Showing posts with label சமையல் குறிப்புகள். Show all posts
Showing posts with label சமையல் குறிப்புகள். Show all posts

Saturday, July 16, 2011

30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் குறிப்பிட்ட சில பெண்கள்க்கு மட்டும்)

30 வகை சேமியா ரெசிபி

'சேமியா' என்றதுமே... பாயசம், உப்புமா, கிச்சடி... அதிகபட்சம் கேசரி இவைதான் நம் நினைவுக்கு வரும். சின்ன வயதிலிருந்தே இப்படி ஒன்றிரண்டு அயிட்டங்களைத்தான் பெரும்பாலானவர்கள் சாப்பிட்டு இருப்போம்... சமைக்கத் தெரிந்து வைத்திருப்போம்!

இங்கே... சேமியாவைப் பயன் படுத்தி ஸ்வீட், சாதம், பிரியாணி, கேக் என்று விதம்விதமாக... சப்புக் கொட்ட வைக்கும் சுவையோடு செய்துகாட்டி அசத்தியிருக்கிறார் 'வெரைட்டி சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ கிருஷ்ண குமாரி ஜெயக்குமார். அத்தனை அயிட்டங்களையும் தனது கற்பனை வளத்தில், மிக அழகாக அலங்கரித் திருக்கிறார் 'செஃப்' ரஜினி!

இனி, மாதாந்திர மளிகை சாமான் லிஸ்ட்டில், 'ஐந்து பாக்கெட் சேமியா' என்று எழுதப் போகிறீர்கள்தானே!

ஸ்வீட் கோதுமை கோன்

திடீர் விருந்தாளிகளுக்கு, அதிரடியாக ருசியுடன் கூடிய பட்சணம் செய்ய வேண்டுமா? சப்பாத்திக்கு பிசைந்த மாவை, பெரிய வட்ட சப்பாத்தியாக இட்டு, ஒரு சின்ன மூடியால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்தத் துண்டுகளை கோன் வடிவத்தில் மடித்து எண்ணெயில் பொரியுங்கள். உடனடியாக, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுங்கள். சர்க்கரை ஜீராவிலும் முக்கி எடுக்கலாம். நடுவில் உள்ள இடைவெளியில் பாதாம், முந்திரி, செர்ரிப் பழம், ஜெம்ஸ் மிட்டாய் போன்றவற்றைச் செருகி விடுங்கள். சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.


மரவள்ளி பொரியல்! 

மரவள்ளிக் கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து, மழைக்கால மாலை வேளைகளில் சாப்பிடுவதுதான் பலருக்கும் வழக்கம். இதையே சைட் டிஷ்ஷாகவும் தயாரிக்கலாம். கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும். வெந்த பின்பு தண்ணீரை வடித்து, உப்பு, காரம் சேர்த்து வதக்குங்கள். பிறகு, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்தால்... சுவையான மரவள்ளிக் கிழங்கு பொரியல் ரெடி!


கலர்ஃபுல் லெமன் ரைஸ்! 

எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போது, கடலைப் பருப்புக்கு பதிலாக... பொட்டுக்கடலை போட்டு தாளித்து, கொஞ்சம் துருவிய கேரட்டை சேர்த்தால், பார்க்க கலர்ஃபுல்லாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


மல்ட்டி பர்ப்பஸ் மாவு! 

பாசிப்பருப்பை வாசம் வரும் வரை கடாயில் வறுத்துக் கொள்ளுங்கள். இத்துடன், அரை பங்கு சர்க்கரை, உரித்த ஏலக்காய் ஏழெட்டு சேர்த்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்து, பாட்டிலில் சேமியுங்கள். தேவையானபோது தேங்காய்ப்பால் சேர்த்துக் கஞ்சி யாகக் குடிக்கலாம். அல்லது ஒரு கப் பாலில், ஒரு டேபிள்ஸ்பூன் மாவைக் கரைத்து, அடுப்பில் இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, முந்திரிப்பருப்புடன் பாயசமாக பரிமாறலாம். உருக்கிய நெய் விட்டுப் பிசைந்து, பயத்தமாவு உருண்டையும் தயாரிக்கலாம்.


1.  சேமியா பிர்னி 

தேவையானவை: சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு (மூன்றும் கலந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்,  பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை சிறியதாக உடைத்து, அதனை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பிறகு, கால் டம்ளர் பாலில் சேமியாவை வேகவிட்டு, வெந்ததும் ஆற வைக்கவும். மீதியுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து... அது நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். ஆறிய சேமியாவுடன் பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு, ஏலக்காய்த்தூள், சுண்ட வைத்த பால் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்; ஃபிரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பரிமாறலாம்.  

பாயசம் போல் கெட்டியாக இல்லாமல், தளர இருந்தால் ருசியாக இருக்கும். 

