Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Tuesday, August 11, 2015

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.
என்ன காரணம்?
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.
எது தாழ்சர்க்கரை?
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.
எப்படி வருகிறது?
சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்ப அறிகுறிகள
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் அதிகமாக வியர்ப்பது.
உடல் குளிர்ச்சியாக இருப்பது.
உடல் தளர்ச்சி.
படபடப்பு.
உடல் நடுக்கம்.
அதிகப் பசி.
தலைவலி.
தலைசுற்றல்.
பார்வை குறைவது.
இதயத் துடிப்பு அதிகரிப்பது.
அடுத்த கட்ட அறிகுறிகள்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.
l பேச்சு குழறுதல்.
l மனக் குழப்பம்.
l அரை மயக்கம் (Semiconsciousness).
இறுதி கட்ட அறிகுறிகள்
l வலிப்பு வருவது.
l முழு மயக்கம் (Unconsciousness).
l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.
முழு மயக்கம் ஏற்பட்டால்?
முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?
டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.
பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.
எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.
தடுப்பது எப்படி?
l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.
தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
l தாமதமாகச் சாப்பிடுவது.
l விரதம் இருப்பது.
l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
l வெறும் வயிற்றில் மது அருந்துவது.
யாருக்கு வருகிறது?
கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
என்ன முதலுதவி?
தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Monday, October 28, 2013

Chaappa Kurishu - கிளு கிளு கில்மா மலையாள சினிமாவா? ஒரு பார்வை 18+

சில சினிமாக்களை வெறும் இரண்டு மணி நேரப் பொழுதுபோக்கு எனக் கடந்துவிட முடிவதில்லை. அப்படி கடக்க முடியாத ஒரு படம் மலையாளத்தில் வெளியான 'சப்பா குரிசு'. படம் பார்த்துவிட்டு படம் குறித்து ஃபேஸ்புக்கில் சில வரிகள் எழுதியிருந்தேன். "படம் நல்லாருக்கா?" என்ற உரையாடல்களில், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது "நெஜமாகவே நெட்ல அப்படி இருக்குதா?" என்ற இருவரின் கேள்விதான். 


"நெட்ல இண்டியன் ஸ்கேண்டல் வீடியோனு தேடிப்பாருங்க, அப்ப புரியும்!" என்றேன். 


கேட்டவர்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஒருவேளை அவர்கள் தேடியிருந்தால் அதுகுறித்து மேற்கொண்டு என்னிடம் கேட்கவோ பேசவோ ஏதும் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு கிடைத்த வீடியோ காட்சிகளில் பெரும்பாலும் பெண்களே பலிகடாக்களாக இருந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்பதே. 


காமம் நிதர்சனமானது. வெகு இயல்பானது. வெகு அழகானதும் கூட. தெரிந்தோ தெரியாமலோ அது குறித்த விழிப்புணர்வை, கல்வியைக் கொடுக்காமல், அதைப் பொத்திவைத்து ஒரு எட்டாப் பொருளாக, பாவமாக, குற்றமாக பாவனைகள் ஏற்படுத்தி, எட்டாப் பொருள் கிட்டினால் ஏற்படும் பரவசத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறோம். 




ஒரு காலத்தில் வயது வந்தவர்களுக்கான படங்கள், காட்சிகள் கிடைப்பது அரிதினும் அரிது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒன்றோ இரண்டோ திரையரங்குகள் மட்டுமே தீனி போடும். இன்றைக்கு இணையத்திலும், எம்எம்எஸ் வழியாகவும் வேண்டிய நொடியில் கிட்டுகின்றன. முன்பெல்லாம் அதெற்கென நடிகர்கள் நடித்து, இயக்கிய படம், காட்சிகள் மட்டுமே கிடைக்கும். 


