Monday, September 13, 2010

திருப்பூர் - சினிமா விமர்சனம் -பேரரசுக்குப்போட்டியாக....

நாடோடிகள்,சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு படம் குடுக்க (எடுக்க)வேண்டும் என்ற இயக்குநரின் ஆர்வம் புரிகிறது,ஆனால் அதற்கான முனைப்பு மட்டுமே படத்தில் தெரிகிறது,செயல் வடிவம் கொடுக்கத்தவறி விட்டார்.
4 நண்பர்கள்,அதில் ஒருவன் காதலில் விழுகிறான்(காதல் என்ன கிணறா?விழ)
மீதி 3 நண்பர்கள் அவர்கள் இணைய உதவுகிறார்கள்,அதில் ஒருவனின் உயிர் போகிறது.இதுதான் கதை.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் +கதைக்களன் பழனிதான் என்றாலும் ஏற்கனவே இயக்குநர் பேரரசு பழநியைக்குத்தகைக்கு எடுத்து விட்டதால் இடைவேளைக்குப்பிறகு திருப்பூரில் கதையை நகர்த்தி சமாளிக்கிறார்.
திருப்பூர் என டைட்டில் வைத்து விட்டு அந்த ஊர் சம்பந்தப்பட்ட பனியன் தொழிற்சாலைகள்,சாயப்பட்டறை என மண் சார்ந்த பதிவுகள் எதையும் இயக்குனர் செய்யவில்லை,ஆர்வத்துடன் வரும் திருப்பூர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.(அப்படி ஒரு வேளை வந்தால்தான்,வழக்கமாக எந்தப்படம் வந்தாலும் 6 தியேட்ட்ர்களில் ரிலீஸ் பண்ணும் திருப்பூர் இந்தப்படத்தை 2 டப்பா தியேட்ட்ரில் ரிலீஸ் பண்ணி இருக்கிறது.)


படத்தில் 4 நண்பர்களை சரியான அறிமுகம் செய்யாமலேயே எடுத்தவுடன் ஒரு க்ரூப் சாங்க் வைத்த இயக்குனர் இன்னும் பக்குவபட வேண்டும்.உன்னை நினைத்து படத்தில் விக்ரமன் அனைவருக்கும் ஓப்பனிங் சீன் குடுத்து ஆளுக்கு ஒரு சுவராஸ்யமான சம்பவம் சொல்லி பிறகு ஆடியன்ஸை தயார்ப்படுத்தி இருப்பார்.இன்னொரு விஷயம்.புது இயக்குநர் ஒரு படம் எடுக்கும் முன் அதே டைப் படங்கள் சிலவற்றைப்பார்க்க வேண்டும். ஹிட் ஆன 4 படங்கள், ஃபெய்லியர் ஆன 4 படங்கள்.அப்போதான் ஒரு ஐடியா கிடைக்கும் .இயக்குநர் துரைசாமி அப்படி ஏதும் முயற்சி எடுத்த மாதிரி தெரியவில்லை.

4 பேருக்கும் ஒரே இடத்தில் வேலை கிடைத்தால்தான் போவோம் என்று முடிவெடுக்கும் நண்பர்களை பார்த்து அழுவதா ,சிரிப்பதா என தெரியவில்லை,அவனவன் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறான்.ஹீரோவை ஒரு ஆள் தெரியாமல் காரில் இடித்துவிட்டு சென்றதும் 40 கி மீ வேகத்தில் ஓடும் காரை ஓடியே சேஸ் பண்ணும் சீன் சுறாவுக்கு சரி,புறாவுக்கு?நட்பின் ஆழத்தைக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட அந்த சீன் நகைப்பையே வரவழைக்கிறது.



வாத்தியார் வீட்டில் இருக்கும் பையன் தன் தந்தை திருத்த கொண்டு வந்த ஆன்சர் சீட்களை எடைக்குப்போட்டு பக்கோடா சாப்பிடும் காட்சிகள் கற்பனை வறட்சி.புதுமுக ஹீரோ பார்க்க வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறார்.கூத்துபட்டறைப்பயிற்சி அவசியம் தேவை.சோகக்காட்சிகளீல் சோபிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை,காதல் காட்சிகளிலாவது கலக்க வேண்டாமா?

