Sunday, September 04, 2011

கற்றது தமிழ் ராம் ஏன் ரூட் மாறுகிறார்? சேரன் அதிர்ச்சி..

கற்றது பாசம்!


'தங்க மீன்கள்’ - தலைப்பிலேயே தூண்டில் இடுகிறார் இயக்குநர் ராம். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு, இயக்குநராகவும் நாயகனாகவும் 'தங்க மீன்’ பிடிக்க வருகிறார்!

சி.பி - டைரக்டரா இருந்தப்பவே ஹீரோவுக்கு பயங்கர ஒட்டு தாடி வெச்சு ஜீவாவை முடிச்சாரு. இப்போ இவரே ஹீரோவா? எவ்வளவு பெரிய தாடி வைக்கப்போறாரோ?

1. ''தமிழ் படித்த மாணவர்களின் சமூக அந்தஸ்தை 'கற்றது தமிழ்’ மூலமாக விவாதப் பொருள் ஆக்கினீங்க. இந்த மீன்களின் இலக்கு என்ன?''

''இது ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான கதை. ஒரு வரியில் சொல்லணும்னா, ஒரு கெட்ட மகன்... நல்ல அப்பாவான கதை. ஒவ்வொரு மனுஷனும் தன்னோட வாழ்க்கையில் கதாநாயகனாக மாறுவது, அவன் அப்பா ஆன பிறகுதான். 

சி.பி - ஆஹா. ஹைக்கூ கவிதை மாதிரி இருக்கு நீங்க சொன்ன கடைசி வரி.. சபாஷ்..!!!

காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத்துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான். அப்படித் தன் பெண்ணுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு நின்ன ஒரு அப்பனோட வாழ்க்கை இது. ஒரு அப்பனோட கதைனு சொல்லக் கூடாது. இது இரண்டு அப்பாக்களின், இரண்டு பிள்ளைகளின், இரண்டு தலைமுறைகளின் கதை!


சி.பி - அபியும் நானும், தெய்வத்திருமகள், அன்புள்ள அப்பா பட வரிசையில்..?
சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது... ஓர் அன்பை எப்படி சிதைச்சுப்போடுதுனு யோசிச்சப்போதான் 'தங்க மீன்கள்’ உருவானது.


இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை. ஆனால், என் கல்யாணசுந்தரம் தன் இருப்பைத் தன் மகள் செல்லம்மாவுக்காக அர்ப்பணிக்கிறான். 

அதற்காக பணம், வேலை, கௌரவம்னு எதையும் கருத்தில்கொள்ளாமல் வாழ்கிறான். ஆனால், கல்யாணியின் அப்பா அவனுக்கு நேர் எதிர். அவருக்குப் பணம், கௌரவம் இதெல்லாம்தான் ஓர் ஆணின் அடையாளம். கல்யாணி என்ற மகன் செல்லம்மாவுக்கு அப்பா ஆகும்போது ஏற்படும் உணர்வுகளின் வழியாக, இரண்டு தலைமுறைகளை இந்தக் கதையில் பார்க் கிறேன்!''  


சி.பி - பொருளீட்ட குடும்பத்தை விட்டு வெளி நாடு போவதை விட கணவனின் அருகாமையும், அரவணைப்புமே மனைவிக்குத் தேவை என்பதே சரி.. 


2. '' 'கற்றது தமிழ்’னு ஆவேசமா ஒரு படம் கொடுத்துட்டு, இவ்வளவு மென்மையாக ஒரு கதையை எப்படிக் கையில் எடுத்தீங்க?''


சி.பி - ஆமா, ஆவேசமா கொடுத்து என்ன பிரயோசனம்? நம்ம ஆளுங்க அதை ஏத்துக்கலையே? மறுபடி அதே மாதிரி படம் கொடுக்க முடியுமா? அதான் அண்ணன் ரூட்டை மாத்திட்டாரு.. 

''உண்மை ஒண்ணுதான். அதைக் கோபமாவும் சொல்லலாம். கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். இது என்போன்ற பல தகப்பன் களின் உண்மைக் கதை. கோயம்புத்தூரில் குடும்பத்தை விட்டுட்டு, சினிமாவுக்காக சென்னையில் திரிபவன் நான். மகளைப் பார்க்கவே போக முடியாமல் இருந்த நாட்கள்ல ஒருநாள், என் பொண்ணு போன்ல சொன்னா... 'அப்பா, நம்ம கொல்லையில பூவெல்லாம் அவங்க அப்பாவைக் காணோம்னு என்கிட்ட அழுதுச்சுப்பா.’ உடனே நான், 'அதுக்கு நீ என்னப்பா சொன்ன?’னு கேட்டேன். ''அப்பாவெல்லாம் பணம் சம்பாதிக்க சென்னைக்குப் போயிருக்காங்க. பணம் கிடைச்சதும் வந்துருவாங்க’னு சொன்னேம்பா’ன்னா. 


