Showing posts with label SUJATHA. Show all posts
Showing posts with label SUJATHA. Show all posts

Wednesday, August 01, 2012

சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்? - சுஜாதா - சிறுகதை

அந்த நாள் என் சந்தோஷ நாள். எனக்கு வேலை கிடைத்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருந்தது. அதை மாலதியிடம் காண்பிக்கச் சென்றபோது, அவள் ஊருக்குக் கிளம்பத் தயாராக நான்கு அவசர சாரிகளைப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு இருந்தாள்.



”மாலதி! எனக்கு வேலை கிடைத்துவிட்டது!”



மாலதி மற்றொரு சாரியைக் கசக்கி அடைத்தாள். அவள் முகம் என்னவோ போல் இருந்தது. ”ஏன் மாலதி என்னவோ போல் இருக்கிறாய்?”



மாலதி என்னை வெறித்துப் பார்த்தாள். ”நான் இனி இந்த வீட்டில் ஒரு கணம் தாமதிக்கப்போவதில்லை. சொந்த அப்பாவாக இருந்தால் என்ன, திஸ் இஸ் தி லிமிட்! நான் போகிறேன்!”



”இரு, இரு எங்கே போகிறாய்?”



”எங்கேயாவது!” அவள் கண்களில் நீர் ததும்பியது.



”ஆ, கம் ஆன்! அவசரப்படாதே. என்ன நடந்துவிட்டது? அப்பா ஸ்டார் டஸ்ட்’டை நிறுத்திவிட்டாரா! மாலதி நீ போய்விட்டால் டாக்டர் அவர்களைப் பார்த்துக்கொள்வது யார்? ஒரே ஓர் அப்பா இல்லையா?”



”பார்த்துக்கொள்வதற்கு ஆள் கிடைத்துவிட்டான். மாடிக்குப் போய்ப் பார்! உனக்குப் போட்டியாக மற்றொரு சிநேகிதன் வந்திருக்கிறான். சுல்தான்!



எனக்குத் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் புரியவில்லை. சுல்தான்… இந்தப் பெயரை எங்கோ பார்த்திருக்கிறேனே? சே, அப்படி இருக்காது. எனக்குப் போட்டியாக ஒரு சுல்தானா?





மூன்று தாவலில் மாடி ஏறினேன். கதவு சாத்தி இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. ”அப் சுல்தான், அப்! அப்படி சுல்தான், அப்படி அப்!”



புரியவில்லை. கதவைத் தட்டினேன். ”கம் இன். கதவு தாளிடப்படவில்லை. ஆ பையா! எங்கே வந்தாய்..?”



அறையில் டாக்டர் மட்டும் தான் இருந்தார்.

”டாக்டர், முப்பத்தைந்து செகண்டுகளுக்கு முன் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

”ஓ. சுல்தானை நீ இன்னும் சந்திக்கவில்லை அல்லவா?அதோ பார்!”

டாக்டர் குறிப்பிட்ட திக்கில் அறையின் வடமேற்கு மூலையின் மேலே, வெண்டிலேட்டர் என்னும் காற்று ஜன்னலில் தொற்றிக் கொண்டிருந்த சுல்தானை முதல் தடவையாகப் பார்த்தேன்.

சுல்தான் சுமார் மூன்றடி உயரமுள்ள ‘சிம்பன்ஸி’ ரகக் குரங்கு. உடல் முழுவதும் கருகரு என்று கேசம். நீளநீள விரல்கள். முகத் தில் முக்கால் பாகத்தை அடைத் துக்கொண்டு பற்கள்.

மேற்படி பற்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டுஇருந்தன. அந்த சினிமாஸ்கோப் சிரிப்பைச் சிரிப்பு என்கிற ரகத்தில்தான் சேர்க்க வேண்டும். பளீர் என்று வெண் பற்கள். ஒவ்வொன்றும் நாற்பது வாட்.

”சுல்தான், கீழே வா!” என்றார் டாக்டர், அது உடனே ரப்பராகத் தாவி, ஒரு கோட் ஸ்டாண்டு, ஒரு சோபாவின் விளிம்பு இவை மூலமாக எங்கள் அருகில் வந்து நின்றது. பக்கத்தில் பார்க்க இன்னும் மொசமொசவென்று அசிங்கமாக இருந்தது. ”டாக்டர், நான் போய்விட்டுச் சாவகாசமாக வருகிறேன். உங்களுக்கு எவ் வளவோ வேலை இருக்கும்.”



”பயப்படாதே. சுல்தான் ஒன்றும் செய்ய மாட்டான். சுல்தான். இது என் ஃப்ரெண்ட்! ஃப்ரெண்ட்! மாமாவுக்கு ஷேக்ஹாண்ட் கொடு.”



சொரசொர என்று ஒரு கரம் என் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, ஒரு சலாம் போட்டது. ‘ஹலோ’ என்றேன். சுல்தான் என் பையிலிருந்து பேனாவை எடுத்துக்கொண்டுவிட்டது.



”டாக்டர், என் பேனாவைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்.”



”எப்படி! ஏறக்குறைய மனுஷாள் மாதிரியே பண்ணுகிறது பார்!”



டாக்டர், என்ன இது, குரங்கை வைத்துக்கொண்டு கூத்து! எங்கே பிடித்தீர்கள் இக் குரங்கை? எதற்காக? ஐயோ, என் பேனாவைக் கடிக்கிறதே! டேய், குடுத்துடுடா.”



”பையா, ஒரே ஒரு வார்னிங். அதை டேய் கீய் என்று மரியாதை இல்லாமல் பேசாதே. சில வேளை கோபம் வந்துவிடும்!” டாக்டர் குரங்கின் தலையை வருடிக்கொண்டே தொடர்ந்தார். ”சர்க்கஸில் வாங்கினேன். நொடித்துப்போன சர்ககஸ் கம்பெனி. இதற்குப் பட்டாணி போடக்கூடக் காசில்லை. பையா, டாக்டர் க்யூலரின் ஆராய்ச்சிகளைப் பற்றிப் படித்திருக்கிறாயா?”



”டாக்டர், நான் கடைசியில் படித்தது ‘நீச்சலடி சுந்தரி’ என்கிற மர்ம நாவல். குமாரி ஜெயபுஷ்பா எழுதியது.”



”டாக்டர் க்யூலர், ‘தி மெண்டாலிட்டி ஆஃப் ஏப்ஸ்’ என்று அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார்.”



”டாக்டர்! மாலதி ரொம்ப கோபத்தில் இருக்கிறாள். என்ன நடந்தது?”



”நான் அவளிடம் சுல்தானை வாங்கி வந்ததைப் பற்றிச் சொல்லவில்லை. அவள் டிரெஸ் பண்ணிக்கொண்டிருந்தபோது உள்ளே எட்டிப் பார்த்துவிட்டான். கொஞ்சம் குழப்பம். அதிருக்கட்டும், குரங்குகளை வைத்துக்கொண்டு க்யூலர் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்.”



”மாலதி ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கிறாள்!”



”எங்கேயும் தனியாகப் போக அவளுக்குத் தைரியம் கிடையாது. நாயர் கடை வரை போய்த் திரும்பிவிடுவாள். அவளுக்கு என்னை விட்டுவிட்டு இருக்க முடியாது… க்யூலர் கெஸ்டால்ட்டின் சைக்காலஜியை நிரூபிப்பதற்கு குரங்குகளுக்குச் சில புத்திசாலித்தனமான காரியங்களைக் கற்றுக்கொடுத்தார்… உதாரணத்துக்கு இதோ பார். கம் சுல்தான்…”



எனக்கு கெஸ்ட்டால்டின் மனோதத்துவத்தில் ஈடுபாடு அதிகம் இல்லை என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல் டாக்டர் அவர்கள் அறையின் மூலையில் இருந்த கூண்டுக்குள் சுல்தானை அழைத்துச் சென்றார். அதைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டினார். சுல்தான் உள்ளே திருதண்டி சந்நியாசி மாதிரி குதித்தது. டாக்டர் அலமாரிக்குச் சென்று ஒரு நீளமான பச்சைநாடன் வாழைப் பழத்தை எடுத்துக் கூண்டின் அருகில் கொண்டுவந்து சுமார் எட்டு அடி தள்ளி வைத்தார். இரண்டு சிறிய மூங்கில் குச்சிகளைக் கூண்டுக்குள் சுல்தானிடம் கொடுத்தார்.

”பையா, வேடிக்கையைப் பார்!”



சுல்தான் முதலில் தன் உடம்பை ஹடயோகியைப் போல நீளமாக இழுத்து வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. முடியவில்லை. ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அதனால் வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. குச்சி நீளம் போதவில்லை. சுல்தான் மற்றொரு குச்சியை வைத்து முயன்று பார்த்தது. ம்ஹூம். அதுவும் நீளம் போதவில்லை.



இரண்டு குச்சிகளையும் கீழே போட்டுவிட்டுச் சற்று நேரம் கூண்டுக்குள் பின்கை கட்டிக்கொண்டு எலெக்ஷனில் தோற்றவன் போல உலாத்தியது. திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல ஒரு மூங்கிலை எடுத்தது. அதன் நுனியில் கடித்து நீளவாக்கில் கொஞ்சம் பிளாச்சாய்ப் பிளந்துகொண்டது. அந்தப் பிளவில் மற்றொரு குச்சியைச் சொருகிக்கொண்டது. அப்போது நீளம் போதுமானதாக இருந்தது. லாகவமாக வாழைப் பழத்தைக் குச்சியால் தன்பால் நகர்த்தி எடுத்துக்கொண்டுவிட்டது.



”பார்த்தாயா!”



”ரிமார்க்கபிள் டாக்டர். சுல்தான். நீ ஒரு ஜீனியஸ்!”


”ஜீனியஸ் அவனில்லை. கற்றுக் கொடுத்த நான்!”



”இன்னும் என்னவெல்லாம் செய்யும்? மோர்சிங் வாசிக்குமா?”


”பொறு, இதுவரை க்யூலரின் ஆராய்ச்சியின்படிதான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இனிதான் டாக்டர் ராகவானந்தம் வருகிறார்.”



