Showing posts with label விகடன் பேட்டி. Show all posts
Showing posts with label விகடன் பேட்டி. Show all posts

Thursday, April 18, 2013

ரம்பா , ரம்பையின் காதல் - ஜட்ஜ் சந்துரு - என்ன சம்பந்தம்? விகடன் பேட்டி

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!
வாசகர் கேள்விகள்
படம்: கே.ராஜசேகரன்
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் எந்தக் கமிஷனும், இதுவரைக்கும் பிரயோஜனமாக இந்தியாவில் எதுவுமே செய்தது இல்லையே... என்ன காரணம்?'' 

 
''கமிஷன் அறிக்கை என்பது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை (FIR) போன்றது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சஞ்சய்காந்தி குறிப்பிட்டார். கமிஷன் விசாரணை என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒரு பதவி நீட்டிப்பு. லிபரான் கமிஷன் 18 வருடங்கள் நடைபெற்றது நினைவில் இருக் கும். எல்லாப் பிரச்னைகளையும் அரசு கிடப்பில் போடுவது போன்றது, கமிஷன் விசாரணைக்கு அனுப்புவது. சுருக்கமாகச் சொல் வது என்றால், மக்கள் வரிப்பணம் பாழ்!''


கு.மணிமாலா, மயிலாடுதுறை. 


''நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் அதிகாரவர்க்கத்திடம் இருந்து அழுத்தங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதா? அப்படிஇருந் தால், அதை எப்படிச் சமாளித்தீர்கள்?'' 


 ''காலஞ்சென்ற நீதிபதி எம்.சீனிவாசன் ஒரு அரசியல்வாதியின் வியாபார சொத்து வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்த போது, நீதிபதியின் சொந்த வீட்டுக்கு மின் சாரத் தடை ஏற்பட்டது. குடிநீர்வழங்குதல் நிறுத்தப்பட்டது. இரண்டு பலமான அரசியல்வாதிகளின் வழக்கில் அவர் தீர்ப்பு அளிக்கும்போது அவருடைய தீர்ப்பில் இவ்வாறுகுறிப்பிட்டார். 'மலர் செண்டுகளையும் மலைப் பிஞ்சுகளையும் ஒரே மனநிலையில் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் எமக்குள்ளது!’


அரசியல்வாதிகளுக்குத் தீர்ப்பு சாதகமானால் அதைக் கொண்டாடுவதும், பாதகமானால் வார்த்தைகளில் நஞ்சை உமிழ்வதும் சகஜம். தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள், அல்லக்கைகளிடம் இருந்து மிரட்டல், உருட்டல், கடுமையான வார்த்தைகளில் வசைபாடுதல் தபால் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வருவது இயல்பே. அதை எல்லாம் பார்த்து அசந்துவிட்டேன் என்றால், நான் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்னாவது? அம்மாவா னாலும்... அய்யாவானாலும் நமது செயல்பாடு என்றைக்கும் மாறாது என்று இருந்துவிட்டால் எந்தக் கொம்பனும் நம்மை அசைக்க முடியாது!''


ம.ஞானம், செய்யாறு. 


''தமிழ் சினிமா பார்ப்பது உண்டா? அப்படி எனில் மனம் கவர்ந்த இயக்குநர், நடிகை, நடிகையர் யார்?'' 


''தமிழனாக இருந்து தமிழ்ப் படம் பார்க்காவிட்டால் எப்படி? எனது தீர்ப்புகளிலேயே நான் சினிமா பாடல் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறேன். சாதி அடிப்படையில் சுடுகாடு/இடுகாடு இருக்கக் கூடாது என்று எழுதிய தீர்ப்பில், 'ரம்பையின் காதல்’ படத்தில் வரும் 'சமரசம் காணா உலகிலே...’ என்ற பாட்டு முழுவதையும் குறிப்பிட்டு, 'சினிமா பாடல்களும் இன்று மக்கள் இலக்கியமாக மாறிவிட்டது. அதைக் குறிப்பிடுவதில் தவறில்லை’ என்று கூறினேன். புளூடூத்/செல்போன் வைத்து மாணவிகள் காப்பி அடித்த வழக்கில், 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படக் காட்சியை ஒப்பிட்டு, 'சினிமாவுக்கான கரு சமூகத்தில் இருக்கிறதா? அல்லது சமூகமே சினிமாவைக் காப்பியடிக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பினேன்.


