Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, June 21, 2015

எலி - மக்கள் பார்வை - பாசா? ஃபெயிலா?

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் நான்காவது படம், யுவராஜ் தயாளன் - வடிவேலு கூட்டணியில் இரண்டாவது படம் என்ற இந்தக் காரணங்களே 'எலி' படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
'வின்னர்', 'தலைநகரம்', 'மருதமலை', 'கிரி', 'எல்லாம் அவன் செயல்', 'காவலன்' படங்களில் பார்த்த வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற அலாதி ஆர்வமும் இன்னொரு காரணம்.
வடிவேலு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாரா?
திருடனாக இருக்கும் வடிவேலு உளவாளியாகி, கடத்தல் கும்பலை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு திருடன் வடிவேலு போலீஸ் வடிவேலு ஆகிறார்.
இந்த ஒற்றை வரிக் கதையை வைத்துக்கொண்டு ஒரு விழிப்புணர்வையும் கொடுக்கத் துணிந்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
புகைப் பிடிப்பது புற்றுநோயை உருவாக்கும். உயிரைக் கொல்லும். மற்றவர் உயிரையும் சேர்த்துக் கொல்லும் என்று வடிவேலு தனக்கே உரிய பாணியில் எச்சரிக்கை வாசகத்தைப் படிக்கும்போதே சிரிப்பு வந்துவிடுகிறது.
'எலி'யின் ஆட்டம் ஆரம்பம் என்று நினைத்துக்கொண்டு தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் படம் நிசப்தமாகி, படம் பார்க்க ஆரம்பித்தனர்.
'எலி' மாதிரி சின்ன சின்ன ரியாக்‌ஷன் கொடுக்கும் வடிவேலு சில திட்டங்கள் தீட்டி, திருடுகிறார். போலீஸ் வீட்டில் திருடும்போது மட்டும் கவனம் ஈர்க்கிறார். ரசிகர்கள் பலே என்று கை தட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அரங்கம் முழுக்க நிசப்தம் மட்டுமே நிலவியது.
போஸ் வெங்கட்டைப் பார்த்து ஜெய்சங்கர் மாதிரி டிரஸ் பண்ணியிருக்கார் என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.
இப்படியே நகர்ந்து, ஊர்ந்து, தள்ளிவிட்டு முதல் பாதி முடிகிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் போகிறேன் பேர்வழி என்று எதையோ சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
வடிவேலு தான் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை சொல்லிக்கொண்டே செய்கிறார். இவனை பிடிச்சா அவனை பிடிச்சிடலாம். அப்போ இவனை ஃபாலோ பண்ணலாம் என்று சொல்கிறார். சொன்னதையே செய்கிறார். இதுவே மிகப்பெரிய சோர்வையும், அலுப்பையும் உண்டாக்கிவிடுகிறது.
அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ன பதற்றமோ, வேகமோ இல்லாமல் திரைக்கதை நகர்வேனா என்று அடம்பிடிக்கிறது.
வழக்கமாக சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போடும் வடிவேலு, இதில் வெறும் வேலுவாக இருப்பதாலோ என்னவோ எல்லா வெடிகளும் புஸ் ஆகிப் போனது. தியேட்டரில் காலியாக கிடந்த பாதி இருக்கைகளும் அதை உறுதிப்படுத்தின.
இரண்டாம் பாதியிலும் வடிவேலு ஸ்கோர் செய்ய முயற்சித்தாலும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லை.