டாக்டர் அலமாரிக்குச் சென்று சிறிய பட்டாணி அளவில் இரண்டு சமாசாரங்களை எடுத்துவந்து எனக்குக் காட்டினார். ”இது என்ன தெரியுமா? மெர்க்குரி செல் பேட்டரி. இது ஒரு சின்ன எலெக்ட்ரானிக் சர்க்யூட். பேட்டரியிலிருந்து சக்தி கொடுத்தால் இதிலிருந்து சின்னச் சின்ன அலைகள், மின் துடிப்புகள் கிடைக்கும். இந்த இரண்டையும் இணைத்துச் சுல்தானின் தலையில் ஆக்ஸிபிட்டல் பாகத்தில் பொருத்தப்போகிறேன். சுல்தானின் மூளைக்குச் சிறிய மின் அதிர்வுகள் கிடைக்கும்போது நடக்கப்போவது என்ன தெரியுமா…? நீ மைக்கல் க்ரைடனின் டெர்மினல் மான் படித்தாயா?”



”டாக்டர், நான் சமீபத்தில் படித்தது நீச்சலடி…”



”நிகழப்போவது மனித சரித்திரத்தில் ஒரு மைல் கல். சுல்தானுக்கு அறிவு கிடைக்கப்போகிறது. சுல்தான் இப்போது இருப்பதைவிடப் பதின்மடங்கு அறிவு பெறப்போகிறான்.”



”டாக்டர், ஏற்கெனவே என் பேனாவைக் கடித்து உண்டு இல்லை என்று பண்ணிவிட்டது. குரங்குக்கு எதற்கு அறிவு கொடுக்க வேண்டும்?”



”இதில் ஒரு சிக்கல்.”



”நல்ல வேளை.”



”தன் தலையில் இந்தக் கருவியைப் பொருத்த விட மாட்டேன் என்கிறான் சுல்தான். என் ஒருத்தனால் சமாளிக்க முடியவில்லை.”



”எனவே…”



”நீ கொஞ்சம் ஒத்தாசை செய்தால் காரியம் நிறைவேறும்.”



”நோ நோ நோ. டாக்டர், எனக்குக் குரங்குகளிடம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. எங்கேயாவது பிடுங்கிவைத்தால்… சே சே! பல் ஒவ்வொன்றும் எவ்வளவு தீர்க்கமாக வளர்ந்திருக்கிறது பாருங்கள்.”



”பையா, உதவி செய்யமாட்டாயா?”



”இல்லை டாக்டர். நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியிருக்கிறேன். ஆனால், குரங்கு வேலை வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் முடியாது!”



”அப்படியா?”



”ஆம். டாக்டர்.”



”முடியாதா?”



”ம்ஹூம். முடியாது.”



”சுல்தான்!” என்றார் டாக்டர். சுல்தான் நிமிர்ந்தது.



”ஷகூலா ஜாகராண்டா!”



”என்ன டாக்டர் அது. குரங்கு பாஷையா… ஹ…ஹ….” என் சிரிப்பு உறைந்தது. சுல்தான் தன் பற்களை ஆர்மோனியக் கட்டைகள் போல் விரித்து என் எதிரில் வந்து நின்றது. ஒரு தடவை எம்பிக் குதித்தது. ஒரு தடவை பாதி உட்கார்ந்து நிமிர்ந்தது. படபட என்று தன் தொடைகளில் தாராசிங் போலத் தட்டிக் கொண்டது.



”டாக்டர், எனக்குப் பயமாக இருக்கிறதே, என்ன செய்யப் போகிறது.”


சுல்தான் லபக் என்று என் தலைமேல் ஏறி டென்னிஸ் ரெஃபரி போல உட்கார்ந்துகொண்டது.


”டாக்டர், திஸ் இஸ் பிளாக் மெயில். என்ன இது! இறங்கச் சொல்லுங்கள்.” நான் தலையை அசைக்காமல் கரகம் ஆடுபவன் போல் இரண்டு கைகளையும் நீட்டி பேலன்ஸ் பண்ண வேண்டியிருந்தது. ”டாக்டர், ப்ளீஸ்!”


அவர் சும்மா இருந்தார்.



”டாக்டர், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். எத்தனை குரங்குகளை வேண்டுமானாலும் பிடித்துக்கொள்கிறேன். இதை இறங்கச் சொல்லுங்கள்!”

”தட்ஸ் த பாய்! சுல்தான், இறங்கு!”

இறங்கிவிட்டது.

”நீ பிடித்துக்கொள்ள வேண்டாம். நான் பிடித்துக்கொள்கிறேன். நீ தலையில் பேண்டேஜ் போல் இந்த சாதனத்தைக் கட்டிவிட வேண்டும். அவ்வளவுதான்.’



”செய்கிறேன் டாக்டர்.” டாக்டர் அவர்கள் சுல்தானைப் பிடித்துக்கொள்ள அந்த இரண்டு சாதனங்களையும் பதித்து பேண்டேஜ் போல என்னைத் தலையில் இறுக்கக் கட்டச் சொன்னார். சுல்தான் தன் பற்களை விரித்து என்னைப் பார்த்த பார்வையில். ‘உன்னை அப்புறம் கவனித்துக்கொள்கிறேன்’ என்றது.



”இது சாதாரணமாகவே புத்திசாலிக் குரங்கு. இதற்கு மூளையில் ‘பல்ஸ்’ கொடுத்தால் இதைச் சமாளிப்பது சற்றுச் சிரமமாக இருக்கலாம். கூண்டுக்குள் அடைத்துவிடலாம்” என்று சுல்தானைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டிவிட்டார்.



”நீயும் குரங்கு வித்தையில் சேர்ந்துகொண்டுவிட்டாயா?” என்று குரல் கேட்டுத் திரும்ப… மாலதி.


”நீ ஊருக்குப் போகவில்லையா? நல்ல வேளை!” என்றேன்.


”டாக்ஸிக்கு அனுப்பியிருக்கிறேன்” என்றாள்.


”மாலதி. கேன்சல் பண்ணு உன் பயணத்தை. சுல்தானைக் கூண்டில் அடைத்தாகிவிட்டது. இதோ பார், இனி இதனால் உனக்கு ஓர் உபத்திரவமும் கிடையாது” என்றார் டாக்டர்.



”கூண்டில் அடைக்க வேண்டியது வேறு இரண்டு ஆசாமிகளை. எத்தனை நாழி டாக்ஸி கொண்டு வர!”



”மாலதி டார்லிங்! இனிமேல் சுல்தானைக் கூண்டுக்குள் வைத்துத்தான் கண்காணிப்பேன்.”



வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது



”மாலதி, போகாதே!”



”இந்தக் குரங்கு இந்த வீட்டில் இருக்கும்வரை நான் இங்கே இருக்கப் போவதில்லை. காலையில் என்ன செய்தது தெரி யுமா?”

”சொன்னார்! அன்ஃபார்ச்சுனேட்” என்றேன்.


”மாலதி, டாக்டர் க்யூலர் என்ற ஜெர்மானியர்….” என்றார் டாக்டர்.



”பார்த்தாயா, ஆரம்பித்தாகிவிட்டது… டாட்டா!”



மாலதியின் பின்னே நானும் டாக்டரும் தொடர… அவள் வைராக்கியமாக இறங்கிக் கீழே வந்தாள். வாசலில் டாக்ஸி இல்லை. வேறு ஏதோ கார் சத்தம் கேட்டிருக்கிறது.



”மாலதி, இப்போதுகூட லேட் இல்லை. இனி உனக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது. சுல்தானுக்கு மனிதத் தன்மை கொடுத்துவிட்டேன். நாகரிகம் கொடுத்துவிட்டேன். அவன் இனி பாத்ரூமுக்குள் எல்லாம் எட்டிப் பார்க்க மாட்டான்.”



டாக்டர் அவர்கள் மேலே தொடர்வதற்குள் மாடியில் ‘டணாங்’ என்று சில்லறை இறைபடுவது போல் சத்தம் கேட்டது.



”டாக்டர், அது என்ன சத்தம்!”



”கண்ணாடி உடைந்திருக்கும்” என்றாள் மாலதி.



”இல்லையே. கூண்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுத்தானே வந்தோம்! பையா, வா பார்க்கலாம்.”

”நீங்கள் போய்ப் பாருங்கள். நான் மாலதியுடன் சற்று நே…. டாக்டர்!”

”என்ன?”



”என் அப்பாயின்மென்ட் லெட்டர்! என் வேலை! அதை மாடியில் வைத்துவிட்டேன்! கூண்டுக்கு அருகில் உள்ள மேஜையில்!”



”குரங்கு சாப்பிட்டிருக்கும். ஓடு” என்றாள் மாலதி. எனக்கு திகீர் என்றது. டாக்டருடன் மாடிக்கு நானும் ஓடினேன். அறைக்குள் நுழைந்தபோது…



அறை காலியாக இருந்தது. கூண்டு திறந்திருந்தது. மேஜை மேல் வைத்திருந்த என் அப்பாயின்மென்ட் லெட்டரைக் காணோம். சுல்தானையும் காணோம்!

”டாக்டர்! என் லெட்டர்!”

”பையா! என் குரங்கு!”



”எங்கே அந்த சுல்தான்?”



”சுல்தான்! எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறாய்? வந்துவிடு! கண்ணல்லவா? பையா, என் ஆராய்ச்சி வெற்றி… வெற்றி! எப்படித் தப்பித்திருக்கிறது பார். அதற்கு அறிவு வந்துவிட்டது. மேஜை மேல் வைத்திருந்த சாவியைக் குச்சியால் தள்ளி எடுத்துப் பூட்டைத் திறந்திருக்கிறது. குரங்கு… பூட்டைச் சாவி போட்டுத் திறந்திருக்கிறது… வெற்றி!”



”டாக்டர், என் லெட்டரை ஏன் அது எடுக்க வேண்டும்? எங்கே அந்தத சுல்தான்!”



அதற்குப் பதில் போல கீழே வீல் என்று ஐயாயிரம் சைக்கிள் அலறல் கேட்டது. மாலதி! அங்கே விரைந்தோம். ”என்ன மாலதி? என்ன ஆச்சு!”



”குரங்கு…” என்றாள். அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. பயம் தொண்டையை அடைத்தது. அதே சமயம் பின்கட்டிலிருந்த டாக்டர் வீட்டுச் சமையற்காரர் அரை டிராயர் அணிந்துகொண்டு பிரசன்னமானார். ”சார்! டாக்டர் சார்! இனி ஒரு நிமிஷம் இந்தப் பைத்தியக்கார வீட்டில் காரியம் செய்ய மாட்டேன். குரங்கு வளர்க்கலாம். ஆனா, இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது. நேரா சமையல் அறைக்கு வந்து என் வேஷ்டியையும் துண்டையும் உருவிக்கொண்டுபோய்விட்டது. சே!”



