Showing posts with label .JEYALALITHA. Show all posts
Showing posts with label .JEYALALITHA. Show all posts

Wednesday, October 31, 2012

ஜெ -வுக்கு மனசாட்சி இருக்கிறதா? ஓ பக்கங்கள் ஞானியின் அறச்சீற்றம்

பக்கங்கள்

மனசாட்சி அரசியல்!

ஞாநி

எம்.ஜி.ஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு, தாம் கொடுத்த வாக்குறுதியைத் தம் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.


அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்தி தான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார். பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போதெல்லாம் தம் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து, அதைக் கேட்டு அதன்படியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் ராஜாஜி விவாதிப்பது நடந்திருக்கிறது. அப்படி விவாதிக்கும் குரலைத் தான் காந்தி மனசாட்சி என்று வர்ணிக்கிறார்.

இப்போதைய அரசியல் வாதிகளுக்கெல்லாம் மனசாட்சி உண்டா என்று தெரியவில்லை. சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று சொன்னபோது தம் மனசாட்சி சொன்னபடி அப்படிச் செய்வதாகச் சொல்லியிருந்தார். கலைஞர் கருணாநிதியின் இன்னும் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் சுயசரிதையானநெஞ்சுக்கு நீதிஎன்ற தலைப்பே மனசாட்சியைக் குறிப்பதுதான்


 ஆனால் அந்தப் புத்தகத்தில் அதன் குரல் எதுவும் ஒலிப்பதில்லை என்பது கண்ணதாசனின் வனவாசத்தைப் படித்தால் புரியும். கருணாநிதியின் வெளி மனசாட்சியாக முரசொலி மாறன் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. மாறன் சொன்னது எல்லாவற்றையும் கருணாநிதி கேட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை. சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மாறன் சொன்னதைக் கேட்காமல் அமைத்து, தேர்தலில் அடி வாங்கினார்.


இனி சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது அவருடைய மனசாட்சியின் சொல் கேட்டுத்தான் என்றே தோன்றுகிறது. நாமே சாதிக் கட்சிதானே, அப்புறம் மீதி சாதிக் கட்சிகளுடன் அணி சேர்ந்தால் என்ன முழுகிப் போய் விடும் என்று அவர் மனசாட்சி சொல்லியிருக்கலாம்.


கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவின்படி மனசாட்சி என்று ஒன்று தனியே இருப்பதாக நம்பலாமா என்று தெரியவில்லை. மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சிகளும் கூட தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று தா. பாண்டியனை நினைக்கும்போது நம்பத் தோன்றுகிறது.



சிலருடைய மனசாட்சிகள் ( இருந்தால்) என்ன சொல்லும் என்று அறிய நான் ஆசைப்படும் பட்டியலில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.


குறிப்பாக மன்மோகன்சிங், மாயாவதி, சுப்பிரமணியன் சுவாமி. மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் இல்லை. காரணம், அவர் தன் மனசாட்சி ஏதாவது குரல் எழுப்பினால், நீ யார் என்னைக் கேள்வி கேட்க என்று அதைக் கைது செய்ய உத்தரவிட்டு விடுவார் என்ற பயத்தினால் அது தானே தலைமறைவாகி விட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது.


மம்தாவைப் போலவே பிடிவாதமும் உறுதியும் நிரம்பித் ததும்புபவரான ஜெயலலிதாவின் மனசாட்சியும் இதேபோல கியூ பிராஞ்சுக்கு அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை அங்கீகரித்து அவர் அறிக்கை வெளியிட்டிருப்பதால், ஜெயலலிதாவின் மனசாட்சியும் அவரைப் போலவே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


எம்.ஜி.ஆர். ...தி.மு.கவை ஆரம்பித்து 41 வருடங்கள் ஆவதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்தான் முதன்முறையாக அவர் மனசாட்சி குறிப்பிடப் படுகிறது. எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதி அவர் தொண்டர்களைக் காப்பாற்ற தம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும். ஏன் அந்தத் தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும்? அவர்கள்தான் அண்ணாவின் தி.மு.கவை தன் சுயநலத்துக்காகக் கைப்பற்றிய தீயசக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டு அண்ணாவின் அரசியலையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் காப்பாற்றுவார்களாம்.