வில்லனிடம் மாட்டிக்கொள்வோமோ என்று பதறித் துடித்து, 'சுத்திக்கிட்டு இல்லை. வழி தெரியாம சிக்கிக்கிட்டு இருக்கு' என்று பேசும்போது மட்டும் அசல் வடிவேலுவைப் பார்க்க முடிகிறது. மனிதர் மற்ற இடங்களில் ஏன் சோபிக்காமல் போனார்? இத்தனைக்கும் கிளைமாக்ஸில் வடிவேலு சண்டை போட்டு ரசிகர்களின் இதயம் கவர முயற்சித்திருக்கிறார்.
பிரதீப் ராவத், ஆதித்யா, போஸ் வெங்கட், மகாநதி சங்கர் ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சண்முகராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், முத்துக்காளை ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள்.
சதாவுக்கு படத்தில் பெரிதாய் எந்த ஸ்கோப்பும் இல்லை. கொள்ளை அழகு பாடலுக்கு கிளப் டான்ஸ், இந்திப் பாடல் டூயட், சில வசனங்களில் உள்ளேன் ஐயா சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால், வசனங்களில் கூட பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை. வடிவேலு பாடிய கண்ண மேய விட்டியா பாடல் மட்டும் சுமாராக இருக்கிறது. சதாவுடன் வடிவேலு ஆடும் இந்திப் பாடலுக்கு தியேட்டரில் இருக்கும் சில ரசிகர்கள் எழுந்துபோய்விட்டனர்.
சதா அறையில் எதைத் தேடினார்? ஏன்? போலீஸூக்குள் இருக்கும் கறுப்பு ஆடு யார் என தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இப்படி ஏகப்பட்ட ஏன்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இயக்குநர் யுவராஜ் தயாளன் திரைக்கதையில் ஏகப்பட்ட தொய்வு மட்டுமே இருக்கிறது.
1960-ல் நடக்கும் கதை என்று ட்ரெய்லரிலேயே சொல்லிவிட்டார்கள். அதற்காக கதைகூட அந்தக் காலத்தில் நடப்பதைப் போல மெதுவாகவே நகர வேண்டுமா? சுவாரஸ்யமோ, புத்திசாலித்தனமோ, பார்றா என ஆச்சர்யப்படும் விதத்திலோ எந்தக் காட்சியும் இல்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் எம்ஜிஆர் காலத்தில் எம்ஜிஆர் நடித்த கதைதான். அதை கொஞ்சம் திருப்பிப் போட்டு வடிவேலுவை இட்டு நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், அதுதான் முழுமையாகப் பொருந்தாமல் உறுத்துகிறது.
வடிவேலுவிடம் இருந்த அப்பாவித்தனமும், வெகுளித்தனமும், உடல் மொழியும் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து காணாமல் போய் இருக்கிறது. அதனால்தான் காமெடிக் கதையில் கூட வறட்சியை சந்திக்க நேரிடுகிறது.
புராணக் கதை, சரித்திரக் கதை, பீரியட் கதைகளுக்கு வடிவேலு குட் பை சொல்ல வேண்டிய நேரம் இது. காவலன் வடிவேலு வந்தால் கூட வயிறு வெடித்து சிரிக்கலாம். எழுந்து நின்று கை தட்டலாம்.
ஒரு ரசிகர் புலம்பியபடியே சொன்னார்: இதுவரை வந்த வடிவேலுவின் மொத்த காமெடியையும் ரெண்டரை மணிநேரம் போட்டிருந்தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கும் என்றார்.
படம் முடிந்ததும் நாம் நினைவுகூரும் வடிவேலுவின் ஒற்றை சொல் இதுதான்... முடியல!
வடிவேலுவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான். பழைய பன்னீர்செல்வமா ஸாரி. பழைய கைப்புள்ள வடிவேலுவா வரணும்.
வருவாரா?