எனக்குச் சட்டுனு மனசு கனத்துப்போச்சு. என்னைப் பார்க்காம இருக்கிறதையே ஒரு கதை மாதிரி சொல்லிட்டா என் மக. அவ சொன்ன அந்த வார்த்தைகள்ல இருந்துதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். இது முழுக்க முழுக்க நம் அசல் வாழ்க்கையின் பதிவு!''


3. ''தாக்கம் இல்லைனு சொல்றீங்க... ஆனா, மத்த இயக்குநர்கள் பாதையில் நீங்களும் ஹீரோவாக் களம் இறங்கிட்டீங்களே?''

சி.பி - எத்தனி நாளுக்குத்தான் அல்வாவை ஒரு ஆளுக்கு ஊட்டி விட்டு அதை சாப்பிட சம்பளமும் தர்றது? அதான் அண்ணன் அல்வாவை தானே சாப்பிட ட்ரை பண்றாரு.. இந்த வெர்ஷன்ல நான் அல்வான்னு சொன்னது ஹீரோ கேரக்டரை ... ஹீரோயினை அல்ல.. ஹி ஹி 

''என் தோழர் ரேவதி பரிந்துரைக்க... கௌதம் மேனனைச் சந்தித்தேன். என் கதையைக் கேட்ட பிறகு, கதையின் ஸ்க்ரிப்ட் புத்தகத்தைப் பார்த்த பிறகு, 'நீங்க நடிச்சா, நான் தயாரிக்கிறேன்’னு சொன்னார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எப்பவுமே நோக்கம் கிடையாது. 

அதற்கான முனைப்போ, ஆர்வமோகூடக் கிடையாது. இந்தக் கதையில் நானும் ஒரு பாத்திரம். இதில் இன்றைய ஹீரோவுக்கான அம்சங்கள் இல்லை. அவர்கள் விரும்பும் ஆசைப்படும் சாகசங்களுக்கும் இதில் இடமே இல்லை. அப்படியும் நானே நடிக்கலாமா வேண்டா மானு பெரிய குழப்பத்தில் இருந்த என் பயத்தைப் போக்கியது தோழர் சுபா பாண்டியன்தான். 

அவர் என்னை எடுத்த புகைப்படங்களும், நண்பர் பிஜி.முத்தையாவோடு திருவண்ணாமலைக்குப் போய் எடுத்த டெஸ்ட் ஷூட்டும் எனக்கு நம்பிக்கை அளித்தன. எழுதுகிறவனாகவும் இயக்குநராக வும் ஒருவனே இருந்தால், உணர்வுகளை உண்மையா வெளிப்படுத்தி நடிக்க முடியும்னு அப்புறம்தான் உணர்ந்தேன்!''

சி.பி - அட!!! சேரன் கூட ஆரம்பத்துல இதையே தான் சொன்னாரு.. கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடிச்சா?
4. ''கதையின் அழுத்தத்தை அறிமுகக் கதாநாயகியும் குழந்தையும் தாங்குவாங்களா?''

சி.பி - அவங்க தாங்கிடுவாங்க.. புரொடியூசர் தாங்குவாரா?ன்னு தான் டவுட்டா இருக்கு./. 

''திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. எனது வடிவை செல்லியிடம் அப்படியே அச்சு அசல் பார்த்தேன். ஆர்வத்தோடு கதையை உள்வாங்கி, கண்ணியத்தோடு அதை வெளிப்படுத்தினார் செல்லி. சாதனா என்ற குழந்தை என் மகளா நடிச்சிருக்கா.

என் மகளாகவே வாழ்ந்திருக்கானு சொல்லலாம். கதையின் முக்கியத்துவத்தை, இயல்பை இவ்வளவு சிறு வயதில் உணர்ந்து நடிப்பது ரொம்பவும் கஷ்டம். அந்தக் கஷ்டத்தை ரொம்ப எளிமையாக் கடந்து அட்டகாசப்படுத்தி இருக்கிறாள் சாதனா!''


5. '' 'கற்றது தமிழ்’ காலத்தைக் காட்டிலும் இப்போ யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணி ரொம்பவே ஸ்பெஷல். இங்கே என்ன விசேஷம்?''


'' யுவன் ஷங்கர்- நா.முத்துக்குமார் இல்லாம என்னால் பாடல்களை நினைச்சுப் பார்க்கவே முடியாது. எனக்காக பணம் எதையும் பொருட்படுத்த மாட்டார் யுவன். நேரத்தைக் கொடுத்துட்டா, அவரோட அர்ப்பணிப்பு எல்லை தாண்டும். என் மனதைப் புரிந்தவர் நா.முத்துக்குமார். சமூகப் பொறுப்பு இல்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள்!''