என் மனசாட்சிக்கு சரி என்று தெரிந்தவரைஎன்று ஜெயலலிதா இந்த அறிக்கையில் சொல்கிறார். அவருடைய இந்த நீண்ட நெடிய அர்ப்பணிப்பு வாழ்க்கையில் எதையெல்லாம் அவர் மனசாட்சி சரியென்று சொல்லியது, எதையெல்லாம் தவறென்று சொல்லியது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. அது ஒரு பெரும் பட்டியலாக இருக்கும் என்பதால், ஒரு சிலவற்றிலேனும் அறிய முடிந்தால் நலம்.



எம்.ஜி. ஆர் உயிரோடு இருந்த கடைசி காலத்தில் அவர் ஆட்சி பற்றி புகார் செய்து பிரதமர் ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினாரே, அது மனசாட்சி சரியென்று சொன்னதால்தானா?


தனக்கெதிராக சதி நடப்பதாக அறிவித்து உதவியாளர்/உடன் பிறவா சகோதரி சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றி அவர் உறவினர்கள் மீது வழக்குகள் தொடுத்தபோது மனசாட்சி என்ன சொல்லிற்று? திரும்பவும் சில வாரங்கள் கழித்து சசிகலாவை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்ட போது மனசாட்சி என்ன சொல்லிற்று ?


காரணமே சொல்லாமல் ..எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் சபாநாயகர் வரை ஆறு வாரத்துக்கொருமுறை மாற்றப்படுவதும் மனசாட்சியின் சரியைக் கேட்டுத்தானா?


தீய சக்தியின் ஊழலை எதிர்த்துத் தனிக்கட்சி கண்ட எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியவர் சொத்துக் குவிப்பு வழக்குக்காக ஒவ்வொருமுறை பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், மனசாட்சி என்ன சொல்லும்?


உங்களில் ஒருத்தியாக நிற்பேன் என்று அணு உலை எதிர்ப்புப் போராட்டக் காரர்களிடம் சொன்ன சில மாதங்களிலேயே அவர்கள் அத்தனை பேர் மீதும் தேசத் துரோக வழக்கு போடச் செய்வது மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தானா?


பொதுவாக மனசாட்சி என்பது ஒருவரின் சரி, தவறு இரண்டையும் அவரிடம் சொல்லும் என்பதே மனசாட்சியைப் பற்றிய உளவியல் மருத்துவக் கருத்து. ஆனால், ஜெயலலிதாவின் மனசாட்சி மட்டும் . பன்னீர்செல்வம் பாணியில் இடுப்பை வளைத்து முதுகைக் கவிழ்த்து எதற்கெடுத்தாலும் சரி என்று மட்டுமே சொல்லும் விசித்திர மனசாட்சியாக அமைந்திருப்பது உளவியல் மருத்துவத் துறைக்கே ஒரு மாபெரும் சவாலாகப் படுகிறது.


பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதாதே என்று ஒரு குரலும், எழுது என்று ஒரு குரலும் என் மனசுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. எழுதுவதே சரி என்று மனசாட்சி சொல்லிவிட்டதால் எழுதிவிட்டேன்.


ஒரு வேதனைப் பொன்விழா!

இந்திய - சீனப் போர் நடந்து 50 வருடங்களாகின்றன. இதை நிச்சயம் பொன்விழாவாகக் கொண்டாட முடியாது.


ஆனால் 1962ல் நடந்த இந்த யுத்தம் இந்திய அரசியலில், இந்திய வெளியுறவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒற்றைப் பெரும் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த யுத்தம் பற்றிய உட்கட்சிக் கருத்து மோதலின் தொடர்ச்சியால், இரண்டாக உடைந்து மார்க்ஸிஸ்ட் கட்சி உதயமாயிற்று. தேர்தல் அரசியலில் நுழைந்தபின்னர் தனித் திராவிட நாடு கோரிக்கையை எப்படி, எப்போது கைவிடுவது என்று தவித்துக் கொண்டிருந்த தி.மு..வுக்கும் அண்ணாவுக்கும் இந்த யுத்தம் நல்வாப்பாக அமைந்தது. நேருவின் உலகளாவிய ராஜதந்திர பிம்பம் இந்த யுத்தத்தால் நொறுங்கியது.


