest%20Stills/76276704Kozhi-Koovuthu-Movie-Stills-62.jpg


 கங்கை அமரனின் கோழி கூவுது படம் பற்றி ஒரு சுவராஸ்யமான சம்பவம் 



‎1983-ஆம் ஆண்டு திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.கவிடம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது.



இந்த நிலையில் கங்கை அமரனை தனது அலுவலகத்திற்கு வரச்செல்லியுள்ளார் எம்.ஜி.ஆர். எதற்காக அழைத்துள்ளார் என்ற விபரம் தெரியாமல் அங்கு சென்றுள்ளார் கங்கை அமரன். மந்திரிகள் சூழ அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் " கோழிகூவுது படத்துல நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சு"ன்னு ஏதோ பாட்டு எழுதுனியாமே" என்று கங்கை அமரனிடம் கேட்டிருக்கிறார். 



வெலவெலத்துப்போன கங்கை அமரன், "படத்தின் காட்சிக்குத்தான் அந்த மாதிரி எழுதினேன், மத்தபடி வேற எதயும் மனசுல வச்சிக்கிட்டு எழுதலண்ணே" என்று கூறி இருக்கிறார். 



இருந்தாலும் சமாதனமடையாத எம்.ஜி.ஆர் "ஏதோ தெரிஞ்ச பையன் அப்படிங்கிரதுனால விடுறேன், இனிமே இந்த மாதிரி எழுதாத" என்று எச்சரித்து அனுப்பியுள்ளார்.


எம்.ஜி.ஆரின் கடும் கோபத்திற்கு காரணம் எதிர்க்கட்சியினர், "நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே..ஒன்னரையனா காய்கறிய ஒன்னாரூவா ஆக்கிப்புட்டாங்க" என்று போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்ததுதான்.



இதை தன்னுடைய பத்திரிகை, தொலைகாட்சி என்று அத்தனை பேட்டியிலும் கூறி இருக்கிறார் கங்கை அமரன் .
 http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kozhi%20Koovuthu%20Movie%20Latest%20Stills/3670635Kozhi-Koovuthu-Movie-Stills-45.jpg
நன்றி - கையளவு உலகம் ,  மை சிக்சர்.காம்

Tuesday, October 16, 2012

எம் ஜி ஆர் என்னிடம் வாங்கிய சத்தியம் - ஜெ பர பரப்பு கடிதம்

http://www.alaikal.com/news/wp-content/mgr101.jpg 

சென்னை: அதிமுக தொண்டர்களைக் காப்பாற்ற தம்முடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னிடம் சத்திய வாக்கினை பெற்றார் என்று அதிமுக  பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  




அ.தி.மு.க. 41-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாட  வேண்டுகோள் விடுத்து,அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறியிருப்பதாவது:





இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும்  மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!



நம் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40  ஆண்டுகள் நிறைவடைந்து, 41-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான  தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறேன்.



அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ளவேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும்  வாழ்வை மேற்கொள்ளவேண்டும்; இயன்ற பொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில்  எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்  என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த  ஒப்பற்ற மனிதராம் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச்  செல்வம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/1967_MGR.jpg

இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு  நிமிடம் எண்ணிப் பார்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த  எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி  திமுக-விற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை, ஒரு சுயநலக் கும்பலின்  தலைவனாகிய ஒரு தீய சக்தி தன் மனம் போனபடி ஆயுதமாக்கிக் கொண்டு தமிழகத்தை  தனது வேட்டைக் காடாக மாற்றியது.



அண்ணா அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது.  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக  மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.



புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள்  வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.



ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப்  பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட  கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு  தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.



திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை  தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி  அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும்  ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும்  தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.



தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த  கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும்,  வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான  நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர்.



கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக்  காக்கவேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக,  உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு  நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. இது நெருப்பாறு. இது வஞ்சகமும்,  சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது.  இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்தக் கடமையை கைவிட்டுவிடக்கூடாது என்பதை  நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.



புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று  தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மன நிறைவும், நிம்மதியும்  இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது,  தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற  திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன்.



தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும்  அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில்  பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்ற அண்ணாவின்  அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு  நலத் திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும்  கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்  அறியேன்.



எனவேதான் ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக  மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு  துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில்  தமிழகம் தலைகுனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும்,  முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை  போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள்.



மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற  நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன.  தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த  உண்மை.



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் உங்கள்  அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள்  நலப் பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை  தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் பல வெற்றிப் பரிசுகளை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க தமிழக மக்கள்  காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGeuh8lTBuLomyGdHYrCZ1VyK5-7r-LTwfM751YGMvCQwAu-IshGp13XnPQ7k4ykfMXa89J3KicVpPiy51sEBRAL7kmSe3AA2IDWKDdzN_8ytQgTkfgtBdTtUKE5re2imItH2UWtXrQ7g/s1600/jayalalitha_mgr_20110321.jpg


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சத்துணவுத்  திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை  எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத் திட்டங்கள், பசுமை வீடுகள்  திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள்,  வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய்  விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து  நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இது தொடரும்;



இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி  எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக  தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின்  எண்ணிக்கையையும், நாம் எதிர் கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும்  கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின்  வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட  செயல்வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே  தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய  தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன்.



எத்தகைய உயர்ந்த நோக் கங்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து  வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக  உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்  கொள்கிறேன்.



என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க  விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர,  பேரூராட்சி, பகுதி அளவிலும்; இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும்  ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி  கழகக் கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி  சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierAglw_HdzYojo0c7_fOvXqcepltLpZ89F-ZR5HA1swVxkAJFC4THQrzbz7Mnaq45mpsi5VkPPOUOFChRs32XP9CT5yhdnQTCO1lrW_ukghUFaAUDyqMZDA_VPDq5q0KatvwLzQ96eTPN/s1600/42b.jpg
 மக்கள் கருத்து 

1. சாதனை!சாதனை!! சாதனை!!! மக்களின் வேதனை!வேதனை!! வேதனை!!!


கடந்த ஆட்சிக் காலத்தில் 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று இட நெருக்கடிக்கிடையே பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து இருக்கின்ற இமாலயச் சாதனை!



பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தை ஆட்சிக்கு வந்த நாளிலேயே வெளியே தூக்கி எறிந்த வியத்தகு சாதனை!


திமுக ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றிருந்த தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்டமாக நிறைவேற்ற வேண்டிய கட்டிடங்கள், “கலைவாணர் அரங்கப்” பணிகள் ஆகியவற்றைத் தொடராமலும்; அதுபற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமலும், கிடப்பிலே போட்ட கித்தாப்புச் சாதனை!



ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி அதன் நினைவாக சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டதுமான நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்த மாபெரும் சாதனை!



ஏழை மாணவர்கள் - வசதி படைத்த மாணவர்கள், நகர்ப்புறத்து மாணவர்கள்- கிராமப்புறத்து மாணவர்கள் என்று வழிவழி வந்த வேறுபாடுகளை அகற்றும் சமச்சீர் கல்வி முறைக்கு 23.5.2011 இல் தடை விதித்த தனிப் பெரும் சாதனை.



சமச்சீர் கல்விக்காக 200 கோடி ரூபாய் செலவழித்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையெல்லாம் விநியோகிக்காத விண்ணுயர் சாதனை!


ஆசிரியர்கள் நியமனத்திலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதிலும் குளறுபடிகளை ஏற்படுத்தி, அதில் ஆளுங்கட்சியினர் குளிர் காய்ந்த குதூகலச் சாதனை!


சத்துணவுப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் நியமனங்களில் ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடிய அற்புத சாதனை!



இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்த மின்னல் வேகச் சாதனை.




திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் புதிய அனல் மின்நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் - யூனிட் (1), வடசென்னை அனல்மின்நிலையம் யூனிட் (2), வல்லூர் யூனிட் (1), வல்லூர் யூனிட் (2), வல்லூர் யூனிட்(3), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதிய யூனிட் ஆகியவற்றை; திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக, உரிய காலத்தில் மினுற்பத்தி செய்வதில் அக்கறை காட்டாத அபார சாதனை!


வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழில்முனைவோர், விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும் திகைப்பூட்டும் சாதனை!


பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்” என்ற வகையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்ட இணையிலாச் சாதனை!



தமிழகத்தில் பொறியியல் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ளோர் பயனடையும் பொருட்டு; திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்களை ரத்துசெய்து உருக்குலைத்த ஒப்பற்ற சாதனை!
ஏழை எளியோருக்குப் பயன் தரும் எந்த இலவசத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாத முக்கியச் சாதனை!



