Showing posts with label BARATHIRAJA. Show all posts
Showing posts with label BARATHIRAJA. Show all posts

Thursday, January 31, 2013

கமல் அரசியலுக்கு வந்தா நீங்க தாங்க மாட்டீங்க - பாரதிராஜா சவால் பேட்டி @ விகடன்

கடந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு... கடுகடுவென அவர் கூறிய நேரடி பதில்கள் தணிக்கைக்குப் பிறகு இங்கே...


 '' 'விஸ்வரூபம்’ பட வெளியீடு தொடர்பாக கமலுக்கு...''


''வேண்டாம்யா... வேண்டாம்! ஆத்தாத்துப் போயிருக்கேன். நெஞ்சு கொதிக்குது. கமல் ஒரு மகா கலைஞன்யா. எங்கே அவனுக்காகக் குரல் கொடுத்தா, நம்மளுக்கு எதுவும் சிக்கல் வந்துருமோனு பயந்து நடுங்கி ஒதுங்கிக் கிடக்குது சினிமா உலகம். எங்கேயோ வடக்குல இருக்குற அமீர் கான் குரல் கொடுக்குறான்.


 ஏன்... அந்த உணர்வு இங்கே இருக்குற 'படைப்பாளி’களுக்கு வரலை? ஏன்யா... உங்க அத்தனை பேரோட உரிமைக்கும் சேர்த்துத்தானே ஒத்தை மனுஷனா கமல் கெடந்து போராடிக்கிட்டு இருக்கான். அறுபது வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் சிலையைப் பார்த்து 'இது கல்... பேசாது..!’னு கலைஞர் வசனத்தை 'பராசக்தி’யில் அனுமதிச்சு ரசிச்ச மண்ணுய்யா இது.



நான் எந்த அடையாளத்துக்குள்ளும் போக விரும்பலை. ஆனா,  கமல்ங்கிற கலைஞனுக்காக பாரதிராஜா என்கிற கலைஞன் குரல் கொடுக்கிறான். அவ்வளவுதான்!''


''ஆனால், 'கலைக்கு எல்லை இல்லை’ என்று சொல்லி சிறுபான்மையினர் உணர்வுகள் புண்பட அனுமதிக்க முடியுமா?''



''உண்மை என்னன்னு ஊர் உலகம் முழுசா புரிஞ்சுக்காமலே, 'புண்படுத்திட்டாங்க’னு சொல்றது நியாயமா? 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் க்ளைமாக்ஸில் பூணூலையும் சிலுவையையும் கார்த்திக், ராதா அறுத்து எறிவாங்க. அந்தக் காட்சி இந்து, கிறிஸ்துவர்களை எந்த வகையிலாவது புண்படுத்தியதா? 'வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கிட்ட ஒரு சின்னப் பையன், 'நான் கரையேறிட்டேன். 



நீங்க இன்னும் ஏறலையா?’னு கேட்பான். அந்தக் காட்சியைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட சாதியினர் புண்பட்டாங்களா?  ஒரே வார்த்தை - வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும். அது எந்த இடத்தில், எந்தச் சூழலில் ஒலிக்குதுனு பார்க்கணும் இல்லையா?



சினிமா ஒரு அபூர்வ ஊடகம். அதில் படைப்பின் நேர்த்தியைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு, 'இது நொள்ளை... அது நொட்டை’னு வம்படியா குத்தம் சொல்லாதீங்க.''  



''இது தொடர்பா கமல்ஹாசன்கிட்ட நீங்க எதுவும் பேசுனீங்களா? இந்த விவகாரத்தில் எதுவும் அரசியல் பின்னணி இருக்கா?''



''அவன்கிட்ட பேசலை. அவன் மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இந்த விஷயத்தை உன்னிப்பா கவனிக்கிறப்போ எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சப்போ, டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பிச்சப்போ, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போ எல்லாம் நான்தான் முதல் ஆளா அவங்களைத் திட்டித் தீர்த்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா, அவங்க மூணு பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பலமா காயம்பட்டு, மனசு நொந்த பிறகே, அரசியலுக்கு வந்திருக்காங்க. இப்போ அந்த அரசியல் பாதையில் கமலையும் இறக்கிவிட்றாதீங்க.



கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது.''




''தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய சினிமா கலைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், இப்போது டெசோ மாநாடு, கண்டனத் தீர்மானம்னு அதே இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. போராடுதே?''



''நான் எல்லாருக்கும் பொதுவானவன். அந்த வகையில்தான் அப்போது ஆட்சியில் இருந்த அய்யாவைப் பார்த்தேன். இப்போ ஆட்சி செய்யும் அம்மாவையும் பார்க்கிறேன். கல்யாண வீட்டுக்குப் போனா சிரிக்கணும்... இழவு வீட்டுக்குப் போனா அழணும். அதுதான் இயற்கை நியதி. அதைத்தான் நான் செஞ்சுட்டு இருக்கேன்!''



விஸ்வரூபம்





நன்றி - விகடன்

Thursday, December 20, 2012

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://timesofindia.indiatimes.com/photo/14210217.cms 

விகடன் மேடை - வைரமுத்து

மீரா முகம்மது, தோப்புத்துறை.


''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''


''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு விகடன் மேடை - வைரமுத்து

செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.


6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.


6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''


சி.வந்தனா, குமுளி.


''அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?''


''அது ஒரு துணுக்கு.

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாரா கிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.


தூக்கில் தொங்கலாம்; ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்..? விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்..? கிணற்றில் குதிக் கலாம்; ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந் தால்..? தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்துபோனால்..?


தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:

''அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?''


உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது!''


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.


''சென்னை வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?''


''நான் காதலித்த மனிதர்களின் கடைசித் தருணங்கள்.


ஒரு குழந்தை நிலாவைப் பார்த்துக் கை நீட்டுவதுபோல, என் பள்ளி நாட்களில் இருந்து யாரையெல்லாம் பார்க்கத் துடித்துப் பரவசப் பட்டேனோ, அந்த மகா கலைஞர்களின் இறுதி அஞ்சலியை இறுதி வரை இருந்து செலுத்திய நிகழ்வுகள்தாம் மறக்க முடியாத சம்பவங்கள்.


கண்ணம்மாப் பேட்டை.


எரிமேடையில் கிடத்தப்பட்ட உடல் எருக் களால் மூடப்படுகிறது. கொள்ளியிட்ட பிறகு, எல்லோரும் போய்விட்டார்கள். தங்க உடல் தின்னத் தாவுகிறது தீ. நானும் நண்பன் அறிவுமதியும் மட்டும் இடுகாட்டில் எஞ்சி நிற்கிறோம். நான் ஓடிப்போய் சிதையில் விழுந்து எருவைத் தள்ளி மீண்டும் முகம் பார்க்க முனைகிறேன். கை பிடித்து இழுத்த நண்பனோடு எரியும் வரை இருந்து கண்ணீரோடு விடைபெறுகிறேன். அது என் காதல் கவிஞன் கண்ணதாசனுக்கு நான் செலுத்திய அஞ்சலி.


