Showing posts with label GNANI. Show all posts
Showing posts with label GNANI. Show all posts

Wednesday, October 31, 2012

ஜெ -வுக்கு மனசாட்சி இருக்கிறதா? ஓ பக்கங்கள் ஞானியின் அறச்சீற்றம்

பக்கங்கள்

மனசாட்சி அரசியல்!

ஞாநி

எம்.ஜி.ஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு, தாம் கொடுத்த வாக்குறுதியைத் தம் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.


அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்தி தான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார். பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போதெல்லாம் தம் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து, அதைக் கேட்டு அதன்படியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் ராஜாஜி விவாதிப்பது நடந்திருக்கிறது. அப்படி விவாதிக்கும் குரலைத் தான் காந்தி மனசாட்சி என்று வர்ணிக்கிறார்.

இப்போதைய அரசியல் வாதிகளுக்கெல்லாம் மனசாட்சி உண்டா என்று தெரியவில்லை. சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று சொன்னபோது தம் மனசாட்சி சொன்னபடி அப்படிச் செய்வதாகச் சொல்லியிருந்தார். கலைஞர் கருணாநிதியின் இன்னும் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் சுயசரிதையானநெஞ்சுக்கு நீதிஎன்ற தலைப்பே மனசாட்சியைக் குறிப்பதுதான்


 ஆனால் அந்தப் புத்தகத்தில் அதன் குரல் எதுவும் ஒலிப்பதில்லை என்பது கண்ணதாசனின் வனவாசத்தைப் படித்தால் புரியும். கருணாநிதியின் வெளி மனசாட்சியாக முரசொலி மாறன் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. மாறன் சொன்னது எல்லாவற்றையும் கருணாநிதி கேட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை. சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மாறன் சொன்னதைக் கேட்காமல் அமைத்து, தேர்தலில் அடி வாங்கினார்.


இனி சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது அவருடைய மனசாட்சியின் சொல் கேட்டுத்தான் என்றே தோன்றுகிறது. நாமே சாதிக் கட்சிதானே, அப்புறம் மீதி சாதிக் கட்சிகளுடன் அணி சேர்ந்தால் என்ன முழுகிப் போய் விடும் என்று அவர் மனசாட்சி சொல்லியிருக்கலாம்.


கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவின்படி மனசாட்சி என்று ஒன்று தனியே இருப்பதாக நம்பலாமா என்று தெரியவில்லை. மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சிகளும் கூட தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று தா. பாண்டியனை நினைக்கும்போது நம்பத் தோன்றுகிறது.



சிலருடைய மனசாட்சிகள் ( இருந்தால்) என்ன சொல்லும் என்று அறிய நான் ஆசைப்படும் பட்டியலில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.


குறிப்பாக மன்மோகன்சிங், மாயாவதி, சுப்பிரமணியன் சுவாமி. மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் இல்லை. காரணம், அவர் தன் மனசாட்சி ஏதாவது குரல் எழுப்பினால், நீ யார் என்னைக் கேள்வி கேட்க என்று அதைக் கைது செய்ய உத்தரவிட்டு விடுவார் என்ற பயத்தினால் அது தானே தலைமறைவாகி விட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது.


மம்தாவைப் போலவே பிடிவாதமும் உறுதியும் நிரம்பித் ததும்புபவரான ஜெயலலிதாவின் மனசாட்சியும் இதேபோல கியூ பிராஞ்சுக்கு அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை அங்கீகரித்து அவர் அறிக்கை வெளியிட்டிருப்பதால், ஜெயலலிதாவின் மனசாட்சியும் அவரைப் போலவே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


எம்.ஜி.ஆர். ...தி.மு.கவை ஆரம்பித்து 41 வருடங்கள் ஆவதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்தான் முதன்முறையாக அவர் மனசாட்சி குறிப்பிடப் படுகிறது. எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதி அவர் தொண்டர்களைக் காப்பாற்ற தம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும். ஏன் அந்தத் தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும்? அவர்கள்தான் அண்ணாவின் தி.மு.கவை தன் சுயநலத்துக்காகக் கைப்பற்றிய தீயசக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டு அண்ணாவின் அரசியலையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் காப்பாற்றுவார்களாம்.


