Showing posts with label KALKI. Show all posts
Showing posts with label KALKI. Show all posts

Monday, December 17, 2012

உலக சாதனை - அந்தமான் ஆர்யன் - எவரெஸ்ட் சிகரம்

எவரெஸ்ட் சிறுவன்

வாவ் ஆர்யன்!

ரமணன்

நினைவிருக்கிறதா... ‘ஆனந்தபுரத்து வீடுபடத்தில் சுருட்டை முடி தலையோடு திகிலூட்டிய சிறுவன் ஆர்யனை? அதன் பிறகு பல விளம்பரப் படங்களில் நடித்துவிட்ட இந்தக் குட்டிப் பையனுக்கு இப்போது வயது ஏழு. பெற்றோருடன் அந்தமானில் வசிக்கும் ஆர்யன் இந்த ஆண்டு 17,300 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட்டின் பேஸ்கேம்ப் வரை மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறார்.  



உலகிலேயே இப்படி ஒரு சாதனையைச் செய்த சிறுவன் ஆர்யன் தான். நேபாளத்தின் 17900 அடி உயர (நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் போகும் வழியில் இருக்கும்) கல்பத்தர் சிகரத்தில் ஏறி நமது தேசியக் கொடியை நட்டுவைத்து மற்றோர் உலக சாதனையையும் படைத்திருக்கிறார் இந்தத் தமிழ்ப் பையன்.


ஆர்யனின் தந்தை ஸ்ரீநிவாஸ் பாலாஜி இந்தியக் கடற்படை கமாண்டர். தற்போது அந்தமானில் வேலை. இவர் அடிப்படையில் மலையேற்ற வீரர். பூமியின் வட துருவத்தில் ட்ரெக்கிங் செய்தவர். அம்மா ரிக்கியும் அடிக்கடி ட்ரெக்கிங் செல்பவர். பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து டைவ் அடித்தவர்.  


பெற்றோருடனும் ஒரு ஷெர்பா கைடுடனும் எவரெஸ்ட் பேஸ்கேம்ப் வரை ஏறி இருக்கிறார் ஆர்யன். அந்தமான் லெப்டினட் கவர்னர் வாழ்த்தி வழியனுப்ப 250 கி.மீ. பயணத்தை இருபத்துரெண்டு நாட்களில் கடந்திருக்கிறார். கூட பயணித்த புனேவைச் சார்ந்த இன்னொரு மலையேற்றக் குழுவினர் சிலர் களைத்துப்போய் மலையேற்றத்தைக் கைவிடும் நிலையிலிருந்தபோது ஆர்யனைப் பார்த்து ஊக்கமடைந்து தொடர்ந்திருக்கிறார்கள்.


பேஸ்கேம்பில் மைனஸ் 22 டிகிரி குளிரில்கூட பாடல் பாடி அந்தக் குழுவினரை மகிழ்வித்திருக்கிறார் ஆர்யன். எப்படி இந்தச் சிறுவனால் முடிந்தது?


காஷ்மீர், ஹிமாலசலப் பிரதேசத்தின் கடும் குளிர்ப்பகுதிகளில் தங்கவைத்துப் பயிற்சி அளித்திருந்தாலும் அவன் மனோ திடம் எங்களை ஆச்சர்யப்படுத்துகிறது," என்கிறார் தந்தை பாலாஜி. மலையேறுவதில் மட்டுமல்ல நீச்சலிலும் ஆர்யன் கில்லாடி


 அந்தமான் ஆழ்கடலில் 25 அடி ஆழத்தில் ஒரு மணி நேரம் நீந்தி பிரமிக்க வைத்திருக்கிறான். ஏழு வயதுக்குள் எவரும் செய்யாத உலக சாதனை இது. இம்மாதிரி சாகசங்களுக்கு மூச்சு பிடிக்கும் திறன் அதிகம் வேண்டும். அணிந்து கொள்ளும் ஆக்ஸிஜன் ஹெல்மெட் 25 கிலோ எடை என்பதால் 12 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. சிறப்பு அனுமதி பெற்று இதைச் செய்திருக்கிறார் ஆர்யன்.