6. ''தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்ன சொன்னார்?''

சி.பி - போட்ட காசு திரும்ப கிடைக்குமா? ஏற்கனவே நடுநிசி நாய்கள்ல நிறைய காசு போச்சுன்னு சொல்லி புலம்பி இருப்பாரு.. 
'' 'கதையைக் கேட்கும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது... ஒரு தயாரிப்பாளராக உங்களிடம் நான் குறுக்கிடவே மாட்டேன். முதல் பிரதியைக் காட்டினால் போதும். நீங்கள் சொன்னதைப் பார்க்க ரெடியா இருக்கேன்’னு  சொன்னார். அவருடைய கனிவுக்கு மரியாதை தருகிற படமாக 'தங்க மீன்கள்’ இருக்கும்!'
 thanx - vikatan

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன?

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataM/mgr/images/restricted/06-11-2008/malayalam_actor_mgr_20.jpg



1. எம்.சிவகுமார், வேதாரண்யம்.

 இந்த அரசின் 100 நாள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்? 

'ஜெயலலிதாவிடம் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது’ என்று பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பித்திருப்பதே பெரிய சாதனை!

சி.பி - நில மோசடி வழக்கில் வரிசையா பெரிய தலைங்க எல்லாம் உள்ளே போறாங்க, பலருக்கு கிலி.. இது நல்ல ஓப்பனிங்க்.. 
2.  வசந்த முருகன், மன்னார்குடி.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மை​யான காரணம் என்ன? 


அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...


'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம். 

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’

சி.பி - ஒரு பட அதிபரை கால்ஷீட் விஷயத்தில் எம்ஜிஆர் இழுத்தடித்ததாகவும், அது பற்றிய பஞ்சாயத்தில் எம் ஆர் ராதாவை வாக்குவாதத்தில் சுட முயன்றபோது அவ்ர் முந்திக்கொண்டதாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல் உலா வருகிறது.. 


http://cdn4.supergoodmovies.com/FilesFour/mgr-s-assistant-muthu-passes-away-418a725d.jpg
3.  பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதம்.... என்ன வேறுபாடு? 

முன்னது இரண்டும் கட்சிகள் நடத்துவது. மூன்றாவது, போராட்டக்காரர்கள் நடத்துவது. சாகும் வரை உண்ணாவிரதம் மட்டுமே தியாகிகள் நடத்துவது!
முன்னது இரண்டும் ஒப்புக்காக நடத்தப்படுவது. நிர்ப்பந்தமும் நெருக்கடியும் காலவரையற்ற உண்ணா​​விரதத்துக்குக் காரணமாக இருக்கிறது. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், நோக்கம் நிறைவேறினால் மட்டுமே போதும் என்ற ஒரே இலக்கோடு நடத்தப்படுவைதான் தியாக நெருப்பில் நடப்பவை!



சி.பி -  அடையாள உண்ணாவிரதம் கலைஞர் நடத்தும் 3 மணி நேர நாடகம் போல, ஒரு நாள் உண்ணாவிரதம் வீட்டில் மனைவி நம்மை வழிக்கு கொண்டு வர நடத்துவது,காலவரையற்ற உண்ணாவிரதம் காந்திஅடிகள் செய்தது, சாகும் வரை உண்ணாவிரதம் திலீபன் செய்தது. 


4.  மகேந்திரன், செய்யாறு.

அறிவை விருத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்? 

'அதிகம் உற்று நோக்க வேண்டும். கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்’ - என்று கெதே சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
'கண்டதும் கற்றால் பண்டிதன் ஆவான்’ என்கிறதே நம்முடைய பழந்தமிழர் மொழி!

சி.பி - பல புத்தகங்கள் படிக்க வேண்டும், பல சான்றோர்கள், ஆன்றோர்கள் அனுபவங்களை கேட்டு அதன் படி நடக்க வேண்டும். 

  http://www.mgrhome.org/Pictures/AAA.jpg
5.  அய்யாறு வாசுதேவன், சென்னை-14.

மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டால் சமூகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும், கொலைபற்றிய பீதியிலேயே மக்கள் வாழ வேண்டி இருக்கும் என்கிறார்​களே? 

அப்படியா?
மரண தண்டனை இப்போது நடைமுறையில்தானே இருக்கிறது. அதனால், நாட்டில் கொலையே நடக்கவில்லையா? கொலை, கொள்ளை பீதி இல்லாமல்தான் வாழ்கிறீர்களா? தண்டனைகளைக் கடுமைப்படுத்துவதால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. குற்றவாளிகள் - காவல் துறை - ஆட்சியாளர்கள் - அதிகார வர்க்கம் இவற்றுக்குள் இருக்கும் நட்புறவுச் சங்கிலியை அறுப்பதன் மூலம்தான் குற்றங்​களைக் குறைக்க முடியும்!