எடுத்துக்காட்டாக, 2011 பொங்கல் திருநாளையொட்டி வழங்க வேண்டிய இலவச வேட்டி - சேலைகளை எட்டு மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் வழங்கி முடிக்காத வரலாற்றுப் புகழ் சாதனை


- கல்வியாண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் இலவச மடிக் கணினிவழங்கும் பணியும் - இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியும் முடிந்த பாடில்லாத முக்கியமான சாதனை!.




இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அமைச்சர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், நிரந்தர நடுக்கமும் நிலவுவதற்கு வழிவகுத்த நிகரற்ற சாதனை!



எந்த இடத்திலும் காலூன்ற முடியாத அளவுக்கு அதிகாரிகளை அடிக்கடிப்பந்தாடும் அநியாய சாதனை!
குறுவைச் சாகுபடியைக் கனவாக்கி, சம்பாச் சாகுபடியையும் ஏக்கத்திற்கு உள்ளாக்கிய இணையில்லாச் சரித்திரச் சாதனை!



கட்சி மாச்சரியத்தோடு, நில அபகரிப்பு என்ற பெயரால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னணியினர் மீது சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொய்யான வழக்குகளைத் திரும்பத் திரும்பத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைத்த சிறப்பான சாதனை!
மதுபான உற்பத்தியாளர்கள் மேலும் லாபம் சம்பாதிக்க ஏதுவாக, மது பானங்களின் விலையை உயர்த்திய மாபெரும் சாதனை!



கொலை இல்லாத நாட்களே இல்லை; கொள்ளை நடக்காத ஊர்களே இல்லை; வழிப்பறி நடக்காத சாலைகளே இல்லை; பெண்கள் வெளியே புறப்பட்டால் கழுத்திலே உள்ள தாலிச் சங்கிலிகள் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறி; போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று சட்டம் - ஒழுங்கு நிலையைப் படாதபாடு பட வைத்த பரவச சாதனை!



பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அரிய சாதனை!


பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று ஏழை எளிய நடுத்தரமக்களை வாட்டி வதைத்திடும் வளமான(?) சாதனை!



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்திடும் வகையில்; ஆட்சியினரையும் அவர்தம் செயல்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்திடும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து அச்சுறுத்த நினைக்கும் அபார சாதனை!



தமது இயலாமையை மறைத்து மக்களைத் திசை திருப்புவதற்காக; எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீதும், இந்தியப் பிரதமர் மீதும், முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க மீதும் பழி சொல்லிப் புழுதி வாரித் தூற்றும் புரட்சிகர சாதனை!



ஜனநாயக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனசாட்சிக்குப்பயந்து, வாக்களித்த மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சியினருக்குப் பயந்து, பத்திரிகைகளுக்குப் பயந்து நடைபெற்ற தி.மு.க ஆட்சிக்கு மாறாக; அனைத்துத் தரப்பினரையும் பயமுறுத்தியே ஆட்சி நடத்தும் பண்பட்ட(?) சாதனை!





2. முருகேஷன் - இதயதெய்வம் வேறு என்னெதற்கெல்லாம் சத்தியம் வான்கினார் என்று இப்பவே மொத்தமாக சொல்லி விடுங்கள். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை
ஒரு பெண்ணாக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதித்திருப்பது முன் உதாரணங்கள் இல்லாததுதான்.நிறைகள் பல இருந்தாலும் குறைகளும் உங்கள்
காதுகளில் விழும்படி சுற்றியிருக்கும் அரண்கள் வழி செய்திடல் வேண்டும்.


இடிந்தகரையிலும் மணப்பாட்டிலும் அனியாய சாவுகளை தடுத்திருக்கலாம்.
உங்களுக்கு கூழை குப்பிடு போடுபவரை விட உங்களது குறைகளை சுட்டிக்காட்டுபவரை நம்பலாம்.
ஆதாயத்திற்காக சொல்லப்படுபவை அல்ல அது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCdOVV4go41YIeZ7qC4ypUAsSAiNnYVj0aK_63SNvKUiF2nDR9E-n4MHbbw8DczqIkJmSTvflG5dp4_QsYwRxbzQ38JfYWc7RDAcspjQq4bLgaJniItRQwlBK-1wjn6ZHUI6OxFkoRpnw/s1600/mgr-mk.jpg




3. Dr.Mrs.MeenakshiPrabhakar




அ.தி.மு.க தொண்டர்களை காப்பாற்ற தம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா கட்சித் தலைவர் பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும்.முதல்வர் பதவி முழுதும் நாட்டும் மக்கள் பிரதினிதித்துவம்.