என் மனசாட்சிக்கு சரி என்று தெரிந்தவரைஎன்று ஜெயலலிதா இந்த அறிக்கையில் சொல்கிறார். அவருடைய இந்த நீண்ட நெடிய அர்ப்பணிப்பு வாழ்க்கையில் எதையெல்லாம் அவர் மனசாட்சி சரியென்று சொல்லியது, எதையெல்லாம் தவறென்று சொல்லியது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. அது ஒரு பெரும் பட்டியலாக இருக்கும் என்பதால், ஒரு சிலவற்றிலேனும் அறிய முடிந்தால் நலம்.



எம்.ஜி. ஆர் உயிரோடு இருந்த கடைசி காலத்தில் அவர் ஆட்சி பற்றி புகார் செய்து பிரதமர் ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினாரே, அது மனசாட்சி சரியென்று சொன்னதால்தானா?


தனக்கெதிராக சதி நடப்பதாக அறிவித்து உதவியாளர்/உடன் பிறவா சகோதரி சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றி அவர் உறவினர்கள் மீது வழக்குகள் தொடுத்தபோது மனசாட்சி என்ன சொல்லிற்று? திரும்பவும் சில வாரங்கள் கழித்து சசிகலாவை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்ட போது மனசாட்சி என்ன சொல்லிற்று ?


காரணமே சொல்லாமல் ..எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் சபாநாயகர் வரை ஆறு வாரத்துக்கொருமுறை மாற்றப்படுவதும் மனசாட்சியின் சரியைக் கேட்டுத்தானா?


தீய சக்தியின் ஊழலை எதிர்த்துத் தனிக்கட்சி கண்ட எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியவர் சொத்துக் குவிப்பு வழக்குக்காக ஒவ்வொருமுறை பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், மனசாட்சி என்ன சொல்லும்?


உங்களில் ஒருத்தியாக நிற்பேன் என்று அணு உலை எதிர்ப்புப் போராட்டக் காரர்களிடம் சொன்ன சில மாதங்களிலேயே அவர்கள் அத்தனை பேர் மீதும் தேசத் துரோக வழக்கு போடச் செய்வது மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தானா?


பொதுவாக மனசாட்சி என்பது ஒருவரின் சரி, தவறு இரண்டையும் அவரிடம் சொல்லும் என்பதே மனசாட்சியைப் பற்றிய உளவியல் மருத்துவக் கருத்து. ஆனால், ஜெயலலிதாவின் மனசாட்சி மட்டும் . பன்னீர்செல்வம் பாணியில் இடுப்பை வளைத்து முதுகைக் கவிழ்த்து எதற்கெடுத்தாலும் சரி என்று மட்டுமே சொல்லும் விசித்திர மனசாட்சியாக அமைந்திருப்பது உளவியல் மருத்துவத் துறைக்கே ஒரு மாபெரும் சவாலாகப் படுகிறது.


பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதாதே என்று ஒரு குரலும், எழுது என்று ஒரு குரலும் என் மனசுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. எழுதுவதே சரி என்று மனசாட்சி சொல்லிவிட்டதால் எழுதிவிட்டேன்.


ஒரு வேதனைப் பொன்விழா!

இந்திய - சீனப் போர் நடந்து 50 வருடங்களாகின்றன. இதை நிச்சயம் பொன்விழாவாகக் கொண்டாட முடியாது.


ஆனால் 1962ல் நடந்த இந்த யுத்தம் இந்திய அரசியலில், இந்திய வெளியுறவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒற்றைப் பெரும் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த யுத்தம் பற்றிய உட்கட்சிக் கருத்து மோதலின் தொடர்ச்சியால், இரண்டாக உடைந்து மார்க்ஸிஸ்ட் கட்சி உதயமாயிற்று. தேர்தல் அரசியலில் நுழைந்தபின்னர் தனித் திராவிட நாடு கோரிக்கையை எப்படி, எப்போது கைவிடுவது என்று தவித்துக் கொண்டிருந்த தி.மு..வுக்கும் அண்ணாவுக்கும் இந்த யுத்தம் நல்வாப்பாக அமைந்தது. நேருவின் உலகளாவிய ராஜதந்திர பிம்பம் இந்த யுத்தத்தால் நொறுங்கியது.