ஆனால் இன்றைக்கு கிடைப்பவை 90 சதவிகிதம், நிஜமாய் நிகழ்ந்தேறிய காட்சிகள். இருளும் ஒளியுமாய், சில சமயம் தலையைப் திருப்பிப் பார்க்க வேண்டிய கோணத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 


மிக மிக அரிதாக அதற்கென நடிப்பவர்கள், வெகு அரிதாக கணவன் மனைவியாக இருப்போர், பெரும்பாலும் காதல் இணைகள், அதைவிடப் பெரும்பாலும் பிறன்மனை உறவுகள் என இணையத்தின் காம வெளியெங்கும் நிரம்பிக் கிடக்கின்றனர். "எப்படி, ஏன் இவை பதிவாகின்றன?" என்பதற்கு மிகமுக்கியமான பதில் - ஆர்வம், அதீத ஆர்வம், ஆர்வக் கோளாறு, கொஞ்சமே கொஞ்சமேனும் எதிர்காலத்தில் தன் பாதுகாப்பிற்காக அல்லது அவர்களை சமாளிக்க அல்லது மிரட்டுவதற்கான வக்கிரம் என்பது மட்டுமே. 



வெப்கேம் உரையாடல்களின் போது பதிவு செய்துகொள்வது, கையில் செல்போனில் உள்ள கேமரா மூலம் சுயமாகப் பதிவு செய்துகொள்வது, செல்போனை ஒரு இடத்தில் பொருத்தி பதிவு செய்து கொள்வது என சுயமாக, விரும்பி, தெரிந்து, நம்ம போன் தானே என்னவாகிவிடப்போகிறது என்ற அசட்டு நம்பிக்கையில்தான் நிறைய நடக்கின்றன. அப்படியான காணொளிகளில், பெரும்பாலும் அதில் தென்படும் பெண்கள் ரொம்பவும் தயங்குவார்கள், அய்யே இதெல்லாம் வேணாம் என பலகீனமாக எதிர்ப்பார்கள். ஆனாலும் அவர்களின் கண்களில் பயம், எச்சரிக்கை உணர்விற்குப் பதிலாக அந்த ஆடவனுடன் அந்த நேரத்தில் கொண்டிருக்கும் பிரியத்தால், மீட்டிவிடப்பட்ட மோகத்தால், நம்மையே கொடுக்கிறோம் இதனால் என்னவாகிவிடப் போகிறதென்ற ஆழ்ந்த அசட்டு நம்பிக்கையால், தன்னைப் பகிர்ந்ததோடு தன்னை அல்லது தங்களைப் பதிவுசெய்யவும் அனுமதித்து விடுகிறாள். 

 

சில காணொளிக் காட்சிகளில் மட்டுமே அதில் ஈடுபடும் ஆடவனும் தெரிவான், மற்றபடி முழுக்க முழுக்க அதில் பெண்ணே வியாபித்திருப்பாள். இன்னொரு வகை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமென்று ஆழ்ந்திருக்கும் தருணத்தில், அதைக் காணும் ஏதோ ஒரு ஜோடி விழிகள் தன் செல்போன் வழியே அதை பதிவு செய்வதும் நடக்கின்றது. இப்படிப் பதிவு செய்யப்படுவதற்கு காரணம், பெரும்பாலும் அதை மீண்டும் மீண்டும் ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே! 



'சப்பா குரிசு' படத்தில் வரும் இரண்டு பேர் ஒரு பெருநகரத்தில் சமகாலத்தின் இரண்டு துருவங்களாக இருப்பவர்கள். நாணயத்தின் பூ, தலை என்பது போல மிக நெருக்கத்தில் அமைந்துவிட்ட துருவங்கள் என்றும் சொல்லலாம். 