நிறைய அழகான கலர் மீன்களுக்கு நடுவே நடப்பது ஜாலியாக இருந்தது. அம்மாவுக்காக ஓர் அழகான கலர் சிப்பி எடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் ட்ரெயினர் எதையும் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்" என்கிறார் ஆர்யன்.


ஆர்யன் படிப்பிலும் சுட்டி. இரண்டாம் வகுப்பு. எல்லா பரீட்சைகளிலும் முதல் ரேங்க். மியூஸிக், டான்ஸ் ஸ்கேடிங், சைக்கிளிங்... எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறான்"- பெருமைப்படுகிறார் அம்மா ரிக்கி. இவர் மலை ஏற்றம், காட்டாற்றுப் படகுப் போட்டி, டைவிங் போன்ற சாகஸ விளையாட்டுகளைத் திட்டமிட்டு நடத்திக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


ஆர்யனின் அப்பா பாலாஜி கடலூர் மாவட்ட கலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போதும் அவருடைய பெற்றோரும் உறவினர்களும் அங்கு வசிக்கிறார்கள். ஆர்யன் தாத்தாவுடனும் மாமாவுடனும் தமிழில் பேசுகிறான். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் பிராண்ட் அம்பாஸிடரான ஆர்யன், போலியோ ஒழிப்புக்காக நேபாள அரசின் சிறப்பு விளம்பரத் தூதுவரும்கூட.


கடந்த மாதம் தமிழக கவர்னர் ரோசய்யா இந்தச் சிறுவனை ராஜ்பவனுக்கு அழைத்து கௌரவித்து இருக்கிறார். இந்த ஆண்டு டிசம்பரில் கிளிமஞ்சரோ சிகரத்தையும், 2017இல் எவெரஸ்ட் சிகரத்தையும் தொட திட்டமிட்டிருக்கிறது இந்தக் குடும்பம். இந்த ஆண்டு கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம் பெறப்போகும் இவனின் சாதனையை தமிழக சேனல்களும் மீடியாவும் கண்டுகொள்ளவில்லை என வருந்தும் பெற்றோர் தமிழக முதல்வரிடம் மகனை அறிமுகப்படுத்த நேரம் கேட்டுக் காத்திருக்கிறார்கள்.


ஆர்யனை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் நாகா:

அறையில் நான் கம்ப்யூட்டரில் பிஸியாக இருந்த போது குடுகுடுவென ஓடி வந்து, ‘ ஆம் ஆர்யா , வாட் இஸ் யூவர் நேம்?’ எனக்கேட்டு மடியில் உட்கார்ந்த போது, ஆர்யனுக்கு வயது மூன்றரை. ஆனந்தபுரத்து வீடு படத்துக்காகப் பல குழந்தைகளைப் பார்த்துத் திருப்தியில்லை. ஒரு மாடல் கோ ஆர்டினேட்டர் அனுப்பிய குழந்தை இவன். நான் என் பெயரைச் சொன்னவுடன், ‘ யூ ஆர் டைரக்டர்எனச் சொல்லி என் கம்ப்யூட்டரில் என்ன கேம்ஸ் எல்லாம் இருக்கு எனப் பேசத் தொடங்கி விட்டான்.


படத்தில் அந்தக் குழந்தை கேரக்டர் மிக அழுத்தமானது. நான் சொல்வதைப் புரிந்து சிரமமில்லாமல் செய்து முழு யூனிட்டையே வியக்க வைத்த பையன் ஆர்யன். திறமைகளை வெளிக்காட்ட திறமை வேண்டும். அது ஆர்யனுக்கு இயல்பாகவே இருக்கிறது.

நன்றி - கல்கி , புலவர் தருமி

Saturday, December 08, 2012

பாட்டாளி சொந்தங்களே! - மருத்துவர் ச. ராமதாஸ் - சுய சரிதை - பாகம் 5

பாட்டாளி சொந்தங்களே - 5

தலையெழுத்தைப் படிக்கலாம் வாங்க!