உண்மையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்னையை யுத்தமாக்கி இந்திய - சீன உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்தபெருமைஇந்திய அரசியல்வாதிகளுக்கும் சீனத் தலைவர்களுக்கும் உரியது.



இன்று இந்த யுத்தம் பற்றிப் பேச இந்தியாவிலும் சரி சீனாவிலும் சரி அரசியல் தலைமைகள் விரும்பவில்லை. ஆனால் இதை நினைவுபடுத்தித் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பகைமையை நீட்டிப்பதில் அமெரிக்காவுக்கு லாபம் இருக்கிறது. தன்னை முற்றிலும் அமெரிக்காவின் தோழனாக இந்தியா காட்டிக் கொண்டால், அது நிச்சயம் சீன - இந்திய உறவை கடுமையாகப் பாதிக்கும்.


சீனாவுடன் வர்த்தகத்தின் மூலம் தோழமையை வளர்த்துக் கொள்வதுதான் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நல்லது. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் தலைவலிகளைத் தணிக்க சீனாவுடன் நட்பை உருவாக்குவதுதான் இந்தியாவுக்கு சரியான தீர்வு. தலாலாமாவுக்கு விருந்து வைத்தாலும்கூட, திபெத் விஷயத்தில் இந்தியா, சீனாவின் நிலையையே ஆதரிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மட்டும்தான் சீனாவுடன் இருக்கும் ஒரே உறுத்தல். இதைப் பேசித் தீர்க்க முடியும். வணிக உறவுகளை பலப்படுத்தினால் இது சாத்தியம்.


இந்தியாவையும் சீனாவையும் பிரித்து வைத்துக் குளிர் காயும் தந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பயன்படுத்தும். மன்மோகன் போன்றோர் அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தச் சூழ்ச்சியிலிருந்து இந்தியா எளிதில் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை.

 நன்றி  -கல்கி, ஞானி , புலவர் தருமி

Thursday, May 19, 2011

ஜெ இனி செய்யவேண்டும் ?25 நிபுணர்களின் கருத்து. விகடன் கட்டுரை

முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு...

'ஒன்றே செய்... நன்றே செய்... அதுவும் இன்றே செய்’ என்பது முன்னோர் வாக்கு!

மக்கள் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன? பல்வேறு துறைகளைச் சேர்ந்த  மதிப்புக்குரியவர்கள்’  வழிகாட்டுகிறார்கள்!

1. விவசாயம்

'காவிரி’ எஸ்.ரங்கநாதன் 


''விவசாயிகள் பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படத்தக்க வகையில், அரசு அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்னைகள் பல அண்டை மாநிலங்களோடு பேசித் தீர்க்க வேண்டியவை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர்த் தடங்களை நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!''

2. விலைவாசி

வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர். 


''ஊக பேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கென, என்.எஸ்.சி. போஸ் சாலையில் செயல்படும் ஏஜென்ஸிகளை இழுத்து மூட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அங்கே, சேமிப்புக் கிடங்கு வசதி உருவாக்கப்பட வேண்டும். ஆண்டின் மழை அளவு, விளைச்சல் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டித் திட்டமிட்டு, அதற்கேற்ப சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்!''

3. கல்வித் துறை - ச.மாடசாமி, கல்வியாளர். 

''அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவுக்கு இல்லை. நம்முடைய கிராமப்புறப் பள்ளிகளிலோ, ஆசிரியர் எடுத்துக் காட்டி பாடம் நடத்த ஒரு காந்தத் துண்டுகூடக் கிடையாது. முதலாவதாக, எல்லாப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், போதிய அளவு கல்வி உபகரணங்கள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். அடுத்து, துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி, ஆசிரியர் நியமனம் வரை அரசியல் தலையீட்டைத் தடுத்து, தகுதியானவர்கள் பதவிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும். இன்னமும் தாய் மொழியில் குழந்தைகள் எளிமையாகப் படிக்கத்தக்க பாடப் புத்தகங்களைக்கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. சமச்சீர் கல்வியோ மேலும் கடினமான பாடத்திட்டங்களைத் திணிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ப - குழந்தைகளை மையப்படுத்தியதாக பயிற்றுவிப்பை மாற்ற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தொடங்கி, வகுப்பறைகள் வரை இந்த மாற்றம் வேண்டும்!''

4. தலித் முன்னேற்றம் - அழகிய பெரியவன், எழுத்தாளர். 