கட்டுமானத்துறையை நிர்வகிக்கும், வசதிகளும், தோழிகளும் நிறைந்த அர்ஜூன் (ஃபகத் பாசில்) ஒவ்வொருவரும் இதுதான் சொகுசு என நினைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். தன்னிடம் பணிபுரியும் சோனியாவோடு (ரம்யா நம்பீசன்) மிக நெருக்கமாக இருக்கிறான். புதிய வியாபாரம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும் தருணத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் உறுதியாகிறது. தனிமையாய் தனது வீட்டில், ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளை தனது ஐபோனில் பதிவு செய்து கொண்டிருப்பவனின் அழைப்பு மணி அடிக்கிறது. வந்திருப்பது சோனியா என்பதால், கதவு திறக்கும் நொடியில் அவள் முக பாவனையைப் பதிவு செய்துகொண்டே உள்ளே அழைத்து, அணைப்பு முத்தமென ஐபோனில் பதிந்தபடி அடுத்தடுத்து முன்னேறுகிறான், அவள் ஓரிரு முறை தட்டிவிட்டு தடுக்கிறாள். அவளின் ஆசையும் நம்பிக்கையும் அதைவிடப் பெரிதாக இருக்கின்றது. அருகிலொரு பெட்டிமீது பதிவாகும் வகையில் வைத்துவிட்டு முன்னேறுகிறான். 



ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிய நோக்கிய 3310 போனை வைத்துக்கொண்டு, தனது அன்றாடங்களுக்கு போராடிக் கொண்டிருக்கும், ஒரு சூப்பர் மார்கெட் துப்புரவாளனான அன்சாரிக்கு (வினித் சீனிவாசன்) ஒரு சாலையைக் கடப்பதிலும், எதிரில் நடக்கும்போது யாரேனும் இடித்தால் அதைச் சமாளிப்பதிலும் கூட தடுமாற்றம் உண்டு. தினமும் சிக்கனமாய் மெஸ்ஸில் சாப்பிடும்போதும், பணியிடத்தில் அடிமையாக பாவிக்கும் மேலாளரிடமும் அவமானப்பட்டு நொந்துபோகிறான். அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவனையே நோக்குகிறாள், அவன் பார்வையை விரும்புகிறாள், இவனிடமே பேச விழைகிறாள், அவன் மீது பிரியம் காட்டுகிறாள். 



அர்ஜூன் சோனியா இடையே அர்ஜூன் திருமணம் குறித்து பிரச்சினை எழும் இக்கட்டான தருணத்தில் போன் தொலைந்து, அதை எப்படி இயக்குவதென்று கூடத்தெரியாத அன்சாரியின் கையில் கிடைக்கிறது. 


பயன்படுத்துவது எப்படியெனத் தெரியாமல் போனை அணைத்து வைத்திருக்கும் அன்சாரிக்கும், அந்த போனிற்குள் அந்தரங்கத்தின் வாயிலாக, மொத்த வாழ்க்கையும் அடமானம் வைத்துவிட்டு, போனை மீட்க தொடர்ந்து தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கும் அர்ஜூனுக்கும் இடையே அவ்வப்போதான உரையாடல்கள் எனத் தொடங்குகிறது கண்ணாமூச்சி போராட்டம். 

 

சிங்கம் போல் இருந்தாலும், அந்த போனிற்காக அன்சாரி சொல்வதற்கெல்லாம் ஆடும் நிலைக்கு கீழே இறங்குவதும், போனிற்குள் என்ன இருக்கிறதென்று தெரியாமலே, எதுவும் செய்யத் தயாராக இருக்கும் அர்ஜூனை வைத்து தன்னை அவமானப்படுத்திய வாடிக்கையாளர், மேலாளரைப் பழிவாங்கும் அன்சாரி, தன்னையொரு சக்தி வாய்ந்தவனாகவும் உணர்கிறான். 



போனை திருப்பித் கொடுத்துவிடலாம் என தீர்மானிக்கும் சூழலில் போன் பேட்டரி தீர்ந்துவிடுகிறது. தெரிந்த மொபைல் கடையில் சார்ஜ் போட போனைக் கொடுக்கிறான். அன்சாரி போனைத் திருடி வந்திருக்கிறான் என நினைத்த கடைக்காரர் சார்ஜ் போட்டுவிட்டு திருப்பித் தந்த அடுத்த காட்சியில் அர்ஜூன் - சோனியா அந்தரங்கம் இணையத்திலும், எம்எம்எஸிலும் உலகத்திற்கு விருந்தளிக்கப்படுகிறது. அந்தப் புள்ளியில் திருமணம் நின்று, வியாபாரம் கெட்டு, தற்கொலை முனைக்குச் செல்லும் சோனியா என எல்லாம் சிதைந்துபோகிறது. 