  • Shankar  

    வடிவேலு oன்று புரிந்து கொள்ளவேண்டும். avar அஜித்தோ விஜயோ அல்ல. அவர்களுக்கு side கிக்காக நடிக்க மட்டுமே லாயக்கு.than
    Points
    19955

    about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       



    • கண்டிப்பா வருவார்

      about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


      • Nishath  

        ஒரு ரசிகர் புலம்பியபடியே சொன்னார்: இதுவரை வந்த வடிவேலுவின் மொத்த காமெடியையும் ரெண்டரை மணிநேரம் போட்டிருந்தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கும் என்றார் உண்மைதான்

        about 24 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


        • Watcher  

          யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே. காமெடியன் பணம் சம்பாதித்து விட்டால் ஹீரோ ஆக முடியாது. பணக்காரன் ஆகலாம் அவ்வளவுதான். திறமை பணத்தைக்கொண்டு வரலாம். ஆனால் பணம் உங்களிடம் இல்லாத திறமைகளை எல்லாம் கொண்டுவந்து விடாது.
          Points
          9845

          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


          • Anbu  

            கொட்டுற மழை யிலும் முதல் காட்சி பார்த்தேனே மொத்தம் 15 டிக்கெட் இடம் மும்பை
            Points
            145

            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



            • காவலன் படத்தில் என்ன காமெடி இருக்குது. பிரண்ட்ஸ் படத்தை சொன்னாலும் தகும்


            நன்றி- த இந்து

            Tuesday, June 16, 2015

            செவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்

            நடிகருக்கும் இயக்குநருமான உறவு தாம்பத்திய உறவைப் போன்றதுதான். ஒரு நடிகருக்கு நல்ல பாத்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நடிகரைக் கதாபாத்திரமாக மாற்ற இயக்குநர் செய்யும் முயற்சிகள். செவன் பவுண்ட்ஸ் திரைப்படத்தைப் பார்த்தவுடன் இது எனக்குத் தோன்றிய எண்ணம்.
            ‘பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ வில் ஸ்மித்தின் ஜீவன் மிக்க நடிப்பைக் கொண்டு வந்த படம். கேப்ரியல் மக்கினோ என்ற இயக்குநரின் பெயர் முதல் சில முறைகள் அந்தப் படத்தைப் பார்த்தபோதுகூட மனதில் பதியவில்லை. பிறகுதான் இவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன், இவர் வில் ஸ்மித்தால் ஹாலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்ட இத்தாலிய இயக்குநர் என்று. ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாதவர் முதலில் தயங்கியிருக்கிறார். பின் வில் ஸ்மித் மேலுள்ள நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறார். பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் போலவே இந்தப் படத்திலும் வில் ஸ்மித் பல தயாரிப்பாளர்களில் ஒருவரும்கூட. இவ்விரு படங்களையும் பார்த்தபோது இவர்களின் உறவின் தரம் எளிதில் விளங்குகிறது.
            இந்தப் படத்தின் கதை மிகவும் எளிமையானதுதான். சற்று நாடகத்தனமாகக்கூடத் தோன்றலாம். ஆனால் அதைப் படமாக்கிய விதமும் நல்ல நடிப்பும் இதைச் சிறந்த படமாக மாற்றுகிறது. தவிர, கதைக் கரு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது.
            புரட்டிப் போட்ட விபத்து
            காதலியுடன் உல்லாசமாக காரில் செல்கையில், வேலை விஷயமாகக் கைபேசியில் அவசரமாகக் குறுந்தகவல் அனுப்ப முயற்சி செய்கையில் அந்த விபத்து நடக்கிறது. பல கார்கள் மோதிய விபத்தில் காதலி உட்பட ஏழு பேரின் மரணத்துக்குக் காரணமாகிறான் டிம்.
            குற்ற உணர்ச்சியால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான டிம், இரு வருடங்களில் ஒரு முக்கிய முடிவை எடுக்கிறான். ஏழு பேரின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்பது அது. தன் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் தானம் செய்ய நினைக்கிறான்.
            தான் உதவும் அனைவரும் நல்லவர்களா, கருணை உள்ளம் படைத்தவர்களா, நிஜமாகவே வசதிக் குறைவானவர்களா என்றெல்லாம் துப்பறிந்து ஒவ்வொரு ஆளாய்த் தேர்வு செய்கிறான். நுரையீரல் பாதிக்கப்பட்ட தன் தம்பிக்கு ஒரு நுரையீரல் அளிக்கிறான். அவனின் அரசுத் துறை அடையாள அட்டையை எடுத்து ஆள் மாறாட்டம் செய்துதான் ஆட்களைத் தேர்வு செய்யும் துப்பறியும் வேலையைச் செய்கிறான்.