”கையில் ஒரு காகிதம் வைத்திருந்ததா? ரிஜிஸ்டர்டு லெட்டர்?” என்றேன்.

”அது என்ன இழவோ. எனக்குத் தெரியாது. மாலதி அம்மா இந்த நிமிடமே என் கணக்கைத் தீர்த்துவிடுங்கள்.”


”வேஷ்டியையா உருவிற்று? உருவக் கூடாதே!” என்றார் டாக்டர்.



”இன்னும் கொஞ்சம் நாழி இருந்தா டிராயரையும் உருவி இருக்கும்.”



”பையா, விபரீதம். அதன் தலையில் இருக்கும் சாதனத்தை எடுத்துவிடக்கூடும் இல்லையா?”





”மாலதி, நீ சுல்தானைப் பார்த்தாயா?”

”திடுதிடுவென்று நடு ஹாலில் குறுக்கே நொண்டி ப்ளே விளையாடுகிற மாதிரி ஓடியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.”

”எந்தப் பக்கம் போச்சு?”

”வாசல் பக்கம்.”

”போச்சுடா!”

”பையா, வா! சுல்தானைப் பிடித்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் ஆபத்து.”

நானும் டாக்டரும் வெளி

யே வந்தோம். தெரு அமைதியாக இருந்தது. நாங்கள் மேலும் கீழும் பார்த்தோம். எலெக்ட்ரிக் கம்பங்களைப் பார்த்தோம். மரங்களைக் கூர்ந்து பார்த்தோம். சுல்தான் சுல்தான் என்று செல்லமாகக் கூப்பிட்டுப் பார்த்தோம். ம்ஹூம்!

”டாக்டர், அதோ பாருங்கள்…”



சாலை நடுவே குரங்கின் காலடிகள் மாதிரி தெரிந்தது. அருகே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை தெரிந்தது. கடைக்காரரிடம் சென்று, ”ஐயா, இந்தப் பக்கம் ஒரு கறுங்குரங்கு போயிற்றா?” என்று கேட்டேன். அந்த ஆள் என்னை ஒருவிதமாகப் பார்த்தார். அதே சமயம், எதிர் வீட்டிலிருந்து ஒரு நனைந்த ஆசாமி ஓடி வந்தார். ”மாணிக்கம், சட்டுனு ஒரு சோடா உடை! எனக்குப் படபப்பாக இருக்கிறது” என்றார்.



”என்ன ஆச்சு சார்?”



”கொஞ்ச நாளாகவே எனக்கு தத்துபித்து என்று கனா. ஆனா, சொன்னா நம்ப மாட்டே. பகல்ல முழிச்சுட்டு இருக்கிறபோது எனக்குக் கனா வருகிறது! தலையிலே முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு ஆப்பிரிக்க தேசத்துக் குரங்கு பாத் ரூம் வழியா எட்டிப் பார்த்து ஒரு பேப்பரை ஆட்டறாப்பலே! சோடா.”

”சார்! அந்த பேப்பர் என் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் சார். எங்கே அந்தக் குரங்கு?”

”அப்ப குரங்கு நிஜமா?”

”ஆம்!”

”அப்ப வீட்டுக்குள்ளே இருக்கு! குரங்கு உங்களுதா! அறிவுகெட்ட பசங்களா! என்னடா இது அக்கிரமம்? முண்டாசைக் கட்டிவிட்டுக் குரங்கை உள்ளுக்குள்ளேவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களா? எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போச்சு!”



”சார், இதை அப்புறம் சாவகாசமாக உங்களுக்குச் சொல்கிறேன். இப்ப அந்தக் குரங்கை முதலில் பிடிக்க வேண்டும். பையா! வா போகலாம்” என்று டாக்டர் கடையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை முறித்துக்கொள்ள இருவரும் அந்த வீட்டில் நுழைந்தோம்.



இக்கட்டாக இருந்த அந்த வீட்டில் ஸ்தம்பித்த ஒண்டுக் குடித்தனக்காரர்களைக் கடந்து, குறிப்பிட்ட பாத் ரூமெல்லாம் தேடி… அறை அறையாகத் தேடி (‘கார்ப் பரேஷன்காரர்களோ?’) பின்கட்டுக்குச் சென்றோம்.



சுல்தான் சாதுவாகச் சப்பணம் கட்டிக்கொண்டு ஒரு வயதான பாட்டிக்கு எதிரே உட்கார்ந்திருந்தது. அந்த மாது கண்களை இடுக்கி அதை உற்றுப் பார்த்து, ”யாரப்பா நீ நம்ம கிஷ்ணசாமி புள்ளையாட்டம் இருக்கே?” என்றுகேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் ரகசியமாக, பைய, பின்னால் இருந்து அணுக முயற்சிக்க, சுல்தான் எங்க ளைப் பார்த்துவிட்டது. உடனே உயரமான பின்புறச் சுவரின் மேல் ஏறிக்கொண்டது.



”சுல்தான், நான் சொல்வதைக் கேள். வந்துவிடு!” என்றார் டாக்டர். ”சுல்தான், என் பேப்பரைக் கொடு!” என்றேன் நான். ”ஏன் சார், அந்தக் குரங்கு பேசுமா?” என்றது ஒரு குரல். ”கொசுவலை கொண்டுவரேன். அதைப் போட்டுப் பிடித்துவிடலாம்” என்றது மற்றொரு குரல். நான் ஓட்டுப் பக்கம் ஏறி, மெதுவாக மறுபடி சுல் தானைப் பின்புறம் அணுகி… அணுகி… அணுகிவிட்டேன். பிடித்துவிட்… ம்ஹூம். தப்பித்து அந்தப் பக்கம் குதித்துவிட்டது.



”பையா, சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறது! அந்தப் பக்கம் என்ன இருக்கிறது?”



”சின்ன சந்து, டாக்டர்.”

”சந்தின் முடிவில்?”

”தட்டி போட்டு அடைத்திருக்கிறது.”

”சார், அந்தத் தட்டிக் கதவைத் திறக்கிறீர்களா?” சந்தில் மடக்கி விடலாம். பையா, குரங்கு தெரிகிறதா?”

”தெரிகிறது, பத்தடி தூரத்தில் ராஸ்கல் நின்றுகொண்டிருக்கிறது.”



நானும் டாக்டரும் மெதுவாக நடந்தோம். எங்களுக்குப் பத்தடி முன்னாலேயே சுல்தான் நடந்தது.



”சுல்தான், கண்ணே! நில்லடா!” என்றார் டாக்டர்.



சந்தின் இறுதியில் தட்டி அடைத்திருந்தது. அதன் மேல் முதுகை வைத்துக்கொண்டு நின்றது. நாங்கள் அருகே வருவதைப் பார்த்ததும் தட்டியைப் பிரித்துக்கொண்டு அந்தப் பக்கம் சென்றுவிட்டது.



நான் தட்டியைப் பிரித்து அந்தப் பக்கம் என்ன என்று பார்த்தேன். என் ரத்தம் உறைந்தது.



அந்தப் பக்கம் ஒரு பொதுக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. பேசுபவர்கள் எங்களுக்கு முது கைக் காட்டிக்கொண்டு இருக்க… எதிரே திரளான மக்கள் குந்தி உட்கார்ந்துகொண்டு ஆ என்று வாய் பிளந்து பேச்சாளரைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சுல்தான் முதலில் ஒரு மூலையில்தான் இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், பக்கத்தில் ஒரு காவலர் இருந்தார். அவர் தொப்பி அருகில் இருந்தது.

”குமுறுகிறோம். கொதிக்கின்றோம். மக்களின் விருப்பத்தினையும் நலத்தினையும் சீரழிக்கும்…” பேச்சாளர்.

சுல்தான் அந்தத் தொப்பியை சைஸ் பார்த்துக்கொண்டு இருந்தது.

”….” ”…..” என்று டாக்டர் சன்னமாகக் கூப்பிட்டார் சந்தினூடே! போலீஸ்காரர் கால் மாற்றிக் கால் போட்டு உட்கார்ந்துகொண்டார். சுல்தான் அவரை நிமிர்ந்து பார்த்தது.

”மத்திய அரசைக் கேட்கின்றோம்!” என்றார் பேச்சாளர். ”உங்களுக்கு விருப்பமிருந்தால் வந்து எங்கள் அரியணையில் உட்கார்ந்து பாருங்கள். அது அரியணையல்ல… முள்!”

சுல்தான் அந்தக் காலி நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டது. மக்கள் பேச்சாளரின் உதடுகளிலேயே கவனமாக இருந்தார்கள்.



”சுல்தான்!” என்று எட்டு பாயின்ட் எழுத்துக்களில் அதட்டிப் பார்த்தார் டாக்டர்.



”வண்ணாரப்பேட்டை அறுபத்து மூன்றாவது வட்டம் கிளை சார்பாகத் தலைவர் அவர்களுக்கு மலர் மாலை” என்று சுல்தானுக்கு ஒரு மாலை போடப்பட்டது.



அப்புறம் அங்கே நிகழ்ந்ததை விவரிப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது.



”டேய், குரங்குடா!” என்றது ஒரு குரல். அப்புறம் ஒரு சலசலப்பு!


”எதிர்க்கட்சிக்காரன் வேலைடா!”


”தொப்பி மாட்டிக்கிட்டிருக்குடா!”


டணாங் என்று ஒரு கோலி சோடா பாட்டில் மேடை நோக்கி விரைந்தது. அதைப் பிடித்து சுல்தான் திரும்ப எறிய, ‘அமைதி அமைதி’ என்று ஒலிபெருக்கி அலற, அந்தக் கூட்டம் கலைந்த தேனீக்கூடு போல் ஆகிவிட, தக்காளிப் பழம், முட்டை, ஒற்றைச் செருப்புகள் எல்லாம் பிரயோகமாக…

”டாக்டர், வாருங்கள்! பின்பக்கமாகவே ஓடிவிடலாம்” என்று நாங்கள் ஓட, எங்களுடனேயே சுல்தானும் ஓடி வர, ‘பிப்பீ’ என்று போலீஸ் விசில் சத்தம் கேட்க, என் தோளில் ஒரு முரட்டுக் கை பரவ…

மாஜிஸ்ட்ரேட் கனைத்துக்கொண்டார். ”கைதிகள் டாக்டர் ராகவானந்தம், முதுகுடுமிப் பெருவழுதி. இது அவர் சொந்தப் பெயரில்லை என்று நினைக்கிறேன். இருவரும் இ.பி.கோ.268 பப்ளிக் நியூசன்ஸ், உடன் இ.பி.கோ.289 இவ் விரு பிரிவுகளின்படி குற்றவாளிகளாக நிரூபிக் கப்பட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அப ராதம் செலுத்தத் தவறினால், இரண்டு மாதம் சிறைத் தண்டனை” என்று படித்தார்.