உண்மையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்னையை யுத்தமாக்கி இந்திய - சீன உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்தபெருமைஇந்திய அரசியல்வாதிகளுக்கும் சீனத் தலைவர்களுக்கும் உரியது.



இன்று இந்த யுத்தம் பற்றிப் பேச இந்தியாவிலும் சரி சீனாவிலும் சரி அரசியல் தலைமைகள் விரும்பவில்லை. ஆனால் இதை நினைவுபடுத்தித் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பகைமையை நீட்டிப்பதில் அமெரிக்காவுக்கு லாபம் இருக்கிறது. தன்னை முற்றிலும் அமெரிக்காவின் தோழனாக இந்தியா காட்டிக் கொண்டால், அது நிச்சயம் சீன - இந்திய உறவை கடுமையாகப் பாதிக்கும்.


சீனாவுடன் வர்த்தகத்தின் மூலம் தோழமையை வளர்த்துக் கொள்வதுதான் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நல்லது. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் தலைவலிகளைத் தணிக்க சீனாவுடன் நட்பை உருவாக்குவதுதான் இந்தியாவுக்கு சரியான தீர்வு. தலாலாமாவுக்கு விருந்து வைத்தாலும்கூட, திபெத் விஷயத்தில் இந்தியா, சீனாவின் நிலையையே ஆதரிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மட்டும்தான் சீனாவுடன் இருக்கும் ஒரே உறுத்தல். இதைப் பேசித் தீர்க்க முடியும். வணிக உறவுகளை பலப்படுத்தினால் இது சாத்தியம்.


இந்தியாவையும் சீனாவையும் பிரித்து வைத்துக் குளிர் காயும் தந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பயன்படுத்தும். மன்மோகன் போன்றோர் அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தச் சூழ்ச்சியிலிருந்து இந்தியா எளிதில் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை.

 நன்றி  -கல்கி, ஞானி , புலவர் தருமி

Tuesday, October 16, 2012

ஓ பக்கங்கள் ஞானியின் சாட்டையடி டூ கலைஞர் @ கல்கி

பக்கங்கள்

கல்வியாளர்களுக்கு இரு பாடங்கள்!

ஞாநி

இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்.



ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமிர்கான், ஷாருக்கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்தப் படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமிர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.



தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்பட வில்லை. இங்கே மல்ட்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரைக் கொட்டகைகள் இன்னும் பரவவில்லை. எனவே அவற்றை மட்டும் நம்பிப் படம் எடுப்பது இயலாது. வெகுஜன அளவில் வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய முற்படும்போது, வணிகம் சார்ந்த ரசனைக்கும், படத்தின் கருத்து சார்ந்த அழகியலுக்கும் சமரசம் செய்ய வேண்டிய சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சமரசத்தைத் தயாரிப்பாளருக்குப் புரியவைத்து, படம் எடுக்கச் செய்ய இயக்குனர் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்


 அப்படி எடுத்த படத்தை பார்வையாளர்களில் எல்லா பிரிவினரும் ஆதரித்தால்தான் வசூலில் தப்பிக்கும் என்ற சிக்கலைச் சந்தித்தாக வேண்டும். மிக முக்கியமாக இங்கே ஆமிர்கான், ஷாருக்கான்களுக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் ஒருபோதும் அப் படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.