            பார்வையற்ற இசைக் கலைஞன் ஒருவனைத் தேர்வு செய்கிறான் கண் தானத்துக்கு. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணிக்குத் தன் குடலைத் தானம் செய்கிறான். காதலனால் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கும் அவள் குழந்தைகளுக்கும் தன் வீட்டை எழுதி வைத்துவிட்டு ஓட்டல் அறைக்கு மாறுகிறான். எலும்பு நோயுள்ள ஒரு சிறுவனையும் தேர்வு செய்கிறான்.
            உயில் காத்த உயிர்
            இடையில் இதய நோய் பாதிப்பில் உள்ள எமிலி என்ற ஓர் இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அவளுடைய ரத்த வகையும் எளிதில் கிடைக்காதது. சில வாரங்களில் இறக்கும் அவளுக்கு உதவப்போக, இருவரும் நெருக்கமாகிறார்கள். தன் காதலி நினைவில் உயிர் வாழும் டிம்மிற்கு எமிலியின் அன்பை ஏற்க முடியவில்லை.
            எனினும் இறக்கும் தறுவாயில் உள்ளவள் என்ற கருணை மெல்ல அன்பாக மாறுவதையும் கவனிக்கத் தவறவில்லை. அவள் தரும் தனி விருந்தில் அவளுடன் காதல் செய்கிறான். அந்த நேரத்தில் டிம்மின் தம்பி, அண்ணனின் முரணான நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகப்பட்டு அவன் காரையும் அடையாள அட்டையையும் மீட்டுப் போகிறான்.
            எமிலி படுக்கையை விட்டு எழுவதற்குள், ஆஸ்பத்திரிக்கு ஓடி அவள் டாக்டரைச் சந்தித்து அவள் பிழைக்க வாய்ப்புள்ளதா என்று பதற்றமாகக் கேட்கிறான். இல்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் தன் இறுதிப் பணியை நிறைவேற்றுகிறான்.
            அவன் உயிலின்படி அவன் இதயம் எமிலிக்குப் பொருத்தப்படுகிறது. அவள் பிழைக்கிறாள். டிம்மின் உயில் கடிதங்கள் மூலம் அவன் உதவிய ஏழு பேர் பற்றி அறிகிறாள். மனம் உடைந்துபோகிறாள்.
            டிம்மால் பார்வை பெற்ற எர்சா குழந்தைகளுடன் இசை நிகழ்ச்சி நடக்கையில் அவனைச் சென்று சந்திக்கிறாள் எமிலி. டிம்மின் கண்களை எர்சாவிடம் கண்டு கலங்குகிறாள். அவள் அழுகையைக் கண்டவுடன், “நீ எமிலியாகத்தான் இருக்க வேண்டும்!” என்று சொல்ல டிம்மின் நினைவில், நன்றியுணர்வில் இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள்.
            குற்றவுணர்ச்சிக்குப் பிறகு
            குற்றவுணர்ச்சி தரும் பாரம் அசாத்தியமானது. சுய மதிப்பை, உறவுகளை, வேலையை, சமூகப் பொறுப்புகளை என எல்லாவற்றையும் களவாடிவிடும். தனக்கு இழைத்துக்கொள்ளும் தண்டனையாய்த் தன் முக்கிய உறவுகளையும் தண்டிக்கும். எந்த தர்க்க விதிகளுக்கும் சிக்காத சிந்தனைகளைக் கொடுக்கும்.
            தப்ப முடியாத குற்றவுணர்ச்சிகளால் பாதிக்கப்படுகையில் அதிலிருந்து மீளுதல் மாபெரும் சாதனை. அதற்கும் அடுத்த கட்டமாக அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு நற்காரியத்தின் தன் சக்திகளையும் நேரத்தையும் நினைவுகளையும் குவிப்பது மிகச் சிறந்த சுய சிகிச்சை. ஏழு பேரைத் தெரியாமல் கொன்றதற்காக ஏழு பேர் வாழ்க்கையை மாற்றத் தன் உயிரைத் தரும் பாத்திரம் பூஜிக்க வேண்டிய குணநலன் கொண்டது.
            செய்கின்ற தவறுகளுக்கு நியாயம் கற்பித்தும், பிறர் மீது பழி சுமத்தியும், தன் சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கும் இந்தக் காலகட்டத்தில் தன் தவறுக்கு வருந்தி அதன் மூலம் பிறர் வாழ்க்கையை மாற்றிய நாயகனின் தியாகம் போற்றத்தக்கது.
            டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்த ஆல்ஃப்ரெட் நோபல் தனது கண்டுபிடிப்பால் நிகழக்கூடிய அழிவை எண்ணி குற்றவுணர்வு கொண்டார். அந்தக் குற்ற உணர்விலிருந்து மீளத்தான் மனித குலத்துக்குச் சிறப்பு சேர்க்கும் பணிகளுக்கு நோபல் பரிசை நிறுவினார்.
            குற்றத்தின் பாதிப்பு எதிராளிக்குப் பல நேரங்களில் ஒரு முறைதான். குற்றம் இழைத்தவனின் குற்றவுணர்ச்சி சம்பந்தப்பட்டவருக்கு வாழ்நாள் முழுதும்கூட நீடிக்கலாம். ஆனால் இந்த உணர்வை ஏற்று, அதிலிருந்து மீண்டு, பின்னர் இயல்பு நிலையில் பிறர் துயர் நீக்கப் பணி புரிதல் என்பது ஒரு அரிய செயல். இந்தப் பட கதாநாயகன்போலத் தன்னை அழித்துக்கூடச் செய்யத் தேவையில்லை. நாம் வாழ்ந்து அதைச் செய்யலாம்.
            தன் சுயத்தால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையை மாற்றி அந்த எதிர்மறை சக்தியை, சமூகம் ஒப்புக்கொள்ளும் நேர்மறை சக்தியாக மாற்றுவதை உளவியலில் Sublimation என்பார்கள். அதுதான் மனிதத் துயருக்கான மாமருந்து எனவும் சொல்லலாம்.
            தன் துயரிலும் பிறர் நலம் காண வாழ்வதுதான் தெய்வீகம். அந்த ஒரு தெய்வீக அனுபவம் இந்தப் படைப்பைக் காண்கையில் ஏற்படுகிறது.
            தொடர்புக்கு:[email protected]