அரசு கொள்கைகளான நல்லிணக்கம், சார்பின்மை , தனி நபர் வாழும் உரிமை நிறுவ வேண்டிய தளம்.எம்.ஜி.ஆர் என்றும் அ.தி.மு.க மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதில்லை.உலக அளவிலான விரிந்த சமூக சிந்தனை அவர் பாடல்களில், திட்டங்களில் உண்டு.அவர் நிலைத்த புகழ் பெறவும் அதுவே காரணம்.




கட்சி வித்தியாசமின்றி அரசுத் தளத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் தலைவர்கள் செயல்படும் நிலை உண்மையான ஜனனாயகம்.கட்சி தலைவர் பொறுப்பு, மக்கள் நல செயல்களில், மக்களை உயர்த்த திறன் தருவதிலான பகிரும் பொறுப்பே தவிர போட்டியில்லை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA8Nh8Nnx8hAg3kdTxxbpfFNBFf0lNVrVh3x6UUhI1Mlqmf9gmar3AC7Ulzk_S-myh_fJKW1jUd0OtWV9QuGVa-UXBLCdVbndJYcKh6QyXZK4mNQD9sImQTMmtr3UFwgsX9lJRnprMoN0/s1600/mgramachandran17.jpg
 a

நன்றி - விகடன்

Tuesday, August 21, 2012

எம் ஜி ஆர் - ரை ஏன் சுட்டேன்? எம் ஆர் ராதா பேட்டி @ மலேசியா

a
எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்!- எம்.ஆர்.ராதா கைது – மாலைமலர் செய்தி “பெற்றால்தான் பிள்ளையா” படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார். 1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். “அன்பே வா” ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி. ஆகஸ்ட் 18_ந்தேதியன்று “முகராசி”யும், செப்டம்பர் 16_ந்தேதி “தனிப்பிறவி”யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். “முகராசி”க்கு ஆர்.கே.சண்முகம், “தனிப் பிறவி”க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர். முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். “நாடோடி”, பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய “நான் ஆணையிட்டால்…” பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் “பறக்கும் பாவை”. இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார். ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த “பெற்றால்தான் பிள்ளையா” 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு. “பெற்றால்தான் பிள்ளையா” படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர். அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார். எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார். இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். “குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்” என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும். குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை “அப்பா!” என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் “பெற்றால்தான் பிள்ளையா” படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. 12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான “தாய்க்கு தலைமகன்” ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம். அன்று மாலை, “எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்” என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது. நன்றி- மாலைமலர்

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன? 

http://www.adrasaka.com/2011/09/blog-post_1336.html

 

 

Tuesday, May 29, 2012

அன்பே வா - எம் ஜி ஆர் - ஷூட்டிங்க் - விகடன் பொக்கிஷ பக்கங்கள்

சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது.


 மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம். ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.


''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம். 'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன்.
யில் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சரோஜா தேவி, நடுங்கும் குரலில் எம்.ஜி.ஆரைப் பார்த்து, ''என்னங்க! கால்காவுல 'க்ளவுஸ்’ கிடைக்குமா?'' என்று கேட்டார்.



''இங்கேயே கிடைக்குமே'' என்றார் எம்.ஜி.ஆர்.
'இங்கே எப்படிக் கிடைக்கும்?’ என்பதைப் போல் எம்.ஜி.ஆரைப் பார்த்தார் சரோஜா தேவி. உடனே எம்.ஜி.ஆர். வெள்ளை நிற 'க்ளவுஸ்’ இரண்டை எடுத்து வந்து சரோஜா தேவியிடம் கொடுத்தபோது, ''அடடே... நீங்களே வெச்சிருக்கீங்களா! தேங்க்ஸ்'' என்று வாங்கிக்கொண்டார்.



''எம்.ஜி.ஆரிடம் நிறைய 'க்ளவுஸ்’ இருக்கும்போல் இருக்கிறதே'' என்று எம்.ஜி.ஆருடன் வந்திருந்த அவருடைய டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களிடம் சொன்னேன். ''அதை ஏன் கேக்கறீங்க? ஊட்டியில 'அன்பே வா’ ஷூட்டிங் நடக்கிறப்போ, அதில் சம்பந்தப்பட்ட அத்தனை தொழிலாளர்களுக்கும் ஸ்வெட்டரும் பனிக் குல்லாவும் வாங்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்களுக்கெல்லாம் ஒரே குஷி'' என்றார் டாக்டர்.


