Showing posts with label மன்மோகன் சிங். Show all posts
Showing posts with label மன்மோகன் சிங். Show all posts

Saturday, May 17, 2014

மன்மோகனின் 10 ஆண்டு சாதனைகள்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
கல்வியாளராகவும் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த நிதியமைச்சராகவும் மட்டுமே அறியப்பட்ட மன்மோகன் சிங்கைத் திடீரென ‘பிரதமர்’ பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்தபோது காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, நாடே திகைத்தது. ஆனால் எவருமே, ‘இந்தப் பதவிக்கு இவர் தகுதியானவர் அல்ல’ என்று சொல்லவே முடியவில்லை. பத்தாண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த பிறகு, அவருடைய பதவிக் காலத்தைப் பற்றியும் ஆட்சியைப் பற்றியும் எவரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய ஒரே பதில் - ‘இந்தப் பதவி இவருக்குத் தகுதியானது அல்ல’ என்பதுதான். 



சோனியாவின் தேர்வு
நரசிம்ம ராவைப் போல சாணக்கியத்தனத்தை மறைத்துக்கொண்டு, வெளியில் சாதாரணமாகத் தெரியும் எந்த காங்கிரஸ் தலைவரிடமும் பிரதமர் பதவியை ஒப்படைக்கக் கூடாது. அப்படி ஒப்படைத்தால், பிறகு காங்கிரஸ் கட்சியும் தன்னிடம் இருக்காது என்று நன்கு புரிந்துகொண்ட சோனியா காந்தி செய்த தேர்வுதான் மன்மோகன் சிங். மன்மோகன் பிரதமரானபோது, ‘ஓரிரு ஆண்டுகள் கழித்து, இவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சோனியாவே அமர்ந்துவிடுவார் அல்லது மகனைக் கொண்டுவந்துவிடுவார்’ என்று பலரும் நினைத்தார்கள். தானோ தன் மகனோ ஆட்சியில் அமர்ந்தால்கூடச் செய்ய முடியாததை மன்மோகனை அமரவைத்துச் சாதித்துக்கொண்டார் சோனியா



.
குடும்ப ஆதிக்கம்
‘மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர்’ என்று பலர் விவரம் புரியாமலேயே விமர்சிக்கின்றனர். நேரு குடும்பத்துக்குத்தான் தலைமைப் பதவியும் அதிகாரமும் என்பது காங்கிரஸின் எழுதப்படாத வேதமாக இருக்கும் நிலையில், அந்தக் கட்சியில் சோனியாவால் பார்த்து பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி அதிகாரங்கள் இருக்கும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களின் வெற்று விமர்சனம் இது. அவர் நினைத்ததைச் சில துறைகளில் செய்துகொள்ளவும் அவருக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. 



இந்தியா முழுக்க எல்லாக் கட்சிகளிலும் இதே குடும்ப ஆதிக்கம்தான். (இடதுசாரிக் கட்சிகள் விதிவிலக்கு). எனவே, இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங்கைக் குறைசொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. குடும்ப ஆதிக்கம் உள்ள கட்சியில் தரப்படும் பதவியை எப்படி வகிக்க வேண்டும், என்னென்ன அதிகாரங்கள், என்னென்ன சுதந்திரங்கள் என்பதை மன்மோகன் வெகு எளிதாகக் கற்றுக்கொண்டுவிட்டார். எனவே, பத்தாண்டுகளும் இரு தலைவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவியது. 



முதல் முறையும் இரண்டாவது முறையும் 

 
முதல் ஐந்தாண்டு காலத்தில் மன்மோகன் சிங் தனக்கென்று சில விதிகளை வகுத்துக்கொண்டு செயல் பட்டதைப் போலத் தெரிந்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இப்படி ஆட்சி செய்த பிறகு, நம்பிக்கை அதிகரித்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் சோனியா காந்தியின் சம்மதத்தின்பேரில் துணிச்சலான முடிவுகளை எடுத்தார். வெளியிலிருந்து ஆதரித்த இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்ற போதிலும் அரசு கவிழாது என்ற நிலை ஏற்பட்டது அவரை மேலும் உற்சாகப் படுத்தியது. 


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இடதுசாரிகள் இல்லாத குறையை மம்தா பானர்ஜி பூர்த்திசெய்தார். மத்திய அரசு உருப்படியாக நடக்க விடாமல் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேலும் தீவிரப்படுத்தவே மன்மோகன் விரும்பினாலும் சோனியாவுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. மேலும், தேசிய ஆலோசனை கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகி, மன்மோகனுக்குச் சம அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மகிழ்ந்தார் சோனியா. அத்துடன் முக்கிய கொள்கை முடிவுகளை அவரும் சமயங்களில் அவருடைய மகனுடன் ஆலோசனை கலந்தும் எடுக்க ஆரம்பித்தார். வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைந்தன. தொடர்ந்து தொழில்துறையில் மந்தநிலை ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்கள் வெளிப்பட்டு அரசுக்குத் தாள முடியாத அவப்பெயரும் பின்னடைவும் ஏற்பட்டது. 



முதல் ஐந்தாண்டு காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்ததாகப் புகழப்பட்ட மன்மோகன், அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எல்லாத் துறைகளிலும் தோல்வியையும் கண்டனங்களையும் பெருமளவு சம்பாதித்தார். எனினும், இந்திய வரலாற்றில் மன்மோகன் நல்லவராகவே இடம்பெறு வார். அவரது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகள் காலப் போக்கில் மறக்கப்பட்டுவிடும்; வெற்றிகள் நினைவுகூரப் படும். ஆனால், தங்கள் சாதனைகளை வெளியுலகத்துக்குச் சரியான விதத்தில் விளம்பரப்படுத்துவதற்கு காங்கிரஸ் தலைவர்களுக்கும் மன்மோகனுக்கும் தெரியாததுதான் அவர்களின் துரதிர்ஷ்டம். இந்த விஷயத்தில் அவர்கள் பா.ஜ.க-விடமிருந்தும் மோடியிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய. 