மெரினா கடற்கரை.


தங்கத்தைப் பூட்டிக்கொண்டு குழிக்குள் இறங்கு கிறது சந்தனப் பேழை. அரசியல், கலை உலக மனிதர் கள் சுற்றி நிற்கிறார்கள். ஓரத்தில் கவலை கட்டிய கண்களோடு நின்ற என்னை, 'வைரமுத்து வா; நீயும் மண்ணுத் தள்ளு’ என்று கை நீட்டி அழைக்கிறார் அந்நாள் அமைச்சர் க.ராசாராம். குனிந்து புறங்கையில் மணல் தள்ளுகிறேன். சந்தனப் பேழை மேல் சரசரவென்று சரிகிறது மணல். நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எம்.ஜி.ஆருக்கு நான் மண் தள்ளுவேனென்று.


பெசன்ட் நகர் மயானம்.


மின் மயான மேடையருகே பிரபு - சத்யராஜ் - நான் மூவர் மட்டும். பட்டு வேட்டியில் சுற்றப்பட்டிருக்கிறது புவியாண்ட கலைஞனின் பூத உடல். விசைப்பலகையில் தூக்கிவைக்கிறோம். கடைசியாக முகம் பார்த்துக் கண் மூடிக்கொள்கிறோம். செத்தும் சாகாத ஒரு ஜீவசரித்திரத்தை அடுப்புக்குள் விசிறியடிக்கிறது விசைப்பலகை. நடிகர் திலகம் சிவாஜியின் கடைசிக் கணங்களில் கனத்த மனத்தோடு நான்.


அந்த மூன்று மகா கலைஞர்களுக்கும் பிள்ளைக்கடன் செய்தது எனக்கு வரமா? வலியா?


நினைக்கும்போது எல்லாம் வலித்து வலித்து அடங்குகிறது இற்றுப்போன இருதயம்!''


ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.


''இலக்கியத்தில் நகைச்சுவை உண்டா?''


''உண்டு. ஒன்று சொல்கிறேன்.


சங்க இலக்கியத்துக்கு எழுத்தெண்ணி உரையெழுதியவர் அவ்வை துரைசாமிப் பிள்ளை. 'உரைவேந்தர்’ என்று ஓங்கு புகழ் பெற்றவர். ஒரே இடத்தில் உட் கார்ந்து எழுதி எழுதி அவருக்கு மூல நோய் கண்டுவிட்டது. அந்தத் துயரத்தை அவர் மைந்தர் அவ்வை நடராசன் எனக்கு நயமாகச் சொன்னார்:


'என்ன பண்றது கவிஞர்? 'உரை’ எழுதியே எங்க அப்பாவுக்கு 'மூலம்’ வந்துட்டது’.


நினைக்கும்போது எல்லாம் என்னைக் குலுக்கும் நகைச்சுவை இது!''


கி.ராமகிருஷ்ணன், சென்னை-24 


''உண்மையில் யார் உயர்ந்த மனிதன்?''


''ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

சமூக மனிதன்; குடும்ப மனிதன்; தனி மனிதன்.

இதில் சமூக மனிதன் என்பவன் மகா நடிகன்; நடித்து வெல்பவன்.

குடும்ப மனிதன் என்பவன் பாதி நடிகன்; நடித்துத் தோற்கிறவன்.

தனி மனிதன் என்பவன்தான் மெய்ம் மனிதன். ஒப்பனை இல்லாமல் அவன் அவனாகவே இருப்பவன்.

மூன்று பேருக்கும் மதிப்பெண் இட்டுப் பார்க்க வேண்டும். சமூக மனிதனையும் குடும்ப மனிதனையும்விட ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிற தனி மனிதன் எவனோ அவனே உயர்ந்த மனிதன்!''


ரஜினி முருகன், வேலூர்.



''உங்களை மன்றாடிக் கேட்கிறேன்... 'கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்?''


''உங்கள் கேள்வியை ரஜினியின் செவி களுக்குக் கொண்டுசென்று அவர் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.


ஊடகத்தில் வெளியிடப்படும் 'கோச்சடை யானின்’ முதல் பாடல் இதுதான்.
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:



தீபிகா:  செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்...
இதயம்                                                       
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
 நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
 இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
 சிறுகோட்டுப் பெரும்பழம்   
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே



 ரஜினி: பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
 வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
அப்பப்பா!



இசையோடு கேட்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்!''



ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


''திரையுலகில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?''



''தேடிக்கொண்டேயிருக்கிறேன் - 'சின்ன சின்ன’ ஆசை பாடிய மின்மினியை!
சூரியனைப் பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி; இந்தியாவைச் சுழற்றியடித்த பாட்டுக்குச் சொந்தக்காரி.


என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? இதுவரைக் கும் தகவல் இல்லை.


'அன்புள்ள மின்மினி!


உன் தங்கக் குரலால்தான் என் தமிழ் கேட்டது உலகம். உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் இனிய அன்பளிப்பாக என் சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உனக்கு ஒதுக்கிவைத்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்து சகோதரி!''


நிறைவு செய்கிறேன்;

நன்றி.






டிஸ்கி -1.இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டிhttp://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html


2. நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html3. 

3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

4 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html

 


Thursday, December 13, 2012

என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

விகடன் மேடை

வாசகர் கேள்விகள்... கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்!
படம்: ரவிவர்மன்
ஜி.தியாகு, திருத்துறைப்பூண்டி.


''எம்.ஜி.ஆரோடு உங்களுக்கு நெருக்கம் இருந்ததா?'' 



''1984 ஒரு 'முகூர்த்த’ மாதத்தின் அதிகாலை 4.30 மணி.


பாரதிராஜாவின் புதுமனை புகுவிழா.


கட்டிய பட்டு வேட்டியோடு கட்டிய பசுமாட்டை அவர் வீட்டுக்குள் இழுத்துச்செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களால் பரபரப்பானது தெரு.
யாரும் எதிர்பார்க்கவில்லை.


தன் துணைவியார் வி.என்.ஜானகியோடு வெள்ளைத் தங்கமாய் வீட்டுக்குள் நுழைகிறார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


பதற்றத்தில் புது வீடு படபடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை வீட்டில்.


கூடத்தில் முதலமைச்சரை அமர்த்திவிட்டு, பசுமாட்டை இழுத்துக்கொண்டு பால் கொண்டுவர ஓடுகிறார்கள் பாரதிராஜா தம்பதி. என் காதுக்குள் சொல்லிவிட்டுப் போகிறார் பாரதிராஜா:


'எம்.ஜி.ஆருக்குக் கம்பெனி கொடுங்கள்.’

அப்போது எம்.ஜி.ஆருக்கு என்னை யாரென்றே தெரியாது. என் பெயர் வைரமுத்து என்று சொல்லிக்கொள்ளவும் தயக்கமெனக்கு. சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்; ஜானகி அம்மையார் தனி நாற்காலியில்.