            நன்றி - த இந்து

            Saturday, June 06, 2015

            காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( மா தோ ம)

            தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிய 'காக்கா முட்டை' படம், ரசிகர்கள் மனதை அள்ளியதா?
            கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இயக்கிய குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த மணிகண்டன் வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கிறார். இந்த காரணங்களே 'காக்க முட்டை' மீது கவனம் ஈர்த்தன.
            காக்க முட்டை கதை?
            பெரிய காக்கா முட்டைக்கும், சின்ன காக்கா முட்டைக்கும் பீட்சா சாப்பிட வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை. 300 ரூபாய் பீட்சாவுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? கடைசியில் பீட்சா சாப்பிட்டார்களா? என்பதுதான் ஒரு வரிக் கதை.
            இந்த ஒரு வரிக் கதையில் எந்த பம்மாத்தும் சினிமாத்தனமும் இல்லாமல் இயல்பாக, கலகலப்பாக படத்தை நகர்த்திய விதத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர் மணிகண்டன்.
            பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும், சின்ன காக்கா முட்டையாக ரமேஷும் நடிப்பில் பின்னி இருக்கிறார்கள். மரத்தில் ஏறி காக்கா முட்டைகளை எடுக்கப் பார்க்கிறான் பெரிய காக்கா முட்டை. 3 காக்கா முட்டைகளையும் எடுத்துட்டு வா என்கிறான் சின்ன காக்கா முட்டை.
            ம்ஹும்... ஒண்ணு உனக்கு. ஒண்ணு எனக்கு. இன்னொண்ணு காக்காவுக்கு என்கிறான் பெரிய காக்கா முட்டை...அரங்கம் கரவொலியில் அதிர்கிறது. அங்கிருந்து தொடங்கிய கரவொலி படம் முழுக்க அங்கங்கே நிறைந்திருந்தது.
            அச்சு அசலான குழந்தைகள் பதிவை திரையில் பார்த்ததும், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் 'என்ன மச்சான் பாலு மகேந்திரா படம் மாதிரி இருக்கு?' என்று தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
            சிறையில் இருக்கும் அப்பாவிடம், வெளியில் இருக்கும் இரு காக்கா முட்டைகளும் சத்தம் போட்டு பேசுவது, பூனையுடன் விளையாடுவதாகச் சொல்வது ரசனையான காட்சிகள்.
            தினம் 10 ரூபாய்க்கு நிலக்கரி தூள் எடுத்து கடைக்குப் போடும் காக்கா முட்டைகள் 10 நிமிஷத்தில் 10 ரூபாய் சம்பாதிப்பது இன்னும் சிரிப்பை வரவழைக்கிறது.
            சிம்பு பீட்சா சாப்பிடுவதைப் பார்த்து, காக்கா முட்டைகளும் பீட்சா சாப்பிட ஆசைப்படுகிறார்கள். பீட்சா தித்திப்பா இருக்கும் போல இருக்குடா என்று குழந்தைகளோடு சேர்ந்து பாட்டியும் கேட்கிறாள். தியேட்டர் முழுக்க சிரிப்பலை தெறிக்கிறது.
            ஒரு கட்டத்தில் அப்பா வேணாம். பீட்சா தான் வேணும் என அடம்பிடிக்கும் காக்கா முட்டைகள் குழந்தைத்தனத்தை விடாமல், இயல்பாக இருப்பதை தியேட்டர் முழுக்க இருக்கும் ரசிகர்கள் எந்த சலனமும் இல்லாமல் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
            சிம்பு இன்னும் 5 நிமிஷத்துல வந்திடுவார்...ராகுகாலம் 5 நிமிஷத்துல வருது சார் ...- இந்த வசனத்துக்கு டைமிங்கா அடிச்சிருக்காங்க டயலாக் என்று ஒருவர் முணுமுணுத்தார்.
            பார்க்கில் சந்திக்கும் பையன் தான் வைத்திருக்கும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்க்குட்டி 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது என்கிறான்.
            வீட்டில் இருக்கும் நாயை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள். சொறி புடிச்ச நாய்க்கு 25 ஆயிரமா? போங்கடா என்று விரட்டுகிறார் ஆட்டோக்காரர். இந்தக் காட்சியை நாம் டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். ஆனால், கதைக்களத்தோடு பார்க்கும்போது அவ்வளவு இயல்பாக, நேர்த்தியாக இருக்கிறது.