2. சேமியா பகளாபாத் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் (புளிக்காதது) - முக்கால் கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி, அதனை ஆறவிடவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்த்துக் கலக்கவும். நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும்.
கூடுதல் சுவைக்காக... திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

3. சேமியா - தர்பூசணி கேசரி

தேவையானவை: சேமியா - ஒரு கப், தர்பூசணி ஜூஸ் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, சேமியா, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த சில நிமிடங் களில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பாத்தி ரத்தில் ஒட்டாமல் வந்ததும்... வறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால், கலர் பவுடர் சேர்க்காமலே இயற்கையான நிறத்துடன் சேமியா, தர்பூசணி கேசரி ரெடி!

4. சேமியா வடை 

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் - முக்கால் கப், இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரை விட்டு சேமியா சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும். நன்கு ஊறியதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி... சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் டெலீஷியஸ் சேமியா வடை ரெடி

சேமியா கிச்சடி
தேவையானவை: சேமியா - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - கால் கப், பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (மூன்றும் கலந்தது) - ஒரு டீஸ்பூன், நெய், எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சேமியாவை வறுத்துக் கொள்ளவும். கழுவி, நறுக்கிய காய்கறிகளை 5 நிமிடம் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வறுத்த சேமியாவை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன் நெய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து கொள்ள... சுவையான கிச்சடி பரிமாறுவதற்குத் தயார்.

5. சேமியா வெஜ் பிரியாணி 

தேவையானவை: சேமியா - ஒரு கப், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, காலிஃப்ளவர் (நறுக்கியது) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது), தக்காளி - ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாதூள் - தலா ஒரு டீஸ்பூன், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப். இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். நறுக்கிய காய்கறிகள், கரம் மசாலாதூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி, இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் முக்கால் பதத்தில் வெந்ததும்... சேமியா, உப்பு சேர்த்துக் கிளறி முதல் தேங்காய்ப் பால், கொத்தமல்லி, புதினா சேர்த்து மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். வாசனை வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

6.  சேமியா புலவு 

தேவையானவை: சேமியா - ஒரு கப், வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,  பீன்ஸ் - 5, பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: சேமியாவை வறுத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த காய்கறிகளுடன் உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியா சேர்த்து மெதுவாகக் கிளறி, வேக விடவும். வெந்து விட்டதற்கு அறிகுறியாக வாசம் வந்ததும் நெய் விட்டு கிளறி... நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

7.சேமியா துவரம்பருப்பு பாத் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - 2, பூண்டு (நசுக்கியது) - 4 பல், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு , கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். சேமியாவை என்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... அது சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன்... நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்த துவரம்பருப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை அதில் சேர்த்து, (கேஸ்) அடுப்பை 'சிம்’மில் வைத்து மூடி, வேக விடவும். வெந்ததும் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கூட செய்யலாம்.

8. தக்காளி சேமியா சூப் 

தேவையானவை: தக்காளி - 4, வேக வைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,  சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை வேக வைத்து, தோலுரித்து, மிக்ஸியில் போட்டு சாறு ரெடி செய்யவும். கடாயில் வெண்ணெய் விட்டு சூடானதும்... பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளிச் சாறு, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, பாலில் சோள மாவைக் கரைத்துச் சேர்க்கவும். அந்தக் கலவையை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் வேக வைத்த சேமியா, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு கலந்து  சூடாகப் பரிமாறவும்.
விருப்பப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்

9. சேமியா புட்டிங்
தேவையானவை: வறுத்த சேமியா - முக்கால் கப், பால் - அரை லிட்டர், மில்க் மெய்ட் - அரை டின், வெனிலா எசன்ஸ், ரோஸ் மில்க் எசன்ஸ் - தலா 3 சொட்டு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
அலங்கரிக்க: முந்திரி, பாதாம், பிஸ்தா (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.
செய்முறை: வறுத்த சேமியாவை பாலில் வேக வைக்கவும். வெந்ததும் அதனுடன் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு  கலக்கவும். அந்தக் கலவை கெட்டியானதும், அடுப்பிலிருந்து  இறக்கி, இரண்டு எசன்ஸையும் சேர்த்துக் கலந்து, ஒரு பாத்திரத்தில் விட்டு ஆவியில் 15-20 நிமிடம் வேக விடவும். வாசனை வந்ததும், வெளியே எடுத்து ஆற விடவும். பிறகு, ஒரு தட்டில் கவிழ்த்து வைத்தால் புட்டிங் ரெடி! இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சூடாக்கி அது ப்ரவுன் கலர் ஆனதும், புட்டிங் மேல் பரவலாக விடவும். பிறகு, அதன் மேல் முந்திரி, பாதாம், பிஸ்தா அல்லது ரூட்டி ஃப்ரூட்டி கொண்டு அலங்கரிக்கவும்.
விருப்பப்பட்டால், அலங்கரிக்க, வெனிலா ஐஸ்கிரீம் வைக்கலாம். புட்டிங் மோல்டு இருந்தால் அதைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