எனது மனதை மிகவும் உலுக்கிய படம் 'தவமாய் தவமிருந்து’. அதில் அப்பாவாக வரும் ராஜ்கிரணைப் போல எனது தந்தையும் இருந்ததே காரணம். இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்ட எனக்கு, தாயுமானவராக இருந்தவர் என் தந்தை. மறு கல்யாணம் செய்துகொள்ளாமல் என்னுடைய மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும்... ஒற்றை ஆளாக வேலை செய்து சுமந்த சுமைதாங்கி. நான் பள்ளியிறுதி வகுப்பை முடித்தவுடன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். வறுமையில் அவருக்குச் சரியான மருத்துவச்  சிகிச்சைகூட அளிக்க முடியாத வேதனை இன்றும் என்னை வாட்டுகிறது.


 அந்தப் படம் பார்த்தவுடன் தியேட்டரிலேயே அழுகை வந்தது. எனக்குப் பிடித்த படத்தைச் சொல்லிவிட்டேன். அடுத்தது, எனக்குப் பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான். எனக்குப் பிடித்த நடிகர் ரா.பார்த்திபன். எனக்குப் பிடித்த நடிகைகள் சுகன்யா, ரம்பா.


ஏன்..? அவர்கள் எல்லாம் நான் வழக்கறிஞராக இருந்தபோது, என்னுடைய கட்சிக்காரர்களாக இருந்தவர்கள்!''


வி.மருதையன், பழநி. 

''வழக்கறிஞர்கள் வேத வாக்காகக் கொள்ள வேண்டியது எதனை?'' 


''இந்திய அரசியல் நிர்ணய சட்டசபை 26.11.1949 அன்று அரசியல் சட்டத்தின் இறுதி நகலை ஆமோதித்துத் தீர்மானம் இயற்றியது. அந்த நாள் இந்திய அரசியல் சட்டம் தோன்றிய பொன்னாள். அந்தச் சட்டம் (Constitution of India) பின்னர் 26.1.1950 முதல் அமலுக்கு வந்தது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய நாளைச் சட்ட தினமாக (Law day)  கொண்டாட அகில இந்திய பார் கவுன்சில் முடிவெடுத்தது.


 அந்தத் தினத்தில் இந்தியா எங்கும் உள்ள வழக் கறிஞர்கள் கூட்டமாக சட்ட தின சாசனத்தைப் படித்து உறுதிமொழி எடுத்துக்கொள்வது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. அந்த உறுதிமொழியில் வழக்கறிஞர்களுக்கு உண்டான பல கடமைகள் கூறப்பட்டு உள்ளன. அவற்றை எல்லாம் ஆண்டுச் சடங்காக மட்டும் கருதாமல், ஆண்டு முழுமைக்குமே கடைபிடிக்க வேண்டும். அந்த உறுதிமொழியின் ஒரு பகுதி:


‘We acknowledge the Social responsibilities and the Professional obligation of law in public interest and public service!’


'எங்களுடைய சமூகப் பொறுப்புகளையும் சட்டத்தின்பால் உள்ள எங்களுடைய தொழில்ரீதி யான கடமைகளையும், பொதுநலன்களையும், பொதுச் சேவைகளையும் நினைவுகூர்கிறோம்’- இதுவே ஒவ்வொரு வழக்கறிஞரின் வேதவாக் காக இருக்க வேண்டும்!''


கே.சிந்து பாஸ்கரன், திருநெல்வேலி. 


''ஒரு சாதாரண சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன? நம்முடைய சொத்தை நம்முடையதுதான் என்று நிரூபிக்கப் பல ஆண்டுகள் பிடிப்பது ஆரோக்கியமான ஒன்றா? இதனால்தானே குண்டர்கள், ரவுடிகள் துணிச்சலாக சொத்தை ஆக்ரமிக்கிறார்கள்? தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகத்தானே கொள்ளவேண்டும். இதற்குத் தீர்வே இல்லையா?'' 