என் காதலுக்குரிய கதாநாயகனை அன்றுதான் அணுக்கத்தில் பார்க்கிறேன்.
இந்த ரோஜா விரல்களா வாள் சுழற்றியவை? மந்திரி குமாரியின் வீரமோகனை - குலேபகாவலியின் தாசனை - மகாதேவியின் வல்லபனை - மதுரை வீரனின் வீரனை - சக்கரவர்த்தித் திருமகளின் உதய சூரியனை - நாடோடி மன்னனின் வீராங்கனை, மார்த்தாண்டனை - ஆயிரத்தில் ஒருவனின் மணிமாறனை அவருக்குள் தேடித் தேடி ரசித்ததில் ஏழு நிமிடங்கள் கழிந்துபோயின.


என்னோடு அவரும் பேசவில்லை;


அவரோடு நானும் பேசவில்லை. அதற்குள் பால் வந்துவிட்டது; எழுந்துகொண்டேன்.

பிறகு, சில விருது மேடைகளிலும், ஒரு படத் தொடக்க விழாவிலும், ஒரு படக் காட்சியிலும் அவரைச் சந்தித்தேன்.

இவ்வளவுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமான அணுக்கம்!''


பா.செல்வி, கள்ளக்குறிச்சி.


 ''அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'' 


''எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக்கொடுங்கள்; அப்படியே நெஞ்சில் ஒட்டும்.


ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.


மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.


நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.


ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.


ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.


ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.


எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.


ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள் தமிழாசிரியப் பெருமக்களே!''


பாரதி செழியன், சென்னை.


''கோபத்தைக் குறைக்க என்ன வழி?'' 


''சக மனிதன் செய்யும் தவறுதான் நமக்குக் கோபத்தை மூட்டுகிறது. தவறுகளை நகைச்சுவையாக் கிக்கொள்வதைப் போல் கோபத்தைக் குறைக்க நல்ல வழி இல்லை.


வேலைக்காரரை அழைத்து, 'தபால் தலையை ஒட்டிக்கொண்டு வா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால் தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர்.


நீங்களும் நானுமென்றால் கோபத்தைக் கொட்டி இருப்போம்.


ராஜாஜி சொன்னார்:


'பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்த நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே.’


ராஜாஜியால் அது முடிந்தது; கேள்வி கேட்ட உங்களால் கூட முடியும்; பதில் சொன்ன என்னால் அது முடியுமா தெரியவில்லை!''


தாமரைக்கண்ணன், திருப்பூர்.


 ''இந்தியாவின் பொருளாதாரம்பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''ஒரு துறையில் ஒருவன் சற்றே புகழோடிருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற மூடநம்பிக்கையின் முட்டைக்குள் நீங்கள் வசிக்கிறீர்கள். பொருளாதாரம்பற்றிப் பேசும் அறிவுடையவன் அல்லன் நான். என்ன தான் இந்தியாவின் நிதியமைச்சர் என் நண்பராக இருந்தாலும், அவரிடம் இதுபற்றி நான் அறிய முயன்றதில்லை. ஆனாலும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறதா தேய்கிறதா என்று அறிந்துகொள்ளும் அளவுகோல் ஒன்றை அறிவேன்.



எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ... அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கு இப்போது தந்து வரும் வட்டி விகிதம் 8.5 விழுக்காடு. மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 9 விழுக்காடு.


ஆனால், ஜப்பானில் வைப்புத் தொகைக்கு வட்டி கிடையாது. மாறாக, உங்கள் பணத்தைப் பாதுகாத்துவைப்பதற்காக உங்க ளிடமே வைப்பு நிதிக்குக் காப்புத்தொகை வசூலிக்கும் ஜப்பானிய வங்கி.


இந்தியாவில் 8.5 விழுக்காடு வட்டி கொடுத்து வாங்கப்படும் வைப்பு நிதி, 10 முதல் 13 விழுக்காடு வட்டிக்குத் தொழிற் கடனாக வழங்கப்படுகிறது. அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப்பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்துகொண்டேயிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.


இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வோர் இந்தியத் தலையும் தாங்குகிறது!''


ம.இராஜ்குமார், வில்லூர்.


 ''உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர் தாக்குகிறார்களே... நீங்கள் திருப்பியடிக்க வேண்டாமா?'' 


''தேவையில்லை.

நீங்கள் ரசிக்க முடியாத ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்.


நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம் கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய் மாறியே தீருகிறோம்.


பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ் என்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போதெல்லாம் பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.


தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே திரும்ப வந்தால், அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால், அது திரிபுநிலை. இதை சைகோசிஸ் [Psychosis] என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக் குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட, சிகிச்சை தருவதே சிறந்தது!''




இரா.கரியப்பா, சூலூர்


''சிலையாவதுதான் ஒரு மனிதனின் உச்சகட்டப் புகழா?'' 



''அப்படிச் சொல்ல முடியாது. மனிதர்களைப் போலவே சிலைகளுக்கும் ஆயுள் உண்டு. அரசு - அரசியல் - சாதி - மதம் -  நிறுவனம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சிலைகள், அந்த ஐந்தும் விழுகிறபோது தாமும் விழுந்துவிடுகின்றன.



சாலைகளில் நிற்கின்ற சிலைகளின் ஆயுள், சாலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவால் திறந்துவைக்கப்பட்டுச் சாலைகளின் சந்திப்பில் நின்ற கலைவாணர் சிலை, மேம்பாலம் கட்டும்போது இடம் பெயர்க்கப்பட்டு ஓரச்சாலையில் ஒதுங்கிவிட்டது.


சென்னையின் தென் வாசலில் கம்பீரமாக நின்ற ஜவஹர்லால் நேருவின் சிலை கத்திப்பாரா மேம்பாலத்திற்குப் பிறகு, உயரம் குறைந்து ஒடுங்கிவிட்டது.


மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பெயர்கள் மறக்கப்பட்ட பல சிலைகள் வெறும் பொம்மைகளாகிவிடுகின்றன.


உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே.


எனவே, மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல - செயல்களால் மற்றும் சித்தாந்தங்களால்!''


தரும.சரவணன். தஞ்சாவூர்.


''இங்கிதம் என்றால் என்ன?'' 


''நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.


புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!''



- இன்னும் பேசுவோம்... 



பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்
part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

Thursday, December 06, 2012

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

என்.கோமதிசங்கர், வீரவநல்லூர்.


 ''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''


''இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில் - இருப்பவர்கள் கோர நரகத்தில்.
பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் ராணுவத்திற்குச் செய்தி போகிறது; அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது.


கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.


ரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது.


பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள்.


எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது.


அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள்.


இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.



இது அதிகரிக்கும்பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டுவிடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது?


இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது?


இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல.


ஆனால் ஒன்று: விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று; மீண்டும் எழுவதும்தான்.''


சி.கார்த்திகேயன், சாத்தூர்.


 ''மறைந்த பேச்சாளர்களில் உங்களால் மறக்க முடியாதவர்?''