 10. சேமியா குல்பி
தேவையானவை: சேமியா - அரை கப், பால் - ஒரு லிட்டர், சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு.
செய்முறை: சேமியாவை வறுத்து, வேக வைத்து ஆற விடவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, கரைத்த சோளமாவைச் சேர்க்கவும். அந்தக் கலவையை சிம்மில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும். திரண்டு கெட்டியாக வரும்போது சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி எசன்ஸ் சேர்த்து, ஆற விட்டு குல்பி 'மோல்டி’ல் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கவும். குல்பி 'மோல்டு’ இல்லையென்றால், சிறுசிறு கிண்ணங்களில் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அவை நன்கு இறுகி 'செட்’ ஆனதும் வெளியே எடுத்து, தட்டில் வைத்துக் கவிழ்த்து எடுத்தால் குல்பி தயார்.  
விருப்பட்டால் பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்க்கலாம்.

11. சேமியா பக்கோடா 

தேவையானவை: சேமியா - ஒரு கப், பச்சரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது), இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, தயிர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை எண்ணெய் விட்டு வறுத்து, கைகளால் நொறுக்கி, தயிரில் அரை மணி ஊற விடவும். ஊறியதும், அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி பச்சைமிளகாய், சோம்பு விழுது, வெங்காயம், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உதிர் உதிராக எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

12.  சேமியா கட்லெட் 

தேவையானவை: வறுத்த சேமியா - அரை கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, கேரட் - ஒன்று, இஞ்சி, பச்சைமிளகாய், புதினா அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து, வேகவைத்த சேமியா, துருவிய கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.  இதற்கு தக்காளி சாஸ் சரியான சைட் டிஷ்!

 13. சேமியா இட்லி 

தேவையானவை: சேமியா - ஒரு கப், இட்லி மாவு - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: சேமியாவை வறுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுத்து ஆறவிடவும். இட்லி மாவில் கேரட், இஞ்சித் துருவல், ஆற வைத்த சேமியா சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவுக் கலவையை தட்டில் விட்டு, ஆவியில் வேகவைத்து எடுக்க புதுச்சுவையில் சேமியா இட்லி தயார்.
இதற்குக் காரச் சட்னி பெஸ்ட் காம்பினேஷன்!

14. சேமியா கொழுக்கட்டை 

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், ரவை - அரை கப், தேங்காய்த்துருவல் - 2 டேபிஸ்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பொடிக்க: மிளகு, சீரகம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வறுத்த சேமியாவை கைகளால் நொறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் உப்பு, தேங்காய்த் துருவல், ரவை, வறுத்த சேமியா, பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறவிட்டு, சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்தால்... சூப்பரான சேமியா கொழுக்கட்டை பரிமாற ரெடி!

15. சேமியா பேர்ட்ஸ் நெஸ்ட் 

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - இரண்டு, துருவிய கேரட் - ஒன்று, வேகவைத்த பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை வேக வைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிந்ததும், எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அதை ஒரு தட்டில் 'பறவைக்கூடு’ போல் பரப்பவும். துருவிய கேரட், வேகவைத்த பச்சைப் பட்டாணி, ஒரு உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்துப் பிசிறி... கூட்டின் மேல் பரவலாகத் தூவி வைக்க கூடு ரெடி!
மீதமுள்ள உருளைக்கிழங்கில் பாதியை எடுத்து சிறு சிறு முட்டைகள் போல் உருட்டி கூட்டின் நடுவில் வைக்கவும். எஞ்சியுள்ள உருளைக்கிழங்கை எடுத்து பறவைபோல் செய்து நடுவில் வைத்து புதினா, கொத்தமல்லி தூவினால்... 'பேர்ட்ஸ் நெஸ்ட்’ தயார்.
பார்க்கவே வித்தியாசமாக இருப்பதால் இதனை குழந்தைகள் ஆசையுடன் சாப்பிடுவார்கள்.


16. சேமியா பொங்கல்
தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய்யில் முந்திரி, சேமியாவை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த சேமியா மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே வேக விடவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும்... கறிவேப்பிலை, மிளகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். அதனுடன், வேக வைத்த சேமியா, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சீராகக் கலக்கவும். பிறகு, நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி பரிமாறவும். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி கலக்கல் காம்பினேஷன்!