 ''ஒரு நாள் மெரினா கடற்கரை பக்கம் நடந்துகொண்டிருந்தேன். அப்போது சாலைப் பாதுகாப்பு வாரத்தையட்டி அங்கு ஒரு விழா நடைபெற்றது. மேடையில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார், 'இந்த காமராசர் சாலையில் காலை நேரத்தில் சிவப்பு விளக்கு கள் சுழல, வெள்ளை நிற கார்களில் விரைவா கப் பயணிக்கிறார்கள் நீதித் துறைப் பிரபலங் கள். நீதிதேவன்கள் பயணிக்கும் அந்த வாகனங் கள் அந்த விரைவுப் பயணத்தில் மஞ்சள் கோட்டைத் தாண்டியும், சிக்னல் விளக்குகளை மீறியும் செல்வதைப் பார்க்கிறேன்.


 அப்படி நீதியரசர்கள் விரைந்து பயணித்தாலும், நமது வழக்குகளை விசாரித்து முடிக்க ஆண்டுகள் பல ஆகின்றனவே... அந்த விந்தைதான் எனக்குப் புரிபடவில்லை!’


அந்தப் பேச்சாளருக்கு ஒரு பாராட்டுக் குறிப்பு அனுப்பியதைத் தவிர, என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகவே கருதவேண்டும். வழக்கு விசாரிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை விவரித்தால் இங்கு இடம் போதாது. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட பிரச்னையை இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் மட்டும்தான் தீர்ப்பு வருவதை தாமதப்படுத்து வதில் சிலர் வெற்றி காண்கிறார்கள்.


 விரைந்து நீதிகிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தாலும் அதற்குத் தடை வாங்கி தாம தத்தில் வெற்றியடைகிறார்கள். மற்ற நாடு களில் வேண்டும் என்றே இழுத்தடிக்கும் கட்சிக்காரர் மிகப் பெரிய அபராதத் தொகையை இறுதியில் கட்ட நேரிடும் என்பதால் அங்கு தாமதமும் இல்லை... வல்லடி வழக்காடுவதும் இல்லை!''


எஸ்.ஆதிகுமணன், தஞ்சாவூர். 


''ஓய்வுக் காலத்தை எப்படிக் கழிக்கப்போகிறீர்கள்?'' 


''பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் ஓய்வு ஏதும் இல்லை. மனிதர்களுக்கும் வகிக் கும் பதவிகளில் இருந்து வேண்டுமென்றால் ஓய்வு தருவார்களேயன்றி, அவர் ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து ஓய்வு எடுக்க முடியாது. என் கடன் பணிசெய்து கிடப்பதே. மக்கள் சேவையே மகேசன் சேவை!''



தெ.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி. 


''உங்களுடைய பெரும்பாலான தீர்ப்புகள் சட்டப்படி வழங்கப்பட்டனவா? அல்லது கருணையின், மனிதாபிமானத்தின் அடிப்படை யில் வழங்கப்பட்டவையா?'' 


''என்னுடைய தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படியே வழங்கப்பட்டன. சட்டத்தின் ஆட்சியில் (Rule of Law) சட்டத்தின்படியே  நீதி அளிக்க முடியும். சட்டத்தின்படி நீதி (Justice according to law) என்பதே சரி. சட்டத்தின்படி தீர்ப்பளித்தாலே நீதி கிட்டியதாகத்தான் அர்த்தம். சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்ற வேண்டியது சட்டமன்றத்தின் கடமைதானே ஒழிய, நீதிமன்றத்தின் வரையறைக் குள் அவ்விதமான அதிகாரம் இல்லை. ஆனால், அதே சமயம் சட்ட வரையறைக்குள் கருணைக்கும் மனிதாபிமானத்துக்கும் இடம் உண்டு!'


'
பி.ராஜன், சென்னை-88. 


''இந்திய நீதித்துறை வரலாற்றில் தங்கள் மனம் கவர்ந்த நீதியரசர்கள் யார்? ஏன்?'' 


''நீதியரசர் தா.சத்தியதேவ்...