''கா.காளிமுத்து.
சொற்களின் சுந்தரன்; வாக்கியங்களின் வாத்தியக்காரன்; சங்கத் தமிழைத் தெருவெல்லாம் வீசிப்போன தென்பாண்டித் தென்றல்; 'அடாணா’வை உரைநடையில் வாசித்த கவிதைக் கச்சேரியாளன்.
இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டாம் உயிர் பெற்று மதுரைக்குத் திரும்பிக்கொண்டுஇருந்தவரை பாண்டியன் ரயிலில் சந்தித்தேன்.
அவர் கையிலிருந்தது 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. கண்ணில் நீர் மிதக்கச் சொன்னார்:


'நான் உயிர் பிழைத்ததில் ஒரே ஒரு நன்மை கவிஞர். பிழைக்காதிருந்தால், 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்காமலே செத்துப் போயிருப்பேனே...’


ஒருவர் கரத்தை ஒருவர் பற்ற... இருவர் கரத்திலும் விழுந்தது கண்ணீர்.


எனக்கொரு கனவு இருந்தது.




கலைஞர் - வைகோ - காளிமுத்து என்ற முத்தமிழின் முக்கூட்டுச் சங்கமத்தை என் நூல் வெளியீட்டு விழா ஏதேனுமொன்றில் நிகழ்த்த வேண்டும் என்ற நெடுங்கனவு.


அரசியல் என் கனவின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டது;


மரணம் மறு பக்கத்தை எரித்துவிட்டது.''


சி.கொ.தி.மு.விக்னேஷ்குமார், கோபி.


 ''அண்மையில் உங்களைக் கவர்ந்த பெண்கள்?''


''பெண்கள் அல்லர்; சிறுமிகள்.


பாகிஸ்தானின் புரட்சிப்பூ மலாலா, உலகத் தலைவரின் மகள் என்ற கர்வத்தைக் கண்ணில்கூடக் காட்டிக்கொள்ளாத கறுப்பு தேவதை மலியா ஒபாமா, இசையுலகின் பிஞ்சு நட்சத்திரம் பிரகதி.


இந்த மூன்று தேவதைகளை எந்த ஊடகத்தில் பார்த்தாலும் பாசமே மேலிடுகிறது.


உங்கள் மூவருக்கும் என் வளர்பிறை வாழ்த்துக்கள் மலர்களே.''


நா.வெங்கடேசன், மதுரை. 


 ''ரஜினிக்கும் உங்களுக்குமான மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?''



'' 'பாபா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பாடலுக் காக அவசரமாய் அழைக்கிறார் ரஜினி. பரபரப்பாகச் சென்றடைகிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் உடையையும் காலணிகளையுமே மாறிமாறிக் கவனிக்கின்றன அவரது காந்தக் கருவிழிகள். புறப்பட எத்தனித்தபோது 'சற்றே பொறுங்கள்’ என்றார். 'உங்கள் உடைக்கும் காலணிக்கும் பொருத்தமில்லை’ என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் 'வெள்ளைத்தாள் கொண்டுவா’ என்று தன் உதவியாளருக்கு ஓசையோடு கட்டளையிட்டார். அந்த வெள்ளைத்தாளை விரித்து என் பாதம் பதிக்கச் சொன்னார். 


பேனா எடுத்து அதில் என் பாதத்தை வரையச் சொன்னார். 'இதே அளவுக்குக் காலணிகளை அனுப்பிவைக்கிறேன்’ என்றார்.


ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து வீடு திரும்பினேன். 'ரஜினி சார் கொடுத்தனுப்பினாராம்’ என்று ஒரு பெட்டியை நீட்டினார்கள் என் உதவியாளர்கள். பிரித்துப் பார்த்தால்,


என் காலுக்குப் பொருத்தமான காலணிகள்!


நான் எழுதியது பொய்யில்லை:

'பாசமுள்ள மனிதனப்பா
மீச வச்ச குழந்தையப்பா.’ ''


அ.குணசேகரன், புவனகிரி.


 ''மூன்றாம் உலகப் போரில் தகப்பனாகிய கருத்தமாயி மகனாகிய முத்துமணியை வெட்டிக் கொன்றது நியாயமாகத் தெரியவில்லையே?''


''குற்றம் புரிந்த மகன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்ற சோழனை 'மனுநீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரிந்த நமக்கு, சமூக விரோதியாகிய மகனை வெட்டிக் கொன்ற கருத்தமாயியை 'மண்நீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரியவில்லையே?''


செ.அ.நெய்னா, சென்னை.


 ''மனிதன் எப்போது மகான் ஆகிறான்?''


''புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன. துய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப்போகிறது.


துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும்போது, ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.


பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகிவிடுகிறது.


புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான்.''


கே.ரூபிணி, தில்லைஸ்தானம்.


''பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்வீர்களா? தவிர்ப்பீர்களா?''


''உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் 'நீர்ப்பறவை’ பாடல்களில் இயக்குநர் சீனுராமசாமி உரிமையோடு பல திருத்தங்கள் கேட்டார். மெட்டுக்கும் கதைக்கும் நியாயமென்று பட்ட திருத்தங்களையெல்லாம் செய்துகொடுத்தேன்; பாடல் வெளிவந்தது.



'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய்  நிலைக்கிறாய்’
 


என்ற வரிகளை சில கிறித்துவ நண்பர்கள் வருத்தப்பட்டுத் திருத்தச் சொன்னார்கள்.


எவர் மனதும் புண்படக் கூடாது என்பதற்காக


'என்னுலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்’
என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஊதியம் தராத என் கிறித்துவ நண்பர்களுக்கே திருத்தம் செய்து தருகிற நான், ஊதியம் தருகிற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திருத்தம் செய்து தர மாட்டேனா?''



லதா சீனுவாசன், சென்னை-40.


 ''உடம்பு எதுவரைக்கும் நன்றாக இருக்கும்?'' 



''கண்ணுக்குத் தூக்க மாத்திரையும் - கட்டிலுக்கு ஊக்க மாத்திரையும் தேவைப்படாத வரைக்கும்.''



- இன்னும் பேசுவோம்...




readers view


 1. Kalpana3 Days ago
கவிஞர் வைரமுத்து சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கையில் வைத்து அழுத்தப்படும் பணமும், கத்தியில் வைத்து அழுத்தப்படும் கத்தியும் சில தமிழரை..அம்மையாரின் விஷயத்தில் தமிழ் தெரிந்தவராக என்று கொள்ளவேண்டும். அழுத்தப்படும் விஷயம் முதலானதாக இருக்க வேண்டும் என்பது என் யூகம்.

கவிஞர் சொன்னதற்கு ஏன் அம்மாவுக்கு உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது என்பதுதான் ஆச்சரியம். இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்றவுணர்ச்சி உதைத்திருக்கும் போல.

தனி மனித வாழும் உரிமையாக அம்மையார் போதிப்பது (இல்லையில்லை கருத்துப்பதிவு என்கிற பெயரில் கதாகாலேட்சபம் பதிவது) என்ன என்று விளங்கவில்லை. இதே விகடனின் சாதி கலவரங்கள் குறித்து வெளியான ஒரு கட்டுரைக்கு "சாதிகளை ஒழித்துவிட முடியாது; ஆனால் சாதி உணர்வோடு வாழ்வதை தனி மனிதரது நம்பிக்கை விஷயமாக விட்டு விட வேண்டும்" என்கிறார் இந்த முனைவர். எங்கு சென்று முட்டிக்கொள்வது?
இருக்கும் நாட்டின் கேவலமான கலாச்சார விழுமியங்களே வெளிப்படுகின்றன.