 17. சேமியா - மாம்பழ கீர் 

தேவையானவை: வறுத்த சேமியா - கால் கப், மாம்பழம் - ஒன்று, பால் - அரை லிட்டர், சர்க்கரை - கால் கப்.
செய்முறை: வறுத்த சேமியாவை பாலில் நன்கு வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பால் - சேமியாக் கலவையை ஆற வைத்து, அரைத்த மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்கி, நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மேலே போட்டு, 'ஜில்ஜில்’ என்று பரிமாறவும்.
விருந்தினர்களையும் குழந்தைகளையும் அசத்தும் அட்டகாசமான கீர் இது!

18.  சேமியா தோசை 

தேவையானவை: இட்லி மாவு - 2 கப், வேக வைத்த சேமியா - முக்கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி மாவுடன் வேக வைத்த சேமியா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலக் கவும். தோசைக்கல் சூடான தும் எண்ணெய் விட்டு தோசை வார்த்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
புளித்துப் போகும் இட்லி மாவிலும் இதனை செய்யலாம்.  அனைத்து வகை சட்னியு டனும் பரிமாறலாம்.

 19/. சேமியா பனீர் க்ரிஸ்பி பால்ஸ் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - அரை கப், பனீர் - 100 கிராம், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரைத் துருவி, அதனுடன் வேக வைத்த சேமியா, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு சோள மாவு சேர்த்து, கையில் உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும். எளிதில் செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ் இது.


20. சேமியா - சோயா க்ரேவி 

தேவையானவை: சோயா உருண்டைகள் - 10, வேக வைத்த சேமியா - கால் கப், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (அரைத்துக் கொள்ளவும்), வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கொதிநீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் வைத்து, பிறகு அவற்றை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த தக்காளி, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி தண்ணீர் விட்டு சூடாக்கவும். லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் சோயா உருண்டை, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வேகவைத்த சேமியா, புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். இது, பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்!

21.  சேமியா மஞ்சூரியன் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - ஒரு கப், வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒன்று, மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2, இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது), குட மிளகாய் - ஒன்று, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த சேமியாவுடன் உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பாதியளவு சோள மாவு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவு, அரிசி மாவு, மீதமுள்ள சோள மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு... பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, சோயா சாஸ், நறுக்கிய குட மிளகாய் சேர்த்துக் கலந்து, பொரித்த உருண்டைகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

 22. சேமியா பான் கேக் 

தேவையானவை: சேமியா - முக்கால் கப், தண்ணீர் - கால் கப், முட்டை - 2, தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், பேகிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு.
அலங்கரிக்க: பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.
செய்முறை: சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துவிட்டு, அதனை நுரை வரும் அளவுக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் தேன், 'பேகிங் பவுடர்’, வேக வைத்த சேமியா, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் 'தவா’வினை வைத்து சூடானதும், நெய் விடவும். பிறகு மாவை தோசை போல் வார்த்து, திருப்பிப் போடாமல் சுடவும். அதன் மேல் பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி அல்லது டூட்டி ஃப்ரூட்டி தூவி... ரோல் போல் சுருட்டிப் பரிமாறவும்.

23.  சேமியா - ரவை குழிப்பணியாரம் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், ரவை - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துண்டுகள் (பொடியாக நறுக்கி, வறுத்தது) - கால் கப்.
செய்முறை: சேமியாவை அரைமணி நேரம் ஊற விடவும். வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரைத்து வடி கட்டவும். ஊற வைத்த சேமியா, வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், ரவை, பிசைந்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள் சேர்த்து பணியார மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும். குழிப்பணி யாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் விட்டு, மாவை ஒரு ஸ்பூனில் அளவாக ஒவ்வொரு குழியிலும் விட்டு, மிதமான தீயில் வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

24.  சேமியா ஆம்லெட் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - அரை கப், முட்டை - 2, வெங்காயம், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு நுரை வருமளவு நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் துருவல், வேகவைத்த சேமியா, நறுக்கிய கொத் தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு இதனை வார்த்து, மிளகுத் தூள் தூவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

 25. சேமியா - ஓட்ஸ் - கீரை அடை 

தேவையானவை: சேமியா - முக்கால் கப், ஓட்ஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய், சோம்பு அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், கீரை நறுக்கியது - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியா, ஓட்ஸ் இரண்டையும் தனித்தனியே அரைமணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் இரண்டையும் ஒன்றாக்கி, எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். சூடான தோசைக்கல்லில் மாவை கொஞ்சம் தடிமனாக வார்த்து, இருபுறமும் எண் ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இதற்கு, காரச் சட்னி கரெக்ட் காம்பினேஷன்!