சி.பி - கண்ணுக்கு கண் , பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்பது கொடூரம்..


6.  ஆர்.அஜிதா, கம்பம்.

'அ.தி.மு.க. அரசுபற்றி இப்போது கருத்துச் சொல்ல மாட்டேன். ஆறு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்’ என்று சொல்கிறாரே எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்? 

இதெல்லாம் நொண்டிச் சாக்கு!
அதுவரைக்கும் ஜெயலலிதா என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வாரா விஜயகாந்த்?

தி.மு.க-வினர் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், 'அவர்கள் இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆட்சி என்றால் என்ன, எந்த ஃபைல் எங்கே இருக்கிறது, அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கு ஆறு மாதங்களாவது அவகாசம் தர வேண்டும். அதுவரை விமர்சிக்க மாட்டேன்’ என்று பெருந்தன்மையாகச் சொன்னார். 

அது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர... மூன்றாவது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது.
அதைவிட முக்கியமாக, முதல் தடவை எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு வருபவர் ஆறு மாதங்களுக்கு சட்டமன்றத்துக்கு வரத் தேவை இல்லை என்று பெருந்தலைவர் காமராஜர் ஏதாவது சொல்லி வைத்தாரா என்று பழைய பேப்பரைப் பார்க்க வேண்டும்!


சி.பி - உ:ள்ளாட்சித்தேர்தல் வரும்போது கூட்டு தொடர வேண்டுமெ? அதுக்காக அண்ணன் பம்பறார்னு நினைக்கறேன்.. 

http://blog.tamilmp3songslyrics.com/image.axd?picture=2010%2F3%2Fmgr_latha.jpg
7.  நா.மைதிலி, சென்னை-45.

தற்போதைய தலைமைச் செயலகம் இடப்பற்றாக்குறையாக இருப்பதால்தானே இப்போதுள்ள அரசு முந்தைய ஆட்சிக் காலத்திலும் புதிய கட்டடம் கட்டலாம் எனத் திட்டமிட்டது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு... மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்துகொள்ளலாமே? 


நல்ல யோசனைதான்! அதைச் செய்யவிடாமல் தடுக்கும் 'ஈகோ’வை எங்கே கொண்டு​போய்​வைப்பது?

சி.பி - கலைஞரால் தொடங்கப்பட்ட எந்த ஒரு திட்டத்தாலும் நல்ல பெயர் அவருக்கு வந்துடக்கூடாதுனு அம்மாவுக்கு ஒரு நல்ல எண்ணம் இருக்கு.. 
8.  முருகேசன், திருவள்ளூர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தண்டனையைக் குறைக்கச் சொல்லி அறிக்கைவிடுத்த கருணாநிதி, 'இது கடிதம் அல்ல. கருணை மனு’ என்கிறாரே? 


அவர் முதலமைச்சராக இருந்தபோது, இதே மூவரும் அனுப்பிய கருணை மனுவை வெறும் கடிதமாகத்​தான் பார்த்தார். இன்று இவரது கடிதத்​
தை கருணை மனுவாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.
வெறும் வார்த்தை ஜாலங்களில் ஓடுகிறது காலம்!

சி.பி - அவர் முதல்வராக இருந்தபோது ஏதாவது செய்திருக்கலாம், அப்போ விட்டுட்டு........

நன்றி - ஜூ வி

சுமங்கலிப்பெண்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடிக்கலாமா? ( ஆன்மீகம் கேள்வி பதில்கள் )

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. விநாயகருக்கு கோயில் கட்டும் விருப்பத்துடன், அதற்கான வாஸ்து பூஜை செய்து திருப்பணி துவங்கும் நாளில், விநாயகர் விக்கிரகம் திருடுபோய் விட்டது. எங்குதேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருப்பணிகளைத் தொடரலாமா? கோயிலில் புதிதாக ஒரு விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யலாமா?


திருப்பணியைத் தொடருங்கள். புது விநாயகர் விக்கிரகத்தை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்யுங்கள். கோயிலில் குடியிருத்த இறையுருவம் வேண்டும். கைக்கு எட்டியது நழுவினால், மற்றொன்றை பெற்றுச் செயல்படுவது சிறப்பு. வருங்காலச் சந்ததியின ருக்கு வழிகாட்டும் அறத்தை, இறையுருவத்தின் இழப்பைக் காரணம் காட்டி தவறவிட்டுவிடக் கூடாது. 

கோயில்கள் நடைமுறை என்பது, பொது அறத்தைப் போதிக்கும் மௌன குரு; ஒருவனை, பண்பட்ட குடிமகனாக வார்த்தெடுக்கும் திறன் கோயில்களுக்கு உண்டு. எனவே, இடையூறை எதிர்த்துச் செயல்படுங்கள். வெற்றி உண்டு.