ஐ,நா அமைப்பின் சார்ட்டர்களை கரைத்து குடித்த ரீதியில் இந்த கனமாணிக்கம் கட்டவிழ்த்து விட்ட இன்னொரு கதை "ராணுவ ரீதியாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முனைவதை எதிர்தரப்பு தீவிரவாதம் கொண்டு மோதியதை காணச்சகியாமல் ஐ.நா இலங்கையை விட்டு வெளியேறியது" என்பது. ஐ.நாவின் பொது செயலாளர் முதல் ஐ.நாவின் நடவடிக்கைகளை பரிசீலித்து வெளியிட்ட உள்தணிக்கை குழுவின் சமீபத்திய அறிக்கைகளோ வேறுவிதமாய் வெளிவந்துள்ளது. அம்மையார் என்ன இறுதி ஈழப்போரின்போது களப்பணியில் ஈடுபட்டிருந்த காரிய வீராங்கனையா? இல்லையே? தன் வீட்டில் அதுவும் லிவுங் ரூமில் கணினியில் முன்னால் நாள் முழுதும் அமர்ந்து ஆங்கில கலப்புடன் (அதுகூட அம்மையாரின் தத்துவப்படி பெரிய அறிவுஜீவிதம் என்ற நினைப்பு) தப்பும் தவறுமாக தமிழை குதறியபடி தட்டெழுதுவதுதானே இவர் செய்யும் செயல்.

கோனார் தமிழ் துணைவன் சுருக்கமென்று சொல்லும் இந்த முனைவரது கல்வித்தகுதி சந்தி சிரிக்கின்றது. நானும் என மாணவப்பருவங்களில் கோனார் தமிழ் துணைவனை படித்திருக்கிறேன். செய்யுள் பகுதிக்கான விளக்கவுரைகள் கோனாரின் உண்டு. கோனார் பதிப்பக மற்றும் எழுத்தாசிரியரின் மகள் மணிமேகலை எனக்கு தமிழாசிரியராக தமிழ் போத்திருக்கிறார். இருக்கும் உயர்கல்வித்துறை சந்தி சிரிப்பதை போலவே இருக்கிறது இந்த முனைவரது கருத்துப்பதிவுகள்.
2. Dr.Mrs.MeenakshiPrabhakar7 Days ago
கவிஞர் கொடுத்திருக்கும் இலங்கை தமிழரின் நிலையை பார்க்கும் போது இன உணர்வாளர்களின் கதறல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக தெரியவில்லை.

வீணாவது மனித வளம்.ஒரு நாட்டின், உலகத்தின் உயர்வு.தனி மனித திறன் இன அடிப்படையில் தேக்கப்படுவது குற்றம்.சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் இன உணர்வு இல்லையெனில் அரசின் நேரடி சீரமைப்புக்கு வர முடியும்.தனி மனித வாழும் உரிமை கோரி, உரியதை பெற்று நல வாழ்வு வாழ முடியும்.

பத்து பேர் சாதாரண சூழலில் சேர்ந்து பேச போவதில்லையே.சாதாரண சூழல் நிறுவ முனையும் நிலையில் அரசு தரப்பில் குழு நிலைப்பாடு கண்காணிக்கப்படுவதில் தவறில்லை.

சந்தேகம் இடையூறு செய்யாத சூழல் வேண்டுமெனில் அரசுடன் ஒத்துழைத்து, தன் தனி மனித உரிமை நிறுவிக்கொள்ள வேண்டியது மக்கள்.

இரு தரப்பிலும் பணி நியமனம், சம உரிமை தரும் செயலை, பேரின வாத அரசு என சொல்வது எப்படி பொருந்தும்?.அப்படிப்பட்ட அரசு முன்பு எடுத்த நிலைப்பாடு போல், தமிழரை வெளியேற்ற அல்லவா பார்க்கும்?

இன உணர்வு தனி மனித நம்பிக்கையே.அந்த அடிப்படையில் தனி நாடு, பிரிவினை வாதம் எழுவது அரசு கொள்கைக்கு, மனித நேயம் அவசியமாகும் உலக அமைதிக்கு முரணானது.

இன உணர்வினடிப்படையில், ஏற்படும் ஒவ்வாமையை தனி மனித அளவில் அவரே நிகர் செய்ய முன் வர வேண்டும்.மனித நேயம் மலர வேண்டும்.தன் திறன் பயனாக்க வேண்டும்.அல்லது அச்சூழலிலிருந்து வெளியேற வேண்டும்.ஊறி விட்ட நிலைப்பாடு மாறுவது கடினமே.ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் தரும் தனி மனித திறனை தன் நாட்டுக்கு தந்தாலென்ன என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.அலைகள் மாரடிப்பதில்லை.அலைகள் விடாமுயற்சியின் அடையாளம்.அலைகளின் நோக்கம் தனி மனித வாழும் உரிமையேயன்றி , தனி நாடு அல்ல.

மீண்டுமெழும் அலைகள் விடாமுயற்சியாய் கோருவதும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதும் தனி மனித உரிமை நிறுவுவதிலேயே நிலையாகும்.

கடல் வணிகத்தில் தனி முத்திரை பதித்திருக்கும் இலங்கை, இன்னும் உயர முடிவது தமிழர் ஒத்துழைப்பினால்.இலங்கையை உயர்த்துவதே இலங்கை மக்களின் கடமை.போர் , போராட்டம், கலவரம், ஒத்துழையாமை, பிணக்கு இவை இனி நிரந்தரமாக முடியாது.

கடல் வணிகம் , தமிழர் என்ற நிலையில் கடற்படையாகும் தனித்திறன், அரசுடன் ஒத்துழைக்கும் நிலையில், நாட்டை உயர்த்தும் பயனாகும்.

இலங்கையின் இயற்கை வளம் அபூர்வமானது.இன உணர்வு தேக்கம்.பிராந்திய ரீதியான பாதுகாப்பு அணுகுமுறை, உலக வளம் காப்பதாய், உயர்த்துவதாய் மாறும் நிலையில், இலங்கை இந்தியாவுடன் நில வழிப்பாதையில் இணைக்கப்படுவது ஒருங்கிணைந்த இந்தியா உருவாவது, சர்வ தேச நாடுகள், ஐ.னா.அமைப்பின் கீழ் அரசு முறையில் இனையும் சாத்தியம் தரும்.
thanx - vikatan



 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

 

Thursday, November 15, 2012

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families/Vairamuththu_Family.jpg 
விகடன் மேடை - கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள் !

அன்பு கவிதா, புதுக்கோட்டை. 
 ''இந்த உலகத்தில் முக்கியமான நபர் யார்?'' 