26.  சேமியா ஃப்ரூட் சாலட் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - 4 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை (கலந்தது) - 2 டேபிள்ஸ்பூன், பப்பாளி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், ஆப்பிள் - ஒன்று (நறுக்கியது), வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பழங்கள் அனைத்தையும் போடவும். வேக வைத்த சேமியாவை அவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து, வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும். அதன் மீது தேன் விட்டு, ஃபிரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்று பரிமாறவும்.


27.  சாக்லெட் சேமியா 

தேவையானவை: பால் - 800 மி.லி, சாக்லெட் - 75 கிராம், சேமியா - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு.
செய்முறை: மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலை காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேக விடவும். மீதி பாலில், 'சாக்லெட்’டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது, சாக்லெட் சீராக உருகும். மொத்தமும் உருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா - பால் கலவையுடன் சேர்த்து... பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா தயார்!
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 28. சேமியா அடை 

தேவையானவை: சேமியா - ஒரு கப், புளித்த தயிர் - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, கேரட் (துருவியது) - ஒன்று, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை, ஒரு மணி நேரம் தயிரில் ஊற விடவும். ஒன்றரை மணி நேரம் கழித்து அதனுடன் இஞ்சித் துருவல், பச்சைமிளகாய், கேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். சூடான தவாவில் மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
அனைத்துவிதமான சட்னி யுடனும் சாப்பிடலாம்.

29.  சேமியா வாங்கி பாத் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - ஒன்றரை கப், பிஞ்சுக் கத்திரிக்காய் - 8, வெங்காயம் - 2, புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சிவப்பு மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, அது சூடான தும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கிய பிறகு,  பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசல், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது வேக வைத்த சேமியா சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

நன்றி - அவள் விகடன்

Saturday, July 02, 2011

மோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல் குறிப்புகள்




உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்
.
2. மோர்க்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசி,  தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும்  இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.

3.ரெடிமேட் சாம்பார் மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.  இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 4.ரவா உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.

தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5. அரிசி உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும். 

அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்

Saturday, June 25, 2011

பழ வகையில் பல வகை சமையல் செய்வது எப்படி?(வீட்டில் சமைக்கும் சில பெண்களுக்கு மட்டும் )

 ஃப்ரூட்ஸ் சமையல்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டும்தான். அதனால்தான்... காட்டு வாழ்க்கை நடத்திய வேடர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்... இன்றைக்கும்கூட காட்டில் பழங்களைத் தின்றே உயிர் வாழும் விலங்கு மற்றும் பறவைகளை எடுத்துக் கொள்ளுங்  களேன்... அவையெல்லாம் எத்தனை அழகாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

 
உடலின் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி என பல வழிகளிலும் உதவும் பழங்கள்... என்றென்றும் இளமையையும் தரக்கூடிய அற்புத வைத்தியரும்கூட!

அத்தகைய பழங்களில் 30 வகை ரெசிபிகளை அசத்தலாக செய்து காட்டியிருக்கிறார் நங்கநல்லூர் பத்மா. அவை அனைத்தும் செஃப் ரஜினியின் கை வண்ணத்தில் அழகழகாக இங்கே இடம் பிடிக்கின்றன.

பழ ரெசிபிகளை செய்து கொடுத்து ஃபேமிலியை பரவசப்படுத்துங்கள்!

1. பலே பருப்பு வடை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்புடன் சிறிது உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், 2 பல் பூண்டு, உப்பு, நான்கு தக்காளி சேர்த்து அரைத்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். பருப்பு வடையினால் ஏற்படும் வாயுத் தொல்லை, இந்த வடையைச் சாப்பிடும்போது ஏற்படாது.

2. சுலபமான சிப்ஸ் 

உருளைக்கிழங்கை மெல்லிய வட்டங்களாக சீவி, உப்பு சேர்த்து வேக வைத்து, வெயிலில் நன்றாக உலர்த்தி டப்பாவில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது மிளகாய் தூள் சேர்த்து சிப்ஸாக பொரித்துக் கொள்ளலாம்.

3. கொட்டு ரசம் 

மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, அரைத்தப் பொடியை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால்... சட்டென சுவையான 'கொட்டு ரசம்' ரெடி!

4. இஞ்சி பச்சடி 

இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, தயிருடன் சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டினால் இஞ்சி பச்சடி ரெடி! ஜீரணத்துக்கும் மிகவும் நல்லது.


5. பலா கறி 

பலாக் கொட்டையை நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, பலாக் கொட்டை துண்டுகளை போடவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, தேங்காய், மாங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

6.  பலாப்பழ சக்கவரட்டி 

தேவையானவை: பலாச்சுளைகள் - 20, வெல்லம் - 200 கிராம், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:  இது பலாப்பழ சீசன். இந்த சக்கவரட்டியை தயாரித்து வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சுகியன், பாயசம், போளி என்று விதவிதமாக தயாரித்துக் கொடுக்கலாம்.