2. நானும் என் கணவரும் (வயது 55) அம்மன் விரதங்களில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து வழிபட விரும்புகிறோம். எந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்?


அலுவல்களை மறந்து அம்பாளை நாடும் எண்ணம் மனதில் முளைக்கும் வேளை, வழிபாட்டுக்கு உகந்தது. அம்பாளின் பெருமைகளை விளக்கும் புராணக் கதைகள், உலகை துயரத்தில் இருந்து விடுவிப்பதற்காக அவள் செயல்பட்ட நாள்- நேரம் ஆகியன எல்லாம், மனதில் ஆழமாகக் குடிகொண்டிருக்கும் அம்பாளை நினைவுகூரப் பயன்படுபவை. 
 
அம்பாளின் பெருமை சொல்லில் அடங்காது. உமாமகேச்வர விரதம், கிருத்திகா சோமவாரம், நவராத்திரி போன்ற விழாக்கள், அம்பாளின் நினைவைப் பசுமையாக வைத்துக்கொள்ள உதவும். அலைபாயும் மனதை அடக்கிவைக்கவும் பயன்படும். தவிர, நித்யமாக அவளை வழிபடும் நடைமுறையை ஏற்படுத்திக் கொண்டால், மனம் அசையாமல் அவளிடம் நின்று விடும். அது நம்மை நல்வழிப்படுத்தும். 
 
பண்டைய காலத்தில் பஞ்சாயதன பூஜையை நித்யமாக ஏற்று வந்தோம். சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடுவது பஞ்சாயதன பூஜை. பெருமாளிடம் மனம் லயித்தவர்கள், சாளக்கிராமத்தை நடுநாயகமாக வைத்து, மற்ற நான்கு தெய்வங்களை பரிவார தேவதையாக அமைத்து வழிபடுவார்கள். அதேபோல், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மற்ற தெய்வங்களையும் நடுநாயகமாக வைத்து வழிபடலாம். புராணங்கள், கதைகள், வரலாறுகள், கோயில் நடைமுறைகள், சிறப்புகள், சம்பிரதாயங் கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிலடங்கா வழிபாட்டு முறைகள் உண்டு.

ஆனால், நமது விருப்பத்தை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி, பிறப்பின் பலனை அடையச் செய்யும் பஞ்சாயதன முறையை ஸனாதன தர்மம் நமக்குப் பரிந்துரைக்கிறது. அது, நமக்குத் தேவையான பலனை அளிப்பதால், பஞ்சாயதனத்தை (தேவி பஞ்சாயதனம்) ஏற்று வழிபடுங்கள்; வெற்றிகள் கைகூடும்.


3. வீணையை வீட்டில் வைத்திருந்தால் விருத்தி கிடையாது என்கிறார்களே... அப்படியா?


வீணையை வீட்டில் வையுங்கள்; அதனால் விருத்தி ஏற்படும். வீணையில் அலைமகள் குடிகொண் டிருக்கிறாள். எனவே, அதை வைத்துக்கொள்வது சிறப்பு; வீடு, செல்வச் செழிப்புடன் விளங்கும் என்கிறது வேதம் (ச்ரியாவா எதத்ரூபம். யத்வீணா. ச்ரியமேவாஸ்மின்...).

   'வீணையை வாசி. ஐஸ்வர்யம் கொட்டும்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. கலைமகள், வீணையும் கையு மாகக் காட்சியளிப்பாள். ஸீமந்தோன்னயனத்தில் வீணையை வாசிப்பார்கள். தர்மசாஸ்திரமும், வீணை வாசிக்கச் சொல்கிறது. வேதம் அறிமுகம் செய்த வாத்தியம் அது. எனவே, வீணையை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

4. சில மாதங்களில், ஒரே நட்சத்திரம் இரண்டு முறை வருகிறது. அந்த மாதத்தில் பிறந்த நாள் வரும் நிலையில், ஜன்ம நட்சத்திரமாக எதை எடுத்துக் கொள்வது?

இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வது சிறப்பு. சாஸ்திரமும் அதை ஏற்கும். நட்சத்திர மாதம் 27 நாட்களில் முடிவடையும். நாம் ஸெளரமானத்தை ஏற்கிறோம். ஒரு ராசியில் சூரியன் நுழைந்து மறு ராசியில் காலெடுத்து வைக்கும் நாள் வரை கணக்கிட்டு, ஒரு மாதமாக ஏற்கிறோம். 

இதன்படி, மாதங்களில் 29 நாளிலிருந்து 32 நாள் வரை வித்தியாசம் காணப்படுவதுண்டு (அதாவது, ஒரு மாதத்தில் 29 நாட்கள் வரும்; இன்னொரு மாதத்தில் 32 நாட்கள் இடம்பெறும்).