”டாக்டர், என்னிடம் சில்லறையாக இல்லையே?” என்றேன்.



”பையா, கவலைப்படாதே! யுவர் ஆனர்! அபராதத் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கிறோம். மாலதி!” என்றார்.



சபையில் தலைமறைவாக இருந்த மாலதி ஓரமாக வந்து, ”அப்பா பேங்கில் மொத்தம் 550 ரூபாய்தான் இருந்தது” என்றாள்.



நான் திடுக்கிட்டேன். டாக்டர் தலையைச் சொறிந்து என்னை நோக்கினார். ”இப்ப என்ன செய்வது?”



”முதுகுடுமி ஜெயிலில் இருக்க வேண்டியதுதான்! க்யூலரின் அருமையான புத்தகம் கொண்டுவந்திருக்கிறேன். படித்தால் பொழுது போய்விடும். இரண்டு மாதம்தானே?” என்றாள் மாலதி.

Tuesday, July 31, 2012

ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா - சிறுகதை

மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்

டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்

வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.

மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,

பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள்.





சகட்டுமேனிக்கு சினிமா

பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த

புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான

கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள், சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக்

கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.





பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள்.

எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம், மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை

படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள். ‘சினிமாவும் சமூக மாறுதலும்’

என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு

நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா!





நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர்

நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்‌ஷனில்.

ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில்

நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை

அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான்.





கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி.

இருந்தாலும் முழுசாக வெளியே வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில

ஒரு படமாவது நன்றாக இருக்காதா..?





நாராயணின் அகராதியில் இந்த ’நன்றாக’ என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால்

சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது

இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை

தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள்

இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம்

உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு

ஜீரணம்.





நாராயணின் ஆசைகள் நாசூக்கானவை.

அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில்

அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி

ஆஞ்ச நேயா, ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி

தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில்

எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம்

ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. ஐந்து தங்கைகள், அனைவரும் வளர்ந்து

கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது ஆக வேண்டாமா?




பெண்களைப்

பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ, ஃபாக்டரியிலோ

அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன், ஞானி என்று

அழைப்பார்கள்.





அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே

எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ், இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும்

நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள்.





நாராயணனுக்கு கிருஷ்ன ன் என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம் கலர்கலராக

சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு

வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித

சந்தர்ப்பமும் தராமல் இதோ பார், இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச்

சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள்,





சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா!

என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு

திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும்.




என்னதான் அழகாக அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட

சினிமாச் சலனம் சிறந்ததல்லவா? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம்.

கிருஷ்ணப்பா சொன்னான், ”அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே! நான்

எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு

வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன்.”

நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு

கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா

ஆண்கள்,கிழவர்கள். பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும்

என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.

கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம்

விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம்.






வர்ணித்தான். ”பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே!” நாராயணன்

இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில்

மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான்.

நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம் முழுவதும் நீல

நிறத்தில் இருந்தது.

நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட

டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன்

சிலிர்த்துக் கொண்டான். ஆகா, இதோ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு, இதோ ஒரு

கற்பழிப்பு, சிறந்த கற்பழிப்பு, அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக்

கிழித்து, உள்ளுடைகளையும் உதறிப்போட்டு, மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால்

வருடி, அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று

எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான்.

அந்தப் பாழாப்போன பெண், டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில்

தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட -வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி

செய்யாமல், ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல், பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட்!

என்ன கதை இது! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்

சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் என்று தீர்மானித்து வெளியே வர,

கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து, வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட, கிருஷ்ணப்பா

பிடித்துவிட்டான்.






“என்னாப் படம் வாத்தியாரே! டாப்பு! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு

போறான். அவ, எங்க அகப்படறாத் தெரியுமா? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட

நடிச்சிட்டு இருக்கா! எல்லாத்தையும் காட்டிடறான்! கொட்டகையிலே சப்தமே இல்லை..

பின் டிராப் சைலன்ஸ்.”





“கிருஷ்ணா, நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன்

தியேட்டர்லேயும் பாக்கிறேன்!”

“நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே! நாளைக்கு என்ன படம் தெரியுமா? லவ்

மெஷின், பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும்!”

“பிளாக்கில கிடைக்குமா?”

“பார்க்கிறேன்! துட்டு ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு.”

“சே, பேசாதே! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ

எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும்

பரவாயில்லை!”





85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான்.

கிருஷ்ணா, “உன் டிக்கட்டைக் கொடு” என்றான்.

“இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர்

போயிரு” என்றான்.

“படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே.”

“ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ! ஆனா படு ஹாட்! கியாரண்டி மால்.”

நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன

சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள் ‘கப்ராஸ், கப்ராஸ்’ என்று வேற்று

மொழியில் பேசிக்கொண்டிருக்க, படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப்

படிக்க வரவில்லை.





இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான

இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள்.

கதாநாயகன் அண்ணனா, அப்பனா, காதலனா, என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன்

போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல்

வரை ஒரு பட்டன்? ம்ஹூம்! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய்

தெரு, மண், மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில்

சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன்

பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள்

காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக்

காட்டத் தலைப்பட்டது. வெளியே வந்தான். கிருஷ்ணப்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? பார்த்தியா? படம் எப்படி?”



“நீ பாக்கலை?”



”நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன்! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான்

பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம்

எப்படி?”




“நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட்டு

ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான்!”

நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“உன் படம் எப்படி?”

“செமைப்படம் வாத்தியாரே.”

நாராயணன் மவுனமானான்.




“வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு,

அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி…”




“கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது! வர்றேன்” என்று

விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும்

அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே

சொல்லு…” என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல்

நடந்தான்.




ரப்பர் டயர்வைத்த வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க

மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித்

தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக்

கடையைக் கடந்தான். ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு

கூர்க்கா நிற்க, ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த

போட்டோக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள்,

லிஸ்ஸி, லவினா, மோனிக்கா, டிம்பிள்.. நான்கு அபூர்வ பெண்களின் நடனங்கள்.

மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச்

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.






அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு ‘பதக்’ என்று

துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல, கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம்

கேட்டு அடங்கியது.




உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த

கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி

விடுவானோ? நடந்தான்.




சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை உணர்ந்தான். முதலில் அவன்

பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ஆந்திரா, டமில்நாடு, குஜராத், மலையாளி

கேர்ள்ஸ் சார்! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம்.”

நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “எவ்வளவு” என்றான்.

அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது.

”பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ், கிறிஸ்டியன்ஸ், முஸ்லீம்? வாங்க சார்!”

நாராயணன் யோசித்தான்.






“நிஜம் ஸார் நிஜம்; நிஜமான பெண்கள்!”




நாராயணன் “வேண்டாம்ப்பா” என்று விருட்டென்று நடந்து சென்றான்.



நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய், சிறுகதைகள்

Wednesday, July 25, 2012

எப்படியும் வாழலாம்! - சுஜாதா - சிறுகதை

”உங்களுக்கு வயசு எத்தனை?”


”செரியாச் சொல்ல முடியாதுய்யா!”


”உங்க அப்பாஅம்மா?”


”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.”




”உங்க சொந்த ஊரு?”


”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.”


”தொழில்?”


” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா?”


”போட மாட்டாங்க!”


”அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்.”


”அப்படியா?”


”என் பேரே ராணிதானே!”


”எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு?”


”அதெல்லாம் நல்லா வராதும்மா… எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்… கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும்! என்ன சிரிக்கிறே?”




”உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா? யோசிச்சுப்பாருங்க.”




”இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும்? நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்லை… என்னை நீங்க, போங்கன்னு யாரும் கூப்பிடறதே கிடயாது. கூப்ட்டா ஒரு மாரி… க்குள்ள துருதுருங்குது, வேணாம்.”




”சரி உனக்கு வேற ஏதும் தெரியாதா?”


”சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான்! காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.”


”என்ன புரிஞ்சுது?”


”எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு!”


”அப்புறம் நடனம் ஆடலியா?”


”ஆ, அத அப்பவே நிறுத்திட்டு… எல்லாம் மறந்துபோச்சு, அந்தப் பாட்டும் பளசாப்போச்சு, எப்பனாச்சியும் சிலோன்ல வெப்பாங்க, அளுகையா வரும்.”


”ஏன்?”
”அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.”


”அப்ப நீங்க…. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா?”


”இல்லை.”


”உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா?”
”அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே!”
”பின்ன, என்ன காரணம்?”


”காரணம்னு ஒண்ணு இருக்கணுமா என்ன?”


”அப்படித்தான்!”


”அப்படிப் பாக்கப்போனா, என் திமிர்தான் காரணம்னு சொல்லலாம்.”
”திமிரா?”


”ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல?”


”எந்த ஆள்?”
”ஏதோ ஆளு! இப்ப அவன் பேர்கூட மறந்துபோச்சு, அப்ப கிணத்தாண்டை வந்து சாது கணக்காப் பார்ப்பான். கோயிலுக்கு விசுவாசமா வருவான். ஏதோ காதல் மாரின்னு வெச்சுக்கயேன்…”




”அதுக்கு உங்கப்பாம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்களா?”
”ஒரு ….ம் இல்லை.”
”கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா?”
”அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ள…”
”அதுக்குள்ள?”
”அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.”




”அந்த மனிதனுடன் ஸ்திரமா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு?”


