Showing posts with label ராஜீவ்காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ்காந்தி. Show all posts

Friday, December 07, 2012

ராஜீவ்காந்தி கொலைவழக்கு - X உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.கிருஷ்ணய்யர் பேட்டி

.ஆர்.கிருஷ்ணய்யர்... இந்தியாவின் மிக மூத்த, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. நீதி, அரசியல், எழுத்து, சமூகம் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த ஆளுமை. கடந்த மாதம் 98-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது 'சத்கமய’ இல்லத்தில் சந்தித்தேன்.




 ''வயதாகிவிட்டதாக உணர்கிறேன். கேட்கும் திறனை வெகுவாக இழந்துவிட்டேன். முன்புபோல எழுத முடியவில்லை. நினைவுகளை மீட்டு எடுப்பதில் பெரும் யுத்தமே நடக்கிறது. நான் எதிர்பார்த்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை. அந்த வகையில் நான் துரதிர்ஷ்டசாலி!'' என்றபடி, எதிரே பிரமாண்டமாக ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்க்கிறார். தினமும் தன் மனைவியின் புகைப்படத்தோடு அரை மணி நேரத்துக்கும் குறையாமல் கிருஷ்ணய்யர் பேசு வதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.




''நீங்கள் அமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பகிரங்க கொலை மிரட்டல்களுக்கும் அரசியல் கொலைகளுக்கும் களம் அமைக்கிறதே... கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்?''




''என் தோழர்கள் கெட்டுப்போய்விட்டார்கள். நம்பூதிரிபாட் போன்ற தோழ‌ர்கள் வாழ்ந்த மண்ணிலா இப்படி ரத்தக் கறை படிய வேண்டும்? எளிமை, தியாகம், நேர்மை, நாணயம் எல்லாம் எங்கே போயின? கொலை... அடிதடி... ரத்தம்... மிரட்டல்!


இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் பலரின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. மார்க்ஸ் இருந்தால் நொந்துகொள்வார். ஆனாலும், சிலர் அத்திப்பூ மாதிரி ஆங்காங்கே பூத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!''



''சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும் இந்தியா குடியரசாகி 62 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கின்றனவே?''



''மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பார்த்துப் பயந்த மக்கள், இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே மலைக்கவைக்கின்றன நீதிமன்ற நடவடிக்கை கள். அதுவும் உச்ச நீதிமன்றம் நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!''




''மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் இன்னமும் பல சந்தேகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்குள் ரகசியமாக அஜ்மல் கசாப்  தூக்கிலிட்டப்பட்டு இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?''




''காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு விரிவான பதிலை நானே விரைவில் எழுதவிருக்கிறேன். நிச்சயம் என் பதிலுக்கு ஆதரவுக் குரலும் விமர்சன அலையும் பெருகும்!''




''ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி... இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் பல நீதிபதிகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருணை மனுக்களுக்கு எந்தப் பதிலும் இல்லையே மத்திய அரசிடம் இருந்து?''




''எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார் கள். அவர்கள் தரப்பில் இருந்து வந்து என்னைச் சந்தித்து இருக்கிறார்கள். நானும் பல சமயங்களில் அவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ராஜீவ் காந்தியின் மனைவியே, 'இவர்களைத் தண்டிப்பதால் என் கணவர் திரும்பவும் வர மாட்டார்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். 



இதை அடிப்படையாக வைத்து உங்கள் வாதங்களை அடுக்குங்கள் என்றேன். அவர்கள் மூவரும் நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டார்கள். இனியும் அவர்களைத் தண்டிப்பது சரியல்ல. தூக்குத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தூக்குத் தண்டனையை ஒழிக்காமல் செத்துப்போனால், நான் தோற்றுப்போனவனாக உணர்வேன். அஹிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில் இப்படி ஓர் அவல நிலை நீடிப்பது வருத்தமாக இருக்கிறது. இது காந்திக்கு இழைக்கப்படும் மாபெரும் அவமானம்!''