'சென்னையில் உள்ள ரிக்ஷாக்காரர்கள் அத்தனை பேருக்கும் மழை கோட்டு வாங்கிக் கொடுத்தவருக்கு, இது ஒரு பிரமாதமா?’ என்று எண்ணிக்கொண்டேன்.
'பிளெஸ்ஸிங்டன் கோர்ட்’ என்பது அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் சறுக்கி விளையாடு வதற்காக ஏற்படுத்தப்பட்ட பனிக்கட்டிச் சறுக்கு முற்றம். தென் கிழக்கு ஆசியாவிலேயே இத்தகைய சறுக்கு மேடை சிம்லாவில் மட்டுமே உள்ளது. மலைச் சரிவுகளைப் பின்னணியாகக்கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த அழகிய இடத்துக்கு அருகில் போய் நிற்கும்போது, நம் உள்ளம் குளிர்கிறது. 


 உடல் 'வெடவெட’வென்று நடுங்குகிறது. இந்த அருமையான இடத்தை இப்போது சர்க்கார் பஸ் ஸ்டாண்டாக மாற்றப்போகிறார்களாம். இந்த சேதியைக் கேட்ட  போது எம்.ஜி.ஆர். பதறிப்போய் ''இதென்ன பைத்தியக்காரத்தனம்? பஸ் ஸ்டாண்டுக்கு வேறு இடம் இல்லாமலா போய்விட்டது? இது ரொம்ப அக்கிரமம். விகடனில் இதைப் பற்றி எழுதுங்கள் சார்'' என்றார்.



பஞ்சாப் அழகு ஜோடிகள் சறுக்கி விளையாடும் அபூர்வ காட்சியை எம்.ஜி.ஆரும் சரோஜா தேவி யும் கண்கொட்டாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். ''என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள்கூடச் சறுக்கலாம். ரொம்ப சுலபம். நாலு தடவை கீழே விழுந்தால் தன்னால் வந்துவிடும்'' என்று எம்.ஜி.ஆருக்குத் தைரியம் கூறினார் சிம்லா தமிழர் ஒருவர். ''அது சரி, நான் கீழே விழுவதைப் படமெடுத்துக் காட்டினால், சிரிப்பார்களே'' என்றார் எம்.ஜி.ஆர்.


எப்படியோ எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சறுக்கி விளையாடும் காட்சியை இரண்டே நாட்களில் படமாக்கி முடித்துவிட்டார்கள்.


சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ (ரிuயீக்ஷீவீ) என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய்  நின்று பார்த்தால், தூரத்தில் இமய மலைச் சிகரங்கள் மீது வெள்ளைப் பனி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.


''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா?'' என்றார்.


அந்தச் சமயம் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.


''அடடே! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு? சௌக்கியமா இருக்கீங்களா? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா?'' என்று அன்புடன் விசாரித்தார். 


எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு. மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். சிலர் மார்போடு அவரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் வாழ்வின் பயன் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.


மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... என்ன அர்த்தம்? இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டாமா?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் எம்.ஜி.ஆரைப் பார்த்த காட்சியைப் படம் எடுக்கவில்லையே என்று தோன்றியது.



'புதிய வானம்-புதிய பூமி’ என்ற பாட்டைப் பாடியவண்ணம் எம்.ஜி.ஆர். உல்லாசமாக நடந்துவரும் காட்சியை, குஃப்ரி மலைச் சிகரத்தில் படமாக்கினார்கள். வாலி எழுதிய இந்தப் பாட்டுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது அந்த இடம். எம்.ஜி.ஆர். தமது கைகளை வீசி வானத்தையும் பூமியையும் காட்டிப் பாடிக்கொண்டு இருந்த சமயம், வானத்தில் பட்சிகள் கூட்டம் ஒன்று சிவ்வெனச் சிறகடித்துப் பறந்து சென்றது. பட்சிகள் பறக்கும் அந்த அழகிய காட்சியை 'அன்பே வா’ படத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் துடித்தார் தயாரிப்பாளர் சரவணன்.