7. பைனாப்பிள் போளி 

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், வட்டமாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லம் - 200 கிராம், நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவில் கேசரிப்பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக போளி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடியாக நறுக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,  சிறிது கெட்டியாக பாகு காய்ச்சவும். அரைத்த பைனாப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவியும் போளி சுடலாம். ஆப்பிள், வாழை போன்ற விருப்பப்பட்ட பழங்களிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

8. மாம்பழ மில்க் ஷேக் 

தேவையானவை: மாம்பழம் - 2, பால் - 500 மி.லி, சர்க்கரை - 150 கிராம்.
செய்முறை: மாம்பழத்தை தோல்சீவி மிக்ஸியில் விழு தாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். அரைத்த மாம்பழம் விழுது, சர்க்கரை ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

குறிப்பு: மாம்பழம் சூடு என்று சிலர் மாம்பழம் பக்கமே போக மாட்டார்கள். பால் சேர்த்து பருகும்போது, சூடும் தாக்காது; உடம்புக்கும் நல்லது.

9.தர்பூசணி தோசை 

தேவையானவை: தர்பூசணி - அரை கிலோ, புழுங்கல் அரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 150 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, தனியாக அரைத்து, மாவுடன் கலக்கவும். மாவில் உப்பு சேர்த்து கரைத்து காயும் தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: அரிசி, உளுந்துடன் தர்பூசணியை சேர்த்து அரைத்தால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

10. பழ வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை ஆப்பிள், பேரிக்காய் - தலா 1, மிளகு - 6 (எண்ணிக்கையில்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பச்சை ஆப்பிள், பேரிக்காயை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!

11.  சப்போட்டா கொழுக்கட்டை 

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, வெல்லம் - 100 கிராம், சப்போட்டா - 4, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து, சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பருப்பில்லாமல் பழத்தை வைத்து செய்யும் இந்தக் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருக்கும். எல்லாப்பழங்களிலும் இதேபோல் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

 12. ஆப்பிள் பர்பி 

தேவையானவை: ஆப்பிள் - 1, சர்க்கரை - 150 கிராம், தேங்காய் - அரை மூடி, ரவை - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைய விடவும். ஆப்பிள் தோல் சீவி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஆப்பிள் மற்றும் தேங்காயை சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். ரவை தூவி சேர்த்து நெய் விட்டு ஏலக்காய்த்தூள் போட்டு மேலும் கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.

குறிப்பு: தேங்காய் பர்பியை விட, பழங்களில் செய்யும் இதுபோன்ற பர்பி நல்ல டேஸ்டாக இருக்கும்.

13.  வெரைட்டி ஃப்ரூட் இட்லி 

தேவையானவை: மாம்பழம் - 1, புழுங்கல் அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா 4 துண்டுகள், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பழங்களை பொடியாக நறுக்கவும். அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து மாம்பழத்துண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நறுக்கிய பழத் துண்டுகளை கலந்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அப்படியே சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். மாம்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்தும் இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.

14.  பப்பாளி அப்பம் 

தேவையானவை: அரிசி மாவு, கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பப்பாளிப் பழத் துண்டுகள் - 100 கிராம், நெய் - 100 மி.லி, தேங்காய் - அரை மூடி.
செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். தேங்காயைத் துருவி, வெல்லம், பப்பாளித் துண்டுகள் சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், மாவுக் கலவை சேர்த்து நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் நெய் தடவி அப்பமாக ஊற்றவும். ஒரு குச்சியின் உதவியால் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கடாயிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி ஊத்தப்பமாகவும் செய்யலாம்.

15. வெரைட்டி ஃப்ரூட் சுகியன் 

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, மாம்பழம், வாழைப்பழம் - தலா 2 துண்டுகள், உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மி.லி.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாக தயாரிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தீயை மிதமாக வைத்துதான் பொரிக்கவேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சுகியன்.

16.  ஸ்ட்ராபெர்ரி ஜாம் 

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 20, பேரீச்சம்பழம் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: இஞ்சி தோல் சீவி நறுக்கி, ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பிரெட், சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். ஆப்பிள், பைனாப்பிள் பழத்திலும் இதேபோல் தயாரிக்கலாம்.