''ஓர் அரசியல்வாதி என்ற முறையில் சொல்லுங்கள்... உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று நினைக் கிறீர்கள்?''



''ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பிறகு வேறு யாரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. இதனைச் சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!''




readers views

1. அன்பு4 Days ago
"காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்."------------> கசாப்புக்கு மட்டும் 160 அப்பாவிகளை கொல்லும் உரிமை எப்படி வந்தது? அவன் மனித ஜன்மம் இல்லை என்பதால் தூக்கிலிட்டது சரியானது. வாலி வதைப்படலத்தில் ஒரு மிருகத்தை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் என்று நீதி தர்மத்தை ராமர் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
2. இவரது பெயரிலேயே இரட்டை நிலை மனப்பான்மை பளீரென முகத்தில் அறைகிறது. பெயரிலேயே கிருஷ்ண ஐயர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படி சமத்துவத்தை மார்க்ஸிய தத்துவங்களை இவரால் கட்சிக்குள்ளேயும், பொது மக்களுக்கும் பரப்ப இயலும். சென்ற தலைமுறையை சார்ந்த மனிதர்களை பார்க்கும்போதே வெளிப்படுவது இவர்கள் என்னவோ கலாச்சார ஒழுக்கசீலர்கள போலவும் வளர்ந்து வரும் இளைய தலைமுறை என்னவோ தறிகெட்டு அலையும் தறுதலைகள் போலவும் இவர்கள் காட்டிக்கொள்ளும் பாவ்லா.

பிடித்த தலைவர் என்று நேருவை சொன்னதாலேயே இவர் மேல் எந்த ஒரு உயர்ந்த அபிமானமும் ஏற்படவில்லை. -Kalpana 
3. BALA.S7 Days ago
என்ன செய்தால் நீதித்துறையை மக்கள் தயக்கமின்றி அணுகுவார்கள், அதன் மூலம் லஞ்சம் கொடுக்க மறுக்கும் சூழ்நிலை உருவாகும் என இது போன்றவர்கள் எழுதலாம். பழங்கதை பேசி பயனில்லை. காந்தி கால இந்தியாவில் தூக்கை ஒழிக்கலாம், சோனியாகாந்தி காலத்தில் அது இயலாது என்பதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக வேண்டும்.
 thanx - vikatan

Thursday, April 12, 2012

பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ராஜீவ் காந்தி - பழ நெடுமாறன் வெளியிடும் உண்மைகள்




1. ''பிரபாகரனுடனான உங்கள் உறவு எப்படி இருந்தது?''

''உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். 1990-ம் ஆண்டுகளில் ஈழப் போராட்டம் தீவிரமாக நடந்துவந்த நேரம். இந்திய ராணுவம் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் துப்பாக்கிகளுடன் திரிந்துகொண்டு இருந்தனர். அந்தச் சூழலில் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நான் ஈழம் சென்றேன். நான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் புலிகளின் முன்னணித் தளபதிகள் உட்பட பலரும் பிரபாகரனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பிரபாகரன் திடீரென, 'வாருங்கள், ஓர் இடத்துக்குப் போவோம்என்று என்னையும் காசி ஆனந்தனையும் அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார்.
அது ஓர் அடர்ந்த காடு. சிறிது தூரம் சென்ற பிறகு காட்டின் நடுவே சிறு பொட்டல்வெளி இருந்தது. அங்கு புலிகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். 'இதுதான் துப்பாக்கி சுட்டுப் பயிற்சி எடுக்கும் இடம்என்று கம்பீரமான குரலில் கூறினார் பிரபாகரன். அங்கு மரத்தினால் ஆன ஒரு பொம்மை இருந்தது. அதன் நடுவே சுடுவதற்கு உரிய இலக்கு வட்டங்கள் இருந்தன. பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டார். துல்லியமாக இலக்கின் நடுவட்டத்தில் குண்டு பாய்ந்தது. சிறிய தடுமாற்றம்கூட இல்லை. அடுத்தடுத்த முறையும் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் துல்லியமாகச் சுட்டார்