கடமை வீரர், கர்மயோகி, காலந்தவறாதவர். கடிகாரத்தைப் பார்த்து அவர் வேலை செய்ய வில்லை. அவர் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் கடிகாரம் தனது முள்ளைத் திருத்திக் கொள்ளும். ஓய்வுபெற்ற அன்றே தனது காரைத் திருப்பி அனுப்பிவிட்டு, வீட்டையும் காலி செய்து ஒப்படைத்துவிட்டு, இரவு ஒரு விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் பெங்களூரு சென்ற மாமனிதர். என் தந்தை இறந்தபோது நான் சிறுவன். அழ முயற்சித்தேன். ஆனால், நீதிபதி சத்தியதேவ் அவர்கள் இறந்த தினத்தில்தான் உண்மையாக அழுதேன்.


நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்...


வாழும் சரித்திரம். நடமாடும் சட்ட அகராதி. 98 வயது முதுமையிலும் எங்களுக்குத் தவறாது ஆலோசனை கூறும் மனிதநேயப் பண்பாளர். நீதிமன்றத்தில் பணியாற்றுதலும் தேசத்தின் சேவையே என்று என்னை நீதிபதி பணியேற்க வற்புறுத்தியவர். தொடர்ந்து அவருடைய அன்பும் ஆதரவும் என்னுடைய பணி சிறக்க உதவிவருகிறது!''


 அடுத்த வாரம்...


'நீதிபதிகளைக் கிண்டல் செய்து வெளிவரும் ஜோக்குகளைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?'' 

''66 ஏ சட்டப் பிரிவு பற்றி விளக்கம் தருக?'' 


''கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள தற்காலத்தில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் முதல் முழுவதும் விடுமுறை தேவைதானா

''
- இன்னும் பேசுவோம்.


நன்றி - விகடன்

Tuesday, July 26, 2011

தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா? எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்



 1. '' 'சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?'' 

''அப்படி எந்த விரிசலும் உருவாகவில்லை. அது, உருவாக்கப்பட்ட ஒரு பிரச்னை. என்னையும் என் எழுத்தையும் அறிந்தவர்களுக்கு, அதன் உண்மை தெரியும். எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர்களான பாமா, திலகவதி, தாமரை, தமயந்தி, சந்திரா, உமா மகேஸ்வரி, தாமரைச்செல்வி, அனார், லதா, தென்றல், ஜெயஸ்ரீ, ஷைலஜா, ஜெயந்தி சங்கர், தமிழ்நதி  போன்றவர்களுடன் இணக்கமான நட்பும் அன்பும்கொண்டு இருக்கிறேன். அவர்கள் படைப்புகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். ஆகவே, என்னளவில் எந்த விரிசலையும் நான் உணரவில்லை!''



'2. 'மறைக்காமல் சொல்லுங்கள்... தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?'' 

''வண்ண நிலவன். அவரது 'எஸ்தர்’ சிறுகதைபோல ஒன்றை எழுதிவிட முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது!''



3''எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்து கொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்?'' 


''குடும்பம் அனுமதிப்பதால்தான். அது விட்டுக்கொடுப்பதால் உருவானதுஇல்லை. என்னைப் புரிந்துகொண்டு இருப்பதால் ஏற்படுவது, எனக்குள் சிறகுகள் இருக்கின்றன. அவை பறக்க எத்தனிக்கும் போது நான் கிளம்பிவிடுகிறேன்.

எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியைவிடவும்  வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பறியது. வீட்டைப் புரிந்துகொள்ளவே வெளியே போகிறேனோ என்றுகூடத் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்குபோல சீற்றத்துடன் துடித்துக்கொண்டே இருக் கின்றன,  சாலையின் பாடலைக் கேட்டுப் பழகியவன் அதில் இருந்து விடுபடவே முடியாது!''



4. ''ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?'' 

''இப்படி ஒரு கேள்வியை ஏன் நீங்கள் ஒருமுறைகூட அரசியல்வாதிகளிடம், நடிகர் களிடம், பிரபலங்களிடம் கேட்க மறுக்கிறீர்கள்?
ஊடகங்களில் இவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும்பற்றி அபிப்ராயம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எழுத்தாளன் தனது அறிவை, அனுபவங்களை, விரும்பும் எவருக்கும் பகிர்ந்து தருகிறானே அன்றி... அறியாமையைப் பகிர்ந்து தருவது இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது?