மருத்துவர் . ராமதாஸ்

எந்த நிலையிலும் கட்டுப்பாட்டுடன் இருக்க ஆசைப்படும் என்னைக் கட்டமைத்தது லயோலா கல்லூரியே! புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், சிறப்பான படிப்போடு கூடவே ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது லயோலா.
கல்லூரி மணி அடித்த பிறகு ஒரு நிமிடம் தாமதமாகச் சென்றாலும் அபராதம் கட்டியாக வேண்டும்!
வாரம் ஒருமுறை என்று நினைக்கிறேன்... ‘பெட்ரம் ஹால்எனப்பட்ட ஓர் அரங்கத்தில் மாணவர்களுக்கு நீதிபோதனை (MORAL CLASS) வகுப்பு நடத்துவது வழக்கம். அந்த அரங்கை, ‘ஃபைன் ஹால்’ (FINE HALL) என்றுதான் மூத்த மாணவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.
அதாவது, மாணவர்கள் கட்டிய அபராதத் தொகையைக் கொண்டு கட்டப்பட்ட அரங்கு என அதைக் கிண்டலோடு குறிப்பிடும் அளவில் கல்லூரியில் கட்டுப்பாடு கறாராகக் கடைப்பிடிக்கப் பட்டது.
வேடிக்கையும் கிண்டலும் ஒருபுறம் இருந்தாலும், நீதிபோதனை வகுப்புகள் மாணவர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவின என்பதை மறுக்க முடியாது. அதுபோன்ற மாணவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடிய நீதிபோதனை வகுப்புகளை இந்தக் காலத்துப் பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக நடத்தச் செய்யவேண்டும். முறையான வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவப்பருவத்தில் அது சரியாகக் கிடைப்பது மிக முக்கியமானதாகும்.
புகுமுக வகுப்பில் என்னுடன் படித்த மாணவர்களுள் ஓரிரண்டு பேர் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
புலவர் வகுப்பில் சேரவேண்டும் என்றுதான் நான் முதலில் ஆசைப்பட்டேன். அப்போது விடுதியில் தங்கியிருந்த எனக்கு, என் முதுநிலை மாணவரான மருத்துவர். சொக்கலிங்கம் என்பவர் ஆலோசனை வழங்கினார். என் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேருமாறு அறிவுறுத்தினார்.
அதன்படியே மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துவிட்டு, நேர்முகத் தேர்வுக்காக நான் காத்திருந்தேன். அப்போது இராயபுரம் பகுதியில் மிகப் பிரபலமாக இருந்த இராசரெத்தின நாயக்கர் என்பவரைச் சந்திக்கும் படியும், அந்த ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் அவருக்கு வேண்டியவர் எனவும் சொல்லக் கேட்டு... அவரைச் சந்தித்தேன்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவருக்கு பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தார் இராசரெத்தின நாயக்கர். கடிதத்தோடு நீதிபதியைப் பார்க்கச் சென்றேன்.
நான் பெற்றிருந்த மதிப்பெண்கள் அதிகமாக இருந்தபோதும், ‘உனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சிரமம்என அவர் சொல்லக் கேட்டபோது என் நம்பிக்கை மொத்தமாக தவிடு பொடியானது!
சில நிமிடங்கள் கழிந்த பின்னர் அவர், பக்கத்து அறையில் இருந்த தமது மகனைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு கூறினார். இன்னொரு அதிர்ச்சி எனக்குக் காத்திருந்தது அந்த அடுத்த அறையில்!
ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க உதவுவதாகச் சொன்னார் அவரது மகன். ‘அவ்வளவு பணம் இருந்தால் நான் மருத்துவப் படிப்பையே முடித்துவிடுவேன்என்று என் நிலையை எடுத்துச் சொல்லி விட்டு, அழாத குறையாக வெளியேறினேன்.
மறுநாள் நேர்முகத்தேர்வு. கவலையோடுதான் சென்றேன். தேர்வுக்குழுவில் அந்த நீதிபதி இடம்பெறவில்லை! அவர் கையூட்டு வாங்குவது முதலமைச்சர் காமராசர் அவர்களின் கவனத்துக்குச் சென்றதன் தொடர்ச்சியாக, அன்றைய தினத்துக்கு முதல் நாள் இரவே தேர்வுக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஒருவேளை... அந்த நீதிபதி தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்கலாம். கையூட்டைக் கண்டித்த காமராசரின் உடனடி நடவடிக்கையினால்தான் நான் மருத்துவரானேன் என்றும் சொல்லலாம்.
1958 ஆம் வருடம் சென்னை மருத்துவக் கல்லூரியில், ‘ப்ரி மெடிகல் கோர்ஸ்’ (PRE MEDICAL COURSE) எனப்படும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரிக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் செலுத்துவதற்காக, எங்களுக்கிருந்த நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொடுத்தார் என் தகப்பனார்.
அடுத்த வருடமே மருத்துவப் பட்டப் படிப்பான எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுக்குள் நுழைந்தேன். ‘ரெட் ஃபோர்ட்’ (RED FORT) என மாணவர்களால் குறிப்பிடப்பட்ட உடற்கூறியல் அரங்குக்குள் (அனாடமி தியேட்டர்) நான் நுழைந்த முதல் நாள் இப்போதும் அப்படியே என் மனக்கண்களில் இருக்கிறது!