மன்மோகன் ஆட்சியின் தோல்விகள், பலவீனங்கள் ஊரறிந்தவை. அந்தத் தோல்விகளைவிட அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மிக முக்கியமானவை. அந்தச் சாதனைகளின் பட்டியல் இங்கே: 



மன்மோகனின் சாதனைகளில் சில 


 
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2006-ல் 200 மாவட்டங்களில் அறிமுகம். பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் அமல்.
• மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க 2005-ல் சட்டம்.
• தகவல் அறியும் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றம்.
• வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம்.
• நிலம் கையகப்படுத்தப்பட்டால், நியாயமான இழப்பீடு வழங்கச் சட்டம்.
• கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம், மறுவாழ்வுத் திட்டம் 2012.
• மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
• 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 8 புதிய ஐ.ஐ.டி-கள், 7 ஐ.ஐ.எம்-கள், 30 மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரத் திட்டம்.
• நபர்வாரி வருமானம் 2004-ல் 630 டாலர்களாக இருந்தது 2012-ல் 1,550 டாலர்களாக உயர்ந்தது.
• பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு 2010-ல் நீக்கம்.
• டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு 2013-ல் பகுதியாக நீக்கம்.
• உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு.
• ரயில்வே துறையில் 2008-ல் ரூ.90,000 கோடி ரொக்க உபரி.
• 2008 அக்டோபர் 22-ல் சந்திரயான்-1 ஏவப்பட்டது.
• ஆக்கபூர்வப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.
• டெல்லி-மும்பை, பெங்களூரு-சென்னை தொழில்கூடத் தொகுப்புகள் கட்ட ஒப்பந்தம்.
• சீனாவுடன் வர்த்தகம் 7,000 கோடி டாலர்களாக உயர்வு.
- சாரி, தொடர்புக்கு: [email protected]

Thursday, October 17, 2013

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரும் குற்றச்சதி புரிந்தவரே: -சர்ச்சை

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரும் குற்றச்சதி புரிந்தவரே: முன்னாள் செயலர் பரேக் கருத்தால் சர்ச்சை



நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முடிவுகளில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் நேர்மையாகவும் சரியாகவுமே முடிவுகளை எடுத்தோம். இதில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ நினைப்பது ஏன் என்றே தெரியவில்லை.


ஆனால், ஒருவேளை குற்றச்சதி இருப்பதாக கருதினால், இதில் பலரும் பல்வேறு வகையில் குற்றச்சதி புரிந்தவர்களே. பிரதிநிதி என்ற வகையில், கே.எம்.பிர்லாவும் ஒரு குற்றச்சதி புரிந்தவர், இந்த விஷயத்தை ஆய்வு செய்து பரிந்துரைத்த வகையில் நானும் குற்றச்சதி புரிந்தவர், இறுதி முடிவு எடுத்தவர் என்றவர் என்ற வகையில் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் மூன்றாவதாக குற்றச்சதி புரிந்தவரே.


எனவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ கருதினால், பிர்லாவையும் என்னையும் மட்டுமே ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? பிரதமரையும் சேர்க்க வேண்டுமே. ஒரு குற்றச்சதி நடந்திருந்தால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பங்கு இருக்கிறது அல்லவா?" என்றார் பரேக்.


பாஜக வலியுறுத்தல்


நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் வெளியிட்டுள்ள கருத்து, மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கில், நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். பரேக்கின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரீசிலிக்க வேண்டும்" என்றார்.


சி.கே.பிர்லா, பரேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு


முன்னதாக, நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (46), நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பரேக் ஆகியோர் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.


மும்பை, டெல்லி, ஹைதராபாத், புவனேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் பிர்லா நிறுவன அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1993 முதல் 2010 வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஒரு லட்சத்துக்கு 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) சுட்டிக் காட்டினார்.


நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்கள் மீதான விசாரணையை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர் தாசரி நாரயண் ராவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

THANX - THE TAMIL HINDU

READERS VIEWS

1. மெளனத்தை கலைத்துவிடுங்கள்(மனதுக்குள் குமறி அழுவது தெரிகிறது)பிரதமர் அவர்களே ஒருவர் என்னடா நான்சென்ஸ் என்று கூறுகிறார்(தலைசிறந்த பொருளாதார மேதை கையை கட்டி போட்டுவிட்டார்கள்) இப்படி தேவையா ஒரு பதவி நீங்கள் பின்ன நாளில் ஒரு சுயசரிதம் எழுதுவீர்கள் என்பது என் திண்ணம் அப்பம் தெரியும் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது நிச்சயம்

2  படித்தவன் ஏமாற்றினால் ஐயோ என்று போவன் பாரதி . நிலக்கரி ஊழல் செய்தவர்கள் கதியும் அப்படித்தானே ஆகும்


3  மிக நல்ல பிரதமர். எல்லோரும் ஊழல் செய்த பிறகு, கடைசியாகச் செய்துள்ளார். லாலுவிற்கு தண்டனை கொடுத்தும் அவர் சிறை செல்லவில்லை. அதுபோல் இந்த குற்றச்சாட்டும் விசாரிக்க பல வருடங்களாகும்.


4  என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாரதி பாடியது போல் என்று முடியும் இந்த நிலக்கரி ஊழல் விசாரணை? கலியுகம் முடிவதிர்க்கு முன்?