எழுத்தாளன் என்பவன் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறவன் மட்டும் இல்லை. எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. தன்னைச் சுற்றிய உலகின் மீதும் மனிதர்களின் மீதும் கொள்ளும் அக்கறை, ஒரு சமூக செயல்பாடு. கண்ணுக்குத் தெரியாத நோயை மருத்துவர் ஆய்வு செய்து  கண்டறிவது போன்றதுதான் எழுத்தாளன் வேலையும்.


அதற்கு, கலாசாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், மொழி, அரசியல், சினிமா, நுண்கலை, சமகாலப் போக்குகள் என்று அத்தனை துறைகளையும் அறிந்து வைத்திருக்க  வேண்டியது எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு நிறையப் புத்தகங்களைப் படிக்கவும், சலிக்காமல் பயணம் செய்யவும் மக்கள் வாழ்வை நெருங்கி அவதானிப்பதும், வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும் முக்கியமானது!''

5.''உங்கள் பயண அனுபவத்தில் மெய் சிலிர்க்கவைத்த நிகழ்வு எது?'' 

''மழை நாள் ஒன்றில் சிலிகுரியில் இருந்து சுக்னா என்ற இடத்துக்கு ஒரு வாடகை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 25 வயதான காரோட்டி, அந்த மலைப் பாதையில் நிறைய வழிப்பறி கொள்ளைகள் நடப்பதைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். எங்கள் வண்டி ஒரு சாலையில் வழி மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஒரே இருட்டு, மழை வேறு. வழி மாறி விட்டோம் என்றபடியே காரோட்டி, கொஞ்ச தூரம் போய் ஒரு குடிசை அருகே நிறுத்தி விட்டு, யாரிடமாவது வழி தெரிந்துவருவதாக இறங்கிப் போனான்.

யாரோ இருட்டுக்குள் இருந்து விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. பதிலுக்கு கார் ஓட்டியும் விசில் அடித்தான். மாறி மாறி விசில் சத்தம் போனது. பிறகு, அந்த ஆள் இருளில் மறைந்து போய்விட்டு, வேகமாகத் திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.
மழையோடு பயணம் செய்து விடிகாலை ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான், 'இருளில் ஒளிந்து விசில் அடித்தவர்கள் வழிப்பறி செய்பவர்கள். அவர்கள் 'வண்டியில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். 'ஒரு ஆள்’ என்று சொன்னேன். 'கையில் பணம் இருக்கிறதா?’ என்று தனியே அழைத்து விசாரித்தார்கள்.

நான், 'என் அண்ணனை வீட்டுக்கு அழைத்துப் போய்க்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். அவர்கள் போகச் சொல்லி விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் பணம், பொருளை எல்லாம் அடித்துப் பறித்துப் போயிருப்பார்கள்’ என்றான்.


'என்னிடம் அதிகப் பணம், பொருள் ஒன்றும் இல்லையே’ என்றதும், 'அதுதான் பெரிய ஆபத்து. ஒன்றும் இல்லாதவனை ஆத்திரத்தில் கொன்றுவிடுவார்கள்’ என்றான். அவனை மனம் நெகிழ்ந்து பாராட்டியபோது, 'இந்தப் பாதையில் வழிப்பறி நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி வராமல் வேறு பாதையில் போனால், என்னைத் தேடி வந்து அவர்கள் அடிப்பார்கள். நானும் அவர்களுக்குப் பயந்து சிலரைக் கொள்ளையடிக்க அனுமதித்து இருக்கிறேன். இது வழக்கம்தான்.

ஆனால், ஏனோ உங்களை அப்படிவிட மனசு இல்லை’ என்றான். அந்தப் பேய் மழை பெய்த இரவும் ஒருபோதும் மறக்க முடியாத அந்த காரோட்டி முகமும் மனதில் அப்படியே இருக்கிறது!''  

6.''எந்த ஓர் இலக்கும் இன்றி பயணங்களை மேற்கொள்பவர்களைப் பற்றி..?'' 


''இலக்கின்றிப் பயணம் செய்வது ஒரு சாகசம். அதற்கு மனத் துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை. இரண்டும் இருந்தால் அலைந்து பாருங்கள், உலகம் எவ்வளவு பெரியது என்று அப்போது தெரியும்.