 17. வாழைப்பழ அல்வா 

தேவையானவை: வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரிப்பவுடர் சேர்த்து, நெய் விட்டு முந்திரிப்பருப்பு போட்டு நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விசேஷ நாட்களில் வாழைப்பழம் மீந்து விட்டால், இந்த அல்வா செய்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

18. பழ ஊறுகாய் 

தேவையானவை: கொய்யாப்பழம், பச்சை ஆப்பிள், பேரிக்காய், ப்ளம்ஸ், கிவிப் பழம் - தலா 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், கிவிப் பழத்தை பொடியாக நறுக்கவும். ஆப்பிள், பேரிக்காயின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். ப்ளம்ஸ் விதையை நீக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்து£ள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எண்ணெயே சேர்க்காமல் பழங்களை வைத்தே ஈசியாக இந்த ஊறுகாய் செய்யலாம். பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

19.  பழ பச்சடி 

தேவையானவை: வாழைப்பழம், ஆப்பிள் - தலா 1, கருப்பு திராட்சை - 200 கிராம், தக்காளி - 2, சர்க்கரை - 100 கிராம், செர்ரிப் பழம் - 6.
செய்முறை: வாழைப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். சிறிது வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, செர்ரிப் பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: திருமணங்களில் இந்தப் பழப்பச்சடிக்குதான் முதலிடம். விருப்பமான பழங்களிலும் இந்தப் பச்சடியை செய்து கொள்ளலாம்.


20.  மில்க் ஃப்ரூட் தூத்பேடா 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை, நறுக்கிய சப்போட்டா, நறுக்கிய ஆப்பிள் - தலா 100 கிராம், வாழைப்பழத் துண்டுகள் - 4, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாலை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சப்போட்டா, ஆப்பிள், வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். பாதாமை ஊற வைத்து முந்திரி சேர்த்து அரைத்து, சர்க்கரை ஏலக்காய்தூள் சேர்த்து கொதிக்கும் பால் விழுதுடன் கலந்து, கெட்டியாக கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். நன்றாக பிசைந்து சிறிய வட்டமாக தட்டி வைக்கவும்.

குறிப்பு: இந்த தூத்பேடா மிகவும் ருசியாக இருக்கும். கோவா தயாரிக்காமல் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தியும் செய்யலாம்.

21. சப்போட்டா சத்துமாவு உருண்டை 

தேவையானவை:  சப்போட்டா - 4, கோதுமை, தினை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, பாசிப்பருப்பு, சர்க்கரை, சோள மாவு - தலா 100 கிராம், முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சப்போட்டாக்களை தோல் உரித்து விதை நீக்கவும். கோதுமை, தினை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து சர்க்கரை சேர்த்து மெஷினில் நைசாக அரைக்கவும். இவற்றை ஒன்றாக சேர்த்து, சப்போட்டா பழம், சோள மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். வறுத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: சத்தான, பழச்சுவையுடன் கூடிய உருண்டை இது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

22. பழ பாசந்தி 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, செர்ரிப் பழம் - 4, உலர்ந்த திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். பாலை பாதியளவுக்கு சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கி ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

குறிப்பு: பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.

 23.வாழைப்பழ கேசரி 

தேவையானவை: ரவை - 250 கிராம், வாழைப்பழம் - 4, பால் - 500 மி.லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சிறிது நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நெய் விட்டு வதக்கவும். பாலைக்காய்ச்சி வறுத்த ரவையை போட்டு கிளறி, வதக்கிய வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி, இறக்கவும்.

குறிப்பு: சத்யநா ராயணா பூஜையின் போது வாழைப்பழ கேசரி செய்து நைவேத் தியம் செய்வார்கள். கேசரிப்பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

24. மாம்பழ மோர்க்குழம்பு 

தேவையானவை: மாம்பழம் - 1, மோர் - 500 மி.லி, காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கி லேசாக வேக வைத்து நன்றாகக் கூழாக்கவும். வெந்தயம், காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயை துருவி சேர்த்து அரைக்கவும். இதனுடன் மாம்பழக்கூழ், மோர், உப்பு சேர்த்து கரைத்து, சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: மாம்பழ சீசனில் இந்த மோர்க்குழம்பு செய்யலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்தும் செய்யலாம். பொரித்த பப்படம், இதற்கு சூப்பராக இருக்கும்.

25. மிக்ஸ்டு ஃப்ரூட் இடியாப்பம் 

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய  கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், உரித்து கொட்டை நீக்கிய கமலா ஆரஞ்சு சுளை - தலா 100 கிராம்.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு போல் நன்றாக வழுவழுவென அரைக்கவும். அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் மாவைப் போட்டு கெட்டியாக கிளறி, உருண்டைகளாக உருட்டவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போடவும். வெந்ததும் உருண்டைகள் மேல் எழும்பி வரும். அவற்றை தனியே எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும். இதனுடன் மாதுளை, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், கமலா ஆரஞ்சு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: வழக்கமான இடியாப்பம் போல் செய்து பழங்களுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

26. ஃப்ரூட்ஸ் பால் கொழுக்கட்டை 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - 200 கிராம் (ஊற வைக்கவும்), பால் - 500 மி.லி, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய சப்போட்டா - சிறிதளவு.
செய்முறை: ஊறிய அரிசியுடன் தேங்காயை துருவி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு வேக விட்டு எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி வேக வைத்த உருண்டைகளைப் போட்டு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதித்ததும், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், சப்போட்டா சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: வாழைப்பழம், பலாப்பழத்திலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.