 ''உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னை முக்கியம் என்றுதான் நினைத்துக்கொள்கிறான். ஆனால், இந்த உலகம் யாரையும் முக்கியம் என்று நினைக்கவில்லை. எவனொருவன் இறக்கும்போது இந்த பூமி நின்றுபோகிறதோ அல்லது சில கணங்கள் நின்று சுற்றுகிறதோ, அவன்தான் முக்கியமானவன்.''


ராஜகுமாரன், வேளாங்கண்ணி. 


 ''உங்கள் மகன்களின் திறமைபற்றித் தந்தை நிலையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' 



 ''பிள்ளைகளுக்குப் பெற்றோர் பி.ஆர்.ஓ. ஆகக் கூடாது. முகம் கொடுப்பது நம் பொறுப்பு; முகவரி அவர்கள் பொறுப்பு. திசை காட்டுதல் நம் கடமை; பயணம் அவர்கள் பெருமை. பிள்ளைகளின் பெருமை யைப் பெற்றவரா பேசுவது? அவர்கள் பூவாக இருந்தால், புதருக்குள் பூத்தாலும் வாசத்தால் அறியப்படுவார்கள். கல்வி - கடமை - உண்மை - உழைப்பு - நேர்மை - பண்பு என்பவற்றை ஊட்டி வளர்த்திருக்கிறோம். இனி, அவரவர் வானம்; அவரவர் சிறகு.''



செந்தாமரை காளிமுத்து,  கோயம்புத்தூர்-6. 



''வயதுக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?'' 


''இல்லை என்பதுதான் எஸ்.பி.பி. என் மீது வைக்கும் குற்றச் சாட்டு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ படத்துக்காகப் பாட வந்தார் எஸ்.பி.பி. வழக்கம்போல் நான் வரிகளைச் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வந்தார்.


'கண்டார் மயங்கும்
வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி-உன்
பின்னே பிறந்து
முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி’


என்ற வரிகளைச் சொன்னபோது, எழுதுவதை நிறுத்திவிட்டு இதழ்க்கடையில் குறும்பு கொப்புளிக்க 'வயதுக்கு மீறிச் சிந்திக்கிறீர்கள்’ என்றார்.



'எழுத்தாவது இளமையாய் இருக்கட்டுமே’ என்றேன்.


படைப்பாளன் முதிர முதிரப் படைப்பு இளமையாவதுதான் கலையின் ரசவாதம்.''



கே.பாலு, செய்யாறு. 


''ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் எப்போதாவது உங்களிடம் பாராட்டிச் சொன்னது உண்டா?'' 


''ஒரு சம்பவம் சொல்கிறேன்.

கலைஞர் முதலமைச்சர் - ஜெயலலிதா
அம்மையார் எதிர்க் கட்சித் தலைவர். அப்போது குங்குமம் பத்திரிகையில் கேள்வி - பதில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு ஒரு வினா வந்தது.

'ஜெயலலிதா நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் என்ன?’
'எங்கிருந்தோ வந்தாள்’ - அந்தப் படம் மட்டும் 'கிலோனா’ என்ற இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று விடை எழுதினேன்.



பதிலைப் படித்ததும் ஆசிரியர் குழு மேஜையில் புயல் அடித்தது. 'தவிர்த்துவிடலாமா’ என்றார்கள் என்னிடம். 'கூடாது; அப்படியே பிரசுரிக்க வேண்டும்’ என்றேன் நான்.



கலக்கமுற்றவர்கள் கடைசியில் கலைஞரின் பார்வைக்கு என் பதிலைக் கொண்டுசென்றுஇருக்கிறார்கள். கலைஞர் படித்துப் புன்னகைத்தாராம். 'பிழையில்லையே; பிரசுரிக்கலாமே’ என்றாராம். எழுத்து மாறாமல் அது அச்சானது.



அப்படியானால், என் கருத்துதானே கலைஞரின் கருத்தும். கலை வேறு - அரசியல் வேறு என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன?''



எம்.நாகராஜன், முடிகொண்டான். 


' ' இதுவரை நான்’ சுயசரிதையில் விட்டுப்போன சம்பவம் ஏதாவது?'' 



''பதினொரு வயதிருக்கும் எனக்கு. அழுது அழுது கண் சிவந்த என் அத்தைமார்களுள் ஒருவர் என்னை அழைத்தார்.


'வைரமுத்து நான் சொல்றதச் செய்வியா?’


'செய்யிறேன் அத்தை’.


'பக்கத்து ஊரு தாமரைக்குளத்துல இன்ன தெருவுல, இத்தனாம் நம்பர் வீட்டுக் கதவு மேல விடிய்ய சாணியடிச்சுட்டு வீடு வந்து சேரு.’


அத்தையின் சித்தத்தைச் சிரமேற்கொண்ட நான், எங்கள் வீட்டுப் பண்ணையாள் கருத்தக்கண்ணனைத் துணைக்கு அழைத்துக்கொண்டேன். அவன் பிரம்புக் கூடையில் சுமந்து வந்த சாணியை அந்த வீட்டுக் கதவில் 'சப்புச் சப்பு’ என்று எறிந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். அது இன்னொரு மதத்தைச் சேர்ந்த இளம் விதவையின் வீடு என்று மறு நாள் தெரிந்துகொண்டோம்.


அதுவரை காணாமல் போயிருந்த மாமன் சில நாளில் வீடு வந்து சேர்ந்தார். அதன் பிறகு, அத்தை என்னை எங்கும் சாணியடிக்கச் சொல்லவில்லை.


ஆனால், இலக்கமில்லாத கதவுகளும் கதவு இல்லாத வீடுகளும் மாமனுக்கு அத்துபடி


என்பதை அய்யோ பாவம், அத்தை அறியவில்லை.''


ம.சுயம்புலிங்கம், சென்னை-33. 


''வழக்கமான கேள்விகளால் சலித்துப் போயிருப்பீர்கள். மாறுதலுக்கு ஒரு கேள்வி: சிறுநீர் - சிறுகுறிப்பு வரைக?'' 


''நன்றி.
இந்த உலகம் கடல் நீரால் சூழப்பட்டு இருப்பதுபோல், உயிர்கள் சிறுநீரால் சூழப்பட்டு இருக்கின்றன. சிறுநீர் இழிவானதன்று. மாரடைப்பைத் தடுக்கும் மருந்து சிறுநீரில் தயாரிக்கப்படுகிறது. சிறுநீரில் தங்கமெடுக்க முனைந்த ஆராய்ச்சி வெள்ளை பாஸ்பரஸ் கண்டுபிடிப்பதில் முடிந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் தோலின் மினுமினுப் புக்கு உடம்பெங்கும் சிறுநீர் பூசிக்கொண்டார் கள் இங்கிலாந்துப் பெண்கள்.



சிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். கோமேயம்தான் சிறந்த கிருமி நாசினி என்று கண்டுபிடித்தவர்கள் இந்துக்களும் ஆப்பிரிக்கர் களும்.