இணையத்தில் எளிதாய்க் கிடைக்கும் ஒரு ஸ்கேண்டல் வீடியோவை ரசிக்கும் கண்களுக்கும், அதில் கிளர்ச்சியுறும் ஹார்மோன்களுக்கும், அப்படிப்பட்ட அந்தரங்கக் காணொளிகள், நிழற்படங்கள், உரையாடல்கள் எவ்வளவு பெரிய காதலில், கட்டாயத்தில் அல்லது நம்பிக்கையின் மேல் கட்டமைக்கப்பட்டிக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்புண்டா எனத் தெரியவில்லை. 



ஒரு குறுகுறுப்பிற்காக, விளையாட்டாக, ஆர்வக் கோளாறில், விஷமத்தனமாக என ஏதோ ஒரு காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின்மேல் இருந்த காதல், பிரியம், நம்பிக்கை அல்லது கட்டாயம், எந்த வகையிலும் தொடர்பில்லாத எவரோ ஒருவரின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டு கடை பரப்பப்பட்டு, அதில் ஈடுபட்டிருந்தோரை நிலைகுலைய வைத்து சூன்யமாக்கிவிடுகிறது. 

 

கோயில் கருவறையில் பெண்களோடு அர்ச்சகர், கல்லூரி வளாகத்தில் தோழியோடு மாணவன், வகுப்பறையில் ஆசிரியையோடு தலைமையாசிரியர், நிறுவனப் பெண்களோடு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என சமீபத்தில் அதிர்வுகளை உண்டாக்கிய காணொளிகளில் அந்த அர்ச்சகர், மாணவன், தலைமையாசிரியர், அதிகாரி என அனைவருமே, தங்கள் முழு விருப்பத்தின் பேரில், சுய அறிவோடு, அந்தப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்திருக்கின்றனர். அந்தக் காட்சிகளை அவர்களாகவே விருப்பட்டு வெளியிட்டிருக்க சாத்தியங்கள் மிகக் குறைவு. கைபேசி பழுது நீக்க கொடுத்த இடத்தில், கணினியோடு இணைத்து சார்ஜ் போடக்கொடுத்த இடத்தில் என அந்தக் காட்சிகள் உருவப்பட்டு, இணையத்தில் வெளியாகி, சில நிமிட இசைவுக்கு அவர்களின் தலைமுறையே எதிர்பார்க்காத அளவு, தாங்க முடியாத அளவுக்கு சேதாரங்களை, அவமானத்தை, காயத்தை அளித்துவிட்டுப் போய்விடுகின்றன.. 



நம் அந்தரங்கங்கள், தொடர்புகள், தனிப்பட்ட முக்கிய விபரங்கள், வியாபார விபரங்கள், வங்கிப் பரிமாற்றங்கள், பயணங்கள் உட்பட அனைத்துமே கையடக்க போன் அல்லது கணினியில் சுருங்கி அடைபட்டுவிட்ட சூழலில் அதைத் தொலைத்தால் எத்தனை ஆபத்து என்பதையும், அல்பத்தனமாய் ஆர்வக்கோளாறின் காரணமாய்ப் பதிவு செய்யப்படும் அந்தரங்கங்கள் எத்தனை கொடூரமான ஆபத்து என்பதையும் உணர்த்தும் பாடம் தொடர்ந்து தொடர்ந்து மக்களுக்கு நடத்தப்பட்டே தீரவேண்டும். 'சப்பா குரிசு' அப்படிப்பட்ட ஒரு பாடம் தான். 


கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் http://www.maaruthal.blogspot.in

ஈரோடு கதிர்
 
 


நன்றி - த தமிழ் ஹிந்து