”இல்லியே… அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தாலியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னு… கோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா?’ன்னு நடராசன்னு ஒரு ஆளு கேட்டாரு. கதை வசனம் எல்லாம் பொம்பாடா எளுதுவாரு. என்னை வெச்சு பாட்டு எளுதி, ஆர்மோனியத்தில் ஙொய் ஙொய்னு பாடிக் காட்டினாரு. ஜார்செட்டில சேலை எடுத்துக் கொடுத்து, ரொம்ப மரியாதையாத்தான் வெச்சுக்கிட்டிருந்தாரு. ஊரூராப் போயி நாடகம் போட்டோம். எனக்கு வில்லி பார்ட்டுதான்கொடுப் பாங்க. வசனம் அவ்வளவு பேச வராதுன்னுட்டு. குலுக்கி ஒரு ஆட்டம் காட்டுவேன். விசில் அடிப்பாங்க.”


”நடராசு என்பவரோடு நீ ஒரு ஸ்திர வாழ்க்கைஅமைச்சுக் கலையா?”


”அதுக்குள்ளதான் அந்தாளு போய்ட்டாரே?”
”எங்க…?”
”செத்துப்போய்ட்டார், ஆஸ்பத்திரில ரெண்டு நாள் மயக்கமா இருந்துட்டு.”
”வருத்தப்பட்டியா?”
”வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு வந்துட்டாரு!”
”எப்ப பங்களூர் வந்தே?”
”பாத்தியா, உனக்கே கசப்பா இருக்கு, இல்லியா?”
”அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு…”
”அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட! புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா?”


”வேண்டாம். என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாப் போதும்!”
”கல்யாணம் ஆயிருச்சாய்யா உனக்கு!”
”பேட்டி உன்னைப்பத்தினது!”
”கல்யாணம் ஆனவங்கதான் ரொம்ப பேர் வராங்க. அது ஏன்யா? பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது! அது இன்னா புரியலியே..?”
”வர்றவங்கூட பேசுவியா?”
”நான் ஏன் பேசணும்? அவங்களே பேசுவாங்க. பெரும்பாலும் குடிச்சிருப்பாங்க. தொரதொரன்னு அவங்க வாழ்க்கைய வாந்தி எடுத்துருவாங்க.”
”உன்னைப் பத்தி யாரும் கேட்பாங்களா?”
”கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அந்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே?’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடு…”


”அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா?”
”சேச்சே…. இது பேப்பர்ல போடறதாச்சே! பேப்பர்ல பொய் சொல்வாங்களா? ஏன்யா, போட்டோ உண்டுல்ல?”
”போட்டா போச்சு!”
”போட்டோவைப் பார்த்து ஒரு பணக்காரன், தியாகி என்னைய முளுசா கல்யாணம் பண்ணிக்க வந்துரலாமில்ல? விலாசம் என்ன போடுவே?”
”விலாசம் வேண்டுவோர் எழுதவும்னு போடலாம்.”
”அப்படிப் போடாதே. நிறையப் பேர் எளுதுவாங்க. வேற விசியமுன்னு…. ஆமா நீ இன்னா பேர்ல எளுதறன்னு சொன்ன?”
”சுஜாதா!”
”அட, நான் படிச்சிருக்கன்யா, பொம்பாடா இருக்கும். எல்லாத்திலியும் எளுதுவே போல இருக்கே. அது இனாது நடுப்பகல் ரத்தமா? பொம்பாடு கய்யா அது? மத்தியானம் முளுக்க வேல சோலி ஏதும் கடியாதா? லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்யா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்க…. மத்தியான சிநேகிதங்க… வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்க…. எனக்கு கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.”




”உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா?”
”வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.”
”கத்துக்கலாமே.”
”எதுக்கு?”
”அப்படிக் கேட்டா… இது வந்து…



”ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு! லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி? தொரத்திவிட்டாரா? ‘சாவித்திரிம்மா, நீ பெத்து பொளைச்சு ஒடம்பைத் தேத்திக்கிட்டு வர்ற வரைக்கும் வேலை செய்ய வேண்டாம். நான் ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாரு… தாராள மனசு.”




”குழந்தை பிறந்ததா?”
”ம், பொண்ணு! லாட்ஜில்தான் வளருது, சாவித்திரி வேலைக்குத் திரும்பிச்சில்ல…”
”லாட்ஜிலயா? இங்கயா?”
”ஆமா… எங்க எல்லாருக்கும் குளந்தய்யா அது!”
”அப்பா யாருன்னு…”
”திருப்பதி வெங்கடாசலபதிதான் அப்பா! நல்லா கொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா!”
”இப்ப வேண்டாம், பட்…. ராத்திரி வேளைல குழந்தையை…”
”ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும்! அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே? இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம்! ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ? நேரா இங்கதான் தகரப் பொட்டியும் மலாய் செருப்புமா வந்துட்டான். சாவித்திரிதான் போயிருந்தா. குழந்தையைக் கட்டிலுக்கடில படுக்கவெச்சுட்டிருந்தா…”
”பாதில என்ன ஆயிருக்கு. குழந்தை முளிச்சுக்கிட்டுப் பெரிசா அழ ஆரம்பிச்சுருச்சு. அந்தாளு ஒரேடியா பயந்து படக்குன்னு எந்திரிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். ‘இன்னாடாது, இப்பதானே ஆரம்பிச்சம், அதுக்குள்ள குழந்தையா?’ன்னு ஆயிருச்சோ என்னவோ! ஒத்தக்கால் செருப்பை போட்டுக்காமயே ஓடிப் போய்ட்டான். எப்படி டமாசு! இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ?”




”இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க!”
”அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு  இல்லிய்யா.”
”உங்களுக்குள்ள போட்டி உண்டா?”
”சேச்சே… இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.”
”முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்?”
”நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.”
”உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க?”
”பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்…. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.”
”அப்படியா, அவனுக்கு…”
”புத்தி சொன்னியான்னு கேக்கறியா? அதான் இல்லை. போய் பண்ணிக்கடான்னு சொல்லிட்டேன்.”
”அப்புறம் என்ன ஆச்சு?”
”அதும் டமாசு கதை. இதபாரு, இந்த மாலை அவந்தான் கொடுத்தது, எவ்வளவு இருக்கும்?”
”அவன் என்ன ஆனான்..?”
”சொல்றேன், கொஞ்சம் இரு. ஆளு வந்திருச்சு. சித்த நேரத்துக்கு தொடரும் போட்டு வையி…. போய்ட்டு வந்து சொல்றேன்…”
”என்ன அதுக்குள்ள வந்துட்ட..?”
”அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்… எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே?”
”அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன?”
”அதுவா…. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனா… அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.”
”ரெய்டா..?”
”ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.”
”எப்பவாவது அகப்பட்டிருக்கியா?”
”ஓ, எத்தினியோ வாட்டி.”
”அகப்பட்டா அடிப்பாங்களா.?”
”சேச்சே…. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா?’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.”
”பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.”
”ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல?”
”ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே?”




”பாத்தியா, மறந்தே போய்ட்டேன். ஒரு நாள் ராத்திரி என்னாச்சு, மணி எட்ரை இருக்கும். இந்தாளு வரான் திருதிருன்னு முளிச்சிக்கிட்டு. ஆளு புதுசு. பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். சட்டை கால்சராயெல்லாம் ஒளுங்கா மாட்டிக்கிட்டிருக்கான். நான் நாலஞ்சு பேரு வரிசையா நிக்கிறோம். பேசாமா நிக்கிறான். ‘இன்னா தம்பி, சீக்கிரம் சொல்லு. எங்களுக்கும் வேற வேலை இருக்கு பாரு’ன்னேன். நிமிர்ந்து ஒரு தபாகூடப் பார்க்க மாட்டான். ‘ஊம், எதுக்கு வந்த?’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்?னு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவா?’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க?’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டறான். அம்மாடின்னு ���யிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு!


‘அச்சடிக்கிறியா?’ன்னு கேட்டன். சரசு, சாவித்திரி, ராமம்மா மூணு பேரும் உஷாராய்ட்டாங்க. இன்னா வலை போடறாளுக, சாலாக்குப் பண்றாளுக. உதட்டைக் கடிக்கிறா, உச்சுங்கறா, மார் பொடவை பறக்குது. ராமம்மா படக்குனு போயி சட்டை டிராயர் மாத்திக்கிட்டு வந்துருச்சு. அந்தப் பையன் யாரையும் பாக்கல. ‘யாராவது ஒருத்தர் சொல்லுப்பா, சீக்கிரம்’னேன். திடீர்னு என்னைப் பார்த்து, ‘நீ வா!’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமே?




நான் அவனைக் கூட்டிட்டு ரெண்டாம் நம்பர் ரூம்பில்ல அதான் கொஞ்சம் டீஜென்ட்டா இருக்கும். அங்க இட்டாந்தேன். அவன் உள்ள வந்து படுக்கை மேல உக்காந்துகிட்டான். நான் கதவைச் சாத்திட்டு தலையை முடிஞ்சுக்கிட்டு, மேலாக்கை உதறிட்டு பக்கத்தில் போய் உக்காந்துகினேன். முகத்தைத் திருப்பினேன்…. பொட்டை மாதிரி அளுதுகிட்டே இருக்கான். ‘எதுனாச்சியும் சாப்பிடறியா? பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா?’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்?’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.




‘ஏன்யா?’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்…. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போய் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது?’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.”




”அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா?”
”அதையேன் நான் கேக்கணும்? அவனுக்கு என்ன துக்கமோ, என்ன தாளாமையோ…. அதெல்லாம் கஸ்டமருங்ககிட்ட நான் வெச்சுக்கிறதில்லை.”
”அவனைப் பததி அப்புறம் ஏதும் தெரியலையா?”
”ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருது…. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.”
”சவ ஊர்வலமா?”
”இல்லை, கல்யாணம். வடக்கத்திக்காரன் போல, சேட்டு போல இருக்கு. குதிரை மேல தலைல கும்பாச்சியா வெச்சுக்கிட்டுப் போறான். கல்யாணம்தானய்யா அது. ஏன்னா உயிர் இருந்தது. என்ன சிரிக்கிறே?”
”தேங்க்ஸ்! உன் டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்!”
”எனக்குன்னு டயமே கிடையாதுய்யா!”
”நான் வரட்டுமா?”
”இரு.”
”என்ன…”
”இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியே… நான் உன்னைக் கேக்க வேண்டாமா?”
”கேளு தாராளமா.”
”நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா?”
”ஆமாம். அப்படியே மாத்தாம.”
”அதுக்குப் பணம் கொடுப்பாங்களா?”
”ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.”
”நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே?”
”அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா?”
”இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா?”
”போட்டி இல்லை, பேட்..!”
”சரி, பேட்டி.”
”நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்கு…”
”பொதிஞ்சிருக்குன்னா?”
”மறைஞ்சிருக்கு.”
”என்ன காரணம்?”
”நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்…னு?”
”காசு சம்பாதிக்க.”
”நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணி… ஆல் ரைட். நீதான் இந்த தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தே… உன்னைக் கேக்கறேன். நீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா?”
”தப்பா… எனக்குப் புரியலை.”
”பாவம்னு புரியுதா?”
”இப்ப நான் செய்யறது பாவம்கறியா… அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது!”
”தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவ… ராணி! எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு? வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா? உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க!”
”ஆ! அடி ஆத்தே!”
”இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணி… இப்ப உன்னை ‘ரெய்டு’ பண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்…”
”அவங்ககூட பொண்ணுதான். நீ இன்னாங்கறே? எனக்குப் புரியலியே.”
”ராணி! ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ. உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டு…”
”எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி! எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே? இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா?”
”ஆமா.”
”எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா?”
”அதுக்குன்னு சில மறுவாழ்வு ஸ்தாபனங்கள்லாம் இருக்கு.”
”மறு வாள்வா. பாருய்யா, அதையும் நான் பாத்துட்டு ஆறு மாசம் இருந்துட்டு வந்திருக்கேன்! சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா? பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா? எளுதுவியா?” ”வேண்டாம்.”
”மறு வாள்வு, மறு வாள்வுகங்கறியே இன்னாய்யா அது?”
”இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா? நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னு…”
”இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.”
”காரணம் அதில்லை. சூழ்நிலைதான்…. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால? சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா?
”அது என்ன மிஷினி?”
”சரிதான்! நான் வரட்டுமா?”
”இருய்யா, ஒரே ஒரு சின்ன விசயம் பாக்கி இருக்குது.”
”சொல்லு!”
”இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமா… என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..?”
”எனக்குக் கல்யாணம் ஆய்டுச்சே…”
”இப்ப கல்யாணம் ஆவலைன்னு வெச்சுக்க.”
”….”
”ஏன் பேசாம இருக்கே? பதில் சொல்லத் தெரியலை. அப்ப என்னைப்பத்தி பத்திரிகையிலே எழுதப் போறல்ல, இதையும் எளுது. மகா சனங்களே! ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங் கன்னா பெங்களூர் கிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டா யண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும். உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்… வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க இத இப்படியே போடுய்யா.”
”சரி.”

Monday, July 23, 2012

நயாகரா-சுஜாதா - சிறுகதை

http://www.kirukkal.com/images/sujatha_OEA_old_1.jpg 

எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே எனக்கு ஞமஙம என்று மூக்கில் உறுத்தும். அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதற்குள் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும்.



இருந்தாலும் அமெரிக்காவுக்குப் போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால்,

1. ஜன்மம் சாபல்யம் அடையாது.

2. திரும்பி வந்ததும் ஜனங்கள் வெறுப்பேற்றும் (”என்ன சார் அவ்வளவு தூரம் போயிட்டு நயாகரா பார்க்கலை… உச்… உச்… உச்” எக்ஸெட்ரா).

எனவே, நயாகரா பார்க்கச் சென்றோம்.

அமெரிக்காவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக எங்களிடம் ஒரு ‘ஸீ யு.எஸ்.ஏ.’ ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் டிக்கெட் இருந்தது. ரொம்ப சல்லிசான டிக்கெட். அதை வைத்துக்கொண்டு அந்த கம்பெனியின் ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம், புறப்பட்ட இடத்துக்குத் திரும்ப வராத வரையில். ‘பரவாயில்லையே’ என்று வியக்காதீர்கள். இந்தச் சுதந்திர சீட்டில் ஒரே ஒரு சிக்கல். பெரும்பாலான ஃப்ளைட்டுகளுக்கு அட்லாண்டா போய்த்தான் போக வேண்டும்.

உதாரணம் நியூயார்க்கிலிருந்து பஃபலோ போவதற்கு, நியூயார்க் அட்லாண்டா, அட்லாண்டா பஃபலோ என்ற ரூட்டில்தான் போக முடியும். இது சென்னையிலிருந்து பெங்களூரு போக, சென்னை டெல்லி, டெல்லி பெங்களூரு போகிற மாதிரி! எனவே அவர்கள் ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை என்பது உங்களுக்குத் தெள்ளென விளங்கும் (‘தெள்’ என்றால் என்ன?) எனவே பத்து நகரங்களைப் பார்ப்பதற்குள் எத்தனை முறை அட்லாண்டா பார்த்திருப்போம் என்று நீங்கள் சுலபமாகக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அட்லாண்டா விமான நிலையத்தில் சிப்பந்திகள் அனைவரும். ”என்ன அண்ணா, மறுபடியும் வந்துட்டேளா” என்று விசாரிக்கும் அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டார்கள்.


நான் சொல்ல வந்தது நயாகரா பற்றி அல்லவா? நயாகராவுக்கு பஃபலோதான் விமான நிலையம். அங்கே போக வழக்கம் போல அட்லாண்டா விமான நிலையத்தில் காத்திருந்தபோது, பொடி நடையாகப் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று சென்று திரும்பியபோது, என் மனைவியின் அருகில் இரண்டு இந்தியர்கள் உட்கார்ந்துகொண்டு கையைத் தீவிரமாக ஆட்டிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிட்டே போனதில், ஒருவர் பிஸ்வாஸ். மற்றவர் சின்ஹா. பெங்காலிக்காரர்கள்.


இந்தியர்கள் எந்த மாநிலத்தவர்கள் என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒரு வாக்கியம் இங்கிலீஷ் பேசினால் போதும். மலையாளியை காலேஜ் என்று சொல்லச் சொன்னால் மதி. பெங்காலிகள் போல்ட்டை வோல்ட் என்றும் வோல்ட்டை போல்ட்* என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பெயருக்கும் ஓகாரம் சேர்த்துக்கொண்டு, ரங்கராஜன் என்பதை ரொங்கொரோஜன் என்பர்.

பிஸ்வாஸ், கல்கத்தாவில்ரொம்ப பிஸியான சர்ஜன் என்று தெரியவந்தது. சின்ஹா, மெட்டலர்ஜிஸ்டோ என்னவோ. இருவரும் லண்டனில் சந்தித்துக் கூட்டணி அமைத்துக்கொண்டு அமெரிக்கா வந்திருக்கிறார்கள். எங்களைப் போலவே இடங்களைச் சுற்றிப் பார்க்க ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கைவசம் வைத்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது, ”சே! டிக்கெட்டா இது! அட்லாண்டா அட்லாண்டா!” என்றனர். ரொம்ப நொந்து போயிருந்தார்கள். சக சோகத்தால் சினேகிதமாகிவிட்டோம். இப்போது நயாகரா பார்க்க பஃபலோ போகிறோம் எனக் கேட்டதும் சந்தோஷப்பட்டு எங்களை ஆட்கொண்டு. ”கவலைப்படாதே. நாம் எல்லோரும் சேர்ந்தாற் போலப் போகலாம்” என்றனர். என் மனைவியும் ஒப்புக்கொள்ள, எனக்கு வயிற்றைக் கலக்கியது.


எனக்குத் தெரிந்த பெங்காலி நண்பர்கள் எல்லோரும் நல்லவர்களே. அவர்கள் சரோட் வாசிப்பார்கள். பிரிட்ஜ் ஆடுவார்கள். கவிதை எழுதுவார்கள். சங்கீதம், நடனம் எல்லாம் சரிதான். ஆனால், சுலபத்தில் கோபித்துக்கொண்டுவிடுவார்கள். கொல்கத்தாவில் ஒரு பெங்காலி நண்பருடன் பார்ட்னராக பிரிட்ஜ் ஆடிக்கொண்டு இருக்கும்போது, நாலு ஸ்பேடை டபிள் பண்ணி ஆயிரத்து இருநூறு பாயின்ட் கொடுத்துவிட்டேன் என்று, என் மேல் பெஞ்சு நாற்காலியை வீசினார். அதனால் இந்த பெங்காலி தமிழ் நட்பு, நயாகரா வரை தாங்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயே உறவு அவ்வளவு பேப்பரில் போடும்படியாக இல்லை. சிநேகிதம் மெல்லிய கண்ணாடி போலிருந்தது. பிஸ்வாஸ் எதையாவது சொன்னால் அதற்கு நேர்மாறாக சின்ஹா சொல்ல, முணுக்கென்று சண்டை வந்துவிடும். சீ! நீ ஒரு மனுஷனா என்கிற தொனியிலே பெங்காலியில் ‘கீ!’ ‘கீ!’ என்று மூக்குக்கு மூக்கு தொட்டுக்கொண்டு எதிர்ப் பேச்சு துவங்கிவிடும்.

இருந்தும் இரண்டு பேரும் வலுக்கட்டாயமாக எங்கள் தோழமையை நாட, அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். ப்ளேனில் நாலு பேரும் வரிசையாக உட்கார்ந்துகொண்டோம். என் மனைவியிடம் சின்ஹா, ‘என்ன என்ன வாங்கினாய்’ என்று விசாரிக்க, நான் எழுத்தாளன் என்றதும் ‘சுனில் கங்குலியைத் தெரியுமோ?’ என்று பிஸ்வாஸ் கேட்க, ‘நான் தெரியாது’ என்று சொல்ல, நீ என்ன எழுத்தாளன் என்கிற மாதிரி பார்த்தார். பத்து நிமிஷத்துக்குப் பேசவில்லை. இவர்களிடமிருந்து பஃபலோவில் இறங்கின மாத்திரம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் வந்துவிட்டது.


இறங்கினவுடன், ‘வா’ என்று மனைவியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாகேஜ் செக்குக்கு ஓடிப் போய் சடுதியில் பெட்டி படுக்கைகளை விடுவித்துக்கொண்டு கலர் கலராக நகரத்துக்குப் போகும் பஸ்சுக்குக் காத்திருக்க, என் பின்னாலேயே, ”ரொங்கொரோஜன்!”

