Friday, July 30, 2010

குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-


இந்த வாரக் குமுதம் இதழில் ஏன்  ‘ஓ’ பக்கங்கள் இல்லை
என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி,
மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளி வரா.
காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள்.


கடிதம் 1 :


அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு


வணக்கம்.


சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என்
மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு
வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன்.


இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணைய
தளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிட
இயலாது என்று நீங்கள் கூறியதாக ஆசிரியர் குழுவிலிருந்து டாக்டர் திரு மணிகண்டன்
இன்று மாலை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இது எனக்கு உடன்பாடானதல்ல.
குமுதத்தில் வெளிவரும் எல்லாமே ( அரசியல், சினிமா கிசு கிசு செய்திகள் உட்பட)
தங்கள் வசம் ஆதாரங்கள் இருப்பதால்தான் வெளிவருகின்றன என்று இப்போது அறிவது
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.


என் கட்டுரையில் சவுக்கு இணையதளத்தில் சில முக்கியமானவர்களைப் பற்றி
குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றுதான் நான் எழுதியிருக்கிறேனே தவிர,
அந்த காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர் யார் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
அந்த இணையதளம் ஒளிநகல்களை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டபோதும் நான்
பெயர்களைக் குறிப்பிடவில்லை. அந்த செய்திகள் எல்லாம் உண்மையாக
இருக்கும்பட்சத்தில் நம் கவலைக்குரியவை என்றே நான் எழுதியிருக்கிறேன். அந்த
இணையதளத்தின் மொழி நடை எனக்கு உடன்பாடானதல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.
இதை விடப் பொறுப்பாக ஒரு விமர்சகன் எழுத முடியாது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நான் என்  ‘ஓ’ பக்கங்களை குமுதம் இதழில்
எழுத விரும்பவில்லை. எந்த முன் தணிக்கையும் இல்லாமல், என் கருத்துச்
சுதந்திரத்துக்கு மதிப்பளித்து நான் எழுதியவற்றை நீக்காமல், மாற்றாமல்,
முழுமையாக வெளியிடும் சூழலில் மட்டுமே என்னால் எழுத முடியும். தங்கள் இதழின்
தேவைகளுக்காக என் 35 ஆண்டு கால வாழ்க்கை, தொழில் நெறிகளில் நான் சமரசம்
செய்துகொள்ள இயலாது.


இப்போது தங்களிடம் இருக்கும் என் கட்டுரையை முழுமையாக வெளியிட இயலாதென்றால்,
அதில் எந்தப் பகுதியையும் வெளியிடவேண்டாம்.


”குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி
இனி குமுதத்தில்  ‘ஓ’ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.” என்ற
அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக என் பத்தியை வெளியிட்டு லட்சக் கணக்கான
வாசகர்களிடம் என் கருத்துகளை கொண்டு சேர்த்தமைக்காக உங்களுக்கும் இதழின்
ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றி.


பிரிவோம். சந்திப்போம்.
அன்புடன்
ஞாநி
26 ஜூலை 2010
மாலை 6.30 மணி
-----------------------


-----
கடிதம் 2:


*திரு ப்ரியா கல்யாணராமனுக்கு ஜூலை 17,2010 காலை 11.35 க்கு அனுப்பிய
மின்னஞ்சல் விவரம்: *


அன்புள்ள ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கு


வணக்கம்


தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக என் ஓ பக்கங்கள் கட்டுரையில் தங்கள்
அலுவலகத்தின் குறுக்கீடு என் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக
அமைந்துள்ளது.  தி.மு.க, ஆட்சி, அதன் தலைவர், அவரது குடும்பத்தினர் சார்ந்த
பொது வாழ்க்கை விஷயங்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் செய்யவேண்டாம் என்று
வேண்டுகோள் தொடர்ந்து என்னிடம் வைக்கப்பட்டது.ஓரிரு வாரங்களில் நிலைமை
சரியாகிவிடும் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி வந்தீர்கள். மூன்று
மாதங்களாகியும் நிலைமை அவ்வாறே உள்ளது.


இன்றும் என் கட்டுரையில் காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு வைப்பதாக
முதல்வர் அறிவித்தது பற்றி நான் எழுதிய விமர்சனம் நீக்கப்படுவதாக்
தெரிவித்திருக்கிறீர்கள். இது எனக்கு உடன்பாடானதல்ல.


எனவே முழு சுதந்திரத்துடன் எழுதும் வாய்ப்பில்லையென்றால் நான் குமுதத்தில்  ‘ஓ’
பக்கங்களைத் தொடர்ந்து எழுத விரும்பவில்லை. இப்போது தங்களிடம் இருக்கும் என்
கட்டுரையையும் முழுமையாக வெளியிட இயலாதென்றால், அதில் எந்தப் பகுதியையும்
வெளியிடவேண்டாம்.


”குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி
இனி குமுதத்தில் ஓ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.” என்ற
அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இதுவரை எனக்கு நீங்களும் உங்கள் அலுவலக நண்பர்களும் அளித்துவந்த ஆதரவுக்கும்
ஒத்துழைப்புக்கும் என் நன்றி.


அன்புடன்
ஞாநி
-------------