            சிட்டி சென்டர் கட்டிடத்தைப் பார்த்து, ''சத்தியமா நம்மை உள்ளே விட மாட்டாங்க'' என்று சின்ன காக்கா முட்டை சொல்லும் பன்ச் சூப்பர்ல என்று சொல்லவைக்கிறது.
            ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக அபாரமாக நடித்திருக்கிறார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியில் பார்த்த ஐஸ்வர்யா நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. பக்குவப்பட்ட கதாபாத்திரத்துக்கு தகுந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
            பழரசம் கேரக்டரில் ஜோ மல்லூரி கச்சிதம். சிம்பு பீட்சாதான் சாப்பிடுவானா? ரசம் சோறு சாப்பிட மாட்டானா? என்ற ஜோ மல்லூரி கேள்விக்கும் தியேட்டர் குலுங்கத் தவறவில்லை.
            அடிக்கடி ஏதாவது ஆட்டையைப் போட்டு பொழப்பை ரமேஷ் திலக் அண்ட் கோ கூட்டணி காமெடி பண்ணுகிறார்கள்.
            அந்த கிளைமாக்ஸ் காட்சி இன்னும் அசத்தல். அந்தக் காட்சிக்கு கைதட்டல்கள் நேரம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
            இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு செய்திருப்பது படத்துக்கு கூடுதல் பலம். சைதாப்பேட்டை சந்து பொந்துகள், குப்பத்து குடிசைகள், சிட்டி சென்டர், ரயில்வே பாதைகள் என எல்லாவற்றிலும் கேமராவால் புகுந்து விளையாடி இருக்கிறார்.
            ஜி.வி.பிரகாஷ் இசை கதைக்கேற்றார்போல பொருந்திப் போகிறது. சில இடங்களில் சிலிர்க்கவும், நெகிழவும் வைக்கிறது.
            படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். நல்ல படம் பார்த்த திருப்தியில் பேசிக்கொண்டபடி, ரசிகர்கள் நகர்ந்தார்கள்.
            பசங்க ரொம்ப இயல்பா நடிச்சு இருக்காங்க. எந்த செயற்கையும் இல்லை என்று பேசிக்கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர்.
            துணிச்சலான முயற்சி என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.
            குழந்தைகள் உலகத்தை அப்படியே அழகா பிரதிபலிச்சு இருக்காங்க என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வேட்டி சட்டை மனிதர் ஒருவர்.
            பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களுக்குப் பிறகு குழந்தைகள் உலகத்தை அப்படியே காட்டிய படம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார் ஒருவர்.
            இந்தப் படத்தை தயாரித்ததற்காக தனுஷும், வெற்றிமாறனும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.


            நன்றி- த இந்து


            • Karthik Ganesh  
              நீண்ட நாட்கள் மனதில் நிற்கக்கூடிய படம்..ஐஷ்வர்யாவும் சிறுவர்களும் படத்திதில் வாழ்ந்திருக்கிறார்கள்..
              about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                 
              • Rajamanickam  
                பாலு ஜி ...
                about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Kishor  
                  very nice movie..
                  about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Gnanasekaran  
                    இந்தப்படத்தின் வருகை தமிழ் சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது. தனுஷ் அவர்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நன்றிகள்.
                    Points
                    4795
                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Johnson Ponraj  
                      நல்ல படம்.நன்றாக ஓடட்டும்.
                      Points
                      6575
                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • S.RAKESH  
                        super
                        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                        • S.RAKESH  
                          படம் சுபெரோ சூப்பர்.