இந்தப் பின்னணியில்தான் அண்மையில் வந்தசாட்டைபட முயற்சியை நான் முக்கியமான முயற்சியாகப் பார்க்கிறேன். சமூகத்தின் எரியும் பிரச்னைகளைப் படத்தின் கருவாக எடுத்துக்கொள்ள எப்போதுமே தமிழ் சினிமா மிக மிகத் தயங்கும். ‘தண்ணீர் தண்ணீர்மூலம் மறைந்த கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் கொஞ்சம் முயற்சி செய்ததை பாலசந்தர் படமாக்கினார். அதன்பின்னர் அப்படிப்பட்ட படங்கள் கூட அபூர்வமாகிவிட்டன. அண்மையில் அப்படிப்பட்ட முயற்சிகளாக வந்த படங்களில்அங்காடித்தெரு’, ‘வாகை சூடவாவரிசையில் சாட்டையை வைக்கலாம்.


சாட்டை இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்பது அது எடுத்துக்கொண்ட பொருளில்தான். ‘பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்,’ என்பான் பாரதி. அவனுடைய மேற்கோளோடே தம் படத்தைத் தொடங்கும் இயக்குனர் அன்பழகன், முதல் படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்னையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தைத் தயாரிக்க முன்வந்த இயக்குனர் பிரபு சாலமன் தம் இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையும் கொடுத்த ஆதரவுமே இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.



லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் செய்யாமல், அந்த மாணவர்களின் எதிர் காலத்தையே வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறப்பதில்லை. அந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடமாற்றல் கோரிக்கைகளுக்கும் குரல் எழுப்பும் சங்கங்கள், அவர்கள் தம் அடிப்படைக் கடமைகளையே செய்யாமல் திரிவதைச் சரிசெய்ய முயற்சிப்பதே இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வருவதே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் வோட்டு பயம்.


 எதிர்காலமே பாழாக்கப்படும் ஏழை மாணவர்களின் குடும்ப வோட்டுகளை இலவசங்கள் மூலம் கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் ஆசிரியர்கள் மீது கை வைத்தால் சிக்கல். வோட்டுக்கும் ஆபத்து. தேர்தல் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்ற பயம் அரசியல் வாதிகளை ஆட்டுகிறது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்பழகனின் சாட்டை வீசப்பட்டிருக்கிறது. குட்டிச்சுவராக இருக்கிற ஓர் அரசுப் பள்ளியை, மனசாட்சியும் கடமை உணர்ச்சியும், சிறுவர்கள் மீது அன்பும் உடைய ஒரு நல்லாசிரியர் எப்படி மாற்றி அமைக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முற்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி. கூடவே வெவ்வேறு ஆசிரியர் பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நடிகரும், மாணவர்களாக நடித்த ஒவ்வொரு இளம் நடிகரும் ஒளிப்பதி வாளரும், எடிட்டரும், கலை இயக்குனரும் கச்சிதமாக தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள்



 (இது பட விமர்சனம் அல்ல என்பதால் நான் ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியும் இங்கே எழுதவில்லை.) படத்தில் சின்னச் சின்னதாகப் பல குறைகள் இருக்கின்றன - பள்ளியின் மொத்த ஆசிரியர்களும் பொறுப்பற்றவர்கள் என்ற மிகை உட்பட. ஆசிரியர்களின் தவறுகளைச் சொல்லும் படம் - அடுத்த நிலையில் அதற்குப் பொறுப்பான கல்வித்துறை, அரசு பற்றிச் சொல்லவில்லை என்பது ஒரு குறை. வெகுஜன பார்வையாளருக்காக வைத்திருக்கும் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாம் இந்தக் கதைக்கு ஒட்டாமல் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளை நம்பி இன்னமும் வரும் லட்சக் கணக்கான குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலை இந்தப் படத்தில் அசலாக இருப்பதை விடச் சற்றே மேலாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது ஒரு குறை. இந்தக் குறைகளை மீறிப் படம் எடுத்துக் கொண்ட செய்தியை உரக்க அழுத்தமாக நம் மனத்தில் பதிய வைக்கிறது.