 நான் அதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு நின்றபோதே, 'நீங்களும் சுட்டுப் பழகுங்கள்என்று என்னிடம் துப்பாக்கியைத் தந்தார். 'நானா... நான் சுட்டுப் பழகி என்ன செய்யப்போகிறேன். வேண்டாம்!’ எனத் தயக்கத்துடன் மறுத்தேன். பிரபாகரனோ, 'சும்மா சுடுங்கள் அண்ணா!’ என்று சொல்லி, என் கையைப் பிடித்து துப்பாக்கியைவைத்து இலக்கை நோக்கிச் சுடவைத்தார். குண்டு, இலக்கின் நடுவட்டத்துக்கு வெளியே இரண்டாவது வட்டத்தில் பாய்ந்தது. சுற்றி நின்ற புலிகள், 'முதல் தடவையிலேயே இவ்வளவு நெருக்கத்தில் சுட்டுவிட்டீர்கள்என்று கை தட்டினார்கள். முதல் தடவை துப்பாக்கியால் சுட்ட அந்தச் சில நிமிடங்கள் மிகுந்த பரவசமாக இருந்தது. அதைவிட, உலகின் மிகச் சிறந்த ராணுவத் தளபதி என்று பாராட்டப்படும் பிரபாகரன் கையால் துப்பாக்கி பிடித்துச் சுட்டதை என் வாழ்நாளின் பெருமையாகக் கருதுகிறேன்!''




2. ''இந்திரா காந்தியைக் கொல்ல மதுரையில் முயற்சி நடந்தபோது நீங்கள்தான் காப்பாற்றினீர்கள். அப்போது நடந்தது என்ன?''


 ''ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்க் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக கறுப்புக் கொடி காட்டுவது ஒரு ஜனநாயக மரபு. ஆனால், இந்திரா காந்தி எதிர்க் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாதபோது மதுரைக்கு வந்தார். அப்போது தி.மு.. கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் திட்டமிட்டுக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து இந்திரா காந்தியை நானும் மற்றவர்களும் காப்பாற்றினோம். அதன் முக்கியத்துவத்தைப் பல வருடங் களுக்குப் பிறகுதான் உணர முடிந்தது.

சீக்கிய மெய்க்காப்பாளரால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, இறுதி அஞ்சலி செலுத்த நான் டெல்லிக்குப் போயிருந்தேன். தமிழ்நாடு மாளிகையின் வெளியே நின்றுகொண்டு இருந்தபோது, டெல்லியில் வசிக்கும் தமிழர் ஒருவர் வந்தார்.


 என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். இந்திரா காந்தியின் மறைவுக்கு அழுகிறார் என்று நினைத்து, ஆறுதல் சொன்னேன். அவரோ, 'கடந்த இரண்டு நாட்களாக சீக்கியர்கள் குடும்பம் குடும்பமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. ஒருவேளை, முன்னர் மதுரையில் இந்திரா காந்திக்கு ஏதேனும் நடந்திருந்தால், தமிழர் களின் நிலைமை என்னவாகியிருக்கும்?’ என்று பயந்துபோய் சொன்னார்.
சீக்கியர்களாவது அவர்களின் மத மரபுப்படி வாள் வைத்திருப்பார்கள். தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், அப்பாவித் தமிழர்களுக்கு சாவதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இந்திராவுக்கு ஏதேனும் நடந்திருந்தால், வட இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு மிகப் பெரிய தீங்கு நடந்துஇருக்கும். தமிழர்களின் மீது தீராத பழிச் சொல் படிந்திருக்கும். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் மதுரையில் இந்திரா காந்தியின் உயிரைக் காப்பாற்றியதன் முழுப் பரிமாணத் தையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது!''



3. ''பிரபாகரனுடன் நீங்கள் பேசியதில் மறக்க முடியாத சம்பவங்களைக் குறிப்பிடுங்களேன்...''