நாட்களின் அடிப்படையில் மாதத்தைக் கணக்கிட, 30 நாட்கள் எடுத்துக்கொள்வோம். ஸெளரமானம், நட்சத்திரமானம், ஸாவனம் - ஆகிய மூன்று அளவையில் இருக்கும் மாதங்களை... செய்யும் சடங்குக்கு ஏற்ப, பொருத்தமானதை தேர்ந்தெடுப் போம்.

உதாரணத்துக்கு... மகப்பேறு மாதத்தைக் கணக்கிடும்போது, நட்சத்திர மாதத்தை ஏற்போம். அங்கு ஸெளரமானமோ, ஸாவனமோ பொருந்தாது. ஸெளரம் 29-ல் இருந்து 32 வரை இருப்பதும், ஸாவனம் 30 நாளாக இருப்பதும் கணக்கிடுவதற்கு இடையூறாக இருக்கும். ஆகவே, அதற்கு நட்சத்திர மாதம்தான் பொருந்தும் என்கிறது ஜோதிடம்.

27 X 10 =  270 நாட்கள் தாண்டினால் மகப்பேறு நடைபெறுவது உண்டு. பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்கிற கோட்பாடு, நட்சத்திரமானத்துக்கு பொருத்தமாக இருக்கும். ஸெளரமானாலும் ஸாவனமானாலும் 30X10 = 300; 31X10 = 310 என்று தெளிவில்லாத காலத்தைக் குறிப்பிடும்.


ஓர் அயனம்- 6 மாதங்கள் (30 நாள் கொண்டது), ஒரு பருவ காலம், 2 மாதங் கள் ( அதாவது 60 நாள்கள்), ஒரு மாதம் (30 நாட்கள்), ஒரு பஷம் (15 நாள்), ஒரு நாள், ஒரு முகூர்த்தம் ஆகியவற்றைக் கூட்டினால்... அதாவது, 6 2 1 அரை மாதம் ஒரு நாள் மூன்றரை நாழிகை ஆகியவற்றைச் சேர்த்தால்...  9 மாதம், 16 நாள், 1 மணி, 24 நிமிடம் கழிந்தால்... குழந்தை வெளிவர ஆயத்தமாகிவிடும் என்று ஜோதிடம் தகவல் அளிக்கும் (அயனக்ஷணமாஸ...). 270 நாட்கள் நட்சத்திர மாதம்.அதையும் தாண்டும் மகப்பேறு, 300 நாட்களுக்கு முன்பே நிகழ்ந்துவிடும்.

இங்கு ஸெளரமோ நட்சத்திரமானமோ பொருந்தாது ஸாவனம்தான் பொருந்தும் என்பது கண்கூடு. அதுபோல், ஸெளரத்தை அளவுகோலாக வைத்து பிறந்த நாளைக் குறிப்பிடும் முறையை நாம் பின்பற்றுவதால், 2-வதாக வரும் நட்சத்திர நாள், முழு வருஷம் வந்து விட்டது என்பதை ஏற்கும் வகையில் பொருத்தமாக இருக்கும். முதலில் வரும் நட்சத்திரத்தை ஏற்றால், நாட்களின் அடிப்படையில் வருஷம் முடியாமலும் இருக் கும். ஆகவே, 2-வதாக வரும் நட்சத்திரத்தை ஏற்பது சிறப்பு.


5. திருக்கோயில்கள் பலவற்றில், நீலோத்பல மலரை ஏந்தியவாறு காட்சி தருகிறாள் அம்பாள். இதற்கான தாத்பரியம் என்ன?



அலைமகள் கையில் செந்தாமரைப்பூ இருக்கும். கலைமகளோ வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். இயற்கை யின் செல்வமான பூக்கள், இறைவன் ஆராதனைக்கு உகந்தவை. மென்மை யான மனமும் மென்மையான அணுகு முறையும் சேர்ந்து வாழும் நமக்கு சிறப்பை அளிக்கும்.

கவிஞர்கள், கண்களைப் பெருமைப் படுத்த அவற்றை நீலோத்பல மலரோடு ஒப்பிடுவார்கள். புஷ்பங்கள், இயற்கை அழகை நிலைநிறுத்துகின்றன. அவை, வண்டினத்துக்கு உணவளிக்கின்றன; புஷ்பாதிவாசத்துக்கும் பயன்படுகின்றன. இரண்டு கைகளாலும் பூக்களை அள்ளி சமர்ப்பித்து இறையுருவத்தை வழிபடுவோம். 

அதன் வாசனை, நுகர்பொருளாகப் பயன்படுகிறது. அயர்ந்த நித்திரைக்கு புஷ்பப் படுக்கை பயன்படுகிறது. காமதேவன், புஷ்ப பாணத்தால் இளம் உள்ளங்களில் ஆசையை விதைக்கிறான். காதலனைப் பிரிந்த காதலியர், பிரிவின் தாக்கத்தைத் தணிக்க புஷ்பங்களைப் பயன்படுத்துவர். 'மென்மையான உள்ளங்கள் சடுதியில் என்னை வந்து அடையலாம்’ என்று சொல்லாமல் சொல்லுகிறாள் அம்பாள்.


