Sunday, February 05, 2023

பொம்மை நாயகி (2023) தமிழ் - சினிமா விமர்சனம்

 


மண்டேலா  படத்தில்  யோகிபாபுவின்  கதாபாத்திரம்  பாராட்டுப்பெற்றது . காமெடி  நடிகரால் குணச்சித்திர  கதாபாத்திரத்தில்  சோபிக்க  முடியும்  என  நிரூபித்த  படம்  அது . இப்போது  வந்திருக்கும்  இந்தப்படத்திலும்  யோகிபாபுவுக்கு  பெயர்  சொல்லும்  ஒரு  கதாபாத்திரம், கதாநாயகனாக  நடிக்காமல்  கதையின்  நாயகனாக  அடக்கி  வாசித்து  இருக்கிறார். இயக்குநர்  பா  ரஞ்சித்தின்  தயாரிப்பு  என்பதால்  கதையில்  அவரது  வழக்கமான  உயர்  சாதி , ஆதிக்க  சாதி  கொடுமைகளைப்பற்றிய  வசனங்கள்  உண்டு  

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகனின்  அப்பாவுக்கு  இரு  மனைவிகள் . முதல்  தாரம்  ஆதிக்க  சாதியை  சேர்ந்தவர் , இரண்டாவது  தாரம்  தாழ்த்தப்பட்ட  வகுப்பை  சேர்ந்தவர். நாயகன்  அப்பாவின்  இரண்டாவது  தாரத்துக்குப்பிறந்தவர். முதல்  தாரத்துக்குப்பிறந்த  மகன்  ஒருவரும்  உண்டு. அண்ணன்  முறை  ஆனாலும்  பெரிதாக  அவர்  நாயகனுடன்  பழகுவதில்லை 


நாயகனுக்கு  ஒரு  மனைவி , எட்டு  வயதில்  ஒரு  பெண்  குழந்தை  இருக்கிறது . ஒரு  டீக்கடையில்  பணி  புரிகிறார் , கடை  ஓனருக்கு  உடல்  நிலை  சரி இல்லாததால்  கடையை  மூட  ஏற்பாடுகள்  நடக்கின்றன. அதனால்  நாயகன்  சொந்தமாக  டீக்கடை  ஆரம்பிக்கலாம்  என்ற  எண்ணத்தில்  இருக்கிறார்


 ஊர்த்திருவிழா  அன்று  மகளைக்காணவில்லை. தேடிப்போகும்போது  அந்த  சிறுமி  இரு  ஆதிக்க  சாதி  ஆட்களால்  பாலியல்  வன்  கொடுமைக்கு  ஆளாகி  இருப்பதை  அறிந்து  பதறுகிறார்.  குற்றவாளிகள்  உயர்  சாதியினர்  என்பதால்  சட்ட ரீதியாக  போராட  வேண்டாம்  என  பலர்   எச்சரித்தும் நாயகன் கோர்ட்டில்  அந்த  குற்றவாளிகளுக்கு  தண்டனை  வாங்கித்தருகிறார். ஆனால்  அதற்குப்பின்பும்  அவருக்கு  பிரச்சனைகள்  வருகின்றன,  அதை  நாயகன்  எப்படி  சமாளித்தார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகனாக  யோகி  பாபு  அண்டர்  ப்ளே  ஆக்டிங்கில்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். வழக்கமாக  அவர்  பேசும்  நையாண்டிகள் , பாடி  ஷெமிங்  வசனங்கள்  எல்லாம்  இல்லாமல்  கதைக்கு  என்ன  தேவையோ  அதை  மட்டும்  செய்திருக்கிறார்

நாயகனின்  மனைவியாக  சுபத்ரா  கச்சிதமாக நடித்திருக்கிறார். சிறுமியாக  ஸ்ரீம்தி , அண்னனாக  அருள் தாஸ்  ,  அப்பாவாக  ஜி எம்  குமார்  என  அனைவரும்  பாராட்ட  வைக்கும்  நடிப்பு 