''இடஒதுக்கீடு அடிப்படையில் தலித் மக்களுக்கென ஒதுக்கிய பணியிடங்கள், தகுதியானவர்கள் இல்லை என்ற காரணத்தினால் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அத்தகைய பின்னடைவுப் பணி இடங்களை நிரப்ப வேண்டும். உயர் சாதியினரிடத்தில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு என தலித் மக்களுக்கு அரசுப் பணியை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத் துறை அலுவலகங்களில், இளைஞர்களுக்காக வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!''

5. விளையாட்டு - தன்ராஜ்பிள்ளை, ஹாக்கி வீரர். 

''சர்வதேச விளையாட்டுகளை சென்னையில் நடத்துவதற்கு ஏதுவாக, சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில்,  விளையாட்டுத் திடல்கள் அமைக்க வேண்டும். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் என்று பல்வேறு விளையாட்டுகளுக்கு, மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான நகரங்களிலும் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். நான், முஹம்மது ரியாஸ், பாஸ்கரன் போன்றோர் கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்!''  

6. மின்சாரம் - சாவித்ரி கண்ணன், பத்திரிகையாளர். 

''ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தியை அதிகரித்து இருக்கிறோம். இந்தத் துறையில் கணிசமான அளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை புனல் மின்சார உற்பத்தியை அதிகமாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காற்றாலை மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, துறையின் ஊழல்களையும் களைய வேண்டும்!''

7. சுற்றுச்சூழல் - 'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

''தமிழகத்தில் புதிய அணு உலைகளை இனிமேலும் அமைக்கக் கூடாது. மரபணு மாற்றுப் பயிர்கள், எண்டோசல்ஃபான் போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குண்டு பல்புகளை நீக்கிவிட்டு எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்த வேண்டும். கேரளாவில் விவசாய நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதுபோல, தமிழகத்திலும் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளிகளில், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்!''

8. திரைப்படத் துறை - அமீர், இயக்குநர். 

''ஆளும் கட்சியோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கும் சங்க ஆட்களை அரசு நெருங்கவிடக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே, எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம். 'ஃபெப்ஸி’, இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் போன்றவற்றில், அரசியல் சார்பு இல்லாத நபர்களே நிர்வாகிகளாகும் சூழலை உருவாக்க வேண்டும். திருட்டு வி.சி.டி. விற்பனையையும் அதற்குத் துணை போகும் காவல் துறையினரையும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!''

9. தொழிலாளர் நலன் - டி.கே. ரங்கராஜன்,  தொழிற்சங்கவாதி. 

''விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சேவைப் பிரிவுத் தொழிலாளர்கள் போன்றோருக்கு, தமிழகத்தில் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல். இவர்களுக்கான நலத் திட்டங்களும் சரிவரச் செயல்படுத்தப்படுவது இல்லை. அவற்றை முறைப்படுத்த வேண்டும். பணியிட விபத்துகள், பணிச்சூழல் உண்டாக்கும் நோய்களை எதிர்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்!''

10. சிறுபான்மையினர் நலன் - பேராசிரியர் அ.மார்க்ஸ் 

''சச்சார் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்தபோது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்கவில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

11. அண்டை மாநில உறவுகள் -  ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். 

''சட்டம்-ஒழுங்கு, எல்லை, நதி நீர் ஆகிய மூன்று பிரச்னைகளுக்காகத்தான் நாம் அண்டை மாநிலங்களைப் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இவற்றை வெற்றிகரமாகக் கையாள ஒரே யுக்தி... அவற்றை அரசியல் ஆக்காமல் இருப்பதும்  பரபரப்பு ஆக்காமல் இருப்பதும்தான். சம்பந்தப்பட்ட பிரச்னைகளுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்து மாநிலக் கூட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டும். பெரும்பாலும் இந்தக் குழுக்கள் அதிகாரிகள் மட்டத்தில் அமைக்கப்படுவது நன்மை பயக்கும். அடிக்கடி இந்தக் குழுக்கள் கூடுவதும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்கூட்டித் திட்டமிடுவதும் அவசியம்!''

12. சட்டம் - அருள்மொழி, வழக்கறிஞர். 