ஒரு டஜன் எலிகள் கூடி ஒரு நாள் முழுக்கச் சிறுநீர் கழித்தாலும் ஒரு டீஸ்பூன்கூட நிரம்பாதாம். ஆனால், ஒரு யானை ஒரு நாளில் 49 லிட்டர் சிறுநீர் கழிக்கிறதாம்.



கொசுவுக்கும் சிறுநீர் உண்டு. ஆனால், அதன் கழிப்பறைதான் உலகத்திலேயே உயர்ந்தது. மனித உடல்தான் கொசுவின் சிறுநீர்க் கழிப்பறை. உடம்பில் ஊசிபோடும் கொசு, தன் சிறுநீரை உடம்புக்குள் கழித்துவிட்டு அந்தக் காலி இடத்தை நம் ரத்தத்தால் நிரப்பிக்கொள்கிறது.


சிங்கத்தின் சிறுநீர் வாசம் அத்துணை சீக்கிரம் தீராது. காடுகளில் குறிப்பிட்ட எல்லைகளில் சிறுநீர் கழித்துச் செல்லுமாம் சிங்கம். இது என் காடு, இதற்கு மேல் எதிரிகள் வரக் கூடாது என்று எச்சரிக்கை செய்யுமாம் சிங்கத்தின் சிறுநீர் வாசம்.


ஆட்டுக் கிடாய் தன் உடம்பெங்கும் சிறுநீரைப் பூசிக்கொள்ளுமாம். அது வெள்ளாட்டைப் பாலுணர் வுக்கு அழைத்து வெறியூட்டுமாம். ஆடுகளுக்கு 'சென்ட்’ ஆகிவிடுகிறது சிறுநீர்.


மொஹியோ பாலைவனத்து ஆமைகளின் உடம் பில் மூன்றில் ஒரு பங்கு சிறுநீர்தானாம். உடம்பில் நீர்ச் சத்து குறைந்துபோனால், சிறுநீரைத்தான் சுழற்சிக்கு அனுப்புமாம்.


மனிதனின் பிரச்னைகள் ஆரம்பமாவது இரண்டில். சிறுநீர் அதிகம் பிரிவது; மற்றும் சிறிதும் பிரியாதது. அவரவர் சிறுநீர் பருகுதல் அவரவர் நோய்தீர்க்கும் என்பதும் ஒரு மருத்துவ நம்பிக்கை.


எனவே, சிறுநீர் என்பது சிறுமைக்குரிய நீரல்ல. 'சிறுநீர் இன்றியும் அமையாது இவ்வுலகு’.''

http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2010/sep/vairamuththu-son-wedding-stills/vairamuththu-son-wedding-stills_031.jpg


பழனி பாஸ்கர், மன்னார்குடி. 


''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?'' 



''நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.
பாரதிராஜா - இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.



பிரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது.



இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?



வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?''



- இன்னும் பேசுவோம்...

நன்றி 0 விகடன்  


டிஸ்கி -

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

 




என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

 


http://onlysuperstar.com/wp-content/uploads/2011/06/Vaali_Rajini_Vairamuththu.jpg

Thursday, October 11, 2012

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன்


http://lh5.ggpht.com/-jRoOR5gKn9s/SoHJLf4OiwI/AAAAAAAAIfI/-Adh8mCNNxo/Director%252520K%252520Bhagyaraj%252520Family%252520%2525281%252529.jpg

1.   '' 'தாவணிக் கனவுகள்’ படத்தை ரீ மேக் செய்தால், பாக்யராஜ் யார்... சிவாஜி யார்? ஒரிஜினலைக் கெடுக்க மாட்டேன்... ரீ மேக் வேண்டாம் என்றெல்லாம் சொல்லாமல் பளிச்என்று சொல்லுங்கள்?'' 



''பாக்யராஜ் - சாந்தனு... சிவாஜி - ரஜினி.''




2. ''நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''



'' 'அந்த 7 நாட்கள்’ பார்த்துட்டு மணிரத்னம் சார், 'திரைக்கதையில் இதுதான் உச்சம்’னு சொன்னார். 'எப்படிங்க இப்படிலாம் கதையில ட்விஸ்ட் கொண்டுவர்றீங்க’னு ஆச்சர்யமாக் கேட்பாங்க. ஆனா, எனக்கென்னவோ என் பேரை காலாகாலத்துக்கும் சொல்ற மாதிரி பெஸ்ட் படம் இன்னும் கொடுக்கலைனுதான் தோணுது. அப்படி ஒரு படத்தை இனிமேல்தான் நான் இயக்கணும். அவை அடக்கத்துக்காகச் சொல்லலை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது மாதிரி எனக்குப் பிடிச்ச படத்தை எடுக்கிறப்போ, பாஸ்கர பாண்டியன்... உங்களுக்கு ஒரு ட்ரீட் இருக்கு.''





3. ''உங்க குரு பாரதிராஜா இயக்கத்தில் உங்களுக்குப் பிடிச்ச படம்... பிடிக்காத படம் எது?''



'' பிடிச்சது... '16 வயதினிலே’,


பிடிக்காதது 'வாலிபமே வா வா’.''



4. ''சிவாஜி, நீங்க, டி.ராஜேந்தர்... அபார திறமைசாலிகளா இருந்தும் அரசியல் வெற்றி மட்டும் உங்களுக்கு எல்லாம் எட்டாக் கனியாவே ஆயிடுச்சே... ஏன்?''



''இங்கே வரும்போது அதை நினைச்சு வரலை. சினிமா மட்டுமே லட்சியமா ஊறியிருந்தது காரணமா இருக்கலாம்.''




5. '' இந்தப் படத்தை ஏன் இயக்கினோம்னு உங்களை வருத்தப்பட வெச்ச படங்கள் என்னென்ன?'' 



''இயக்கினதுக்காக வருத்தப்படலை. 'ஏண்டா நடிச்சோம்?’னு வருத்தப்பட்ட படங்கள் உண்டு. அதை எதுக்கு வெளியே சொல்லிக்கிட்டு... விடுங்க!''


 சி.பி - நான் சொல்றேன் .ஞானப்பழம், ருத்ரா,வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே




'6. ' 'காதல்’, 'சுப்ரமணியபுரம்’, 'களவாணி’ படங்களை சாந்தனு மிஸ் செய்ததில் உங்க பங்கு என்ன?''



''அப்படிலாம் எந்தப் பங்கும் இல்லைங்க. 'காதல்’ படத்துக்குக் கேட்டப்போ சோனு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருந்தான். காதலிக்கிறது, பொண்ணைக் கூட்டிட்டு ஓடுறதுனு அவன் நடிச்சா, அது ஏத்துக்கிற மாதிரி இருக்குமானு நான் தயங்குனேன். அதான் உண்மை.



'சுப்ரமணியபுரம்’ கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போ அவனும் ஒரு பக்குவத்துக்கு வந்துட்டான். சசிகுமார் ஒரே ஷெட்யூல்ல முடிக்கிற மாதிரி டேட்ஸ் கேட்டார். சரி... கொடுத்திரலாம்னு முடிவு பண்ண சமயம், திடீர்னு அதுக்கு முன்னாடியே சோனு நடிச்சிட்டு இருந்த 'சக்கரைக்கட்டி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப் பாடல்களையும் போட்டுக் கொடுத்துட்டாரு. சோனு நடிச்சு வெளிவர்ற முதல் படம் 'சக்கரைக்கட்டி’தான்னு தாணு சாருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். அதை மீற முடியலை. எப்பவும் நம்ம வார்த்தையில் நிக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால அவன் 'சுப்ரமணியபுரம்’ பண்ண முடியாமப்போச்சு.



