Showing posts with label அரங்கேற்றம். Show all posts
Showing posts with label அரங்கேற்றம். Show all posts

Tuesday, May 28, 2013

மதன் கார்க்கி - கலைஞர் தூது போன காதல்! -வி.ஐ.பி.களின் காதல் அரங்கேற்றம்

வி..பி.களின் காதல் அரங்கேற்றம்
கொஞ்சு புறாவே

கலைஞர் தூது போன காதல்!

கதிர்பாரதி
மதன் கார்க்கி

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதலென்றால் அண்ணா பல்கலைக் கழகத்தில் என்னையும் நந்தினியையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சீனியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் இருந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்ப்யூட்டர் சொஸைட்டிதான். அது மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் மட்டுமல்லாத மற்ற திறமைகளுக்கும் நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல் ஜிப்ரானின் படப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதலாக அப்போது இல்லை. வெறும் நட்பாகத்தான் இருந்தேன்.
அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில்; சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நான். நந்தினி சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் சிரித்தாள். இந்த அனுபவத்தைத்தான்காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின்அழைப்பாயா...’ பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நானென்ன பேசவேண்டுமென்று சொல்லிப் பார்த்தேன் / நீ என்ன கூற வேண்டுமென்றும் சொல்லிப் பார்த்தேன் / நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் / நீ எங்கு புன்னகைக்க வேண்டுமென்றுகூட சேர்த்தேன்
ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான்தான் சாட்டில் என் காதலைச் சொன்னேன். நான் மத்தியதர வகுப்பு. உங்களோடது பெரிய குடும்பம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். ஐந்து வருடங்கள் என் தேடல்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருந்திருக்கிறாள்.
ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்து விட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ‘என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை, அவன் வானம், அவன் சிறகு. திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோஎன்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தார். அப்போதுகூட என் மனத்தில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? "
அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க" என்று சொல்லிவிட்டேன். பின்பு யதேச்சையாக ஆர்குட்டில் நந்தினியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க"- நான்தான் ஆரம்பித்தேன்.
நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்" - என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆயிடுச்சா?"

கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணணும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கே!" என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம், வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன். " - சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் கனமானவை.
சரின்னுதான் தோணுது. நீங்களும் நானும் சேர்ந்து வாழறது அர்த்தமுள்ளதா இருக்கும். நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களை இந்தியாவுல வந்து பாக்கறேன்" என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிது. அவள் என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 10 அன்று.
இப்போது அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றிச் சொன்னதும் அவருக்குக் கோபம். ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நண்பர்களிடம் சொல்லி பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?" என்ற அப்பாவின் வாதத்தில் மகனின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது.
அப்பா, என் விருப்பம் நந்தினி. உங்கள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனை பேசவைத்தேன். அப்பா அசைந்து கொடுக்கவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக் கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன். அப்போது அவர் தமிழகத்தின் முதல்வர். என் காதலைக் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படாதே என் குடும்பத்தில் நிறைய காதல் கல்யாணம்தான். உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன்" என்று என் காதலுக்குக் கைகொடுத்தார்.
மறுநாள் காலையில், நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை அவர் என் அப்பாவின் காதுக்குள் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் அப்பாவின் கோப அலை.
கலைஞரிடம் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம்..." என்று பொரிந்து தள்ளிவிட்டு, சரி நந்தினியை வரச் சொல்," என்றதும், எனக்கு சந்தோஷம். நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணி நேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேச வந்தவள், அப்பாவின்கள்ளிக் காட்டு இதிகாசம்நாவலையும்ரிதம்படத்தின் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்" என்று கட்டளை போட்டுவிட்டு கவிதை எழுத போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத போன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைக்கழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
நந்தினியோடுதான் என் திருமணம் என்ற என் பிடிவாத நியாயத்தை அப்பா புரிந்து கொண்டார். கலைஞர் தலைமையில் என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. எங்கள் காதலின் உயிர்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்து விட்டான். பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை , காதலை அதிகப்படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம், அவளை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. என் பாடல்களை நந்தினி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகி இருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்கு காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்துக்கும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்க வைத்திருக்கிறது காலம். கடல் படத்தில் நான் எழுதிய கீழ்க்கண்ட பாடலைப் போல
மனச தொறந்தாயே... நீ /எங்கிருந்து வந்தாயோ நீ?/ அடியே... அடியே / என்ன எங்க நீ கூட்டிப் போற?

நன்றி - கல்கி