27. ஃப்ரூட்ஸ் கோஸ்மல்லி 

தேவையானவை: லிச்சிப் பழம் - 10, பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பேரிக்காய், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிக்கவும். இதனுடன் பேரிக்காய், லிச்சி, ஆப்பிள், மாதுளை முத்துக்கள், உப்பு சேர்த்து மேலாக எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலக்கவும்.

 
குறிப்பு: பாசிப்பருப்புக்கு பதிலாக முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்தும் தயாரிக்கலாம். கடலைப்பருப்பு ஊற வைத்து சிறிது வேக வைத்தும் செய்யலாம். திருமண சாப்பாட்டு பந்தியில் கோஸ்மல்லிக்கு தனி இடம் உண்டு.

28.பலாப்பழ பாயசம் 

தேவையானவை: பலாச்சுளை - 10, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 200 மி.லி.
செய்முறை: பலாச்சுளையை நெய்விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, அரைத்த விழுது, வறுத்த முந்திரி,  ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: படு ருசியாக இருக்கும் இந்த பலாப்பழ பாயசம்... கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

 29.ஃப்ரூட் பொங்கல் 

தேவையானவை: அரிசி - கால் கிலோ, வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா - தலா 1, நெய் - 100 மி.லி, கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 500 மி.லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்கு பால், நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து அல்லது ஆறு விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்றாகக் குழைத்து, கல்கண்டு, மீதமுள்ள பால், வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா சேர்த்து, நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: ஒரே ஒரு பழத்திலும் இதேபோல் செய்யலாம். நெய்யில் ட்ரை ஃப்ரூட்ஸ் வறுத்தும் சேர்க்கலாம்

30.மல்டி ஃப்ரூட் லஸ்ஸி 

தேவையானவை: திராட்சை - 10 எண்ணிக்கை, சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் - தலா 1, சாத்துக்குடி ஜூஸ் - 200 மி.லி, சர்க்கரை - 50 கிராம், அதிகம் புளிக்காத தயிர் - 500 மி.லி.
செய்முறை: திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

31. ஆப்பிள் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 150 கிராம், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, ஆப்பிள், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக் கவும்.

குறிப்பு: காரம் இல்லாமல் பழ வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த அடை. பிடித்தமான பழங்களை வைத்து இதே முறையில் அடை தயாரிக்கலாம்.

32.  ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மாம்பழத் துண்டு, சப்போட்டா துண்டுகள் - தலா 6, பைனாப்பிள் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மி.லி.
செய்முறை: மாம்பழம், சப்போட்டா, பைனாப்பிள் இவற்றை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் போட்டு மிருதுவாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சைட்-டிஷ் தேவை இல்லை. புளிப்பும், தித்திப்புமாய் அருமையாக இருக்கும்.

 33. ஃப்ரூட் சூப்

தேவையானவை: ஆப்பிள், சாத்துக்குடி - தலா 1, நறுக்கிய தர்பூசணி, நறுக்கிய கிர்ணிப்பழம், விதையில்லாத திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியின் தோல், விதைகளை நீக்கி சுளையை தனியாக எடுக்கவும். இதனுடன் தோல் சீவிய ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி அப்படியே பருகலாம்.

குறிப்பு: சூப்பை 'ஜில்’லென்றும் குடிக்கலாம்.

34. கிவி சட்னி

தேவையானவை: கிவிப் பழம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சித் தோல் சீவி, கிவிப் பழத்துடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த பழ விழுது, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கிவிப் பழம் லேசாக புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவைப்பட்டால் சுவைக்காக அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பஜ்ஜி, வடைக்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன்.

35. சாபுதானா ஃப்ரூட் உப்புமா

தேவையானவை: ஜவ்வரிசி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்து, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - தலா 100 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: ஆப்பிள், மாதுளை முத்து, பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, ஜவ்வரிசியுடன் கலந்து ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்து மேலாக உப்பு மாவில் தூவி நன்றாகக்  கிளறவும்.

குறிப்பு: இந்த உப்புமா நார்த் இண்டியன் ஸ்பெஷல். பழம் சேர்த்து செய்வதால் ஒரு தனி டேஸ்ட்.


நன்றி - அவள் விகடன்