''அடடா! என்ன அழகான காட்சி? டைரக்டர் சார், இந்தப் பறவைகளை ஏதாவது செய்ய வேண்டுமே...'' என்றார் அவர்.


''சுட்டுச் சாப்பிடலாம் சார்?'' என்றார் ஒரு சாப்பாட்டு ரசிகர்.


''அவற்றை ஏற்கெனவே ஷூட் செய்தாயிற்று, கவலைப்படாதீர்கள்'' என்றார் டைரக்டர்.


போகும் வழியில் மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித் துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றார்.


''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டது.


''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என்றேன்.


''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்றார் எம்.ஜி.ஆர்.


'மால்’ என்பது சிம்லா நகரின் மலைச் சிகரத்தில் அமைந்துள்ள ஓர் அழகு வாய்ந்த இடம். இங்கேயும் இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் நடைபெற்றது. கொழுகொழுவென்ற திபெத் நாட்டு அநாதைக் குழந்தைகள் இந்தச் சாலை வழியாக நடந்துபோகிறார்கள்.


''பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே...
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே...''


என்று பாடிக்கொண்டு வரும் எம்.ஜி.ஆர். அந்தப் பிள்ளைகளில் இருவரைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்.


அடுத்தாற்போல்,
''நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது...''


என்ற அடியைப் பாடும்போது, அங்குள்ள காந்தி மகாத்மாவின் சிலையைப் பார்த்துக் கும்பிடுகிறார்.


அன்று மாலை நான் எம்.ஜி.ஆரிடம் ''தாங்கள் மகாத்மாவை வணங்கும் காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்துவிட்டது. இந்தக் காட்சியைப் படத்தில் பார்க்கும் பொதுமக்கள் பெரிதும் ரசிப்பார்கள்'' என்றேன்.



''காந்தியிடம் எனக்கு எப்போதுமே பக்தி உண்டு. என் வீட்டில் நான் கும்பிடும் என் தாயாரின் படத்துடன் காந்தியின் படத்தையும் வைத்திருக்கிறேன். உலகத்தில் அந்த மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும் புத்தரும்கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்'' என்றார்.



சிம்லாவில் உள்ள திபெத் அநாதைக் குழந்தைகள் இல்லத்தை பிரிட்டிஷ்காரர் ஒருவர் நடத்திவருகிறார். உயரமான மலை உச்சி மீது அமைந்துள்ள அந்த இல்லத்தைப் பார்க்க வரும்படி எங்களை அந்த வெள்ளைக்காரர் கேட்டுக்கொண்டார். அந்த அநாதை இல்லத்துக்குச் செல்லும் பாதையில் கார் போக முடியாதாகையால், எங்களை அழைத்துச் செல்வதற்கு என அந்த வெள்ளைக்காரர் ஜீப் அனுப்பி இருந்தார்.


 செங்குத்தான அந்தப் பாதையில் எங்கள் ஜீப் முக்கி முனகிக்கொண்டு மேலே ஏறியபோது, நாங்கள் பிராணத் தியாகம் செய்வதற்குத் தயாராகிவிட்டோம். ஓர் இடத்தில் அந்த ஜீப் பின்னுக்குப் போய் 'டர்ன்’ எடுத்தபோது பின் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அதல பாதாளத்துக்கும் எங்களுக்கும் இடையே அரை அங்குலம் இடைவெளிதான். மயிர்இழையில் ஊசலாடிக்கொண்டு இருந்த ஜீப்பை அந்த டிரைவர் ஒரு பிரேக் போட்டு நிறுத்தி, மீண்டும் முன்னால் கொண்டுபோனபோது, எம்.ஜி.ஆர். 'முருகா’ என்று கத்திவிட்டார்.


அந்த அநாதைக் குழந்தைகள் இல்லத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, எம்.ஜி.ஆர். அந்த வெள்ளைக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போது அவருடைய கையில் இருந்த 100 ரூபாய் நோட்டுக் கற்றை ஒன்று வெள்ளைக்காரரின் கைக்கு மாறியது.



''இந்தக் குழந்தைகள் இல்லத்துக்கு இதைப் பயன்படுத்துங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர். 'எவ்வளவு கொடுக்கிறோம் என்று கணக்குத் தெரியாமலே இப்படி அள்ளிக் கொடுக்கிறாரே’ என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் 'எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்கவில்லை. ஏனெனில், கேட்டாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.