இன்று ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று வளர் இளம் பருவத்தினரிடையே சினிமாக்களின் தாக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொய்யான காதல் உணர்ச்சி. இயக்குனர் அன்பழகன் அதை இந்தப் படத்தில் சுட்டிக் காட்டி விவாதித்திருக்கிறார். மோதல், சண்டை, ஒருதலைக் காதல், வீட்டார் எதிர்ப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பிறகு இளம் டீன் ஏஜ் ஜோடியைச் சேர்த்து வைக்கும் வழக்கமான தமிழ் சினிமா களவாணித் தனத்தைச் செய்யாமல், படிக்கும் வயதில் படிப்புதான் முக்கியம் என்பதை மாணவர்கள் உணரும் விதத்தில் அன்பழகன் சொல்லியிருக்கிறார்.


இந்தப் படத்தை தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் பார்க்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பார்க்க வேண்டும். இதில் காட்டி இருப்பதில் அது தவறு, இது இப்படியில்லை, இது கற்பனை என்றெல்லாம் சொல்லி தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, இந்தப் படம் சுட்டிக்காட்டும் பிரச்னைகளை, அவற்றுக்கு முன்வைக்கும் தீர்வுகளை, திறந்த மனத்துடன் விவாதிக்க முன்வரவேண்டும். ஏனென்றால் இந்தப் படம் முன்வைக்கும் பிரச்னை, கற்பனை அல்ல; அசலானது. லட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.


சாட்டை படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிடப்படும் பிரச்னையே ஹிந்தியில் ஒரு முழுப்படமாக வந்திருக்கிறது. அதுதான்இங்கிலீஷ் விங்கிலீஷ்’. இது சாட்டை முயற்சியிலிருந்து வேறுபட்டது. மல்ட்டிப் ளெக்ஸ் பார்வையாளர்களை நம்பி எடுக்கப் பட்டிருக்கும் படம். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதே இந்தப் படத்துக்கான பெரிய பப்ளிசிட்டி.


இந்தப் படமும் இயக்குனருக்கு முதல் படம் தான். இயக்குனர் கௌரி விளம்பரப் படங்கள் எடுத்து வந்தவர். அவர் கணவர் தமிழர் பால்கியும் விளம்பரப் பட இயக்குனர். இதற்கு முன் பால்கி எடுத்த இரு படங்களிலும் கௌரியும் பணியாற்றினார். அந்தப் படங்களும் வித்தியாசமான கருப்பொருள் உடையவை. ‘சீனி கம்’, முதிர் வயதில் காதல் வசப்படுவது பற்றியது. அடுத்த படம்பாசிறு வயதிலேயே வயது ஏறாமலே உடல் மட்டும் 


 முதுமையாகி விடும் அபூர்வமான நோயால் தாக்கப்பட்ட சிறுவனைப் பற்றியது. இரண்டிலும் அமிதாப் பச்சன்தான் ஹீரோ. பாதிக்கப்பட்ட சிறுவனாக அற்புதமாக நடித்த அமிதாபுக்குச் சிறந்த நடிகர் விருது தரப்படாதது அரசியல் தான். கௌரி எடுத்திருக்கும் படத்திலும் அமிதாப் நட்புக்காக இரண்டு சீனில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் அந்த ரோலில் அஜித். (நியாயமாக ரஜினி நடிக்க முன்வந்திருக்க வேண்டும்.)


இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மேல்தட்டுக் குடும்பத்தில் ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவி சசியைப் பற்றியது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அவள் மகளே அவமானமாகக் கருதுகிறாள். அம்மா சுவையான லட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்று கணிசமாக பணம் சம்பாதிக்கும் பெருமையைவிட, அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் மேட்டுக்குடி குடும்பத்துக்கு உறுத்தலாக இருக்கிறது.


ஒரு முக்கிய உறவினர் திருமணத்தில் உதவுவதற்காக முன்கூட்டியே சசி தனியாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அங்கே சசி நான்கு வாரங்களில் ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் வகுப்பில் ரகசியமாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு திருமண விழாவில் ஆங்கிலத்தில் பேசி தம் கணவன், உறவினர்கள் எல்லாரையும் அதிர வைப்பது தான் முடிவு. ஸ்ரீதேவியின் திறமையை ஹிந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் பெருமளவில் வீணடித்திருக்கின்றன என்பதை இந்தப் படம் அதைப் பயன்படுத்தியதன் மூலம் இன்னொரு முறை பளிச்சென்று சொல்லி இருக்கிறது. எவ்வளவு நல்ல பாத்திரங்களை எல்லாம் ஸ்ரீதேவிக்கு அவர் இளமையாக இருந்தபோதே கொடுத்திருக்கலாம் என்ற ஏக்கம்தான் வருகிறது. பால்கி தயாரிப்புகள் அனைத்திலும் இருக்கும் செய் நேர்த்தி இந்தப் படத்துக்கும் ஒரு பலம்.