''தமிழகச் சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான விசாரணைக் கைதிகளின் நிலையையும்  நலனையும் கருத்தில்கொண்டு, தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம் குற்றவாளிகள் இருக்கும் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் மேம்படுத்த வேண்டும். குடும்ப நீதிமன்றங்களைப் பொறுத்தவரை வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு முந்தைய சமரசப் பேச்சுவார்த்தைக்கு, நிம்மதியாக மனம்விட்டுப் பேசக்கூடிய அளவுக்குக் கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!''

13. தமிழ் வளர்ச்சி -  தமிழருவி மணியன். 

''ஆங்கிலம் படித்தால் வாழ்வு சிறக்கும் என்கிற சூழல்தான், நம்முடைய இளைஞர்களை அந்த மொழியை நாடச் செய்கிறது. தமிழ் படித்தாலும் நாம் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கையை தமிழக மக்களிடம்  உருவாக்க, அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பு, நீதி, கல்வி ஆகிய மூன்று துறைகளில் என்று தமிழ் மேலோங்குகிறதோ, அன்றுதான் தமிழ் மொழி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். ஆகையால், தமிழை நிர்வாக மொழியாக மாற்ற வேண்டும். அப்போதுதான், தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!''

14. பதிப்புத் துறை - 'பாரதி புத்தகாலயம்’ நாகராஜன். 

''அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12,574 நூலகங்கள், இன்னமும் கிராமப்புறங்களில் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றைத் திறக்க, புதிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நூலகங்களுக்கு நூல்களை அரசு பெறவில்லை. இந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, நூல்களை நூலகங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது 'எம்.எஸ்.வேர்’டில் மட்டுமே 'யூனிகோட்’ பயன்படுத்த முடிகிறது. இதனை 'பேஜ் மேக்கர்’, 'போட்டோ ஷாப்’, 'கோரல் டிரா’ போன்ற மென்பொருட்களிலும் பயன்படுத்தும் சாத்தியங்களை அதிகரிக்க வேண்டும்!''

15. போக்குவரத்து - 'டிராஃபிக்’ ராமசாமி. 

''நகர்ப் பகுதியில்கூட ஒழுங்கான சாலைகள் இல்லை. பிறகு கிராமப்புறங்கள் எப்படி இருக்கும்? முறையான உள்கட்டமைப்பு வசதிகளை முதலில் செய்துகொடுத்து, பின்னர் தரமான வாகனங்களை ஓட்ட  வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக, எந்த அரசாங்கமும் பொதுமக்களிடம் கருத்து கேட்பதே இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனிப் பிரச்னைகள் இருக்கின்றன. அதை, அந்தந்தப் பகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சரிசெய்ய வேண்டும்!''

16. தொழில் துறை - முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) 

''தொழில் துறையின் அடிப்படைக் கட்டமைப்பான மின் விநியோகத்தைச்  சீராக்க வேண்டும். எதிர்கால மின் தேவைக்கும் இப்போதே திட்டமிட வேண்டும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் தேவைக்குப் பொருட்கள் வாங்கும்போது, சிறுதொழில் - குறுந்தொழில் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றின் மீட்சிக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். சேவைத் துறை தனித் துறையாக்கப்பட்டு, கவனம் செலுத்தப்பட வேண்டும்!''

17. நீர் ஆதாரம் - பேராசிரியர் ஜனகராஜன். 

''நீர் நிலைகள் பாதுகாப்புக்கென புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். மணல் கொள்ளை, நதி நீர் மாசுபடுவதில் தொடங்கி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வரை அனைத்தையும் தடுக்க வல்லமை மிக்க ஓர் அமைப்பை உருவாக்க, அந்தச் சட்டம் அடித்தளமாக இருக்க வேண்டும். நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்க, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், நிலத்தடி நீரை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம், பயன்படுத்தலாம் என்கிற நிலையை மாற்றவும், தீவிர நடவடிக்கைகள் அவசியம்!''

18. பெண்கள் / திருநங்கைகள் நலம் - 'லிவிங் ஸ்மைல்’ வித்யா. 

''குடும்ப வன்முறைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு நம் பெண்களுக்கு அவ்வளவாக இல்லை. அரசு அதற்கான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பெண்களுக்கான 33 சத இடஒதுக்கீட்டைக் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தைக் கண் துடைப்பு அமைப்பாக ஆக்காமல், செயல்படும் வாரியமாக மாற்ற வேண்டும். திருநங்கைகள் சுய சார்போடு வாழ்வதற்கு, படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினராலும் சமூக விரோதிகளாலும் திருநங்கைகளுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!''