ஒரு பெரிய கூடத்தில்... மேசைக்கு ஒன்றாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பிணங்கள், கை கூப்பாமல் எங்களை வரவேற்றன. அத்தனையும் உறவினர்கள் யாரும் முன்வந்து உரிமை கோரியிராத ஆதரவற்றோர் பிணங்கள். போதாக்குறைக்கு அரங்கில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்த முழு உருவ மனித எலும்புக்கூடுகளும் காற்றில் அசைந்தபடியே வரவேற்றன!
பிணம் அழுகாமல் இருப்பதற்காக ஃபார்மலின் (FORMALIN) என்ற திரவத்தை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தியிருப்பார்கள். ‘கன்னிங்காம்என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் கூறிடல் (DISSECTION) முறையை ஒரு மாணவர் வரி வரியாகப் படிக்க, இன்னொருவர் அதை வெட்டிக் கூறிடல் செய்ய வேண்டும். தலையையும் கழுத்தையும் இரண்டு மாணவர்கள், கால்களையும் கைகளையும் இரண்டு பேர், மார்பையும் வயிற்றையும் இரண்டு பேர்... என பாகம் பிரித்துக் கொண்டு கூறிட வேண்டும். இப்படி ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஆராய்ந்து பின்னர் நரம்பு, ரத்தக்குழாய், தசைகள், கடைசியில் எலும்புகள் என்ற வகையில் மாறிமாறி ஒன்றரை ஆண்டுகள் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்து உடற்கூறியல் பாடத்தைப் பயில வேண்டும் அங்கே.
எனக்கும் என் சக தோழருக்கும் முதலில் கிடைத்தது தலையும் கழுத்தும். ஆறு மாதத்தில் அதைக் கூறிடல் செய்து முடிக்க வேண்டும்.
அப்போதும் சரி, இப்போதும் சரி... தலைவிதி என்று சொல்லிக் கொண்டு உழைப்பைப் புறம் தள்ளுவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. ஆனால், மண்டை ஓட்டை எதிரே வைத்துக் கொண்டு, ‘தலையெழுத்து என்று சொல்வார்களே... இந்த மண்டை ஓட்டுக்குச் சொந்தக்காரரின் தலையெழுத்து என்னவாக இருக்கும்? எங்கே பிறந்து, எப்படி வளர்ந்து, என்னென்ன துயரங்களை அனுபவித்து, எவ்வாறு இறந்து, உடலை வாங்க யாருமே முன்வராத நிலையில் இங்கே நம் கைகளால் வெட்டுப்படுகிறாரோ?’ என நாங்கள் பேசிக்கொள்வோம். ‘தலையெழுத்தைப் படிக்கலாம் வாங்கஎன்று பேசிக்கொண்டேதான் கபாலத்தைப் பிளக்க ஆரம்பிப்போம்.
மனிதனின் மண்டை ஓட்டு எலும்பு என்பது ஆறுவிதமான வெவ்வேறு எலும்புகளின் கலவையால் உருவாகும் உறுதியான ஒன்றாகும். இரண்டு கை விரல்களையும் கோத்து வைத்துப் பார்க்கும்போது தெரியும் இணைப்புக் கோடுகளினைப்போல கபால எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பது ஏதோ ஒரு புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் போன்றே தோன்றும். ‘அட, இதுதான்ப்பா இவரது தலையெழுத்துஎன வேடிக்கையாகப் பேசியபடியே சுத்தி, உளி கொண்டு மண்டை ஓட்டைத் தனியே பிளந்தெடுப்போம். அதனைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மூளையின் மேல் பாகத்தையும், அடுத்தடுத்த பாகங்களையும் படிக்க வேண்டும்.
மனித உடலின் அத்தனை எலும்புகளையும் எண்ணியெடுத்து ஒரு மூட்டையாகக் கட்டி ஒவ்வொரு மாணவனிடமும் கொடுப்பார்கள். அதனை விடுதிக்கே தூக்கிக் கொண்டு போய் விடுவோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு எலும்பாக எடுத்து, பொறுமையோடு ஆய்ந்து பயில வேண்டும். ஒன்றரை ஆண்டுகாலம் முழுவதும் அந்த எலும்புக்குவியல் எங்களோடு அறை வாசம் செய்யும்! மேசையில், கட்டிலில், தரையில்... இப்படி அறையின் எல்லா இடங்களிலும் எலும்புகள் கிடக்கும்!
ஆரம்ப நாட்களில் கல்லூரியில் இருந்து விடுதிக்குச் சென்றால் பிணங்களும் உடன் வருவது போலவே நினைக்கத் தோன்றும். சாப்பிடுவதற்கு முன் எத்தனை முறை சோப்புப் போட்டுக் கையைக் கழுவினாலும், பிண வாசனையும் மருந்து வாசனையும் மறையாது! அதனால் சாப்பிடவே பிடிக்காது... பல நாட்கள் அரை வயிற்றோடும் குறை வயிற்றோடும் படுத்திருக்கிறேன். பின்னர் ஒரு கட்டத்தில் அந்த வாசனை பற்றிய நினைவே எழாமல் அது பழகிப் போனது!