இயக்குனர் கௌரி இந்தப் படத்தில் இரண்டு நுட்பமான விஷயங்களை அலசியிருக்கிறார். மேல்தட்டுக் குடும்பங்களில் ஆங்கில மோகம் எந்த அளவு ஊறியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது ஒன்று. ஆங்கிலம் அறியாத ஒரு பெண்ணின் இதர திறமைகள் என்னவாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவை மதிக்கப்படாததைப் பேசுவது இரண்டு. ஒரு பெண்ணுக்கு அன்பு மட்டுமல்ல, மரியாதையும் தரப்பட வேண்டும் என்பதே செய்தி.


நம் சமூகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை என்ன என்பதை நாம் விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதவேண்டும். படத்தை எடுத்தவர்கள் ஆங்கிலம் பேசத்தெரிந்த மேட்டுக்குடி பார்வையாளர்களுக்காக இதை எடுத்திருப்பது ஒரு கிண்டல்தான். வெகுஜன அளவிலும் இதே போல இன்னொரு படம் எடுப்பதற்கான அவசியமும் சாத்தியமும் இருக்கிறது.  


மேட்டுக்குடியல்லாத சாமான்யக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனோ யுவதியோ ஆங்கிலம் தெரியாததால் படும் அல்லல்கள் இன்று நம் சமூகத்தில் நம் கவனத்துக்குரியவை. அந்தப் பற்றாக்குறை அவர்களின் இதர திறமைகள் எல்லாவற்றையும் மறைத்தும் வீணடித்தும் விடுகின்றது. இந்த நிலை எங்கிருந்து தொடங்கி எப்படி மாற்றப்படவேண்டும் என்பதும் நம் கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள்.



இரண்டு படங்கள் நம் கல்வியாளர்களுக்கான இரண்டு பாடங்களாக வந்திருக்கின்றன. இந்தப் பாடங்களைப் படிக்காமல் விட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான்.


இந்த வார வருத்தமும் ஆறுதலும்


அடுத்த சபாநாயகரைத் தேர்வு செய்யும் உரிமை ஆளும் கட்சிக்கு உண்டென்றாலும், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கும் ஜனநாயக மரபை முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றாமல் கட்சி விசுவாசி தனபாலுக்குப் பதவியைக் கொடுத்தது வருத்தம். முதல் தலித் சபாநாயகர் என்ற விஷயம் மட்டும்தான் ஒரே ஆறுதல்.


இந்த வாரப் பூச்செண்டு

கோவில்களை விடக் கழிப்பறைகள் முக்கியம் என்று அதிரடியாகச் சொல்லி ஒரு முக்கிய பிரச்னையை விவாதத்துக்குக் கொண்டு வந்ததற்காக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு .வா.பூ.

உங்களுக்குத் தெரியுமா?

தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்றால் கொஞ்சம் கூடப் பதறாமல், போலீசில் புகார் செய்யாமல் இருக்கும் அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் தெரியுமா?
அப்பா பெயர் : மு.. அழகிரி, தாத்தா பெயர்: கலைஞர் கருணாநிதி, பிள்ளையோ பிள்ளை: துரை தயாநிதி.


நன்றி - கல்கி , ஓ பக்கங்கள் ஞானி



அரசுப்பள்ளி -சாட்டை அடி வசனங்கள் ...

http://www.adrasaka.com/2012/09/blog-post_6323.html

 

ENGLISH VINGLISH - சினிமா விமர்சனம் | அட்ரா ...www.adrasaka.com/2012/10/english-vinglish.html