ஒளிப்பதிவாளர் அதிசய ராஜ்  கடலூர்  மாவட்டம் நெல்லிக்குப்பம்  கிராமத்தை  சுற்றி  அழகாக  படம்  ஆக்கி  இருக்கிறார் ( அதை  அல்லிக்குப்பம்  என  மாற்றி  இருக்கிறார்கள் )  கே எஸ்  சுந்தர  மூர்த்தியின்  இசையில்  அடியே    ராசாத்தி  ஆல்ரெடி  ஹிட்  ஆன   பாடல் , . பிஜிஎம்  கச்சிதமாக  உணர்வுகளை  கடத்துகிறது


ஆர்  கே  செல்வாவின்  எடிட்டிங்கில்  இரண்டு  மணி  நேரம்  ஓடுகிறது. முதல்  அரை  மணி  நேரம்  கதைக்கு  நேரடியாக  வராமல்  இழுக்கிறார்கள் , ஒன்றரை  மணி  நேரத்தில்  படமே  முடிந்து  விடுகிறது, ஆனால்  அதற்குப்பின்பும்  அரை  மணி  நேரம்  இழுத்திருக்கிறார்கள் 


படத்தின்  மிகப்பெரிய  பலவீனமே  அந்த  சிறுமி  கொடுமைக்கு  ஆளான  பின்  பார்க்கும்  நமக்கு  அவர்  மேல்  பரிதாபமே  வரவில்லை , பாதிப்பு  நடந்துள்ளது  என்பதை  நமக்கு  உணர்த்த  காயம்  ஆனது  போல  ஒப்பனை  இட்டிருக்க  வேண்டும். அவர்  மிக  இயல்பாகத்தான்  இருப்பது  போல  தெரிகிறது.  நாயகனின்  அண்ணன்  அருள்  தாஸ்  ஆரம்பத்தில்  குற்றவாளிகள்  எங்க  ஜாதி  என  பேசி  விட்டு  பின்  எந்தப்புள்ளியில்  நாயகன்  பக்கம்  திரும்புகிறார்  என்பதை  கச்சிதமாகக்காட்டத்தவறி  இருக்கிறார்கள் 



ரசித்த  வசனங்கள்\


\1 ஒரு  சமூகத்தில்  ஒரு  பெண்  படித்தால்  அந்த  சமூகமே  படித்த  மாதிரி 


2  நீதிமன்றங்கள்  நல்லதும்  பண்ணுது , கெட்டதும்  பண்ணுது , தீர்ப்பு  கிடைத்த   பிறகும்  நீதி  கிடைக்க  வேண்டி  இருக்கு 


3  உன்னை  ஒருத்தர்  அடிமையாக  நினைக்கும்போதே  நீ  அவங்களை  எதிர்க்கும்  ஆயுதமாக  மாறனும் 


4   போற  உசுரு  போராடியே  போகட்டும் 

 5  நீதி  மன்றத்தால் குற்றவாளிகளுக்கு  தண்டனை   தரமுடியுமே  தவிர  பாதிக்கப்பட்டவர்களுக்கு  பாதுகாப்பு  தர  முடியாது 


6   பொம்மைநாயகி  என  சாமி  பேரை  எனக்கு  வெச்சுட்டு  என்னை  ஏன் கோயிலுக்குள்  கூட்டிட்டு  போக  மாட்டெங்கற? 


7  தப்பு  செஞ்சவன்  எல்லாம்  சந்தோஷமா  இருக்கான், ஆனா  பாதிக்கப்பட்டவன்..? 


சி பி எஸ்  ஃபைனல் கமெண்ட் - கார்கி  , செம்பி   படத்தைத்தொடர்ந்து  சைல்டு  அப்யூஸ்  கதைக்களத்தை  வைத்து  மேலும்  ஒரு  படம் ரேட்டிங்  2.25 / 5 ஆனந்த  விகடன்  மார்க் என்  யூகம் 40 அனல்மேலே  பனித்துளி , கார்கி  படங்கள்  இப்போதான்  வந்தன. தொடர்ந்து  ஒரே  கதைகருவில்  ப்ல  படங்கள்  வருகின்றன