'களவாணி’ கதையும் எனக்குப் பிடிச்சது. கதை விவாதத்திலும் ஆர்வமாக் கலந்துக்கிட்டேன். ஆனா, அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அந்தப் படத்தில் வேறு ஒரு நடிகர் நடிச்சார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சோனுவுக்கு மூன்று வாய்ப்புகளுமே தவறிப்போனது யதார்த்தமா நடந்ததுதான்.''





7. ''நெருக்கமானவங்களைக்கூட எம்.ஜி.ஆர். அதட்டி மிரட்டிருவாராமே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. சொல்லுங்க?''




''அதட்டி மிரட்டிருவாரா... முறைச்சுப் பார்க்கிறதுலயே உண்டு இல்லைனு பண்ணிருவாருங்க!


'அண்ணா என் தெய்வம்’னு வாத்தியார் கடைசியா நடிச்ச படம் கொஞ்சமே கொஞ்சம் எடுத்ததோட நின்னுபோச்சு. காரணம், தலைவர் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் கோட்டையில் உட்கார்ந்தாச்சு. அப்ப அந்தப் படத் தயாரிப்பாளர்கள் என்கிட்ட வந்தாங்க. 'நீங்க இந்தப் படத்தை ஏதாவது பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. 'ஐயா, நீங்க முதல்ல வாத்தியார்கிட்ட கேட்டுட்டு வாங்க. இன்ன மாதிரி 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும். இதையும் தலைவர்கிட்ட சொல்லி ஒப்புதல் வாங்கிட்டு வாங்க’னு அனுப்பிவெச்சேன். திடீர்னு தலைவர்கிட்ட இருந்து அழைப்பு. 'கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க’னு ஆளுங்க வந்து நிக்கிறாங்க. 



என்னமோ ஏதோனு கலவரத்தோட வாத்தியார் வீட்டுக்குப் போனேன். வீட்ல பயங்கரக் கூட்டம். ஏகப்பட்ட பெரிய மனுஷங்க அவரைப் பார்க்கக் காத்துட்டு இருந் தாங்க. ஆனா, என்னை உடனே உள்ள வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போனேன். வேற எதுவும் கேட்கலை. எடுத்த எடுப்பிலேயே, 'அந்தப் படத்தை நீ டைரக்ட் பண்றேன்’னு சொன்னியானு கேட்டார். நான் மென்னு முழுங்கிட்டு, பயத்தை மறைச்சுக்கிட்டு, ஒரு வழியா 'ஆமா’னு சொல்லிட்டேன். 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னியா?’னு அடுத்த கேள்வி பாய்ஞ்சு வருது. அதுக்கு தயங்கித் தயங்கி 'ஆமா’னு சொன்னேன். அப்படியே முறைச்சுப் பார்த்தாரு. இன்னைக்குத் தொலைஞ்சோம்னு நினைச்சு வெலவெலத்து நிக்கிறேன்.



'தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகுதோ, அதை நான் கொடுத்திடுறேன். அந்த நடிகரை வெச்சுலாம் நீ டைரக்ட் பண்ணணும்னு அவசியம் கிடையாது. அதுல நீ நடி. என் ஆசீர்வாதம் உண்டு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்ன?’னு கேட்டுட்டு அப்படியே கடகடனு சிரிச்சார். நம்ப முடியாம இன்ப அதிர்ச்சியில் அப்படியே சிலையாகிட்டேன். 



சுதாரிச்சு, 'உங்களை மாதிரி எப்படிங்க நான் சண்டை எல்லாம் போட முடியும்?’னு சொல்லிப் பார்த்தேன். 'அதான் 'தூறல் நின்னுபோச்சு’ படத்துல பிரமாதமா சண்டை போட்டியே... சிலம்பம்லாம் என்னை மாதிரி சுத்தினியே... அது போதாதா?’னு கேட்டார். அந்தப் படம்தான் 'அவசர போலீஸ் 100’. அதட்டி மிரட்டுறதுல மட்டுமில்லை, தட்டிக்கொடுத்துத் தூக்கிவிடுறதுலயும் வாத்தியாருக்கு நிகர் வாத்தியார்தாங்க. இன்னும் நிறைய இருக்குங்க. வாராவாரம் வருதுல்ல... பேசுவோம் நிறைய.''





8. ''இந்த திரைக்கதை ஞானம் உங்களுக்கு எப்படி வந்ததுனு யோசிச்சிருப்பீங்களே... என்ன தோணுச்சு?'' 



''என்னைச் சுத்தி நடக்கிறதை எப்பவும் கூர்ந்து கவனிச்சுட்டே இருந்ததில் வந்திருக்கலாம். கடவுளின் அனுக்கிரஹமாகவும் இருக்கலாம்!''



9. ''தி.மு.க-வில் குஷ்புவுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 



''லேடீஸ் ஃபர்ஸ்ட். அதோட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. இதுல பெருமையா சந்தோஷப்பட்டுக்கிறதைத் தவிர, வருத்தப்பட என்ன இருக்கு?''




10. ''சமீபத்தில் பார்த்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படங் கள் என்னென்ன?''



'' 'பர்ஃபி’ ரொம்பப் பிடிச்சது. படம் முழுக்கச் சின்னச் சின்ன பஞ்ச்களா திரைக்கதையை அழகாக்கி இருந்தாங்க. 'சாட்டை’ - கொஞ்ச நீளம். ஆனா, சுத்தமான படம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைச்சா, இன்னும் விறுவிறுப்பு சேரும்!''





11. '' 'விடியும் வரை காத்திரு’... செம த்ரில்லர் படம். அந்தக் காலத்துல அப்படி ஒரு படம் எடுக்க ணும்னு எப்படி தோணுச்சு?''



''வித்யாசமா முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. அதை விட 'ஒரு கைதியின் டைரி’ என்னைக் கவர்ந்த கதை.''





12/ ''நிஜமாவே முருங்கைக்காய் 'அந்த’ விஷயத்துக்கு செட்டாகுமா?''



''இன்னுமா சந்தேகம்?''



13. ''உங்கள் குரு பாரதிராஜா விடம் கற்றுக்கொண்டது என்ன?''



''சுறுசுறுப்பு.''



- நிறைய பேசலாங்க...




அடுத்த  வாரம்


''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்..?''



''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்..?''



''திரைக்கதையை அடிப்படையா வெச்சு தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களைச் சொல்லுங்களேன்?''



டிஸ்கி1  -தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி http://www.adrasaka.com/2012/10/10.html


டிஸ்கி 2 - 

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |...

http://www.adrasaka.com/2012/10/11.html


டிஸ்கி 3 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

 
 

 

d