''ராஜீவ் காந்தி அவர்கள் ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டபோது, இந்திய விமானத்தை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி பிரபாகரனை அழைத்து வரச் செய்தார். அதே ராஜீவ் காந்திதான், டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரனைச் சிறைவைப்பது போலப் பிடித்துவைத்துக்கொண்டு 'இந்த உடன்பாட்டை ஏற்றே தீர வேண்டும். இல்லை என்றால் இங்கிருந்து வெளியேற முடியாதுஎன்று தீட்சித் போன்ற அதிகாரிகளைக் கொண்டு மிரட்டச் செய்தார். எந்த மிரட்டலுக்கும் அவர் பணியாதபோது 2 மணிக்கு நேரடியாக பிரபாகரனை அழைத்துப் பேசினார். அப்போது எத்தனையோ வாக்குறுதிகளை ராஜீவ் காந்தி கொடுத்தார். 'இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.


 ஆனால், எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தாலே போதும். இந்த உடன்பாடு செயல்படும் விதத்தைப் பொறுத்து நீங்கள் ஆதரிக்கலாம், ஆதரிக்காமலும் போகலாம். ஆயுதங்கள் முழுவதையும் ஒப்படைக்கத் தேவையில்லை. புலி களின் உயிர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவாதம் தரும்என்பதுபோன்ற பல வாக்குறுதிகளைக் கொடுத்தார். உடன் இருந்த பாலசிங்கம் 'இந்த வாக்குறுதிகளை எல்லாம் எழுத்துப்பூர்வமாக எழுதி இரு தரப்பும் கையெழுத்துப் போட வேண்டும் இல்லையா?’ என்று கேட்டபோது, மழுப்பலான பதில் சொல்லிவிட்டு ராஜீவ் காந்தி எழுந்து சென்றுவிட்டார். ஆனால், பிரபாகரனுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவே இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளைக் கூண்டோடு ஒழிப்பதற்கு உரிய முயற்சிகளைத்தான் ராஜீவ் காந்தி செய்தார்.

அதன் பிறகு திலீபன் உண்ணாவிரத சமயத்தில் பிரபாகரனால் அழைக்கப்பட்டு நான் ஈழம் சென்றபோது, 'ஒரு பெரிய நாட்டின் பிரதமர் இப்படிப் பொய் வாக்குறுதிகள் கொடுத்து எங்களை ஏமாற்றுவார் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனாலும், நான் இந்தியாவின் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். எங்கள் ஆயுதங் கள் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் திரும் பாதுஎன்று என்னிடம் சொன்னார்.
பிரபாகரனை எத்தனையோ முறை சந்தித்து இருந்தாலும், அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாதது. பிறகு, 'புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு இந்திய ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்என்ற வாக்குறுதியும் மீறப்பட்டு, புலிகள் இந்திய ராணுவத்துக்கு எதிராகச் சண்டையிடும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். அப்போது இந்திய ராணுவத் தளபதியாக அங்கே போயிருந்த லெப்டினென்ட் ஜெனரல் திபேந்திர சிங் தான் எழுதிய நூலில், 'இந்தியா செய்த மாபெரும் ராஜதந்திர தவறினால்தான் புலிகளுடன் போர் வெடித்ததுஎன எழுதி இருக்கிறார். இதைப்பற்றி எல்லாம் நானும் நூலாக எழுதியுள்ளேன்.''



4. ''தமிழ்த் தேசியம் என்றால் என்ன?''
 ''மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது. உதாரணமாக, அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை உள்ள முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முஸ்லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல. ஆகவே, திராவிடம் என்பதை

ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக்கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான்.
மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரஷ்யா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஜப்பானியர்கள் ஜப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.
தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்!''
- அடுத்த வாரம்
''இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறீர்கள். ஏன்?''  
''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகான தமிழக அரசியல் என்னவாக இருக்கும்?''
''இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?''
- இன்னும் பேசலாம்... ஆனந்த விகடன் இதழில் இருந்து