ஹீரோயின் 10 பைசா பெறாத ஒரு விஷயத்துக்காக நன்றி சொல்லும் காட்சிகள் ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.மனசுக்குள் ஜோதிகா என நினைப்போ ?அதே போல் பாடல் காட்சிகளில் (குறிப்பாக காதல் பைத்தியம் ஆனாளே பாடலில்) அவர் மேல் இமைகளில் பச்சை வண்ணம், ரோஸ் வண்ணம் என அப்பி இருப்பது சரோஜா தேவி காலத்துப்பழக்கம் ஆச்சே?மேக்கப்மேனை மாத்துனாதான் குப்பை கொட்ட முடியும் அம்மணி.

எந்த ஊரில் டீக்கடையில் டீ ஆற்றும் நபர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் நாட்டாமை மாதிரி ஜம்மென்று இருக்கிறார்?.அதில் பாக்கெட்டில் பேனா வேறு.நான் நினைக்கிறேன் திடீர் என சூட் ஆன பார்வையாளராக வந்தவர் என.அதே போல் பேக்கரி ஷாப்பில் பாதாம் பால் சாப்பிடும் சீனில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் கேமரா படம் பிடித்திருக்கிறதே,எடிட்டர் எங்கே போனார்?



 tpr

முதன்முதலாக காதலை காதலர்கள் வெளிப்படுத்தும்போது இருவருக்கும் ஏற்படும் பரவச நிலையை படம் பிடிக்கவே இல்லை.தயக்கம்,மயக்கம் எல்லாம் கலந்த கலவை அது ,காதலை சொன்னதுமே இருவரும் இறுக்கி அணைப்பது சாத்தியமே இல்லை.நானும் பல காதலர்களிடம் கேட்டு விட்டேன்.(ஒரு விமர்சனம்  போடறதுக்கு எப்படி எல்லாம் ஹோம் ஒர்க் பண்ண வேண்டி இருக்கு?)

காதல் பட வில்லன் தண்டபாணிதான் ஹீரோயினுக்கு அப்பா.நல்ல நடிப்பு,காதலிக்கு வளையல் வாங்க நகைக்கடைக்கு வந்த ஹீரோ வளையல் அளவுக்கு தான் உடைத்த ஹீரோயின் வளையலையே கொண்டு வந்தது கவிதையான சீன்.நகைக்கடையில் நடக்கும் தகராறு படு செயற்கை.
இந்தப்படத்திலும் ஒரு அம்மா செண்ட்டிமெண்ட் உண்டு,வில்லனின் அம்மா பிறந்த நாளின் போது மட்டும் வில்லன் எந்தக்கொலையும் செய்ய மாட்டாராம்.சகிக்கலை.

ஆதியாக வருபவர்க்கு இயக்குநர் எம் சசிகுமார் மாதிரி வர வேண்டும் என்ற ஆர்வம் போலும்.சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.தேடித்தேடிப்பார்த்ததில் சிக்கிய சில சுவராஸ்யமான வசனங்கள்.

1. தம்பி,இந்த வயசிலேயே தம் அடிக்க ஆரம்பிச்சுட்டியே,எப்போ ஆரம்பிச்சே?

எப்போ எங்கப்பா அந்தபழக்கத்தை விட்டாரோ அப்பவே நான் ஆரம்பிச்டேன்.

2. எல்லா லேடிஸும் எதுக்கெடுத்தாலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்னு சொல்றாங்க,ஏன் காதல்ல மட்டும், காதலைசொல்ல முதல்ல முன் வரமாட்டேங்கறாங்க? ஆண்கள்தான் முதல்ல சொல்லனும்னு எதிர்பார்க்கறாங்க?


படத்தில் இயக்குநரைப்பாராட்ட ஒரே அம்சம், ஒரு நல்ல டப்பாங்குத்துப்பாட்டை ரொம்ப டீசண்ட்டா எடுத்தது,இதுல என்ன ஒரு ஆச்சர்யம்னா அதுல டான்ஸ் ஆடுற 3 லேடீஸ்ஸும் முழு சேலையோட கவுரவமா ஆடுனதுதான்.

இந்தப்படம் ஏ செண்ட்டர்ல ரிலீஸ் ஆன அறிகுறியே இல்லை.பி,சி செண்ட்டர்கள்ல 20 நாட்கள் ஓடலாம்
.ஆனந்த விகடன்,குமுதம் ல இந்தப்பட விமர்சனம் ஓடறதே டவுட்தான்.