நான் படித்த புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்தபோது 1664-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவ மனையைத் தொடங்கினார்கள். 1772ல் இப்போது உள்ள பொது மருத்துவமனை இருக்குமிடத்துக்கு அது மாற்றப்பட்டது. 1835ல் ஒரு மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டு 1852ல் முதல் பட்டயப்படிப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டது.(Diploma).
1857-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டு ஒரு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. M.M.C. தொடங்கி 155 ஆண்டுகள் ஆகின்றன.
நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களுக்கு மருத்துவப் பேராசிரியர்களாக இருந்த புகழ்பெற்ற டாக்டர்கள் டாக்டர்.ரத்தினவேல் சுப்ரமணியம், நீரிழிவு நோய்க்கு அடித்தளம் அமைத்த டாக்டர் சாம்.ஜி.பி.மோசஸ், மூளை, நரம்பியல் துறையில் அறுவைச் சிகிச்சை முறையை அந்தப் பொது மருத்துவமனையில் அமைத்து அதற்கான ஒரு துறையை அமைத்து அடித்தளமிட்ட புகழ்பெற்ற மூளை, நரம்பு, அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, தோல் வியாதி நிபுணர் டாக்டர் தம்பையா, 96 வயதில் சமீபத்தில் மறைந்த ..முதலியாரின் பிள்ளை .வேணு கோபால் முதலியார். இவர் சிறுநீரகத் துறையை உருவாக்கியவர். மார்பு, இதய அறுவைச் சிகிச்சை முறையைக் கொண்டு வந்த டாக்டர் சதாசிவம். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் மனநல மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் சாரதாமேனன் டாக்டர் M.S. இராமகிருஷ்ணன், டாக்டர் A.S.இராமகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற மருத்துவர்கள்.
(அனுபவம் தொடரும்)


நன்றி - கல்கி