”ஓ, ஹலோ மிஸ்டர் பிஸ்வாஸ்! ஐ வாஸ் லுக்கிங் ஃபார் யூ!”

”ஓட்டல் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.”

”அப்படியா சந்தோஷம்… ஸீ யூ!”

”உங்கள் இருவருக்கும் சேர்த்துத்தான்!”

”வாடகை ஒரு வேளை அதிகம் இருக்கப் போகிறது. நாங்கள்…”

”வாடகை பதினஞ்சு டாலர்!”

பதினைந்து டாலர் என்பது அமெரிக்காவில் ரொம்ப சீப். ”ஊருக்கு வெளியே இருக்குமோ என்னவோ?”

”சேச்சே! நயாகராவிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறதாம்!”

”சன்னலைத் திறந்தால் நயாகரா தெரியுமாம்” என்றார் சின்ஹா. என்னால் நம்ப முடியவில்லை.

”ஓட்டல் பேர் என்ன?”

கார்டைக் காட்டினான். ”இந்த பஸ் போகிற வழியில் இறக்கிவிடுமாம். டிரைவர்தான் சொன்னான். அமெரிக்காவில் கொஞ்சம் தீர விசாரித்தால் செலவு இல்லாத இடம் கிடைக்கும்.”

நான் என் மனைவியைப் பார்க்க அவள், ”அங்கேயே போகலாம்” என்றாள்.

”வாருங்கள். எதற்கு முப்பது டாலரும் நாற்பது டாலரும் கொடுக்க வேண்டும்?” என்றார் பிஸ்வாஸ். பஸ்ஸில் ஏறினோம். பிஸ்வாஸ், சின்ஹா, நான், மனைவி என்ற நாலு பேரும் இ.பிரியாத நண்பர்கள் போல உட்கார்ந்துகொள்ள, ‘பஸ் டிக்கெட் நான்தான் வாங்குவேன், நான்தான் வாங்குவேன்’ என்று சண்டை போட்டு டிக்கெட் ஐந்து டாலர் என்று தெரிந்ததும், ‘ஓட்டல் போய் செட்டில் பண்ணிடலாம்” என்றார்கள்.


பஃபலோ நகரம் பிழைப்பதே நயாகராவுக்கு வரும் டூரிஸ்ட்டு களால்தான். எங்கு திரும்பினாலும் நயாகராவுக்கு வழி போட்டிருந்தது. பஸ் வெண்ணெய் போலச் செல்ல, தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சி சுந்தரமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அங்கங்கே ஒளிந்துகொண்டு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்தது. நயாகரா, கனடா அமெரிக்க எல்லையில் இருப்பது உங்களில் ஜியாக்ரஃபி தெரிந்தவருக்குத் தெரிந்திருக்கும். கனடா சைடிலிருந்து பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கேள்வி. எங்களிடம் கனடியன் விசா இல்லை. அதற்கு மனுப் போடாமலிருந்தது என் மனைவிக்குக் குறை. ஷேக்ஸ்பியரின் ரோஜா போல, ஒரு நீர்வீழ்ச்சியை கனடாவிலிருந்து பார்த்தாலும் அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும் அது நீர்வீழ்ச்சிதான் என்பது என் சித்தாந்தம். பிஸ்வாஸைக் கேட்டேன், ”கனடியன் விசா இருக்கிறதா?”

”இல்லை. ஆனால், தற்காலிகமாக விசா தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

”நான் கேள்விப்பட்டது, அதெல்லாம் கிடையாது. ஒரு வாரம் முந்தி மனுப் போட்டால்தான் கிடைக்கும் என்று.”

”கேட்டுப் பார்க்கலாம்! கொடுக்காமல் போய்விடுகிறார்களா, பார்த்துவிடலாம்.”

பஸ் டிரைவர் சிரித்துக்கொண்டே நால்வரையும் இறக்கிவிட்டு, ”அதோ பார் ஓட்டல்” என்று காட்டிவிட்டு விலகினான்.




http://newspaper.li/static/a5cfc9e0b3215237028ce0de10e3bf35.jpg

பிரமாதமாகத்தான் இருந்தது ஓட்டல் கட்டடம், சொன்னதெல்லாம் சரிதான். நயாகரா நீர்விழ்ச்சி அருகிலேயே இருப்பது தெரிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ”பிஸ்வாஸ் நீங்கள் சரியாகக் கேட்டுக்கொண்டீர்களா? தினத்துக்குப் பதினைந்து டாலர் சொன்னானா? மணிக்கு பதினைந்து டாலரா?”

”தினத்துக்குத்தான். நீ வாயேன்” என்றார்.

அந்தப் பளபளப்பான ஓட்டல் கட்டடத்தில் போய் விசாரித்ததில் நாங்கள் தேடிச் சென்ற ந்யூ மெட்ரோ அதில்லை என்றும் அதற்கு அடுத்த கட்டடம் என்றும் தெரிய வந்தது.

”அடுத்த கட்டடமா? கட்டடமில்லையே! காலி மனையல்லவா இருக்கிறது?”

‘உன்னிப்பாகப் பாருங்கள் தெரியும்.”

பார்த்ததில் சின்னதாக ஒரு அமெரிக்கக் குடிசை போல ஒரு கட்டடம் தெரிந்தது. அதன் மூஞ்சியையே மறைக்குமாறு ‘ஓட்டல் மெட்ரோ வேகன்ஸி’ என்று சாக்பீஸில் எழுதியிருந்தது. அருகே சென்று பார்த்ததில் ஒற்றை மாடியுடன் மே ஃபிளவர் தினங்களில் கட்டிய கட்டடம் போல ஒன்று தெரிந்தது. வாயிற் கதவில் மணிப் பொத்தான் இருந்தது. அழுத்தியதில் சப்தம் வரவில்லை. கதவைத் தட்டினதில் லேசாகப் பொடி தூவித் திறந்துகொண்டது. உள்ளே டெலிவிஷன் அருகில் படுத்திருந்த நாய் என்னை ஒற்றைக் கண்ணால் பார்த்தது. இதுதான் ஓனரோ என்ற சந்தேகம் உடனே தீர்ந்தது. சுமார் எண்பது வயசு மதிக்கத்தக்க ஒரு கிழவர் மூக்கைத் தக்காளி நிறத்துக்குத் தேய்த்துக்கொண்டு வந்தார்.


”இங்கே ரூம் இருப்பதாக..?”

‘ட்வென்டி டாலர்ஸ்!”

”பஸ் டிரைவர் பதினைந்து என்று சொன்னான்.”

”ஓ.கே, ஃபிஃப்டீன்டாலர்ஸ்!” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து விரைவில் பதினைந்து பதினைந்து டாலருக்கு இரண்டு ரசீது எழுதி, ”ஐ டேக் அட்வான்ஸ்” என்றார்.

”ரூமைப் பர்க்கலாமா” என்றார் சின்ஹா.

”குட் ரூம், பே ஃபிஃப்டீன் டாலர்ஸ்.”

அட்வான்ஸாகப் பதினைந்து டாலர் கொடுத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட அறையை நோக்கிப் போனோம். சாவியைத் துவாரத்தில் தொடுவதற்கு முன்னமேயே கதவு திறந்துகொண்டது. உள்ளே ரூமை ஏழில் எட்டு பாகம் ஒரு கட்டில் அடைத்திருந்தது. குட்டியாக மேசை போட்டு, அதன் மேல் மேசை விளக்கு வைத்திருந்தது. உத்தரத்தில் இருந்த விளக்கைப் போடுவதற்கு ஸ்விட்சுடன் ஒரு கயிறு கட்டியிருந்தது. அதை இழுத்துப் பார்த்ததில், மாடியில் தடால் என்று உருண்ட சப்தம் கேட்டது.
பிஸ்வாஸ் என் அறையை எட்டிப் பார்த்து, ”உன் அறையும் இப்படித்தானா? ரொம்ப மோசம், இதற்குப் போய் பதினைந்து டாலரா? வழிப்பறி. கிழவனிடம் போய்ப் பணத்தைக் கேட்டு வேறு ஓட்டலுக்குப் போகலாம்” என்றார்.

”பாத்ரூம் எங்கே இருக்கிறது?” என்று என் மனைவி கேட்க, அந்த ஓட்டலில் தங்குபவர்கள் அத்தனை பேருக்கும், கிழவனுக்கும், நாய்க்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் என்பது தெரிய வந்தத
ு.
”வேண்டாம். வேறு இடத்துக்குப் போய்விடலாம்” என்றான் பிஸ்வாஸ்.

”நீதானே இங்கே அழைத்து வந்தாய்” என்றார் சின்ஹா.

”நீதான் பதினைந்து டாலரில் அறை வேண்டும் என்றாய்” என்றார் பிஸ். ‘நீதான் நீதான்…’ என்று இரண்டு பேரும் அடிதடிக்கு வந்துவிட்டார்கள். இடம் போதவில்லை.

”இது என்ன சோப்பா, மெழுகுவத்தியா?” என்று டேபிள் விளக்கை சின்ஹா போட்டுப் பார்க்க, ‘ஊய்’ என்று ஷாக் அடித்து விளக்கிலிருந்து பிசுபிசு என்று புகை வந்தது. விளக்கின் அடியில் ”டோண்ட் ஸ்விட்ச் ஆன்” என்று எழுதியிருந்தது. ”அமெரிக்காவில்கூட இந்த மாதிரி ஓட்டல் இருக்கிறது ஆச்சர்யம்தான்” என்றேன்.

”எங்கே அந்தக் கிழவன்?” என்று கீழே போய் விசாரிக்கப் போன பிஸ்வாஸ் உடனே திரும்பிவிட்டார். ”நாய் துரத்தறது” என்றார்.

”பதினைந்து டாலர் கொடுத்தாகிவிட்டது. ராத்திரி படுக்க மட்டும்தான் இந்த இடம்! என்ன போச்சு? முகம் கழுவிக்கொண்டு வாருங்கள். நயாகரா போய்ப் பார்க்கலாம்” என்றேன்.