6. குறிப்பிட்ட தலங்களில் வேண்டு தலின் பொருட்டு பெண்களும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். ஆனால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சுமங்கலிகள் எக்காரணம் கொண்டும் மொட்டையடித்துக் கொள்ளக் கூடாது என்கிறார்களே... சரியா?


பெண்ணினத்தின் இலக்கணத்தில் ஒன்றாக கேசத்தைப் பார்க்கிறது சாஸ்திரம் (ஸ்தன கேசவதீநாரீ). முடியைத் துறந்த பெண்ணானவள், மாற்றுத் திறனாளியாகக் கருதப்பட்டாள். 

கணவனையே பறிகொடுத்த பிறகு, அவன் கையால் வருடப்பட வேண்டிய கூந்தல் இனி எதற்கு? எனும் நோக்கத்தில் முடியைத் துறந்த பெண்மணிகள் பண்டைய காலத்தில் உண்டு.


முடி, தாதுவின் கழிவுப்பொருள். அதை கடவுளுக்கு அளிப்பதில் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. ஒருபக்கம் முடி வளர்வதற்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகளைத் தேடி அலைகிறோம். இன்னொரு பக்கம்... வளர்ந்த முடியை வெட்டி அழகுப்படுத்துகிறோம். அன்றாடம் அலுவல்களின் சுமை அழுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும், முடியை துறப்பதும் வளர்ப்பதும் தடங்கல் இல்லாமல் நடந்துகொண் டிருக்கிறது. 

காலாவதியான தர்மசாஸ்திரக் கோட்பாடுகளைப் புதுப்பிக்க முற்படுவது சரியில்லை. இதைவிட உயர்ந்த கோட்டுபாடுகள் எல்லாம் நினைவில் இருந்தே விலகிவிட்டன! கவலைப்படாதீர்கள்... காலத்தின் கோலம் அது!

thanx - sakthi vikatan

Saturday, September 03, 2011

பொருட்களின் விலையை எம்.ஆர்.பி.க்கு மேல் விற்றால் யாரிடம் புகார் செய்வது?

வருமான வரி கணக்கு ஃபைலுக்கு டூப்ளிகேட் வாங்க முடியுமா?

கேள்வி-பதில்

1. நான் இன்னும் சில வருடங்களில் ஓய்வுபெறப் போகிறேன். இறுதியாக வரும் ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். எந்த வகையான முதலீடு எனக்கு பாதுகாப்பானதாக இருக்கும்?



''மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் மன்த்லி இன்கம் பிளான் போன்ற ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யுங்கள். 8 முதல் 10% வரை டிவிடெண்ட் வரும். இது வரியில்லா வருமானமாகவும் இருக்கும்.

80 சதவிகிதத் தொகையை மேற்கூறிய மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 20 சதவிகிதத் தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிலும் பிரித்துப் போடுவது நல்லது.''



2. நான் நான்கு வருடங்களாகக் கட்டிய வருமான வரிக் கணக்கு ஃபைலை காணவில்லை, அதன் நகலை வாங்க முடியுமா?


''வாங்க முடியும். உங்களுடைய பான் எண் மற்றும் விவரங்களைக் குறிப்பிட்டு வருமான வரித்துறை அதிகாரியிடம் நேரில் விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும். இந்த காரணத்தின் பொருட்டு வருமான வரி கட்டிய 'கம்ப்யூட்டரைஸ்டு ஸ்டேட்மென்ட்’ தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட வேண்டும். வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து முந்தைய ரிட்டர்ன் ஃபைல் இல்லாமலிருப்பதால் ஏற்படும் சிக்கல்களை விளக்குவீர்கள் என்றால்  கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.''


3. பொருட்களின் விலையை எம்.ஆர்.பி.க்கு மேல் விற்றால் யாரிடம் புகார் செய்வது?


''எம்.ஆர்.பி.யைவிட குறைவாக விற்பனை செய்யலாம். ஆனால், எம்.ஆர்.பி.க்கு மேல் அதிக விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். எம்.ஆர்.பி.க்கு மேல் அதிக விலை விற்பவர் மீது கீழ்க்கண்ட அதிகாரியிடம் புகார் செய்யலாம். Packaged commodity rules-ன்படி எம்.ஆர்.பி.யைவிட அதிக விலை விற்கும் வியாபாரிகள் மீது 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அதிக விலை கொடுக்க நேர்ந்தால் உரிய ரசீதுடன், நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

Controller of Legal Metrology
(Weights & Measures)
office of the Commissioner of labour,
DMS Compound,
Teynampet, Chennai - 600 006
Ph: 044-24321438



4. ''பங்குச் சந்தையில் 25,000 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,500 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும், இதற்கு அக்ரிமென்ட் தருவதாகவும் சொல்கிறார் நண்பர் ஒருவர். இதை நம்பலாமா?  