கண்களால் பார்த்து, கடல் உப்பாக இருப்பதை அறிந்துவிட முடியாது. ருசித்துப் பார்க்க வேண்டும். இலக்கு இல்லாத பயணம் என்பது ஒரு தனி ருசி. அனுபவித்துப் பாருங்கள்... அதன் மகத்துவம் புரியும்!''


7.''நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை, எழுதாமல் இருந்து இருந்தால் பேச்சாளராக ஆகியிருப்பீர்களோ?'' 

''எழுதத் துவங்குவதற்கு முன்பாக பேசத் துவங்கிவிட்டேன் என்பதுதான் உண்மை. பள்ளி வயதிலே மேடையில் பேசி பரிசு வாங்கி இருக்கிறேன். அதற்குமுக்கியக் காரணம், நான் கேட்ட நல்ல பேச்சாளர்கள், இலக்கியச் சொற்பொழிவுகள்.
ஜெயகாந்தனின் மேடைப் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருக்கிறேன். தமிழருவி மணியனின் மணியான தமிழ்ப் பேச்சு, நெல்லை கண்ணனின் உணர்ச்சிமயமான சொற்பொழிவு, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவேசம் மிக்க உரை வீச்சு, பிரபஞ்சனின் தெளிந்த தமிழ், ஞான சம்பந்தனின் நகைச்சுவை பொங்கும் மேடைப் பேச்சு, சீமானின் ஆர்ப்பரிக்கும் முழக்கம் இப்படி எனக்குப் பிடித்த பல பேச்சாளர்கள் முன்பு, நான் வெறும் கத்துக்குட்டியே!
மலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய சொற்பொழிவு சி.டி-யை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கேலி, கிண்டல், பகுத்தறிவுச் சிந்தனைகள்! வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான்!''


8.''குழந்தைகளுக்காகவும் நீங்கள் எழுதுகிறீர்கள். பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு என்ன?'' 

''கதை கேட்பது, கதை சொல்வது இரண்டும் குழந்தைகளுக்கானது என்று நினைக்கிறோம். அது தவறு. எல்லா வயதினருக்கும் பொதுவான ஆர்வம் அது.
இன்று குழந்தைகளுக்கு நாம் கதை சொல்வது இல்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அரக்கன் உயிர் இருக்கிறது என்று  கதை சொல்லி சாதம் ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு மறைந்து போய், டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடும் குழந்தைகள் வந்துவிட்டார்கள்.  

படித்த பெற்றோர்களுக்கும் கதைகள் தெரிவது இல்லை. ஆகவே, குழந்தைகளுக் காகக் கதை சொல்வதும் எழுதுவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் இரண்டையும் செய்து வருகிறேன்.

குழந்தைகளுக்கு எழுதுவதற்கு எளிமை யான மொழியும் உயர்ந்த கற்பனையும் வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டால்தான், குழந்தைகள் விரும் பிப் படிப்பார்கள்.

கதைகளின் வழியாகவே, சிங்கமும், நரியும், முயலும், ஆமையும், தேவதையும், அரக்கனும், நம்மோடு பேசினார்கள். இன்று பெரியவர்கள் வாசிக்கும் கதைகளில் நரிக்கோ, முயலுக்கோ, அணிலுக்கோ இடம் இல்லை. இப்படி கதைக்குள் இருந்தநூற்றுக் கணக்கான உயிரினங்களைத் துரத்தி விட்டது பெரியவர்களுக்கான கதை உலகம்!


நம் வாழ்வோடு இணைந்து வாழும் சக உயிரினங்களை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் சிறார் கதைகள் தேவைப்படு கின்றன. கதை என்பது உலகைப் புரிந்து கொள்ளும் ஒரு வழி. ஆகவே, அது சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டியது அவசியம்!''

9.''உங்களுக்குப் பிடித்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யார்? ஏன்?'' 

''டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், யாசுனாரி கவாபதா, செல்மா லாகர்லெவ், ஹெமிங்வே, ஆன்டன் செகாவ், ஒரான் பாமுக், ஹருகி முராகமி, ஜோஸ் சரமாகோ, மார்க்ரெட் யூரிசனார்,  கோபே அபே, சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர், கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே என்று நீண்ட பட்டியல் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனையாளர்கள்!''

நன்றி - விகடன்