நாய் போனதும் சின்ஹா பாத்ரூம் போய்விட்டார். கால்மணி கழித்து பிஸ்வாஸ் பாத்ரூம் வாசலில் காத்திருப்பது தெரிந்தது. ”இந்த ஆள் எப்போதும் இப்படித்தான். பாத்ரூம் போனால் ஒரு மணி நேரம்!” என்றார்.



http://image.shutterstock.com/display_pic_with_logo/205801/205801,1215720645,5/stock-photo-edge-of-niagara-falls-in-winter-14743486.jpg

”சேச்சே ! இவ்வளவு மோசம் என்று தெரியாமல் போய்விட்டது. ராஸ்கல் அந்த டிரைவரை உதைக்க வேண்டும். சின்ஹா! என்ன தூங்கிவிட்டாயா!”
அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று என் மனைவியை அவசரப்படுத்தி, வேறு ரூட்டாக நடந்து போய் நயாகரா பார்க்கச் சென்றோம். அங்கே நயாகராவின் அடிமடிக்கே அழைத்துப் போகும் படகுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு க்யூவில் போய் நின்றால், ”ரொங்கோ ரோஜன்” என்று கேட்க பின்னால் சின்ஹாவும் பிஸ்வாசும்!


நயாகராவில் எத்தனை காலன் ஒரு நிமிஷத்துக்கு ஊற்றுகிறது. எத்தனை மெகா வாட் சக்தி பண்ணுகிறார்கள், எத்தனை அழகு என்றெல்லாம் விவரம் கொடுத்து உங்களை அறுக்க விரும்பவில்லை. நயாகராவில் எனக்குப் பிடித்தது படகு அதன் அடியில் செல்லும்போது ஆரவாரமும் நம்மேல் படரும் குளிர் மழையும்தான். இந்தக் குளிர் மழையில் சின்ஹாவை பிஸ்வாசும், பிஸ்ஸை சின்னும் படம் பிடிக்க, காமிரா லென்ஸ் முழுவதும் நீர் கோத்துக்கொண்டுவிட, ‘சொன்னேன். கேட்டாயா?’ என்று நயாகராவைவிடச் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். படகைவிட்டு மேலே வந்து நாங்கள் கழன்றுகொள்ள விருப்பப்பட, ”வா கனடா பகுதிக்கு நடந்து போகலாம்” என்றார் பிஸ்வாஸ். ”வேண்டாம் விசா கொடுக்க மாட்டார்கள்” என்று சொல்ல, ”யார் சொன்னது? பாஸ்போர்ட்டுகளை சரண்டர் பண்ணிவிட்டால் ஒரு மணி நேரத்துக்கு அனுமதி கொடுப்பார்கள். அங்கேயிருந்து பார்ப்பதுதான் உத்தமம்” என்றார்.


நிஜமாகவே இங்கிருந்து தெரிந்த கனடியப் பகுதி கலகலப்பாகத்தான் இருந்தது. வ்யூவிங் டவர், வண்ண வண்ண விளக்குகள், ஜிலுஜிலுப்பு எல்லாமாக ஆசை காட்டியது. போய்த்தான் பார்க்கலாமே என்று பாலத்தைக் கடந்து கனடியப் பகுதிக்குச் சென்றோம். வாட்டசாட்டமாக ஒரு போலீஸ்காரி, ”லெட் மி ஸீ யுவர் பாஸ்போர்ட்ஸ்” என்றாள். ஆளுக்கு ஐந்து சென்ட் வாங்கிக்கொண்டாள். ”இங்கே நில்லுங்கள் பிஸ்வாஸ்” என்று பவ்யமாகச் சொன்னாள். ‘பார்த்தாயா!’ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தார். காத்திருந்தோம். அந்தப் பெண் மற்றொரு அதிகாரியைக் கொண்டுவந்து எங்களைச் சுட்டிக்காட்டினாள். பற்பல அமெரிக்கர்கள் உற்சாகமாக லைனைக் கடந்து சென்றுகொண்டிருக்க, எங்கள் நாலு பேரை மட்டும் தண்டையார்பேட்டை ஐ.டி. ஆஸ்பத்திரியில் போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். மற்றொரு வெள்ளைகார ஆபீஸர் வந்து இடது கையால் எங்கள் பெயர்களை ஒரு ஃபாரத்தில் எழுதி நிரப்பி, ”விசா இல்லை. அது இல்லாமல் கனடிய மண்ணில் அனுமதி கிடையாது. திரும்ப அமெரிக்கா செல்லுங்கள்” என்றார்.

சின்ஹாவுக்குக் கோபம். ”எதற்காக எங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல முடியுமா?”

”விசா இல்லை. அனுமதி இல்லை.”

”நாங்கள் இந்தியர்கள் என்பதால்தானே இந்த மாதிரி நடத்துகிறீர்கள்?”

”அதெல்லாம் இல்லை.”

”அமெரிக்கர்களை மட்டும் அனுமதிக்கிறீர்கள்?”

”அவர்களிடம் விசா இருக்கிறது.”

”எப்படித் தெரியும்?”

”எங்களுக்குத் தெரியும். பாருங்கள். அதிகம் வாதாடினால் உங்களைச் சிறைக்கு அனுப்புவோம்” என்று காகிதங்களை எங்களிடம் கொடுத்தார்.

”இந்தக் காகிதங்களை நயாகராவிலேயே போடுகிறோம்” என்று பிஸ்வாஸ் சிரித்தார்.

”அது உங்கள் இஷ்டம்! இந்தக் காகிதம் இல்லையென்றால் மறுபடி அமெரிக்காவில் அனுமதி கிடைக்காது. உங்கள் வாழ்நாளை இந்தப் பாலத்தின் மத்தியிலேயே கழிக்க விருப்பமென்றால் சரி.”
நான் அவசரமாகக் காகிதங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.

சின்ஹா திரும்பும் வழியெல்லாம், ”இந்தியர்கள் என்றால் எவ்வளவு மட்டமாக ட்ரீட் பண்ணுகிறார்கள்” என்று அரற்றிக் கொண்டே வந்தார்.

”நாம் அந்த மாதிரி நடந்துகொள்கிறோம்” என்றார் பிஸ்வாஸ்.

”நாம் என்ன தப்பாக நடந்துகொண்டுவிட்டோம்?”

”இல்லீகல் இமிக்ரேஷன்.”

”அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?”

”உனக்குத்தான் தெரியுமோ?”

இருவரும் கனடிய அமெரிக்க எல்லைக்கோட்டில் நின்று கொண்டு இரைச்சலாகச் சண்டை போட்டுக்கொண்டார்கள். கம்யூனிஸம், மார்க்ஸிஸம், விவேகானந்தா… என்று என்னென்னவோ வார்த்தைகள் எல்லாம் கேட்க, நான் மனைவியை அழைத்துக்கொண்டு விரைவாக நடக்க, சட்டென்று பிஸ்வாஸ், ”ரொங்கொரோஜன் எங்கே போகிறாய்?” என்று காலரைப் பிடித்து நிறுத்தினார். விதியே என்று நடந்து அமெரிக்கப் பகுதிக்கு வந்தோம்.

சின்ஹா தாகமாக இருக்கிறது என்று கோக்கோ கோலா மெஷினில் ஒரு ஐம்பது சென்ட் நாணயத்தைப் போட்டார். அமெரிக்காவில் இருந்த ஒரே ஒரு பழுதடைந்த கொக்கோ கோலா மெஷின் அது. காசை வாங்கிக்கொண்டு சும்மா இருந்தது.

சின்ஹா அதை அடித்து உதைத்து பற்பல சித்ரவதைகள் செய்து பார்த்தார். ஹ§ம்! போட்ட காசையோ, கோக்கோ கோலாவையோ தர மாட்டேன் என்று சொல்லிவிட்டது.

”அமெரிக்கர்கள் இத்தனை விஞ்ஞான முன்னேற்றம் அடைந்து என்ன பிரயோசனம்? ஒரு கோக்கோ கோலா மிஷினைச் சரியாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையே!”

”உனக்கு ஒரு கோக்கோ கோலா கிடைக்கவில்லை என்றால் மேற்கத்திய நாகரிகத்தைச் சாடுவது என்ன நியாயம்?”

”இதெல்லாம் வைத்து என்ன பிரயோசனம்? ஒழுங்காக வைக்க வேண்டும், இல்லை மிஷின் வைக்கவே கூடாது.”

”இந்த ஒரு மிஷின் வேலை செய்யவில்லை. எத்தனை மிஷின் வேலை செய்திருக்கிறது அதாவது எத்தனை கோக் சாப்பிட்டிருக்கிறோம்.”

”தட்ஸ் நாட் தி பாயின்ட்.”

”தட் இஸ் தி பாயின்ட்!”

”நீ ஒரு பூர்ஷ்வா… அடிவருடி!”

”நீ ஒரு சிவப்பு எலி…”

யார் சிவப்பு எலியோ, இரண்டு பேருக்கும் முகம் சிவந்து போனதென்னவோ வாஸ்தவம்.

கம்யூனிஸம் காபிடலிஸம் என்று குடுமியைப் பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் நான் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து, ”வா ஓடலாம்!” என்றேன்.

அதிகாலை எழுந்து சொல்லாமல்கொள்ளாமல் பஸ் ஏறி திரும்ப ப்ளேன் பிடித்து, உட்கார்ந்ததும் பெருமூச்சுவிட்டேன்.

”அப்பாடா ஒழிஞ்சாங்க.”

”ரொங்கோரோஜன்!” என்று பின் ஸீட்டில் ஒரு குரல் கேட்டது!


http://www.niagarafallslive.com/images/HorseshoefromSkylon.jpg

Saturday, July 21, 2012

ஓர் உத்தம தினம்- சுஜாதா - லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை

ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.


சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.


என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!


”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.


”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”


”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”

”கிடையாது.”

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.


”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.


”தேங்க்ஸ் மஞ்சு.”

”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”


”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”


”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”

”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.

”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”

”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”

டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.

”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”

”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.

”கையெடுங்க. சொல்றேன்.”

”எடுத்தாச்சு.”

”அந்தக் கை.”

”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”

”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”

”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.

”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”

”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”

”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.


பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.

”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”

”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”

”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”

”கோயிலுக்குப் போயாகணும்.”

”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”

”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”

”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”

”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”

”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”

”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.

”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”

”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”

மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும், சொல்ல வேண்டாம்.”

”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”

”சே, புத்தி போறதே!”

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.


கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” 


”தேங்க்யூ கர்னல்.”


”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”

”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.

”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”

”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.

”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”

”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”

”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.

”ஆமாம்மா.”

”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”

அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.

”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”

”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”

”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.

”எங்கேயாவது!”

”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”

‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”

”படிங்க.”

”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…

”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!



சி.பி -  ( accident to her husband)