19. வேலைவாய்ப்பு

வேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 


''தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 70 லட்சம். அரசுப் பணிகளில் 1.5 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நிரப்ப வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்டம் தோறும் தனித் தனியாக வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்!''

20.சாலை அடிப்படை வசதிகள் - ஆண்டனி, இயக்குநர், 'நீயா நானா’. 

''சிங்கப்பூரில் நுழைந்தவுடனேயே அதன் கச்சிதமான பிரமாண்டம் நம் கண்ணைக் கவரும். அதுபோல சென்னை நகரத்தையும் மாற்ற வேண்டும். அதற்கேற்ற உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களையும் மற்ற சிறுநகரங்களையும் ஒப்பிட்டால், பெரிய வேறுபாடு இருக்கிறது. இது களையப்பட வேண்டும்!''

21. மனித உரிமைகள் - 'எவிடென்ஸ்’ கதிர். 

''காவல், நீதி, நிர்வாகம், மருத்துவம்... இந்த நான்கு துறைகளில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. இந்தத் துறைகளில் நடக்கும் தவறுகள் அங்கேயே விசாரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டுவிடுகின்றன. தமிழகத்தில், குற்றவியல் நீதி ஆணையம் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, அதைத் தன்னிச்சையாக, சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதித்து, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் எந்த அதிகாரமும் அற்ற அமைப்பாக, செல்லாக் காசாக இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். தேசியக் காவல் ஆணையம், மனித உரிமைகள் சார்ந்து மாநிலக் காவல் துறைகளுக்கு அனுப்பிய பல பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை... அவை அமலாக்கப்பட வேண்டும்!''

22. சமூகச் சீர்திருத்தம் - பேராசிரியை சரஸ்வதி. 

''இரட்டை டம்ளர் முறைபோல  தீண்டாமைக் கொடுமை எந்த வடிவில் இருந்தாலும், ஒழிக்கப்பட வேண்டும். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பாங்கு இருக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். மகளிர் ஆணையத்தில் கட்சி சார்பு உள்ளவர்களைப் பதவியில் அமர்த்தாமல், இயல்பாகவே பெண்கள் நலனில் அக்கறை உள்ளவர்களையும் பெண்களுடன் இணைந்து பணிபுரிந்தவர்களையும் நியமிக்க வேண்டும். மலைவாழ் மக்கள், நாடோடிகள் போன்றோரின் குழந்தைகள் கல்வி கற்க உண்டு-உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்!''

23. இளைஞர் நலன் - சங்கர், 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’. 

''அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இளம் ஆசிரியர்களுக்கு 'Incentive Based Programs’ மூலம் அவர்களின் பணித் திறனை அதிகப்படுத்த அரசு உதவ வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களை வேலைவாய்ப்புக்காகத் தேடி வரும் நிலையை மாற்ற, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நிறைய  வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் வேலை பார்க்க தமிழ், இந்தியாவில் வேலை பார்க்க இந்தி, அயல்நாட்டில் வேலை பார்க்க ஆங்கிலம் என்கிற மும்மொழிக் கொள்கை இருந்தால், இன்னும் சிறப்பு!''

24.சுகாதாரம் - மருத்துவர் புகழேந்தி. 

''தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்குத் தரமான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எந்நேரமும் மருத்துவர்கள் இருப்பதையும் எல்லா மருந்துகளும் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து பணியாற்றுவதைத் தடை செய்ய வேண்டும். மருந்துகள் அநியாய விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில், பெரும் பகுதியை சிறப்புக்கூறு நோய்களுக்கு செலவழிப்பதற்குப் பதிலாக, அடிப்படை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்!''

25.கிராமப்புற மேம்பாடு - குத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ, சமூக சேவகர். 

''கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயத் துறை மறுமலர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாத குடிநீர், வீடுகள்தோறும் சுகாதாரமான கழிப்பறைகள், குளியல் அறைகள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்ட 'நமது கிராமம்’ திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டி, செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கூடுதல் அதிகாரமும் நிதியும் அளிக்கப்பட வேண்டும்!''