''பங்குச் சந்தை குறித்து உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டாம். எந்த மாதிரியான நிறுவனமாக இருந்தாலும் உங்கள் நண்பர் சொல்வதுபோல பத்து சதவிகித வருமானம் ஒவ்வொரு மாதமும் நிச்சயமாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏமாற்று வேலையாகக்கூட இருக்கலாம். அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்துவிட வேண்டாம்.''



5. நான் வெளிநாட்டில் இருப்பதால் எனது சகோதரர் மூலம் வங்கிக் கடனில் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். நான் வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு என் பெயருக்கு கடனை மாற்றி கொள்ள முடியுமா? மேலும், என் சகோதரர் பெயரில் வாங்கினாலும், நான் அந்த வீட்டிற்கு எதிர்கால உடைமையாளன் என்பதை வங்கிக் கடன் ஆவணங்களில் சேர்க்க முடியுமா ?



''நேரடியாக உங்கள் பெயரிலேயே வீட்டுக் கடன் வாங்குவதற்கு ஏற்ப வங்கி நடைமுறைகள் உள்ளன. அதனால், உங்கள் பெயரிலேயே வாங்கலாம். ஒருவேளை உங்கள் சகோதரரின் பெயரில் வாங்க விரும்பினால் நீங்கள் பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க வேண்டும். இந்த பவரை நீங்கள் எந்த நாட்டில் வேலை செய்கிறீர்களோ, அங்குள்ள இந்தியத் தூதரகத்திலும், உங்கள் சொந்த ஊரிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

இதன் பேரில் உங்கள் சகோதரர் உங்களது பெயரில் வீடு மற்றும் சொத்துக்கள் வாங்க முடியும். நீங்கள் இந்தியா திரும்பி விட்டால் இந்த பவர் தானாகவே காலாவதியாகிவிடும். மேற்சொன்ன பவர் ஆஃப் அட்டர்னி இல்லாமல், உங்கள் சகோதரர் பெயரில் சொத்து வாங்கும்பட்சத்தில் அவரது வருமான வரம்புக்கு உட்பட்டே வங்கிக் கடன் கிடைக்கும்.''


6. எனக்கு வயது 45. என் குழந்தைகளின் உயர்கல்வி செலவுக்காக மாதம் 25,000 ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். நான் எந்த வகை ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது?

''முதலீட்டுக் காலம் ஐந்து வருடம் என்பதால் பேலன்ஸ்ட் ஃபண்டுகள் அல்லது லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி டைவர்சிபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஹெச்.டி.எஃப்.சி.புரூடென்ஸ், பிர்லா சன் லைஃப் 95 போன்ற பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் ஏதாவது ஒன்றில் 15,000மும், ஃபிடிலிட்டி ஈக்விட்டி, டி.எஸ்.பி. டாப் 100 போன்ற ஈக்விட்டி டைவர்சிபைட் ஃபண்டுகளில் ஒன்றில் 7,500மும், சிறந்த எம்.ஐ.பி. பிளானாகப் பார்த்து அதில் ரூபாய் 2,500 எனவும் பிரித்து முதலீடு செய்யலாம்.



7. என் கணவர் அவருடைய தம்பியின் டீமேட் கணக்கின் மூலம் பங்குகளை வாங்கி வருகிறார். எனது பெயரில் டீமேட் கணக்கு தொடங்கி அந்த பங்குகளை என் பெயருக்கு மாற்ற முடியுமா?


''மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு உங்கள் கணவரின் தம்பி டீமேட் கணக்கு வைத்திருக்கும் இடத்தில் டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்லிப் எழுதி கொடுக்க வேண்டும். புதிதாக எந்த கணக்கில் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இப்படி பங்குகள் மாற்றப்படுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.''

 நன்றி - நாணயம் விகடன்


டிஸ்கி -  அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களால் அளிக்கப்பட்ட பதில்கள் இவை

அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை பை அவள் விகடன்

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?

அவசர... அவசிய அலசல் !
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்... இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், 'அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்...’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.

இதுவோ.... ''மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்... மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!'' என்று குஷியாகும் பெண்களின் காலம்!


இவர்களில் பலரும், 'இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது' என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ... தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க... கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.


'மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?' என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.


''மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்... மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. 

அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்'' என்ற டாக்டர்,


''விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.

''கடைகளில், 'புரஜெஸ்ட்டரோன்' (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.


இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். 

அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்... அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது... மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது... ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!'' என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,

''இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-

''மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.
முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!'
thanx- aval vikatan