ளமும் வனப்பும் மிக்க சிம்லாவிலும் குஃப்ரியிலும் உள்ள வண்ண வண்ணமான இயற்கைக் காட்சிகளுக்கு இடையே எம்.ஜி. ஆரை ஓடவிட்டு, ஆடவிட்டு, பாடவிட்டுக் கண்ணுக்கு இனிய கலர் படமாக ஆக்கிய பிறகு தான், தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் பூரண திருப்தி. 'அன்பே வா’ படத்தில் வரப்போகும் அந்த எழில்மிகு இயற்கைக் காட்சிகளைப் பற்றியோ, எம்.ஜி.ஆரின் புதுமை மிக்க உல்லாச நடிப்பைப் பற்றியோ நான் இங்கே ஒன்றும் கூறப்போவது இல்லை. ஏனெனில், நீங்களே அவற்றை எல்லாம் படத்தில் பார்க்கப்போகிறீர்களே!



திரும்பி வரும்போது கால்கா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ஜன நடமாட்டமே இல்லை. எம்.ஜி.ஆருக்கு ஒரே குஷி. பிளாட்ஃபாரத்தில் அப்படியும் இப்படியும் உற்சாகத்தோடு அலைந்தார். ''அடடா! இவ்வளவு சுதந்திரமாகத் தென்னாட்டில் நடந்து போக முடியுமா? இதற்குள் ஆயிரம் பேர் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டு இருப்பார்களே. எனக்கு இந்த இடம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா?'' என்று சிறு குழந்தைபோல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.



''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.


றுநாள் பகல் 11 மணி சுமாருக்கு ராஜ்காட்டுக்குப் புறப்படுவதற்காக நாங்கள் அசோகா ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கியபோது, எம்.ஜி.ஆரை நோக்கி ஒரு பெரும் கூட்டம் 'திமுதிமு’வென்று ஓடி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தத் தொழிலா ளர்கள், எம்.ஜி.ஆர். வந்திருக்கும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்டு, காலையில் இருந்தே அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தனர்.



ராஜ்காட்டுக்குச் செல்லும்போது, ''இவர்களுக்கு எல்லாம் உங்களிடம் இத்தனை அன்பு எப்படி உண்டாயிற்று?'' என்று கேட்டேன்.


''அரண்மனை போன்ற இந்த அசோகா ஹோட்டல் மாடியில் இருந்து நான் 'லிஃப்டில்’ இறங்கி வருகிறேன். ஆனாலும், இவர்களுக்கு என்னைக் கண்டு துளியும் பொறாமை ஏற்படவில்லை. அதற்குப் பதில் என்னிடம் அன்பும் நம்பிக்கையும்கொண்டு இருக்கிறார்கள். நான் இத்தனை அந்தஸ்தில் வாழ்வதே அவர்களுக்காகத்தான் என்று எண்ணுகிறார்கள்'' என்றார்.



கார் ராஜ்காட்டில் போய் நிற்கிறது. முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்குகிறார் எம்.ஜி.ஆர். பிறகு, சமாதியை ஒருமுறை வலம் வந்து, மௌனமாக உட்கார்ந்துகொள்கிறார். சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஈடுபடுகிறார். 


உணர்ச்சிப் பெருக்கினால் அவர் கண்களில் நீர் பெருகி வழிகிறது. பின்னர், மெதுவாக எழுந்து நேருஜியின் சமாதிக்குச் செல்கிறார். நாமும் அவரைப் பின்பற்றிச் செல்கிறோம். சமாதியை வலம் வருகிறோம். மலர் வளையங்கள் வைத்து வணங்குகிறோம். இந்த நாட்டின் உய்வுக்காகப் பெரும் தலைவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். அன்று மாலை காந்திஜி கொல்லப்பட்ட நேரத்திலேயே, அந்த இடத்துக்குப் போய்க் கண்ணீர் சிந்திவிட்டுத் திரும்பினோம்.


றுநாள் காலை 6 மணிக்கு டெல்லியைவிட்டுப் புறப்பட்ட 'காரவல்’ 9 மணிக்குள் சென்னையை அடைந்துவிட்டது. வானத்தில் இருந்து பூமியில் இறங்கி நடந்தபோது, குளிரெல்லாம் போய்க் கதகதவென்று இருந்தது. ''எப்படி இருக்கிறது?'' - புன்சிரிப்போடு கேட்டார் எம்.ஜி.ஆர்.


''பழைய வானம்... பழைய பூமி என்று பாடலாம் போல் இருக்கிறது'' என்றேன் நான்.